Pages

2010 & 2011: டைரி & பிளானர்




 
 


விஜிஸ் கிரியேஷன்ஸின் விஜி அழைத்த தொடர்பதிவு இது.

பொதுவாகவே டைரி எழுதும் பழக்கமோ, புது வருட உறுதிமொழி எடுக்கும் பழக்கமெல்லாம் இல்லை எனக்கு. அதெல்லாம் நல்ல பழக்கமாச்சே!! ஆனால், இந்தத் தொடர்பதிவின் தலைப்பைப் பார்த்தபோது, நல்ல விஷயம்தானே எழுதுவோம் என்று நினைத்துச் சம்மதித்தேன். ஆனால், கிட்டத்தட்ட ஒரு மாசமா யோசிக்கிறேன்.. ம்ஹும்.. செஞ்சதாச் சொல்ல ஒரு பாயிண்டும் கிடைக்கலை.. என்னச் செய்யப் போறேன்னு யோசிச்சாலும் ‘ஞே’ தான்!!

இருந்தாலும் விட்டுடுவோமா நாம, படிக்காமலே 30-40 பக்கத்துக்கு காலேஜில எக்ஸாம் எழுதின அனுபவம் இருக்குல்ல!!
 
2001லன்னு நினைக்கிறேன், இந்தியாவின் மக்கள்தொகை ரொம்பப் பெருகிட்டு வருது, இது இந்தியாவின் வளர்ச்சிக்கு நல்லதில்லை, ஆ.. ஊ..ன்னு அலாரம் அடிச்ச ஊடகங்கள், இந்தியாவின் முதல் பில்லியனாவது குழந்தை இத்தனாவது நாள், இத்தனாவது மணிக்கு, இந்த ஊர்ல, இந்த ஆஸ்பத்திரியில் பிறக்கப் போகுதுன்னு கணக்குப் பாத்து (அது எப்படிங்க?) அறிவிச்சுட்டு, கரெக்டா அன்னிக்கு அங்க குழுமிட்டாங்க. நானும் படபடப்பா, அந்த துரதிர்ஷ்ட(??) குழந்தையைப் பெற்ற பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும், என்ன சொல்வாங்களோ,  அப்படின்னு நினைச்சுகிட்டே சோகத்தோட பாத்துகிட்டிருந்தேன்.

ஆனா, என்ன நடந்துச்சு தெரியுமா? ஒரு பெண் மத்திய அமைச்சர் கையில அந்த பில்லியனாவது குழந்தையைக் கொடுத்து “ஸ்வீட் எடு.. கொண்டாடு”ன்னு ஒரே ஆட்டம், பாட்டம்தான் போங்க!! ஒரு சின்னஞ்சிறு குழந்தை அந்தச் சூழ்நிலையையே மாற்றிவிட்டது!! இந்திய மக்கட்தொகை அதிகரிப்பது ஆபத்து என்று அறிவிக்க அங்கே கூடிய அனைவரும் அதையெல்லாம் மறந்து, குதூகலித்ததைப் பார்த்தால், மக்கட்தொகைப் பெருக்கத்தைக் கொண்டாடுவதுபோல எதிர்மறையாக ஆகிப்போனதுதான் காமெடி!!

சம்பந்தமில்லாம இது எதுக்கு இங்கேன்னா, ஒரு வருஷக் காலத்தில் எத்தனையோ நடந்திருக்கும். நல்லதிலும் கெட்டது உண்டு; கெட்டதிலும் நல்லது உண்டு என்பதாக, அவற்றின் மூலம் நாம் பெற்ற “புத்தி கொள்முதல்”களைத் தான் நினைத்துப் பார்த்துக் கொள்ளவேண்டும், இல்லையா?

உதாரணத்துக்கு, என் அலுவலகத்திலும் ரெஸெஷனால் வரிசையாக ப்ராஜக்டுகள் கைவிட்டுப் போக, கவலையோடு ஈயோட்ட ஆரம்பித்த நான், பதிவெழுதவும் ஆரம்பிக்க, மிக வித்தியாசமான கருத்துகள், அனுபவங்கள், அறிவுரைகள், அழிமானங்கள் என்று எல்லாம் கலந்த சங்கமமாகப் பதிவுலகைக் கண்டேன். இதுதான் என்றில்லாமல், அரசியல், விஞ்ஞானம், விவசாயம், சமையல் என்று எல்லா துறைகளிலும் பல்வேறு கண்ணோட்டங்கள், எனக்கு அவைகுறித்த பரந்த அறிவைத் தந்தன. ஒரு இழப்பில், ஒரு லாபம்!! (ஒருத்தரோட இழப்பு, இன்னொருத்தருக்கு லாபம்னும் கொள்ளலாம்!! :-))) )

என்னுடைய “ஃபேவரைட்”டுகளான (இயற்கை) விவசாயம், Three "R"s, உலக வெப்பமயமாதல், தண்ணீர் சிக்கனம் குறித்து நிறைய விழிப்புணர்வுத் தகவல்கள் கிடைக்கின்றன. ஒவ்வொருமுறை தண்ணீர் பைப்பைத் திறக்கும்போதும் இப்பதிவுகள் ஞாபகம் வந்து மிரட்டுகிறது!!  அதுபோல, விவசாயத்தைச் சின்ன அளவில் இப்பொழுதே நடைமுறைப்படுத்திப் பார்க்க ஆசை!! ஆனாலும், ”ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க” என்ற பழமொழியும் நினைவில் வந்துத் தொலைக்கிறது!! :-(

பதிவுலகிலக மற்றும் கல்லூரி நட்புகளை நேரில் சந்திக்க முடிந்தது இவ்வருடத்தில் பெரும் மகிழ்ச்சி தந்த நிகழ்ச்சி!!

சென்ற வருடத்தில், அறிந்த, தெரிந்த பலரும் ரிஸெஷனால் வேலையிழந்ததுதான் மிகவும் பாதித்ததென்றாலும், அனைவரும் வெவ்வேறு இடங்களில் மீண்டும் செட்டிலாகிவிட்டது மகிழ்ச்சியே!! உடல்நலப் பாதிப்புகள் இல்லாமலிருக்கும்வரை எதுவும் பெரிய இழப்பில்லை என்னைப் பொறுத்த வரை.  புதிதுபுதிதாய் வரும் நோய்களும், நடக்கும் விபத்துகள் மட்டுமே என்னைக் கலவரப்படுத்தியுள்ளன.

இப்படிக் கவலைக்குரிய விஷயங்களை யோசித்து யோசித்து எழுதுமளவுக்கு நிம்மதியான, நலமான வாழ்வைத் தந்த இறைவனுக்கு நன்றி!! அடுத்தடுத்த வருடங்களும் இதேபோல கவலைகளை யோசிக்கும் வாழ்வை இறைவன் தரவேண்டுமே என்பதைத் தவிர, தற்போது பெரிய எதிர்பார்ப்பு ஏதுமில்லை!! அனைவருக்கும் இப்படியான நல்வாழ்வை எப்பொழுதும் தர வல்ல நாயனை வேண்டுகிறேன் .
 
 

Post Comment

ஆராய்ச்சிகள் - அன்றும், இன்றும்




 
"ஆராய்ச்சி”, “ஆராய்ச்சியாளர்கள்”, “விஞ்ஞானி” - இதெல்லாம் ரொம்பவே நமக்குப் பரிச்சயமான வார்த்தைகள்.  அவ்வப்போது பத்திரிககளில் “According to latest research..." என்று படித்திருப்போம். உலகில் நமக்கு புரியாத பல புதிர்களை விளங்க வைப்பதும்,  அறியாத பல நல்ல விஷயங்களையும் புரிய வைப்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களே!!

எல்லா புகழ்பெற்ற பெரும் பன்னாட்டு நிறுவனங்களிலும் ஆராய்ச்சிகளுக்கும், புது கண்டுபிடிப்புகளுக்குமென்றே "R & D" எனப்படும் ”ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல்” என்ற தனித் துறையே உண்டு.  இது தவிர அரசாங்கள் சார்பாகவும், பல்கலைக் கழகங்கள் சார்பாகவும் இத்துறை மூலம் பெரிய பெரிய ஆராய்ச்சிகள் நடத்தி, மனித மற்றும் உலக மேம்பாட்டுக்குப் பாடுபடுகிறார்கள்.  எளிதாகப் புரிய வைக்கவேண்டுமென்றால், “மூலிகை பெட்ரோல்” ராமரும் ஒரு ஆராய்ச்சியாளரே!!

ஆராய்ச்சியாளர்களின் தொடர் ஆர்வத்தாலும், முயற்சிகளாலும்தான் இன்றைய உலகில் பல நவீன கருவிகளும், நோய்களுக்கு மருந்துகளும், புதிய சிகிச்சை முறைகளும் கிடைத்திருக்கின்றன.  ஒரு காலத்தில் மருந்தே இல்லைன்னு சொல்லப்பட்ட கேன்ஸர் இன்னிக்கு குணப்படுத்த முடியுற வியாதியா ஆகிடலையா? அதுபோல எய்ட்ஸுக்கும் மருந்து இப்போ இல்லைனாலும், ஆராய்ச்சி தொடருது. சமீபத்துல ஒருவரின் புற்றுநோய்க்குச் செய்த ஸ்டெம் செல் சிகிச்சையால் எதிர்பாராவிதமாக அவரின் எய்ட்ஸ் குணமாகியுள்ளது. இதுவும் ஆராய்ச்சி செய்யப்பட்டு, எய்ட்ஸ் சிகிச்சைக்கு வழிவகுக்கப்படலாம் எதிர்காலத்தில்.

உலகம் உருண்டையென்பதிலிருந்து, இந்த அண்டவெளியில் பூமியைப் போல இன்னும் சுமாராக ஐம்பது பில்லியன் கோள்கள் இருக்கக்கூடும் என்று நமக்கு தெரிவித்ததும் ஆராய்ச்சியாளர்களே!!

சாக்லேட் சாப்பிட்டால் கெடுதல் என்ற நமது நினைப்பை, (டார்க்) சாக்லேட் அளவோடு சாப்பிட்டால் உடல்நலத்திற்கு நல்லது என்று தெளிய வைத்ததும் இப்படியான ஆராய்ச்சிகளே! (க்ரீன்) டீக்கும் இதேதான்.

முன்னெல்லாம் “கொலஸ்ட்ரால்” என்பதே கெட்ட வார்த்தையாக நினைத்து எண்ணெய் வகைகளை நாம் “தீண்டத்” தயங்க, அப்புறம் கொலஸ்ட்ராலிலும் “நல்ல” கொலஸ்ட்ரால் (HDL), “கெட்ட” கொலஸ்ட்ரால் (LDL) உண்டு என்று புரிய வைத்து, அதற்கேற்றவாறு எண்ணெய் வகைகளைத் தேர்ந்தெடுக்க வைத்தனர் ஆராய்ச்சிகள் மூலம்.

முட்டை சாப்பிட்டால் உடல் பருமனும், பி.பி.யும் எகிறும் என்று நினைத்து நாம் தவிர்த்துக் கொண்டிருக்க,  நிறைய முட்டை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு உருவாகுதலே நிறுத்தப்படும். எனவே இதய நோய் வராது என்று புதிய தகவல் தருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!!

இதேதான் உப்பு, உருளைக் கிழங்கு, ரெட் மீட் வகையறாக்களுக்கும் - இவையெல்லாம் உடல்நலத்திற்கு பெரும் கேடு விளைவிப்பவை என்ற நம் நினைப்பில் உப்பைத் தூவி, இவைகளிலும் நன்மை உண்டு; ஆனால், அளவுக்கு மிஞ்சினால்தான் ஆபத்து என்று வலியுறுத்துகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த “பதப்படுத்தப் பட்ட உணவுகள்” (frozen foods) குறித்து எல்லாருக்குமே ஒரு இகழ்ச்சி உண்டு. ஹூம், பாக்கெட்டுல போட்டு ஃப்ரீஸர்ல போட்டு வச்சிருக்கதுல என்ன சத்து இருக்கும்? ஃப்ரெஷ்ஷா அன்னிக்கு கடையில வாங்கிச் சாப்பிடுற மாதிரி வருமா? என்று அங்கலாய்ப்பவர்களுக்கும் ஆப்பு இருக்கு. “ஃப்ரெஷ்”னு நாம சொல்ற பல காய்கறி, பழ வகைகள் ஆக்சுவலா ஆறு மாசத்துக்கும் முன்னேயே, அதுவும் அவை சரியான பருவத்துக்கு வருமுன்னே பறிச்சு, செயற்கை முறையில பழுக்க வைக்கப்பட்டு, பல ஊர்கள்/நாடுகள் பயணம் செய்வதில் சத்து இழப்பும் ஏற்பட்டு, நமக்கு கடைகளில் “ஃப்ரெஷ்” என்று விற்கப்படுகின்றன. ஆனால், ஃப்ரோஸன் வகைகளில் காய்கறிகள்/பழங்கள் அவை இயற்கையாகவே சரியான பருவம் அடையும் வரை காத்திருந்து, பின் பறிக்கப்பட்டு, உடன் ஃப்ரீஸ் செய்யப்படுவதால், அவற்றில்தான் முழுமையான சத்துக்களும் இருக்கின்றன என்று இப்போது சொல்கிறார்கள்!!

சாப்பாட்டை விடுங்க, நடைபயிற்சிக்கு வாங்க. இந்த நடைபயிற்சி செய்யணும்னு நினைக்கிறவங்க, செய்ற முதல் வேலை நல்ல ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்குவதுதான்!! அந்த ஷூ வாங்குறதுக்கு (மட்டுமே) அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்போம். பயிற்சியாளர்கள்/ மருத்துவர்களும் சரியான காலணி அணிந்து நடப்பதுதான் நல்லது. இல்லைன்னா, பாதம், முட்டிகளுக்கு பாதிப்பு வரலாம்னு சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனா அதுக்கும் வருது வில்லங்கம். வெறும் காலோடு நடப்பதுதான் நல்லதாம். உள்ளங்காலின் தோல் அதற்கேற்ற உறுதியோடுதான் உள்ளது என்றும், அப்படி நடந்தால்தான் இரத்த ஓட்டமும், தொடுஉணர்ச்சிப் புள்ளிகளும் சரியாகத் தூண்டப்படும் என்றும்  ஆராய்ச்சிகள் சொல்கின்றன. (இது நம்ம நாட்டுக்கு ஒத்து வராதுன்னாலும், ஸ்போர்ட்ஸ் ஷூக்களில் காசைத் தொலைப்பதைத் தடுக்க உதவும்.)

அட இந்த வீடியோ/கம்ப்யூட்டர் கேம்ஸ் - அது கண்ணுக்கு நல்லதில்லை, மூளையை மந்தப்படுத்தும், நிழலைப் பார்த்து நிஜத்திலும் மாயைகளை எதிர்பார்ப்பார்கள் சிறுவர்கள், என்றெல்லாம் சொல்லி கட்டுப்படுத்துவோம் நம் பிள்ளைகளை. இப்போ அதுக்கும் ஒரு நல்ல பாயிண்ட் கண்டுபிடிச்சு சொன்னான் என் மகன் - இந்த மாதிரியான விளையாட்டுகள் கண்-கை ஒருங்கிணைப்புக்கு (Hand-eye coordination) நல்ல பயிற்சியாம்; அத்தோடு problem solving skills, multi-tasking, quick-thinking இப்படி பல நன்மையான விளைவுகள் இருக்கிறதாம். இதுவும் ஆராய்ச்சியால் கிடைத்த  தகவல்தான்.

அது மட்டுமா? நாமல்லாம் சின்ன வயசுல பயாலஜில படிச்சுருப்போம் - நம்ம உடம்புல இருக்கிற குடல்வால் (appendix), வால் எலும்பு (coccyx), ஞானப் பல் (wisdom teeth) போன்ற சில உறுப்புகள் நமக்கு பயன்தராதவை; பரிணாம விதிகளின்படி (evolution theory) குரங்குலருந்து மனுஷன் வந்தப்போ இந்த உறுப்புகளும் கூடவே வந்துடுச்சு. மனிதனுக்கு இவற்றின் தேவையில்லாததால், இவை “பரிணாமத்தின் எச்சங்கள்” (vestigial organs) என அறியப்பட்டன. ஆனா இப்போ ஆராய்ச்சியாளர்கள், அப்படியெல்லாம் இவை மொத்தமாகப் பயனற்றவை அல்ல; இவற்றுக்கென்று சில வேலைகளும் உள்ளன என்று கண்டுள்ளார்கள். உதாரணமா, குடல்வால் என்பது நல்ல பாக்டீரியாக்களின் இருப்பிடம்; வயிற்றுக்கோளாறுகள் வந்து சரியானபின், குடல்களுக்கு நல்ல பாக்டீரியாக்களை அனுப்புமாம் இது. இதுபோல வால் எலும்பும் முதுகெலும்புக்கு ஒரு குஷன் போல செயல்படுகின்றது என்றும் கண்டுபிடித்துள்ளனர். (பார்க்க: http://news.nationalgeographic.com/news/2009/07/090730-spleen-vestigial-organs_2.html; http://en.wikipedia.org/wiki/Vermiform_appendix)

பரிணாமத்தின் முக்கிய ஆதாரமாகக் கருதப்பட்ட vestigial organs குறித்த கருத்தையே மாற்றியமைப்பதால், இது நிச்சயமாக ஆராய்ச்சி அறிவியலில் ஒரு மைல் கல்லாக அமையும்.

மேலே சொன்ன விஷயங்களை ஆராய்ஞ்சு பாத்ததிலிருந்து என்ன தெரியுதுன்னா, ஆராய்ச்சிகளில் அன்னிய தேதிக்கு மனிதனின் அறிவும், அறிவியலும், தொழில் நுட்பங்களும் எவ்வளவு வளர்ச்சியடைஞ்சிருக்கோ அது பொறுத்துதான் முடிவுகள். ஒரு காலத்துல ஏற்றுக்கொள்ளவே முடியாதுன்னு சொல்லப்பட்ட பலதும் பின்னாட்களில் மேம்பட்ட ஆராய்ச்சியினால் சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது & vice-versa. எந்தவொரு விஷயமும் நம்ம அறிவுக்கு எட்டலை அல்லது ஆராய்ச்சியால் நிரூபிக்கப் படவில்லை என்பதாலேயே தவறாகவோ, பொய்யாகவோ ஆகிவிடாது!!
  
   

Post Comment

அம்மாவும், மனைவியும்




 
  
போன பதிவுல சொன்ன மாதிரி, எங்க வீட்டுல ரொம்பவே சிம்பிளான சாப்பாட்டு முறைதான். அசைவமெல்லாம் வாரம் ரெண்டுமூணு நாள்தான் இருக்கும்; மற்ற நாட்களில் சுத்த சைவம்தான். எங்க ஊர்ல முட்டையும் சைவம்தான் என்று அறிந்து கொள்ளவும். ஏன்னா,  முட்டையெல்லாம்  ‘ஏழைகளின் அசைவம்’!!

ஒரு கீழ்த்தட்டு நடுத்தர கூட்டுக் குடும்பத்தின் இலக்கணப்படி, சாப்பாடு மட்டுமின்றி, அன்றாட நடவடிக்கைகளிலும் கடைஞ்செடுத்த சிக்கனத்தைப் புகுத்தியிருந்தார் என் அம்மா. அத்தோட கலகம் பண்றதுக்கு வீட்டில பையன்களும் கிடையாது. அதனால அம்மாவோட சிக்கன பட்ஜெட்டைக் கேள்வி கேட்பாரே இல்லை!! இப்படியாக, அம்மா சொல்பேச்சு கேட்டு, கொடுத்ததச் சாப்பிட்டும், கிடைச்சத உடுத்தியும், ’அடக்கமான பெண்களா’ வளர்ந்து வந்தோம்.

இதுல என்னன்னா, சமையல்ங்கிறது ஒரு பெரிய கஷ்டமான வேலையாவே படலை எனக்கு. நான் அடுக்களை பக்கம் போறதேயில்லைங்கிறது வேற விஷயம்!! இப்படியா சந்தோஷமா இருக்கும்போது, எனக்குச் சோதனைக்காலமும் வந்துச்சு - கல்யாணம்கிற பேர்ல!!

