Pages

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் என் குமாரா - 2




முதல் பகுதி இங்கு

"இந்தக் குழந்தை மட்டும் பெண் குழந்தையா பிறந்தா, அது நமக்கு வேணாம். யாருகிட்டயாவது தூக்கிக் கொடுத்துடு. நீ எத்தனைவாட்டி கேட்டாலும் என் பதில் இதுதான்!!
தற்கு மேல் பொறுமை காக்கத் தெம்பில்லை!! கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.... ஒரு ஐந்து வயது சிறுவனுக்கு பெண் குழந்தையை வெறுக்க என்னதான் காரணம் இருக்க முடியும்

ஏண்டா தங்கச்சி வேணாம்கிற...?”

கேர்ள்ஸ்லாம் ஃபைட் பண்ண மாட்டாங்க. பாய்ஸ்தான் ஃபைட் பண்ணுவாங்க. அதனால எனக்கு தம்பிதான் வேணும்!!

அடிங்.... இவனையெல்லாம் ஒரு ஆளுன்னு மதிச்சு நான் உக்காந்து பேசிகிட்டிருக்கேன் பாரு.... இதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்... அதெல்லாம் புள்ளையப் பெத்து கையில கொடுத்துட்டாச் சரியாகிடும். ஆனாலும் ஒரு மனக்கிலேசம். இப்பவே இப்படிப் பேசுறானே.... கொஞ்சம் கொஞ்சமா மனச இப்பவே மாத்துறதுதான் நல்லது என்று அவ்வப்போது கேட்டாலும், “என் வயசு எப்பவுமே பதினாறுதான்என்கிற மாதிரி... ம்ஹூம்... கொண்ட கொள்கையிலிருந்து இம்மியும் பிசகவில்லை.

அவனுடைய பாட்டிகள், சித்திகள், அத்தைகள், கஸின்ஸ் யார் கேட்டாலும் அதே பதில்தான்!! ஒரு பையனும், ஒரு பொண்ணும் இருந்தாத்தானே "balanced familyஆ இருக்கும். அதனால பொண்ணு கண்டிப்பா வேணும்ல...பாட்டி எடுத்துச் சொன்னபோதும்.... ம்ஹூம்..... பெட்ரோமாக்ஸேதான் வேணும்!!

இது வெறும் சிறுபிள்ளைத்தனம்; பின்னர் மாறிவிடும் என்று நினைத்த எனக்கு இப்போத்தான் ரொம்ப கவலையாகிப் போனது!! இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கானே, குழந்தையை வெறுத்துவிடுவானோ என்ற பயம்... (அதுல பாருங்க, பொண்ணுதான்னு நான் எப்படி ரொம்ப உறுதியா நம்பிகிட்டு இருந்தேன்??)  

ஒரு நாலஞ்சு மாசம் இருக்கும்போது அவன் என்னிடம் கேட்டான், “இந்த பேபி பாய் பேபியா பிறக்கணும்னா நான் என்ன செய்யணும்?” ம்க்கும்... வயித்துல வச்சிருக்க நானே ஒண்ணும் செய்ய முடியாது.... இதில இவுக என்ன செய்யணும்னு கேள்வி வேற....

இருந்தாலும் இம்மாதிரி சந்தர்ப்பங்கள் சுளையாகச் சிக்கும்போது விடக்கூடாது என்ற பாடம் கற்றுக் கொண்டிருந்ததால், “நீ அல்லாஹ்கிட்ட துஆ செய். உம்மா சொன்னபடி கேட்டு நீ நல்ல பிள்ளையா நடந்துகிட்டா, அல்லாஹ் நீ கேட்டதைத் தருவான்.தூண்டில் போட்டேன். ஒன்றும் பதில் சொல்லவில்லை அவன். (துஆ = பிரார்த்தனை)

ரவு படுக்கும்முன் ஓதவேண்டிய துஆ, குர் ஆன் வசனங்களை ஓதிமுடித்தபின், கையை ஏந்தியபடி வெளியே கேட்காபடி கிசுகிசுவென ஏதோ சொல்லிக் கொண்டான். என்ன ஓதுறே என்று வாய் வரை வந்த கேள்வியை விழுங்கி விட்டேன். ஏன்னா... இப்படித்தான் போன மாசம் கிசுகிசுவென ஓதியதை என்னதுன்னு கேட்டப்போ, “நாளைக்கு டெஸ்ட் இருக்குலம்மா.. அதுல என் ஃப்ரண்ட் ஃபர்ஹானா ஃபர்ஸ்ட் மார்க் வாங்கணும். நான் அதுக்கடுத்த ஃப்ர்ஸ்ட் மார்க் வாங்கணும்னு துஆ செஞ்சேன்என்றதும் அவங்க அப்பாவுக்கு வந்ததே கோவம்... 

