Pages

லீவு முடிஞ்சிடுச்சி...





 
 
 அப்படி இப்படின்னு கொஞ்சம் பெரிய லீவாப் போச்சுது இந்த முறை!! பெருநாள் நல்ல ஜாலியா இருந்துது. வெள்ளிக்கிழமை என்னோட சித்தி, மாமா பசங்க நாலுபேர் துபாய்லருந்து வந்திருந்தாங்க. பையன்க பேச்சுலர்ஸ்ங்கிறதுன்னால காலையில கொஞ்சம் நல்ல சமையல் செஞ்சிருந்தேன் . ஆப்பம்,  உறட்டி(அரிசிமாவு ரொட்டி),  மட்டன் குழம்பு,  பரோட்டா,  பட்டர் சிக்கன்,  கிண்ணத்தப்பம்,  குலோப் ஜாமுன்னு வச்சதில பசங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.  அதுவும் ஆப்பத்தில முட்டை ஆப்பம், ஃபிளவர் ஆப்பமெல்லாம் ரொம்ப பிடிச்சுப் போச்சு. ஒரு வெட்டு வெட்டிட்டாங்க. பேச்சிலர்ஸ், புதுசா கல்யாணம் ஆனவங்க இவங்கல்லாம் வீட்டுக்கு வந்தா கொஞ்சம் நல்லா கவனிப்பேன். பாவம், நல்ல சாப்பாடு கிடைக்காதான்னு ஏங்கிக் கிடப்பாங்க.

மத்தியான சாப்பாடு தங்கச்சி வீட்டில. பிரியாணி கடையில வாங்கிகிட்டு, சைட் டிஷ்கள் வீட்டில செஞ்சுகிட்டோம்.  நல்லா ஃபுல் கட்டு கட்டினதுல வெளியே கிளம்பவே முடியல. பெருநாளும் அதுவுமா ஒரு இடத்துக்காவது போய்ட்டு வரலன்னா குத்தங்குறை எதுவும் வந்துடப்படாதேன்னு
இரவு எட்டு மணிபோல மூணு கார்லஅபுதாபி கடற்கரை பார்க்குக்கு மட்டும் போய்ட்டு வந்தோம் !! போய் ஷட்டில், வாலிபால் விளையாடி என்ர்ஜியைச் செலவழிச்சுட்டு தங்கச்சி வீட்டுக்கு வந்து மறுபடியும் சாப்பாடு. இப்ப சிம்பிளா குபூஸ், எம்ப்ட்டி சால்னா (பிரியாணியோட கிடைச்சது), ஹமூஸ், முதப்பல்னு ஒருமாதிரி இந்திய, அரேபிய உணவுகளைக் கலந்துகட்டி அடிச்சோம். (ஹமூஸ்: சுண்டல்+எள் பேஸ்ட்; முதப்பல்: சுட்ட கத்தரிக்காய்+எள் பேஸ்ட்).

முந்தின நாள் சாப்பிட்டதுக்கு பேலன்ஸ் பண்றதுக்காக மறுநாள் வெறும் தயிர்சாதம் மட்டுமே!! அடுத்து 3 மணிக்கு கலீஃபா பார்க் போனோம். அங்க மீன்கள் காட்சியகமும், maritime museum-ம் அருமையா இருக்கு. பார்க் அனுமதிக் கட்டணம் 10 திர்ஹத்துல இருந்து இப்ப 1 திர்ஹம் ஆக்கிட்டாங்க, ரொம்ப ஆச்சர்யமா இருந்துது. அங்கயிருந்து 10 மணிக்கு பிட்ஸா ஹட் போயிட்டு வந்து லேட்டா தூங்கினதுல காலையில ரொம்பவே லேட்டா எழுந்ததினால (ஹேங் ஓவர்??!!) அன்னைக்கு ஆஃபிஸுக்கு கட் அடிச்சாச்சு. பின்ன, பசங்களுக்கும் அவருக்கும் பத்து நாள் லீவு. எனக்கு மட்டும் ஆஃபீஸ் வச்சா எப்படி?  மெதுவா ஒரு பதினொரு, பன்னெண்டு மணிக்கு தோசை சாப்பிட்டுட்டு துபாய்க்கு வண்டி விட்டாச்சு. அமீரகத்துல இருந்துகிட்டு ஒரு நல்ல நாள், லீவு நாள் வந்தா துபாய் போகலன்னா அந்த லீவு லீவாவே இருக்காது; ஏதோ குறைஞ்ச மாதிரி ஒரு ஃபீலிங் இருந்துகிட்டே இருக்கும்.

அங்க ஸபீல் பார்க்குல புதுசா ஆரம்பிச்ச ”ஸ்டார் கேட்” போனோம். என்னன்னவோ விளம்பரம் பண்ணியிருந்தாங்க, ஆனா அவங்க வெப்சைட் பாத்தவுடனே புரிஞ்சிடுச்சி இதுவும் இன்னொரு ஃபன் சிட்டி தான்னு.  (விளையாட்டு நகரம்) . தங்கச்சி மகன், மச்சான் மகள்ன்னு ஒரு கூட்டம் சேத்துகிட்டுப் போனோம். பெரிய ஏரியா, பணத்தை அள்ளி இறைச்சிருக்காங்க. முடி இருக்கறவ அள்ளி முடியுறா, நம்மால முடியுமா? நல்லா சுத்திப் பாத்துட்டு, அளவாச் செலவழிச்சுகிட்டோம்.  10 நிமிஷ 3D படம், GO-KART, Mini go-kart, மேஜிக் ஷோ இந்த மாதிரிச் சில விஷயங்கள் நல்லா இருந்துது. Go-Kart போன பெரிய மகன் அன்னைக்கு முழுசும் வண்டி ஓட்டினவங்கள்ல, வேகமா ஓட்டி,  முத அஞ்சு இடத்துக்குள்ள வந்திருந்தான். அவன்கூட ஓட்டினவங்கள்ல அவந்தான் ஃபர்ஸ்ட் (வேகத்துல). எல்லாத்தையும் புள்ளிவிவரத்தோட ஒரு கிராஃப் போட்டு அச்சடிச்சு கொடுக்குறாங்க. இன்னும் ஒருமாசத்துக்கு இது போதும் அவனுக்கு பேசித் தீர்க்க, அதுவும் ஆதாரத்தோட!!

துபாயில பார்க்லயும், முன்பு போயிருந்த தமிழ்ச்சங்க விழாவிலயும் ஜீன்ஸ், டாப்ஸ் போட்ட நிறைய தமிழ்ப் பெண்கள் பார்க்க முடிந்தது. எல்லாரிடமும் ஒரு ஒற்றுமை, கழுத்தில் விரல் தடிமனில், நீண்ட முறுக்குத் தாலிச் செயின்!! சென்டிமெண்ட்ஸ்?? அதிலும் தமிழ்ச்சங்க விழாவுல, அநேக ஆண்கள் கழுத்திலயும் மினுமினுத்தது.

துபாய்ல பொது இடங்கள்ல ஷேக் முஹம்மதுவின் (துபாய் ஆட்சியாளர் & அமீரகப் பிரதமர்) படம் வைக்கப்பட்டிருக்கும். இப்ப அதோடு ஷேக் கலீஃபாவின் படமும் (அபுதாபி ஆட்சியாளர் & அமீரக அதிபதி) சேர்த்து வைக்கப்பட்டிருந்தது.





 

வரும் புதன்கிழமை 2-ந் தேதி 38-ஆவது அமீரக தேசிய தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அதற்காகவும், பெருநாளுக்காகவும் நாடு முழுதும் விழாக்கோலம் பூண்டு இருக்கிறது. தேசிய தினக் கொண்டாட்டங்கள் இன்னும் சிறப்பா இருக்கும். கண்டிப்பா அதப் பத்தியும் எழுதி உங்கள டரியலாக்குவேன்!!

 

 


 


 
  

Post Comment

“புலம்பல்கள்” (இது ஆதியின் பதிவல்ல!!)






இது எதற்கும் எதிர்பதிவல்ல!! எனது “புலம்பல்கள்” மட்டுமே!! நிறைய இருக்கு, நீளம் கருதி, பத்தோட நிறுத்தியிருக்கேன்.

1. வீட்டுல நான் என்ன கரடியா கத்துனாலும், நீ பாட்டுக்கு கத்திகிட்டேயிரு, எனக்குத் தோணுனதைத்தான் நான் செய்வேன்னு செய்யற நீங்க, உங்க அம்மா, அண்ணன் அல்லது அக்கா முன்னாடி மட்டும், அவங்க எதாவது செய்யச்சொல்லும்போது “என்னம்மா, அப்படியே செஞ்சுருவோமா, சரிதானே”ன்னு அவங்க முன்னாடியே என்கிட்ட கேட்டு ஏன் மானத்த வாங்கறீங்க?

2. அது எப்படி தினமும் காலையில கரெக்டா நீங்க ஷூ போட்டதுக்கு அப்புறம்தான் மொபைல்/ கார்ச்சாவி எடுக்கலைன்னு உங்களுக்கு ஞாபகம் வருது..

3. மொபைலையோ, லேப்டாப்பையோ வெளியே வைக்காதீங்கன்னு எவ்வளவு சொன்னாலும் கேக்காம, டேபிள்ல போட்டுட்டு அத நம்ம பிள்ளைங்க தொட்டுப் பாத்தாலே, பங்காளிச் சண்டை போடறீங்க...இதுவே உங்க நண்பர்கள்/ உங்க உறவினர் பிள்ளைங்களோ எடுத்து அது உயிரே போற அளவு நோண்டினாலும், சிரிச்சுகிட்டே இருக்கறதோட, “நல்ல இண்டெலிஜண்டா இருக்கானே உங்க பிள்ளை”ன்னு பாராட்டி சர்டிஃபிகேட் வேற கொடுக்கிறீங்க?

4. உங்க ஆஃபிஸ்ல நீங்க இல்லாம ஒரு வேலையும் நடக்காது; உங்க ஆஃபீஸே உங்கள நம்பித்தான் இருக்குங்கிற மாதிரி அப்படி ஒரு பில்ட்-அப் கொடுப்பீங்க. ஆனா, ஒரு மாசம் லீவுல ஊருக்குப் போகும்போது ஒருதரம் கூட ஆஃபிஸ் மேட்டராவோ, அட நீங்க நல்லாருக்கீங்களான்னு கேட்டு கூட ஒருத்தரும் ஒரு மெயில் அனுப்பவோ, ஃபோனோ பண்றதில்லையே ஏங்க?

5. ஒண்ணாங்கிளாஸ் படிக்கிற நம்ம சின்னவனுக்கு ஒரு சிம்பிளான 1+1 கூட்டல் கணக்கு சொல்லிக் கொடுக்கச் சொன்னா, அதுக்கு அல்ஜீப்ரா, கால்குலஸ், பிதோகிரஸ் தியரத்தையெல்லாம் இழுத்து, கடைசியில அவனுக்குத் தெரிஞ்ச ஒண்ணு, ரெண்டு, மூணைக் கூட மறக்க வச்சிர்றீங்களே, எப்படிங்க அது?

6. நம்ம வீட்டு ஏரியாவில பேங்க் இருக்கறதால பணம் கொடுத்து கட்டச் சொன்ன என் சொந்தக்காரரை என்னவெல்லாம் சொன்னீங்க என்கிட்ட! ஆனா, உங்க நண்பர் அவரோடபக்கத்து பில்டிங்க்ல இருக்க E.B.யில கரண்ட் பில் கட்ட உங்களக் கூப்பிட்டாகூட இதோ வந்துட்டேன்டான்னு ஓடிப் போறீங்களே எப்படிங்க?

7. சமைக்கும்போது கிச்சன்ல வந்து நின்னு, அதப் போடு, இத ஊத்துன்னு ஐடியா கொடுத்து, கொஞ்சம் சுமாராவாவது வந்துருக்கக்கூடியதை வாயிலயே வைக்கமுடியாம ஆக்குறீங்களே ஏங்க?