கல்யாணமாகி மாமியார் வீட்டுக்குப் போன மறுநாளே,  காலையில டீயோட, ரெண்டு ‘ஹாஃப்-பாயில்’ வந்துது ரூமுக்கு!! விடியக்காலையிலயே முட்டையா, அதுவும் ரெண்டான்னு அதிர்ச்சியோட பார்த்தேன். எங்கூர்ல, ரெண்டு முட்டையில நாலு வெங்காயத்தை அரிஞ்சுப் போட்டு ஒரு குடும்பமே ஒருவேளைச் சாப்பாட்டை முடிச்சுப்போம். இங்க ஒருத்தருக்கே ரெண்டு முட்டையான்னுதான் முதல் அதிர்ச்சி. சரி, முதல் நாள்னு ஸ்பெஷலாத் தர்றாங்க போலன்னு எதுவும் சொல்லாம கஷ்டப்பட்டு சாப்பிட்டுகிட்டேன்.

ஆனா அடுத்த நாளும் அது தொடர்ந்துது!! இதுக்கிடையில ரங்க்ஸ் என்ன செய்வார்னா, நான் திக்கிமுக்கி ஒரு முட்டையைச் சாப்பிட்டு முடியுற வரை காத்திருந்து, நைஸா அவருக்குள்ள ரெண்டு ஹாஃப்-பாயில்ல ஒண்ணை என் பிளேட்ல தள்ளிவிட்டுட்டு, “அக்கா, இங்க பாரு, இன்னும் சாப்பிடாம உக்காந்திருக்கா”ன்னு அக்காவை வேற தூண்டிவிட்டுட்டுப் போவார். புதுப்பொண்ணாச்சே, முதல்லயே சுயரூபத்தைக் காட்டவேண்டாம்னு கோவத்தை அடக்கிட்டு இருந்தாலும், இயலாமையில கண்ணுல தண்ணி முட்டும் எனக்கு. ஏன்னா இதச் சாப்பிட்டுட்டு, அடுத்த அரைமணியில ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடணும். வயத்துல இடம் வேணாமா? இப்படியே ஒரு வாரம் போனதும், பொறுக்கமுடியாம மாமியார்கிட்ட காலையில முட்டை வேண்டாம்னு மெதுவாச் சொல்லிட்டேன்.

மூணுவேளையும் விதவிதமான சாப்பாடுதான். சாப்பாடு வகைகளைப் பார்த்தாலே ஆச்சர்யமா இருந்துது. ஏன்னா, எங்க ஊர்ல நான் சொன்னதுபோல, “mass food"தான் நிறைய. ஆனா, இங்கயோ, அரிசிரொட்டி, பாலாடை, ஓட்டப்பம், ஆப்பம், ஜாலரப்பம், பத்திரினு எல்லாமே செய்றதுக்கு ரொம்ப நேரம் எடுக்கிற வகைகள். சரி, கல்யாண வீட்டு ஜோர்ல செய்றாங்கன்னு நினைச்சா, ஒரு மாசம் கழிச்சும் அதேபோல வகைதொகையாச் சாப்பாடு தொடரவும், முதல்முதலா நானும் இப்படியெல்லாம் சமைக்கணுமேன்னு எனக்கு பயம் வந்துது!! எவ்வளவு நாளைக்கு சாப்பிட்டுகிட்டு மட்டுமே இருக்க முடியும்?

அதுவுமில்லாம, ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் ஒரு காம்பினேஷன் வேற வச்சிருந்தாங்க. உதாரணமா, பாலாடைன்னா அதுக்கு தொட்டுக்க மட்டன் ரோஸ்ட்தான் வேணும்.  இல்லைனா, ‘புலி பசிச்சாலும்..’ கதைதான்!! எங்க வீட்லயோ, சப்பாத்திக்குச் சாம்பார்னாலும்கூட கேள்வியே கேட்காம சாப்பிட்டுக்கிடுவோம். அப்புறம், தேங்காய் - கேரளா பார்டர்ல உள்ளவங்களைக் கேக்கணுமா? ஒரு நாளைக்கு குறைஞ்சது ரெண்டு  தேங்காய் செலவாச்சு. எங்கம்மா மகராசியோ, ஒருநாளைக்குள்ள மொத்தச் சமையலையே ரெண்டு கீத்து தேங்காயில முடிச்சுடுவாங்க!! இப்படி எல்லாத்துலயும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம்!!

இப்ப நானும் இதேபோல சமையல் செய்யணுமேங்கிற கவலை என்னைப் பிடிச்சுகிச்சு. நல்லவேளை, நாலு மாசத்துலயே ரங்க்ஸ் அபுதாபி வந்துட்டதால பிழைச்சோம்னு கூடவே ஓடிவந்தேன். தனிக்குடித்தனம்தான்கிறதால ஒரு நிம்மதி. மெதுவா எல்லாம் செஞ்சு படிச்சுக்கலாம்னு ரெஸிப்பிகள் எழுதி வாங்கிட்டு வந்தேன். ரங்ஸை சோதனை எலியா வச்சு என் சமையல் ப்ராக்டிகல்களை ஆரம்பிச்சேன். முத முத, முட்டை மஞ்சக்கரு உடையாம ஒரு ஹாஃப்-பாயில் போட நான் பட்ட பாடு என்னைவிட ரங்க்ஸுக்குத்தான் நல்லாத் தெரியும்!! ஆச்சு, இப்படியே பரிசோதனை செய்ய ஆரம்பிச்சு பல வருஷங்கள் ஓடிப்போச்சு.

இப்ப அவர்கிட்ட என் சமையல் எப்படின்னு கேட்டா, முழுசா திருநெல்வேலியாவும் இல்லாம, நாகர்கோவிலாவும் இல்லாம, நடுவால வள்ளியூர்ல நிக்குதும்பார். சரி, 14 வருஷத்துல வள்ளியூர் வரை வந்தாச்சு. இன்னும் ஒரு ஏழெட்டு வருஷத்துல நாகர்கோவில் வந்துடாது?

இப்ப நல்ல முன்னேற்றம் இருக்கு. என்னன்னு கேக்குறீங்களா? ரங்க்ஸ் சோதனை எலியிலிருந்து சோதனைப் பெருச்சாளியா ஆகிட்டார். அவ்ளோ வெயிட் கூடிடுச்சு, இதுவும் முன்னேற்றம்தானே? ஆக, இப்படியே விட்டா நல்லதுக்கில்லைன்னு டயட்ல இருந்தோம்/இருந்துகிட்டேயிருக்கோம் நாங்க. அப்பாடா, சமையல்லருந்து ஓரளவு விடுதலைன்னு சந்தோஷப்படவும் முடியாது. நார்மல் சமையலைவிட, டயட் சமையல் செய்றது இன்னும் கொடுமை!!

அப்படி டயட்ல இருந்த ஒரு சுபயோகத் தினத்துல, வாப்பாவும், புள்ளையுமா உக்காந்து சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க.  ரங்ஸோட கோட்டா முடிஞ்சும் நகராம உக்காந்துகிட்டிருக்க, நான் அதைக் கண்டுக்காம, மூத்தவனுக்கு மட்டும் பரிமாறிகிட்டிருக்க, “எனக்கு?”ன்னு அப்பாவியாக் கேட்டார். “அதான் மூணு தோசை வச்சேனே?”ன்னு சொல்லிட்டு கருமமே கண்ணாயிருக்க, அவர் புலம்ப ஆரம்பிச்சுட்டார். “ஹூம், எங்கம்மாவெல்லாம் நானே வேண்டாம்னாலும் விடமாட்டாங்க.  கிட்ட உக்காந்து சாப்பிடுப்பான்னு அன்பா பரிமாறுவாங்க. ஏன், இப்ப ஊருக்குப் போனாகூட விடாம, எனக்காக அதைச் செஞ்சு, இதைச் செஞ்சு சாப்பிடுப்பான்னு தருவாங்க. நான் போதும்போதும்னு சொன்னாலும் கேக்காம, இன்னும் சாப்பிடுன்னு வச்சுத் தந்துகிட்டேயிருப்பாங்க. இங்க என்னடான்னா, எண்ணி எண்ணி சாப்பாடு போடுறே நீ? புருஷனுக்கு அளந்து அளந்து சாப்பாடு போடுற அளவு கலி முத்திப் போச்சு!”ன்னு அவர்பாட்டுக்குப் பேசிகிட்டே போக, என் செல்ல மகன் இடைமறிச்சான். “வாப்பா, உங்க உம்மாவும் அப்படித்தானா? என் உம்மாவும் அப்படித்தான்! நான் வேண்டாம்னு சொன்னாலும் விடுறதில்லை; போதும்னாலும் விடாம சாப்பாடு வச்சுகிட்டே இருப்பா. சே, இந்த உம்மாக்களே ரொம்ப மோசம். இல்ல வாப்பா?” என்று சொல்ல, சார் முகத்தப் பாக்கணுமே!!
 
   

Post Comment

இட்லியும், நெய்ச்சோறும்




எங்க ஊரில்,  குடும்பத்துக்கொருவராவது வெளிநாடுகளில் இருப்பதால், செல்வச் செழிப்புடன் இருக்கும் இன்று போலல்லாது, அன்று, அன்றன்றைக்குச் சம்பாதித்து, அன்றைய உணவைத் தேடிக்கொள்ளும் குடும்பங்களே அதிகம்.  ஓரளவு வசதியானதாக சில குடும்பங்கள்  இருந்தாலும், கிராமத்தினருக்கே உரிய சிக்கன குணத்தாலும், “ஊரோடு ஒத்து வாழ்”கின்ற பெரிய மனதினாலும், வசதியான வீடுகளிலும்கூட உணவுகளில் அளவோடு இருந்த காலம்.

உழைத்தால்தான் உணவு என்ற காரணத்தால், பெரும்பாலான வீடுகளில் காலை உணவு என்பது பழைய சோறு அல்லது தெருவில் வரும் இட்லிக்காரம்மாவின் இட்லி அல்லது ஆப்பம்தான். வீட்டில் செய்தால், உழைக்க நேரம் இருக்காதே. அதுபோல, வசதியானவர்கள் எல்லாருமே பெரிய பெரிய கூட்டுக்குடும்பங்கள் என்பதால், சமைக்க அதிக நேரம் பிடிக்கும் இட்லி, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, பூரி போன்றவையெல்லாம் செய்வது மிக மிக அரிது. சேமியா, உப்புமா, கொழுக்கட்டை, புட்டு (குழாப்புட்டு அல்ல) போன்ற “Mass food"தான் எல்லா வீட்டிலும் பெரும்பாலும். செய்வதும் எளிது.

காரணம், ஒவ்வொரு கூட்டுக் குடும்பத்திலும் குறைந்த பட்சம் 10-15 பேராவது இருப்பார்கள். அவ்வளவு பேருக்கும் இட்லியோ தோசையோ வார்த்து முடிவதற்குள் மதியமாகிவிடும். இப்பப் போல, டயட் என்ற பெயரில் 3-4 இட்லி சாப்பிடும் காலமா அது? அத்தோடு விறகு அடுப்பும், கெரசின் ஸ்டவ்வும்தான் உண்டு. அதனால்தான் “mass food"!!  செய்வதும் எளிது; சாப்பிடும் அளவு குறித்தும் கவலையில்லை!!

அதுபோல, பண்டிகை மற்றும் விசேஷ தினங்களில்தான் நெய்ச்சோறு, தேங்காய்ச் சோறு, பிரியாணி போன்ற உணவுகளும். அதுவும்கூட தனித்தனியே வீடுகளில் ஆக்குவது கிடையாது. ஊர்கூடி, ஒவ்வொரு தெருவுக்கும் சேர்த்து ஊர்ப் பெரியவர்கள் பொறுப்பெடுத்து, பணம் வசூலித்து மொத்தமாக ஆக்கி, பங்கிட்டுத் தருவார்கள். ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி பண்டிகை நாட்களில் எல்லோர் வீட்டிலும் ஒரே உணவு. பெரிய பெரிய சட்டிகளில் தெருவில் வைத்து சமைப்பதை வேடிக்கை பார்ப்பதுதான் எங்களுக்குப் பொழுதுபோக்கு. பண்டிகை வந்தால்தான் நெய்ச்சோறு என்பதால் அதற்கும் ஆவலாக காத்திருப்போம்!! எக்ஸ்ட்ரா சைட் டிஷ் மட்டும் அவரவர் வசதிப்படி வீடுகளில் செய்துகொள்வார்கள்.

அந்தக்காலக் கூட்டுக் குடும்பங்களில் இட்லி, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, பூரி போன்றவையெல்லாம் செய்வது வருடத்தில் சில முறைகளாகத்தான் இருக்கும். அதற்கு முந்தைய தினமே அதற்கான தயாரிப்புகளில் இறங்கி,  வீடே பரபரப்பாக இருக்கும்!! வீட்டுத் தலைவியான பாட்டி, தன் மகள்களிடம் ”இட்லி செய்யப் போறோம்; பேரப்பிள்ளைகளை இங்கே அனுப்பிவிடு. மருமகனுக்கும், உன் மாமானாருக்கும் காலைல கொடுத்து விடுறேன்” என்று சேதி சொல்லி விடுவதும் உண்டு.

என் சின்ன வயதில், எங்கள் வீட்டில் இட்லி செய்தால், தாத்தாவுக்குக் கொடுத்து விடுவோம். அதேபோல, அங்கே செய்தால் இங்கே வரும்!! கைக்குழந்தைகள் இருக்கும் சாச்சி, மாமி வீடுகளுக்கும் இட்லி கொடுத்தனுப்பப்படும். இட்லிக்கு மட்டுமல்ல, தோசை, ஆப்பம், இடியாப்பம் போன்ற மற்றவைகளுக்கும் இதே கதைதான்!! அந்த இட்லியைச் சாப்பிடுவதும் தனி சுகம்தான். சாம்பார், பச்சை/ சிவப்புச் சட்னிகளோடு ரசித்து, ருசித்துச் சாப்பிடுவேன்.

கிரைண்டர் வந்தபின், 2-3 மாதத்திற்கு ஒரு நாளாவது இட்லி, தோசை, ஆப்பம் தரிசனங்கள் கிடைத்தது.

பிறகு, சில வீடுகளில் இட்லிக்கு மாவு அரைத்துத் தர ஆரம்பித்தார்கள். இப்ப அடிக்கடி இட்லி செய்ய முடிந்தது. அரிசியும், உளுந்தும் ஊற வைத்துக் கொடுத்துவிட்டால், அரைத்துத் தருவார்கள். அதைக் கொண்டு கொடுக்கும்போது, அம்மாக்கள் சொல்லி அனுப்பும் கண்டிஷன்கள் இருக்கே!! “வேற வீட்டு அரிசி, உளுந்தோட சேத்துப் போடக்கூடாது, தனியாத்தான் போட்டு அரைச்சுத் தரணும்ன்னு சொல்லு; கிரைண்டர் நல்லா கழுவி சுத்தமாருக்கான்னு எட்டிப் பாரு; போன தரம் மாவு ரொம்பக் குறைய இருந்துச்சுன்னு மறக்காமச் சொல்லு” என்று ஆயிரத்தெட்டு கண்டிஷன்கள்!!

பின்னர் வந்த டேபிள்-டாப்/ டில்டிங் கிரைண்டர்கள் மற்றும் ஃப்ரிட்ஜ் தயவாலும், தனிக்குடித்தனங்களாலும் இட்லி தினசரி உணவாகிப் போனது.

இட்லி ஆரோக்கியமான உணவு, செய்வதற்கு எளிதானதும்கூட (!!) என்று பிள்ளைகளுக்குக் காலை உணவாகத் தருகிறேன். அதனால் அவர்களுக்கு இட்லி பிடிப்பதில்லை இப்போது. அவர்களுக்குப் பிடிப்பதில்லை என்பதால், என் அம்மா, மாமியார், தங்கைகள், உறவினர்கள் யாரும் நாங்கள் செல்லும்போது இட்லி செய்வதேயில்லை. பிரியாணிக்காகப் பெருநாளுக்குக் காத்திருப்பதுமில்லை.
 
  
 

Post Comment

டிரங்குப் பொட்டி - 13




 
 
  எங்கே இந்த வாரம் பதிவெழுத முடியாமலே போயிடுமோன்னு கலங்கியிருந்தேன்... நல்லவேளை நேரம் கிடைச்சிடுச்சு, ஜென்ம சாபல்யம்!!


=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

முந்தைய வாரம் பெருநாளை ஒட்டி கிடைச்ச ஒரு வாரம் லீவைக் குறி வச்சு, நானும் ரெண்டு தங்கைகளும் வீடு மாறினோம். மூணு வீடு மாற்றுதல்கள், நடுவிலே பெருநாள் - உறவினர் வருகைன்னு பெண்டு கழண்டு போச்சு. எப்படா ஆஃபீஸ் வந்து ஹப்பாடான்னு ரெஸ்ட் எடுப்போம்னு ஆகிப்போச்சு (இப்ப சிலருக்கு ஒரு நக்கல் புன்னகை அரும்பும் பாருங்க..). என் ரங்ஸோ, ரெண்டு நாள் லீவு போட்டு நிம்மதியா வீட்ல தூங்கி முழிக்கப் போவதாச் சொல்லி...கிட்டேயிருக்கார் (இப்ப சிலருக்கு இனப்பாசம் பொங்கும்; மீசை துடிக்கும்...)

ஆனா, கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா... கதையா, ஆஃபீஸுக்கு வந்தா அங்கயும் அதிசயமா வேலை..வேலை.. வேலை.. பதிவுகூடப் போட முடியாம.. எப்படியோ சமாளிச்சு எழுதிட்டம்ல... வீட்டுக்கு இன்னும் நெட் கனெக்‌ஷன் வரல.. எதிசலாத்தோட (தொலை தொடர்பு நிறுவனம்) தகராறு.. நாம தகராறு பண்ணாத இடமே இல்லை போல.. வாசகர் கடிதம் எழுதட்டான்னு கேட்டா, “பேசாமப் போயிடு. இதென்ன குப்பைத்தொட்டி, தெரு விளக்கு மேட்டர்னு நினைச்சியா? அதெல்லாம் நானே பாத்துக்குவேன்”னு மிரட்டறார். நல்லதுக்கு காலம் இல்லை. முதல்ல இவரைப் பத்தி ஒரு வாசகர் கடிதம் எழுதணும்!!

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+


ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி... தெரிஞ்ச விஷயம்தான்... அரசியல்வாதிகள் இதில இருக்குறது ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ இல்லை. ஆனா பத்திரிகையாளர்களும் இருக்காங்கங்கிறதுதான் அதிர்ச்சியா இருக்கு. அதுவும், நானெல்லாம் மிகவும் மதிப்போட பார்த்த பர்கா தத் கூடன்னு நினைக்கும்போது நெஞ்சு குமுறுது. 

இந்திய நதிநீர் இணைப்புக்கு தேவை ஒரு லட்சம் கோடிதான்னு அப்ப சொன்னாங்க. (அப்ப, ஒரு லட்சம் கோடியான்னு வாயப் பிளந்தேன்; இப்ப ஒரு லட்சம் கோடிதானாம்னு ஆகிடுச்சு!!) அந்த 76-ஐ எடுத்துகிட்டு, ஒண்ணை மட்டும் தேத்திக் கொடுத்திடுங்களேன் ராஸா, புண்ணியமாப் போகும்!!

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

http://www.youtube.com/watch?v=zO5eoEzRlOI&feature=related


இந்த லிங்கைப் பாருங்க. பொதுவா இந்தியர்கள்தான் மேற்கத்திய இசைகளைக் விரும்புவதாக/காப்பியடிப்பதாகச் சொல்வதுண்டு. ஆனா, இங்கே நம்ம “பல்லேலக்கா”வை இவங்க பாடுற அழகைக் கேட்டா... அதுவும் நல்லாத்தானிருக்கு. இது ஒண்ணு மட்டுமில்லை, இதுபோல நிறைய ட்ரூப்கள் பல்லேலக்காவைப் பின்றது யூ-ட்யூப்ல கொட்டிக் கிடக்குது.

