Pages

Showing posts with label காஷ்மீர். Show all posts
Showing posts with label காஷ்மீர். Show all posts

கத்துவா – கண்டுகொள்ளப்படாத பின்னணிகள்




த்துவா கொடூர நிகழ்வில், ஆழ்ந்து உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.
ஆசிஃபா என்ற எட்டு வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தைத் தாங்க இயலாதவர்களாக, அவற்றை முக்கியப்படுத்தாமல் புறந்தள்ளி விடுகிறோம். ஆனால், அவற்றில்தான் ஆள்வோரின் நுணுக்கமாக அரசியல் அசிங்கங்கள் இருக்கின்றன.
1. கோவில்:

வழிபாட்டிற்கான இடம் மிகப் புனிதமானது. எப்பேர்ப்பட்டவனாகிலும், அங்கு வைத்து இம்மாதிரியான இழிசெயலைச் செய்யமாட்டான் என்று நாம் மிக உறுதியாக நம்புகிறோம். ஆனால், கொடூரத்திற்குத் துணிந்தவனுக்கு எல்லை கிடையாது. “கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது” என்பது சும்மா வசன அழகிற்காகச் சொல்லப்பட்டது அல்ல; வரலாறு அப்படி!!
ஔரங்கஸீபை, கோயிலை இடித்தக் கொடுங்கோலனாக இவர்கள் எழுதியுள்ள வரலாற்றின் பின்னும் இப்படியொரு சூட்சுமம் உள்ளது: கட்ச் மகாராணியை, கர்ப்பக்கிருகத்தின் கீழேயே வைத்து பலாத்காரம் செய்தவன், காசி விஷ்வநாதர் கோயிலின் அர்ச்சகன். (காஞ்சிபுரம் கோவிலின் தேவநாதன் இவ்விஷயத்தில் முதல் அர்ச்சகன் அல்லன்) 'தீட்டு' நிகழ்ந்த இடத்தில் இனி தெய்வம் இருக்கக்கூடாது என்று மற்ற இந்து மன்னர்கள் கேட்டுக் கொண்டபடி, அக்கோவிலை வேறு இடத்தில் தன் செலவில் கட்டிக் கொடுத்தவர் ஔவுரங்கஸீப்.
இப்படி வரலாற்றைத் திரிக்கும் இவர்கள்தாம், அயோத்தி கோவிலைக் கட்டியே தீர வேண்டும் என்றும், தமிழகத்தின் கோயில்கள் தங்கள் அதிகாரத்தின்கீழ் வரவேண்டும் என்றும் ரதம் ஓட்டுகிறார்கள். எதற்கு என்று புரிகிறதா?
இச்சம்பவத்திலும், 'கோயில் தீட்டுப்பட்டுவிட்டதாக' வருந்தி, ஆகமவிதிகளை அனுசரித்து, தெய்வச்சிலையை இடம் மாற்றக் கோருவது அந்தணரல்லாத இனத்தைச் சார்ந்த மன்னர்கள்தாம். தீட்டுப்படுத்தியதோ, ஆகம விதிகளைப் போதித்துக் கடைபிடிக்க வேண்டியவரும், மன்னர்கள் பெரிதும் மதித்துப் போற்றுபவருமான அந்தணர்!!
2. கஷ்மீர் இந்துக்கள்:

இவர்களது வழக்கமான இன்னொரு கோஷம், “கஷ்மீரில் இந்துக்கள் வெளியேற்றப்பட்டுவிட்டார்கள். அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது”.
ஆசிஃபாவின் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யாவர், எப்படிப்பட்ட ஒரு கொடூரம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்று பார்க்கிறோம். ஆனால், செய்தவர்களின்மீது வழக்குகூடப் பதியக்கூடாது என்று தடுக்க முடிகிறது என்றால், அவர்கள் எவ்வளவு வலிமையுடன் இருக்கிறார்கள் என்றும் தெரிகிறது அல்லவா?
3. இனத் துவேஷம்:

இக்கொடூரத்தைச் செய்யத் தூண்டியவர்கள் பயன்படுத்திய ஆயுதம் 'முஸ்லிம் ஒழிப்பு'.
சஞ்சி ராம் எனும் 60 வயது கோயில் பொறுப்பாளன், இந்த இனத்துவேஷத்தைச் சொல்லி, ஒரு பள்ளி மாணவனை, சிறுமியைக் கடத்தி வரத் தூண்டுகிறான். (இவனுக்கெல்லாம் என்ன மரியாதை வேண்டிக்கிடக்குது?).
இளைய தலைமுறையிடம் இந்த வெறுப்பைப் பதிய வைத்து, மூளைச்சலவை செய்வதன் மூலம், அவர்களுக்கு மிகச்சுலபமாகப் 'போராளிகள்' கிடைத்துவிடுவார்கள். அவர்களின் உழைப்பில், இவர்கள் மிகச்சுலபமாக அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளலாம்.
4. காணாமல் போனவர்கள்:

சுமார் ஒன்றரை வருட காலமாக 'நஜீப்' என்ற கஷ்மீரி இளைஞனைக் காணோம் என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். நஜீபின் தாயாரின் தொடர் முயற்சிகளால் ‘நஜீப் என்ற கஷ்மீரி இளைஞன் காணாமல்(?) போய்விட்டான்’ என்று உலகம் அறிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், முஸ்லிம்கள் தொலைந்து போவது என்பது கஷ்மீருக்குப் புதியதல்ல. இளைஞர்கள், குடும்பத் தலைவர்கள், பெண்கள் திடீர் திடீரெனக் காணாமல் போவது கஷ்மீரில் வழக்கம்தான் அங்கு. அவர்களின் குடும்பத்தினரோ அருகிலுள்ள காவல் நிலையத்திற்குக்கூடப் போவதற்கு அச்சப்பட்டு, தேடுதலைத் தொடராமல் விட்டு விடுவார்கள். போனவனுக்கு உயிர் இருக்காது, இருப்பவர்களுக்கு உயிர் இருந்தும் இல்லாதது போலத்தான்....அவ்வளவு அச்சத்தில் வாழ்கிறார்கள் அங்குள்ள முஸ்லிம்கள்!!
காணாமல் போனவர்கள் சங்கம்” ஒன்று ஆரம்பிக்குமளவு அங்குக் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அங்குள்ள நிலையை.
4. அதிகாரத் துஷ்பிரயோகம்:

ஆசிஃபாவின் கொலைச்சதிக்குப் பின்னால், ஒரு நிலத்தகராறு காரணமாகச் சொல்லப்படுகிறது. ஒரு நிலத்திற்காக, ஒரு பிஞ்சின் உயிரைச் சித்ரவதை செய்து, கொன்று போடுகிறார்கள். பின்னர், அச்சிறுமியை அவர்களது சொந்த நிலத்தில் புதைக்கக்கூட விடாமல், வெளிப்படையாக மிரட்டுகிறார்கள். அதன் காரணமாக, அக்குடும்பத்தினர் சொந்த ஊரைவிட்டே போய்விடுகின்ற அச்சம் கலந்த அவலம். இதையெல்லாம் செய்வதற்கு, அதிகாரம் படைத்தவர்கள் தம் பக்கம் இருக்கிறார்கள் என்ற அகம்பாவம்தான் தூண்டுதலாக இருக்கிறது.
இக்கொலை பாதகத்தைச் செய்தவர்கள் யாரென ஆதாரபூர்வமாகத் தெரிய வந்த பின்பும், அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய விடாமல் பெண்கள் உள்ளிட்டவர்கள் போராடுகிறார்கள் என்றால், அதிகார பக்கபலம் தரும் தைரியம் அல்லாமல் வேறென்ன காரணமாக இருக்க முடியும்?
5. தேசபக்தி:

கொலையாளிகள்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கூடாது எனப் போராடுபவர்களின் கையில் தேசியக் கொடி உள்ளது!! இதுதான் இவர்களின் தேசபக்திக்கான அளவுகோல்!! “பாரத் மாதா கீ ஜெய்” சொல்பவர்களும் சினிமா தியேட்டர்களில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்பவர்களும்தான் தேசபக்தர்கள் என வரையறை வகுத்து, சக மனிதர்களை அடித்துத் துன்புறுத்தும் மனித மிருகங்கள் இவர்கள்!
6. பெண் உரிமை பேசுபவர்கள்:

முஸ்லிம்களை அச்சுறுத்தி, நிலத்தைப் பிடுங்கவும், அவர்களை ஊரைவிட்டே விரட்டவும் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்யவும் தயங்காத கல்நெஞ்சுக்காரர்களான இவர்கள்தாம், “பாகிஸ்தானில் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்; ஆஃப்கானிஸ்தானில் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகின்றனர்” என்று கூவுவார்கள்; “பர்தா பெண்களை அடிமைப்படுத்துகின்றது” என்றும் சவுண்ட் விடுவார்கள். இந்தியாதான் பெண்களுக்கு சகல உரிமைகளும் தந்து சுதந்திரமாக வைத்திருகின்றது என்பதுபோல படம் காட்டுவார்கள்.

குஜராத், முஸஃபர் நகர் உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் என்பதற்காகவே பெண்கள் கொத்துகொத்தாக வன்கொடுமை செய்யப்பட்டதை அறியாததுபோலவே  - ஏன், அது சரிதான் என்பது போல நடந்து கொள்வார்கள்.
அதே நேரத்தில், இவர்களது ஆண் அமைச்சர்களோ, “பாலியல் வன்முறை சின்ன விஷயம்தான்; பெரிதுபடுத்தினால் இந்தியாவின் சுற்றுலா வருமானம் பாதிக்கும்” என்று வருமான இழப்பைப் பற்றி வருத்தப்படுவார்கள். பெண் அமைச்சர்களோ, கருத்து சொல்லாமல் மௌன விரதம் மேற்கொள்வார்கள்.
7. அச்சுறுத்தல்:

'பாலியல் பலாத்காரம்' என்பது, பழங்காலம் தொட்டே, இந்தியாவில் உயர்சாதி மக்களால், தாழ்ந்த சாதி மக்கள் மீது ஏவப்பட்டு வரும் ஓர் அஸ்திரம் (ஆதாரம், மார்புச் சீலைப் போராட்டம்). வலியவர்களான இவர்கள், எளியவர் மீது ஏவிய அந்த அஸ்திரம், விதவைகள் மறுமண மறுப்பு காரணமாக தங்களின் மீதே பூமராங்காகத் திரும்பி விடுமோ என்று அஞ்சித்தான், 'உடன்கட்டை' ஏறுதல் என்ற பழக்கத்தையே கொண்டு வந்தார்கள். ஆனால், அதற்கும் முஸ்லிம் மன்னர்கள் மீது பழி போட்டார்கள்.
அதே ஆயுதத்தைத்தான் குஜராத் கலவரத்தின்போதும், உத்தரபிரதேசம் முஸாஃபர்பூர் கலவரத்திலும் பயன்படுத்தினார்கள். இப்போதும், “முஸ்லிம் பெண்களின் பிணங்களையும் தோண்டியெடுத்து புணர வேண்டும்” என்று கொக்கரித்தவரை ஒரு மாநில முதல்வராகவும், பெண்களின் மீதான வன்முறைகளைக் கண்டுகொள்ளாதிருக்கும் ஒருவரைப் பிரதமராகவும் கொண்டிருக்கிறது இத்தேசம்.
ங்களின் பக்கம் திரும்பாத வரை 'பாலியல் வன்முறை' குறித்து சகோதர இந்துக்கள் பிரச்னையில்லை என்று எண்ணியிருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், அவசியப்பட்டால் அரசியல் இலாபத்திற்காக, தன் சொந்த இனப் பெண்களைக்கூட கருவறுக்கத் துணிபவர்கள் இவர்கள்.
அரசியல் ஆதாயத்திற்காக, தன் சொந்த வீட்டின் மீதே பெட்ரோல் குண்டு எறிபவர்களைக் கண்டிருக்கிறீர்கள். அதைச் செய்பவர்கள் இதைச் செய்யத் துணிய மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?
ஆகவே, இனியும் இவர்களை நீங்கள் ஆதரிக்கத்தான் வேண்டுமா என்று சிந்தியுங்கள்.
oOo
-ஹுஸைனம்மா

கூடுதல் குறிப்புகள் ஆங்கிலத்தில்:

Post Comment