Pages

வாழ்வும், சாவும்




ரணம்... உலகப் பற்று நீங்கிய துறவியோ, அல்லது அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவரோ அல்லது இடைப்பட்டவரோ - எப்பேர்ப்பட்டவரையும் கொஞ்சமாவது அசைத்துப் பார்த்துவிடும். நிகழ்வாக இல்லாவிடினும், இந்த வார்த்தையே போதும் நெஞ்சைக் கொஞ்சம் ஆட்டி வைக்க. 

மரணமில்லா வீடு உலகில் இல்லையென்றாலும், நம் வீட்டை அது தொட்டுவிடுமோ என்கிற அச்சமும்தான் நம்மைக் கொஞ்சமாவது 
நல்லவர்களாக இருக்க வைக்கிறது என்றால் மிகையில்லை. மரணங்களில் சில, மரணித்தவருக்கோ அல்லது வேறு சிலருக்கோ விடுதலையாக இருக்கும். சில மரணங்கள் இருப்பவர்களின் வாழ்வை சுமையாக்கும். எதுவாகிலும், எல்லாருக்குமே மரணம் பல கேள்விகளை எழுப்புகின்றது. 

சென்ற வாரங்களில் தொடர்ச்சியாக இரு மரணச் செய்திகள். ஒன்று பிறந்து இரு நாளே ஆன சிசு. கருவிலேயே ஏற்பட்ட, பிறக்கும்வரை அறியப்படாத குறைபாடுகளால் மரணம். இன்னொன்று, சில குறைபாட்டுகளுடன் பிறந்து, 17 வருடங்கள் வாழ்ந்த ஒரு குழந்தை - ஆம், அவன் அப்போதும் குழந்தைதான். 

இந்தக் குழந்தை ஏன் பதினேழு வயது வரை வாழ்ந்து மரணிக்க வேண்டும்? அந்தக் குழந்தை ஏன் இரு நாட்களிலேயே வாழ்வை முடித்துக் கொண்டது? அவன் போட்ட புதிர்களின் விடை அவனன்றி யாருக்குத் தெரியும்?

திர்பாராத இந்த இரண்டுமே மனதைப் பாதித்திருந்த வேளையில், இன்னுமொரு தகவல். வெகுநாட்களாக ஒரு அரிதான நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு உறவினர் - இளைஞர்- கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிர்காக்கும் கருவியால்தான் மூச்சு இருக்கிறது, இன்னும் சில மணிநேரங்களே... என்றெல்லாம் கேட்டபோது... மற்ற இரண்டைவிட இத்தகவல் பேரதிர்ச்சியைத் தந்தது.


மரணித்துவிட்டார் என்பதைவிட, இதோ இன்னும் சில மணிநேரங்களே என்கிற தகவல் தரும் வேதனை மிக மிகக் கொடுமையானது. வெளிவட்ட உறவினரான நமக்கே இத்தனை பதைபதைப்பைத் தருகிறது என்றால், அருகே இருக்கும் பெற்றோர், மனைவி, உடன்பிறந்தோரின் நிலையைக் கற்பனை செய்யக்கூடப் பயமாக இருந்தது. ஏதேதோ நினைவுகள், எண்ணங்கள், கவலைகள்... பழைய நினைவுகளில் மூழ்கி, இப்படியிருந்தோமே, அப்படியெல்லாம் இருந்தானே என்று கலங்கி.. 

சிறு வயது என்பதால்தான் இத்தனைக் கலங்குகிறோமோ என்று தோன்றலாம். கல்லூரியில் படிக்கும்போது, சக தோழியின் தாத்தா இறந்துவிட்டார். இரண்டு நாள் கழித்து கல்லூரிக்கு வந்த அவளிடம், ஒரு நண்பன் “வயசானவர்தானே?” என்கிற ரீதியில் பேச கொதித்துப் பாய்ந்துவிட்டாள் தோழி!! நல்லவேளை நான் வாயைத் திறக்கவில்லை. ஏனெனில் நானும் கிட்டத்தட்ட அப்படி நினைத்திருந்ததால்தான் அவளிடம் எதுவும் விசாரிக்கவில்லை. அச்சம்பவம், பாசத்திற்கு வயதில்லை என்று கற்றுக் கொடுத்தது. 

இன்னொரு சம்பவம் என் தாயார் சொன்னது. 16 வருடங்களாகப் படுக்கையில் இருந்த தன் பாட்டி இறந்தபோது, அவரின் 16 வயதுப் பேத்தி, கதறிக் கதறி அழுததாகச் சொல்லி வியந்தார். எந்தளவுக்கு அவர்களுக்குள் பாசமும், நேசமும் இருந்திருந்தால் பிரிவு துயரம் வாய்ந்ததாக இருந்திருக்கும்? 

ந்த இளைஞரின் மனைவியை முன்பொருமுறை ஒரு ஐ.சி.யூ. வாசத்தின்போது ஆறுதல் கூறலாம் என்று சந்தித்தேன். ஆனால், அவரிடமிருந்து நான் அறிவுரை பெற்று வந்தேன்!! “எங்களுக்கு இந்நிலை இறைவனால் தரப்பட்டது. ’எந்தவொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி துன்புறுத்துவதில்லை’ என்று அவன் கூறியுள்ளான். எனவே நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். இவ்வுலகில் படும் சிரமங்களுக்கான நற்கூலிகள் மறுமையில் தரப்படும் என்று முழுமையாக நம்புகிறோம். ஆகையால் எங்களை இந்நிலைக்கு ஆளாக்கிவிட்டாயே இறைவா என்று ஒருபோதும் நாங்கள் எண்ணியதில்லை” என்றார். அவரின் மன உறுதி, திண்மை என்னை வாயடைக்கச் செய்தது!! 