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

ஒருவர்  ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிவதற்கு அவரின் உடல் மெலிவே முதல் அடையாளமாக இருக்கும். ஆனால், அப்படியொருவர்  “ஆணழகராக”  (கட்டுமஸ்தான உடல் உடையவராக) ஆக முடியுமா? மணிப்பூரைச் சேர்ந்த பிரதீப் குமார் சிங்கின் போதைப் பழக்கம் 2000-த்தில் ஹெச்.ஐ.வி. தந்தது.  ஆனால், அவர் மன உறுதியோடு போராடியதில், 2007-ம் ஆண்டு, மிஸ்டர். மணிப்பூர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  “ஹெச். ஐ.வி. கொல்லுவதில்லை. சமூகப் புறக்கணிப்பே கொல்கிறது” என்கிறார் இவர். பாடமாக இருக்கட்டும் இவர் வாழ்க்கை.


=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

கோழியா, முட்டையா - எது முதல்லங்கிற மில்லியன் டாலர் கேள்வி ஒரு வழியா முடிவுக்கு வந்துடுச்சு. சமீபத்துல விஞ்ஞானிகள் முட்டையின் ஓடு உருவாகத் தேவையான Ovocledidin-17 என்ற புரோட்டீன், கோழியின் சினைப்பையில் மட்டுமே காணப்படும் என்பதால் கோழிதான் முதலில் வந்திருக்க வேண்டும் என்று உறுதிபடுத்தியுள்ளனர்.

பரிணாமவாதிகளுக்கு உதவுமா இச்செய்தி? :-))))
  
 
 

Post Comment

பாத்துக்கோ.. நானும் ரவுடிதாம்லேய்....!!




 
  
1990களின் ஆரம்பம்.. கல்லூரிக் காலம்.. ஆர்வக்கோளாறு அதிகமாக இருக்கும் காலம். மகளிர் முன்னேற்ற கூட்டங்களிலெல்லாம் பங்கு பெறுமளவு துடிப்பான மாணவி... அப்போவெல்லாம் ஒரு விளம்பரம் வரும், ஏதோ ஒரு வங்கியினுடையது. “மகன்களின் படிப்புக்காகவும், மகள்களின் கல்யாணத்திற்காகவும் சேமியுங்கள்” என்று சொல்லும் விளம்பரம். ”அதென்ன பசங்கதான் படிக்கணுமா, பொண்ணுங்களுக்குச் செலவு பண்ணி படிக்க வைக்கக்கூடாதா!!”ன்னு நம்ம கதாநாயகிக்கு அப்படியே ரத்தம் கொதிக்குது.. உணர்ச்சி பொங்குது.. எதாச்சும் செய்யணும்.. என்ன செய்யலாம்... எடுத்தாள் அந்த வலிமையான ஆயுதத்தை.. அதாங்க பேனாவை.. வடித்தாள் உணர்வைக் காகிதத்தில் கடிதமாக.. அனுப்பினாள் சமுதாயத்தின் தூண்களில் ஒன்றுக்கு... அதாங்க பத்திரிகைக்கு.. அந்தக் கடிதமும் பிரசுரிக்கப்பட்டு,  பரிசாக நூறோ நூற்றைம்பதோ கூடக் கிடைத்தது.  தன் குறிக்கோளில் முழுதாக வெற்றி பெற்றதுபோலவே பெருமிதம் கொண்டாள் அந்தப் பேதை!! இப்படித்தான் துவக்கப் புள்ளி வைக்கப்பட்டது  அவளது எழுத்துக் கோலத்திற்கு!!

ஆரம்பப் புள்ளி வச்சாலும், கோலம்  வரையத் தெரியாததால.. சே.. சே.. அந்தப் பேதைக்கு எழுத்துல ஆர்வம் இருந்தாலும், என்ன எழுத எப்படி எழுதன்னு தெரியாததாலும், அப்புறம் படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தைன்னு பிஸியாகிட்டதாலும் ஒரு ‘ஃபுல்-ஸ்டாப்’ விழுந்து, கிளி அபுதாபிக்கு பறந்துடுச்சு.

ஆனாலும், அவளுக்கு கையில் அரிப்பு இருந்துகிட்டே இருந்துது. அட.. சொறியெல்லாம் இல்லை... இருந்தாலும் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால் வெறுமே (செய்தித்தாட்களை) வாசிக்க மட்டும் செய்துகொண்டு இருந்தாள். அப்படியும் சொல்லலாம், அல்லது, இவ எழுதினா அதைப் பிரசுரிக்குற அளவு ’முற்போக்குப்’ பத்திரிகை எதுவும் இல்லைன்னும் சொல்லலாம். #தன்னடக்கம்.

இப்படியே போய்ட்டிருக்கும்போது, அவ மனசுல இருந்த சமூக ஆர்வலர் முழிச்சுகிட்டா. வீட்டைச் சுற்றி இருக்கும் சில சுற்றுப்புறப் பிரச்னைகள் அவளைத் தூண்டிவிட்டன. நம்மூரா இருந்தா, முனிசிபாலிட்டிக்கு ஃபோன் பண்ணி மிரட்டலாம்; அல்லது அங்குள்ளப் பணியாளர்களைக் கொஞ்சம் ‘கவனிச்சா’ சுற்றுப்புறம் சுத்தமாகும். இங்கே அபுதாபியில அதுக்கெல்லாம் வழியிருக்க மாதிரித் தெரியலன்னாலும், விட்டுட முடியுமா? மறுபடியும் எடுத்தா அதே ஆயுதத்தை.. அதேதான் வாசகர் கடிதம் எழுதினா செய்தித்தாளுக்கு!! பிரசுரமும் ஆச்சு, நடவடிக்கையும் இருந்துது!!

அப்புறமென்ன, ருசி கண்டாச்சு!! ஆ, ஊன்னா உடனே நம்ம கலைஞர் எழுதின மாதிரி கடிதம் எழுத ஆரம்பிச்சாச்சு. இப்படியே போயிட்டிருக்கும்போது, அந்தப் பத்திரிகைக்காரங்க அபுதாபி அரசாங்கத்துகிட்டே‘இப்படி ஒரு அம்மா, புகார் எழுதியே நேரத்தைக் கழிக்குது. இவங்க கடிதத்துக்குன்னே நாங்க தனி பக்கம் ஒதுக்கணும் போலருக்கு. கொஞ்சம் என்னான்னு பாருங்க’ அப்படின்னு முறையிட்டிருப்பாங்க போல, உடனே அவங்களும் உடனே நம்ம மனுநீதிச் சோழன் மணி கட்டி வச்ச மாதிரி,  அபுதாபியில் என்ன குறையிருந்தாலும் உடனே கூப்பிடுங்கன்னு ஒரு ‘இலவசத் தொலைபேசி எண்’ணை அறிவிச்சாங்க.

இலவசம்னா விடுவோமா, உடனே அங்கயும் அடிக்கடி ஃபோன் பண்ண ஆரம்பிச்சாச்சு. ஒரு வாரம் ஃபோன் பண்ணலைன்னாலும், “என்ன நாலு நாளா ஃபோனே பண்ணலை? உடம்பு சரியில்லியா?” அப்படின்னு அவங்களே கேக்கிற அளவுக்கு ஆகிடுச்சு!! இப்படி இருக்கும்போது, அவங்க ரங்ஸ் ஒருநாள் “நீ இப்படி அபுதாபியில இருந்துகிட்டே, அது சரியில்ல, இது சரியில்லன்னு புகார் பண்ணிகிட்டே இரு. ஒருநாளில்லைன்னா ஒரு நா உன்னைத் தூக்கி உள்ள வைக்கப் போறாங்க பாரு!!” அப்படின்னு சொன்னார் (மிரட்டினார்?). அதுலருந்து அந்த மடந்தை கொஞ்சம் சுதாரிச்சுகிட்டு, பிளாக் ஆரம்பிச்சு, அதில மட்டும் குறை சொல்லிகிட்டு இருக்காங்க. (சே.. சே.. அதிகார வர்க்கத்தைக் கண்டு பயமெல்லாம் இல்லை.. இந்த ஊர்ல ‘உள்ள’ போட்டா, எநத ஊர் ஜெயில்னு கண்டுபிடிக்கவே மாசக்கணக்காகிடும். இதான் சான்ஸ்னு ரங்க்ஸே போட்டுக் கொடுத்துட்டு  நடையைக் கட்டிட்டாருன்னா? அவரை நிம்மதியா இருக்க விடலாமாங்கிற நல்லெண்ணம்தான்)

எல்லாரும் கதை எழுதுனாங்க, கவிதை வடிச்சாங்க, புக் போட்டாங்க. நீயென்ன போயும் போயும் வாசகர் கடிதங்கள் எழுதுனதைப் பெரிய பெருமையாச் சொல்லிகிட்டுருக்கே?ன்னு கேக்கிறீங்க, தெரியுது. எனக்கு இந்த கதை, கவிதை, கற்பனைன்னு பொய் சொல்லத் தெரியாது.  அதனாலத்தான், சுற்றுப்புறத்தில் உள்ளவைகளை  ‘உள்ளது உள்ளபடி’ சொல்லவேண்டிய இடத்தில் சொன்னேன். இதனால் என்ன பயன்கள்னா, எங்க ஏரியாவுல இன்னும் ரெண்டு குப்பைத் தொட்டி வைக்க வச்சது, நாலு தெருநாய்களைப் பிடிக்க வைச்சது, எங்க வீட்டுல ரொம்ப நாளா இருந்த சில ரிப்பேர்களை ஓடிவந்து ஒரே நாள்ல சரிசெய்ய வைச்சது இதைத்தான் சொல்லமுடியும். சரி, எழுத்தாளர்கள் மட்டும் என்ன சாதிச்சாங்க சொல்லுங்க? பிரபலமாயிருக்கவங்களுக்கே ஒரு சினிமா டிக்கட் கூட ஃபிரீயா கிடைக்கிறதில்லையாம். ;-)))

அது தவிர பள்ளிகளில் நடக்கும் யூனிஃபார்ம் கொள்ளைகள், டியூஷன் கொள்ளைகள், இப்படி என்னையும், சமூகத்தையும் பாதிக்கிற சில விஷயங்களை என்னால் முடிந்த வழியில் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முனைகிறேன். உடனே இல்லாவிட்டாலும், நிச்சயம் நடவடிக்கைகள் இருக்கும் என்ற நம்பிக்கையில். சமீபத்தில், “And the trees lived ever after happily?" என்று அலுவலகங்களில் நடக்கும் காகித வீணாக்குதல்களைப் பற்றியும் எழுதியிருந்தேன். (பதிவிலும் எழுதிருக்கேன் இதைப் பத்தி). இன்னொரு பத்திரிகையில் என் கருத்து, படத்துடன் இரண்டு முறை வெளிவந்துள்ளது (அதிலொன்று பர்தா குறித்து).

மற்றபடி, நியூஸ் விகடனில் என் கட்டுரை வெளியானதுதான் என் முதல் (இணையப்) பத்திரிகைப் பதிப்பு!! போன ரமதான் பெருநாளின்போது, ரமதான் குறித்த என் பேட்டி ஆஸ்திரேலிய வானொலியில் ஒலிபரப்பானது. நன்றி: தமிழ்ப்பிரியன் & கானா பிரபா. ரமதான் நோன்பைக் குறித்து ஒரு நிகழ்ச்சி வழங்கவேண்டி தமிழ்ப்பிரியனை கானா பிரபா தொடர்பு கொண்டபோது, அவர் என்னை சிபாரிசு செய்தார். இப்படியொரு நல்ல விஷயத்துக்காக தமிழ்ப்பிரியனுக்கு  என் ஞாபகம் வரவைத்த இறைவனுக்கு நன்றி!! என் ஊடகப் பயணம் எனக்குப் பிடித்த முறையில் இஸ்லாம் சம்பந்தப்பட்டதோடு தொடங்கியிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!! பேட்டி இங்கே கேளுங்க:



போன பெருநாளைப் பேசினதை இப்ப ஏன் சொல்றேன்னா, அடுத்த வாரம் ஹஜ் பெருநாள் வருது; அதுக்கு பேட்டி எடுக்கலாம்னு யாராவது நினைச்சிட்டிருக்கலாம்; இப்ப இதைப் பாத்தா பொருத்தமாயிருக்கலாம்.

இப்ப சொல்லுங்க, நானும் ஜீப்ல ஏறிட்டேனா இல்லையா? என்ன ஒண்ணு, இது வேற சாதாரணப் பேட்டியா இருந்தா, உடனே யாராவது எதிர்வினை, செய்வினை செஞ்சு பெரியாளாகி, என்கவுண்டர்ல போடத் தேடுற அளவு பெரிய ரவுடியாகிருக்கலாம்!! சரி, அதுக்கும் காலம் வராமலாப் போயிடும்!!
 
   

Post Comment

திறந்த வீடு




தலைப்பைப் பாத்துட்டு, பின்நவீனத்துவ பாணியில ஒரு தரமான இலக்கியப் படைப்பு அப்படின்னு நினைச்சுகிட்டு ஆசையா வந்தீங்கன்னா, ஸாரி, அது என் தப்பில்லை; அல்லது, ‘திறந்த வீட்டில நாய் நுழைஞ்ச கதையோ’ அப்படின்னும் விஷமப்புன்னகையோட வந்திருந்ந்தீங்கன்னா, அகெய்ன் ஸாரி, நான் வீட்டைத் திறந்து போடறதேயில்லை!! :-))

அப்ப என்ன இழவுன்னு சொல்லித்தான் தொலையேன்னு சிடுசிடுத்தா, அகெய்ன் அகெய்ன் ஸாரி, இது சிரிக்க மறந்தவர்களுக்கான இடம் இல்லை. அட, கண்டுபிடிச்சுட்டீங்களே, இது வழக்கமான மொக்கைப் பதிவேதான்!! தொடர்ந்து ரெண்டு பதிவு ரொம்ப சீரியஸாப் போயிடுச்சு, நம்ம கடை வழக்கத்தை மீறி!! அதான் உடனே நம்ம  டிரேட் மார்க் மொக்கைப் பதிவு.

சரி, சரி, வள்ளுன்னு பாயறதுக்குள்ளே சொல்லிடுறேன் - திறந்த வீடு = ஓபன் ஹவுஸ்!! (தமிழ்ல தலைப்பு வச்சா,  ஏதோ ஃப்ரீயாமே!! நான் தமிழேண்டா!!) பள்ளிக்கூடத்துல படிக்கிற வயசுல பிள்ளைங்க இருக்க வீடுன்னா நான் என்ன சொல்றேன்னு தெரிஞ்சிருக்கும், யெஸ், பள்ளிக்கூடத்துல நம்ம புள்ளைகளோட அருமை பெருமையெல்லாம் டீச்சர்கள் நம்மகிட்ட விலாவாரியா விளக்கிச் சொல்ற நாள்!! :-(

teachers.saschina.org

என் பெரியவன், சின்னவனா இருக்கும்போதுதான், நானும் இந்த ஓபன் ஹவுஸ்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டேன். அதுவரை நம்ம படிக்கிற காலத்துல ஏது ஓபன்/க்ளோஸ்ட் ஹவுஸெல்லாம்? பள்ளிக்கூடத்துல டீச்சர், “நாளைக்கு வரும்போது அப்பாவைக் கூட்டுட்டு வரணும்” அப்படின்னு சொன்னாலே வயித்தக் கலக்கும். இப்ப, எல்லா பள்ளிகளிலும் அதுக்குன்னு ஒரு நாள்  ஒதுக்கி, மாணவர்களின்  வளர்ச்சியை, முன்னேற்றத்தைப் பற்றிக் கலந்துரையாடவும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து திட்டமிடவும் ஏற்படுத்தப்பட்ட நல்ல திட்டம் இது.

இம்முறை வந்த பிறகு, பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்குமிடையே நல்ல ஒரு புரிதல்(!!) வந்துள்ளது என்றே சொல்லலாம். கற்பிப்பது ஒரு பக்கக் கடமையாக மட்டும் இல்லாமல், இரு தரப்பினரும் அதில் பங்கெடுக்கும் முறை ஏற்பட்டுள்ளது.

பிள்ளைங்க படிப்புல பெருசா மார்க் எடுக்கலைன்னாலும், ரொம்ப கம்ப்ளெயிண்ட் கேக்காம வர்ற பெரும்பாலான பெற்றோர்களுக்கு இது ரொம்பப் பிடிச்ச நாள்! ஆனா, பள்ளியில ஓபன் ஹவுஸுக்குத் தேதி குறிச்சிட்டாலே, எனக்கு கதிகலங்க ஆரம்பிச்சிடும். காரணம் என்  அனுபவங்கள்!!

அன்னிக்கு பள்ளியில கல்யாண மண்டபம் போல கூட்டம் இருக்கும். நல்லா வேடிக்கைப் பாத்து, டென்ஷனை ரிலாக்ஸ் பண்ணிக்கலாம். சில பெற்றோர்கள் நல்லா அழகா ஏதோ கல்யாண வீட்டுக்குப் போறதுபோல ஜகஜ்ஜோதியா வந்திருப்பாங்க. தனியா வரும் அப்பாக்கள் டீச்சர் முன்னாடி பவ்யமா உக்காந்திருக்கதைப் பாத்தாலே, எனக்கு டென்ஷன்லயும் சிரிப்பு வரும். சில பெற்றோர் டீச்சர்கிட்ட ரொம்ப சீரியஸா மணிக்கணக்குல பேசுவாங்க. பாத்தாப் பொறாமையா இருக்கும். ஏன்னா, டீச்சர்ஸ்கிட்ட நான் பேசுறதைவிட, டீச்சர்கள் என்னிடம் “பேசுறதுக்குத்”தான் நிறைய இருக்கும். நான் முதல்ல தர்ற மார்க் ஷீட்ல கையெழுத்துப் போட்டுட்டு, “ஓகே, பை டீச்சர்னு” சட்னு எழுஞ்சிடுவேன். இல்லை, மாட்டினேன் அன்னிக்கு!! என் பிள்ளைங்க அப்படி!!

“நல்லாதான் படிக்கிறான்; ஆனா பாருங்க, கொஞ்சம் பேச்சும், சேட்டையும்தான் ஜாஸ்தி..” இப்படித்தான் எல்லா டீச்சரும் ஆரம்பிப்பாங்க. அதுக்கப்புறம் ஒரு பதினைஞ்சு நிமிஷம் நான்-ஸ்டாப்தான்!! இதுக்குப் பயந்தே கூட்டம் அதிகமா இருக்க சமயத்துல் போவேன். ஹூம்!!

ஒரு சாம்பிள் சொல்றேன் கேளுங்க: பெரியவனை எல்.கே.ஜி. படிக்கும்போது, வேற ஸ்கூல்ல சேத்தோம் (வேலை மாறுதல் காரணமாத்தான், வேற ஒண்ணும் விவகாரமில்ல, நல்லவேளை!) அவன் ஸ்கூல் போன முத நாள், நானும் சின்னப் பையன் என்னச் செய்றானோன்னு கவலைப்பட்டுகிட்டே டீச்சருக்கு ஃபோன் பண்ணேன். நான் இன்னாருன்னு சொன்னதுதான் உண்டு, படபடன்னு பொரிஞ்சாங்க பாருங்க - “எங்கிளாஸ் பசங்க நேத்தி வரைக்கும் நல்ல பசங்களாத்தான் இருந்தாங்க. இன்னிக்கு உங்கப் பையன் வந்ததுதான் வந்தான், கிளாஸே கலவரமாகிப் போய் கிடக்குது”ன்னு புலம்பினாங்க. விட்டா அழுதுடுவாங்க போலருந்துது.

அதுலேருந்து அது ஒரு தொடர்கதையா ஆகிப்போச்சு. அதுக்கப்புறம் ஒரு ஒண்ணுரெண்டு வருஷம் கழிச்சு, எங்க நண்பர் ஒருத்தர் அதே பள்ளியில படிக்கிற தன் மகனைப் பாக்கப் போனவர், எங்கிட்ட திகிலடிச்சுப் போன கண்களோட ஒரு விஷயம் சொன்னார். அதாவது, இவர் போனப்போ, என் பையனை அவங்க டீச்சர் கையில  ஸ்கேலோட துரத்திகிட்டிருந்தாங்களாம்!! அவன் டெஸ்கைச் சுத்திச்சுத்தி வர, அவங்க “ஓடாதே, நில்லு!!”ன்னு கெஞ்சிகிட்டே போறாங்களாம். நான் என்ன சொல்ல? வழிஞ்சுவச்சேன்!!

