ம்.. எங்க விட்டேன்?
புதுசா வந்த அக்பர் அலியும் பார்ட்-டைம்னாலும், நாங்க ”மகளிர் அணி”ங்கிறதாலயும், அவர் எங்க டிபார்மெண்ட்களில் இல்லாததாலயும் எங்கள்ல யாரும் அவரைக் கண்டுக்கலை. ஆனா, அவரும் ரோஸியைப் போல பி.ஹெச்.டி. பண்ண ஆரம்பிச்சிருக்காருங்கிறது அப்புறமாத் தெரிஞ்சதும், அந்த வகையில் ரோஸியும் அவரும் அடிக்கடி அதுகுறிச்சுப் பேசிக்கிடுவாங்க. அப்படியே ஆரம்பிச்சு, யெஸ், கொஞ்ச நாளில் பத்திகிச்சு. காதலை எதிர்க்கிறவங்க இல்லைன்னாலும், இது முஸ்லிம்-கிறிஸ்டியன் காதல்ங்கிறதால ஆச்சர்யம். ரோஸியிடம் இருவரின் வீட்டிலும் சம்மதிப்பார்களா என்று கேட்டோம். இருவரின் வீட்டிலும் சம்மதிப்பது மிகக் கஷ்டம், ஆனாலும் வேறு வழியில்லை என்றார். எனக்கு அதில் உடன்பாடு இல்லைன்னாலும், சம்பாதிக்கிறவங்க, ஓரளவு வாழ்க்கைனா என்னன்னு தெரிஞ்சவங்க, இவ்வளவு உறுதியாயிருக்காங்கன்னா, நல்லாருந்தாச் சரிதான்னு நினைச்சுகிட்டேன்.
படிச்சிட்டிருந்த ஸ்டூடண்ட்ஸ் மத்தியிலயும், ரஷீதா-ரஞ்சித், சித்தீக்-காயத்ரினு இன்னும் ரெண்டு புரட்சிக்காதல் ஜோடிகளும் இருந்தாங்க. பம்பாய் படம் வந்த காலம் அது. மொபைல்கள் இருந்திருந்தா, ‘அந்த அரபிக் கடலோரம்’தான் எல்லாரோட காலர் டியூனா இருந்திருக்கும். இதுல ரஷீதாவும், சித்தீக்கும் எனக்கு ஏற்கனவே பழக்கம்கிறதால, அவங்ககிட்டயும் அதத்தான் கேட்டேன், “வீட்டில ஒத்துப்பாங்களா?”. ம்ஹூம், சான்ஸே இல்லையாம். ஓடிப்போறதுதான் வழியாம். எல்லாரும் கேட்கிற அதே கேள்வியை நானும் கேட்டேன், “பெத்தவங்களுக்கே துரோகம் செய்ய நினைக்கலாமா?”ன்னு. ம்ஹூம், தெய்வீகக் காதலாம், மதங்களைக் கடந்த காதலாம், புண்ணாக்காம், புடலங்காயாம். இதில ரஷீதாவுக்கு எம்மேல பயங்கரக் கோவம், “உங்களுக்கெல்லாம் காதல்னா என்னான்னு தெரியுமா? காதலிக்காத நீங்கள்லாம் இதப்பத்திப் பேசுறதே தப்பு. உங்க வேலையை மட்டும் பாருங்க.”ன்னு எனக்கே அட்வைஸ்.
அதே சமயத்துலதான் நம்ம ரோஸி சொன்னாங்க, அக்பர் அலிக்குக் கல்யாணம் நிச்சயமாகிடுச்சாம். வழக்கம்போல, அம்மா தற்கொலை மிரட்டல் etc. etc. காரணமா கல்யாணத்துக்குச் சம்மதிக்க வேண்டியதாப் போச்சாம்; ஆனாலும் ரோஸியை மறக்க மாட்டாப்லயாம்; கொஞ்ச நாள் கழிச்சு அந்தக் கல்யாணத்துலருந்து வெளியே வந்து ரோஸியோடக் கல்யாணமாம். உருகி உருகிச் சொன்னாங்க ரோஸி. “படிக்காத மேதைகளைப் போல படிச்ச அடிமுட்டாளும் இருப்பாங்கன்னு புரிஞ்சுகிட்டேன்”னு சொன்னேன். “இல்லப்பா, இது பேருக்குத்தான் கல்யாணம். வேற ஒண்ணுமேயில்லை தெரியுமா?”ன்னாங்க. நான் அப்பச் சொன்ன பதில இங்க எழுதமுடியாது.
இதற்கிடையில், என்னுடன் வேலைபார்த்த சங்கரி தன்னுடன் படித்த செல்வத்தை மணப்பதற்கே (வேறு ஜாதி) பெரும் போராட்டம் நடத்தி, பெற்றோர் சம்மதத்தோடு மணந்தாள். ஜானகியோ, தன் தங்கைகளின் திருமணம் முடிந்தபின், தான் விரும்பிய இலங்கைத் தமிழரை மணந்தாள். அக்பர் அலியின் கல்யாணத்துக்குப் பிறகும், ரோஸியுடனான காதல் தனி ட்ராக்கில் தொடர்ந்தது. எங்களின் அறிவுரைகள் ரோஸியின் அறிவுக்குப் புரிந்தாலும், ’மனது’ ஏற்கவில்லை.