ருத்துவர்கள் இனி காத்திருப்பதில் பயனில்லை, உயிர்காக்கும் கருவியை எடுத்துவிடலாம் என்று வற்புறுத்த, மனைவி மறுக்க, மற்றவர்கள் அதிர்ச்சியில்... விபரம் கேள்விப்பட்ட அனைவரும் - உறவுகள், உறவுகளின் உறவுகள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று அனைவரும் - பிரார்த்தித்தோம். 

அதிசயிக்கத்தக்க திருப்பமாக, மறுநாளே- இறைவன் கருணை - அவருக்கு நினைவு வந்து செல்ல, தன் தேவைகளை எழுதிக்காட்டுமளவு முன்னேற்றம் ஏற்பட்டது. மருத்துவர்களே இது மெடிக்கல் மிராக்கிள்  என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்க, “அணையப் போகிற விளக்கு பிரகாசமாக எரியும்” என்கிற விதமாக நிரந்தரமாக இறைவனிடத்து மீண்டுவிட்டார். அவர் நோயால் பட்ட துன்பங்களுக்குப் பகரமாக இறைவன் அவரது பாவங்களை மன்னித்து, மறுமை வாழ்வைச் சிறப்பித்துத் தருவானாக.

மேற்சொன்ன மூவரும் உறவுகள் என்பதால் அவர்களின் மறைவு என்னைப் பாதித்தது என்றால், டெல்லி துயரச்சம்பவத்தினால் மறைந்த ஜோதி ஏன் நம் அனைவரையுமே வருத்தப்படவைக்கிறார்? குழந்தை  விளையாடும்போது  கீழே விழுந்து காயப்பட்டு வந்தால்,  பதற்றமான தாய் “எதுக்கு ஓடுனே? ஒழுங்கா ஒரு இடத்தில் உட்கார்ந்து விளையாட வேண்டியதுதானே?” என்று அடிபட்ட குழந்தையின் முதுகிலே ரெண்டு போடுவதைப் போல,  மக்களைப் பாதுகாக்கத் தவறிய அரசு-காவல் துறையினரைக் கேள்வி கேட்கமுடியாத கையாலாகாத்தனத்தில், ஜோதியைப் பாத்து “ஏன் சினிமாவுக்குப் போனாய் - அதுவும் இரவில்?” என்று கேட்கத் துணிகிறேன்.

எனில், அதே டெல்லியைச் சேர்ந்த மூன்றரை வயதுச் சிறுமியிடமும், தமிழ்நாட்டின் மாணவி 13-வயது புனிதாவிடமும் “ஏன் பகலில் பள்ளிக்குப் போனீர்கள்?” என்று கேட்பதா!! இன்னும் கூட்டாகவும், தனியாகவும், வீட்டினுள்ளும் வெளியேயும், வன்புணரப்பட்ட எத்தனையோ பெண்களிடம் என்ன கேட்பது?  “ஏன் பிறந்தீர்கள்?” என்றா!!

எனது உறவுகளுக்கு, சுற்றங்கள் சூழ நேர்ந்த அமைதியான மரணங்கள்,  உற்றாருக்கு ஏற்படுத்தும் சோகத்தை, பாதிப்பை நினைத்துத்தான் வருந்த வைக்கின்றன. ஜோதி-புனிதாக்களின் மரணங்கள் மரணம் வந்த வழியை நினைத்துப் பதறிப் பரிதவிக்க வைக்கிறது. குற்றங்கள் செய்து, அவை நிரூபிக்கப்பட்ட பிறகும், தேசிய மரியாதையோடு மரணிப்பவர்களும் இருக்கும் இதே மண்ணில்தான்; ஒரு பாவமும் அறியாத, இன்னும் மண்ணில்கூட கால் வைக்காத சிசுவாக தாயின் வயிற்றில் இருக்கும்போதே, கூராயுதத்தால் கிழிக்கப்பட்டுக் கொல்லப்படுபவர்களும் உண்டு.

வாழ்வு மட்டுமல்ல, சாவும் நல்லதாக இருக்கவேண்டும் என்கிற பயம் வருகிறது. இறைவா!! வாழும் வாழ்க்கையை மட்டுமல்ல, இறப்பையும் துன்பமில்லாததாக, நிறைவானதாக, பயனுள்ளதாக ஆக்கித் தருவாயாக!!


Post Comment

விதியின் “மாய” சதி




வாழ்க்கையில நாம நெறய கொள்கை, வைராக்கியம் வச்சிருப்போம் - இதச் செய்யணும், அதச் செய்யவேக் கூடாது, இப்படித்தான் வாழணும்னு என்னவெல்லாமோ. ஆனா, எல்லாருக்கும் எல்லாமே நிறைவேறுவது இல்லை அல்லது விரும்பாததைச் செய்யாமல் இருக்க முடிவதில்லை. பல காரணங்கள். 

உதாரணமா, சின்ன வயசுல வீட்டுல உள்ளவங்க மீன் கழுவ படுற பாட்டைப் பாத்து - முழுமீன் நழுவி ஓடும், அது பின்னாடியே ஓடி பிடிக்கணும், அப்புறம் சாம்பலால தேச்சு சலாம்பு, செதிள் எடுக்கிறதுன்னு பாத்து நொந்து, நான் சமைக்கும்போது மீனே சமைக்கக்கூடாதுன்னு ஒரு கொள்கை முடிவு எடுத்தேன். (கவனிக்க, மீன் சமைக்கக்கூடாதுன்னுதான், சாப்பிடக்கூடாதுன்னு இல்லை!!) ஆனா, ஆண்டவன் விதிச்சதைப் பாருங்க, நான் வாக்கப்பட்டது வாரத்தில ஏழு நாளும் மீன் சாப்பிடுற ஒரு கடலோரக் குடும்பத்துல!! அப்புறமென்ன கொள்கை காத்துலதான்...