அதுக்கடுத்த ஓப்பன் ஹவுஸ் நடுங்கிகிட்டே போனா, டீச்சர் அவனைப் பாத்து  ”சொல்லிடவா?” அப்படிங்கிற மாதிரி நக்கலாச் சிரிக்கிறாங்க; அவனும், கீழே குனிஞ்சுகிட்டே கள்ளச்சிரி சிரிச்சுகிட்டு, கண்ணைமட்டும் உசத்தி டீச்சரைப் பாக்கறான். ”டேய் என்னடா நடக்குது இங்கே?”ன்னு நான் கத்தாத குறைதான்!! மெதுவா டீச்சர்கிட்ட என்னாங்கன்னேன். அவங்க அதே சிரிப்போட “ஹி இஸ் ஃபர்ஸ்ட் இன் எவ்ரிதிங்க்” அப்படின்னு பொடி வச்சுப் பேசினாங்க. நானும் புரியாத மாதிரியே, “ஹி..ஹி.. தேங்க் யூ டீச்சர்னு” நீட்டின இடத்துல கையெழுத்துப் போட்டுட்டு ஓடிவந்தேன்.

இப்படியே ஓப்பன் ஹவுஸுகளெல்லாம் நம்ம வாரிசுகளோட பெருமை பறைசாற்ற ஆரம்பிச்சதும், ரங்க்ஸ் அந்த மீட்டிங் இருக்கு, இந்த இன்ஸ்பெக்‌ஷன் இருக்குன்னு மெதுவா கழண்டுக்க ஆரம்பிச்சார். ஒண்ணுரெண்டு ஓப்பன் ஹவுஸுக்குத் தனியாப் போயிட்டு வந்த நான், அப்புறம் ரங்க்ஸ் வந்தாத்தான் போவேன்னு சொல்லிட்டேன். பின்னே, ஈன்ற பொழுதின் பெரிதுவப்பது தாயா மட்டும் இருந்தாப் போதுமா, தந்தைக்கும் அந்தச் “சந்தோஷம்” வேணும்ல? நாங்கல்லாம் சம உரிமை கொடுக்கிறவங்களாக்கும்!! ;-)))

சின்னவன் வந்தப்புறம், சரி இவனாவது நம்ம பேரைக் காப்பாத்துவான்னு நினைச்சேன். யூ.கே.ஜி.ல  டீச்சர் எழுதிப் போடுறதை பாதி எழுதாம வந்திருந்தான் ஒரு நாள். ஏண்டான்னா, ”நுஸ்ரத் கூடப் பேசிகிட்டிருந்தேன். அதான் எழுதலை. ஆனா, வீட்ல வச்சு காப்பி பண்றதுக்கு ஸாராவோட நோட்டை வாங்கிட்டு வந்திருக்கேம்மா”ன்னான் விவரமா!! சரிதான், இவன் அண்ணனையே மிஞ்சிடுவான்னு புரிஞ்சுபோச்சு!! அதுலயும் ஏண்டா கேர்ள்ஸ்கிட்ட நோட்டு வாங்கிட்டு வந்திருக்க, பாய்ஸ் யாரும் உனக்கு ஃபிரண்ட் இல்லையான்னா, “போம்மா; பாய்ஸ் யாருமே நோட் கம்ப்ளீட் பண்ண மாட்டாங்க. கேர்ள்ஸ்தான் நீட்டா எழுதுவாங்க”ங்கிறான்!! அப்பவே!!

நினைச்ச மாதிரியே, இவனுக்கும் ஓப்பன் ஹவுஸ்கள்ல அதே ரிஸல்ட்தான் “Too much talkative and too much active!! but good in studies, so ok!!" ஏதோ இம்மட்டுக்கும் மானத்தைக் காப்பாத்தினானேன்னு சந்தோஷப்பட்டுக்குவேன், வேறென்ன செய்ய?

ஒரு ரெண்டு வாரம் முன்னாடி சொன்னான், “ம்மா, எங்க ஹிந்தி டீச்சர் நான் மட்டும்தான் கிளாஸ்ல கேள்வி கேக்கிறேன்னு சொல்லி, எல்லாரையும் எனக்கு கிளாப் பண்ணச் சொன்னாங்க”ன்னான். அகமகிழ்ந்து போனேன். நேத்து ஓப்பன் ஹவுஸுக்குப் போனப்ப, கிளாஸ் டீச்சர் சொன்ன கம்ப்ளெயிண்ட்ல நானும் ஆதங்கத்தோட, “என்ன டீச்சர் இப்படிச் சொல்றீங்க? ஹிந்தி டீச்சர் இப்படியெல்லாம் பாராட்டியிருக்காங்க இவனை”ன்னு எடுத்துச் சொன்னேன். அவ்வளவுதான், “என்கிட்டயும் அவன் தினமும், ஹிந்தி டீச்சர் இப்படிச் சொன்னாங்களே, நீங்க ஏன் கிளாப் பண்ணச் சொல்ல மாட்டேன்கிறீங்கன்னு படுத்தறான். ஹிந்தி டீச்சர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால, அவங்க கிளாஸ்ல வேற எதுவும் பேச முடியாது. என் கிளாஸ்லதான் எல்லா விளையாட்டும் நடக்கும்”னு அவங்க புலம்புறாங்க. ஆறுதல் சொல்லிட்டு வந்தேன்!!

என் பிள்ளைகளின் குறும்புகளை ரசித்து, அதே சமயம் தேவையான அளவு கண்டிப்போடும் இருந்து, கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதிலளிக்கும் ஆசிரியர்களே இதுவரை பெரும்பாலும் அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி, பிள்ளைகளுக்கும்.

சரி, இப்ப என்னோட முந்தைய சில பதிவுகள்ல, ”என் பிள்ளைங்க அப்பாவைப் போலவே”னு பாராட்டினவங்கல்லாம் எங்கே? வந்து வரிசையா அதை மறுபடியும் சொல்லிட்டுப் போங்க பார்ப்போம்!!

 
  

Post Comment

  XX & XY: யாருக்காக..




அலுவலகம் சென்று வர அன்று முதல் ஏற்பாடு செய்திருந்த புது கார் லிஃப்ட்டில், மாலை,  எனக்குமுன்னே இருந்த பெண் பதட்டமாக ஃபோன் பேசிக்கொண்டிருந்தாள். பிறகு பேசியதில், யூகித்தது போலவே, டெலிவரி முடிந்து அலுவலகம் சேர்ந்து ஒரு வாரம்தான் ஆகிறது. அந்தப் பெண் எனது ‘பிரசவத்திற்குப் பின் வேலை’ அனுபவத்தைக் கேட்டாள். நான் இரண்டு பிரசவத்தின் போதும் வேலையை ரிஸைன் செய்துவிட்டிருந்ததைச் சொன்னதும்  “யூ ஆர் ஸோ லக்கி” என்றாள்.  குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு ஃபிலிப்பைன்ஸிலிருந்து வந்ததும் ஐரின் சொன்ன அதே வார்த்தைகள்.

எனக்கும் ஷைனி, வாசுகி ஞாபகங்கள் வந்தன.  ஷைனி, ஹார்மோன் பிரச்னைகளால், முதல் குழந்தைக்கு எடுத்ததுபோலவே, ஒரு வருடம் ட்ரீட்மெண்ட் எடுத்தபின் பிறந்த லட்டுபோன்ற பெண்குழந்தையை, பிரசவம் பார்க்க அபுதாபி வந்த அம்மாவோடேயே இந்தியாவுக்கு அனுப்பி விடப்போகிறேன் என்று சொன்னதும், என் கையிலிருந்த குழந்தையைப் பார்க்கப் பரிதாபமாகத் தோன்றியது. இதற்கு வாசுகி எவ்வளவோ பரவாயில்லையோ எனத் தோன்றியது. “வேலை பாத்துகிட்டு ஒரு குழந்தையைப் பாத்துக்கிறதே கஷ்டமாயிருந்ததால ஒண்ணே போதும்னு நினைச்சேன். ஆனா, இப்ப என்னைவிட என் பிள்ளை ரொம்ப வருத்தப்படறா. இனி என்ன செய்ய முடியும்?” - சொன்னது வாசுகி.

பெண்ணீயம், பெண்ணுரிமை, சொந்தக்காலில் நிற்பது என்று நிறையப்  பேசிக்கொண்டிருந்தாலும்,  ’பிரசவத்திற்குப் பின் வேலை’ என்பது ஒரு குழப்பத்தையே எனக்கும் தந்திருந்தது. ஆனாலும், தன்னிச்சையாக, முழுமனதாகத்தான் வேலையை விடுவது என்று முடிவெடுத்தேன். முதல் காரணம் தாய்ப்பால். இரண்டாவது, நிறுவனங்களில் மெட்டர்னிடி லீவு என்பது குறைந்த பட்சம் ஒரு ஆண்டு காலமாவது இல்லாத பட்சத்தில், கண்ணீர் நிறைந்த கண்களுடன் என்னால் வேலை பார்க்க முடியாது என்பதாலும்.

குழந்தைகள் வளர்ப்பில் தாய், தந்தை இருவருக்குமே பங்குண்டு. ஆனால், குழந்தை பெறும் உடலமைப்பு பெண்ணுக்கு மட்டுமே அமைந்திருப்பதால் (XX & XY  :-))) )  பச்சிளங்குழந்தையைப் பேணுவதில் தாய்க்கே பெரும்பங்கு உண்டு என்பது என் நம்பிக்கை.  தற்காலத்திய வேலைகளின் பளுவால், ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் என்று பெரிய பெரிய விஷயங்களெல்லாம் சிறுவயதிலேயே வரும்போது, ஒருவரேனும் ரிலாக்ஸ்டாகக் குழந்தையோடு இருப்பது அவசியம். அது ஏன் தாய் என்று கேட்டால், முதலில் சொன்னதுபோல, தாய்ப்பால். இன்னும் அழுத்திக் கேட்டால், Why XX & XY? Why not only XX or XY? என்பதுதான் என் பதில்க்கேள்வியாக இருக்கும்.

இருவருக்குமே கடமை என்று சொல்லிகொண்டு, இருவருமே ‘கேரியரைக்’  கெடுத்துக் கொள்வதற்குப் பதில், ஒருவரின் கேரியர் கிராஃபிலாவது கீறல்கள் இல்லாமல் இருக்கட்டுமே என்றுதான் நான் நினைப்பேன்.  குடும்பத்திற்காகத்தானே சம்பாதிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே, குடும்பத்தின் நிம்மதி இழக்கவும் காரணமாகிவிடக்கூடாது.

பணம் என்பது, குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற, பாதுகாக்க   அவசியமான ஒரு பொருள். அவ்வளவே. ஆனால், அதைச் சம்பாதிப்பதுதான் ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கு, சுதந்திரத்திற்கு அடையாளம் என்பதில் எனக்குச் சிறிதும் ஒப்புதலில்லை.

குடுமபத்திற்காகப் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம் குடும்பம் என்ற அமைப்பைப் பாதுகாப்பதிலும் உள்ளது. ஒருவருக்கு பணம் சம்பாதிக்கும் பொறுப்பு என்றால், இன்னொருவருக்கு குடும்பத்தைப் பேணும் பொறுப்பு - இரண்டுமே ஒன்றுக்கொன்று பளுவில் குறைவில்லாத வேலைகள்தாம்.

எனில், என் உரிமைகளை எப்படி விட்டுக் கொடுப்பது, என் சுயமரியாதை என்னாவது என்றெல்லாம் பெண் கேட்கலாம்; ஆனால், குழந்தையின் உரிமைகளை அதற்குக் கேட்கத் தெரியாதே? மண்ணில் பிறந்த எந்த உயிருக்கும் உரிமைகள் உண்டு - குழந்தையே ஆனாலும்!! பூமிக்குப் பிறந்து வருகையில் அது தன் தாயை மட்டுமே நம்பி வருகிறது. குரலெழுப்ப முடியாத எளியவர் உரிமைகளை வலியவர் மறுப்பது  தவறுதானே? :-))

சில காலத்திற்குப் பிறகு, பெற்றோரின் ஃபிஸிக்கல் அருகாமை அதிகம் தேவைப்படாத பள்ளிப் பருவத்தில், குடும்பச் சூழ்நிலைகள்  - கணவர்/குழந்தைகள் ஒத்துழைப்பு/ஆதரவு, பிள்ளைகளின் மனநிலை, பொறுப்புகள், உடல்நிலை etc. - பொறுத்து மீண்டும் வேலைக்குத் திரும்புவது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

இன்னுமொரு விஷயம் அவதானித்தீர்களென்றால், பெண்கள் வேலைக்குச் செல்லும் பெரும்பாலான வீடுகளில், அவளது வருமானம் ஒரு உபரியாகவே  கருதப்பட்டு, ஆடம்பரங்களுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றும் சொல்லலாம்.  என்னிடம் இங்கு அபுதாபியில் முன்பு வீட்டு வேலை செய்த பெண்கள் மூவரும், இங்கே கஷ்டப்பட்டுச் சம்பாதித்து அனுப்புவதை, ஊரில் அவர்களது கணவர்/ (திருமண வயது) மகன்கள்/உடன்பிறப்புகளே அனுபவிக்கின்றனர் - திருநெல்வேலியில் வீட்டுவேலை செய்தவர்கள் சொன்னது  போலவே.

டாஸ்மாக்கில் நிற்பவர்களில் பாதிப்பேர்களின் வீட்டிலாவது தாய்/மனைவி/சகோதரி/மகள் என்று எந்தப் பெண்ணின் சம்பாத்தியமாவது இருக்கும். அந்தச் சம்பாத்தியம் குடும்பத்திற்குச் சோறு போட,  இவன் சம்பளம் டாஸ்மாக்கில் அரசுக்கு வருமானம் தருகிறது!!  வீட்டு வேலை செய்யும் முனியம்மாக்கள், தெருவில் வரும் தயிர்ப்பாட்டி, கருக்கலிலேயே கம்பெனி பஸ் ஏறி எக்ஸ்போர்ட் கம்பெனிகளுக்குச் செல்லும் இளம் பெண்களிடம் கேட்டால், “என் புருசன்/மவன்/அப்பா மட்டும் ஒழுங்காச் சம்பாரிச்சா நான் ஏன் இப்படிக் கஷ்டப்படப்போகிறேன்?” என்பதுதானே பதிலாக இருக்கும்? பெண்கள் வேலை பார்த்தே ஆக வேண்டும் என்ற நமது உரிமைக்குரல் அவர்களது உழைப்பு உறிஞ்சப்படுகிற இங்கே பலவீனமாகத்தானே ஆகிப்போகிறது? ஐ.டி. பெண்களைப் பெருமிதத்துடன் பார்க்கும் நாம், இவர்களை மட்டும் ஏன் பரிதாபமாகப் பார்க்கிறோம்?

அடித்தட்டு மக்களிடம் மட்டுமின்றி, நடுத்தரக் குடும்பங்களிலும் இது சர்வசாதாரணமாகவே இருக்கிறது. என்னுடன் முன்பு பணிபுரிந்த சிந்து, காலை ஆறரைக்கு வீட்டிலிருந்து கிளம்பினால், மாலை ஏழரைக்குத்தான் திரும்புவாள். கதவைத் திறந்து வீட்டில் நுழையும்போதே இறைந்து கிடக்கும் துணிமணிகளிலிருந்து ஆரம்பிக்கும் வேலை, நடுநிசியாகும் முடிவதற்கு. அவளின் சம்பளம் முழுவதும், ஆன்லைன் ஷேர் டிரேடிங்குக்கும், ஊரில் சொத்துபத்து வாங்குவதற்கும் பயன்படுகிறது. ஆனால், இங்கு ஒரு வேலையாள் வைத்துக் கொள்ள அனுமதியில்லை அவளுக்கு!! ரிஸஷனில் வேலைபோய்விடுமோ என்று எல்லாரும் பயப்பட, தனக்குப் போய்த்தொலையட்டுமே என்று நினைத்தவள் அவள். அப்படியாவது ஒரு வாரம் ரெஸ்ட் கிடைக்குமே என்று. (ஒரு வாரத்துக்குள் வேறு வேலையில் கணவர் சேர்த்துடுவாராம்!!). இன்னும் நிறைய உதா’ரணங்கள்’ உண்டு!!

அத்தோடு, சமீப காலங்களாக  டீனேஜர்கள்/இளைஞர்களிடையே அதிகரித்துள்ள போதைப் பொருள், குடி போன்ற தவறான பழக்கங்கள், அதிகமான விவாகரத்துகள் ஆகியவற்றிற்கும் பெண்கள் வேலை செய்வதுதான் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இருங்கள் - வேலைக்குப் போகும் பெண்கள் திமிர் பிடித்தவர்கள் என்று கூவும் கூட்டத்தைச் சேர்ந்தவளல்ல நான். வீட்டில் இருவரும் வேலைக்குப் போவதால், இக்காலத்திய, அதிக ப்ரொடக்டிவிட்டியை டிமாண்ட் செய்யும், நீண்ட நேர, ஸ்ட்ரெஸ் மிகுந்த வேலைகள் கேட்கும் பலிகள் இவை எனலாம். இதையெல்லாம் சமாளிக்கக்கூடிய விதத்தில்,  ஒருவரின் வேலை கடினமாக இருந்தால், ஒருவரின் வேலை குடும்பத்துக்கு அதிக நேரம் செலவழிக்கும்படி இருத்தல் அவசியம்.

இவ்வாறு நினைப்பவர்கள் தேர்ந்தெடுக்கும் இன்னொரு பாதை: சுய தொழில்! அதான், வீட்டிலேயே அப்பளம், ஊறுகாய் போடுவது முதல் காளான் வளர்ப்பு, கேட்டரிங் சர்வீஸ் என்று விருப்பத்திற்கேற்றவாறு எல்லையில்லாத தொழில் வாய்ப்புகள். எனக்கு இவர்களிடம் மிகுந்த வியப்பும், பொறாமையும்!! அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்களைப் போலலல்லாது, எல்லா துறையின் நுணுக்கங்களிலும் தேர்ந்தவர்களாக இருப்பர். மேலும், எந்தவிதமான புற அழுத்தங்களாலும் பாதிப்பில்லாமல் முழுச் சுதந்திரத்தோடு,  தன் வேலையை அர்ப்பணிப்போடும் செய்ய முடிகிற அதே சமயம்,  குடும்பத்தையும் மிஸ் பண்ண மாட்டாங்க.

வேலை பாக்கிறதோ, பாக்காம இருக்கிறதோ நிச்சயமா பெண்ணின் விருப்பத்தில் அமையணும். ஆனா, குடும்பச் சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவெடுக்கும் புத்திசாலித்தனமும் பெண்ணுக்கு வேணும். செருப்புக்கேற்றபடி காலா, காலுக்கேற்றபடி செருப்பா என்பது நம் கையில்..  இல்லை..  காலில்!!
 
  
  
 

Post Comment

ரிடையர்மெண்ட் ப்ளான் ஸ்கீம்




மூணு வருஷம் முன்னாடி நான் வேலை பாத்த கம்பெனியில், என்கூட  தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ‘நேலியஸ்’ என்ற இளைஞன் வேலைபாத்தான். அவனுக்கு அந்த வேலையில இஷ்டமேயில்லை (நாங்கல்லாம் மட்டும் என்ன பிடிச்சாச் செய்துகிட்டிருந்தோம்? ;-) ) சேந்தாப்ல 15 நிமிஷம் அவன் சீட்டில் இருந்தான்னா, அவன் யூ-ட்யூப்ல காமெடி சீன் அல்லது ஃபுட்பால் பாத்துகிட்டிருக்கான்னு அர்த்தம்.

அவனுக்கு பைலட்-ஆகணும்னு ஆசை;  நான்கூடக் கிண்டலாச் சொல்வேன், நீ பைலட் ஆனதும் எந்த ஏர்லைன்ஸ்ல வேலைபாக்கிறேன்னு எனக்குச் சொல்லிடு; அதுல நான் ஏறவே மாட்டேன். ஃப்ளைட் ஒட்டும்போது, இப்படி எழுஞ்சு எழுஞ்சு போய்ட்டியானா என்ன செய்றது?ன்னு. அதுக்கவன், “தட்ஸ் மை ட்ரீம் ஜாப். But this is a job which I dont want to do even in my dreams!!”னு சொல்வான்.

