Pages

மூன்றல்லாத மற்றவை தொடரா....





1993... என் மாமூட்டு வாப்பாவின் (தாத்தா) நல்ல நண்பர் என்ற வகையில் பி.எஸ்.ஏ. என்றழைக்கப்படும் அப்துர் ரஹ்மான் சாஹிப் அவர்கள் குற்றாலம் வந்து செல்லும்போது அநேகமாக ஒவ்வொரு வருடமும் என் தாத்தாவோடு அவரது சந்திப்பு நடைபெறும்.  அந்த வருடம், அந்தச் சந்திப்பின்போது என்னையும் வரச் சொல்லியிருந்தார்கள் என் தாத்தா.  வந்திருந்தவரிடம் என்னை பெருமையோடு அறிமுகப்படுத்தினார்கள், “என் பேத்தி, இஞ்சினியரிங் படிச்சிருக்கா...”

ஓ... இதுக்காகத்தான் சிறப்பு அழைப்பா எனக்கு... என் அம்மா குடும்பத்தில் முதல் இஞ்சினியர் நான் - ஆண் பெண் இருவரிலுமே. உறவுகளிடையே எழுந்த பலத்த எதிர்ப்புகளை என் வாப்பா தனி ஆளாக எதிர்கொண்டு என்னைப் படிக்க வைத்தார்.  தாத்தாவுக்கும் நான் படித்ததில் மிக மகிழ்ச்சியே.

என்னை அறிமுகப்படுத்தியதும், கேட்டவர் அகமலர்ந்து பாராட்டிவிட்டு, உடனே என் உடையை விமர்சித்தார். “என்ன சேலையால முட்டாக்கு போட்டுகிட்டு நிக்கிற... நீ நாளைக்கு எங்கயாவது கம்பெனியில வேலை பார்க்கும்போது, சேலையைப் பிடிப்பியா... வேலையைப் பாப்பியா...? என்று கேட்கவும், பதில் சொல்லத் தெரியாமல் விழித்தேன். “இங்க பாரு... முழுக்கை வச்ச ப்ளவுஸ் போடு. சேலையை இழுத்து சொருகு.. தலையில தனியா ஸ்கார்ஃப் கட்டிக்கோ.... அதான் வேலை பார்க்க வசதி தெரியுதா...” ஆளுமையோடு அவர் அறிவுரை சொன்ன விதம் அவரது வளர்ச்சிக்கான கட்டியமாக இருந்தது.

பெரியவர்களால் வழக்கமாக சொல்லப்படும் ”பெண்களுக்கான” அறிவுரைகள் என்று எதுவுமே இல்லாமல், அதைத் தாண்டி, நான் வேலைக்குப் போக வேண்டும் என்று உணர்த்தியது எனக்கு வியப்பைத் தந்தது. அதை விட ஆச்சரியமானது, அதை வலியுறுத்திய விதம்!! நான் வேலைக்குச் செல்வதாகவே ஒரு காட்சியை உருவகப்படுத்தி, அதற்கு இந்த உடை பொருந்தாது என்று எடுத்துச் சொன்ன விதம்... அவரது ஆளுமைக்கான இன்னொரு சான்று!

அத்தோடு நில்லாமல், பெண்களுக்காக நடத்தி வரும் அவரது கல்லூரியில் வேலைக்கான நேர்காணலுக்காக முதல்வரை உடன் சென்று சந்திக்கும்படியும் ஆணையிட்டார். நான் பிரமித்துப் போனேன்.  என் வாப்பா ஒருவர் தவிர, நான் வேலை பார்ப்பதில் அக்கறை காட்டிய மனிதர் அவர்தான்.

அச்சமயத்தில் அங்கு உடன் இருந்த என் குடும்பத்தவர்களுக்கு நான் வேலைக்குச் செல்வதில் சற்றும் உடன்பாடு இல்லாமல் இருந்தது. ஆனால், என்னை வேலை பார்க்கும்படி ஊக்குவித்த அவரது பேச்சை யாராலும் இடை மறித்துப் பேச முடியாதபடிக்கு இருந்தது அவரது உறுதியான பேச்சும், தீர்க்கமான முடிவெடுக்கும் திறனும்.  பின்னாட்களில் நான் வேலைக்குச் செல்லும்போது அதிக எதிர்ப்புகள் எழாமல் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