என்னடா, கொள்கை வைராக்கியம்னு பெரிய்ய லெவல்ல ஆரம்பிச்சிட்டு, சமையல், சாப்பாடு, மீனுன்னு லோ-க்ளாஸாப் பேசுறாளேன்னு யோசிக்கிறீங்க இல்லியா? எவ்ளோ பெரிய மேட்டர்னாலும், அன்றாட நிகழ்ச்சிகளை உதாரணமாச் சொன்னா, மனசுல நல்லாப் பதியும். நாங்கள்லாம் டீச்சரா இருந்தவங்களாக்கும்!!

அதே மாதிரி, பதிவு எழுத வரும்போது எடுத்த முடிவுகளில் ஒன்று, சமையல் பதிவே எழுதக்கூடாதுன்னு. எல்லாம் வாசகர்கள் நலம் கருதித்தான். நான் சமையல் குறிப்பு எழுதினால் எப்படி இருக்கும்னு ஏற்கனவே சொல்லிருக்கேன்.

ஜலீலாக்கா ”பேச்சிலர்ஸ்க்கான ஈஸி சமையல் குறிப்புகள்”னு ஒரு சமையல் போட்டி நடத்துறாங்க. அந்த அறிவிப்பைப் பாத்ததுமே என் கையில் அரிப்பு... ஏன்னு அப்புறம் சொல்றேன். இருந்தாலும், கொள்கையை மீறவேக்கூடாதுன்னு பல்லைக் கடிச்சிகிட்டு இருந்த என்னை... என்னாச்சி, தலையில கைவச்சிட்டீங்க??!! 

நான் வேண்டாம்னுதான் மறுபடி மறுபடி சொன்னேங்க, இந்த ஜலீலாக்காதான் எனக்கே எழுதுற ஆசையைத் தூண்டி விட்டுட்டாங்க. சரி, அன்பிற்காக விட்டுக் கொடுக்கிறது தப்பேயில்லைன்னு நானும் துணிஞ்சிட்டேன். ஆனா, கண்டிப்பா இதான் கட்டக்கடைசி. சமைக்கிறதைவிட சமையல் பதிவு எழுதுறதுதான் கஷ்டம்னு இன்னிக்கு டபுள் கன்ஃபர்மாகிடுச்சு.
சரி, விஷயத்துக்கு வருவோம். முதல்ல “பேச்சிலர் சமையல்”னா  என்னன்னு பார்ப்போம். எல்லாத்திலயும் தெளிவா இருக்கணும்லே? 
(பேச்சிலர் - க்கு தமிழ்ல என்னங்க? ’பேச்சிலர்’னு ஆங்கிலத்திலயே தமிழில் எழுதும்போது, ‘பேச்சுரிமை இல்லாதவர்கள்’னு நேரெதிரா அர்த்தம் வருது!!)

வேலை நிமித்தம் தனியாக வசிக்கும் ஆண்களுக்கு சமையல் செய்றதுக்கான நேரமும், ஆர்வமும் குறைவு என்பதால், எளிதான செய்முறைகள் அவங்களுக்கு வேலையை இலகுவாக்கும். அதே சமயம், உணவு தரும் சத்துக்களும், சக்தியும் (nutrient value) குறைவில்லாம முழுமையா இருக்கணும். அதாவது ஒரே கல்லில ரெண்டு மாங்காய்...

ஆங்கிலத்தில் “one pot meal” என்று சொல்வாங்க. அதாவது, சாதம், குழம்பு, பொரியல்னு பல பாத்திரங்களில் தனித்தனியே சமைப்பது கடினமானது மட்டுமல்ல, நேரத்தை விழுங்கும் வேலை. அதையே, எல்லாம் சேர்த்து ஒரே பாத்திரத்தில் ”கலந்த சாதம்”னு செய்தா அதான் “one-pot meal"!! இதுக்கு சைட் டிஷ் தனியா எதுவும் வேண்டாம். அப்பளம், வற்றல், ஊறுகாய் போன்ற ஏதேனுமொன்று இருந்தாலே போதும்.

நல்ல உதாரணம் சொல்லணும்னா, நம்ம பிரியாணியே ஒரு one-pot mealதான். ஆனா, அதுக்கே, தாளிச்சா, எண்ணெய்க் கத்தரிக்காய், பொறிச்ச கறி, சிக்கன் ஃப்ரை, அப்பளம், தயிர்ப்பச்சடி, தக்காளி ஜாம்னு “சைட் டிஷ்கள்” சேர்த்து உண்ணும் ‘ரசனைக்காரர்கள்’ நாம!! :-(((

தனியே சமைக்கும் ஆண்களுக்கு இந்த கலந்த சாதம் எனப்படும் “வெரைட்டி ரைஸ்” மிகப் பொருத்தமான உணவு. சத்துக்களும், சக்தியும் ஒருசேரத் தருவது மட்டுமல்ல, உடல் பருமனுக்குக் காரணமான ’கார்போஹைட்ரேட்’ அதிகம் சேராமலும் தடுக்கிறது. தனியாக குழம்பு, கூட்டு வைத்துச் சாப்பிடும்போது சாதம் அதிகமாகவும், காய்கள் குறைவாகவும் வைத்துச் சாப்பிடுவோம். இதுவே எல்லாம் சேர்த்த கலந்த சாதம் என்றால், கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும்!! 

குழம்பு, கூட்டு என்று தனியே இல்லாததால், குழந்தைகளுக்கும் சாப்பிடப் பிடிக்கும். ஆக, பல நன்மைகள் ஒன்றாகச் சேர்ந்த கலவைதான் “வெரைட்டி ரைஸ்”!! 

பேச்சிலர் சமையலில் இன்னொரு முக்கிய அம்சம், “தேவையான பொருட்கள்”!! ஸ்ட்ரிக்டா இன்னின்ன சாமான் இருந்தாத்தான் இந்தச் சமையலைச் செய்ய முடியும்னு இல்லாம, அடிப்படைப் பொருட்கள் இருந்தாப் போதும், மீதிக்கு இருப்பதை வைத்துச் சமாளிச்சுக்கலாம் என்கிற மாதிரியா இருக்கணும். அதுவும், இந்த கலந்த சாத வகைகளுக்குப் பொருந்தும். ஏன்னா, பொதுவாவே ஆண்கள் “ஷாப்பிங்” போறதை விரும்பமாட்டாங்க - புடவை, நகை மட்டுமில்லை, காய்கறி, மளிகைக்கும் அப்படித்தான்!! 