எலேய் உன்னிய காசு கொடுத்து படிக்க வக்கிறது நானு... இதுல நீ வேற யாரோ ஃபர்ஸ்ட் மார்க் வாங்கணும்னா துஆ செய்றேஎன்று வெகுண்டு எழுந்துவிட்டார்!! அய்யே... சும்மாருங்க...சின்னப் புள்ளட்டப் போயி.... விவரம் தெரியற வயசா இது?” என்று நான் நடுவில் புக... நீ சும்மாரு.... அதுவும் அந்த பொண்ணு பாகிஸ்தானி...  அட, கேரளாப் பொண்ணச் சொல்லிருந்தாகூட வுட்டுருப்பேன்...என்று பொங்க.... இப்படியொரு கோணத்தைஎதிர்பார்க்காததால் அப்படியே ஷாக்காகி விட்டேன்!! ஆனாலும் சுதாரித்து, பையனை அப்பாவிடமிருந்து காப்பாற்றி விட்டேன்!!

இந்த எபிஸோட் நினைவுக்கு வந்ததால், அப்போது கேட்காமல் விட்டுவிட்டேன். ஆனால் இந்த கிசுகிசு துஆசில நாட்களாகவே தொடரவும், பொறுக்க முடியாமல் கேட்டுவிட்டேன். என்னத்தடா அப்படி தெனம் துஆ கேக்கிறே? இப்ப டெஸ்ட் எதுவும் இல்லியே...” 

நீ சொன்னல்ல... அதான் தம்பிதான் வேணும்னு கேட்கிறேன்என்றதும் எனக்கு அதிர்ச்சி..... இவ்ளோ சீரியஸாவா இருக்கான்.... 

னக்கு இப்போ இன்னொரு பெருங்குழப்பம்..... இவ்வளவு நம்பிக்கையோடு பிரார்த்திக்கிறானே... ஒருவேளை பெண் குழந்தை பிறந்துவிட்டால்?? அவனுக்கு பிரார்த்திப்பதில் நம்பிக்கை போய்விடுமோ.... அப்போதுதான் சிறுகச்சிறுக அல்லாஹ், தொழுகை, துஆக்கள் என்று  சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருந்த நாட்கள் அவை. 

அவனது நம்பிக்கை பலப்படுவதற்காக நானும் இனி ஆண் குழந்தைக்காகப் பிரார்த்திக்கணுமா..... கேட்டது கிடைக்கவில்லையென்றால், பெரியவர்கள் புரிந்துகொள்ளலாம். சின்ன பிள்ளை அதை எப்படி எடுத்துக் கொள்வான்நான் கேட்டபடி பெண்ணே பிறந்தாலும் அது இப்போதைய சூழலில் மகிழ்ச்சி கொடுக்குமா? “சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாகபுத்திசாலி போல அவனைத் தூண்டிவிட்டதில், இப்போ என் பெண்குழந்தை கனவைக் காவு கொடுக்க வேண்டிய நிலை!!

பிறக்கப் போகும் குழந்தையின் ஆரோக்கியம், என் உடல்நிலை என்று பல்வேறு மன உளைச்சல்களுக்கிடையில் இந்த டென்ஷன் வேறு!! அந்த ஆறு மாதங்களும் என் மனக்குழப்பங்கள் கூடிக் கொண்டேதான் இருந்தன.
இதற்கிடையில் குடும்பத்தினரும் அவனை ப்ரெய்ன் வாஷ்செய்ய முயற்சித்தார்கள். ம்ஹும்.... ஃபோட்டோ ஷாப் கதைகளை எடுத்துச் சொன்ன பிறகும் மோடி மாயையில் முங்கியவர்களைப் போல திருந்தவேயில்லை!! 