ஒரு வருஷம் போல கழிஞ்சு, எங்க வீட்டுக்கு ஒரு வயசான அம்மா வந்தாங்க. அந்த அக்பர் அலியின் மாமியாராம்!! அவன் மனைவிக்கு எங்க ஊர்தானாம். நானும் அதே காலேஜிலதான் வேலைபாக்கிறேன்னு தெரிஞ்சு வந்திருக்காங்க. ஒரு குழந்தை இருக்காம் - அடப்பாவி!!! கல்யாணமான ஆரம்பத்துலயெல்லாம் நல்லாத்தான் இருந்தானாம், இப்பல்லாம்தான் மனைவிகிட்ட சரியாப் பேசறதில்லையாம். எவளோ மருமகனை கையிலப் போட்டுகிட்டாளாமேன்னு பதறிப்போயி வந்து விசாரிக்க வந்திருக்காங்க. நான், ரோஸியிடம் அவன் ’கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என கதைவிட்டு ஏமாத்திக் கொண்டிருப்பதையும், ரோஸி மீது (முழுத்)தவறில்லையென்பதையும் விளக்கி அனுப்பினேன். பின்னர் ரோஸியிடம் அவன் குழந்தையும், குடித்தனமுமாய் சுகவாழ்வு வாழ்வதைச் சொன்னதும் பயங்கர அதிர்ச்சி ரோஸிக்கு.
விடுமுறையில் ஊருக்குச் சென்ற ரோஸியின் வீட்டில் முழுவிவரம் தெரிந்ததால், ஹவுஸ் அரெஸ்ட். அதேபோலத்தான் ரஷீதா, காயத்ரி வீட்டிலும். பையன்கள் வீட்டில் பிரச்னைகள் இருந்தாலும், சுதந்திரமாகவே வலம்வந்தார்கள். பெண்களோ, காவலோடு வந்து பரீட்சை மட்டும் எழுதிவிட்டுப் போனார்கள். எனக்குத் தெரிந்து இந்த மூன்று காதலுமே நிறைவேறியதாய்த் தெரியவில்லை.
கல்லூரிப் பருவம் என்பது, விடலை விளையாட்டுப் பருவம் போலல்லாது, கொஞ்சமாவது வாழ்வின் எதார்த்தங்கள் புரிய ஆரம்பிக்கும் வயது. அப்பா, அம்மாவின் அருமைகள், குடும்பச் சூழ்நிலைகள் புரிந்து, காதல் செய்வது சரிவருமா, வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா என்பது கண்டிப்பாகத் தெரியும் வயது. அதைவிட, தன் நிலையைப் பெற்றோருக்கு உணர்த்தி, அதைப் புரிந்துகொள்ள வைக்கும் பக்குவம், ஏற்றுக்கொள்ளவைக்கும் திறன், ஏற்றுக்கொள்ளும்வரை மாறாமல் உறுதியாக இருக்கும் திடம் இருக்கிறதா என்று தன்னைப்பற்றிக்கூடவாத் தெரியாமல் இருக்கும்? இதில் ஆண்களைவிட பெண்கள் பொறுப்புமிக்கவர்களாகவே இருக்கக் காண்கிறேன். ஆனால், சில விதிவிலக்குகளும் உண்டு என்று அறிந்துகொண்டேன், மேற்சொன்ன அனுபவங்களிலிருந்து.
மேற்கூறியவர்களில், ஒரு பெண்ணின் மண வாழ்வு, முந்தையக் காதல் காரணமாகவே ரணப்பட்டுப் போனதாகவும் அறிந்தேன். அந்த ரணம் அவளை மட்டுமா பாதித்திருக்கும்? பெற்றவர்களையும் சேர்த்தல்லவா? பிற்காலங்களில் அப்பெண்கள் நிச்சயம் தம் தவறையெண்ணி மிக வருந்தியிருப்பார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட ஆண்கள்? கொஞ்சம்கூட வருத்தப்பட்டிருக்கமாட்டார்கள். ஒருவேளை காதலர் தினங்களில் இவற்றை நினைவுகூர்ந்துகொண்டிருக்கலாம். தம் மனைவியரிடமே.
இவ்வகையான தவறுகளில் இருபாலருமே சம்பந்தப்பட்டிருந்தாலும், முடிவில் அதிக பாதிப்பென்பது பெண்களுக்கே என்பது உலக வாழ்வில் மாறாத நியதியாகிப் போனது. அதில் நியாயமில்லையென்றாலும், ஆண்கள் விரிக்கும் வலையைக் கண்டு அதில் வீழாமல் எச்சரிக்கையாகத் தாண்டிப் போகும் பொறுப்பு பெண்களுக்கே உரியது. எவ்வயதினரானாலும்.
புலிகள் ஒருபோதும் சைவமாவதில்லை என்பது புள்ளிமான்களுக்குத் தெரியும், காட்டில்.
|
Tweet | |||