Pages

வீட்டு வேலை





”ஏய் ரகுமத்து... என்னா செய்றே? இங்க வா.. வந்து இந்த துணியளக் கொண்டு போய் வாஷிங் மெஷின்ல போடு!!”

“என்னம்மா... இப்பத்தான் பரிச்சை முடிஞ்சு லீவு ஆரம்பிச்சிருக்கு... அதுக்குள்ள வேலை சொல்ல ஆரம்பிச்சுட்டியா... கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்க விடும்மா..”

“வயசுப் புள்ளைக்கு என்ன ரெஸ்ட் வேண்டிக் கிடக்கு? அப்படி என்ன வெட்டி முறிச்சுட்ட? சும்மாவே இருந்துகிட்டு ரெஸ்ட் வேற வேணுமாக்கும்? என்னவோ கையாலேயே துவைக்கப்பொற மாதிரிதான்...”

“ம்மா... சும்மா தொணதொணங்காதே... துணிய வாஷிங் மெஷின்லதான போடணும்.. அவளவ்தான? அப்புறமாப் போட்டுக்கிறேன்.. ஆள விடு...”

”ஆமாமா... நானெல்லாம் பேசினா உனக்கு அப்படித்தான் இருக்கும். என் பேச்சைக் கேட்டா, ஒனக்குத்தான் நல்லது. இல்லாட்டிப் போனா, நாள பின்ன நீயி போற வீட்டுல அம்புட்டுப் பேரு வாயிலயும் வுழுந்து எந்திக்கணும். அதுக்குத்தான் சொல்லுறேன்....”

அதைக் கண்டும் கொள்ளாமல், பதிலும் சொல்லாமல், கையில் மொபைலும், காதில் ஹெட் ஃபோனுமாய் ரஹமத் சோஃபாவில் புதைந்து கொள்ள, ஜன்னத் ஆயாசமாய் புலம்ப ஆரம்பித்தாள். சரியாய் அந்நேரம் ஜஃபருல்லா பாய் வீட்டினுள் நுழைய, பஞ்சாயத்துத் தலைவரைக் கண்டது போல பிராது கொடுக்கத் தொடங்கினாள்.

எல்லா வேலயும் நானேதான் பார்க்கணுமா? கொஞ்சம் கூட மாட ஒத்தாச செஞ்சா, அப்படியே எல்லா வீட்டுவேலையும் படிச்சுக்கலாம்ல? உங்க அருமந்த புள்ளைகிட்ட நீங்களாவது கேளுங்க... எம்பேச்சையெல்லாம் யாரு மதிக்கிறா இங்க..?”

”புள்ளைக்கு இப்பத்தானளா பரிச்சை முடிஞ்சிருக்கு. ஒரு வாரம் போவட்டும். அப்புறம் வேலையெல்லாம் டாண்டாண்னு செஞ்சுத் தருவாப்ல... நீயே அசந்துட மாட்டே”

“ஆமா... புஸ்தவத்தைப் படிச்சதுலயே களச்சு போயாச்சு உங்க வாரிசு... நா என்ன அம்மி அரைக்க, ஆட்டுரல ஆட்டவாச் சொல்லுறேன்... மாடு மாதிரி வளந்து நிக்கிது.. மிக்ஸில ஒரு தேங்கா அரக்கத்  தெரியுமா? அட கிரைண்டர் ஆன் பண்ண சுச்சு எங்கருக்கான்னாவது தெரியுமா உங்க புள்ளக்கி?”

“எளா... இதெல்லாம் பெரிய்ய விசியமா.. அதெல்லாம் தேவைன்னு வரும்போது தன்னால படிச்சிக்கிடும்... வுடுளா...”

“ஆமா... இப்படியே என்னயேச் சொல்லுங்கோ... நாள பின்ன, எட்டுப்பத்து பேரு இருக்க வூட்ல ஒருவேலையும் தெரியாம முழிச்சுகிட்டு நின்னா தகப்பனையா கொற சொல்லுவாங்க? அம்மக்காரி வளத்த லச்சணத்தப் பாருன்னு எந்தலயல்ல ஊர்ல உருட்டுவானுவோ?”

”அதெல்லாம் உருட்ட மாட்டாங்க. இத்தன வருசம் படிச்சிட்டிருந்த புள்ளக்கி வூட்டு வேல செஞ்சுபடிக்க நேரம் இருககாதுன்னு தெரியாதா என்னா அவுகளுக்கு? அந்த வூட்ல இருக்கவுகளும் ஆரம்பத்துல இப்படிச் சின்னஞ்சிறுசா அறியாம புரியாம வாழ வந்தவுகதானே? அதெல்லாம் அஜ்ஜஸ் பண்ணிப்பாவோ... நீ சும்மா இரு..”