ஆனா, மேற்கத்திய கலாச்சாரப்படி, படிப்புக்கான செலவை அவனே பாத்துக்க வேண்டிய சூழல். அதனால், அவனுக்குப் பிடிக்காத வேலையைச் செஞ்சுகிட்டிருந்தான். இது அவனோட கேரியர்ல N-நம்பராவது வேலை!! மனசுக்குப் பிடிச்ச வேலைன்னாதானே நிக்க முடியும்? அவனுக்குப் பிடிச்ச பைலட் வேலையோ எட்டாக்கனியாயிருக்கு!! அப்பா, அம்மா விவாகரத்து ஆகி, அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் இருப்பதால, இவனுக்குச் செலவு பண்ணக் கட்டுப்படியாகாதாம்; பெரியமனசு பண்ணி தங்கையின் படிப்புக்கு உதவுகிறார். அப்பா தரும் ஜீவனாம்சத்தில் வாழும் அம்மாவாலும் முடியாது.  (தென்னாப்பிரிக்காவில் எஜுகேஷனல் லோன் கிடையாதான்னு கேட்க மறந்துபோச்சு!)

ஒரு கட்டத்துல, அலுவலக உள்ளரசியலில் மாட்டி, (வழக்கம்போல்) வேலையை ரிஸைன் செய்தான். அடுத்து, தான் தென்னாப்பிரிக்கா சென்று, படித்து பைலட் ஆகப்போவதாகவும், படிப்பதற்கு தன் கேர்ள் ஃப்ரண்ட் ஸ்பான்ஸர் செய்யப்போவதாகவும், வேலை கிடைத்த பின் அவளின் கடனை அடைக்கப் போவதாகவும் சொன்னான்.

அதே சமயத்தில், எங்களின் காண்ட்ராக்டரின் பிராஜக்ட் மேனேஜர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த உத்தம் தாஸ் என்பவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது மகன் பைலட் ஆவதற்கு படித்துக்கொண்டிருப்பதாகவும், மகன் அடுத்த செமெஸ்டரிலிருந்து ஃபீஸ் கூடப்போவதாக வருத்தப்பட்டதாகவும், தான் மகனை அதுகுறித்து கவலைப்படவேண்டாம், படிப்பை மட்டும் பார் என்று சொன்னதாகவும் சொன்னார். நான் நேலியஸை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன். இருவரும் பேசியபோது, அவர் கேட்டார், “உன் தந்தை ரிடயர்மெட் ப்ளானில் பணம் போட்டுள்ளாரா?” என்று கேட்க, அவன் ஆமென, அவர், “உன் தந்தை இன்ஷ்யுரன்ஸை நம்புகிறார்; நானோ எனது மகனின் பாசத்தில் இன்வெஸ்ட் செய்திருக்கிறேன்.”

சிலகாலம்முன் (இப்போதும் இருக்கலாம்), ஒரு விளம்பரம் வரும். பேரன் தாத்தாவிடம் பிறந்தநாள் பரிசாக, சைக்கிள் வாங்கிக் கேட்க, அவரது தர்மசங்கர்டத்தைத் தவிர்க்க, மகன் பணம் தரமுன்வர, பேரனோ ஏற்கனவே தாத்தா வாங்கித் தந்த சைக்கிளில் சுற்றிவருவான். ரிடையர்மெண்ட்  பிளான் ஸ்கீம் விளம்பரம்!!

இந்தியக் கலாச்சாரப்படி, வயதான காலத்தில் பெற்றோரைப் பாதுகாப்பதென்பது (மூத்த) மகனின் கடமை. ”My time", "Time-out", தனித்தனி செல்ஃபோன்கள்,  என்று இக்காலம் போல எதுவும் இல்லாமல், குடும்பத்துக்காகவே மட்டும் உழைத்த பெற்றோர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியது பிள்ளைகளின் கடமை என்பதைவிட, பிள்ளைகள் அதை வாழ்வின் ஒரு பகுதியாகவே மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார்கள். (செயல்படுத்தமுடியவில்லையென்றாலும்கூட). எனினும், இந்திய சமுதாயத்தில் இது மகனுக்கு மட்டுமே உரித்தான கடமையாகப் பார்க்கப்படுகிறது. சகோதரர்கள் உடைய பெண்கள், தம்மோடு பெற்றோரை வைத்துக் கொள்வதென்பது, மகன் வெளிநாட்டில் இருக்கிறார்; அல்லது வேறு பிரச்னைகள் இருந்தால் மட்டுமே. மகள்கள் மட்டுமே உள்ள பெற்றோரெனில், மகள்கள் இதைச் செய்யத் தயங்குவதில்லை. எனினும், இவ்வாறு மகள்களோடு வசிக்க நேரும் பெற்றோர்கள், அதை ஒரு தர்மசங்கடமாகவே உணர்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து, கீழக்கரை, காயல்பட்டினம், கேரளாவின் கண்ணூர் போன்ற ஊர்களில், திருமணத்திற்குப்பின், ஆண்கள், மனைவியின் வீட்டில் வந்து வசிக்க வேண்டும். மனைவியின் பெற்றோரும் அவருடன்தான் கடைசிவரை இருப்பார்கள்.

காலங்கள் மாறி வருகிறது. மனைவியின் பெற்றோரை, ‘மாப்பிள்ளைக் கெத்து’ இல்லாமல், தம் பெற்றோர்போல நடத்த வேண்டும் என இந்திய ஆண்கள் உணர்ந்து வருகின்றனர். இந்தத் தலைமுறை பிள்ளைகளிடம் இப்படியொரு நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிற அதே சமயத்தில், சென்ற தலைமுறை பெற்றோர்கள் இன்னமும், மகன்களோடு இருப்பதே பாரம்பரியம் என்று எண்ணிக்கொண்டிருக்க, இத்தலைமுறை பெற்றோர்களிடத்திலும் ஒரு மாற்றம் ஏற்பட்டு வருகிறது - அது ரிடையர்மெண்ட் ப்ளான் ஸ்கீமில் மறக்காமல் இன்வெஸ்ட் செய்வது!! மகனோ, மகளோ - யாரோடு வசித்தாலும் ஒன்றுதான்  என்பதாக ஏற்பட்டிருக்க வேண்டிய மாற்றம், மகனோ, மகளோ நம் வயசுகாலத்தில் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதாக மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.  லைஃப் இன்ஷ்யூரன்ஸ், மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ்க்கு இணையாக ரிடையர்மெண்ட் வாழ்க்கைக்கும் பிறரைத் தொந்தரவு செய்யாமல் வாழ இளமையிலேயே திட்டமிட்டுக் கொள்கின்றனர்.

விண்ணைத்தாண்டிப் போகும் விலைவாசி, பெருகிவரும் செலவினங்கள், பயமுறுத்தும் புதிய புதிய நோய்கள், முன்னேறிய மருத்துவ தொழில்நுட்பங்களால் கூடியிருக்கும் ஆயுட்காலம், பெற்றொரைப் பார்த்துக்கொள்ள ஏழெட்டுப் பிள்ளைகள் இருந்த காலம்போய், ’நாமிருவர், நமக்கேன் ஒருவர்’என்று மாறிவரும் ஸ்லோகன்கள் எல்லாம்சேர்ந்து இந்த ரிடையர்மெண்ட் ப்ளான் ஸ்கீம்களை பிரபலப்படுத்தி வருகின்றன!!

முதியோர் இல்லங்கள் பெருகுவதற்கு, பிள்ளைகள் குற்றம்சாட்டப்படுவதுபோய், வரும்காலங்களில், தனியே இருப்பதைவிட முதியோர் இல்லங்களில் இருப்பதே நல்லது என்று பெற்றோர்களே முடிவு செய்து, பிரபல இல்லங்களில் முன்பதிவு செய்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இண்டர்நேஷனல் சிலபஸ், உலகத்தரத்தில் போர்டிங், இங்கு இல்லாத எக்ஸ்ட்ரா-கர்ரிகுலர் ஆக்டிவிடிகளே இல்லை என்று பள்ளிகள் தற்காலங்களில் விளம்பரப்படுத்திக் கொள்வதுபோல, இனி முதியோர் இல்லங்களின் விளம்பரங்களையும் எதிர்பார்க்கலாம்.

   
 

Post Comment

FOLLOW-UPs




   

 எவ்வளவு நாள் பதிவர் லெவல்லயே இருக்கிறது? அடுத்த கட்டத்துக்கு, அதான் ”பத்திரிகையாளரா” ஆவோணுமில்லா? அதான் என்னோட சில பதிவுகளுக்கே  நான் “ஃபாலோ-அப்”பெல்லாம் எழுதி ஒரு டிரையல் எடுக்கலாம்னு... நீங்க டரியல் ஆவாதீங்க..

அதுக்கு மின்னாடி, ஒரு கேள்வி: மார்ச் 22 - இந்த நாளுக்கு என்ன சிறப்புன்னு நெனவிருக்கா? பதிவர் - பதிவுலகத்துக்கும் இதுக்கு ரொம்பவே சம்பந்தமிருக்கு. விடை கடைசியில பாப்போம்!! (இதுவும் பத்திரிகை, பி.ப. ட்ரெண்ட்தானே?)

1.  சுரங்கமே வீடாக:

சிலி நாட்டில், சுரங்கத்தில் சிக்கிவிட்ட 33 சுரங்கப் பணியாளர்களைப் பற்றி எழுதியிருந்தேன் இந்தப் பதிவில்.  நேற்று இரவில் அனைவரும் வெளியே வந்துவிட்டார்கள்!! மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்வு!! எல்லோரின் கூட்டுப் பிரார்த்தனையும், உழைப்பும்தான் அவர்களை, எதிர்பார்த்த டிசம்பர் மாதத்தை விட இரண்டு மாதங்கள் முன்பே வெளியே கொண்டுவந்திருக்கிறது.

சிலியின் ஜனாதிபதி நேரில் வந்து, ஒவ்வொருவரையும் வரவேற்றிருக்கிறார். 33 பேரில் ஒருவரான பொலிவியா நாட்டவரை வரவேற்க பொலிவியாவின் ஜனாதிபதியும் பிரத்யேக வருகை தந்திருந்தார்.

சாமான்யர்களான முப்பத்து மூவருக்கும் தற்போது திடீரென கிடைத்திருக்கும் “நட்சத்திர அந்தஸ்தை” அவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது அவர்களின் அடுத்த சவால். அவர்களை மேலே ஏந்திவந்த கூண்டின் பெயர் “ஃபீனிக்ஸ்”!!!

அவர்கள் சுரங்கத்தில் அடைபட்டிருந்த காலத்தில், அவர்களுக்குத் தேவையான  மற்றும் அவர்களால் கேட்கப்பட்ட எல்லாப் பொருட்களையும் மேலெயிருந்து அனுப்பித் தந்த மீட்புக் குழுவினர் இரண்டு பொருட்களை மட்டும் அனுப்ப மறுத்து விட்டனர்!! அவை என்ன தெரியுமா? வீடியோ கேம்ஸும், ஐ-பாட்/எம்.பி.3 பிளேயரும்!! ஆமாம்., அவற்றைப் பயன்படுத்துவோர் மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டுவிடுவர்; எதிர்பாராத ஆபத்து நேர்ந்தாலோ, எச்சரிக்கைகளையோ அவர்கள் கவனிக்காது விட வாய்ப்பிருக்கும் என்பதால் அவற்றைத் தரவில்லையாம்!!

2.  திருத்தாத தீர்ப்புகள்:

இந்தப் பதிவில் பிறழ்சாட்சிகள் பற்றியும் எழுதியிருந்தேன். அமீரகத்தில், கள்ளச்சாராயத்(!!) தகராறு ஒன்றில் ஒருவரைக் கொன்ற குற்றத்திற்காக, 17 இந்தியர்கள் மரணதண்டனை பெற்றிருந்தனர். இது இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி, பலரும் இந்திய அரசாங்கம் இவ்வழக்கில் தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர். அந்த வழக்கின் அப்பீலில், முக்கிய சாட்சியானவர், ‘நினைவில்லை’, ’தெளிவாகப் பார்க்கவில்லை’, ‘சம்பவம் நடந்தபோது இருட்டத் தொடங்கியிருந்தது’ என்றெல்லாம் சொல்லிவிட்டதால், தீர்ப்பு மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தண்டனை பெற்றவர்கள் அனைவரும் சீக்கியர்கள்!!

3.  டிரங்குப் பொட்டி -10:

இதில், குப்பைத் தொட்டிக் குழந்தைகள் குறித்து எழுதியிருந்தேன். இப்ப நாகரீக வளர்ச்சிக்கேற்ப, ஃப்ளைட் பாத்ரூம்ல குழந்தையைப் போட்டுட்டுப் போறாங்க!! (பள்ளிக்கூட பாத்ரூம்லாம் நம்ம இந்தியாவில!!) பஹ்ரைன்லருந்து ஃபிலிப்பைன்ஸ் போன ஃப்ளைட்ல, பாத்ரூம்ல குப்பைத் தொட்டில டிஷ்யூ பேப்பர்களால் சுற்றப்பட்டு, ஒரு பிறந்த குழந்தை கிடந்திருக்கிறது!! அப்புறம் விசாரிச்சு, அம்மாவைக் கண்டுபிடிச்சுக் கொடுத்திட்டாங்க.

எனக்கு என்ன ஆச்சர்யம்ன்னா, பிரசவம்கிறது பெண்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மறுபிறப்புன்னும் சொல்றோம். ஆனா, இப்படி சத்தமில்லாம பாத்ரூம்ல பிள்ளையப் பெத்துட்டு, ஏதோ தலையச் சீவிட்டு, சீப்புலருந்து முடியை எடுத்துப் போட்டுட்டுப் போறமாதிரி எப்படி இவங்களால போட்டுட்டுப் போக முடியுதுன்னுதான்!! நம்ம ஊர்ல, பிரசவம்னாலே, உன்னைக் கூப்பிடு, என்னைக் கூப்பிடு, மருந்து ரெடிபண்ணி, நேர்ச்சையெல்லாம் நேந்துகிட்டு, பரபரப்பா... ஹூம், பிள்ளைப்பேறு இவ்வளவு கஷ்டமா இருக்கும்போதே எவ்வளவு அனாதைக் குழந்தைகள்!! இவங்கள மாதிரி எல்லாருக்கும் ஈஸியா இருந்துட்டா....     

4.  அதான் கடல் நிறைய தண்ணி இருக்கே!

இந்தப் பதிவு, ’உலக தண்ணீர் தினத்தை’ ஒட்டி எழுதப்பட்ட பதிவு!! இப்ப ஞாபகம் வந்துருச்சா? மார்ச் 22!! பதிவுலகில் அநேகமா எல்லாப் பதிவர்களும் வரிஞ்சுகட்டிகிட்டு, தண்ணீர் சேமிப்பை, சிக்கனத்தை வலியுறுத்தி தொடர்பதிவுகள் எழுதினோம்.  ஒருநாள் விழாவா கொண்டாடிட்டு மறந்துபோகாம,  அதன் தொடர்ச்சியா, தண்ணீர் சிக்கனத்திற்காக என்ன செய்கிறோம்னு யோசிக்க ஒரு நினைவூட்டல் என் தரப்பிலிருந்து.  நான், என் வீட்டில் கிச்சன் சிங்கில் வரும் தண்ணீர் அளவைக் குறைத்து வைத்திருக்கிறேன்.

 எச்சரிக்கை: இதேபோல, இனி பதிவில் “ஃபாலோ-அப்” எழுதுபவர்கள், எனக்குரிய ராயல்டியை தவறாமல் தந்துவிடவேண்டும்!!
   
    

Post Comment

அம்மா @ சிக்கனம் கஞ்சத்தனம்




 
பள்ளியிறுதி படிக்கும்போதுதான், தமிழ்நாட்டில் சென்னையில் வேரூன்றியிருந்த ‘சுடிதார்’ தின்னவேலியில் கிளைவிட ஆரம்பித்திருந்தது. வீட்டில் அதுபற்றியெல்லாம் வாய் திறக்க முடியாதென்பதால், கல்லூரிக்குப் போனால் எப்படியாவது ”முறைப்படி” அனுமதி வாங்கிவிடலாம் என்ற நினைப்பில்  கல்லூரியில் சேலைதான் உடுத்த வேண்டுமென்ற விதி மண் போட்டது!!

கல்லூரி வாழ்க்கை மிகவும் பிடித்துப் போனதால், சேலை சகஜமாகிவிட்டிருந்தது. முதலாம் காலேஜ் டேயை ஆர்வத்துடன் எதிர்கொள்ள, வகுப்புத் தோழிகள் மறுநாள் (திங்கட்கிழமை) பட்டுச் சேலை கட்டிவர முடிவெடுத்தோம்.

அன்னிக்கு வீட்டுக்கு வர்ற வழியில ஒரு பரவசத்தோடயே யோசிச்சுகிட்டு வந்தேன். எனக்குனு தனியா சேலைகள்லாம் கிடையாது. அம்மாவோட சேலைகளைத்தான் நானும் கட்டிக்குவேன். அம்மா பொன்னுபோல வச்சிருந்த (ஃபாரின்) சேலையெல்லாம் நான் ’பின்’னா குத்தி வம்பாக்கிறேன்னு அம்மாக்கு ஏற்கனவே ரொம்ப கோவம். (சேலை ஒரு லொள்ளு - அங்கங்கே ‘பின்’ குத்தினாத்தான் நிம்மதியா இருக்க முடியும்). தனியா சேலைகள் வாங்கிக் கேட்டும் ரெண்டு பெருநாளைக்கின்னு ரெண்டே ரெண்டுதான் கிடைச்சுது. சாதாரண சேலயக் கட்டும்போதே முணுமுணுத்துகிட்டு இருப்பாங்க, இப்பப் பட்டுச் சேலையைக் கட்டப் போறேன்னு சொன்னா என்னென்ன திட்டு விழுமோன்னு பயமாவும் இருந்துது. திட்டினாலும் கட்டித்தானே ஆகணும், எந்தப் பட்டைக் கட்டலாம்னு சிந்தனை வந்தப்போத்தான் ஒரு விஷயம் உறைச்சுது. பட்டுச் சேலை!! வீட்டில ஒரு பட்டுச் சேலை கூட கிடையாது எனபது அப்பத்தான் ஞாபகத்துக்கு வந்தது.

அம்மா, அப்பா டெல்லியிலிருந்து வீட்டைக் காலி செய்து வரும்போது ரயிலில் லக்கேஜில் போட்ட பட்டுச்சேலைகள் இருந்த பெட்டியும், பாத்திரபண்டங்கள் எல்லாமும் திருடு போய்விட்டதாகச் சொன்னது ஞாபகம் வந்தது. ஆனால்  அதன்பிறகு இந்தப் பதினஞ்சு வருஷமா ஒரு பட்டுப் புடவைக்கூட வாங்கவில்லையா?? அப்படின்னா??!!

இந்தா, பஸ்ல போனா, ஒரு 10 நிமிஷ தூரம்தான் ஆரெம்கேவி. 700-800 ரூபாய்க்கே சாதாரண ஒத்தை வரிச்சரிகை பட்டு கிடைக்கும். ஆனா, அதெல்லாம் நடக்கிற காரியமா? ரெண்டுநாளா லேசா அனத்தியும் ஒண்ணும் நடக்கலை.  கண்ணீரும், இயலாமையுமா முனங்கிக் கொண்டே, பட்டுப்போன்ற ஸாட்டின் சேலையை உடுத்துக் கொண்டு போனேன்.


வாப்பா வெளிநாட்டுல இருக்காங்கன்னாலும்,  வாப்பாவோடது  ’வாழ்ந்துகெட்ட குடும்பம்’ கிறதால, வறுமை அப்ப முழுசா வெளியேறலை. அப்பாவின் வருமானம் மட்டுமே; 10 பேர் கொண்ட பெரிய குடும்பம்; பெரிய அத்தையின் குடும்பத்தையும் பொருளாதார ரீதியாக தாங்க வேண்டியிருந்தது. இதனால் ஒரு ‘லோயர் மிடில் கிளாஸ்’ என்ற அளவில்தான் இருந்தோம்.

