தலைப்பைப் பாத்துட்டு, பின்நவீனத்துவ பாணியில ஒரு தரமான இலக்கியப் படைப்பு அப்படின்னு நினைச்சுகிட்டு ஆசையா வந்தீங்கன்னா, ஸாரி, அது என் தப்பில்லை; அல்லது, ‘திறந்த வீட்டில நாய் நுழைஞ்ச கதையோ’ அப்படின்னும் விஷமப்புன்னகையோட வந்திருந்ந்தீங்கன்னா, அகெய்ன் ஸாரி, நான் வீட்டைத் திறந்து போடறதேயில்லை!! :-))
அப்ப என்ன இழவுன்னு சொல்லித்தான் தொலையேன்னு சிடுசிடுத்தா, அகெய்ன் அகெய்ன் ஸாரி, இது சிரிக்க மறந்தவர்களுக்கான இடம் இல்லை. அட, கண்டுபிடிச்சுட்டீங்களே, இது வழக்கமான மொக்கைப் பதிவேதான்!! தொடர்ந்து ரெண்டு பதிவு ரொம்ப சீரியஸாப் போயிடுச்சு, நம்ம கடை வழக்கத்தை மீறி!! அதான் உடனே நம்ம டிரேட் மார்க் மொக்கைப் பதிவு.
சரி, சரி, வள்ளுன்னு பாயறதுக்குள்ளே சொல்லிடுறேன் - திறந்த வீடு = ஓபன் ஹவுஸ்!! (தமிழ்ல தலைப்பு வச்சா, ஏதோ ஃப்ரீயாமே!! நான் தமிழேண்டா!!) பள்ளிக்கூடத்துல படிக்கிற வயசுல பிள்ளைங்க இருக்க வீடுன்னா நான் என்ன சொல்றேன்னு தெரிஞ்சிருக்கும், யெஸ், பள்ளிக்கூடத்துல நம்ம புள்ளைகளோட அருமை பெருமையெல்லாம் டீச்சர்கள் நம்மகிட்ட விலாவாரியா விளக்கிச் சொல்ற நாள்!! :-(
teachers.saschina.org
என் பெரியவன், சின்னவனா இருக்கும்போதுதான், நானும் இந்த ஓபன் ஹவுஸ்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டேன். அதுவரை நம்ம படிக்கிற காலத்துல ஏது ஓபன்/க்ளோஸ்ட் ஹவுஸெல்லாம்? பள்ளிக்கூடத்துல டீச்சர், “நாளைக்கு வரும்போது அப்பாவைக் கூட்டுட்டு வரணும்” அப்படின்னு சொன்னாலே வயித்தக் கலக்கும். இப்ப, எல்லா பள்ளிகளிலும் அதுக்குன்னு ஒரு நாள் ஒதுக்கி, மாணவர்களின் வளர்ச்சியை, முன்னேற்றத்தைப் பற்றிக் கலந்துரையாடவும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து திட்டமிடவும் ஏற்படுத்தப்பட்ட நல்ல திட்டம் இது.
இம்முறை வந்த பிறகு, பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்குமிடையே நல்ல ஒரு புரிதல்(!!) வந்துள்ளது என்றே சொல்லலாம். கற்பிப்பது ஒரு பக்கக் கடமையாக மட்டும் இல்லாமல், இரு தரப்பினரும் அதில் பங்கெடுக்கும் முறை ஏற்பட்டுள்ளது.
பிள்ளைங்க படிப்புல பெருசா மார்க் எடுக்கலைன்னாலும், ரொம்ப கம்ப்ளெயிண்ட் கேக்காம வர்ற பெரும்பாலான பெற்றோர்களுக்கு இது ரொம்பப் பிடிச்ச நாள்! ஆனா, பள்ளியில ஓபன் ஹவுஸுக்குத் தேதி குறிச்சிட்டாலே, எனக்கு கதிகலங்க ஆரம்பிச்சிடும். காரணம் என் அனுபவங்கள்!!