8. ஏதாவது ஒரு விஷயத்தைப் பத்தி எங்கப்பாகிட்ட பேசி, கஷ்டப்பட்டு என் வழிக்கு கொண்டு வந்துகிட்டு இருக்கும்போது, மேட்டர் என்னன்னே தெரியாம,
நடுவுல பூந்து உங்கப்பா சொல்றதுதான் சரின்னு சொல்லி, ”மாப்பிள்ளையே சொல்லிட்டாரும்மா”ன்னு எனக்கெதிரா எங்கப்பாவையே திருப்பி விட்டுர்றீங்களே எப்படிங்க அது?

9. இன்னிக்கு ஸ்டாக் கிளியரன்ஸ், அப்பாடா, சமைக்க வேண்டாம்னு சந்தோஷமா சொன்னதுக்கப்புறமும், அன்னைக்குன்னு நேரங்காலம் தெரியாம குடும்பத்தோட வந்து நிக்கிற உங்க ஃப்ரண்டை சாப்பிடாம போகக்கூடாதுன்னு பிடிச்சு வைப்பீங்களே, அது ஏங்க?

10. இவ்வளவும் நீங்க தெரிஞ்சே செய்றீங்கன்னு தெரிஞ்சும் உங்க மேல என்னை பைத்தியமா இருக்க வச்சுருக்கீங்களே, அதுதான் எப்படின்னு கொஞ்சம்கூட புரியவேயில்லைங்க!!

இது தொடர் பதிவு இல்லதான்; இருந்தாலும், தோழிகள் அவங்கவங்க ரங்ஸ் மேலே பாடவேண்டிய பாட்டுக்கள் இருந்துதுன்னா தொடர்ந்து பாடுங்க!!

பெருநாளை முன்னிட்டு கடை 3 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. பின்னூட்டம் போட்டு வைங்க, வந்து கண்டுக்கிறேன். வீட்டுலயும் ரொம்ப பிஸியா இருக்கும். 3 நாள்ல என்னை மறந்துறாதீங்க.(மறந்தா என்ன, சோனியா காந்தியை ஏன் பிடிக்கும்னு ஒரு பதிவு போட்டா எல்லாரும் ஓடி வந்துற மாட்டீங்க?)

எல்லாருக்கும் பெருநாள்/ விடுமுறை வாழ்த்துக்கள்!!(பெருநாள் வெள்ளிக்கிழமை வந்ததால, ரெண்டு நாள் லீவு போச்சு!!)

Post Comment

டிரங்குப் பொட்டி - 3







“டிரங்குப் பொட்டி”ன்னு பேர் வச்சிருக்கோமே, அது என்ன, எப்படி இருக்கும்னே தெரியாத “யூத்”கள் இங்கே நிறையா இருக்காங்களே, அவங்களுக்காகவாவது டிரங்குப் பொட்டியோட ஒரு படம் போடணும்னு நினைச்சிட்டே இருக்கும்போது, ஒரு நாள் இங்க இருக்கிற “Emirates Heritage Village"க்குப் போனோம். அங்க அவங்க பழங்கால வாழ்க்கை முறையை விளக்கி மாதிரிகள் வச்சிருந்தாங்க. அதில இந்த டிரங்குப் பொட்டியும் இருந்துது. உடனே ஒரு படம் புடிச்சாச்சு உங்களுக்கெல்லாம் காமிக்க. நல்லாருக்கா? (படம் எடுத்தது எங்க ரங்ஸ். அவர் நல்லா படம் காட்டுவாருங்கோ.)

@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@

அமெரிக்காவுல கைதான டேவிட் ஹெட்லிக்கும் இந்தியாவில சில நடிகைகளுக்கும், இன்னும் சில பிரபலங்களுக்கும் தொடர்பு இருந்துதாம். பாவம், இன்னும் யார் தலையெல்லாம் உருளப்போகுதோ? யாரைப் பிடிச்சாலும், உடனே இவனுக்கு இன்னாரின்னாரோடல்லாம் தொடர்பு இருக்கு அப்படின்னு உறுதிப்படுத்துறதுக்கு முன்னாடியே நியூஸ் போட்டுர்றாங்க. இது பரபரப்பு ஏற்படுத்துறதுக்குப் பதிலா இப்பல்லாம் அடப்பாவமேன்னு பரிதாபத்தத்தான் ஏற்படுத்துது. பிரபலமா இருக்கிறதுக்காக, அவங்க கொடுக்கிற விலைகள்ல ஒண்ணு, போறவன், வர்றவன் எல்லாரோடயும் சிரிச்சி ஃபோட்டோ எடுத்துக்கறது. இந்த ஃபோட்டோ பின்னாட்கள்ல எப்படி வேணும்னாலும் உபயோகப்படுத்தப் படலாம். ரசிகன்னு சொல்லி வர்ற ஒவ்வொருத்தன்கிட்டயும் ஜாதகமா கேட்டுகிட்டு இருக்க முடியும்?

அதே மாதிரி இப்பல்லாம், ”இந்த கொள்ளை/ கொலை/ குண்டுவெடிப்பு கேஸுல போலீஸ் இவங்களையெல்லாம் பிடிச்சிருக்காங்க” அப்படின்னு ஒரு நாலஞ்சு பேரை வரிசையா நிக்கவெச்சு டிவியில காட்டுவாங்க.முன்னெல்லாம் இந்த மாதிரி காட்டும்போது, ஒரு கோபம் வரும் அந்தக் குற்றவாளிங்களைப் பாக்கும்போது. ஆனா இப்ப? நிஜமா சொல்லுங்க, அவங்களையெல்லாம் பாக்கும்போது, அய்யோ, யாரு பெத்த புள்ளைகளோ, இவங்க மேல இன்னும் கண்டுபிடிக்காம இருக்க எந்தெந்த கேஸுங்களைப் போட்டு க்ளோஸ் பண்ணப்போறாங்களோன்னுதானே தோணுது?

@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@

போனவாரம் நம்ம பக்கத்து ஊருல (நாட்டுல!!) கருணாகரன் அய்யா உடல்நிலை ரொம்ப கவலைக்கிடமா இருந்துது. (இப்ப தேறிட்டார்). ரொம்ப சீரியஸ் அப்படின்னவுடனே, எதிர்க்கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் எதிர்கோஷ்டித் தலைவர்கள்னு எல்லாரும் போய் அவரைப் பாத்துட்டு வந்தாங்க. நம்ம ஊர்ல அப்படி ஒரு காட்சியை நினைச்சுக்கூடப் பாக்க முடியாது. அதே மாதிரி, மேடைகள்ல கேரள முதல்வர்ல ஆரம்பிச்சு, நடிகர்கள் வரை ஒருத்தர் விட்டு வைக்காம சகட்டுமேனிக்குக் கிண்டல் பண்ணி நடிச்சு காட்டுவாங்க. நம்ம ஊர்ல.. நீங்க வேற, நான் ஏதாவது சொல்லப்போக, அப்புறம் அபுதாபிக்கே ஆட்டோ அனுப்பப்போறாங்க!! நான் புள்ளகுட்டிக்காரிங்க, எனக்கெதுக்கு வம்பு..

@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@

போன வியாழக்கிழமை பஸ்ல ஏறும்போது, என்னோட ஒரு சீன நாட்டுப் பெண்ணும் ஏறினார். கையில் பெரிய லக்கேஜ், அவர் அப்போதுதான் ஊர்ல இருந்து வந்ததைக் காட்டியது. பஸ் கிளம்பிய பிறகு டிக்கெட் (2 திர்ஹம்) எடுக்க முனைந்தவரிடம் ஒரு நூறு திர்ஹம் நோட்டு மட்டுமே இருந்தது. டிரைவரும் சில்லறை இல்லை என்று சொல்லிவிட்டு டிக்கெட்டைக் கையில் கொடுத்துவிட்டார். (இங்க டிரைவர், கண்டக்டர் எல்லாம் ஒரே ஆளுதான்). இவர் கைப்பையைப் போட்டுத் துழாவிக் கொண்டிருந்தார். நான் என்னிடம் இருந்த சில்லறையில் 2 திர்ஹமைக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு நூறு திர்ஹம் நோட்டை என்னிடமும் நீட்ட, நான் சில்லறை இல்லை, பரவாயில்லை 2 திர்ஹம்தானே, வேண்டாம் என்று சொல்லி விட்டேன். அவர் மீண்டும் கைப்பையைத் துழாவி. இரண்டு சீன பணத்தாட்களை (1 Yuan each) என் கையில் திணித்தார். மறுத்தும் கேட்கவில்லை. என் மகனின் நாணய சேமிப்பு (Numismatism) ஞாபகம் வர, மறுக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, மீண்டும் துழாவி ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துத் திணித்தார். இப்போ மிகுந்த தர்மசங்கடமான நிலையில் நான் . கொடுத்ததோ வெறும் 2 திர்ஹம், இதற்கு இன்னும் என்னவெல்லாம் கொடுக்கப் போகிறாரோ என்று, பஸ்ஸில் இப்போ வேடிக்கைப் பொருள் அவரிலிருந்து, நானானேன். இது சரிவராது என்று அவரிடம் பேச்சுக் கொடுத்துப் பேசிக்கொண்டே வந்தேன். (பேச்சு சுவாரஸ்யத்தில் அதன்பிறகு கைப்பையைத் துழாவவில்லை). என் ஸ்டாப்பில் இறங்கப் போகையில் மீண்டும் ஒரு நூறு நன்றிகள் கூறி என் கை குலுக்கி அனுப்பி வைத்தார். அந்த 2 திர்ஹம் கொடுக்கும்போது இருந்த ஒரு சிறு கர்வம் அவரது நன்றியில் சுட்டெரிந்து போனது.

(அந்த டிக்கெட்டுக்கு காசு கொடுக்கவில்லையென்றாலும் டிரைவர் அவரை ஒன்றும் சொல்லி இருக்கப் போவதில்லை!!)

@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@

என்னவரைப் பற்றி நான்எழுதியிருந்த (நல்லவிதமாத்தான்!!) சில விஷயங்களைக் குறித்துப் பல ஆண் பதிவர்கள் ஆண்கள் சார்பாகக் கொதித்தெழுந்து விட்டார்கள், என்னவோ அவரை நான் கொடுமை செய்வது போல்!! விட்டா, சென்னையில இருக்கிற “ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தில” புகார் செஞ்சுடுவாங்க போல்!! ஒரு சில உதாரணங்கள் சொன்னால் புரியும் யார் வில்லன் என்று!!

ஃபார்முலா 1 ரேஸ் நடந்த வெள்ளிகிழமை இங்க லீவு நாள். ஆனா அவர் (நான் தூங்கிகிட்டு இருக்கும்போதே) வேலைக்குப் போயிட்டார். நான் ஃபோன் செஞ்சு:
“என்னங்க, மத்தியானம் என்ன சமைக்கிறது”
”நான் மத்தியானம் சாப்பிட வரமாட்டேன்”
“இல்லைங்க மட்டன், கோழி, மீன் எதுவுமே வீட்டில இல்லைங்க, நீங்களும் ஒண்ணும் வாங்கித் தராம போயிட்டீங்க”
“அதான் நான் சாப்பிட வரமாட்டேன்னு சொல்றேன்ல”
”!!??!!??!!”

புரியுதுங்களா, அதாவது அவர் சாப்பிடலைன்னா, நாங்களும் சாப்பிடக்கூடாதாம்!! அப்புறம் என்ன செய்ய, சிம்பிளா முட்டை ஃப்ரைட் ரைஸும், ஆலு ஃபிரையும் செஞ்சு நானும் பிள்ளைகளும் சாப்பிட்டுகிட்டோம்.