அம்மாவுடையதோ, மிகப் பணக்காரக் குடும்பம் - வீடு நிறைய வேலையாட்கள், இரட்டை மாட்டு வண்டி, ஃபியட் கார், பல ஏக்கரா வயல்கள், தியேட்டர், அரசியல் செல்வாக்குள்ள குடும்பம். அப்பா வீடு கல்யாணமாகி வரும்போது இருந்ததுக்கு  இப்ப எவ்வளவோ பரவாயில்லை என்று அம்மா சொல்வதுண்டு.


பத்து வயதிலேயே தன் அம்மாவை இழந்து, உடன்பிறந்த எட்டுப் பேரையும் கவனித்தவர். திருமணத்தால் சித்தியிடமிருந்து சீக்கிரம் தப்பினாலும், கடைசி வரை மாமியார் ஆதரவும் கிட்டாமல் போனது சோகம். அதனாலேயே, எங்கள் நால்வருக்கும் வரன் தேடும்போது,  ஒத்தைப் பிள்ளைக்கு என் பொண்ணுங்களைக் கொடுக்க மாட்டேன்னு ஒத்தக்காலிலே நின்னாங்க. (வாப்பாவும் ஒரே மகன்). ஏன்னா, “இளைய மருமக வந்தாத்தான் மூத்த மருமகளோட அருமை தெரியுமாம்”. கரெக்டா அதுபோலவே செயல்படுத்திட்டாங்க!!

ஒருமுறை தெருவிலுள்ள கழிவுநீர்க் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டபோது, நகராட்சிக்குப் பலமுறை ஃபோன் செய்தபின்,  தாமதமாக வந்த ஊழியர், சும்மா இராமல் அம்மாவிடம் “ஏம்மா, (முனிசிபல்) சேர்மன் மக வீடுன்னு ஒரு வார்த்தைச் சொல்லிருந்தா உடனே வந்திருப்போம்ல?” என்று சொல்லி வாங்கிக் கட்டி,  “எம்மா, ஒண்ணுமில்லாதவன்லாம் நான் யார் தெரியுமான்னு மிரட்டுறான். நான் உள்ளதைச் சொன்னதுக்கு இப்படித் திட்டுறியேம்மா?”ன்னு நொந்துகிட்டார்.

பொறந்த வீட்டுல வசதியில கொழிச்சவங்கன்னாலும், இங்க வந்து நிலைமைக்கேற்ற மாதிரி சிக்கனமா நடந்துகிட்டாங்க!! அத வடிகட்டின கஞ்சத்தனம்னுதான் நான் அப்ப (மனசுக்குள்ள) திட்டுவேன்!! அதுக்கெல்லாம் தனித்திறமை வேணும்னு இப்பத்தான் புரியுது!! :-(  வீட்டு வேலைகளுக்கிடையில நேரம் கண்டுபிடிச்சு, பீடி சுத்தவும், துணி தைக்கறதும் செஞ்சாங்க. வாப்பாவோட விருப்பமின்மையால விட்டுட்டாங்க.

ஒரு பென்சில், ரப்பர் வேணும்னாலும் கெஞ்சிக் கூத்தாடணும். இந்தச் சிக்கனம் (எ) கஞ்சத்தனத்துக்கு நாங்க 6 பேரும் (2 நாத்தனார்கள்+4 மகள்கள்) காரணம்னு நல்லாத் தெரிஞ்சாலும், கோவம் கோவமா வரும். இருக்கட்டும் ஒருநாள் இதுக்கெல்லாம் சேத்து வச்சுக்கிறேன்னு தோணும். நினைச்ச மாதிரியே, இப்ப வச்சிருக்கேன் நிறைய - நன்றிகளை!! அப்போப் படிச்ச பாடங்கள் இப்பக் கைகொடுக்குது!! இந்தச் சிக்கனப் பாடம்தான், என்னை என் கல்யாணச் சேலையைக்கூட திட்டமிட்டதைவிட பாதிவிலையில் எடுக்க வைத்ததுபோல!!

பிறகு 2 அத்தைகளும் கல்யாணமாகிப் போனார்கள். அடுத்து நாங்கள் இரு சகோதரிகள். என் தலைப்பெருநாளில் வீட்டுக்கு வந்த நான் அதிர்ச்சியானேன்!! காரணம் என் அம்மா எடுத்திருந்த பட்டுச்சேலை - புதுப் பெண்ணாகிய எனக்கு என் புகுந்த வீட்டில் எடுத்துக் கொடுத்ததைவிட கிராண்டா இருந்துது!! முதலில் நம்பாமல், அதிர்ச்சியோடு பார்த்த நான், பிறகு காரணம் புரிந்து புன்னகைத்தேன்!!

அப்ப இருந்து இப்பவரை மேடம் அடிச்சு தூள் கிளப்புறாங்க!! லேட்டஸ்டா வைரக்கம்மல் வாங்கப் போறதாச் சொல்லிகிட்டிருந்தாங்க. “உனக்கென்ன? முடியுள்ள மகராசி அள்ளிமுடி”ன்னேன்!!
 
 

Post Comment

ட்ரங்குப் பொட்டி - 12




 


இந்தியாவிலருந்து அமெரிக்கா போற பெருந்தலைகளைக் கூட விடாம (ஜனாதிபதி உள்பட), அமெரிக்க போலீஸ் ஸ்கேன் பண்ணி செக் பண்ணுறாங்க. இங்க லோக்கல்ல உதார் விடுற பெருந்தலைகளும், அங்க கைகட்டி, வாய்பொத்தி ”ரூல்ஸ்படி”  நடந்துக்கிறாங்க. ஆனா,  பக்கத்து நாடு பாகிஸ்தான்லருந்து ராணுவ கான்ஃபெரன்ஸுக்காகப் போன ராணுவ அதிகாரிகளை, இது போல செக்கிங் பண்ணனும்னு காக்க வைக்க, அவங்க “எங்களை யாருன்னு நினைச்ச?”ன்னு சவுண்ட் வுட்டு, வந்த ஃப்ளைட்லயே திரும்பி வந்துட்டாங்க!! அவிங்க ரோஷக்காரங்க!!

)( )()( )()( )()( )()( )(

ஆப்பிரிக்க, கிழக்காசிய மற்றும் இந்தியத் துணைக்கண்ட நாடுகளில் மட்டும்தான் ‘கொசு’ என்ற ஜீவி உண்டு. வேற எங்கயும் கிடையாதுன்னு அப்பாவியா நினைச்சுகிட்டிருந்தேன். அதுலயும், ஐரோப்பாவிலெல்லாம் ’கொசுவா - கிலோ எவ்வளவு’ன்னு கேப்பாங்கன்னு நினைச்சேன். இப்ப சமீபத்துல,  ஃப்ரான்ஸ்லயும் ’Riviera’ என்ற இடத்துல ‘சிக்குன்குனியா’ மக்களைத் தாக்கியிருக்காம்!!

)( )()( )()( )()( )()( )(
ஃபிலிப்பைன்ஸின் “Cebu Pacific" என்ற ஏர்லைன்ஸ்ல விமானப் பணிப்பெண்கள் ஃபிளைட்ல நடனம் ஆடிகிட்டே சேவை செய்றாங்களாம்!! அதுவும், டேக்-ஆஃப் முன்னாடி ‘ஆபத்து நேர பாதுகாப்பு முறைகள்’ சொல்வாங்களே அப்ப டான்ஸ் ஆடிகிட்டே சொல்லித் தராங்களாம். சும்மாவே ஒருத்தரும் ஒழுங்கா அதைக் கவனிக்கிறதில்ல, இதுல டான்ஸ் ஆடிகிட்டுன்னா, கேக்கவே வேணாம்!! இது பரீட்சார்த்த முறைதான், இன்னும் முழுசா செயல்படுத்தலன்னு நிறுவனம் அடுத்த நாளே உஷாரா அறிக்கை விட்டுடுச்சு. ஏற்கனவே இவ்விமானங்களில் சின்னச் சின்ன கேம்ஸ்களும், போட்டிகளும் ஏர்ஹோஸ்டஸ்களால் நடத்தப்படுகிறதாம்!!

)( )()( )()( )()( )()( )(

என் மகனின் அத்தை மகள், என்னிடம் ‘உங்கப் பையன் ஸோ க்யூட்’ என்றாள். “கட்டிக்கிறியா?” என்றேன். ”கட்டிக்கிட்டாப் போச்சு” என்று அணைத்தாள் என் சின்னவனை. “அது இந்த ’கட்டிக்கிறது’ இல்ல. கல்யாணம் பண்ணிக்கிறியான்னு அர்த்தம் அதுக்கு!!” - சொன்னது நானில்லை, ரெண்டாங்கிளாஸ் படிக்கும் என் சின்னவன்!! :-((((
 
)( )()( )()( )()( )()( )(

 பலவித சர்ச்சைகளுக்கு நடுவே, காமன்வெல்த் விளையாட்டுகள் சிறப்பாகத் தொடங்கியிருக்கின்றன. நம்ம நாட்டுல, ஊடகங்களுக்குச் சீக்கிரமே ஒரு கட்டுப்பாடு கொண்டுவந்தா நல்லது. இவங்களால, உலக நாடுகள் முன், நம்மளே நாமே அவமானப்படுத்திகிட்டோம்!! ஊழல்களை வெளிக்கொணர்வதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியம் என்றாலும், இந்தியாவின் மதிப்பு உலக நாடுகளின் முன் தாழ்ந்துகொண்டே போகிறது. காமன்வெல்த் விளையாட்டுகளின் பிரமாண்ட தொடக்க நிகழ்ச்சிகள் ‘கீழே விழுந்தாலும் மண் ஒட்டலை’ என்ற ரேஞ்சுக்கு கொஞ்சம் காப்பாத்தியிருக்கின்றன. நிகழ்ச்சியில், சிறுவர்கள் துணியில் இன்ஸ்டண்டாக மெஹந்தி டிஸைன் வரைவது அற்புதம்!!

)( )()( )()( )()( )()( )(

தலைநகர் டெல்லியில (நிஜக்)குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போகிறதாம்!! அரசு அலுவலகங்கள் உள்ளே போக ஏற்படுத்தப்பட்ட தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளால பொதுமக்கள் மட்டுமில்லாம, அங்கே பணியுரியும் அதிகாரிகளேகூட அங்கு நுழைய ஏகக் கெடுபிடிகள்!! ஆனா, குரங்குகள் சர்வ சுதந்திரமா கட்டிடங்கள் உள்ளே நடமாடுகின்றனவாம். இதில இன்னொரு பீதியக் கிளப்புறாங்க - தீவிரவாதிகள் யாராவது  குரங்கு வயித்துல வெடிகுண்டைக் கட்டி, அதை அலுவலகத்துக்குள்ள நுழைய விட்டு ரிமோட் மூலமா வெடிக்கச் செய்ய வாய்ப்பு இருக்காம்!! ம்ம்.. இதுக்கென்ன colour code குடுப்பாங்களோ..

)( )()( )()( )()( )()( )(

1978ல் முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தையை உருவாக்கி,  IVF தொழில்நுட்பத்தின் முன்னோடியாக விளங்கும் டாக்டர் ராபர்ட் எட்வர்டுக்கு 2010ம் வருடத்தின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. குழந்தையில்லா தம்பதியர்களில் லட்சக்கணக்கினரின் வாழ்வில் இதன்மூலம் மகிழ்ச்சி தந்தவர்; உலகெங்கும் இதுவரை 4 மில்லியன் குழந்தைகள் இந்த IVF மூலம் பிறந்துள்ளன; அப்பேர்பட்டவருக்கு இவ்வளவு தாமதமாகவாகவா நோபல் வழங்குவது என்று மருத்துவத்துறை குரல் எழுப்புகிறது.

அதே சமயம், இவர் மீது ‘கருமுட்டைகளைச் சந்தைப்படுத்தியவர்’, 'மனிதக்கருக்களை விறபனைக்காக ஃபீரீஸரில் நிரப்பிவைக்கும் பொருளாக ஆக்கியவர்’, ‘கணவன் - மனைவியின் அந்நியோன்ய உறவையும், குழந்தைப்பேற்றையும் இருவேறு நிகழ்வுகளாக்கியதன் முக்கிய காரணி’ என்றும் குற்றம் சாட்டப்படுகிறது!!
  
 

Post Comment

அப்போ கொசுவை ஒழிக்கவே முடியாதா?!!




 கமலுக்கு ரஜினி பரிசளித்த ஓவியம்

இங்கே அமீரகத்தில் திரையரங்குகளில் அதே டிக்கட் விலை; எந்த இந்திரன், சந்திரனுக்காகவும் விலை கூடாது என்பதால் விலைவாசி, வன்முறை கவலையில்லாமலும், விசில் சத்தம், ஆட்டம் பாட்டம் தொந்தரவில்லாமலும்  எந்திரன் படம் பார்த்தோம்!!

ஆக, கதை என்னான்னா, பத்து வருஷம் உழைச்சு  நாட்டுக்காக ஒரு ரோபோ செஞ்சா, அது காதல் செய்யப் போயிடுதாமே? முந்தின படங்கள்ல தேசீய பிரச்னைகள் பத்தி பேசுன ஷங்கர் இந்தப் படத்துல இன்னும் டெக்னிக்கலா முன்னேறினாலும், காதல் சென்டிமெண்ட்களிலிருந்து விடுபட முடியல போல!! (நல்லவேலை, பாகிஸ்தான் தீவிரவாதியைப் பிடிக்க ரோபோவை அனுப்பாத வ்ரை சந்தோஷம்!!)

அவ்ளோ கஷ்டப்பட்டு உருவாக்கின ரோபா, காதலிக்காக ‘கொசு’ பிடிக்கப் (!!) போறதைப் பாத்து, நான்கூட ஆசையா, காதலியைக் கடிச்சதுக்காக உலகத்துல கொசு இனமே இனி இருக்கக்கூடாதுன்னு ‘வீரவசனம்’ பேசி அழிக்கப் போறாப்புல; இப்படி(படத்துல)யாவது கொசு அழியட்டும்னு நினைச்சா... சீ..ன்னு ஆகிடுச்சு..


சிட்டியோட சில சாகசக் காட்சிகளின்போது, ‘சக்திமான்’ பாக்கிற எஃபெக்ட் வருது!! மின்னல் தாக்குனதும் ரோபோக்கு உணர்ச்சிகள் பெருகுவதும்... முத்தம்  கொடுத்தா காதல் வர ரோபோக்கு தொடு உணர்ச்சி இருக்கான்னு கேள்வி வர்றதும்... ரோபோவின் ’நட்’டை ஸ்குரூவால் டைட் செய்ததும், அதன் குரல் மாறுபடுவதும்...

சரி, சரி, விடுறா கைப்புள்ள, இப்படியே சந்தேகம் கேக்க ஆரம்பிச்சா, இந்தப் பதிவு  முழுசும்கூட பத்தாது!! எவ்வளவோ படம் பாத்தோம், அப்பல்லாம் ‘லாஜிக்’ பாத்தோமா என்ன?

ஆனாலும், ஷங்கர் டீம் & ரஜினியின் உழைப்பு அபாரம்!! ரஜினிக்கு ’அபூர்வ ராகங்கள்’ முதல் ’எந்திரன்’ வரை வில்லன் வேஷம்தான் கச்சிதமாகப் பொருந்துகிறது!!

இன்னொரு விஷயம் கவனிச்சீங்களா? ரயில்ல ஐஸ்வர்யாவை வில்லன் நெருங்குனதும், சுத்தியிருக்கவங்க எல்லாரும் மொபைல் ஃபோன் காமிராவை ஆன் செய்யுறதும்... அப்புறம் தீவிபத்து (ஓவர் அனிமேஷன்) சமயத்துல சூழ்நிலை அறிந்து நடக்காத மீடியாக்காரர்களும்... இந்நாளைய நிகழ்வுகளை ஒத்திருக்கும் இந்த இடங்களின் நிதர்சனம் சுடுகிறது...

இந்தப் படத்துக்காக ரசிகர்கள் செய்ற ஆர்ப்பாட்டங்கள் ரொம்ப ஓவராத்தான் போகுதுபோல!! இதைக் கண்டிச்சு ரஜினி ஒரு வார்த்தைகூடச் சொல்லாதது வருத்தமாத்தான் இருக்குது!! இந்த இடத்துலதான் கமல் வேறுபடுகிறார். அவர் படங்களுக்கு இப்படியெல்லாம் நடப்பது அபூர்வம். அவரது ரசிகர்களும் அவரைப் போலவே அறிவுஜீவிகளாகத்தான் இருப்பார்கள் என்பதால் இருக்குமோ?! (பத்த வெச்சுட்டியே பரட்டை... )

4000 லிட்டர் பாலாபிஷேகம் என்றெல்லாம் கேட்கும்போது மனம் கனக்கிறது. ஒரு படம் பார்த்தோம், வந்தோம் என்றில்லாமல் இப்படி கலைஞர்களை ‘தெய்வம்’ லெவலுக்குக் கொண்டாடும் மாயையிலிருந்து ரசிகர்களும் என்றைக்கு விடுபடப் போகிறார்களோ? எளிமையின் உருவமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ரஜினியும் இதைக் தடுக்காமல் இருப்பது மிகப் பெரியத் தவறாகப் படுகிறது.  ஒருவேளை அரசியலுக்கு வருவதற்கான முகாந்திரமாக இதை எடுத்துக் கொள்கிறாரோ என்னவோ? அரசியல் தலைவர்கள்தான் தொண்டர்களைப் பலியாடாக்குவர்.


சன் டிவி குழுமம் செய்வதும் எரிச்சல் பட வைக்கிறது என்றாலும், அவர்களது வியாபாரத் தந்திரம். அவசியமேயில்லாத பொருட்களையும்  ’அதிரடித் தள்ளுபடி’ என்ற பெயரில் நம்மை வாங்க வைக்க முயற்சிக்கும் வியாபாரிகளின் தந்திரம் அது. ஆனால் அதற்கெல்லாம் மயங்காமல் நமது தேவை,  வருமானம், சூழல்களைக் கவனத்தில் இருத்தி ’விரலுக்கேத்த வீக்கமாக’ வாழ்வது நம் சாமர்த்தியம்!!  ம்க்கும்.. அப்படில்லாம் விவரமானவங்களா இருந்துருந்தா இப்படி ‘இலவச’ உலகத்துல இருக்க வேண்டி வந்துருக்குமா என்ன!!

மொத்தத்துல ஒரு நல்ல படமா கொண்டாடப்பட்டிருக்க வேண்டியதை, அளவுக்கதிகமான விளம்பரம் மற்றும் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தால், முகம் சுளிக்க வைத்து கண்டனத்திற்குள்ளாக வைத்ததுதான் சன்- ஷங்கர்-ரஜினி கூட்டணியின் சாதனை!!
 
 

Post Comment

பிள்ளைக்குப் பரிசு




 
 
மதீனத்துல் முனவ்வரா என்ற மதீனா நகரம். பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நபித் தோழர்களோடு அளவளாவிக் கொண்டிருந்தார்கள். அந்நேரம் ஒருவர் அவ்விடம் வந்தார். அவரோடு ஒரு ஒட்டகத்தையும் கொணர்ந்திருந்தார்.

அவரிடம் நபியவர்கள்  வந்த காரியம் என்னவென்று வினவினார்கள். அதற்கவர், தாம் அவ்வழகிய ஒட்டகத்தைத் தம் அன்பு மகனாருக்குப் பரிசளிக்கப் போவதாகவும், அருமை நபியவர்கள் அதற்கு சாட்சியாய் இருந்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

அவரது கோரிக்கையை செவியுற்ற அண்ணல் நபி(ஸல்) அவர்கள, “நீர் உமது மற்ற எல்லா மகவுகளுக்கும் இவ்விதம் பரிசளித்தீரா?” என்று கேட்டார்கள். அதற்கவர், “இல்லை; இம்மகனார் மீது எனக்குப் பாசம் அதிகம். ஆகையால் இவருக்கு மட்டுமே பரிசளிக்க விழைகிறேன்!” என்றார்.

