விஜிஸ் கிரியேஷன்ஸின் விஜி அழைத்த தொடர்பதிவு இது.
பொதுவாகவே டைரி எழுதும் பழக்கமோ, புது வருட உறுதிமொழி எடுக்கும் பழக்கமெல்லாம் இல்லை எனக்கு. அதெல்லாம் நல்ல பழக்கமாச்சே!! ஆனால், இந்தத் தொடர்பதிவின் தலைப்பைப் பார்த்தபோது, நல்ல விஷயம்தானே எழுதுவோம் என்று நினைத்துச் சம்மதித்தேன். ஆனால், கிட்டத்தட்ட ஒரு மாசமா யோசிக்கிறேன்.. ம்ஹும்.. செஞ்சதாச் சொல்ல ஒரு பாயிண்டும் கிடைக்கலை.. என்னச் செய்யப் போறேன்னு யோசிச்சாலும் ‘ஞே’ தான்!!
இருந்தாலும் விட்டுடுவோமா நாம, படிக்காமலே 30-40 பக்கத்துக்கு காலேஜில எக்ஸாம் எழுதின அனுபவம் இருக்குல்ல!!
2001லன்னு நினைக்கிறேன், இந்தியாவின் மக்கள்தொகை ரொம்பப் பெருகிட்டு வருது, இது இந்தியாவின் வளர்ச்சிக்கு நல்லதில்லை, ஆ.. ஊ..ன்னு அலாரம் அடிச்ச ஊடகங்கள், இந்தியாவின் முதல் பில்லியனாவது குழந்தை இத்தனாவது நாள், இத்தனாவது மணிக்கு, இந்த ஊர்ல, இந்த ஆஸ்பத்திரியில் பிறக்கப் போகுதுன்னு கணக்குப் பாத்து (அது எப்படிங்க?) அறிவிச்சுட்டு, கரெக்டா அன்னிக்கு அங்க குழுமிட்டாங்க. நானும் படபடப்பா, அந்த துரதிர்ஷ்ட(??) குழந்தையைப் பெற்ற பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும், என்ன சொல்வாங்களோ, அப்படின்னு நினைச்சுகிட்டே சோகத்தோட பாத்துகிட்டிருந்தேன்.
ஆனா, என்ன நடந்துச்சு தெரியுமா? ஒரு பெண் மத்திய அமைச்சர் கையில அந்த பில்லியனாவது குழந்தையைக் கொடுத்து “ஸ்வீட் எடு.. கொண்டாடு”ன்னு ஒரே ஆட்டம், பாட்டம்தான் போங்க!! ஒரு சின்னஞ்சிறு குழந்தை அந்தச் சூழ்நிலையையே மாற்றிவிட்டது!! இந்திய மக்கட்தொகை அதிகரிப்பது ஆபத்து என்று அறிவிக்க அங்கே கூடிய அனைவரும் அதையெல்லாம் மறந்து, குதூகலித்ததைப் பார்த்தால், மக்கட்தொகைப் பெருக்கத்தைக் கொண்டாடுவதுபோல எதிர்மறையாக ஆகிப்போனதுதான் காமெடி!!
சம்பந்தமில்லாம இது எதுக்கு இங்கேன்னா, ஒரு வருஷக் காலத்தில் எத்தனையோ நடந்திருக்கும். நல்லதிலும் கெட்டது உண்டு; கெட்டதிலும் நல்லது உண்டு என்பதாக, அவற்றின் மூலம் நாம் பெற்ற “புத்தி கொள்முதல்”களைத் தான் நினைத்துப் பார்த்துக் கொள்ளவேண்டும், இல்லையா?
உதாரணத்துக்கு, என் அலுவலகத்திலும் ரெஸெஷனால் வரிசையாக ப்ராஜக்டுகள் கைவிட்டுப் போக, கவலையோடு ஈயோட்ட ஆரம்பித்த நான், பதிவெழுதவும் ஆரம்பிக்க, மிக வித்தியாசமான கருத்துகள், அனுபவங்கள், அறிவுரைகள், அழிமானங்கள் என்று எல்லாம் கலந்த சங்கமமாகப் பதிவுலகைக் கண்டேன். இதுதான் என்றில்லாமல், அரசியல், விஞ்ஞானம், விவசாயம், சமையல் என்று எல்லா துறைகளிலும் பல்வேறு கண்ணோட்டங்கள், எனக்கு அவைகுறித்த பரந்த அறிவைத் தந்தன. ஒரு இழப்பில், ஒரு லாபம்!! (ஒருத்தரோட இழப்பு, இன்னொருத்தருக்கு லாபம்னும் கொள்ளலாம்!! :-))) )
என்னுடைய “ஃபேவரைட்”டுகளான (இயற்கை) விவசாயம், Three "R"s, உலக வெப்பமயமாதல், தண்ணீர் சிக்கனம் குறித்து நிறைய விழிப்புணர்வுத் தகவல்கள் கிடைக்கின்றன. ஒவ்வொருமுறை தண்ணீர் பைப்பைத் திறக்கும்போதும் இப்பதிவுகள் ஞாபகம் வந்து மிரட்டுகிறது!! அதுபோல, விவசாயத்தைச் சின்ன அளவில் இப்பொழுதே நடைமுறைப்படுத்திப் பார்க்க ஆசை!! ஆனாலும், ”ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க” என்ற பழமொழியும் நினைவில் வந்துத் தொலைக்கிறது!! :-(
பதிவுலகிலக மற்றும் கல்லூரி நட்புகளை நேரில் சந்திக்க முடிந்தது இவ்வருடத்தில் பெரும் மகிழ்ச்சி தந்த நிகழ்ச்சி!!
சென்ற வருடத்தில், அறிந்த, தெரிந்த பலரும் ரிஸெஷனால் வேலையிழந்ததுதான் மிகவும் பாதித்ததென்றாலும், அனைவரும் வெவ்வேறு இடங்களில் மீண்டும் செட்டிலாகிவிட்டது மகிழ்ச்சியே!! உடல்நலப் பாதிப்புகள் இல்லாமலிருக்கும்வரை எதுவும் பெரிய இழப்பில்லை என்னைப் பொறுத்த வரை. புதிதுபுதிதாய் வரும் நோய்களும், நடக்கும் விபத்துகள் மட்டுமே என்னைக் கலவரப்படுத்தியுள்ளன.
இப்படிக் கவலைக்குரிய விஷயங்களை யோசித்து யோசித்து எழுதுமளவுக்கு நிம்மதியான, நலமான வாழ்வைத் தந்த இறைவனுக்கு நன்றி!! அடுத்தடுத்த வருடங்களும் இதேபோல கவலைகளை யோசிக்கும் வாழ்வை இறைவன் தரவேண்டுமே என்பதைத் தவிர, தற்போது பெரிய எதிர்பார்ப்பு ஏதுமில்லை!! அனைவருக்கும் இப்படியான நல்வாழ்வை எப்பொழுதும் தர வல்ல நாயனை வேண்டுகிறேன் .
|
Tweet | |||