இன்னும் நிறைய இருக்கு. ஒவ்வொண்ணா
சொல்றேன் !!

@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@

பதிவர் சிங்கை செந்தில்நாதன் இப்போ நல்லபடியா உடல் தேறி விட்டார் என்று அறிகிறேன். அவரின் ஒன்றிரண்டு பின்னூட்டங்களும் கண்டேன். ஆனால் இன்னமும் அவர் உடல்நலம் பெற உதவுங்கள் என்ற வாசகங்கள் பலரின் பதிவுப் பக்கங்களிலிருந்து நீக்கப்படவில்லை. வலையை வலம் வரும் அவரின் கண்களில் இவை பட்டால் நல்லா இருக்காது இல்லையா?

@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@

ஊரிலிருந்து அம்மா, அப்பா, தங்கை, தங்கையின் 5 மாதக்குழந்தை ஃபரீஹா வந்திருக்கிறார்கள். பெருநாளைக்குப் பிறகு என் பெற்றோர் ஊர் போய் விடுவார்கள். ஃபரீஹா - the sweet bundle of joy!! எல்லோரும் குழந்தைகள் பெற்று வளர்த்து விட்டோம்; என் பெற்றோருக்கும் இது ஆறாவது பேரக்குழந்தை. ஆனாலும் யாருக்கும் ஃபரீஹாவைப் பார்க்க அலுப்பில்லை; சலிப்பில்லை. ஏதோ celebrity போல குடும்பத்தில் உள்ள எல்லாரும் நேற்று முழுதும் அவளைச் சுற்றித்தான்!! அவளது ஒவ்வொர் அசைவுக்கும் ஒவ்வொருவரும் ஒரு அர்த்தம் சொல்லி... நாள் போனதே தெரியவில்லை. நான், என் தங்கைகள் முதல் எங்கள் வீட்டு வாண்டுகள் வரை சண்டை, என் கையில் தா, என் கையில் தா என்று!! அம்மாக்காரி பதறிவிட்டாள், கையையும் காலையும் பிச்சிருவீங்க போலருக்கே என்று. அவள் அப்பாதான் பாவம், எல்லாரும் எப்பக் கிளம்புவாங்க, பிள்ளையை எப்ப தூக்கிக் கொஞ்சலாம் என்று உட்கார்ந்திருந்தார்.

வெள்ளிக்கிழமை அதிகாலை வந்து சேர்ந்திருக்க வேண்டியவர்கள், ஃபிளைட் technical snag காரணமாக சனிக்கிழமை காலைதான் வந்தார்கள். இன்னும் வரலையா என்று கேட்டவர்களிடம் ஃப்ளைட் லேட் என்றதும், ஏர் இந்தியாவா என்று கேட்டார்கள். இல்லை, இத்திஹாத் ஏர்வேஸ் என்றதும், இவங்களும் இப்படி ஆகிட்டாங்களா என்று பதில்.

@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@

இப்பவெல்லாம் வேலைக்கு விண்ணப்பிப்பவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, நிறுவனங்கள் ஃபேஸ்புக்கிலிருந்து விவரங்களை சேகரிப்பதாகச் செய்திகள் வந்தன. இன்று இந்தச் செய்தியும் பார்த்தேன். கனடா ஐ.பி.எம்.மில் வேலை செய்யும் அந்நாட்டுப் பெண் ஒருவர், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, நீண்ட கால விடுப்பு எடுத்திருக்கிறார். இன்ஷ்யூரன்ஸ் மூலம் இவ்விடுப்பிற்கான இழப்பீடும் பெற்று வந்தார்.

லீவெடுத்து சும்மா இருக்க முடியாமல், பாரிலும், டிஸ்கொதேவிலும் நண்பர்களோடு போட்ட ஆட்டத்தை ஃபேஸ்புக்கில் போட, அதைப் பார்த்த இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம், ஆட்டம் போட முடிகிறது, வேலைக்கு மட்டும் போக முடியலையா என்று இழப்பீட்டை நிறுத்தி விட்டது. டாக்டர்தான் என்னை அங்கேயெல்லாம் போய் ரிலாக்ஸ் செய்யச் சொன்னார் என்று பொண்ணும் போராட்டத்தில் இறங்கி இருக்குது.


அதனால, மக்களே, கவனமா இருங்க!!











Post Comment

செட்டிலானதுக்கப்புறம் மேரேஜ்







முதலிலேயே டிஸ்கி போட்டுக்கிறேன்:
இந்த எனது பதிவு, திருமணங்கள் குறித்த ஒரு அலசல் மட்டுமே. இதன் மூலம் நான் பால்ய விவாகம், வரதட்சணை, பெண்ணடிமைத்தனம் போன்ற எதையும் நான் முன்பும் ஆதரித்ததில்லை; இப்பவும் ஆதரிக்கவில்லை என்பதைக் கொஞ்சம் ஸ்ட்ராங்காவே சொல்லிக்கிறேன்!!

(செட்டில் ஆயிட்டோம், ஆனாலும் வீட்டில கல்யாணப் பேச்சு எடுக்க மாட்டேங்கிறாங்களேன்னு புலம்புறவங்க இந்தப் பதிவை வீட்டில காட்டுங்க, ஒரு வேளை வொர்க் அவுட் ஆகலாம்!!)

இப்ப கொஞ்ச வருடங்களாகவே இளைஞர்களிடம் நிலவி வரும் டிரெண்ட் என்னன்னு பாத்தோம்னா, படித்து முடித்தவுடன் முதலில் வேலை, அப்புறம் ஒரு வண்டி, நல்ல ஏரியாவில ஒரு வீடு, கொஞ்சம் பேங்க் பேலன்ஸ் இப்படி செட்டில் ஆனபிறகுதான் கல்யாணம் அப்படிங்கிறதுல உறுதியா இருக்காங்க. ஆண்கள் மட்டுமில்லை, பெண்களும் அப்படித்தான் இருக்காங்க. இக்கால நிலையற்ற உறவுகள் இந்தக் காரணங்களை நியாயப்படுத்துகின்றன.

அதிலயும் இப்ப அநேகமா எல்லாருமே ஒரு முதுநிலைப் பட்டமும் வேலைக்கு ரொம்ப உதவும்னு படிக்கிறதால அதுக்கும் சில வருடங்கள் பிடிக்கிறது. முதுநிலை படிப்புக்குத் தேவையான நுழைவுத் தேர்வுக்குத் தயாராவதற்கும் ஒரு குறிப்பிட்ட காலம் பிடிக்கிறது. அப்படி, இப்படின்னு ஒரு 28, 29 வயசில கொஞ்சம் செட்டில் ஆனாலும் இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருப்பாங்க. இதில யூ.எஸ்., கனடா, ஆஸ்திரேலியான்னு ஏதாவது ஒரு சிட்டிஸன்ஷிப் வாங்கினப்புறம்தான் கல்யாணம் பண்ணுவேன்னு அடம் புடிக்கிறவங்களும் இருக்காங்க.

இப்படி எல்லாம் சரியா வந்து, கல்யாணம் பண்ணும்போது, ஆணுக்கு 30 வயது தாண்டிவிடுகிறது. பெண் முப்பது வயதைச் சில வருடங்களில்/மாதங்களில் எட்டிப் பிடிக்கிறவர்களாக இருப்பார்கள். மணமக்களின் பெற்றோர்களோ 60+ வயதுகளில் இருப்பார்கள்.

ஒரு பதினைஞ்சு, இருபது வருஷத்துக்கு முன்னாடி பாத்தோம்னா, ஆண்கள் படிச்சு ஒரு வேலை கிடைச்சவுடனேவும், பெண்கள் படிச்சு முடிச்சவுடனேவும் கல்யாணம் பண்ணிகிடுவாங்க. கல்யாண வாழ்க்கையை தங்கள் வருமானம் மற்றும் பெற்றோர் ஆதரவுடன் நடத்தி வந்தனர். இந்த கல்யாணங்களில் மணமக்களின் பெற்றோரும் நடுத்தர வயதைத் தாண்டி இருப்பார்கள். பெண்ணும் வேலை பார்த்தால் குழந்தை வளர்ப்பில் மிகவும் உதவியாக இருப்பார்கள்.

அதுக்கும் முன்னாடி, அதாவது ஒரு 30-40 வருஷம் முன்னாடி போனா, ஆண்கள் கல்லூரியில படிச்சுகிட்டிருக்கும்போதும், பெண்கள் 15-18 வயசிலயும் கல்யாணம் பண்ணினாங்க. ஆணின் கல்யாணத்தின் பின் உள்ள வாழ்க்கைக்கு அவரது பெற்றோர் ஆதரவாக இருந்தனர். ஆண்களுக்கு வேலை கிடைத்து செட்டில் ஆகும்போது பெற்றோர் நடுத்தர வயதைக்கூட எட்டியிருக்கமாட்டார்கள். இந்த கல்யாணங்களில் பொதுவா ஆணுக்கே 20 வயதுக்குள்தான் இருக்கும். அவனின் படிப்புச் செலவு, மனைவி, குழந்தைகளுக்கான செலவு எல்லாமே அவனது குடும்பத்தினரால் (சில சமயம் பெண் வீட்டாராலும்) அளிக்கப்படும். அவன் வேலையில் சேரும்போது குழந்தைகள் பள்ளி செல்லும் வயதில் இருப்பார்கள். (சில வீடுகளில் ஒரே நேரத்தில் அப்பா கல்லூரியிலும், மகன் பள்ளியிலும் படித்தும் இருக்கிறார்கள்).

ஒன்றிரண்டு தலைமுறை முன் பார்த்தோமானால், பேரன்/பேத்திகளின் திருமணத்தை முடிவு செய்து, நடத்தி வைப்பதுகூட தாத்தாவாகத்தான் இருக்கும். தாய், தந்தைக்கு அவ்வளவு அதிகாரம்/ சுதந்திரம் இருக்காது.அந்தளவு கூட்டுக்குடும்பம் சக்திவாய்ந்ததாக இருந்தது.

அதாவது இவ்விரண்டு கால கட்டங்களிலும் பருவ வயது வந்தவுடன் திருமணம் செய்யும் வாய்ப்பு இருந்தது. அதனால் தவறுகள் குறைவாகவே இருந்தன. தவறுகள் என்று நான் சொல்வது, அறியாப்பருவக் காதல், கல்யாணத்திற்கு முன்பே தவறான உறவு போன்றவற்றை. இந்த வயதில் எதிர்பாலர் குறித்த ஈர்ப்பு, ஆர்வம் அதிகம் இருக்கும். அதை ஈடுகட்டத்தான் அந்த காலத்தில் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர் போலும். பின், அதனால் பாதிப்புகள் அதிகமாக விளையத் தொடங்கியதால் (பால்ய விதவைகள், பிரசவ மரணங்கள் போன்றவை) வரும் காலங்களில் திருமண வயது அதிகரிக்கப்பட்டது.

அதன்பின்னரும் வரதட்சணை, மாமியார் கொடுமை, இளவயதுப் பிரசவங்கள் போன்ற பல காரணங்களால் பெண்கள் அதிகமாகப் பாதிப்புக்குள்ளாகியதால், படித்து ஒரு பட்டம் பெற்ற பின்னரே பெண்கள் திருமணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இக்கால கட்டங்களில் நகரக் குடியேற்றம் அதிகரித்த காரணத்தாலும் கூட்டுக்குடும்ப முறை சிதைய ஆரம்பித்தது.