”இப்படியே என் வாயை அடைக்கிறதிலியே குறியா இருங்கோ...  நானெல்லாம் இந்த வயசுல..”

“எளா... சும்மாயிருளா.. எல்லாரும் எல்லா வேலயும் படிச்சிகிட்டா பொறந்து வர்றோம். நானும் மொதல்ல ஹாஜியார் இரும்புக் கடைல வேலைக்கிச் சேந்தோடனே கல்லாவுலயா ஒக்காந்தேன்? டீ வாங்கியாறது... தண்ணி பிடிக்கது, கடயத் தூத்து வார்றதுன்னுதான் ஆரம்பிச்சேன்... இப்பம் நம்ம கடேலயும் அஞ்சாறு பேருக்கு டிரேனிங் கொடுக்கோம்ல? அத மாரி...”

“அட அதத்தான நானுஞ் சொல்றேன்... எல்லா வேலயும் படிச்சுகிட்டு போனோம்னா இந்த மாரி எடுபுடி வேலயெல்லாம் செய்ய வேணாம். நேரா மெயினான வேலைல ராசாவாட்டம் ஒக்காந்துக்கலாம்.  நம்ம ரகுமத்தும் அடுப்பு வேல எல்லாந்தெரிஞ்சுகிட்டுப் போனா, போற இடத்துல பகுமானமா அடுப்புல நின்னு தாளிச்சுக் கொட்டிட்டு நவுண்டுடலாம். இல்லயினா, வூடு தூத்து துடைக்கிறது, சாமாஞ்செட்டு கழுவுறது, அடுப்பங்கரையை கழுவிவுடுறதுன்னு கஸ்டமான வேலையெலாம் புதுசா வந்தவந்தலயில போட்டுடுவாஹ.. ”

“வாட் ரப்பிஷ்!! அம்மா!!  நான் எம்.எஸ். படிக்க ஸ்டேட்ஸ் போப்போறேன்!! அங்க ஆல்ரெடி  ஒரு வீட்டுல
ஷேர் பண்ணி ஒண்ணா சேந்து சமச்சு குடியிருக்கிற என் சீனியர் ஃப்ரண்ட்ஸ் கூட நானும் ஜாயின் பண்ணிக்கப் போறேன். ஏதோ வேலையில ஜாயின் பண்ணப்போற மாதிரி, இதுக்குமா ”எக்ஸ்பீரியன்ஸ்”  தேவை?” என்று கத்தினான் ரஹ்மத் என்கிற ரஹ்மத்துல்லா கான்.

Post Comment

ஈயம் பித்தளை




அமீரகத் தமிழ் மன்றம், மகளிர் தினத்தையொட்டி சென்ற ஏப்ரல் மாதம் “பெண்ணியம் எனது பார்வையில்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரைப் போட்டி நடத்தியது. அதற்கென அனுப்பி வைத்த எனது கட்டுரை, மூன்றாம் பரிசைப் பெற்றது. 

அதற்காக வழங்கப்பட்ட ஷீல்ட் (பட்டயம்??): 

கட்டுரையைக் குறித்து, நடுவர்களில் ஒருவர் தெரிவித்திருந்த கருத்து: 

பெண்ணியம் பற்றிய ஆராய்வை தர முயற்சித்திருப்பது கொஞ்சம் திருப்தியாய் இருக்கிறது. ஆனாலும் பெண்ணியத்தை பரந்த அணுகுமுறையில் யாருமே பார்க்கவில்லை அதில் இந்த கட்டுரைக்குரியவரும் விதிவிலக்கல்ல. ஆனாலும் எழுத்தாக்கம் கொஞ்சம் சிறப்பானதாக இருக்கிறது மற்றைய கட்டுரைகளை விட என்பது எனது கருத்து. ஆகையால் 3வது இடம்.

இனி, கட்டுரை:  
பெண்ணியம் - எனது பார்வை

முன்னுரை:

பெண்ணியம் - இந்த வார்த்தையை வாசிக்கும்போதே சிலருக்குப் பரிகாசப் புன்னகை தோன்றும்; சிலருக்கு உணர்ச்சிகள் பொங்கும்; சிலரோ இதற்குரிய சரியான பொருளைத் தேடும் முயற்சியில் இறங்குவர். நானும் இறங்கினேன். கிட்டியவற்றைப் பகிர்கிறேன் உங்களோடு. 

இது “பெண்”ணியம் என்பதால், பெண்தான் இதைக் குறித்து ஆராயவேண்டும், பேசவேண்டும் என்ற எண்ணம் முதலில் மாற வேண்டும். ஆணும், பெண்ணும் இயைந்து வாழ்வதே சமூகம். ஆகவே, பெண்ணைக் குறித்து ஆணும், ஆணைக் குறித்துப் பெண்ணும் அறிந்து கொண்டால் மட்டுமே நல்லிணக்கம் கிட்டும். அதன் ஒரு வழியே ‘பெண்ணியம்’ பேசுதல்!! 