ந்த நாளும் வந்தது!! கிளைமேக்ஸ் காட்சி!! அவன் ஒருவன் மட்டும் ஆண் குழந்தை துஆ, குடும்பத்தில் உள்ள எல்லோரும் பெண் குழந்தை துஆ, கடைசிவரை இதுவா அதுவா என்ற குழப்பத்திலேயே நான்...  ஜெயித்தது அவனே!! 

நம்பிக்கையோடு பிரார்த்திப்பதன் பலனை அவன் அறிந்துகொண்டதோடு, பெரியவர்களான எங்களுக்கும் அறியத் தந்தான்!! அவனுக்கு துஆவைக் குறித்து நான் சொல்லிக் கொடுக்கப் போக, அவன் வழியே ஆண்டவன் எங்களுக்கு பாடம் கற்பித்த நினைவுகள் என்றும் மறக்காதவை. 

ப்போ தம்பியாப் புள்ளையைப் பற்றி அண்ணன் கம்ப்ளெயிண்ட் கொண்டு வரும்போதெல்லாம் ஒரே பதில்தான், “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் என் குமாரா!!

Post Comment

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் என் குமாரா - 1





"ந்தக் குழந்தை மட்டும் பெண் குழந்தையா பிறந்தா, அது நமக்கு வேணாம். யாருகிட்டயாவது தூக்கிக் கொடுத்துடு. நீ எத்தனைவாட்டி கேட்டாலும் என் பதில் இதுதான்!!

என்னை நோக்கி - அதுவும் ஒரு பெண்ணியவாதியான என்னை நோக்கி - சொல்லப்பட்ட வார்த்தைகள், எறியப்பட்ட நெருப்புத் துண்டங்களைப் போல என்மீது அனலைக் கக்கின!! 

சொன்னது என் மாமியாரோ, நாத்தனாரோ அல்ல. என் உயிரினும் மேலாக நான் நேசிக்கும் அந்த ஜீவன்!! நான் இருப்பது உசிலம்பட்டி போன்ற கிராமமுமில்லை. நவ நாகரீக நகரமான அபுதாபியில்!! இங்கே வந்தபின்பும் சிந்தனைகளில் மாற்றங்கள் வரவில்லை என்றால்.....  

முதல் குழந்தை உண்டானதும், நானே ஆண்குழந்தைக்கு ஆசைப்பட்டுப் பிரார்த்தித்தேன். ஆண்வாரிசு அவசியம் என்றல்ல. பெட்டி பெட்டியாக தங்க நகைகள் இருந்தாலும், பார்க்கும் ஒரு இமிடேஷன் நகை ஆசையைத் தூண்டுமே, அப்படி ஒரு ஆசை. கேட்டுவிட்டேன், கொடுத்து விட்டான்.

ஆண் குழந்தை வளர்ப்பு என்பது எத்தனை அயர்ச்சியான அனுபவமாக இருக்கும் என்று பிறகுதான் தெரிந்தது. பெண்கள் மட்டுமே நிறைந்த வீட்டில் வளர்ந்த எனக்கு தெரிந்தவை, சுத்தம் சுகாதாரம் ஒழுங்கு அழகுணர்ச்சி மட்டுமே. சவூதியில் இருந்த வாப்பா வருடத்திற்கொரு முறை மட்டும் வந்து போவதால் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை. 

கணவர் என்று ஒரு ஆண் வாழ்க்கையில் நுழைந்த பின்புதான் ஆண்களின் பழக்க வழக்கங்கள்புரிந்தது!! சுத்தம்-சுகாதாரம்-ஒழுங்கு-அழகுணர்ச்சி ஆகியவற்றின் எதிர்ப்பதங்களை எனக்கு live-ஆக தினம் தினம் demo காட்டி, இப்படியும் ஒரு இனம்உலகில் உள்ளது என்று எனக்கு உலகத்தைப் புரியவைத்து, சவால்களை எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்ள  ஆண்டவன் அனுப்பி வைத்த ஆயுட்கால டெஸ்ட்தான் என் கணவர் என்று முதல் நாளே தெரிந்து கொண்டேன். 