முன்னர் ஒரு பெண் திருமணத்திற்குப் பின் பிரச்னை ஏற்பட்டு பிறந்த வீட்டுக்குத் திரும்பி வந்தால் ஆதரிக்க பெற்றோரும், சகோதரர்களும் தயாராய் இருந்தனர். கூட்டுக்குடும்ப முறை குறைந்ததில் இதற்கும் பாதிப்பு ஏற்பட்டது. திருமண வயது அதிகரித்ததால் பெற்றோரும் வயதானவர்களாக ஆகி, மகனின் ஆதரவில் இருக்கும்போது, மண வாழ்விழந்த மகளைச் சரியாகப் பராமரிக்க முடியாமல் தவித்தனர். ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசியில் பெற்றோரைப் பராமரிப்பதே சிரமமாகிப் போன நிலையில் மகன்கள், சகோதரிகளையும் பராமரிக்கத் திணறினர். இம்மாதிரிச் சூழ்நிலைகள் பெண்கள் வேலைக்குச் சேர்ந்து காலூன்றிய பிறகே திருமணம் செய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்திற்கு வலுவேற்றின. இது பெண்களின் திருமண வயதை இன்னும் அதிகப் படுத்தியது.

ஆண்களின் நிலையைப் பார்த்தால், விலைவாசி உயர்வு, குடும்பப் பொறுப்புகள் கூடிப்போனது, வரதட்சணை எதிர்ப்பு ஆகியவை அவர்களின் பணத்தேவையை அதிகப் படுத்தின. அதனால் அவர்களும் மேலே சொன்னமாதிரி படிப்பு, மேற்படிப்பு, வேலை, அயல்நாட்டுக் குடியுரிமை என்று திருமண வயதை தங்கள் பங்குக்கு ஏற்றிக் கொண்டார்கள்.

தற்போதைய நிலவரப்படி இந்தியர்களும் வெள்ளைக்காரர்களைப் போல் வயதான பிறகு திருமணம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். கேட்டால், கொஞ்ச நாளாவது லைஃபை எஞ்ஜாய் செய்ய வேண்டும், அதற்குள்ளே திருமணமா என்கிறார்கள். ஆனால், இந்த வயதில் வரும் உடல் வேட்கையை அடக்க முடியாமல் தவறான வழிகளில் போகிறார்கள். சிலர் லிவிங் டுகெதர் என்ற முறையிலும் வாழ்கிறார்கள்.

இவ்வாறு திருமணத்தை இக்காலத்தில் இருபாலரும் வெறுப்பதன் காரணமென்ன? “Afraid to take responsibilities" அதாவது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதால் வரும் பிரச்னைகளை எதிர்கொள்ள அச்சம், அதிவசதியான வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம், வறுமையை எதிர்கொள்ள பயம் போன்ற பல காரணங்களைக் கூறலாம். சிலரிடம் கேட்டால் சொல்வார்கள், ”நானும், என் குடும்பமும் வசதியாக இருக்கவேண்டும். என் பிள்ளைகளையும் வசதியாக வளர்க்க வேண்டும். நான் பட்ட கஷ்டங்கள் படக்கூடாது. அதற்குத் தேவையான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்ட பின்னர்தான் திருமணம் பற்றி யோசிக்க வேண்டும்” என்று. நல்ல முறையில் குடும்பத்தைப் பேண நினைக்கும் பொறுப்பானவர் என்ற முறையில் அவரின் எண்ணம் சரியே.

ஆனால், இதன் உள்ளர்த்தம் என்ன? வாழ்வின் அடிப்படைத் தேவைகள் பெறுமளவு சம்பாதித்தால் போதாது. நவீன காலத்தின் தேவைக்கதிகமான வசதி வாய்ப்புகள் எல்லாம் பெற்று, கண்ணில் பட்டதெல்லாம், நினைத்ததெல்லாம் வாங்குமளவு செல்வம் பெற்றிருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். தாங்கள் அப்படி இருப்பது மட்டுமல்லாமல், தங்கள் பிள்ளைகளையும் அவ்வாறே வளர்க்கின்றனர். திரு. கதிர் அவர்கள் தன் பதிவில் கூறியிருந்தது போல பசிக்கு உண்ணும் வாழ்வு இல்லை இவர்களது. இந்த மனப்பான்மையில் வளரும்போது ஒருவேளை பிற்பாடு வறுமையை, பசியை எதிர்கொள்ள வேண்டி வந்தால் துவண்டு போகிறார்கள். இந்நிலையில் குடும்பத்தோடு தற்கொலை முடிவு எடுக்கவும் செய்கின்றனர் சிலர்.

முந்தைய காலங்களில் ஒரு குடும்பத் தலைவர் தன் வாழ்நாளில் சொந்தமாக ஒரு வீடு கட்டி முடிப்பதே தன் லட்சியமாகக் கொண்டு, சிறுகச் சிறுகச் சேர்த்து வருவார். மனைவி, மக்கள் என்று மொத்தக் குடும்பமுமே தங்களால் இயன்ற வரை தங்கள் ஆசைகளை அடக்கிக் கொண்டு அந்தக் கனவு நிறைவேற உறுதுணையாயிருப்பர்.

யோசித்துப் பாருங்கள், நம் காலத்தில் ஒரு பென்சிலோ, பேனாவோ வாங்க நாம் நம் பெற்றோரிடம் எவ்வளவு தவம் இருந்திருப்போம்? ஒரு மாசம் (??!!) கூட ஆகல, அதுக்குள்ள அடுத்ததா? என்பது போன்ற எத்தனைப் புலன் விசாரணைகளுக்குப் பின் நமக்கு அந்தப் பொருள் சாங்ஷன் ஆகும்? அதில் கிடைக்கும் மகிழ்ச்சியிலேயே அப்பொருளைப் பொன் போலப் பாதுகாப்போம். ஆனால் இன்று, நம் பிள்ளைகளுக்கு, முதலிலேயே 12 பென்சில்கள் அடங்கிய பெட்டிகள் சிலவற்றை வாங்கிக் கொடுத்து விடுகிறோம். வலியில்லாமல் கிடைப்பதால், அவர்களும் அதை முடிந்தவரை வீணாக்குகிறார்கள். ஒரு நாள் உறவினர் வீட்டுப் பெண்ணின் பாக்ஸில் பார்த்தேன், ஏழெட்டு பென்சில்கள். அதுமட்டுமல்ல, வீட்டில் தடுக்கி விழுந்த இடமெல்லாம் பென்சில்கள் மற்றும் இதர பொருட்கள்!! (இதில் பாதிக்கப்படும் சுற்றுச்சூழல் பற்றி எழுத ஆரம்பித்தால், அது ஒரு தனிப் பதிவு அளவு ஆகிவிடும்.) ஆக, செல்வச் செருக்குடன் செல்லமாகவும் வளர்க்கப்படுவதால் குணம் மாறும் குழந்தைகள் லேட் மேரேஜின் ஒரு விளைவு எனலாம்.

பணம்/ சொத்து சேர்ப்பதற்காகத் திருமணத்தைத் தள்ளிப்போடும் இளைஞர்களில் இயற்கையான தமது உடல் வேட்கையை அடக்க முடியாதவர்கள் சிலர் என்ன செய்வார்கள்? நெட் சாட்டிங், தவறான தொடர்புகள், முறையற்ற உறவுகள், கேர்ள் ஃபிரெண்ட், லிவிங்க் டுகெதர், உடல்நலத்தைக் கேடாக்கும் பழக்கவழக்கங்கள் என்று பல வழிகளில் சீரழிகிறார்கள். இது மற்றொரு விளைவு!!

ஒருவழியாகக் கல்யாணம் செய்த பிறகும், குழந்தையைக் கவனிக்க ஆளில்லை, பிரமோஷன் வர்ற சமயம் என்பது போன்ற காரணங்களால் குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட்டு், கிட்டத்தட்ட பேரன், பேத்தி எடுக்கும் வயதில் பிள்ளைகள் பெற்றுக்கொள்வதால் வரும் ”தலைமுறை இடைவெளி” (”ஜெனரேஷன் கேப்”) வேறு!!

என்னதான் சொல்ல வர்றே, குழப்பாம சீக்கிரம் சொல்லுங்கறீங்களா? பெரியவர்கள் சொல்வார்கள், “அதது காலாகாலத்தில் நடக்க வேண்டும்” என்று. அதுபோல, ஆணோ, பெண்ணோ, அந்தந்த வயதில் திருமணம் செய்துகோண்டு, வசதிகளை மேம்படுத்தும் வழிகளை குடும்பத்தினரின் உறுதுணையோடு செய்வது நல்லது. சரிதானே?

வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய இளமைக் காலத்தில் திருமணம் செய்துகொண்டு, நல்ல உடல்நலத்துடன் இருக்கும்போதே குழந்தைப் பேறு அடைவது நல்லது. சிறு வயதில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகமாக இருக்கும். இளவயது என்றால் குழந்தை பெறுவதில் அதிகச் சிரமும் இருக்காது. இன்று குடும்பநல கோர்ட்டுகளிலும், குழந்தைப்பேறு மருத்துவமனைகளிலும் இருக்கும் கூட்டங்களும் இதைத்தானே சொல்லாமல் சொல்லுகின்றன!!

நாம் மட்டுமல்ல, நம் பெற்றோர் திடகாத்திரமாக இருக்கும்போதே குழந்தை பெற்றுக் கொண்டால், குழந்தை வளர்ப்பில் அவர்களால் ஆதரவாக இருக்க முடிவதுடன், பேரக்குழந்தைகளுடன் சுவாரசியமாகப் பொழுதுபோக்க முடியும். அதோடு, நமது பேரக்குழந்தைகள் வரும்போது நாமும் அவர்களுக்கு ஈடுகொடுக்க இளவயதினராக இருக்கலாமே!! முன்னெல்லாம், “நான் எங்க தாத்தா, பாட்டிட்டதான் வளர்ந்தேன்”, “ஒவ்வொரு லீவுக்கும் நான் தாத்தா, பாட்டிட்ட போயிடுவேன்” என்றெல்லாம் நிறையபேர் கூறக் கேட்டிருப்போம். நம்மை வளர்த்தெடுக்குமளவு அவர்கள் அதிக வயதானவராக இல்லாமல், ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால், இப்ப நம் பிள்ளைகளை சில நாட்கள் கூட நம் பெற்றோருடன் தனியாக விட மிகவும் யோசிக்கிறோம், “அப்பாவுக்கு ஏற்கனவே பிரஷர் இருக்கு; அம்மாவுக்கு மூட்டுவலி உண்டு. இவனை எப்படி தனியா சமாளிப்பாங்க” என்றெல்லாம் கவலைப் படுகிறோம்.

யோசிங்கப்பா!!

கொசுறுத் தகவல்: தமிழ்நாட்டில் திருமணமாகாத ஏழைப்பெண்களுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.20,000 வழங்கப்படுகிறது. யு..ஏ.இ.யில் இதேபோல திருமண உதவித்தொகை 70,000 திர்ஹம் (கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய்) வழங்கப்படுகிறது. ஆனால், ஏழைப்பையன்களுக்கு!!

Post Comment

அவர் ஏன் அதைப் பாடினார்...




எங்க வீட்டில சன், கலைஞர் மற்றும் இன்ன பிற சேனல்கள் கிடையாது. ராஜ் நியூஸ், மக்கள், தமிழன், மெகா இந்த மாதிரி உருப்படாத(!!) சேனல்கள்தான் உண்டு. இதனால நாங்க மிஸ் பண்றது எதுவுமில்லன்னாலும், அப்பப்ப போடற பட்டிமன்றங்கள் மட்டும் பார்க்க முடியலையேன்னு ஒரு ஏக்கம் உண்டு. அவ்ளோ தமிழார்வம் எங்களுக்கு!!

இப்படியா இருக்கும்போது, துபாயில தமிழ்ச்சங்கத்தில பட்டிமன்றம் நடத்தப்போறதா மெயில் வந்துது. அந்த சங்கத்தில உறுப்பினரானதுக்காக ஒரே ஒரு நிகழ்ச்சிக்குப் போனதோட சரி. இதுக்குப் போவோம்னு முடிவுசெஞ்சு போனோம். திருப்பித்திருப்பி மெயில் அனுப்பியிருந்தாங்க, சீக்கிரம் வந்துருங்க, கரெக்டா 6 மணிக்கு ஆரம்பிச்சுருவோம்னு.