பெண்ணியம் - வரைமுறை: 
 
‘பெண்ணியம்’ (Feminism) என்றால் என்ன? ”ஆண்களுக்குச் சமமான, அரசியல், பொருளாதார, சமூக உரிமைகள் பெண்களுக்கு வழங்குவது” என்றும், ”பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்புகள் தருவது” என்றும், இதற்குப் பல வரைமுறைகள் தந்திருக்கும் விக்கிபீடியா, ”பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு” என்றும் சொல்கிறது. கட்டுரையின் போக்கில் இதன் சரியான வரைமுறையைப் பார்ப்போம். 

பெண்ணீயத்தின் வரலாறு: 

ஆதிகாலத்தில், ஆணும் பெண்ணும் ஒன்றாகச் சேர்ந்தே பிழைப்புக்கான வழிகளைத் தேடுவார்களாயிருந்திருக்கும். பிறகு, குழந்தைகள் வந்ததும், அவற்றை மிருகங்களிடமிருந்தும், இயற்கைப் பேராபத்துகளிடமிருந்தும் காத்துக் கொள்ளவென்று பெண் மட்டும் வேட்டையாடுதலைவிட்டு குகைக்குள் தங்கவேண்டி வர, அப்படியே காலப்போக்கில் சமையல், குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட ‘குடும்பப் பொறுப்புகள்’ அவள் தலையில் வீழ்ந்தன. 

உணவுக்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் வெளியே பல இடங்களுக்கும் சென்று வர வாய்ப்புகள் கிடைத்த ஆண், அனுபவங்கள் தந்த அறிவினாலும், உழைப்பு தந்த உடல் வலுவினாலும் பெண்ணைவிடச் சிறப்பானவனாகிவிட, அப்போதுதான் தொடங்கியிருக்க வேண்டும் பெண்ணின்மீதான ஆணின் ஆதிக்கமும், அதிகாரமும்!! உணவு இன்னபிற இன்றியமையாத தேவைகளுக்காக ஆணையே, பெண் சார்ந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், ஆணின் அடக்குமுறைகளுக்கு அவள் பணிந்தே ஆக வேண்டிய சூழல் இருந்தது. 

மேலும், பெண்களும், குழந்தைகளும் ஆணின் பராமரிப்பில் இருந்ததால், அவர்கள் ஆணின் உடமைகளாகவே பார்க்கப்பட்டனர். அவர்களுக்கு வரும் ஏற்றமும், தாழ்வும் சம்பந்தப்பட்ட ஆணின் பெருமைக்கு அணி சேர்ப்பதாகவோ, இழுக்காகவோதான் நோக்கப்பட்டன. 

அதனால் காலப்போக்கில், இரு ஆண்களுக்கிடையே சண்டை வந்தால், அவர்களின் எதிரியின் பொருட்களுக்கு மட்டுமின்றி, ’உடமை’களான பெண்களையும் சேதப்படுத்த முனைந்தனர். இந்த ‘சேதம்’ உரிமையான ஆணிற்குத் தோல்வியாகக் கருதப்பட்ட சமயத்தில்தான் ‘கற்பு’ என்ற கருத்து களமிறக்கப்பட்டிருக்க வேண்டும். 

இப்படியாக, பொருளாதாரப் பலமில்லாத பெண், ஆணுக்கு அடிமைப்பட்டவள் ஆகிப்போனாள். உலக அறிவோ, உடற்பலமோ இல்லாத நிலையில், இந்த அடிமைத் தளையிலிருந்து அவளால் மீள முடியவில்லை. இதற்குள் “குடும்பம்” என்ற அமைப்பும் ஏற்பட்டிருக்க, ”மீள வேண்டும்” என்று நினைத்தாலும் குடும்ப பந்தங்கள் என்ற நிர்பந்தத்தால் தளையிலேயே தொடரவேண்டியவளானாள். 

னினும், ஒரு கட்டத்தில் பெண்ணினத்தின்மீதான அடக்குமுறைகள் - வன்முறை, அடிமைத்தனம், பாலியல் சுரண்டல், பால்ய விவாகம், கல்விமறுப்பு, வாக்குரிமை மறுப்பு - என்று பல்வேறு அவதாரங்களெடுத்து அளவின்றி போனதால், பெண் தடைகள் உடைத்துப் பொங்கி எழுந்தாள். முதல்படியாக, பொருளாதாரத்தில் ஆண் உயர்ந்து இருப்பதால்தானே, அவன் கை ஓங்கியும், பெண்கள் கை தாழ்ந்தும் இருக்கிறது என்று எண்ணி, தானும் கல்வி கற்று, பொருளீட்டும் முயற்சிகளில் இறங்கினாள். இத்தருணங்களில்தான் பெண்ணுரிமை, பெண் விடுதலை, பெண்ணியம் ஆகியவை உருப்பெற்று விவாதக் களமாகின. 