இப்ப புரிஞ்சிருக்குமே, “பேச்சிலர் சமையல் போட்டி”ன்னதும் ஏன் எனக்கு கை அரிச்சுதுன்னு? ஏன்னா, நாங்களாம் மட்டன் இல்லாமலே மட்டன் குழம்பு வைக்கிறவங்களாக்கும்!! சரி, சரி, இப்போ சமையலைப் பாப்போம். இன்னிக்குத்தான் போட்டியோட கடைசி தேதி!! ஏற்கனவே லேட்டு, இதிலே வளவளன்னு என்ன பேச்சு...

இன்னிக்கு நாம செய்யப்போற “ராஜ்மா புலாவ்” மேலே சொன்ன எல்லா definitionக்கும் ஒத்து வரும் சமையல். 


என்னடா, முதல்லயே “final product"-ஐக் காட்டாறாளே, ‘தேவையான பொருட்கள், செய்முறை’யெல்லாம் அம்போவான்னு யோசிக்கிறீங்களா?  கடைகளில், முதல்ல நீங்க புடவையப் பாருங்க, அப்புறம் விலை பேசுவோம்னு சொல்வாங்கள்ல, அதுபோல எல்லாம் ஒரு “வியாபாரத் தந்திரம்” தான். அப்பத்தானே உங்களுக்கும் என்மேல ஒரு நம்பிக்கை வரும். :-)

தேவையானவை: (இரண்டு பேருக்கு)
* ராஜ்மா என்கிற சிவப்பு கிட்னி பீன்ஸ் - ஒரு கை அளவு
* பச்சரிசி - 300 கிராம் (சுமார் இரண்டு டிஸ்போஸபிள் கப் அளவு)
  தேங்காய்ப் பால் - 2 கப்
* தண்ணீர் - 2 கப்
  வெங்காயம் - 1
* இஞ்சி - சிறு துண்டு
  பூண்டு - 4 பெரிய பல்
  பச்சை மிளகாய் -4
* பெருங்காயம் - ஒரு மிகச்சிறிய துண்டு அல்லது கால் டீஸ்பூன் 
   (பெருங்காயம் இல்லையென்றால் அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு பேஸ்ட்; அதுவுமிலைன்னா ஒரு நாலு பல் பூண்டு
  கேரட் - 1 (அல்லது பட்டாணி, பீன்ஸ், ஸ்ப்ரிங் ஆனியன் எது இருக்கோ அது)
  மல்லி இலை

தாளிக்க:
* நெய் அல்லது எண்ணெய் - 4 டீஸ்பூன்
   ஏலக்காய், கிராம்பு, பட்டை - தலா 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
இதென்னடா, ரிஜிஸ்ட்ரேஷன் ஃபார்ம்களில் *-Required fieldsனு போட்டிருக்கிற மாதிரி, இங்கேயும்  போட்டிருக்கேன்னு பாக்குறீங்களா? ஆமாம், * -போட்டிருப்பதெல்லாம் கண்டிப்பா வேணும். மத்ததெல்லாம் இருந்தா ஓக்கே, இல்லையின்னா டோண்ட் வொர்ரி!! :-))
 

        

ராஜ்மா வேக வைத்தல்:
ராஜ்மா பீன்ஸை ஒரு ஆறு மணிநேரம் ஊறப் போட்டுக்கோங்க. ஊறிய தண்ணீரை வடிகட்டிடுங்க. எப்பவுமே பயறு வகைகளை ஊறப்போட்டத் தண்ணீரை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. வாயுத் தொல்லை வரும். பயறு, பருப்பு வகைகளை வேக வைக்கும்போது உப்பு போடாமல் வேக வைத்தால் சீக்கிரம் வேகும். பிறகு குக்கரில் பயறு  மூழ்குமளவு தண்ணீர் வைத்து, பெருங்காயம் அல்லது இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிய தீயில் வைத்து, 20 நிமிடங்கள் வேக விடவும். வெந்தத் தண்ணீரைப் பத்திரமாக வச்சுக்கோங்க. தேவைப்படும்.

 இல்லைங்க, பயறு ஊறப்போட மறந்துட்டேன் அல்லது அதுக்கெல்லாம் நேரமில்லைன்னு சொல்றவங்க, பீன்ஸோடு ஒரு சிட்டிகை சோடா உப்பு போட்டு குக்கரில் வேக வைக்கலாம்.  இதில், வேக வைத்தத் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது.

இதுக்கும் சோம்பப்படுறவங்க, ரெடிமேட் டின்களில் வேகவைத்த ராஜ்மா பீன்ஸ் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கிக்கோங்க. அதிலுள்ள தண்ணீரும் வேண்டாம்.


அரிசியை அளந்து பாத்துட்டு, கழுவி  ஊறப்போடுங்க. பச்சரிசிக்குப் பதிலா, புழுங்கலரிசியும் பயன்படுத்தலாம். அப்படின்னா, அரிசியை அரைமணி நேரமாவது கண்டிப்பா ஊறப்போடணும். அரிசி வேகவைக்க (மொத்த) தண்ணீரும், மூணரை மடங்கு வேணும்.

மற்ற எல்லாம் வெட்டி ரெடியா வச்சுக்கோங்க. பாத்திரத்தை அடுப்பில் வச்சு, எண்ணெய் ஊற்றி, ஏலம், கிராம்பு, பட்டை, சீரகத்தைப் போடுங்க. ஒரு அரை நிமிஷம் ஆனதும், வெட்டி வச்சிருக்கிற எல்லாத்தையும் ஒண்ணாப் பாத்திரத்தில் போடுங்க. என்னது? ஒன் பை ஒன்னா? அதெல்லாம் டைம் வேஸ்ட்!! நாம செய்றது “பேச்சிலர் குக்கிங்”, ஞாபகம் இருக்கட்டும். ஒரு ரெண்டு நிமிஷம் அப்படியே சின்ன தீயில் வதங்கட்டும்.