நம்மால லேட்டாயிரக்கூடாதேன்னு 5.45க்கெல்லாம் உள்ளே போயிட்டோம். பிள்ளைகளை விட்டுட்டு, நானும், அவரும் மட்டும் போயிருந்தோம். பிள்ளைங்களுக்கு இம்மாதிரி நிகழ்ச்சிகளில் ஆர்வமிருக்காது; நமக்காக அவர்களை ஏன் அரங்குக்குள் கட்டிப் போடவேண்டும்? எங்க ரெண்டு பேருக்குமே ஒரு இடத்தில அரைமணி நேரத்துக்குமேல உக்காந்திருக்கிறது கஷ்டம். இதனாலேயே நாங்க இதுமாதிரி எந்த நிகழ்ச்சிகளுக்கும் போறதில்ல. பட்டிமன்றத்துக்காக வந்தோம். எங்களுக்குப் பின்னாடி 3 பாலக்காட்டுப் பெண்மணிகள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கிட்டுருந்ததனால ஒரு மணி நேரம் சுவாரசியமாகப் போனதே தெரியவில்லை. என்னவருக்கு அவல் நிறையவே கிடைத்தது!! சரியா 6.50க்கு நெப்போலியன் வந்தார்.

நிறைய பேர் கைக்குழந்தைகளோடும், சிறுவர்களோடும் வர்றதைப் பரிதாபமா பார்த்தேன். தமிழ்க் கலாசாரப்படி 6.50க்கு நிகழ்ச்சி ஆரம்பிச்சாங்க. வரவேற்பு நடனம் நல்லாருந்துது. ஃபோட்டோ எடுக்கலாம்னு பாத்தப்போ, கேமரா கொண்டுவர வழக்கம்போல் மறந்தது தெரிந்தது. மொபைலில் எடுத்தோம். ஈரோடு மகேஷ் நிகழ்ச்சி நல்லா சிரிக்கும்படியா இருந்துது. கணவன் - மனைவிகளைக் கிண்டல் செய்யத் தவறவில்லை. கோகுலின் கடைசி நடனம் (மட்டும்) நல்லா இருந்தது. சின்னஞ்சிறுவர்கள் நிறைய பாடல்களுக்குச் சிறப்பாக நடனம் ஆடினார்கள். பிறகு, வந்திருந்த விருந்தினர்கள் பேசினார்கள். தமிழ்க் கலாசாரப்படி, அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசும் கொடுத்தாங்க.

திரு. நெப்போலியன் சுவையாகப் பேசினார். Social Justice & Empowerment துறை மந்திரியான அவர் சமூகவாரியாக ஒதுக்கீடு செய்வதுதான் தன் துறையின் வேலை என்று சொன்னார். கலைஞர் புகழ்பாடவும் மறக்கவில்லை. குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள் தம்மை வெகுவாகக் கவர்ந்ததாகவும், அவர்கள் துபாய் வந்தும் தமிழ்க் கலாசாரத்தை மறக்காமலிருப்பது பெருமகிழ்வைத் தருவதாகவும் குறிப்பிட்டார். சினிமாப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதுதான் தமிழ்க் கலாசாரமா என்ற கேள்வி வருகிறதா உங்களுக்கும்? கடைசியில் “கிழக்குச் சீமையிலே” பாட்டைப் பாடினார். ரசித்தோம். அதோடு நிறுத்தியிராமல், “ஜீன்ஸ்” படத்தின், “பூவுக்குள் ஒளிந்திருக்கும்” பாடலின் 4,5 வரிகள் பாடினார். இனி அந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் நெப்போலியன் குரல்தான் ஞாபகம் வந்துத் தொலைக்கும்!!

மற்றபடி நல்ல கலகலப்பானவராக இருந்தார். முக்கியமாக மாணவர்களுக்குப் பரிசு வழங்கும்போது, அவர்களின் பெயர்களைக் கேட்டுச் சரியானப் பதக்கங்களை எடுத்துக் கொடுத்து, ஃபோட்டோவுக்குச் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தார். நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற எல்லாரையும் மறக்காமல் மேடையில் குறிப்பிட்டுப் பாராட்டினார். மேடையின் கீழே உட்கார்ந்திருக்கும்போது சரமாரியாக எல்லோரும் ஆட்டோகிராஃப் கேட்டு, ஃபோட்டோ எடுத்தனர். முகம் சுளிக்காமல் ஒவ்வொரு குழந்தையாக மடியில் வைத்துப் படம் எடுத்துக் கொண்டது ஆச்சர்யம் தந்தது.

கொஞ்சம் பிரபலமானாலே பயங்கர பந்தா விடுபவர்கள் போலல்லாமல் இவரைப்போல் எளிமையான ஒருவரைக் காண்பது அரிது. E.T.A. வின் திரு. சலாஹுத்தீன் பேசும்போது பால்கனியிலிருந்து வந்த முழக்கங்கள், ETAகாரர்களுக்கென்று பால்கனி ரிசர்வ் செய்யப்பட்டதோ என்ற ஐயம் தந்தது. அமீரகப் பதிவர்களின் சுற்றுலாப் படங்கள் பார்த்திருந்ததால், யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்தேன். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற கதையாக எல்லோருமே அப்படித்தான் தெரிந்தார்கள். கீழை ராஸா (சாருகேசி) போலிருந்த ஒருவர் அடிக்கடி மேலேயும் கீழேயும் நடந்து கொண்டே இருந்தார். உடல் இளைக்கப் பயிற்சியோ என்னவோ!!

அப்படி இப்படி என்று பட்டிமன்றம் ஆரம்பிக்க 10 மணியாகி விட்டது. நாங்கள் அபுதாபியிலிருந்து வந்தபடியால், பத்து, பத்தரைக்கு நிகழ்ச்சி முடிந்துவிடும், கிளம்பிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தோம்.
நாங்கள் வந்தது பட்டிமன்றத்துக்காகத்தான் என்பதால் நேரமானாலும் போக மனமில்லை. நடுவர் ராஜாவும் இதைப் பலமுறைச் சுட்டிக் காட்டினார். இதற்கிடையில் எதிர்பார்த்தது போலவே, கைக்குழந்தைகள் அழ ஆரம்பிக்க, சிறார்கள் ஓடியாடி விளையாட, கூட்டட்த்தில் சலசலப்பு அதிகமானது. என் வலது இருக்கையில் 3 பெண் குழந்தைகள். அவர்களாவது பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். என்னவரின் இருக்கையின் இடதுபுறம் 3 பையன்கள். குதித்து, அடித்து, சண்டை போட்டு என்று அதகளம்தான். ராஜா குழந்தைகளை அமைதிப் படுத்துமாறு வேண்டியும், யாராலும் முடியவில்லை. பின்னால் 3 சேச்சிகளின் சத்தமான லைவ் கமெண்ட்ஸ் வேறு, அந்த சேலையைப் பாத்தியா, இதைப் பாத்தியான்னு. அங்கங்கே சோர்வில் அழும் பிள்ளைகளைப் பெற்றோர்கள் கோபத்தில் அடிப்பதையும் பார்க்க முடிந்தது.

பட்டிமன்றம் கலகலப்பா இருந்தது. பேசிய 6 அமீரகப் பேச்சாளர்களுமே நன்றாகப் பேசினர். ராஜா சொன்னதுபோல, துபாயில் மேடை வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத நிலையிலும் இவ்வளவு பேச்சுத்திறன் இருப்பது ஆச்சர்யமே. ராஜாவும் ஏமாற்றாமல் கலகலப்பாக நடத்திச் சென்றார் நிகழ்ச்சியை. நடுவர் தீர்ப்பு சொல்ல ஆரம்பிக்கும்போது 11.55 ஆகிவிட்டது. அதற்குமேல் லேட்டாகப் போய் (குழந்தைகளை விட்டுவந்த துபாய்) உறவினர் வீட்டைத் தட்டிக் கொண்டிருப்பது நாகரீகமல்ல என்பதால் கிளம்பி விட்டோம். அதனால், தீர்ப்பு என்னவென்று தெரிந்தவர்கள் சொல்லுங்கப்பா.

பொதுவாக நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் இன்னும் நேரத்தைச் சரியாகக் கணித்து. குறித்த நேரத்தில் ஆரம்பிப்பது, பிந்தினால், அதற்கேற்றவாறு சில நிகழ்ச்சிகளை விரைவுபடுத்துதல் என்று செய்திருந்தால் பலரும் நிகழ்ச்சியின் ஹைலைட்டான பட்டிமன்றத்தைத் தவிர்க்க நேராதிருந்திருக்கும். இம்மாதிரி நிகழ்ச்சிகளின் நடுவில் குழந்தைகளின் நடனங்கள் இல்லாமலிருப்பதே நல்லது என்பது என் கருத்து. எத்தனை பேர் அதை ரசித்துப் பார்த்தார்கள்? கடனே என்றுதான் நிறைய பேர் இருந்தார்கள்.அதுபோல இம்மாதிரி நிகழ்ச்சிகளுக்கு வருபவர்கள் குழந்தைகளை அழைத்து வராமல் இருப்பதே நல்லது. குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள உறவினர்கள்/ நண்பர்கள் இல்லையென்றால் போகாமலிருப்பது நல்லது.

மேடையில் பேசிய அமீரகத் தமிழ் நண்பர்கள் சிலர் தமிழ் உச்சரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பங்கு பெற்ற முதல் பெரிய நிகழ்ச்சி என்பதால் ஏற்பட்ட பதற்றமாகவும் இருக்கலாம் ஒருவேளை.

இந்நாள் நல்லதொரு நாளாக இருக்கும் எங்கள் நினைவில்! நன்றி யூ.ஏ.இ. தமிழ்ச்சங்கம்!!

(படங்கள் பின்னர் இணைக்கிறேன்.)

Post Comment

வருக, வருக..




(முன்குறிப்பு: ப்ளாக்கர்களின் (அய்யோ, சரியா வாசிங்க. அது கெட்ட வார்த்தை இல்லை. ப்ளாக்கர் - Blogger, அதாவது என்னைப் போல ப்ளாக் எழுதுறவங்க!!) பாஷையில் ரங்கமணின்னா புருஷன், தங்கமணின்னா மனைவி, புரியுதா? ஷார்ட்டா, ரங்ஸ், தங்ஸ்!!)

நேத்து பெய்ஞ்ச மழையில முளைச்ச காளானாட்டம் இப்பதான் பதிவு எழுத ஆரம்பிச்சுட்டு, மூத்தகுடி பதிவர்களான நமக்கே தங்ஸ், ரங்ஸ் விளக்கம் சொல்றாளேன்னு தயவுசெய்து யாரும் தப்பா நினைக்காதீங்க!!

இதுவரை பலமுறை கெஞ்சியும் என் ப்ளாக் பக்கமே வராத எங்க ரங்ஸ் (வீட்லத்தான் நீ எழுதிவைக்கிற ஜாப் லிஸ்ட், ஷாப்பிங் லிஸ்ட் தினமும் படிக்கிறேனே, அங்கயுமா?) இன்னிக்குத்தான் என் ப்ளாக் பக்கம் வரப் போகிறார் என்பதால் இந்த விளக்கம். (யாராவது இதான் சாக்குன்னு முந்தைய பதிவுகள்ல நான் அவரைப் பத்தி எழுதுனதெல்லாம் போட்டுக் கொடுத்தீங்க....)