இன்று அநேகமாக ஆணுக்குச் சமமாகவே பெண்களும் பொருளாதாரத்தில் மேன்மை பெற்று விளங்குகின்றனர். எனில், அப்பெண்கள் விடுதலை அடைந்துவிட்டனரா? என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி!! 

தற்காலப் பெண்ணியம்: 

ஒருமுறை, தொலைக்காட்சியில் ஒரு பிரபல கலந்துரையாடல் நிகழ்வில், பெண்களிடம் “ஏன் சிகரெட் புகைக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு, “ஆண் மட்டும்தான் புகைக்கலாமா? எங்களாலும் முடியும் என்று காட்டவே புகைக்கிறோம்” என்று சில பெண்கள் சொன்னதைக் கேட்டபோது மூச்சடைத்தது!! இதிலே ஒரு பிரபல பெண் பத்திரிகையாளரும் உண்டு என்பது கூடுதல் அதிர்ச்சி. 

இதே தவறைத்தான் பல பெண்கள் இன்று செய்து வருகின்றனர். “அதென்ன ஆம்பளை மட்டும்தான் குடிப்பது, இரவுபகல் பாராமல் நண்பர்களோடு ஊர்சுற்றுவது? நாங்களும் செய்வோம்” என்று இளம்பெண்களும்; “ஆண் நேரங்காலம் பார்க்காமல் அலுவலகப் பணியில் ஈடுபடவில்லையா? எங்களாலும் முடியும்” என்று பால்குடி மாறா குழந்தையைப் புறக்கணிப்பது; இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இதுதான் பெண்ணியம் என்ற தவறான புரிதலைக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால், ஒன்று புரியவில்லை; ஆண்கள் உடலை வெளிக்காட்டும் விதமாக ஆடை அணிவதில்லை. பின் ஏன் எல்லாவற்றிலும் ஆண்களோடு போட்டி போடும் இந்தப் பெண்கள் மட்டும் இப்படி அணிகிறார்கள்? பெண்ணை வேடிக்கை, விளம்பரப் பொருளாக்கும் வியாபார உலகின் தந்திரங்களுக்கு இவர்கள் இரையாகிப் போனதுதான் இதற்குக் காரணம். வேதனையிலும் வேதனையான உண்மை!! உதாரணத்திற்கு, பெண்களுக்கான ’ஊசி உயர் குளம்பு’ (பென்சில் ஹைஹீல்ஸ்) செருப்பு வடிவமைப்பாளர் ஒருவர் கூறுகிறார்: ” ஹை ஹீல்ஸ் அணிவது பெண்ணுக்கு அதிகாரம் தருகிறது; அவளைப் பெண்ணாக உணர வைக்கிறது” என்று!! வெறுமே உயரத்தைக் கூட்டும் ஒரு செருப்பு என்ன அதிகாரத்தைத் தந்துவிடப் போகிறது? மருத்துவ உலகமோ ஹை ஹீல்ஸை முற்றிலும் தவிர்த்து உடல்நலம் காக்க அறிவுறுத்துகிறது. இதையும் மீறி, அவ்வியாபாரி போன்றவர்களின் லாப நோக்குகளைப் புரிந்துகொள்ளாமல் ஹைஹீல்ஸ் அணிந்து உடல் சீர்கேட்டை வருந்தி வரவழைத்துக் கொள்பவர்களைத்தான் அதிக எண்ணிக்கையில் பார்க்கிறோம். 

இங்ஙனமே, பெரும்பாலான பெண்கள், குடும்பத்திற்குக் கூடுதல் பொருட்தேவை இல்லாத பொழுதிலும், பொருளாதாரத்தில் ஆணைப் போலாகிவிடவேண்டுமென்ற போட்டி மனப்பான்மையுடனும், பொருளாதாரச் சுதந்திரமும் பெற்றிருப்பதே பெண்ணியம் என்ற தவறான கணிப்பினாலும் குழந்தைநலத்தையும், குடும்பநலனையும் பின்தள்ளிவிடுகிறார்கள். இந்தப் போட்டியில், தான் ஒரு பணம் சம்பாதிக்கும் இயந்திரமாகவும் ஆக்கப்பட்டிருப்பதை உணராமல், தன் நலனையும், ஏன் சுதந்திரத்தையும்கூட இழந்து, வாழ்வை ரசிக்க நேரமில்லாமல் அரக்கப்பரக்க ஓடிக்கொண்டேயிருக்கிறாள். 