அதுக்குள்ளே தேங்காய்ப் பால் ரெடி பண்ணுங்க. தேங்காயிலிருந்து ஃப்ரெஷ்ஷாப் பால் எடுத்தாலும் சரி, ரெடிமேட் தேங்காய்ப் பொடியைக் கலக்கினாலும் சரி. தேங்காய்ப் பால், பயறு வேக வைத்த தண்ணீர், அரிசி ஊற வச்ச தண்ணி எல்லாம் சேர்த்து அரிசி அளந்த அதே கப்பினால் அளந்து பாருங்க. அரிசிக்கு இருமடங்கு வரணும். இல்லைன்னா தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைங்க.

இப்ப வடிகட்டிய அரிசி மற்றும் வெந்த பீன்ஸை வெங்காயக் கலவையோடு  சேர்த்து ஒரு நிமிஷம்போல வதக்குங்க. இப்ப கொதிக்கிற தண்ணியை இதில ஊத்துங்க. உப்பு போட மறக்க வேண்டாம். ஒரு கொதி கொதிச்சதும் தீயை குறைச்சு வச்சு, மூடி போட்டு ஒரு இருபது நிமிஷம் வைங்க. அப்புறமென்ன, “சாப்பாடு ரெடி”ன்னு போர்டு வச்சிரலாம்!!

ழுத ஆரம்பிக்கும்போதே ஒரு விஷயம் நெருடலா இருந்துது!! நான் இன்னிக்கு சமையல் பதிவு போடுறதுக்கும், நாளை உலகம் அழியப்போவுதுன்னு வந்த வதந்திக்கும் எதாவது சம்பந்தம் இருக்குமோ??

Post Comment

கேள்வியின் நாயகன் - 4





மூணு-மூணரை வயசான (அப்போ) என் பெரியவனுக்கும், உடன் விளையாடிக் கொண்டிருந்த நண்பரின் 4 வயது மகளுக்கும் சண்டை வந்தது.

அவள்... “நான் எங்கப்பாகிட்ட சொல்றேன், பாரு..”

இவன்... “ஏஏஏய்ய்.. நான் எங்கம்ம்மாகிட்ட சொல்லிடுவேன்..”

நண்பர் என் கணவரைப் பார்க்க, அவர்..”அமெரிக்காவுலயும் ஜனாதிபதி இருக்காரு... இந்தியாவிலயும் ஜனாதிபதி இருக்காரு... ஐ யம் இண்டியன்!!”

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

இன்னொரு குடும்ப நண்பரின் குடும்பமும், நாங்களும் ஒரே காரில் சுற்றுலா போயிருந்தோம்.  அரையே அரை நாள் கழிந்ததும் நண்பர் என்னிடம் “இல்ல.. பொதுவா இந்த வயசுப் பசங்க இவ்வளவு அமைதியா இருந்து நான் பாத்ததில்லை.  உங்க பையன் குணமே அப்படித்தானா, இல்லை மிரட்டி வச்சிருக்கீங்களா?” என்றார்.

நான் என்ன சொல்லன்னு.. அதாவது எப்படி பாலீஷாப் பதில் சொல்றதுன்னு  யோசிச்சுகிட்டிருக்கும்போதே, என் சின்னவன் பாஞ்சுகிட்டு, “மிரட்டிதான் வச்சிருக்காங்க மாமா!” என்றான்.

அவ்வ்வ்வ்... இந்த மாதிரி எல்லார் முன்னாடியும் புத்திரர்கள் உண்மை விளம்பிகளாகும் சமயத்துல, அவங்களைத் திட்டவும் முடியாம... குட்டவும் முடியாம அசடு வழியறது இருக்கே...

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

சின்னவனுக்கு அவ்வப்போது பல் விளக்கி விடுவது உண்டு. ஒருமுறை ’பல் விளக்கும் படலம்’ முடிந்தவுடன்:

“ம்மா... அதெப்படிம்மா நீ தேச்சா மட்டும் பல் க்ளீனா ஆகுது?  நீ இப்ப சும்மாதானே இருக்கே..  பேசாம ‘டெண்டிஸ்ட் டாக்டர்’ ஆகிடு. அப்புறம், எல்லார் பல்லையும் க்ளீன் பண்ணி விடலாம். ”

அடேய்......

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

”Adjectives" படித்துக் கொண்டிருக்கிறான். பள்ளியில் பயிற்சிக்காக வீட்டுப் பாடம் கொடுத்திருந்தார்கள். Tea, sun, sea, wind, girl என்று கொடுக்கப்பட்டிருந்த வார்த்தைகளுக்கு நான் நினைத்ததுபோலவே முறையே hot, bright, blue, cool என்று எழுதிக் கொண்டு வந்தவன், அடுத்த வார்த்தையான “girl"க்கு “beautiful" என்று எழுதுவான் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் “a clever girl"  என்று எழுதினான்!!

நான் வளர்த்த புள்ளை வேற எப்படி இருப்பான்!! பெருமை தாங்கலை எனக்கு!!

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

அவனின் Social science பாடத்தில், “brown rice"தான் நல்லது என்று கொடுத்திருக்கிறது. Brown rice என்றால் என்ன, ஏன் நல்லது, எப்படி எல்லாம் கேட்டுக் கொண்டான்.

“அப்ப ஏன் நாம அந்த அரிசி வாங்குறதில்லை?”