பத்திரி்கைகள் அவ்வப்போது சிறப்பிதழ்கள் வெளியிடுவார்கள், எங்கள் ஊருக்கு வரும் சிங்கமே வருக என்று அவரின் சிறப்பெல்லாம் போட்டு வரும். இதுவும் அதுபோல ஒரு பதிவுதான்!! முதன்முதல் என் பிளாக் பக்கம் வரும் என் ரங்ஸே, வருக, வருக என்று வரவேற்கிறேன். என்னாங்க, என் தோழர்கள் உங்களை வரவேற்றுப் போடும் கோஷம் விண்ணை முட்டுவது கேட்கிறதா உங்களுக்கு?

எங்க ரங்க்ஸ் பத்திச் சொல்லணுன்னா, அபுதாபியில எஃப் 1 ரேஸ் நடந்துதே, அந்த யாஸ் தீவிலதான் இஞ்சிநீரா இருக்கார். எஃப் 1 ரேஸ் வரைக்கும் பிஸின்னா அப்படி ஒரு பிஸி!! ஏதோ இவர் அங்க இருக்கப் போயி ரேஸ் நல்லபடியா எந்த அசம்பாவிதமும் இல்லாம நடந்து முடிஞ்சுது!!

அப்புறம், ரொம்ப நல்லவர், வல்லவர், அன்பும், பண்பும் நிறைந்தவர்.


இந்த நல்லவரை பதிவுலகச் சார்பாக மீண்டும் வருக வருகவென வரவேற்கிறேன். ம்ம்ம்...இனி கொஞ்சம் கவனமாத்தான் எழுதணும் :-(








Post Comment

அன்புள்ள சகோதரர்கள்..




என் வீட்டில் நாங்கள் நாலு சகோதரிகள். சகோதரர்கள் இல்லை. நான் மூத்த பெண். என் அப்பாவுக்கும் மூன்று சகோதரிகள் மட்டுமே, வீட்டில் ஒரே ஆண். எண்பதுகளில் ஒரு கிராமத்துச் சூழ்நிலையில், பெண்கள் அதிகம் வெளியே செல்வதில்லை என்பது அறிவோம். என் அப்பாவோ சவூதியில் வேலை செய்துவந்தார்.

வீட்டுக் காரியங்களில் ஒரு காலம் வரை தாய்மாமன்கள் வந்து உதவிசெய்தனர். அதன்பிறகு அவர்களும் சொந்தத் தொழில், வேலை என்று பிஸியாகிவிட்டனர். அம்மா, அப்பா இருவரும் அவரவர் வீட்டில் மூத்தவர்கள் என்பதால் அத்தை, மாமா, சித்திகளுக்கு உள்ள ஆண் குழந்தைகள் எல்லாரும் என்னை விட ரொம்பச் சின்னப் பசங்க. சிறு வயதில் பள்ளிக்கு மாட்டு வண்டியிலும், விவரம் தெரிந்த பிறகு அதில் போக மறுத்து, ஆட்டோவிலும் போனதால் நானே கடைக்குச் செல்லும் சாத்தியங்களும் இல்லை. அனுமதியும் கிடைக்கவில்லை. ஊரினுள் பலசரக்கு, மருந்து, டீக் கடைகளைத் தவிர வேறு கடைகளும் இல்லை.

தேவைப்படும் பள்ளி சார்ந்த பொருள்களை (இந்தியா மேப், ஜியோமெட்ரி பாக்ஸ், இங்க் பாட்டில், இத்யாதிகள்..) ஜங்ஷன், டவுணிலிருந்து வரும் சக மாணவிகளிடம் வாங்கி வரச் சொல்வேன். அவர்களால் வாங்கிவர முடியாத பொருட்களை உறவினர்களிடம் (மாமா, சித்தப்பா..) சொல்லி வாங்கித் தரச்சொல்வதும், பிறகு அவர்களையும் தொந்தரவு செய்ய முடியாமல் போக.. பதின்ம வயதுகளில் நான் கடைக்குப் போகிறேன் என்று அம்மாவிடம் அழுது, தொந்தரவு செய்ய, ஒழுங்கா பள்ளிக்கூடத்துக்கு மட்டும் போய்வர்றதுன்னா போ, இல்லை பேசாமல் வீட்டில் உட்கார் என்று மிரட்டப்பட்டதால் அதையும் கைவிட நேர்ந்தது. அம்மாவின் வீட்டுத் தீர்வை கட்ட ஆள் வேண்டுமே, வயலுக்கு மருந்தடிப்பதை மேற்பார்வையிட யாரை அனுப்புவது போன்ற கவலைகளின் நடுவே என் தேவைகள் முக்கியத்துவம் பெறவில்லை.

பின் தேவைகளின் அவசியத்தை உணர்ந்து, (சர்ஃப் பவுடர் ஜங்ஷனில்தான் விலை குறைவு, ஆப்பிள் இங்கே கிடைக்காது...) அம்மாவே அவ்வப்போது ஜங்ஷன் சென்று வாங்கி வருவார். இரண்டு, மூன்று மாதங்களுக்கொரு முறை செல்லும் அந்தப் பயணம் புறப்படுவதே மிகவும் சுவாரசியமாக இருக்கும். அந்தப் பயணங்களில் கடைசித் தங்கை மட்டும் உடன் சென்று வர அனுமதியுண்டு. அம்மா எப்பவும் துணைக்கு தம்பியை அழைத்துச் செல்வதால் மாமாவின் வசதியைப் பொறுத்தே பயணம் ஏற்பாடு செய்யப்படும். நாங்கள் நால்வரும் எங்களின் தேவைகளை எழுதிக்கொடுக்க, அதில் அம்மாவின் வீட்டோ பவரால் ரிஜெக்ட் செய்யப்பட்டது போக மீதி வாங்கி வரப்படும். அதிலும் நாங்கள் கேட்ட பிராண்ட் விலை அதிகம் என்பதால், வேறு விலை குறைந்த அல்லது பிடிக்காத நிறத்தில்..எதுவாக இருந்தாலும் கிடைத்த வரை லாபம் என்று வைத்துக் கொள்வேன். நாங்கள் கேட்காமலே அம்மா எப்பவும் வாங்கிவரும் இரண்டு ஃபைவ் ஸ்டார் (ஆளுக்குப்பாதி மட்டும்), ஒரு பாக்கெட் ஜெம்ஸ் (எண்ணி ரெண்டு அல்லது மூன்று மட்டும் ஒருவருக்கு) ஆகியவை அந்தக் கோபத்தைத் தணித்துவிடும்.

பத்தாம் வகுப்பில் நிறைய ஸ்பெஷல் கிளாஸ் இருந்ததால் ஆட்டோவிலிருந்து விடுதலை அடைந்து பஸ்சில் செல்ல ஆரம்பித்தேன். என் பள்ளியருகே உள்ள பாளை பஸ் ஸ்டாண்டில் உள்ள ஸ்டூடண்ட்ஸ், ஈகிள் கடைகள் மாணவர்களிடையே பிரசித்தம். மெல்ல மெல்ல அந்தக் கடைகளுக்கு மட்டும் செல்ல அனுமதி கிடைத்தது. பரிட்சை பேப்பர், கணக்கு நோட்டு, ஒரு பக்கம் மட்டும் கோடு போட்ட சயின்ஸ் நோட்டு, இப்படி என் தேவைகளை மட்டுமல்லாது, தங்கைகளுடையதையும் நானே பூர்த்தி செய்ய ஆரம்பித்தேன்.

முந்தைய கால‌கட்டங்களில் வகுப்பில் டீச்சர் மேப், கிராஃப் பேப்பர், போன்றவைகள் கொண்டு வரவேண்டும் என்று சொல்லிவிட்டாலே எப்படி, யாரிடம் சொல்லி வாங்கப் போகிறோம் என்று கவலையாக இருக்கும். இப்படி எனது ஒவ்வொரு தேவையையும் போராடி நான் நிறைவேற்றிக் கொண்டிருந்த நாட்களில், சக மாணவிகள் கவலையே இல்லாமல் இருந்தனர். அவர்களுக்கு அவர்களின் அண்ணன்கள், தம்பிகள் அல்லது அப்பா வாங்கி கொண்டு வந்து தருவார்கள். அப்போதும் ஏனோ எனக்கும் ஒரு அண்ணன் இருந்தால் இதற்கெல்லாம் உதவியாக இருந்திருக்குமே என்று தோன்றவில்லை.

பின்னர் கல்லூரி நாட்களில் ரொம்பவே சுதந்திரம் எடுத்துக் கொண்டேன். கல்லூரிக்குத் தேவையான புத்தகங்கள், நோட்ஸ், லேப் உபகரணங்கள் என்று நானே ஜங்ஷன், டவுண் சென்று வாங்க ஆரம்பித்தேன். கோ-எஜுகேஷன் கல்லூரி என்றாலும் இரண்டாம் வருடத்திலிருந்துதான் சக மாணவர்களிடம் சகஜமாகப் பழக முடிந்தது. பிறகு எந்தக் கடையில் டிராயிங் பேப்பர்கள் விலை கம்மி, பிராஜக்ட் ஒர்க் எங்கே டைப் செய்யலாம், எக்ஸாம் ஃபீஸுக்கு எங்கே சலான் எடுக்கணும், அரியர்ஸுக்கு ஃபீஸ் எப்போ கட்டணும் என்ற அவர்களின் வழிகாட்டுதலுடன் அதிகச் சிரமமில்லாமல் கல்லூரிப் படிப்பு நிறைவேறியது. அப்போ கொஞ்சமும் தோணவேயில்லை நமக்கு ஒரு அண்ணன் இல்லையே என்று.

ஆனால் பள்ளியிலும், கல்லூரியிலும் சில தோழிகளின் பேச்சுகளிலிருந்து அண்ணன்கள் இருப்பது ஒரு வகையில் வசதி என்றாலும், அவர்களின் ஆதிக்கம், அடக்குமுறை அதிகம் இருக்கும் என்பதை அறிந்து கொண்டேன். அதோடு அடிக்கடி அவர்களின் பேச்சில் இடம்பெறும், “அண்ணன் வரும் நேரம்”, “தம்பி பாத்தா தொலைஞ்சேன்”, “அண்ணனுக்குத் தெரிஞ்சா திட்டுவான்” போன்ற பேச்சுகள் நல்லவேளை எனக்கு அண்ணன் இல்லை என்ற ஆசுவாசத்தையே தந்தன.

பின் என் திருமண சமயத்திலும் அப்பா, உறவினர்களோடு நானும் வேலையை இழுத்துப் போட்டுச் செய்த போதும் தோன்றவேயில்லை சகோதரன் இல்லையே என்று. திருமணமாகிப் பல வருடம் கழித்து கணவரிடம் அவரது சகோதரியினைக் குறித்த எனது மனத்தாங்கலைக் கூற, “அதெல்லாம் கண்டுக்காதே” என்ற அவரின் பதிலைக் கேட்டபோது தோன்றியது, எனக்கும் இப்படி ஒரு அண்ணன் இருந்திருக்கலாமே என்று!!








Post Comment

கொண்டாட்டங்கள்




எல்லாரும் போடறாங்களே, நம்மளும் போடுவோம் இந்த தொடர்பதிவை. யார் இதப்போய் படிக்கபோறாங்க, பதிவு எண்ணிக்கையில ஒண்ணு கூட, அவ்வளவுதான் அப்படின்னு நினைச்சு எழுதினேன். அடேயப்பா, என்னா ஆதரவு அதுக்கு!! எத்தனையோ சமூகக் கருத்துக்கள் நிறைஞ்ச (சரி..சரி.. டென்ஷன் ஆவாதீங்க..) பதிவுகள்லாம் போட்டேன், அதெல்லாம் படிக்க ஆளக் காணோம், இதப் படிச்சு எனக்கு ஆதரவு தெரிவிச்ச என் அன்பு நண்பர்கள் எல்லாருக்கும் என் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்.