ஒரு காலத்தில் அதீதமாய் அடக்கியாளப்பட்டிருந்த காரணத்தால், விடுதலை கிடைத்ததும் கரைகள் உடைத்த காட்டாற்று வெள்ளமாய்ப் பயணிக்க முனைகின்றனர் இவர்கள். தறிகெட்ட காட்டாற்று வெள்ளம் அழிவையேத் தரும் என்பதை உணராமல் போனதேனோ? 

ஒருபுறம், இப்படியானப் பெண்கள் என்றால், சமூகத்தின் இன்னொரு புறம் தன் உரிமைகள் என்னவென்றே தெரியாமல் அடிமைப்பட்டுக் கிடக்கும் சமூகத்தின் அடித்தட்டுப் பெண்கள்!! படிப்பறிவும், சுய அறிவும் இல்லாமல் தன் வீட்டு ஆணின் பங்கையும் சேர்த்துத் தானே உழைத்துப் பொருளீட்டி, அந்த ஆண் உட்பட குடும்பத்தின் மொத்தப் பாரத்தையும் மட்டுமல்லாமல், அந்த ஆணின் வன்முறையையும் அடக்குமுறையையும்கூட தன் மெல்லிய தோள்களில் தாங்கிக்கொண்டிருக்கும் இவர்களிடம் பெண்ணியம், பெண்ணுரிமை என்று பேசிப்பாருங்கள் – பேந்தப் பேந்த விழிப்பதைத் தவிர வேறொன்றும் தெரியாது அவர்களுக்கு!! 

நுனிநாக்கு ஆங்கிலமும், நாகரீக உடையும் அணிந்து கண்ணாடிச் சுவர்களால் சூழப்பட்ட அறைகளில் உயர் உத்தியோகம் பார்க்கும் பெண்களைப் பார்த்து, பெண் முன்னேற்றம் என்று பெருமைப்படும் நாம், நைந்த உடையும், பஞ்சடைத்த கண்களுமாய் மண்சட்டி சுமக்கும் அந்த அடித்தட்டுப் பெண்களைப் பார்த்து ஏன் பரிதாபப்படுகிறோம்? அவர்களும் உழைத்துப் பொருளீட்டுபவர்கள்தானே? 

பெண்ணியம் - எனது பார்வை: 

“யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே, கருடன் சொன்னது; இதில் அர்த்தம் உள்ளது” என்றார் கண்ணதாசன். அதேபோல, ஆணோ, பெண்ணோ அவரவர் பொறுப்பு, கடமை அறிந்து நடந்துகொள்ளவேண்டும். 

ஆணுக்கென்று கடமைகள் உண்டு; அவற்றில் அவன் வழுவாது இருத்தல் ஆண்மைக்குப் பலம் சேர்க்கும். அதேபோல பெண்ணிற்கான இயற்கையான கடமைகளை முதற்கண் பேணி நடத்தலே பெண்ணினத்தின் பெருமை. 

ஆணுக்குச் சமமான சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளைப் பெண்ணுக்கு வழங்குவதுதான் பெண்ணியம் என்பது சிலரின் கருத்து. இல்லவே இல்லை. பெண்ணுக்கு யாரும் எந்த உரிமையும் தரத் தேவையில்லை. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதாக எந்த இனமானாலும், அதனதன் உரிமைகள் அவற்றுடன் உடன்பிறந்தவையே. பெண்ணினத்துக்கும் அதுபோல உரிமைகள் உண்டு. அந்த உரிமைகளை – சமூக, கல்வி, அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா உரிமைகளையும் - அவளிடமிருந்து பறித்துப் பிடுங்காதிருப்பதே பெண்ணியம் என்பதே என் பார்வை. 

இதை ஒரு உதாரணத்துடன் விளக்கிச் சொன்னால் எளிதாகப் புரியும். சமீபத்தில் மேலைநாட்டு பள்ளி ஒன்றில், ஆண்-பெண் சமத்துவம் பேணுவதற்காக என்று ஒரு விநோத முயற்சியில் ஈடுபட்டுள்ளதைப் படிக்க நேர்ந்தது. குழந்தைகளை பிறப்புமுதல் அவர்களுக்கு ஆண்-பெண் என்ற பேதமே தெரியாதவாறு வளர்க்கிறார்களாம். எப்படியெனில், பெயர், ஆடை, பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட எல்லாவற்றிலும், இது ஆண்குழந்தை, இது பெண் குழந்தை என்று மற்றவர்களுக்கு மட்டுமல்ல, அக்குழந்தைகளுக்கே வித்தியாசம் தெரியாதவகையில் வளர்ப்பார்களாம்!! அதாவது, ஒரு பெண் குழந்தைக்குத் தான் பெண் என்ற அடிப்படை விஷயமே தெரியாது!! (போலவே ஆண் குழந்தைக்கும்) 

