சமீபத்தில் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வின் அடிப்படையில், இயற்கை விவசாயத்தால் விளைந்த உணவுப்பொருட்களும், ரசாயன உரங்களால் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களும் ஒரே அளவிலான சத்துக்கள் கொண்டவையே. இயற்கை விவசாயத்தால் அதிகப்படி சத்துக்கள் ஒன்றும் கிடைப்பது இல்லை என்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். இதையொட்டி, பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்றவாறு மொத்த உணவு உற்பத்தி செய்வது ரசாயன உரங்களினால்தான் சாத்தியப்படும் என்று ஒரு கட்டுரை New York Times பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. இதன் வலைத்தளக் கருத்துப் பகுதியில் வாசகர்கள் “அதிகச் சத்துக்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; நஞ்சுகள் இல்லாத உணவே வேண்டும்” விளாசித் தள்ளிவிட்டார்கள்.
‘சத்யமேவ ஜெயதே’யில் அமீர் கானும், இயற்கை விவசாயத்தை ஆதரித்து ஒரு நிகழ்ச்சி நடத்தினார். அவர், அமீரகத்திற்கு வந்திருந்தபோது, ஒரு பத்திரிகையில் ‘இந்தியா குறுவிவசாயிகளின் நாடு. அதனால்தான் இயற்கை விவசாயம் இங்கு சாத்தியமாகிறது’ என்கிற தொனியில் பேட்டியளித்திருந்தார்.
அப்படின்னா, பலநூறு ஏக்கர் பரப்புள்ள பெரிய விவசாய பண்ணைகளில் இயற்கை விவசாயம் சாத்தியமில்லை என்று கூறப்படுவது சரிதானோ?
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
இதோ இந்த தர்பூசணியில் ரோஜாப் பூக்களைப் பார்க்கும்போது, உங்களுக்கு என்ன தோன்றுகிறது? எனக்கு, பூ செய்யும்போது வெட்டிப் போட்ட பழத்தை வேஸ்ட் பண்ணாமச் சாப்பிட்டிருப்பாங்களா, இந்தப் பூ(பழம்)வையும் இப்படியே வச்சு, பிறகு வீணாக்கிடக் கூடாதேன்னுதான் தோணுது. ஏனெனில், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் (food festival) அதுதான் நடக்கிறது.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
நம்ம ஊரில், கட்சிக் கூட்டங்களுக்கு, உண்ணாவிரதத்துக்கு ஆட்களைக் கூட்டி வந்து பலத்தை ’நிரூபிப்பார்கள்’! நம்ம ஊர்லதான் இப்படி, வெள்ளைக்காரங்கள்லாம் அப்படி கிடையவே கிடையாதுன்னு நம்புற வெள்ளை மனசுக்காரங்க நாம.
வெளிநாட்டுக் கட்சிக் கூட்டத்தை விடுங்க. ட்விட்டர்லயே ஆயிர-லட்சக்கணக்கில் பின் தொடர்பவர்கள் வைத்திருப்பவர்கள், எல்லோருக்குமே அது ‘தானா’ வந்தவங்க கிடையாதாம். ‘வாங்கின’ கூட்டமாம்!! வாங்கித்தருவதுக்குன்னே நிறைய தளங்கள் இருக்காம். விலையும் ரொம்ப சல்லிசுதான் - அஞ்சு டாலருக்கு, ஆயிரம் பேர்!!
ப்ளாக்குக்கும் இந்த மாதிரி (தமிழ்) ஃபாலோயர்ஸ் மொத்தமா கிடைப்பாங்களான்னு விசாரிக்கணும்.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனின் தனிப்பட்ட படங்களை ஐரோப்பாவில் சில பத்திரிகைகள் வெளியிட்டுள்ளதைக் கண்டித்து, அரச குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்ததில், படம் வெளியிடுவதற்குத் தடை விதித்து, ஃப்ரான்ஸ் நாட்டுப் பத்திரிகைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரவேற்கவேண்டியது.
அவதூறான செய்தி, படங்கள் வெளியிடுவதென்பதில் இரட்டை நிலை எடுக்காமல், நாடுகளும், நீதிமன்றங்களும் ஒரே நிலையைப் பின்பற்றவேண்டும்.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
தேக்கடி படகு விபத்து மறந்திருக்காது. நடந்து மூன்று வருடங்களாகியும், இன்னும் குற்றப்பத்திரிகைகூடத் தாக்கல் செய்யப்படவில்லையாம். காரணம் - அதில் சம்பந்தப்பட்ட இரு அரசு (சுற்றுலாத்துறை) ஊழியர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்கு இன்னும் சம்பந்தப்பட்ட அரசுத்துறையின் அனுமதி கிடைக்கவில்லையாம். கிடைச்சுட்டாலும்....
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இப்ப நடக்கிற மோதலுக்குக் காரணம், இரு நாடுகளுமே சொந்தம் கொண்டாடும் ஒரு தீவு. இந்தியா - பாகிஸ்தானுக்கு ஒரு காஷ்மீர் போல!! ஆனா, ஒரு வித்தியாசம், பிரச்னை இருந்தாலும், இரண்டு நாடுகளுமே அதை, காஷ்மீர் என்றுதான் அழைக்கின்றன. அங்கு சீனா பிரச்னைக்குரிய அந்தத் தீவை ‘டையாவூ’ என்ற பெயரிட்டு அழைக்க, ஜப்பான் அதை ‘சென்காகு’ என்றழைக்கிறது. இப்ப சீனாவில் ஜப்பானிய தூதரகத்தின்முன் போராட்டம், ஜப்பானிய பணியாளர்களைத் திருப்பி அனுப்புவது என்று எதிர்ப்பு நடவடிக்கைகள் வலுக்கின்றன்.
நம்மளப் போலவேத்தான் மத்த மெத்தப் படிச்ச நாட்டுக்காரங்க(ன்னு சொல்லிக்கிறவங்க)ளும்னு தெரியும்போது, ஒரு அல்ப சந்தோஷம்.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
’பர்ஃபி’ ஹிந்தி திரைப்படம்: வழக்கமாக, படங்களிலும், நிஜத்திலும், ஆணுக்கு மனவளர்ச்சி குன்றியிருந்தாலும், காதல்-காமம் எல்லாம் இருக்கும்; திருமணமும் நடக்கும். ஆனால், அதுவே பெண் என்றால், அந்த உணர்ச்சிகளே இருக்காது - இருக்கக்கூடாது. அந்த வகையில், நல்ல முயற்சி. படம் பார்க்கும்போது, இந்த மாதிரி படங்கள் தமிழில் வருவதில்லையே என்று தோன்றியது. தமிழில் எடுத்திருந்தால், க்ளைமேக்ஸில் தாலி செண்டிமெண்ட் சீன் அல்லது பிரசவ சீன் வச்சு, ஜில்மில் (ப்ரியங்கா) குறைபாடு நீங்கி, அக்மார்க் தமிழ்ப் பெண்ணாக ஆகியிருப்பாள். படமும், இன்னொரு ‘சின்னத்தம்பி’ ஆகியிருக்கும்.
’பர்ஃபி’ பார்த்து, ரெண்டு நாள் கழிச்சு என்னவர் கேட்டார், “இந்தப் படத்துல ப்ரியங்கா சோப்ரா நடிச்சிருக்காப்லயாமே. கெஸ்ட் ரோலா? வரும்போது நான் தூங்கிட்டேனோ?”!!!!
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
|
Tweet | |||