முதமுதலா எனக்கு அனானி பின்னூட்டமெல்லாம் வந்தது இந்தப் பதிவுலதாங்க!! அதிலயும் ஒரு அனானி, நல்ல அனானி. எனக்கு ஆதரவா (ஆனாலும் கொஞ்ச உள்குத்தோடதான்) பின்னூட்டம் போட்டிருந்தார். அப்புறம் நிறைய பேர் வந்து ரொம்ப “அன்பா” பாராட்டிட்டு போயிருந்தாங்க. பதிவு எழுத ஆரம்பிச்சு ஒரு மாசத்திலேயே இப்படி பாராட்டு வாங்குறதுன்னா சும்மாவா? எவ்வளவு பெரிய விஷயம்!!

எனக்குப் பிடித்த தலைவர்களை ஏன் எனக்குப் பிடித்தது என்று ஒரு பதிவு போடலாம் என்றிருக்கிறேன். ஆனா இப்ப உடனே இல்லை. என்னைப் பாராட்டினவங்கல்லாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும், அப்புறம் பார்க்கலாம். ஆனா ஒரு விஷயம் பார்த்தீங்களா, ராமதஸையுந்தான் பிடிக்கலன்னு சொன்னேன். அதுக்கு ஒரு எதிர்ப்பும் இல்லை!!

சரி, அப்படி இப்படி நானும் கன்ஃபர்மா பிரபல பதிவர் ஆகிட்டேன். மனசு சந்தோஷத்துல றெக்கை கெட்டி பறக்க ஆரம்பிச்சிடுச்சு. அதக் கொண்டாட வேண்டாமா? அதனால நேத்து சாயங்காலம் வீட்டிலயே கே செஞ்சு கொண்டாடி மகிழ்ந்தோம். கேக்குன்னா சாதாரண கேக் இல்லீங்க, மஃபின்ஸ்ன்னு சொல்வாங்களே அந்த கப் கேக். வெனிலா கப் கேக், சாக்லேட் கப் கேக், கேரட் மஃபின்ஸ்னு வெரைட்டியா செஞ்சு அசத்திட்டோம்ல.

சாப்பிடும்போது என்னை பிரபலம் ஆக்கிய புண்ணியவான்களைத்தான் நினைச்சுகிட்டேன். அப்படியே கண்ணெல்லாம் நெறஞ்சு, தொண்டையெல்லாம் அடைச்சு, சாப்பிடவே முடியலைங்க. அதனால கொஞ்சம் தண்ணி (H2o தான்) குடிச்சுட்டு அப்புறம் சாப்பிட்டேங்க.

புள்ளைங்களுக்குத்தான் ரொம்ப சந்தோஷம். ரொம்ப நாளா கேக் செய்யச்சொல்லிட்டே இருந்தாங்க. இப்பத்தான் அவங்க ஆசை நிறைவேறியிருக்கு.

கேக் செய்யுறதில வெண்ணெய், முட்டை, சீனியைப் போட்டு கைகொண்டு (manual egg beater) நல்லா நுரை வர அடிக்கணும். அதுதான் முக்கியம். எனக்கு கைவலிக்கும்கிறதால எங்க வீட்டு ரங்ஸ்தான் ஹெல்ப் பண்ணுவார். எப்பவாவதுதானே கேக் செய்யுறோம்னு எலெக்ட்ரிக் பீட்டர் வாங்கவில்லை. அதோடு, நான் செய்வதில்லையே, ரங்ஸ்தானே செய்கிறார் என்ற அலட்சியம் வேறு. இந்த முறை வாங்கிவிட்டேன். அதனால் வேலை ரொம்ப ஈஸியாக முடிந்ததென்று ரங்ஸுக்கு ரொம்ப சந்தோஷம். இவ்வளவு நாளா ஏன் வாங்கலைன்னு கோவம் வேற.

இவ்வளவு நாளா அப்பாதான் கேக் செஞ்சாருன்னு எல்லார்ட்டயும் சொல்லிட்டிருந்த பிள்ளைங்க நேத்துதான் அம்மா கேக் செஞ்சதா ஃபோனில் உறவினரிடம் சொன்னார்கள்.

கேக் மட்டுமல்ல, கரும்பும் சாப்பிட்டோம். பொங்கலுக்கு இன்னும் நாளிருக்கேன்னு யோசிக்கிறீங்களா? எங்க ரங்ஸ் நேத்து இங்க இருக்க ஷேக் பேலஸில் இருக்கும் பம்பிங் ஸ்டேஷன் பார்க்கிறதுக்காகப் போனாராம். அங்க கரும்புத் தோட்டம் இருந்துதாம்!! அங்கு வேலை செய்பவர் இரண்டு கரும்பை வெட்டிக் கொடுத்தாராம். அதையும் வெட்டி கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, மீதியை ஜூஸ் போட்டு குடிக்கலாம் என்று வைத்திருக்கிறேன். வீட்டில் கரும்பு ஜூஸ் போடுவது எப்படின்னு அறுசுவை.காம்-ல் போய்த் தேடிப்பார்க்கணும். சமையல் டிப்ஸுக்கு அங்கேதான் போவேன் எப்பவும்.

அடுத்த முறை ஆப்பிள் கேக் செய்யணும் என்று பேசிக்கொண்டிருந்தபோது சின்னவன் திடீரென்று ஞாபகம் வந்து சொன்னான், அவன் வகுப்பில் ஒரு பையன் ஆப்பிள் கொண்டுவந்ததாகவும், அதை ட்ரஸ்ஸைக் கழட்டாமல் சாப்பிட்டான் என்று சொல்லவும், எல்லாரும் கொஞ்சம் குழம்பிப் போக, ஆப்பிள் சாப்பிட ஏண்டா டிரஸ்ஸைக் கழட்டணும் என்று பெரியவன் கேட்கவும் ஆப்பிளின் டிரஸ்ஸைக் கழட்ட வேண்டாமா என்று கேட்டான் அந்த அறிவாளிப் பிள்ளை.

வேறோரு சம்பவமும் ஞாபகம் வந்தது. எண்பதுகளில் என் அப்பா என் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, ஆப்பிள் போன்ற பழங்கள் வாங்கிக் கொடுக்கும்படிச் சொன்னவர், என்னிடம் “தோலோடு சேர்த்துச் சாப்பிடணும், சரியா? தோலில்தான் நிறைய சத்து இருக்கு” என்றார். சில வருடங்களுக்கு முன், என் மகனை (வேறு) மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, அதேபோல பழங்கள் கொடுக்கச் சொன்னவர், இதையும் சொன்னார் “மறக்காமல் தோலை எடுத்துவிட்டுக் கொடுங்கள். தோலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் (traces) இருக்கலாம். இப்ப மெழுகு வேறு தடவுகிறார்களாம்”!!

Post Comment

நானா, நானே நானா...




1.அரசியல் தலைவர்:
பிடித்தவர்: ஜெயலலிதா (சோனியா என்று எழுதியிருந்தேன்; தமிழர் என்ற விதி காரணமாக மாற்றிவிட்டேன்.)
பிடிக்காதவர்: திருமாவளவன்

2. குடும்பத் தலைவர்
பிடித்தவர்: கலைஞர் கருணாநிதி (இந்த வயசிலயும் உழைக்கிறாரே..)
பிடிக்காதவர்: ராமதாஸ் (மகனின் அமைச்சர் பதவிக்கு வேட்டு வைத்ததால்)

3. தொழில் நிறுவனம்
பிடித்தது: ETA (UAE) (தமிழரால் நடத்தப்படும் நிறுவனம்)
பிடிக்காதது: டாஸ்மாக்

4. பதிவுலகம்
பிடித்தது: மாறுபட்ட பார்வைகள் (அட, இப்படியும் இருக்கலாமோ...)
பிடிக்காதது: கவிதை, பின்நவீனத்துவம் என்று (எனக்கு) புரியாத பாஷையில் எழுதப்பட்டவை
வியப்பது: சாராயம் குடிப்பதை ஏதோ குளிப்பது, தூங்குவது போன்ற அன்றாடச் செயலாகச் சிலர் செய்வதும், அதைச் சிறிதும் குற்ற உணர்வு இல்லாமல் பிரஸ்தாபிப்பதும்

5. விஞ்ஞானி:
பிடித்தவர்: அப்துல் கலாம் (விஞ்ஞானிகள் என்றால் வெகுஜனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற பிம்பத்தை உடைத்ததற்காக)
பிடிக்காதவர்: வாலி (பெண்கள் சமைஞ்சது எப்படி என்பது போன்ற உடற்கூறு இயல் ஆராய்ச்சி செய்பவர்)

6. விளையாட்டு வீரர்:
பிடித்தவர்: சாந்தி
பிடிக்காதவர்: அஞ்சு ஜார்ஜ் (மலையாளியான அவர் எதற்கு தமிழக அரசிடமிருந்து 25 லட்சம் நிதியுதவி பெற்றார்? கொடுத்த நம்மளைச் சொல்லணும்)

7. பொதுஇடப் பண்பு
பிடித்தது: பார்த்ததும் சிரிக்கும் சின்னக் குழந்தைகள் (மட்டும்)
பிடிக்காதது: சிகரெட் புகையும், பிடிப்பவர்களும்

8. உணவு:
பிடித்தது: தண்ணீர் ஊற்றிய பழைய சாத்தில் தயிர் சேர்த்துச் சாப்பிடுவது. இங்கே செய்து பார்த்தா அந்த டேஸ்ட் வரவே மாட்டேங்குது :-(
பிடிக்காதது: ஹராம் என்று விலக்கப்பட்டவை மட்டும்; வேறெதையும் கழிப்பதில்லை, சமைப்பது எவ்வளவு கஷ்டம் என்று அறிந்தபிறகு.


போங்கப்பா, இதுக்குமேல லிஸ்ட் போட முடியல. சினிமாவைப் பொறுத்த வரை நான் பிடித்தவர், பிடிக்காதவர் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. பிடிக்கலையா, சேனல் மாத்தி போயிட்டேயிருப்பேன். அவ்வளவுதான்.

என்னை அழைத்தவர் அ.மு. செய்யது.

நான் (நம்பி) அழைப்பவர்கள்:

சுமஜ்லா (இவரது பிளாக்தான் நான் முதலில் பார்த்தது)
புதுகைத் தென்றல்
இப்படிக்கு நிஜாம்
ஒண்ணுமில்லை ச்சும்மா



(இவ்வளவுக்கப்புறம் கூப்பிட்டவங்க வருவாங்கங்கிறீங்க, பாப்போம்!!)

Post Comment

டிரங்குப் பொட்டி 2





அக்டோபர் 31 அன்னை இந்திரா காந்தியின் மறைவு நாள். நல்ல தலைவர். அதென்னவோ நல்ல தலைவர்கள் எல்லாம் அல்பாயுசில் போய்விடுகிறார்கள். இந்தியாவின் தலையெழுத்து அப்படித்தான் போல. இரும்பு மனுஷி. இருந்திருந்தால் இந்தியா சீக்கிரமே வல்லரசு ஆகியிருக்கும். பிரச்னைகளில் வழ, வழ, கொழ, கொழ என்று நழுவாமல் வெட்டொன்று, துண்டொன்று என்று முடிவெடுப்பவர். அதனாலேயே ரொம்பப் பிடிக்கும். அவரும், அவரின்  கூர்மையான பார்வையும், வேகமான நடையும்...எதிர்காலத்தில் ஒருவேளை நான் அரசியலில் நுழைந்தால் அவர்தான் என்  மானசீகக் குரு!! (யாருப்பா அது நக்கலா சிரிக்கிறது....)



