ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இத்திஹாத் இரண்டிலும் சிலர் அளவுக்கதிகமா குடிச்சுட்டு சலம்பல் பண்ணிகிட்டிருப்பாங்க. அவங்ககிட்ட ஏர்ஹோஸ்டஸ் அக்காக்கள் கெஞ்சிகிட்டு இருப்பாங்க, ப்ளீஸ், ப்ளீஸ்னு. ஆனா ஒரு பலனும் இருக்காது; இறங்கற வரை அவங்க பிரசங்கங்களைக் கேட்டுத் தொலையணும். இப்பவும் அதே மாதிரி ஒரு சேட்டன் ஆரம்பிச்சார். அக்கா கெஞ்சியும் அடங்கலை; அப்புறம் கோ-பைலட் வந்தார்; அவர்கிட்ட குனிஞ்சு ஒரு ரெண்டு நிமிஷம் பேசினார் (மிரட்டினார்??); அதுக்கப்புறம் மூச்!!
**********^^^^^^^^^^^^^************
பதிவுகளைப் பற்றி பதிவுலகில் அல்லாமல், ட்விட்டர், ஃபேஸ்புக், குழும மடல்கள் எல்லாத்துலயும் டிஸ்கஷன் நடக்குதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். இன்னும் சொல்லப் போனா, சர்ச்சையான சமயங்களில், பதிவுகளில் பே(ஏ)சப்படுவதைவிட, மேற்சொன்ன இடங்களில்தான் அதிகக் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன, விமர்சிக்கப் படுகின்றன என்றும் அறிகிறேன். இது எந்தளவு சரி என்பது ஒருபுறமிருக்க, இவை எதனிலும் இல்லாத (நம்புங்கள், நிஜம்தான்) என்னைப் போலப் பதிவர்களின் பதிவுகள் குறித்து கருத்துரையாடல் நடந்தால் நான் எப்படித் தெரிந்துகொள்வது, பதிலளிப்பது? (ரொம்ப ஓவர் ஸீனா இருக்கோ?)
உண்மையாகவே ட்விட்டர், ஃபேஸ்புக்,(அக்கவுண்ட் மட்டும்(மே) உண்டு) குழும மடல்கள் என்று எவற்றிலும் நான் பங்குபெறுவதில்லை. அவற்றில் இணைந்தால், ஒரு அடிக்ஷன் வந்துவிடுமோ என்ற பயமே காரணம்; பிளாக்கே நேரத்தைக் கொல்கிறது. இருந்தாலும், எல்லாரும் அதைப் பற்றிப் பேசும்போது, நாம் அப்டேட்டாக இல்லியோ என்ற தாழ்வு மனப்பான்மை வருவது போலிருந்தாலும், பிடிவாதமாக விலகி இருக்கிறேன்!!
**********^^^^^^^^^^^^^************
பாகிஸ்தானின் வெள்ளப்போக்கும், அதனால் ஏற்பட்ட/ படவிருக்கும் இழப்புகள் சுனாமியால் உலகுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை விட அதிகமாம். இந்த இழப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கு எத்தனை காலம் எடுக்கும் என்று தெரியவில்லை; 1947 பிரிவினையின்போது இருந்ததை விட மோசமான நிலை, நாட்டின் முன்னேற்றம் 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்டது என்று பிரதமர் கூறியுள்ளார். 20 மில்லியன் மக்கள் வீடிழந்து நிற்கிறார்கள். இன்னும் பாதிப்புகள் தொடர்கின்றன. பகை நாடாக இருந்த போதிலும், இப்படி பாதிக்கப்பட்டு, அழிவின் விளிம்பில் நிறபதைக் கண்டு மனம் கலங்கத்தான் செய்கிறது. அதுவும் பாதிக்கப்பட்டவர்கள் உணவுக்குச் சண்டை போடும் படங்களைக் கண்டால்.....