பெண் குழந்தையோ, ஆண் குழந்தையோ இயல்பாகவே பிறப்புமுதலே அவர்களுக்கென்று தனி ஆர்வங்கள் இருக்கும். அதைப் பறிக்கும் அதிகாரத்தை இவர்கள் கையிலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். யாருமே சொல்லிக் கொடுக்காமலேயே (பெரும்பான்மையாக) ஒரு பெண்குழந்தைக்குப் பொம்மை பிடிக்கும்; ஆண்குழந்தைக்கு விளையாட்டுக் கார் பிடிக்கும். இவற்றை அவர்களிடமிருந்து பிடுங்கி, மாற்றிக் கொடுப்பதுதான் இவர்களின் ”சமத்துவ” வளர்ப்பியல்!! இந்த அதிகாரத்தை இவர்களுக்கு தந்தது யார்? 

இது தொடருமாயின், எதிர்காலத்தில் “பெண்ணைப் பெண்ணாக இருக்க விடுங்கள்” என்பது பெண்ணியத்தின் புதிய வரைமுறையாகலாம்!!

பெண்ணியம் பேணுதல்: 

ஏற்கனவே சொன்னதுபோல ஆண், பெண் என்ற தனி மனிதர்கள் சேர்ந்ததுதான் குடும்பம், சமூகம் எல்லாம். தனிமரங்கள் தோப்பானால்தான் பெருத்த அறுவடை!! அதுபோலத்தான், ஆண், பெண் என்ற தனிமனிதர்களைவிட, இவர்கள் இணைந்த குடும்பங்களே சமூகங்களுக்கு அதிகப் பயனளிக்கும். 

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் 'பெண்கள், ஆண்களைப் போலவே நடையுடை தோற்றத்தில் போலியாக நடிப்பதால் ஆண்களுடன் போட்டியிட முடியும்தான். ஆனால், ஆண்களைப் போல பாவனை காட்டுவதன் மூலம் அவள் தனக்குரிய உயரிய நிலையை எட்ட முடியாது. பெண்கள், ஆண்களோடு இணைந்து நிறைவு செய்பவர்களாகத்தான் இருக்கவேண்டுமேயொழிய ஆண்களாகவே மாறிவிடக்கூடாது' என்று கூறியுள்ளார். 

திருவள்ளுவரும், “இல்வாழ்க்கை” என்ற தலைப்பில் ஆணுக்கும், “வாழ்க்கைத் துணைநலம்” என்ற தலைப்பில் பெண்ணுக்கும் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரைகள் கூறியுள்ளார் என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டும். இருவரில், பெண்ணுக்கு மட்டுமோ அல்லது ஆணுக்கு மட்டுமோ என்றில்லாது, இருவருக்குமே தனித்தனி அதிகாரம் படைத்ததிலிருந்தே நல்ல இல்லறம் இருவரின் பொறுப்புமே என்பது அறியவரும். 

இதற்கு, முதலில் ஆண், பெண்ணின் மதிப்பையுணர வேண்டும். உடல்ரீதியாகச் சற்றுப் பலவீனமானவள் என்பதாலேயே அவள் தன்னைவிடத் தாழ்ந்தவளாகிவிடமாட்டாள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உள்ள ரீதியாகவும், அறிவுரீதியாகவும் அவள் ஆணுக்குச் சற்றும் சளைத்தவளல்ல என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவளுக்குரிய மரியாதையைக் கொடுத்தேயாக வேண்டும். 

இல்லறம் நல்லறமாவதற்கான அடிப்படைகள், திருமணத்திற்குப் பிறகல்லாது, அவ்விருவரின் வளர்பருவத்திலேயே ஊன்றப்படவேண்டும். அதாவது, இளையவராய் இருக்கும்பொழுதே, ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும் என ஒருவரையொருவர் மதிக்கக் கற்பித்தல் வேண்டும். பெண்ணைப் பற்றிக் குறைவாகப் பேசுதல் தவிர்த்தல் வேண்டும். சில பெற்றோர் தம் குழந்தைகளிடையேகூட, ஆண்குழந்தை, பெண்குழந்தை என்று பாரபட்சம் காட்டுவர். உதாரணமாக ”அவன் ஆம்பளப்புள்ளை, வீட்டு வேலைகளில் உதவிடத் தேவையில்லை” என்று சொன்னால், ஆணுக்கு “தான் வலியவன்; உயர்ந்தவன்” என்ற எண்ணம் மனதில் பதியும். இதுவே, அவன் வளர்ந்துவரும்போது பெண்களைக் குறைவாக மதிப்பிட்டு, அவமதிக்கும் எண்ணத்தைத் தரும். அதே சமயம் பெண்ணுக்கு, தாழ்வு மனப்பான்மையையும், ஆண்கள் மீதான வெறுப்பையும் தோற்றுவிக்கும். 