தற்போதைய தலைவர்களில் அவரின் சில சாயல்கள் இருப்பது ஜெயலலிதாவிடம். பல விஷயங்களில் அவரது நடவடிக்கைகள் பிடிக்கவில்லையென்றாலும், அவரது துணிச்சல், தன்னம்பிக்கை, சட்டென்று முடிவு எடுக்கும் விதம் இதெல்லாம் என்னைக் கவர்பவை. தற்போதைய சில நிகழ்வுகளில்  இதுக்கெல்லாம் இப்ப ஜெயலலிதா சி.எம்.மாக இருந்திருக்கணும் என்று தோன்றும்.  அவர் சி.எம்.மாக இருக்கும்போது (மத்திய, மாநில) அமைச்சர்கள் முதல் அதிகாரிகள்  வரை கைகட்டி, வாய்பொத்தி நிற்கும் அந்த அழகுக் காட்சிகளுக்காகவே அவர் மீண்டும் முதலமைச்சராக ஆசை!!

இப்ப விஷயத்துக்கு வருவோம், இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட தினம் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது என் கணவர், எம்.ஜி.ஆர். இறந்த சமயத்தில் நடந்ததைக் கூறினார். அப்போ அவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு. வெளியே ரூம் எடுத்துத் தங்கியிருந்தாராம். அன்று அதிகாலை 5 மணிக்கு டீக்கடை வந்தபொழுது ஒரே போலீஸ்மயமாம். ஒரு போலீஸ்காரர் இவரை அழைத்து யார், என்னவென்று விசாரித்துவிட்டு, விஷயத்தைக் கூறி உடனே ஊருக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். இவர் உடனே கிளம்பிவிட்டாலும்,  செய்தி கசிய ஆரம்பித்து விட்டதால் பேருந்து கிடைக்க சிறிது சிரமமாகவே இருந்திருக்கிறது.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த என் பெரிய மகன், அவர் இறந்ததுக்கு நீங்க ஏன் அவசர அவசரமா வீட்டுக்கு வரணும்? என்று கேட்டான். கலவரம் வரலாம் என்று சொன்னதுக்கு, ஏன் அப்படி செய்யுறாங்க? இங்கே அபுதாபியில் அப்படியெல்லாம் ஏன் நடப்பதில்லை என்று அடுக்கடுக்காகக் கேள்விகள். பெரியவனுக்கு விளக்கிச் சொன்னால் புரிந்து கொள்கிறான். சின்னவனுக்குத்தான் எப்படி புரிய வைப்பதென்றே தெரியவில்லை. அடுத்து பெரியவன் கேட்டது, ஏம்மா இந்திரா காந்தி இருக்கும்போதே நான் பிறந்துட்டேனா? இல்லை என்றதும் முகத்தில் சிறு ஏமாற்றம்.  அது ஏன் அவன் எம்.ஜி.ஆர். இருக்கும்போது நான் பிறக்கலையா என்று கேட்கவில்லை?

 *^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^

மக்கள் டி.வி.யில் “சின்னச் சின்ன ஆசை” என்று ஒரு நிகழ்ச்சி வருகிறது. அதிகம் வசதியில்லாத குடும்பத்தில் உள்ள குழந்தைகளை அழைத்துச் சென்று உடை, விளையாட்டுப் பொருட்கள், உணவுப் பண்டங்கள் என்று வாங்கித் தருகிறார்கள். இது அவர்களை அந்நேரத்துக்கு மட்டும் மகிழ்ச்சிப்படுத்தலாம் என்றாலும் அது அவர்களுக்கு உண்மையான பயன் தருமா?  நிகழ்ச்சியில் பங்குபெறும் சிறார்களின் முகங்களில் ஒரு தர்மசங்கடம்தான் தெரிகிறது. மேலும் இவ்வாறு ஊரறிய இலவசமாகக் கொடுப்பது, தொலைக்காட்சியின் பப்ளிசிட்டிக்கு மட்டுமே உதவலாம். தினமும் ஒரு மீன் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே மேல் இல்லையா?

*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^

நேற்று காலை பேருந்தில் வரும்போது நான் மட்டும் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண்ணின் அருகே இருந்த ஒரு ஆணை எழுப்பி விட்டு அமரும்படி இன்னொரு பெண் என்னிடம் கூறினார். எனக்கு அதில் உடன்பாடில்லை. “இட்ஸ் ஓ.கே. நோ பிராப்ளம்” என்று சொல்லிவிட்டு நின்றேன். பின்னாலிருந்து சிலர் அவரை எழுந்திருக்கும்படி கூற, எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது. அவரோ வயதில் மூத்தவர். அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டு நின்று கொண்டிருந்தேன். இன்னொருவர் பின்னால் இடமிருப்பதாகக் கூற, அவர் வேறு வழியில்லாமல் எழுந்து சென்றார். நானும் வேறு வழியில்லாமல் உட்கார்ந்தேன்.  உட்கார்ந்து வருவதும் நல்ல வசதியாகத்தான் இருக்கிறது.

*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^

மெகா டி.வி. அமுதகானத்தில் “விஸ்வநாதன் வேலை வேணும்” (காதலிக்க நேரமில்லை) பாட்டைக் கேட்டதிலிருந்து சின்ன மகன் அதன் விசிறி ஆகிவிட்டான். எப்பவும் அந்தப் பாட்டுதான் வாயில். அவன் பாடி கேட்பதும் நல்லாத்தான் இருக்கு.

இன்று காலை பத்மினி, சிவாஜி நடித்த “நூறாண்டு காலம் வாழ்க; நோய்நொடியில்லாமல் வாழ்க” என்ற பாடலில் ஒரு காட்சி:  பச்சிளங்குழந்தையையும் பத்மினியையும், அவரின் தந்தை அணைத்துக் கொள்ள, பூமழை தூவும். தூவப்பட்ட பூக்கள் குழந்தையின் முகத்தில் விழ, பத்மினி அனிச்சையாக அதன் முகத்தைக் கையால் மறைத்துக் கொள்கிறார். அந்தக் காட்சியைப் பார்க்கும்போதே தெரிகிறது, அது சொல்லிகொடுத்து நடித்ததல்ல என்று.  தன் பாகத்தை மட்டும் கடமையே எனச் செய்யாமல், நடிக்க வந்த அந்த குழந்தையின் நலனையும் பேணும் அவரது குணம் சிறப்பு. தில்லானா மோகனாம்பாளில் நடிக்கும்போது அவரது மகனுக்கு ஏழு வயதாம்!!

கொசுறு: அமுதகானம் வழங்குவது, சமீபத்தில் “கோலங்களில்” கொல்லப்ப்ட்டாரே தோழர், அவர்தான்!! (நன்றி: நர்சிம்)

*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^
ஜெய்ப்பூரில் கடந்த வாரம் பெட்ரோல் கிடங்கில் பிடித்த தீ இன்னும் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அதோடு சுற்றுச்சூழலும் பாதிக்கப் பட்டதால், அப்பகுதி பொதுமக்கள் பலவிதமான உடல்நிலைக் குறைவுகளுக்கு ஆளாகத் தொடங்கியிருப்பதாக வரும் செய்திகள் கவலைக்குரியன.


Post Comment

ஃபார்முலா 1 ரேஸ்




  
   
அபுதாபியில் எஃப்-1 ரேஸ் நடந்துகொண்டிருக்கிறது. இன்று கடைசி நாள்.  ரேஸ் டீம்களில் நமக்குத் தெரிந்த ஷூமேக்கர், நரேன் கார்த்திகேயன் பெயர்களெல்லாம் இல்லை. ”Force India F1 team" என்ற பெயரில் ஒரு டீம் இருக்கிறது. ஆனால் அணி உறுப்பினர்கள் இந்தியர்கள் இல்லை. (ஷூமேக்கர் வேறொரு பைக் பந்தயத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்கு பெறவில்லையாம்.  என் வீட்டுக்காரர் ரேஸ் நடக்கும் யாஸ் தீவில் ( Yas Island) வேலை பார்ப்பதால் ஃபிரீ பாஸ் கிடைக்குமா என்று நிறைய விசாரிப்புகள்.  ம்ஹூம், பயங்கர டைட் செக்யூரிட்டி. அங்கே உள்ள எல்லா கம்பெனிகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை விட்டுவிட்டார்கள் என்றால் பாருங்கள், எவ்வளவு பாதுகாப்பு என்று. எமெர்ஜன்ஸி ட்யூட்டியில் இருப்பவர்களுக்கு சிறப்பு செக்யூரிட்டி பாஸ் என்று ஏக அமர்க்களம்.

போன வாரம் வெள்ளி, சனி இரண்டு நாளும் டிரையல் ரேஸ் நடந்தது. அதற்குத்தான் ஃபிரீ பாஸ் கிடைத்தது. அப்பாவும் பிள்ளைகளும் போய் வந்தார்கள். சின்னவனுக்கு அங்கு இருந்த பயங்கர சத்தம் பிடிக்கவில்லை. அவன் சொன்னது சரிதான், டிரையல் ரேஸில் எடுத்த வீடியோவைக்கூட சவுண்ட் ம்யூட் போட்டுவிட்டுத்தான் பார்க்க முடிகிறது. ஜெட் பிளேன் போவதுபோல என்னா சத்தம். சின்னவன் வீடியோவில் காதை மூடிக்கொண்டே இருக்கிறான், பாவம். பெரியவன் நன்றாக இருந்தது என்றான்.  ஆனாலும் பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு மேல் இருக்கப் பொறுமையில்லை இருவருக்கும். “சும்மா சும்மா காரெல்லாம் வந்து வந்து போயிட்டிருக்கு. இதைப் போய் யார் அவ்வளவு நேரம் உக்காந்து பாக்கறது?” என்றார்கள். அதனால்தானே நான் போகவேயில்லை. ரேஸ் சாலைகள், ஹோட்டல்கள், மெரினா என்று யாஸ் தீவில் உள்ள மற்ற இடங்களை நன்றாகச் சுத்திப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள்.


 இந்திய அணி

சில பதிவர்கள் இந்த ரேஸ் பார்த்து, பதிவு எழுதப் போவதாகச் சொல்லியிருந்தார்கள். பார்ப்போம், யார் யார் எழுதுகிறார்கள் என்று. ஆனால் நாந்தானே ஃபர்ஸ்ட்!! (பாக்கலைன்னாலும் எழுதிட்டேன்ல!!)

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துச் சில பத்திரிகையாளர்கள் ஆச்சரியம் தெரிவித்திருக்கிறார்கள். முதல்முறையாக இவ்வளவு அதிகம் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்ப்பதாகவும், மற்ற நேரங்களில் பத்திரிகையாளர் என்றால் கேள்வியே இல்லாமல் கிடைக்கும் அனுமதி, சலுகைகள், இலவசங்கள், எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்கள். ஒரு மூத்த பத்திரிகையாளர் கூறுகையில், யூ.ஏ.இ. யில் தனது 18 வருட சர்வீஸில், ஒரு நிகழ்ச்சியை கவர் செய்யும்போது,  முதன்முறையாக உணவுக்குக் காசு கொடுத்ததாக எழுதியிருக்கிறார். (”And for the first time in my 18 years in the UAE, media persons will also have to pay for their snacks and food!”) ஹூம் அவர் கவலை அவருக்கு!!

இந்த ரேஸை வைத்துதான் இனி யாஸ் தீவிலும், பக்கத்தில் உள்ள ராஹா பீச், சாதியாத், ஃபலாஹ் தீவுகளில் சரிந்து கிடக்கும் ரியல் எஸ்டேட்  நிலவரத்தை நிமிர்த்த வேண்டிய கட்டாயம் அபுதாபிக்கு. இந்த ரேஸ் எந்தவித அசம்பாவித நிகழ்வுகளும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்திக் காட்டினால்தான் அது சாத்தியம். அவர்கள் ஆசை நிறைவேறட்டும், நிறைவேறினால்தான் பொருளாதாரச் சீர்குலைவால் வேலை இழந்த/ இழக்கும் அபாயத்தில் உள்ள நம்மவர்களுக்கும் நல்வாழ்வு மலரும்.
   
    
 

Post Comment