“பிரவுன் ரைஸ் நல்லது. ஆனா, ரொம்ப டேஸ்டா இருக்காது.  நீங்கல்லாம் டேஸ்டா இருந்தாத்தானே சாப்பிடுறீங்க. உங்களுக்கெல்லாம் பர்கர், பீட்ஸாவெல்லாம்தானே பிடிக்குது. அதெல்லாம் வெள்ளை அரிசிச் சோறு மாதிரி பார்க்கவும் சாப்பிடவும் நல்லாருக்கும். ஆனா ஹெல்த்தி ஃபுட் கிடையாது.  ஹெல்த்தியான சாப்பாடு டேஸ்டா இருக்காது. அது எங்கே புரியுது உங்களுக்கு?”

ஒரு அரை நிமிஷம்போல யோசிச்சுட்டுச் சொன்னான், “நீ சமைக்கிற எல்லா சாப்பாடுமே ஹெல்த்தி ஃபுட், இல்லியாமா?”

ஹூம்... எனக்கு வில்லன் வெளியே இல்லை...

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

Post Comment

பக்கத்து வீடு




பக்கத்து வீட்டிற்கு மீண்டும் வாகனம் வந்த சத்தம் கேட்டது. சில மாதங்களாகவே காலியாயிருந்த  பக்கத்து பங்களாவிற்கு வரப்போவது யாராக இருக்கும் என்று ஆர்வமாக இருந்தது.  இரண்டு மூன்று நாட்களாக க்ளீனிங், பெயிண்டிங், மெயிண்டெனன்ஸ் எல்லாம் முடிந்து, இன்று வீட்டு உபயோகப் பொருட்கள் வந்து இறங்கிய வண்ணம் - அதுவும், “ராயல் ஃபர்னிச்சர்”, “ஜம்போ எலக்ட்ரானிக்ஸ்”, “ஜஷன்மால்” போன்ற உயர்ரகக் கடைகளிலிருந்து!! நான் நினைத்தது போலவே வரப்போவது ஒரு அமீரகக் குடும்பம்தானாம், என்னவர் சொன்னார்.

பெரிய குடும்பமில்லையாம், புதுமணத் தம்பதியராம். ஓ, அதான் புதுப்புது சாமான்செட்டு வருதா? எல்லாம் பெண்வீட்டு சீதனம் என்று நினைச்சிட்டீங்களா? இல்லை, இங்கே தலைகீழ்!!

இத்தனை வருஷமா இங்கே அமீரகத்தில் இருந்ததில், அமீரக மக்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் எல்லாம் ஓரளவு தெரிஞ்சுகிட்டேன்.  அமீரக அரசு, தன் குடிமக்களை எப்படித் தங்கத் தட்டில் வைத்துத் தாங்குகிறதுன்னு விலாவாரியாச் சொல்லி உங்களையும் புகைய விட்டாத்தான் எனக்கும் மனசு ஆறும்!! :-)

அமீரகத்தில் ஒரு திருமணம் முடிவானதும், மணமகன் பெண்ணின் குடும்பத்தாருக்கு ஒரு தொகையும், இஸ்லாமிய சட்டப்படி பெண்ணுக்குத் தனியே “மஹர்” என்ற தொகை அல்லது அசையாச்சொத்து கொடுக்க வேண்டும். கல்யாணம் என்பது ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் சிறு வைபவம்; அதன்பிறகு
ஒருநாள் மணமகன் தன் செலவில் இருவீட்டு உறவுகளுக்கும் பெரிய விருந்து ஒன்று கொடுக்க வேண்டும். பிறகே தனிக்குடித்தனம்.

மணமகளுக்கான திருமண உடை தொடங்கி, fully-furnished தனி வீடு, உதவிக்கு பணிப்பெண், வெளிநாடுகளுக்குத்  தேனிலவுப் பயணம், சிலசமயம் மனைவிக்குத் தனிக் கார் உட்பட எல்லாச் செலவுமே முழுசா மணமகனோடதுதான். நம்ம ஊர்ல கட்டுன சேலையோட வர்றதுன்னு சொல்வாங்களே -  அது இங்கே நிஜம்! கண்ணுமுழி பிதுங்குதா??!! இவ்வளவுக்கும் சம்பாதிச்சுட்டு கல்யாணம் பண்றதுன்னா, வழுக்கை விழுந்திடுமேன்னு தோணுதா?

அப்படியெல்லாம் இல்லை. அமீரகத்தில், ஒவ்வொரு குடிமகனுக்கும் பலவித சலுகைகள் தரப்படுகின்றன. கல்வி, மருத்துவம் எல்லாமே இலவசம். தவிர தேவையைப் பொறுத்து வீடு கட்ட நிலம்+பணம் அல்லது கட்டிய புதுவீடே இலவசமாகக் கொடுக்கப்படும். வீடுகளில் தண்ணீர், மின்சாரமும் இலவசம்!! மேலும், படித்து முடித்தவுடன், தகுதிக்கேற்றவாறு அரசாங்க நிறுவனங்களில்  வேலை அல்லது தனியே தொழில் தொடங்க அரசு முதலீடு தரும்.  அப்புறமென்ன, திருமணத்துக்கு சேமிச்சு ரெடியாகிடலாம். இதுதவிர, மணமகனுக்கு அரசாங்கமே “திருமண உதவித் தொகை” என்று ஒரு பெருந்தொகையைக் கொடுக்கிறது. பெற்றோர்களும் முடிந்தால் உதவலாம். அப்புறமென்ன?

ஒருமுறை ஒரு அரபுத் தாயிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “எனக்கு மூன்று மகள்கள்; நல்லவேளை ஒரே ஒரு மகன். இறைவனுக்கு நன்றி.” என்றார்.

முன்பு என்னுடன் வேலை பார்த்த அமீரகப் பெண்ணின் தங்கையின் திருமணத்திற்குச்  சென்றிருந்தேன். நிகழ்வுகளைப் பார்த்துக் கொஞ்சமல்ல, ரொம்பவேப் பொறாமையாக இருந்தது. முக்கியமாக, பெண்களுக்கான மண்டப வாசலில், இரு தரப்பு அம்மாக்கள், சகோதரிகள் இணைந்து நின்று, வருபவர்களை வரவேற்கிறார்கள்.  ”மாப்பிள்ளையோட, மச்சானோட சின்னம்மாவோட ரெண்டு விட்ட அண்ணனை உங்க அம்மா வாங்கன்னு சொல்லலை” என்று எந்தக் கம்ப்ளெயிண்டும் கிடையாது!!