இரு பாலருக்கும் தத்தம் உரிமைகளையும், கடமைகளையும்கூட வளர்பருவத்திலேயே போதிக்கப்பட்டால், பசுமரத்தாணிபோலப் பதிந்து, தம் காலத்தில் தத்தம் கடமைகளைச் செவ்வனே செய்து, சுயமரியாதையும் பேணிக்கொள்வர். 

சுருங்கக்கூறின், பிள்ளைவளர்ப்பில் பெரிதும் ஈடுபடுவது பெண்களே என்பதால், வளரும் தலைமுறையினரிடையில் பெண்ணியம் போற்றப்படுவதும் அவர்கள் கைகளிலேதான்!! மேலும் தாம் சந்திக்க நேருகின்ற துன்புற்று கிடக்கும் கீழ்த்தட்டு பெண்களிடமும் பெண்ணியம் பரப்ப வேண்டியதும் பெண்களின் பொறுப்பே!! 

முடிவுரை: 

ஒரு நண்பர் நக்கலாகச் சொன்னார், “அதென்ன பெண் ஈயம், ஆண் பித்தளைன்னுகிட்டு...”. நான் பதில் சொன்னேன், “ஆண் எனும் பித்தளையோ, குடும்பம் எனும் செம்போ, சமூகம் எனும் வெண்கலமோ, எதுவானாலும், பெண் எனும் ஈயம் சரிவிகிதத்தில் பூசப்பட்டாலன்றி, இவையாவும் பயன்படுத்த லாயக்கற்றவைகளாகிவிடும்!”. 

Post Comment

டிரங்குப் பெட்டி - 28




கேரளாவில் சமீபத்தில் நடந்த விமான “ஹைஜாக்” நாடகம் குறித்த செய்திகள் படித்திருப்பீர்கள். ஏர் இந்தியாவின் தாழ்ந்துபோன சேவைத் தரத்திற்கு இன்னுமொரு சான்று.  மலையாளிகளைப் பற்றிப் பலரும் குறை கூறுவார்கள். ஆனால், அவர்களிடம் இருக்கும் ஒற்றுமை உணர்வு போற்றத்தக்கது. சம்பவம் நடந்தபொழுது, குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை மற்ற பயணிகள் விட்டுக்கொடுக்காதது அங்குமட்டுமே நடக்கக்கூடிய அதிசயம்.  கேரள முதல்வர், அமைச்சர்களும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளார்கள்.

ஏற்கனவே திட்டமிடப்பட்டு வரும் “ஏர் கேரளா” விமான சேவையும், இச்சம்பவத்தால் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மதுரை விமான நிலையம் சர்வதேச சேவைக்கான தரத்திற்கு மாற்றப்படுவதற்கு இன்னும் எத்தனை வருடமாகுமோ? அங்கே இத்தணூண்டு “நாட்டில்” மூணு சர்வதேச விமான நிலையங்கள்!!                                    
                                        -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-

லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்”  - 1999 முதல் 2005 வரை ஏழு வருடங்கள் தொடர்ந்து “டூர் டி ஃப்ரான்ஸ்” (Tour De France) சைக்கிள் போட்டியில் வென்றவர். குறைந்தபட்சம் 3200 கி.மீ தூரத்தை, ஃபிரான்ஸ் மற்றும் சுற்றுப்புற நாடுகள் வழியே சைக்கிளில் 21 நாட்களில் கடக்க வேண்டும். இந்தப் பாதையில் இருக்கும் ஏற்றங்கள் அனைத்தும், மூன்று முறை இமயத்தில் ஏறுவதற்குச் சமம் என்று சொல்லப்படுமளவு கடினமான போட்டி.

சென்ற மாதம், அவர்மீது போதை மருந்து பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவரது பட்டங்கள் திரும்பிப் பெறப்பட்டன. ஆயுட்காலத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைகள் தொடங்கியபோது, அவர்மீது குற்றம் இல்லாதவராகவும், அமெரிக்க போதைத் தடுப்பு நிறுவனம் USADA “ஓவர்-ரியாக்ட்” செய்வது போலவும்தான் சூழல் இருந்தது. ஆனால்,
தொடர்ந்து USADA வெளியிட்ட மருத்துவப் பரிசோதனை குறிப்புகள் மற்றும் சில ஆவணங்கள், பெரிய அளவில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மீண்டவர் என்பதாலும், கேன்ஸர் ஃபவுண்டேஷன் ஒன்றை நிறுவி நடத்திவருவதாலும்,  விளையாட்டு தாண்டி அவர் செய்துவரும் பல நல்ல காரியங்களாலும் அவர்மீது பெரும் மதிப்பு இருந்துவந்தது. அதனாலேயே அவர்மீதான குற்றங்களை வெளிப்படுத்தி வரும் தகவல்கள் அதிர்ச்சியாகவும், நம்பமுடியாமலும் இருக்கின்றன.