 “என்னே!! அநீதிக்குத் துணை நிற்கவா என்னை சாட்சியம் கூற அழைத்தீர்??!! உமது மக்களிடம் பாரபட்சத்துடன் நடந்து இறைவனின் அதிருப்திக்கு ஆளாகாதீர்!!” என்று அவரிடம் கோபத்துடன் பதிலுரைத்தார்கள். பின்னர், அவரிடம், “உம் மக்கள் அனைவரும் உம்மிடம் ஒரேவிதமாக பாசமும், மரியாதையும் செலுத்த வேண்டும் என்று நீர் விரும்பவில்லையா?” என்று வினா எழுப்பினார்கள்.


www.dailymail.co.uk

ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள எல்லா வீட்டிலும் நடக்கும் கதைதான் இது.  அப்பா செல்லம், அம்மா செல்லம், பாட்டி செல்லம், தாத்தா செல்லம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு “pet child"!! இது குழந்தைகளுக்குள் பொறாமை உணர்வைத் தூண்டி விடுமே தவிர அவர்களின் இணக்கமான உறவை மேம்படுத்தாது.  பல பெரிய குடும்பங்களில் புறக்கணிப்பிற்கென்றே ஒரு சவலைக் குழந்தை இருக்கும்.

மூத்த பிள்ளை - இளைய பிள்ளை, ஆண்குழந்தை - பெண்குழந்தை, நல்லா படிக்கிறவள்/ன் - மக்கு, பொறுப்பானவள்/ன் - பொறுப்பற்றவள்/ன், வெளிநாட்டில் இருப்பவள்/ன் - உள்நாட்டு வேலை பார்ப்பவள்/ன்   --- இப்படி பாகுபாடுகள்தான் எத்தனையெத்தனை?

ஆனால், தம் பதவியின் பொறுப்பை அறிந்த பெற்றோர்கள் இவ்வாறு பேதம் பார்க்காமல், எல்லா பிள்ளைகளையும் சமமாகவே பாவித்து வளர்ப்பர். நல்ல பெற்றோராய் இருக்க நினைப்பவருக்கு இதுதான் மிகப் பெரிய சவால்!!
  
 www.lifeskills4kids.com.au
   
  

Post Comment

திருத்தாத தீர்ப்புகள்




என்னென்ன முன்னேற்பாடுகள்!! கூட்டம் கூடக்கூடாது, க்ரூப் எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூடாது, சில இடங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை, “மக்களே, அமைதி காக்கவும்”னு அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் வேண்டுகோள்கள்... பதிவர்கள் பதிவு போட்டு அமைதியா இருங்கங்கிறாங்க, கவிதை எழுதுறாங்க.. குழு மடல்கள் அனுப்புறாங்க...  இதெல்லாம் என்னத்துக்குன்னு தெரிஞ்சிருக்குமே உங்களுக்கும்? ஆமா, நாளைக்கு வரவிருக்கிற ஒரு நீதிமன்ற  தீர்ப்புக்காகத்தான் இத்தனை அலப்பறைகளும்!!

நாளை தீர்ப்பு வரவிருக்கின்ற வழக்கு குறித்தோ, அதன்  விவரங்கள் பற்றியதோ இல்லை எனது இந்தப் பதிவு!!

ஒரு வழக்கின் தீர்ப்புக்கு ஏன் இத்தனை எதிர்பார்ப்பும், எதிர்வினைகளும்? ஒரு வழக்கு நடந்து, அதன் தீர்ப்பு வந்தால் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும்; அல்லது மேல் முறையீடு செய்ய வேண்டும். அதை விடுத்து. சாதகமாகத் தீர்ப்பு பெற்றவர்கள்/பெறாதவர்கள்  ஏன் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடவேண்டும்?

இதுகுறித்துப் பேசும்போது, நிச்சயம் எல்லாருக்கும் தர்மபுரி பஸ் எரிப்புக்குக் காரணமான வழக்கு முடிவும்,  தினகரன் வழக்கு முடிவும், இன்னும் பல வழக்குகளின் “ட்ராமடிக்” முடிவுகளும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது!!


இப்போது நடக்கும் பல வழக்குகளின் தீர்ப்புகளும் வியப்பையும், சலிப்பையும்தான் தருகின்றன. கீழ்கோர்ட்டில் ஒருவித தீர்ப்பு வந்தால், அதே வழக்கிற்கு  மேல்கோர்ட்டில் வேறுவித தீர்ப்பு வருகிறது. அப்படின்னா என்ன அர்த்தம்? நீதிபதிகளையோ, அவர்கள் வழங்கும் தீர்ப்புகளையோ குறை சொல்லவில்லை. ஒரு வழக்கு ஆரம்பிக்கும்போது, சம்பவத்தின் தாக்கத்தில் சாட்சிகள், பிரதிகள், வாதிகள் எல்லாரும் சரியாக வழக்கில் பங்குபெறுவார்கள். அதுவே,  வழக்கு இழு, இழுவென்று  இழுத்து, வாய்தா மேல் வாய்தா வாங்கி நொண்டியடிக்க ஆரம்பிக்கும்போது வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லாருக்குமே ஒரு வெறுப்பு வரும்.

அதுவே, கீழ்கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின், தீர்ப்பில் ஒப்புதல் இல்லாதவர், மேல்முறையீடு செய்து மீண்டும் வழக்கு நடக்கும்போது, சாட்சிகள் வலியவரின் மிரட்டல் காரணமாகவோ, அல்லது பணத்துக்கு மயங்கியோ பல்டி அடிக்க நேரும்போது தீர்ப்புகள் வேறுவிதமாக வரும் வாய்ப்புகள் அதிகம்.  பல வழக்குகளிலும் அதைக் கண்கூடாகக் கண்டும் இருக்கிறோம்.

சமீபத்தில் நடந்த சில வழக்குகளில் கீழ்கோர்ட்டில் தண்டனை பெற்றவர்கள், மேல்கோர்ட்டில் விடுதலை ஆயினர். இதனை அறியும்போது, நம் மனதில் என்ன தோன்றும்? சாட்சிகளை விலைக்கு வாங்கியிருப்பார்களோ என்றுதானே? சென்ற வருடமோ, முன்போ, இதுபோல ஒரு வழக்கில் இவ்வாறு சாட்சி பிறழ்தல்கள் நடந்தபோது, சாட்சிகளுக்கு நீதிபதியால் அபராதம் விதிக்கப்பட்டது.

இன்னொன்று, காலம் கடந்து சாட்சியம் சொல்ல வரும் சாட்சிகள் ஞாபகக் குறைபாடு காரணமாகத் தடுமாற, அது “benefit of doubt" என்ற வகையில் குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதகமாகப் போய்விடுகிறது.

இதோ, இபோதும் நாளை தீர்ப்பு வழங்கவிருக்கப்படும் வழக்கும் பாருங்களேன், 60 வருடங்களாக நடந்து வருகிறது!! இது ஒரு பொது இடம் குறித்த வழக்கு என்றாலும் ஆதாரங்களைத் திரட்ட 60 வருடங்களா வேண்டும்? (இச்சமயத்தில் ஒரு கேள்வி எழுகிறது: ஒரு கட்டிடம் குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதை இடித்து விடுவது நீதிமன்ற அவமதிப்பாக ஆகாதா? #டவுட்)


அதேபோல, நீதிமன்ற வழக்கு விசாரணையாக அல்லாமல், அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன்களின் முடிவுகள்/ஆலோசனைகளும் செயல்படுத்தப்படாமல் அல்லது படவிடாமல் தடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன.  உதாரணம், கிருஷ்ணா கமிஷன்.

சட்டக்கல்லூரிகளில் நடக்கும் அராஜகங்களும், நாட்டின் சட்ட-ஒழுங்கைப் போற்றிப் பராமரிக்க வேண்டிய காவலர்கள்-வக்கீல்கள் மோதல்களும், ஏழை இந்தியனுக்கு,  நீதி கிடைக்க இவர்களிடம் வருவதைவிட கட்டப்பஞ்சாயத்து நடத்துபவர்களிடம் போவதே மேல் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன.

ஏற்கனவே, வழக்குகளுக்கு ஏற்படும் செலவுகளும், கால விரையமும் மக்களை நீதிமன்றங்களில் வழக்குப் போடுவதைத் தவிர்த்து, கோர்ட்டுக்கு வெளியே சமரசமாகப் போய் (அல்லது போய்த் தொலைகிறது என்று)  விட வழிவகுக்கும் நிலையில், நீதித்துறையிலும், காவல்துறையிலும் இன்று நடப்பவை மக்களுக்கு மேலும் நீதிமன்றங்களின் மீது அவநம்பிக்கையை வளர்க்கும் வாய்ப்புகளைத்தான் உருவாக்குகின்றன.

ஒரு கட்டப்பஞ்சாயத்து தாதா நடத்திய தனியார் நீதிமன்றம் அண்மையில் வெளியே வந்தது. அதிகளவு மக்களும் அதில் பயனாளிகனாக இருந்திருக்கிறார்கள்.  நீதித்துறை மீதிருக்கும் அவநம்பிக்கையாலேயே மக்களும் இத்தகைய கட்டபஞ்சாயத்து தாதாக்களையும், தனியார் நீதிமன்றங்களையும் நாட வேண்டிய கட்டாயத்திற்கு விரும்பியோ விரும்பாமலோ தள்ளப்படுகிறார்கள்.
 
சரியான சீர்திருத்தங்கள் அரசால் சட்ட/நீதித் துறையில் கொண்டுவரப்பட்டு, புனரமைக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற
தனியார் நீதிமன்றங்கள் பெருகி, அரசின் நீதித்துறையும் “அரசு கேபிள் நிறுவனம்” போலாகிடும்!!
  
 

Post Comment

எப்படி இருந்த நான், இப்படி..




  
 
”பாடினியார்” ஜெயந்தி  மூணுமாசம் முன்னாடி ”திருமணத்தில் உங்களளவில் நிகழ்ந்த காம்ப்ரமைஸ்கள் அல்லது நிராசைகள், முதல் பிரச்சினைகள், தர்மசங்கடங்கள், உரிமை நிலைநாட்டல்கள் - சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் “மருமகளின் டைரிக்குறிப்புகளை பற்றி எழுத அழைச்ச தொடர்பதிவு இது; ஸாரி ஃபார் த லேட் கமிங்!!

கல்லூரியில் படிக்கும்போதுதான் பெண்ணீயம், பெண்ணுரிமை, பெண் சுதந்திரம்   எல்லாம் குறித்தும் அதிகமாகப் பேசிக் கொண்டிருந்தேன். பெண்கள் சுதந்திரம் குறித்த மீட்டிங்குகள் கல்லூரியிலோ, சுற்று வட்டாரத்திலோ (வெளியூர்னா வீட்டில விடமாட்டாங்கல்ல)  நடக்கும்போதெல்லாம் நானும் ஆஜர்!! அதுவுமில்லாம எங்கம்மாவுக்கும் மாமியார்-நாத்தனார் கொடுமைகள் நடந்ததுண்டு. இன்னும் சில நெருங்கிய உறவுகளில் மாமியார் கண்டிப்பினையும் கண்கூடாகக் கண்டு வந்ததால், புகுந்த வீட்டினர் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் போல என்று புரிந்துகொண்டேன். பத்திரிகைகள், கதைகள், சினிமாக்களிலும் சித்தியைப் போல மாமியாரும் கொடுமையானவராகவே இருந்தது இன்னும் பயம் ஏற்படுத்தியது.

அதனாலேயே இன்னுமதிகம் பெண்ணுரிமைக் கூட்டங்களில் கலந்துகொண்டேன்.  இந்தப் பெண் விடுதலை குறித்த சந்திப்புகளும் எனக்கு நல்ல தைரியத்தையும் ஊட்டி, முற்போக்கு எண்ணங்களையும் வளர்த்து, எனது உரிமைகளையும் தெளிவாக அறியவைத்த அதே சமயம், மாமியார், நாத்தனார்கள்தான் பெண்களின் எதிரிகள் எனவும் அறுதியாகப் புரிய வைத்தன. இப்படியாக நானும் என்னைத் தயார் செய்துகொண்டேன்.

என்ன தயார் செய்துகொண்டாலும், வரதட்சணை, சீர், செனத்தியென்று எதுவும் எதிர்பாராத இடம்தான் வேண்டும் என்ற என் விருப்பங்களை வெளிப்படையாகச் சொல்லமுடியாத அளவு கட்டுப்பாடான, கண்டிப்பான  அம்மா!!  அப்பாவிடம் சொல்லலாம் என்றாலும், வெட்கமாக இருந்தது. தத்துபித்தென்று ஏதோ கொஞ்சம் சொல்ல, “அப்படியொரு வரன் அமைந்தால் எனக்கும் சந்தோஷம்தான்; ஆனால், அதற்காக அப்படி இடம்தான் வேண்டும் என்று என்னால் காத்திருக்க முடியாது” என்று சொல்லிவிட, எனக்கும் பிடிவாதமாக இருக்க முடியவில்லை. ஏனெனில், வேறுசில காரணங்களோடு, என் படிப்பு மற்றும் வேலையாலும் வரிசையாகத் தட்டிப் போன வரன்களும், என் மூன்று தங்கைகளும்!!

எங்களின் எந்தவித முயற்சியுமில்லாமலேயே, என் விருப்பப்படியே, ஆசைப்பட்ட படியே வரதட்சணை, சீர், செனத்தியென்று எதுவும் எதிர்பாராத இடம் அமைந்தது. இது எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது என்றுகூடச் சொல்லலாம். ஆமா, பின்னே? கஷ்டப்பட்டு டியூஷன், கோச்சிங்லாம் போய்ப் படிச்சு, எப்பேர்பட்ட ‘டஃப்பான’ கொஸ்டின் பேப்பரா இருந்தாலும் சமாளிச்சுடலாம்னு தெனாவட்டா பரீட்சைக்கு ரெடியா இருந்தா, ரொம்ப ஈஸியா கேள்வித்தாள் அமைஞ்சா “புஸ்”னு ஆகுமே அதுபோல ஆகிடுச்சு எனக்கு!! இருந்தாலும் அவங்க வீட்டில உள்ளவங்க எப்படி இருந்தாலும் நான் முதல்ல உறுதியா இருந்து என் உரிமைகளை நிலைநாட்டிக்கணும்னு நினைச்சுகிட்டேன்.

அப்புறம், என் சார்பா நான் தனியா பத்திரிகை அடிச்சுகிட்டேன். எங்க ஊர்லயே மணப்பொண்ணு தனியா பத்திரிகை அடிச்சுகிட்டது முதமுதல்ல எங்க வீட்லதான்னு நினைக்கிறேன்!! அதுல என் பேர் முதல்ல வந்ததப் பாத்து சந்தோஷப்பட்டுகிட்டே வந்தா, எங்க வீட்டில் அடிச்ச கல்யாணப் பத்திரிகையிலயும் என் பேருதான் முதல்ல!! இதுவும் “புஸ்”!! அதனால, என் வீட்டு சார்பா வச்ச அலங்காரத் தட்டிகள்ல என் பேரு முதல்ல வர்ற மாதிரி பாத்துகிட்டேன். ஆனா, அதை ஒரு ஈ, காக்கா கூட கண்டுகிடாததினால, அதுவும் ”புஸ்”!!

கல்யாணத்துக்கு முன்னாடி நாத்தனார் கூப்பிட்டு என்ன கலர் புடவை வேணும்னு கேக்க, நான் ”பட்டெல்லாம் வெறும் கலர் பார்த்தா எடுக்க முடியும், டிஸைன், கலர் காம்பினேஷன்லாம் பாத்துதான் எடுக்கணும்”னு பந்தா விட, உடனே அவங்க, “நானும் அப்படித்தான் நினைச்சேன்; ஆரெம்கேவிதானே, பேசாமே நீயும் அங்க வந்துடு, சேந்தே பாத்து எடுத்துக்கலாம்”னு சொல்ல, இதுவும் புஸ்!! “சே, நமக்கு சான்ஸே கொடுக்க மாட்டேங்கிறாங்களே”ன்னு நொந்துகிட்டேன். ஆனாலும் விடாமல், அவங்க எடுக்க நினைச்ச விலைக்கு, கிட்டதட்ட பாதி விலைக்குத்தான் எடுப்பேன்னு அடம்புடிச்சு நிறைவேத்திகிட்டேன்.

இதெல்லாம் ஆரம்ப ஜோர். இதுக்கெல்லாம் மசிஞ்சுடாதே; கல்யாணத்துக்கப்புறம் கண்டிப்பா (போராட) நல்ல வாய்ப்பு கிடைக்கும்னு என் மனச நானே சமாதானப்படுத்திகிட்டேன். இன்னும் ஆழமா என்னைத் தயார் பண்ணிகிட்டு, புகுந்த வீட்டுல அடியெடுத்து வச்சேன். ஆனா, நான் எவ்வளவோ தயார் பண்ணிகிட்டு வந்தாலும், அவங்க கையில வச்சிருந்த  ஆயுதத்துக்கு முன்னாடி என்னோட  முன்னேற்பாடுகள் எதுவுமே செல்லுபடியாகலை!! ஆமாம், அவங்களோட அந்த பயங்கர ஆயுதம் “அன்பு”!! அதற்குமுன் எது செல்லுபடியாகும்? இப்பவும் “புஸ்”!!

இத்தோடு, எந்த பண்டிகைச் சீரும் வேண்டாமென்று மறுத்ததும் என் வேலையைச் சுலபமாக்கியது. ஏன், நானே விரும்பிக் கேட்டும், வளைகாப்புகூட நடத்தவில்லை என் மாமியார். “மற்ற மருமகள்களுக்கும் செய்ததில்லை; உனக்கு மட்டும் செய்தால், அது பாரபட்சம் பார்ப்பது போலாகிவிடும்” என்று சொல்லிவிட்டார்.

இப்படி நான் செய்ய வேண்டியதெல்லாம் எனக்கு முந்தி அவங்களே செஞ்சு, என் வேலையைச் சுளுவாக்கி, in-lawsக்கெதிரா புரட்சி பண்ணி ஒரு ஜான்ஸி ராணியா வந்திருக்க வேண்டியவளை பிளான் பண்ணி அன்பால அடிச்சு “புஸ்” ஆக்கி,  இப்படி ஒரு சாதாரண பதிவராக்கிட்டாங்களோன்னு இப்பத்தான் எனக்கு சந்தேகம் வருது! :-)))))

இதனால் எனக்கு புகுந்த வீட்டில் எப்பவும் அன்பு மழைதான் என்று அர்த்தமில்லை; சிலபல சங்கடமான சுழ்நிலைகளும் வரும்; ஆனால், அப்பொழுதெல்லாம், தளர்ந்துவிடாமல், என் நிதானம் தவறிவிடாமல், சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து, மாமியார், நாத்தனார், ஓரகத்திகளைப் பேணி ஒற்றுமையாய் இருக்கும் பொறுமையை எனக்கு இந்தச் சம்பவங்கள் தருகின்றன.

உதாரணமாக,  திருமணமான சில வருடங்களில் வீடு கட்ட ஆயத்தமான போது, இயற்கை விரும்பியான எனக்கு வேறு விதமாக வீடு கட்ட ஆசை; ஆனால் என் மாமியார் உட்பட மற்றவர்களுக்கு அதில் விருப்பமில்லையென்று புரிந்துகொண்டேன். என் ஒருத்திக்காக அத்தனை  பேரின் ஆசையை நிராசையாக்குவதைவிட, அவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிடுவதே நல்லது; இறைவனருளால் வசதிவாய்ப்புகள் வாய்த்தால் என் விருப்பப்படி இன்னொரு வீடு கட்டிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். அதன் விளைவு, தனது நான்கு மகன்கள் கட்டிய வீடுகளில், என் மாமியாருக்கு மிக விருப்பமான வீடு இதுதான். “என் இறுதிப் பயணம் இந்த வீட்டில்தான் நடக்கவேண்டும்” என்று அவர் சொல்லுமளவுக்கு!!

’நான்’, என் பணம், என் கணவர், என் வீடு, என் இஷ்டம்தான் பிரதானம் என்று இருந்திருந்தால் இந்தப் பாக்கியம் கிடைத்திருக்குமா? ஒன்று கிடைக்க ஒன்றை இழந்தே ஆக வேண்டும். எது கிடைப்பதற்காக எதை இழக்கிறோம் என்பதுதான் நம் முடிவில்!!