அப்பவும் “#வளர்ப்புசரியில்லாததாலேயே அப்படி என்று நம்ம்ம்ம்பி, எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்என்று கனவு கண்டு ஒரு மகனைப் பெற்றேன்!! அவனும் வளரும்போதுதான் எனக்கு கன்ஃபார்மாக ஒரு விஷயம் புரிந்தது. இது வளர்ப்பின் கோளாறல்ல, manufacturing settings"- அப்படித்தான் என்று!! காரணமில்லாமலா களிமண்ணிலிருந்து ஆணைப் படைத்தான் இறைவன்!! 

வீடு முழுதும் ஆங்காங்கு எறியப்படும் குப்பைகள், மூலைகளையும் சுவரோரங்களிலுமாக குறிபார்த்து வீசப்படும் அழுக்குத் துணிகள், கட்டிலில் சுருட்டி எறிந்த ஈரத்துண்டுகள், தரையில் அழுக்குடன் கூடிய கால்தடங்கள் - சின்னதும் பெரிதுமாக இரண்டு செட்களில்.... 

இது போதாதென்று கண்ட இடத்திலும் போட்டு வைக்கப்பட்டிருக்கும் ஸ்க்ரூ ட்ரைவர், ஆணிகள், நட்டு, போல்ட் போன்ற ஆயுதங்களுடன் அக்கு வேறு ஆணிவேறாகக் கழட்டி போடப்பட்டிருக்கும் ஃபேன், டிவி, மிக்ஸி போன்ற வீட்டுப் பொருட்கள் ஒரு பக்கம்; அதைப் பார்த்து, அதேபோல பீஸ் பீஸாக கழட்டிப் போடப்பட்ட நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் விளையாட்டு பொருட்கள் இன்னொரு பக்கம்.....

இது வீடா, மெக்கானிக் ஷாப்பா, குப்பை மேடா என்று தீர்மானிக்க முடியாத நிலையில் நான்!! இந்த அராஜகங்களில் இருத்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்தேன். அப்போத்தான் முடிவு பண்ணேன், அடுத்த குழந்தை பெண்ணாக இருந்தாலொழிய எனக்கு விமோசனமில்லை என்று!!
 
ந்த நல்ல செய்தியைப்பகிர்ந்த போதுதான், என் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சிக் கொட்டியதுபோல வந்து விழுந்தன அந்த வார்த்தைகள். சொன்னது யார் என்பதைத்தான் என்னால் நம்பமுடியவில்லை. வேறு யாரென்றாலும் அதில் அவர்கள் அளவில் ஒரு நியாயம் இருக்கும். ஆனால்... ஆனால்....!!  சரி, போகட்டும் பிறிதொரு சமயம், நல்ல மூடில் இருக்கும்போது கேட்டுப் பார்க்கலாம் என்று, ஒரு சில நாட்கள் கழித்து கண்ணே பொன்னே மணியே என் செல்லமே தங்கமேஎன்று கொஞ்சலோடு கேட்டால்... அப்போதுதான் அறுதியிட்டு உறுதியாகப் பதில் வந்தது....

"இந்தக் குழந்தை மட்டும் பெண் குழந்தையா பிறந்தா, அது நமக்கு வேணாம். யாருகிட்டயாவது தூக்கிக் கொடுத்துடு. நீ எத்தனைவாட்டி கேட்டாலும் என் பதில் இதுதான்!!

-தொடரும்.

(”டீக்கடை” என்ற முகநூல் குழுமத்தின் ”
Memory book- sweet & salt” போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டுரை.)

இரண்டாம் பகுதி இங்கு

Post Comment

கலையும் அறிவியலும் சந்தித்தால்




செய்திகளில் பல அறிவு ஜீவிகளும், பிரபலங்களும் அவ்வப்போது ஆங்காங்கு நடக்கும் ஃபிலிம் ஃபெஸ்டிவல்களில் (திரைப்பட விழா) கலந்துகொண்டு பெருமையாக படம் பிடித்து போடுவதையும், பார்த்த படங்களின் விமர்சனங்களை எழுதுவதையும் பார்த்திருக்கிறேன். அதையெல்லாம் ஏக்கத்தோடும், பெருமூச்சோடும் வாசித்து விட்டு, நமக்கு எப்போது இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும் என்று ஏங்கியதுண்டு.