                                             -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-
 
இந்தியா வந்த ஆஸ்திரேலிய பிரதமர், திருமதி. ஜூலியா கில்லார்ட்,  காந்தி நினைவிடத்தின் புல்வெளியில் நடந்து வரும்போது கால் இடறிக் கீழே விழுந்தார். பின் சுதாரித்துக் கொண்டார். அவரது ஹை-ஹீல்ஸ் காலணி, புல்லில் மாட்டிக் கொண்டதால் விழ நேரிட்டதாகச் சொன்னார். அவரது காலணி, காலை வாரிவிடுவது, இது மூன்றாவது முறை. பின்னர் நடந்த சந்திப்பில் ஹை-ஹீல்ஸைத் தவிர்த்து, தட்டையான ஷூ அணியலாமே என்று ஒருவர் கூறியதற்கு, அவர், “ஸ்கர்ட்டுடன் flat shoe  அணிந்தால், ஆஸ்திரேலியாவினர் மத்தியில் தமது ஃபேஷன் குறித்த விமர்சனம் எழுப்பப்படும் என்பதால், அது சாத்தியமில்லை” என்று கூறியுள்ளார்!!!

அதற்கு முந்தைய வாரம், எதிர்க்கட்சித் தலைவரை “misogynist" என்று சொல்லி, பார்லிமெண்டில் வாங்கு வாங்கென்று வாங்கியதும் இவரேதான்!!



                                             -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-
அபீர் ஹம்ஸா - ஏழு வில்
 தாலிபானால் சுடப்பட்ட பாகிஸ்தானின் மலாலா யூஸுஃப்ஸாயி,
பிரிட்டனில் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறிவருகிறார். உலகம்

முழுவதும் பிரபலமாகிவிட்ட மலாலா எனக்கு “அபீர் ஹம்ஸா”வை  நினைவுபடுத்துகிறார். ஈராக்கைச் சேர்ந்த அபீர் ஹம்ஸாவும், மலாலாவைப் போல 14 வயதே நிரம்பிய சிறுமிதான் அப்போது. ஆனால், அவள் மலாலாவைப் போலப் பிழைத்துவிடவில்லை. அவளைத் திட்டமிட்டு வேட்டையாடிக் குதறிய ஐந்து அமெரிக்கப் படைவீரர்களும் அவளை உயிர்தப்ப விடவில்லை. குடும்பத்தோடு கொன்றொழித்தார்கள்.  அந்த வகையில், மலாலா கொஞ்சம் அதிர்ஷ்டக்காரிதான், உயிரை மட்டுமே குறிவைத்தார்கள்.                                           -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-
இரத்த தானம் என்பதை ஒரு அரிய சேவையாகவே பார்த்துவருகிறோம்.  மற்ற சிறந்த சேவைகளைப் போல, இதற்கும் விழிப்புணர்வு ஊட்டி வரும் கட்டுரைகள் அதிகம். எனவேதான், இதன் மறு பக்கம் - மாற்றுப் பார்வை (?) குறித்த ”இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!” என்கிற இந்தக் கட்டுரையை வாசித்தபோது, திகைப்பாகவே இருந்தது. சில கேள்விகள் சரியாகவும், சில அபத்தமாகவும் தெரிந்தாலும், “யாருக்கேனும் தேவைப்படும்போது மட்டுமே இரத்த தானம் செய்வதே சரியான வழிமுறை” என்பது சரியெனவேப் படுகிறது. 

                                             -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-
 விகடனில் ஒரு சிறுகதை படித்தபின்அநேகம் பேருக்கு, “பரீட்சைக் கனவு” வருகிறது என்று தெரிந்து, ரொம்ப மகிழ்ச்சியாயிருந்தது.  பின்னே, பரீட்சைன்னே தெரியாம வகுப்புக்குப் போய் பேயறைந்து நிற்பது, கனவில்தான் என்றாலும், அதுவும் பள்ளி-கல்லூரி எல்லாம் தலைமுழுகியபின், மிகக் கொடுமையான அனுபவம்.

இப்போதும் ஒரு பரீட்சைக் கனவு வந்தது.  வழக்கம்போலத்தான், தேர்வு என்று தெரியாமலே போய் நிற்கிறேன். எப்போதும் யாராவது புத்தகம் தருவார்கள் கடைசி நிமிட பிரஷ்-அப்புக்காக, இப்போ அட்வான்ஸ்ட் டெக்னாலாஜியாக ஒரு கை  “Kindle"-ஐ நீட்டுகிறது. ஆனால், அதிலும் சோதனை - நான் வாங்கியவுடன் அது ஹேங் ஆகிவிடுகிறது!!

                                             -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-

Post Comment