அன்னிக்கு பள்ளியில கல்யாண மண்டபம் போல கூட்டம் இருக்கும். நல்லா வேடிக்கைப் பாத்து, டென்ஷனை ரிலாக்ஸ் பண்ணிக்கலாம். சில பெற்றோர்கள் நல்லா அழகா ஏதோ கல்யாண வீட்டுக்குப் போறதுபோல ஜகஜ்ஜோதியா வந்திருப்பாங்க. தனியா வரும் அப்பாக்கள் டீச்சர் முன்னாடி பவ்யமா உக்காந்திருக்கதைப் பாத்தாலே, எனக்கு டென்ஷன்லயும் சிரிப்பு வரும். சில பெற்றோர் டீச்சர்கிட்ட ரொம்ப சீரியஸா மணிக்கணக்குல பேசுவாங்க. பாத்தாப் பொறாமையா இருக்கும். ஏன்னா, டீச்சர்ஸ்கிட்ட நான் பேசுறதைவிட, டீச்சர்கள் என்னிடம் “பேசுறதுக்குத்”தான் நிறைய இருக்கும். நான் முதல்ல தர்ற மார்க் ஷீட்ல கையெழுத்துப் போட்டுட்டு, “ஓகே, பை டீச்சர்னு” சட்னு எழுஞ்சிடுவேன். இல்லை, மாட்டினேன் அன்னிக்கு!! என் பிள்ளைங்க அப்படி!!
“நல்லாதான் படிக்கிறான்; ஆனா பாருங்க, கொஞ்சம் பேச்சும், சேட்டையும்தான் ஜாஸ்தி..” இப்படித்தான் எல்லா டீச்சரும் ஆரம்பிப்பாங்க. அதுக்கப்புறம் ஒரு பதினைஞ்சு நிமிஷம் நான்-ஸ்டாப்தான்!! இதுக்குப் பயந்தே கூட்டம் அதிகமா இருக்க சமயத்துல் போவேன். ஹூம்!!
ஒரு சாம்பிள் சொல்றேன் கேளுங்க: பெரியவனை எல்.கே.ஜி. படிக்கும்போது, வேற ஸ்கூல்ல சேத்தோம் (வேலை மாறுதல் காரணமாத்தான், வேற ஒண்ணும் விவகாரமில்ல, நல்லவேளை!) அவன் ஸ்கூல் போன முத நாள், நானும் சின்னப் பையன் என்னச் செய்றானோன்னு கவலைப்பட்டுகிட்டே டீச்சருக்கு ஃபோன் பண்ணேன். நான் இன்னாருன்னு சொன்னதுதான் உண்டு, படபடன்னு பொரிஞ்சாங்க பாருங்க - “எங்கிளாஸ் பசங்க நேத்தி வரைக்கும் நல்ல பசங்களாத்தான் இருந்தாங்க. இன்னிக்கு உங்கப் பையன் வந்ததுதான் வந்தான், கிளாஸே கலவரமாகிப் போய் கிடக்குது”ன்னு புலம்பினாங்க. விட்டா அழுதுடுவாங்க போலருந்துது.
அதுலேருந்து அது ஒரு தொடர்கதையா ஆகிப்போச்சு. அதுக்கப்புறம் ஒரு ஒண்ணுரெண்டு வருஷம் கழிச்சு, எங்க நண்பர் ஒருத்தர் அதே பள்ளியில படிக்கிற தன் மகனைப் பாக்கப் போனவர், எங்கிட்ட திகிலடிச்சுப் போன கண்களோட ஒரு விஷயம் சொன்னார். அதாவது, இவர் போனப்போ, என் பையனை அவங்க டீச்சர் கையில ஸ்கேலோட துரத்திகிட்டிருந்தாங்களாம்!! அவன் டெஸ்கைச் சுத்திச்சுத்தி வர, அவங்க “ஓடாதே, நில்லு!!”ன்னு கெஞ்சிகிட்டே போறாங்களாம். நான் என்ன சொல்ல? வழிஞ்சுவச்சேன்!!
அதுக்கடுத்த ஓப்பன் ஹவுஸ் நடுங்கிகிட்டே போனா, டீச்சர் அவனைப் பாத்து ”சொல்லிடவா?” அப்படிங்கிற மாதிரி நக்கலாச் சிரிக்கிறாங்க; அவனும், கீழே குனிஞ்சுகிட்டே கள்ளச்சிரி சிரிச்சுகிட்டு, கண்ணைமட்டும் உசத்தி டீச்சரைப் பாக்கறான். ”டேய் என்னடா நடக்குது இங்கே?”ன்னு நான் கத்தாத குறைதான்!! மெதுவா டீச்சர்கிட்ட என்னாங்கன்னேன். அவங்க அதே சிரிப்போட “ஹி இஸ் ஃபர்ஸ்ட் இன் எவ்ரிதிங்க்” அப்படின்னு பொடி வச்சுப் பேசினாங்க. நானும் புரியாத மாதிரியே, “ஹி..ஹி.. தேங்க் யூ டீச்சர்னு” நீட்டின இடத்துல கையெழுத்துப் போட்டுட்டு ஓடிவந்தேன்.