Post Comment

வீடு




 

நியூசிலாந்து நாட்டில் சென்ற 4-ம் தேதியன்று பூகம்பம் ஏற்பட்டது நினைவிருக்காது பலருக்கும். (சரியாத்தான் எழுதியிருக்கேன்).  நினைவிருக்காததற்குக் காரணம், அதில் உயிரிழப்பு எதுவுமில்லை!! அப்படின்னா ஏதோ சின்ன அளவிலதான் பூமி அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று நினைத்தீர்களானால்...தவறு.. வந்தது, 7.1 ரிக்டர் அளவு!!

ஜனவரியில் ஹைட்டியில் (Haiti) 7.0 ரிக்டர் அளவுக்கு வந்த பூகம்பத்தில் இறந்தவர்கள் 2,30,000 - இரண்டு லட்சத்துக்கும் மேலே!!

எப்படி? ஏன்?ன்னு கேள்வி வருதில்லியா? வரணும். இந்த வித்தியாசத்துக்கு முக்கிய காரணம் - கட்டிடங்கள்!! நியூசிலாந்தில் ஒரு உயிரிழப்பு கூட நிகழாததற்கு, அங்குள்ள வீடுகள், அந்நாட்டின் கட்டிட விதிகளுக்குற்பட்டு கட்டப்பட்டிருப்பதுதான் காரணம். அந்நாடு பூகம்ப பகுதியில் அமைந்திருப்பதால், அதற்குரிய விதிகளுக்குட்பட்டுத்தான் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என்பதில் அந்நாட்டு அரசு கண்டிப்பாக இருப்பதால்தான் உயிரிழப்புகள் தவிர்க்கப்படுவது சாத்தியப்பட்டது.

ஆனால், ஏழை நாடான ஹைட்டியில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லையென்பதால்தான் இத்தனை மரணங்கள்.

பூகம்ப சமயத்தில் கட்டிடங்களின் கான்கிரீட் தளங்கள் இடிந்து மனிதர்கள் மேல் விழுவதுதான் மரண எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கிறது.இதைத் தவிர்க்க, கட்டிடங்கள் பூகம்பத்தின் அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும்படி அமைய வேண்டும்; உடைந்து விழும் பகுதிகள், அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தா வண்ணம் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை விதி.

www.nasa.gov

An earthquake-resistant building includes such structures as shear walls, a shear core, and cross-bracing. Base isolators act as shock absorbers. A moat allows the building to sway. (Image & text: www.nasa.gov)


வீடுகள் கட்டும் விதம் பற்றி பேசும்போது, கட்டுமானச் செலவை அதிகரிப்பவை பெரும்பாலும் சிமெண்டும், கம்பிகளும், டைல்ஸ், மார்பிள் போன்றவைதான். பதிவர் திரு.கண்ணா என்ற பொறியாளர்-பதிவர் எழுதிய “லாரி பேக்கர் கட்டுமான முறைகள்” பற்றி படித்தபின், அவற்றைப் பெருமளவில் தவிர்த்து கட்டிடம் கட்ட முடியும் என்று தெரிந்து ஆச்சர்யம் அடைந்தேன். மேற்கூறிய கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதுதான் கட்டுமான விலையை அதிகப்படுத்துகிறது. வீடு கட்டும் இடத்தில் கிடைக்கும் பொருட்களை மட்டுமே வைத்து வீடு கட்டுவதுதான் சரியான முறை என்பதே இம்முறையின் சாராம்சம்.  


இம்முறையில் கட்டப்பட்ட வீடுகளை இங்கு போய் பார்வையிடலாம். கேரளாவில் அதிகம் கட்டப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் கட்டப்பட்டனவா, எங்கே என்பதுகுறித்த தகவல்கள் தெரிந்தால் சொல்லுங்கள். 


இன்னுமொரு ஆச்சர்யத் தகவல் கிடைத்தது, இந்தத் தளத்தில்!! அதாவது, சிமெண்ட் கட்டிடங்கள் 60  - 70 ஆண்டுகள் வரையே தாங்கும், அதுவே களிமண்ணால் கட்டப்பட்ட வீடு என்றால் நூறாண்டுகளுக்கு மேல் தாக்குப் பிடிக்கும் என்பது!! 




இதப் படிக்கும்போது, முன்காலங்கள்ல சுண்ணாம்பு, கருப்பட்டி கலந்து கட்டப்பட்ட வீடுகள் நல்ல உறுதியாகவே இருந்தன என்பதை நம் தாத்தா காலத்து வீடுகளை இடிக்கும்போது அறிந்திருப்போம்.  ஏன், திருச்சியில் இதே முறையில் கரிகாலன் கட்டிய கல்லணை,  இதோ 1900 வருடங்களாக நிற்கிறதே!!


www.trekearth.com

 
ஊருக்குப் போயிருந்தப்போ, உறவினரின் “கட்டை குத்திய கூரை” வச்ச வீட்டுக்கு  (படத்தில் இருப்பது போல - கூரைப்பகுதியில் இடைவெளிவிட்டு மரக்கட்டை வைத்திருப்பார்கள் - இப்ப இதெல்லாம் பாக்கிறதே அபூர்வம்!!)  போயிருந்தேன். ஏ.ஸி. ஃபேன் இல்லாமலே, வீட்டுள்ளே இருக்கும்போது என்னா குளிர்ச்சி!!  இப்ப சிமெண்ட், டைல்ஸ்னு போட்டுட்டு கூடவே ஏ.ஸி.யும் தேட வேண்டியிருக்கு!!


சென்னை ராயப்பேட்டையில் நண்பரின் சொந்த வீடு இருக்கிறது. பத்து வருடம் முன்னே அவர் அங்கே குடிபோனபோது, கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. ஆழ்துளைக் கிணறு இருந்தாலும், தண்ணீரில்லை. கார்ப்பரேஷன் தண்ணீருக்கும் தட்டுப்பாடு அப்போது. சென்ற மாதம் அங்கு போயிருந்தபோது, போர் வாட்டர் தாராளம் என்றார்கள். எப்படி? மழைநீர் சேகரிப்புத் தொட்டி சரியானபடி அமைத்து, முறையாகப் பராமரித்ததில், தண்ணீரின் அளவு மட்டுமின்றி, சுவையும் அருமை!!


அதே மாதம், கேரளாவில் ஒரு வீட்டுக்குப் போயிருந்தேன். தோட்டத்தில் ஆழமில்லாத சிறு கிணறு போன்ற பள்ளம் வெட்டியிருந்தார்கள். மழைநீர் சேகரிப்புக்கா என்று கேட்டேன். “ஆமாம். ஆனால், சேகரிக்கப்பட்ட மழைநீரை டிரெயினேஜோடு சேர்த்து விடுவதற்காக.” என்றார்கள்!! ஏனாம்? அங்கே செம்மண் என்பதால், மழைநீர் எவ்வளவானாலும் உள்ளே உறிஞ்சப்பட்டுவிடும்; அது வீட்டின் அடித்தளத்துக்கு (ஃபவுண்டேஷன்) கேடு என்பதால் இப்படியாம்!! அவ்வ்வ்....னு அழத்தான் தோணுச்சு!!    


ஏன் இப்ப வீடு பத்தி புலம்பல்ங்கிறீங்களா? ஒண்ணரை மாசமா வீடு தேடுறேன் - அதான்!! 

 
 

Post Comment

மீண்டும் வரலாறு!!




http://www.secretwomenssociety.com/
1 & 2) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் - காரணம்?

இணையத்தில் வலம்வந்தபோது, சில இடங்களில் கருத்து தெரிவிக்க/ சந்தேகம் கேட்க வேண்டியது வந்தபோது, ”முன் ஜாக்கிரதை முத்தம்மா”வான நான் மிஸஸ்.ஹுஸைன் என்ற பெயரில் “பாதுகாப்பாக” வலம் வந்தேன்.  அது டைப்ப கஷ்டமாக இருந்ததால், “ஹுஸைனம்மா”வாக அவதாரம் எடுத்தேன். அப்படியே வலைப்பூவிலும்!!

மிஸஸ். ஹுஸைன் எப்படி ஹுஸைனம்மா ஆக முடியும் என்று கேட்டால்: சின்னக் கவுண்டரின் அம்மாவை கவுண்டரம்மா என்றும் சொல்லலாம், மிஸஸ்.கவுண்டர் என்றும் சொல்லலாம் என்ற அரிய தத்துவத்தை நினைவில் கொள்ளவும்!!

3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...

அது பதிவுலகம் பெற்ற பேறு!!

(ஏற்கனவே அந்த மொக்கையை இங்க போட்டாச்சு: வரலாறும், பொறியலும் ... தில் இருந்தா போய்ப் படிச்சுக்கோங்க!!)

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

அப்படின்னா நான் பிரபலமாகிட்டேனா?

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன?  இல்லை என்றால் ஏன்?

ஒன்லி சொந்த விஷயம், சொந்தக் கதை, சொந்தக் கருத்து, சொந்தப் பார்வைதான் இங்கே!! ஏன்னா, கதை விடற அளவுக்கு கற்பனை வளம் இல்லை!!

விளைவென்னா பெரிய விளைவு, பல விஷயங்களின் மாறுபட்ட கோணங்களும், பல மனிதர்களின் முரண்பட்ட குணங்களும் கண்டுகொள்ள முடிகிறது.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?..

பதிவெழுதி என்னாத்த பெரிசா சம்பாதிச்சுட முடியும் - ஒரு பத்தாயிரம், இருவதாயிரம்? நான் அவ்வளவு சீப்பாவெல்லாம் ஓசிக்கிறதில்ல.

பதிவெழுதி, மக்கள் மனசுல மெதுவா, வலுவா இடம் புடிச்சி, அப்படியே ஜெ.வுக்கோ இல்லை கனிமொழிக்கோ நெருங்கின தோழியாவோ அல்லது முடிஞ்சா நேஷனல் லெவல்ல சோனியாம்மாவுக்கு அஜிஸ்டெண்டாவோ சேந்துட்டா, அப்புறம் நம்ம லெவல் கேடி.. சீ... சீ.. கோடிகள்ல போயிடாது???

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒண்ணுத்துக்கே என்னைப் புடி உன்னைப் புடின்னு இருக்குது, இதில எங்கே இன்னொன்னு?

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?..

சில சமயம் கோவம் வரும். ஆனாலும் உப்பைத் தின்னவன் தண்ணியக் குடிப்பான்கிற விதிப்படி நடக்கும்னு கண்டுக்கிறதில்ல.

ஆனா, ஒரு விஷயம் பாத்து ரொம்ப ஆச்சர்யப்படுவேன்: எதாச்சும் ஒரு சண்டை வரும்; உடனே குரூப் குரூப்பாப் பிரிஞ்சு அடிச்சுக்குவாங்க. அப்புறம், கொஞ்ச நா கழிச்சு இன்னொரு சண்டை வரும்; அதுல பாத்திங்கன்னா, முன்னாடி அடிச்சுகிட்டவங்க ஒண்ணா சேந்துகிட்டு இன்னொரு குரூப்பை துவைப்பாங்க. இதுல அவங்க முன்னாடி அடிச்சுகிட்டது, திட்டிகிட்டதெல்லாம் மறந்து, தேனே மானேன்னு ஒருத்தருக்கொருத்தர் பாராட்டிக்குவாங்க!! மக்களை ஒத்துமையா வக்கிறதுக்குப் பதிவுலகப் பிரச்னைகளும் ஒதவுது போல!!

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

”தொடர்புகொண்டு பாராட்டிய” ன்னா - தொலைபேசி அல்லது மெயிலிலா? அப்படி யாரும் தனிப்பட்ட முறையில் பாராட்டவில்லை;  ஆனால், ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை, மேலும் இனியும் என் பதிவுகளைப் படித்து/ பின்னூட்டமிட்டு/ ஓட்டளித்துச் செல்லும் ஒவ்வொருவருமே எனக்கு அவ்வாறான மகிழ்ச்சியளிப்பவரே!!

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

தனியா வேற சொல்லணுமாக்கும்??!!
 
 

Post Comment

தேசிய நெடுஞ்சாலைகள்




 
 
(இந்தக் கட்டுரை, “நியூஸ் விகடனில்” “பாஸிடிவ் நியூஸ்” பகுதியில்  செப்டம்பர் 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது.)

என்னே ஒரு பசுமை! அதுவும் திருச்சி - மதுரை (NH45B) சாலையில்! 
சென்னையை விட அதிகம் வெயில் கொளுத்தும் திருச்சிக்கு அருகில் இப்படி மரங்களடர்ந்த மலைகள், தோப்புகள், பசுந்தோட்டங்கள் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. மதுரையும் வெக்கையில் சளைத்ததில்லையே, அதனால் ஒரு இன்ப அதிர்ச்சிதான்!!

சாலைவழிப் பயணங்களை விபத்து மற்றும் வாந்தி பயத்தால் அடியோடு வெறுப்பவள் நான். அதிகபட்சம் திருநெல்வேலி - திருவனந்தபுரம்தான் சாலை வழி செல்வது, அதுவும் நேரடி ரயில் இல்லாத காரணத்தால்தான். 

திருநெல்வேலியிலிருந்து திருச்சி, சென்னை செல்வதற்கு ரயில் பயணம்தான் வசதி என்று இத்தனை வருடங்களாக அப்படியே போயாகிவிட்டது. ரயிலில் போகும்போது மதுரை, திருச்சி நகரங்கள் நடுஇரவில்தான் வரும் என்பதால் இவற்றை இதுவரைக் கண்டதும் கிடையாது.

இப்பவும் தவிர்க்க இயலாத ஒரு சந்தர்ப்பத்தில்தான் மதுரைக்கு இந்தச் சாலைப் பயணம். திருச்சி - மதுரை எப்படியும் 3 - 4 மணிநேரம் ஆகும், அதுவும் குண்டும் முழியுமாக வாந்தி வேறு வந்துடுமே என்று பயந்துகொண்டேதான் காரில் ஏறினேன். வரும் வழி முழுவதும் அதிசயம், ஆச்சர்யம், இன்ப அதிர்ச்சிகள்தான்!

முதல் ஆச்சர்யம் - வழு வழு இருவழிச்சாலை! பொதுவாகவே தேசிய நெடுஞ்சாலைகளும்கூட பல இடங்களிலும் குண்டும் குழியுமாக இருக்கும்; மேலும் எதிரெதிரே வாகனங்கள் செல்லும் "single carriage way" என்பதால் விபத்துக்கான வாய்ப்புகள் அதிகம்; அதுவும் இடையில் நகரங்களின் வழியே சாலை செல்லும் இடங்களில் நெரிசலும் அதிகம்.



ஆனால், தற்போது புதிதாகப் போடப்பட்டிருக்கும் இருவழிச் சாலை (dual carriage way)  இருபக்கமும் தலா இரு லேன்களுடன் பரந்து விரிந்து, பளபளவென்றிருந்தது. 120 கி.மீ. வேகத்தில் சென்றபோதும் ஒரு  குலுக்கலில்லாமல் வழுக்கிக் கொண்டு போனதில் வாந்தியின் நினைப்புக் கூட வரவில்லை; இயற்கை அழகையும் ரசித்துக் கொண்டு செல்ல முடிந்தது. ஒன்றரை மணி நேரத்தில் மதுரையை அடைந்துவிட்டோம்!!

திருச்சி - மதுரை மட்டுமல்ல, திருச்சி-புதுவை, சென்னை - புதுவை, திருநெல்வேலி - நாகர்கோவில் என்று பல நெடுஞ்சாலைகளில் செல்வதற்குக் கிடைத்த வாய்ப்புகள்,  தமிழகத்தில் சாலைப் பயணம் ஒரு புதிய ரசனையான அனுபவமாக மாறி வருவதைக் கட்டியம் கூறியது.

இந்தியாவிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களும் சாலைப் பயணங்களையே தற்போது அதிகம் விரும்புகின்றனர். ஆயினும், இவ்வாறான இருவழிச் சாலைகள் வந்தபின்னும் விபத்துகள் நிகழ்வது குறையவில்லை. 

காரணங்கள்...
 
இரு திசைகளிலும் செல்லும் சாலைகளுக்கு நடுவில் மீடியன் இருப்பதால், ஒரு திசையிலிருந்து எதிர்த்திசைக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள், சற்று தூரம் பயணித்து, நிர்ணயிக்கப் பட்ட இடங்களில் மட்டுமே யூ-டர்ன் எடுக்க வேண்டும். ஆனால், குறுக்கு வழியிலேயே பயணப்பட்டுப் பழகியதாலோ என்னவோ, அவ்வாறு செய்யாமல், பலரும் அதே சாலையில் எதிர்த் திசையில் செல்கின்றனர். 

அதாவது வரும் வாகனங்களுக்கு எதிராக அதே சாலையில் சென்று, தம்முயிரை மட்டுமல்லாமல், எதிரே வரும் வாகனங்களில் இருப்பவர்களையும் ஆபத்துக்குள்ளாக்குகின்றனர். 120 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, நேரெதிரே அதே வேகத்தில் இன்னொரு வாகனம் வந்தால் எப்படியிருக்கும்? இதுதான் விபத்துகளுக்குப் பெருமளவில் காரணம்!!

நாங்கள் செல்லும்போது, முழு லோடு ஏற்றிய ஒரு "piaggio" எதிரே வந்து தடுமாற வைத்தது!! 

 www.team-bhp.com

அதுபோல இடையில் உள்ள சிற்றூர்களிலிருந்தோ, இணைப்புச் சாலைகளிலிருந்தோ வந்து நெடுஞ்சாலையில் இணையும் வாகனங்களும் சற்றும் கவனமின்றி, முறையற்ற வகையில் அதிவேகத்தில் வந்து இணைகின்றன!

கிராமங்களில் சாலையைக் கடக்க விழையும் மக்களும் இவ்வாறே எவ்வித கவனமுமின்றிக் கடக்கின்றனர். நாங்கள் செல்லும்போது, ஒரு தாத்தா, கம்பு ஊன்றிக் கொண்டு நிதானமாகச் சாலையைக் கடந்தார். கருமமே கண்ணாகத் தலையைக் குனிந்தே இருந்தார், இந்தப் பக்கம் அந்தப் பக்கம், ம்ஹும், திரும்பவேயில்லையே!



மேலும், தடம் பின்பற்றுவது (lane maintaining) என்பதும் ஓட்டுநர்களிடையே குறைவாக இருக்கிறது.  தடம் மாற்றும்போது  முறையான இண்டிகேஷன் இன்றி மாறிச் செல்வது தவறென்று தெரியவில்லை.

இவற்றையெல்லாம் எப்படிக் களைவது?
 
சிறப்பான சாலைகள் அமைத்து, அவற்றைப் பயன்படுத்துவதற்கு வரிகள் வசூலிக்கும் தனியார் நிறுவனங்களும், அதற்கு அனுமதி கொடுத்திருக்கும் நெடுஞ்சாலைத் துறையும், சாலை ஒழுங்கு பராமரிப்பிற்குப் பொறுப்பான போக்குவரத்துக் காவல் துறையினரும் இணைந்து இவற்றிற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

மக்களுக்குப் போதியளவு விழிப்பு உணர்வு ஊட்ட வேண்டும். விளம்பரத் தட்டிகள், நோட்டீஸ்கள் போன்றவை மட்டுமல்லாது, காவல்துறை நெடுஞ்சாலைகளிலும் தொடர்ச்சியாகப் பாரா வந்து (police patrol) விதிகளை மீறுபவர்களைப் பிடித்து கடுமையான அபராதம் மற்றும் தண்டனைகள் வழங்கினால் விபத்துகளை வெகுவாகக் குறைக்கலாம். நிச்சயம் குறைக்க முடியும்!

மேலும், நெடுஞ்சாலைகளில்  நடுவில் வந்து இணைவதற்கு வாகாக சர்வீஸ் ரோடுகள், பாதசாரிகள் கடப்பதற்கு நடைபாலங்கள், கால்நடைகள், மக்கள் மற்றும் பிற வாகனங்கள் சாலையில் குறுக்கிட முடியாதபடி சாலையோரம் மற்றும் சாலை நடுவில் தடுப்புவேலிகள் போன்றவையும் விபத்துகளைத் தவிர்ப்பதற்கு அவசியமானவை. Police patrol-ஐ உடனடி நடவடிக்கையாக மேற்கொண்டாலே பெருமளவில் விபத்துகள் குறைய வாய்ப்புண்டு!
  
 

Post Comment