அமீரகத்தில் திரைப்பட விழாக்கள் நடப்பதில்லையோ என்று நினைக்க வேண்டாம். அதெல்லாம் நடக்கும். ஆனால், யாராவது ஃப்ரீயா டிக்கட் எடுத்துத் தந்து படம் பார்க்க கூட்டிச் செல்ல, நாம என்ன அவ்ளோ பிரபலமா??!!

அது மட்டும் இல்லாம, வாசலில் யாராவது நின்று அழைக்கவும், வீட்டில் உள்ள அம்மணி, மாடி அறையிலிருந்து நடந்து வந்து, மாடிப்படிகளில் இறங்கி, வாசலுக்கு நடந்து வந்து கதவைத் திறப்பது வரை அரைமணி நேரம் விளக்கமாகக் காட்டும் “ஆர்ட்” படங்களத்தான்
திரைப்பட விழா என்ற பெயரில் போடுவார்கள். அதைப் பார்க்குமளவு என்னிடம் பொறுமை இல்லை. ஆகவே, உறுமீனுக்குக் காத்திருக்கும் கொக்கு போல, சரியான சந்தர்ப்பத்திற்கு... சரி, சரி... டெஞ்சனாவாதீங்க...

ரெண்டு வாரம் முன்னாடி, அபுதாபியில் உள்ள நியூயார்க் பல்கலைக் கழகம், Imagine Science Abu Dhabi: Where Science Meets Art and Becomes Culture என்ற பெயரில் அறிவியல் குறும்பட விழா நடத்தப் போவதாக விளம்பரங்கள் பார்த்தேன், அதுவும் அனுமதி இலவசமாம். மீன் சிக்கிருச்சு!! அதுவும் ரெண்டு மீன்கள்... ஜவ்வு மாதிரி இழுக்கும் “கலை” படங்கள் இல்லை, அறிவியல் படங்கள்!! டிக்கட் ஸ்பான்ஸர் தேடவும் வேண்டாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!! 

ந்தத் திருநாளும் வந்தது. அவ்ளோ பெரிய தியேட்டர்ல அங்கங்க ஒவ்வொருத்தர்னு ஒரு இருபது பேர்தான் இருந்தாங்க. இதுக்காகவாவது வூட்டுக்காரரை துணைக்கு கூட்டி வந்திருக்கலாமோன்னு தோணுச்சு. இருந்தாலும் பயத்தைக் காட்டிக்காம, ஒரு அம்மணி பக்கத்துல ‘ஹாய்’ சொல்லிட்டு உக்காந்துகிட்டேன்.

படங்கள் ஆரம்பித்தன. மொத்தம் 7 படங்கள். 4 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் ஒவ்வொன்றும். 


1. The Disquiet: லெபனானில் ஏற்படும் நில நடுக்கங்களைப் பற்றிய படம். மூன்று  நிலநடுக்க கோடுகள் (Earthquake faults) மீது லெபனான் நாடு அமைந்திருப்பதால், அங்கு தினமும், மக்கள் உணரமுடியாத சிறிய அளவிலாவது நடுக்கங்கள் ஏற்படுவதைப் பற்றிய படம்.

2. SLOW LIFE என்ற பெயரில், பவளத் திட்டு பாறைகளில் (The Great barrier reef)
நடக்கும் நிதானமான நிகழ்வுகளை - மலர்கள் விரிவது போன்றவை - time lapse முறையில் வீடியோ எடுத்துப் போட்டிருக்கிறார்கள். வண்ணமயமான அற்புதமான காட்சிகள். வியந்து ரசிக்க வைத்தன. 

படம் பார்க்க:
https://vimeo.com/88829079
 
3. Green matters : பால்டிக் கடல் மற்றும் அதில் வளரும் பாசி (algae)குறித்தும் பேசும் படம். ஐரோப்பாவில் இருக்கும் பால்டிக் கடலின் சிறப்பே, அதில் வழக்கமாக கடல்களில் உள்ளதைவிட மிகக் குறைந்த உப்புத் தன்மைதான். பத்தாயிரம் வருடங்களுக்குமுன், இது பால்டிக் ஆறு என்றே அழைக்கப்படுமளவு உப்பு குறைவாக இருந்ததாம்.