இப்படியே ஓப்பன் ஹவுஸுகளெல்லாம் நம்ம வாரிசுகளோட பெருமை பறைசாற்ற ஆரம்பிச்சதும், ரங்க்ஸ் அந்த மீட்டிங் இருக்கு, இந்த இன்ஸ்பெக்ஷன் இருக்குன்னு மெதுவா கழண்டுக்க ஆரம்பிச்சார். ஒண்ணுரெண்டு ஓப்பன் ஹவுஸுக்குத் தனியாப் போயிட்டு வந்த நான், அப்புறம் ரங்க்ஸ் வந்தாத்தான் போவேன்னு சொல்லிட்டேன். பின்னே, ஈன்ற பொழுதின் பெரிதுவப்பது தாயா மட்டும் இருந்தாப் போதுமா, தந்தைக்கும் அந்தச் “சந்தோஷம்” வேணும்ல? நாங்கல்லாம் சம உரிமை கொடுக்கிறவங்களாக்கும்!! ;-)))
சின்னவன் வந்தப்புறம், சரி இவனாவது நம்ம பேரைக் காப்பாத்துவான்னு நினைச்சேன். யூ.கே.ஜி.ல டீச்சர் எழுதிப் போடுறதை பாதி எழுதாம வந்திருந்தான் ஒரு நாள். ஏண்டான்னா, ”நுஸ்ரத் கூடப் பேசிகிட்டிருந்தேன். அதான் எழுதலை. ஆனா, வீட்ல வச்சு காப்பி பண்றதுக்கு ஸாராவோட நோட்டை வாங்கிட்டு வந்திருக்கேம்மா”ன்னான் விவரமா!! சரிதான், இவன் அண்ணனையே மிஞ்சிடுவான்னு புரிஞ்சுபோச்சு!! அதுலயும் ஏண்டா கேர்ள்ஸ்கிட்ட நோட்டு வாங்கிட்டு வந்திருக்க, பாய்ஸ் யாரும் உனக்கு ஃபிரண்ட் இல்லையான்னா, “போம்மா; பாய்ஸ் யாருமே நோட் கம்ப்ளீட் பண்ண மாட்டாங்க. கேர்ள்ஸ்தான் நீட்டா எழுதுவாங்க”ங்கிறான்!! அப்பவே!!
நினைச்ச மாதிரியே, இவனுக்கும் ஓப்பன் ஹவுஸ்கள்ல அதே ரிஸல்ட்தான் “Too much talkative and too much active!! but good in studies, so ok!!" ஏதோ இம்மட்டுக்கும் மானத்தைக் காப்பாத்தினானேன்னு சந்தோஷப்பட்டுக்குவேன், வேறென்ன செய்ய?
ஒரு ரெண்டு வாரம் முன்னாடி சொன்னான், “ம்மா, எங்க ஹிந்தி டீச்சர் நான் மட்டும்தான் கிளாஸ்ல கேள்வி கேக்கிறேன்னு சொல்லி, எல்லாரையும் எனக்கு கிளாப் பண்ணச் சொன்னாங்க”ன்னான். அகமகிழ்ந்து போனேன். நேத்து ஓப்பன் ஹவுஸுக்குப் போனப்ப, கிளாஸ் டீச்சர் சொன்ன கம்ப்ளெயிண்ட்ல நானும் ஆதங்கத்தோட, “என்ன டீச்சர் இப்படிச் சொல்றீங்க? ஹிந்தி டீச்சர் இப்படியெல்லாம் பாராட்டியிருக்காங்க இவனை”ன்னு எடுத்துச் சொன்னேன். அவ்வளவுதான், “என்கிட்டயும் அவன் தினமும், ஹிந்தி டீச்சர் இப்படிச் சொன்னாங்களே, நீங்க ஏன் கிளாப் பண்ணச் சொல்ல மாட்டேன்கிறீங்கன்னு படுத்தறான். ஹிந்தி டீச்சர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால, அவங்க கிளாஸ்ல வேற எதுவும் பேச முடியாது. என் கிளாஸ்லதான் எல்லா விளையாட்டும் நடக்கும்”னு அவங்க புலம்புறாங்க. ஆறுதல் சொல்லிட்டு வந்தேன்!!
என் பிள்ளைகளின் குறும்புகளை ரசித்து, அதே சமயம் தேவையான அளவு கண்டிப்போடும் இருந்து, கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதிலளிக்கும் ஆசிரியர்களே இதுவரை பெரும்பாலும் அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி, பிள்ளைகளுக்கும்.
சரி, இப்ப என்னோட முந்தைய சில பதிவுகள்ல, ”என் பிள்ளைங்க அப்பாவைப் போலவே”னு பாராட்டினவங்கல்லாம் எங்கே? வந்து வரிசையா அதை மறுபடியும் சொல்லிட்டுப் போங்க பார்ப்போம்!!
Post Comment