அரங்கம் ஓரளவு நிரம்பியதும், மணமகளை அழைத்து அமர வைக்கிறார்கள்.  மேடைக்குப் போய் மோதிரம் போடுறது, டின்னர் செட் கொடுக்கிறது,  மொய் எழுதுறது - ஊஹும்... எதுவ்வும் இல்லை!! போலவே விருந்துக்கும் எல்லாரும் ஒரே மாதிரி அழைக்கப்பட்டு அமரவைக்கப்படுகிறார்கள். மேசைகளில் உணவு பரிமாறப்பட்டு ரெடியாக இருக்கிறது. மைனிகளுக்கும், அவர்களின் மாமியார்களுக்கும் தனியாக ஸ்பெஷல் பொறிச்ச கறியெல்லாம் கிடையாது!!

இவ்வளவுதான் திருமண விழா!! கல்யாணமும் முடிஞ்சுது, கத்தரிக்காயும் காய்ச்சுதுன்னு கிளம்ப வேண்டியதுதான். நம்ம ஊர் ஜமாத்களிலிருந்து மக்களை இந்த ஊர் கல்யாணங்களுக்கு அழைச்சு வந்து காமிக்கணும்!! :-(

நம்ம ஊர்களின் கல்யாண நிகழ்ச்சிகளில் காணப்படுற உணவு வீணடித்தல் இங்கும் இருக்கிறது. நேற்று செய்தித்தாளில், மிக முதிய அமீரகப் பெண்மணி ஒருவர் இதைச் சுட்டிக்காட்டி,  ”எங்கள் காலங்களில் நாங்கள் தேவைக்கு மட்டும் சமைத்து உண்டோம். இன்றோ உணவு பெருமளவு வீணடிக்கப்படுகிறது.” என்று வருத்தப்பட்டுக் கண்டித்திருந்தார்.

உண்மைதான், நம் நாட்டைப் போலவே இளந்தலைமுறையினரிடம் அதிகப் பணப்புழக்கம் இருப்பதால், உயர்ரகக் கார்கள், எலக்ட்ரானிக் கேட்ஜட்டுகள் பயன்பாடு அதிகம் உள்ளது. பணத்தின் அருமை முதியவர்களுக்குப் புரிந்ததுபோல,  இளையவர்களுக்கு இன்னும் புரிபடவில்லை.

எனினும், இளைய தலைமுறையினர் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நம் நாட்டுக் இளைஞர்களைப் போலவே, மேலைநாடுகளில் படித்து பட்டம்/முதுநிலைப் பட்டம் பெறுகிறார்கள். மேலும், இங்கே அமீரகத்திலேயே நிறைய வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின்  கல்லூரிகள் இருக்கின்றன. இந்தியாவின் பிட்ஸ்-பிலானி கிளைகூட உண்டு தெரியுமா?

பெண்கள் முன்னேற்றமும் - படிப்பு, வேலை, தொழில்கள் ஆகியவை நம் நாட்டுக்கு இணையாகவே உள்ளது. அநேகம் பெண்கள் படிச்சு, நல்ல வேலைகளில் இருக்காங்க அல்லது சுயதொழில் செய்றாங்க.  ஆனால் இதனால் வீட்டில் பணியாளர்களை அதிகம் சார்ந்து இருக்க வேண்டியிருப்பதால், குழந்தைகள் வளர்ப்பில் இதன் பக்க விளைவு எதிரொலிப்பதாகவும் அமீரகப் பெரியவர்கள் வருத்தப்படுறாங்க.  இன்னொன்று,  இந்தியாவைப் போலவே இங்கும் லேட் மேரேஜ், விவாகரத்து விகிதம், விவாகரத்தான பெண்கள் தனித்து வாழ விரும்புவது ஆகியவை அதிகரித்து வருகிறது. நாட்டுக்கு நாடு வாசப்படி!!!

நான் கேட்டு வியந்த ஒரு சம்பவம் உண்டு. ஒரு நண்பருக்கு அறிமுகமான அமீரகக் குடிமகன் ஒருவருக்கு (முதல்)  திருமணம் ஆனது. திருமண ஒப்பந்தம் கையெழுத்தான ஒருசில தினங்களில் அப்பெண் விவாகரத்து வாங்கிக் கொண்டாள். அப்பெண்ணுக்கு இது இரண்டாவது திருமணம், முதல் முறையும் இதேபோலவே ஒப்பந்தம் கையெழுத்தானதும் விலகினாளாம்!! இதில் யார் பக்கம் சரியோ, தவறோ. ஆனால், அப்பெண் துணிச்சலாக இருமுறை உடனடி விவாகரத்து கோரும் சாதகமான சூழ்நிலை இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்!!

ஆம், இங்கு விவாகரத்து அதிகம் இருந்தாலும்,  விவாகரத்தான பெண் மறுபடி முதல் தாரமாகவே வாழ்க்கைப் படுமளவுக்கு, மறுமணம் என்பதும் மிக சகஜமான ஒன்று.

ஒரு குடும்பத்தில் பல சகோதர சகோதரிகள் இருந்தால், முதலில் அக்காவுக்குக் கல்யாணம், பிறகு தங்கைக்கு என்றெல்லாம் கிடையாது. யாரைப் பெண் கேட்டு வருகிறார்களோ, அது கடைசிப் பெண்ணாக இருந்தாலும், உடன் திருமணம். போலவே சகோதரர்களுக்கும் - சகோதரிகளின் திருமணம் முடிந்துதான் அண்ணனுக்குக் கல்யாணம் என்கிற சம்பிரதாயங்களெல்லாம் கிடையாது.  இதற்கு வரதட்சணை, சீர்கள், கூட்டுக்குடும்பம் இல்லாதது காரணமாக இருக்கலாம்.