தற்போது அதில் அருகிலுள்ள விவசாய நிலங்களின் உரங்கள், ஆலை மற்றும் குடியிருப்புகளின் கழிவுகள் கலப்பதாலும் நீரில் சத்துக்கள் (nutrient) அளவு கூடிவிடுவதால் - இதற்கு eutrophication என்று பெயர் - பாசி போன்ற நீர்த்தாவரங்கள் மிக அதிகமாக வளருகின்றன. அதனால் நீரில் இருக்கும் dissolved ஆக்ஸிஜன் அளவு வெகுவாகக் குறைந்துவிடுகின்றது. அதில் வாழும் மீன்கள் இதனால் பாதிக்கப்பட்டு, மீன் வளம் குறைகின்றது. கலங்கல் தன்மை, நாற்றம் உள்பட இன்னும் பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

இதற்கான ஒரு தீர்வாக, அளவற்று விளைந்து கிடக்கும் பாசிகளை நீக்கி, அவற்றை வேறு வழிகளில் பயனுள்ள பொருட்களாக மாற்ற முடியுமா என்ற முயற்சியே இப்படத்தின் “கரு”!! பாசிகள் வளர்ந்து பசுமையாக இருக்கும் பருவகாலம் அறிந்து, அவற்றை நீக்கி, காயவைத்து, நார்களாக ஆக்கிக் கொள்ளலாம். பின்னர் அதனைக் கொண்டு, தரை விரிப்பு போன்றவை செய்யலாம். ஆடைகள் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியும் நடக்கிறதாம்.
படம் பார்க்க: https://vimeo.com/26728542

4. Lulu: Story of a Pearl: அபுதாபியில் பெட்ரோல் கண்டுபிடிப்பதற்கு முன்பு முத்து குளிப்பதுதான் முக்கிய தொழில். ஆனால், ஜப்பானியர்கள் செயற்கை முத்துக்களை (cultured pearls) கண்டுபிடித்த பின்பு, இயற்கை முத்துக்களின் மவுசு குறைந்தது. அப்படியே இத்தொழில் வழக்கொழிந்து விட்டது. நம் நாட்டிலும் இப்போதுதானே அழிந்து வரும் விவசாயத்தின் அருமையை உணர்கிறோம். அதுபோல, இவர்களும் தம் முன்னோர்களின் தொழிலை  மீட்டெடுக்கும் முயற்சியாக, தற்போது நவீன உத்திகளின் உதவியுடன் முத்து குளித்தலைத் தொடர ஆரம்பித்துள்ளார்கள்.

சரியான பருவ காலத்தில், சிப்பிகளைச் சேகரித்து, அவற்றைப் பதப்படுத்தி “ஆபரேஷன்” செய்து ஒரு மண் துகளை உட்செலுத்துகிறார்கள். பின்னர் அவற்றைக் கடலில் போட்டுவிட்டு இரண்டு வருடம் காத்திருந்து, எடுக்கிறார்கள். இம்முறையில் குறைந்த பட்சம் 70% சிப்பிகளில் முத்து கிடைக்கிறதாம். “மூன்றாம் தலைமுறை முத்து விவசாயிகள்” என்று தங்களை அறிமுகம் செய்துகொள்ளும்  ஜப்பானியர்கள், அபுதாபியினருக்குப் பயிற்சி அளிக்கிறார்கள்!

முன்னோர்களின் தொழிலை, அவர்களின் சிரமப்பாடுகளையும், நாட்டின் வரலாற்றையும் அறிந்து கொள்ளாத இளைய தலைமுறையால் நிகழ்காலத்தில் சிறப்புற செயல்பட முடியாது என்று அபுதாபி சுற்றுச்சூழல் அதிகாரி கூறுகிறார்.

5. Emergency Calls :

ஃபின்லாந்து நாட்டில், ஒரு எமெர்ஜென்ஸி கால் செண்டரில் வரும் அழைப்புகளும், அதற்கான பதில்களும் மட்டுமே அடங்கிய ஒரு படம். அங்குள்ள பணியாளர்களாக மட்டும் இருவர் நடிக்கிறார்கள். மற்றபடி ஒலி மட்டுமே. ஓவ்வொரு அழைப்பு வரும்போதும், அழைப்பவரின் குரலிலிருந்தும், பிண்ணனி ஓசைகளிலிருந்தும் அங்கு நடக்கும் காட்சிகள் நம் மனக்கண்ணில் ஓட ஆரம்பிக்கின்றன. கத்தியின்றி, இரத்தமின்றி நம்மை இருக்கை நுனிக்கு வர வைத்து விடுகின்றது படம்.