இன்னும் கொடுமையாக, வழங்கப்பட்ட நிவாரண உணவுப் பொருட்கள், சமூக விரோதிகளால் சந்தையில் விற்கப்படுவதாக வந்தத் தகவல்கள் தமிழகத்தில் சுனாமி நிவாரண நிதியை நினைவுபடுத்தியது. பாதிக்கப்பட்ட மாகாணங்களிலிருந்து உயிர்தப்ப அண்டை நகரங்களில் நுழைபவர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் சில விஷமிகள் விஷப் பிரச்சாரம் செய்கிறார்களாம்!!
**********^^^^^^^^^^^^^************
பல வருடங்களுக்கு முன், வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற ஆண்கள் விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது, வந்த முதல் வாரத்திலேயே உடல்நலக் குறைவால் அவதிப்படுவார்கள். கேட்டால், “தண்ணி மாறுச்சுல்ல, அதான்” என்பார்கள். சிலர் நாட்டு வைத்தியமாக, ஊருக்கு வந்தவுடன் முதலில் சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு விட்டு பின் தண்ணீர் குடிக்கச் சொல்வார்கள்.
இப்பவும் பல நோய்களுக்கு நீர்தான் ஆதாரம் எனும்போது, சில வாரங்கள் மட்டும் விடுமுறைக்கு வருபவர்கள், வெளியே தண்ணீர், ஜூஸ் போன்றவை அருந்தாமல் கவனமாக இருப்பதில் தவறில்லையே? மினரல் வாட்டர் கேன்கள், வாட்டர் ப்யூரிஃபையர்கள் எங்கள் ஊரில் இன்னும் புழக்கத்திற்கு வரவில்லை; தண்ணீரைக் கொதிக்க வைத்துதான் பயன்படுத்துகிறோம். ஆனால், எத்தனை பேருக்கு 15 - 20 நிமிடங்களாவது கொதிக்க வைத்தால்தான், கிருமிகள் முழுதும் அழியும் என்பது தெரியும்? ஓரளவு சூடானதும் அடுப்பை அணைத்து விடுகிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை, கேஸ் விலை அப்படி!!
உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும்போது, நான் எதையும் மறுப்பதில்லை; ஆனால் பிள்ளைகளுக்குக் கொடுப்பதில் கவனமாகவே இருப்பேன். அவர்களுக்கு உடல்நலக் குறைவு என்றால் எதுவும் ஓடாது அல்லவா? உறவினர்களும் அதைப் புரிந்து கொள்கிறார்கள்; குற்றம் பிடிப்பதில்லை என்பது ஆறுதலாக இருக்கிறது.
**********^^^^^^^^^^^^^************
சென்ற வாரம் ஒரு இஃப்தார் விருந்துக்குச் சென்றிருந்தோம். இரவு உணவாக இடியாப்பம் பரிமாறப்பட்டது. அதைப் பார்த்து பந்தியில் சிலர் பேசிக்கொண்டார்கள்:
“இடியாப்ப அச்சு சரியில்ல போல; அதோட மாவுல தண்ணியும் கூடிப்போச்சு போல, அதான் திரிதிரியா இருக்கு”
“ஆமா, மாவு கிண்டறதுலதான் இருக்கு இடியாப்பத்தின் டேஸ்ட். என்னச் சொல்றீங்க?”
“இல்ல, நான் பிழிய மட்டும்தான் செய்வேன். மாவு கிண்டித் தந்துடுவாங்க. அதனால தெரியல.”
“அப்படியா, பரவாயில்லையே. நீங்க என்ன ஒண்ணுமே சொல்லல?”
“இதுவரை இடியாப்பம் செஞ்சதில்ல வீட்டில. நீங்கல்லாம் பேசிக்கிறதைப் பாத்தா இது ரொம்ப கஷ்டம் போல! இனி கேட்டா செய்யமுடியாதுன்னு சொல்லிடணும்!”
இதுல என்ன மெஸேஜ்னு கேக்கிறீங்களா? இப்படி பேசிக்கிட்டது சில ரங்கமணிகள்!!
|
Tweet | |||