வழக்கமான பெரியவர்களைப் போல “அப்புறம்.. ஆசைக்கு படிக்க வச்சீங்க.. புள்ளைதான் படிச்சு முடிச்சாச்சுல... மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சீங்களா இல்லியா....” என்பது போன்ற எந்த ஸ்டீரீயோத்தனமும் அவரிடம் இல்லாதது எனக்கு பேராச்சரியம். அவரது உழைப்பையும் உயர்வையும் உன்னதத்தையும் முழுமையாக அறிந்துகொண்ட பின்பு அவரிடம் போய் அப்படியொரு ஸ்டீரீயோத்தனத்தை எதிர்பார்த்ததை எண்ணி வெட்கினேன். தவறு என்னுடையதில்லை, அப்போதைய (ஏன் இப்போவும்தான்) சமூக எதிர்பார்ப்புகள் அப்படித்தான் இருந்தன.

வழக்கமான பணக்காரர்களைப் போல, சம்பாதித்தோமா இலாபத்தை நாலு தொழில்களில் முதலீடு செய்தோமா என்றில்லாமல், தன் மக்களை முன்னேற்றுவதைத் தன் கடமையாக நினைத்து கல்லூரிகளும் மருத்துவமனைகளும் தொடங்கியது வழக்கமான பணக்காரர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது. கல்வி கற்றவர்கள் உரிய வழியில் பணம் ஈட்டிட, அமீரகத்தில் ஈடிஏ என்ற பெருங்குழுமத்தினை தோற்றுவித்தார். படிக்காதவர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்தார். பல நாடுகளிலும் அதன் கிளைபரப்பி, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழிகாட்டியாக அமைந்தார்.

குறிப்பாக, பெண்கள் படிப்பதே  அரிதாக இருந்த காலத்தில், அவர்களது முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு 1988-ல் பெண்களுக்கென தனி கல்லூரி ஆரம்பித்தார். இன்று சச்சார் கமிஷனில், முஸ்லிம் பெண்கள் அதிகம் படிக்காததற்கு முக்கியக் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் இல்லாமை என்று சுட்டிக் காட்டியுள்ளது. அதை அன்றே உணர்ந்து, தனது சொந்த ஊரில் முதலில் பெண்கள் கல்லூரி ஆரம்பித்தவர்.

அதற்கு முன்பே பொறியியற் கல்லூரியும் தொடங்கியிருந்தார். பின்னர்,  ஆண்கள் பெண்களுக்கான இஸ்லாமிய கல்வியை முன்னிறுத்தும் பள்ளிகளும் சென்னை, மதுரை, நாகூர் நகரங்களில் தொடங்கப் பட்டன. 80-களில் தமிழக இஸ்லாமிய சமுதாயத்தினர் கல்வி விழிப்புணர்வு பெற்றதற்கு பி.எஸ்.ஏ. அவர்கள் மிக முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.  அதே போல, தமிழக முஸ்லிம்களின் பொருளாதார முன்னேற்றத்திலும் அவரது பங்கு மிகப் மிகப் பெரிது. ஏன், இந்தியாவின் அந்நியச் செலாவணி வரவின் அதிகரிப்பிலும்தான். 

ஒரு  தொழிலதிபர், கல்வியாளர், மார்க்கப் பற்றாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு Reference-ஆக இருப்பவர்.  ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தன்னையும் தன் குடும்பத்தையும் முன்னேற்றுவதே பெரும் போராட்டமாக இருக்கும் நிலையில், ”தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று தான் சார்ந்த சமூகத்தையும் சேர்த்து முன்னேற்றியிருக்கிறார். அந்த அத்தனை குடும்பங்களும் அவருக்காக என்றும் பிரார்த்தித்த வண்ணமே இருப்பர். 


ரு மனிதனின் மரணத்திற்குப் பின் அவரது செயல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அவை:

1. தொடர்ந்து நன்மை தரும் நற்காரியங்கள் (சதக்கத்துல் ஜாரியா)
2. பலன் தரும் கல்வி
3. பெற்றோருக்காகப் பிரார்த்திக்கும் நேர்மையான பிள்ளைகள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்
மேற்சொன்ன மூன்றுமே அமையப் பெற்ற பாக்கியமுடையவர் அவர் என்பது அவரின் மீதான இறைவனின் பெருங்கருணை. வல்ல இறைவன் அவரை சுவர்க்கம் புகச் செய்வனாக!!

Post Comment