ஒரு அழைப்பு, வீட்டில் எதிர்பாராமல் மனைவியின் பிரசவம் நிகழத் துவங்கும்போது உடனிருக்கும் கணவனிடமிருந்து. அழைப்பவரின் பதற்றம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. ஆனால், பதில் சொல்பவர் நிதானமாக அவரை என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித் தருவது “என்னால் இது சாத்தியமா?” என்று யோசித்து, வியக்க வைக்கிறது. குழந்தை பிறந்ததும், தொப்புள் கொடியை வெட்டாமல், குழந்தையை அம்மாவின் நெஞ்சில் போடச் சொல்லும் காட்சி நெகிழ வைக்கிறது. சரியாக அச்சமயத்தில், ”இன்னொரு குழந்தையும் வருகிறது” என்கிற அக்கணவனின் அலறல் பதற்றத்திலும் நம்மை புன்னகைக்க வைக்கிறது. அதற்கும் உரிய அறிவுரை கொடுத்துக் கொண்டே, “இந்நேரம் உங்கள் வாசலில் ஆம்புலன்ஸ் வந்திருக்குமே” என்று சொல்லும்போதே, மருத்துவர் வந்துவிட்டதாக கணவரும் அறிவிக்கிறார்.

1994-ல் ஐரோப்பாவின் பால்டிக் கடலில் “எஸ்டோனியா” என்கிற கப்பல் மூழ்கி, 852 பேர் இறந்தனர். டைட்டானிக்கு இணையான இழப்பாகக் கருதப்பட்ட விபத்து இது. அந்தக் கப்பலிலிருந்து வந்த அவசர அழைப்பும் இந்தப் படத்தில் உள்ளது. நம்மைக் கொல்லும் அந்த குரல்களின் உணர்ச்சிகள். சில நிமிடங்களுக்குப் பின் பதிலற்று போகின்றது அந்த அழைப்பு....

இன்னொன்று ஃபின்லாந்தில் ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டின்போது அழைக்கும் ஆசிரியரினது. வகுப்பு மாணவர்களின் முன் தன் பதற்றத்தை மறைக்க முயல்வது குரலிலேயே தெரிகிறது. சுடுபவன், தன் வகுப்பிற்குள்ளும் நுழைந்துவிட்டதாக சொல்வதோடு முடிகிறது அந்த அழைப்பு.

இவற்றிற்கிடையே, தன் மனைவி தன்னை அடிப்பதாக வரும் அழைப்பு, தன் நாய்க்கு அறுவை சிகிச்சை முடிந்து வருவதாகவும், ட்ராஃபிக்கை க்ளியர் செய்து தரக் கேட்கும் அழைப்புகளும் உண்டு.
படத்தின் ட்ரெய்லர்: https://www.youtube.com/watch?v=scpAn84JSpY

படத்தைப் பற்றிய இந்த விமர்சனம் சிறப்பாக இருக்கிறது: http://shorts.cineuropa.org/sh.aspx?t=article&t2=news&did=260862


இதற்குப் பிறகு வந்த இரண்டு படங்கள் சுவாரசியமாக இல்லை (புரியவும் இல்லை). Return to the Sea - ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் பற்றிய கதையும், Microscope Time-Lapse: Sugar Crystallizing out of Solution.  


மூன்று நாட்கள் நடந்த திரைப்பட விழாவில், தொடர்ச்சியாக பல அறிவியல் குறும் படங்கள் திரையிடப்பட்டன. எல்லாவற்றையும் பார்க்க ஆசை இருந்தும், சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. எனினும், இனி இம்மாதிரி வாய்ப்புகளைத் தவறவிடக்கூடாது என்று நினைத்திருக்கிறேன். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....!!

சரி, தலைப்புக்கு அர்த்தம் தேடி களைச்சிருப்பீங்க:: இந்த பட விழாவின் tagline "
Where Science Meets Art and Becomes Culture" என்பதை, தமிழ்ப்”படுத்தினால்” கிடைத்ததுதான் தலைப்பு!!!

Post Comment