ஆண்கள் திருமணமானதும் (பொருளாதாரத்தைப் பொறுத்து) உடனே தனிக்குடித்தனம் போய்விடுவார்கள்!! இதனாலேயே மாமியார்/நாத்தனார்-மருமகள் பிரச்னைகளெல்லாம் இல்லையோ என்னவோ. அதற்காக பிள்ளைகள் தம் பெற்றோரை அப்படியே விட்டுவிடுவதில்லை. வார இறுதி நாட்களில் இருதரப்பு பெற்றோர் வீடுகளிலும் அனைத்து மக்களும் கூடுவது கட்டாயக்கடமை!! அமீரகக் குடும்பங்களில் தாய்க்கே அதிகாரம் அதிகம். பல அமீரகத் தொழிலதிபர்கள் பேட்டி கொடுக்கும்போது, தன் தாய்க்கு இன்றும் கட்டுப்படுவதுண்டு என்று சொல்லிப் பார்த்திருக்கிறேன். மேலும், வீடு, மருத்துவம், உதவித் தொகை உள்ளிட்ட பெரிய செலவுகளுக்கெல்லாம் அரசே பொறுப்பேற்றுக் கொள்வதால், பணத்திற்காக பிள்ளைகளைச் சார்ந்திருக்கும் அவசியமும் இல்லை!!

எங்கள் பக்கத்து வீட்டுத் தம்பதியரும் வாரம் தவறாமல், வேறு மாநிலமான ராஸ்-அல்-கைமாவில் இருக்கும் தம் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிடுவர். கணவர், விண்வெளித் துறையில் வேலை பார்க்கிறார். மனைவியும் ஒரு அரசு நிறுவனத்தில்.

உறவுமுறைத் திருமணங்கள் அதிகம் என்பதால், அவசியத்தை உணர்ந்து, திருமணத்திற்குமுன் மருத்துவப் பரிசோதனைகள் பல வருடங்களுக்குமுன்பே கட்டாயமாக்கப்பட்டுவிட்டன.  இந்நாட்டு மக்கள் மனவளர்ச்சிக் குறைபாடுள்ள சிறப்புக் குழந்தைகளை ”இறைவனின் நன்கொடையாகக்” கருதுகிறார்கள் என்று செய்தித்தாளில் வாசித்து ஆச்சரியப்பட்டேன். அதேசமயம் மரணத்தை மிக இலகுவாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்.

இங்கும் கிராமங்களும், அங்கு வாழும் எளியவர்களும் உண்டு. ஏன் நாகரீகம் பெரிதும் எட்டாத மலைவாழ் மக்கள்கூட உண்டு. ஆனால், சுகாதாரம், கல்வி வசதிகள் எட்டாத இடம் இல்லை.

விவசாயம் பெரிதும் போற்றப்படுகிறது. மானியங்களும், இலவச தண்ணீர்-மின்சாரம், உற்பத்திப் பொருளை அதிக விலைக்குக் கொள்முதல் எல்லாம் உண்டு. புதிய முயற்சிகளையும், ஆராய்ச்சிகளையும் உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கிறார்கள். இதனால், கடும் கோடையிலும் குறையாத உற்பத்தி தரும் Green-house farming பயன்பாட்டில் உள்ளது. மண் இல்லாமல், தண்ணீரில் பயிர் செய்யும் Hydroponics முறையும்  ஒரு (படித்த) விவசாயி மேற்கொள்கிறார்!!

கல்வி, மருத்துவத்துறைகளை நாளுக்கு நாள் மேம்படுத்தி வருகிறது அரசு. அரசுப் பள்ளிகளில், பாடங்கள் அரபிமொழியில்தான் கற்பிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, எல்லா ஆசிரியர்களுக்கும் தற்போது ஒரு வருட பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலப் புலமையை அதிகரிக்க பிரைமரி வகுப்புகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு ஆங்கிலேய ஆசிரியையும் பிரத்தியேகமாக வரவழைத்து நியமித்துள்ளார்கள்.

அரசு மருத்துவமனைகளும் அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் போன்ற பிரபல மருத்துவமனைகளோடு இணைந்து செயலாற்றும்படி சீரமைக்கப்பட்டு, பல அரிய சிகிச்சைகள் இங்கேயே கிடைக்குமளவு தரம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.  



நாட்டின் வளர்ச்சிக்குரிய இத்தனை ஏற்பாடுகளும், நாட்டின் பெட்ரோலிய மற்றும் இதர வருமானங்களைக் கொண்டே செய்யப்படுகிறது. தனிநபர் வருமான வரிகள் உட்பட பல வரிகள் இங்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


அமீரகத்தின் தொடர் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் இந்நாட்டின் தொலைநோக்குள்ள ஆட்சியாளர்களே காரணம். மக்களோடு மக்களாகக் கலந்து பழக முனையும் முயற்சியாகவும், நிர்வாகத்தைக் கண்காணித்து முறைப்படுத்தவும் ஆட்சியாளர்கள் அரசு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், சேவை மையங்களுக்கு திடீர் வருகைகள் தருவதுண்டு. அமீரக “தேசிய தினமான” நேற்று (டிசம்பர் 2) வெளிநாட்டு மக்கள் உள்ளிட்ட எல்லாருக்கும் மொபைல் ஃபோனில் வாழ்த்துச் சொல்லி, உப ஜனாதிபதியான துபாய் ஆட்சியாளரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது எல்லாருக்கும் இன்ப அதிர்ச்சி!! 




நேற்றைய தேசிய தினத்தின் கொண்டாட்டங்களில், இந்நாட்டு குடிமக்களுக்கு இணையாக, வெளிநாட்டினரும் குறைவில்லாத உற்சாகத்துடன் தம் வீடுகள், கார்களை அலங்கரித்துக் கலந்துகொண்டது ஒன்றே சாட்சி, அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி தரும் நாடு இது என்பது!!

Post Comment