Pages

பிடிப்போம், படிப்போம்: நியூட்ரினோக்கள்





மிழ்நாடு தேனி மாவட்டத்தில் கட்டப்படவுள்ள ஒரு அறிவியல் ஆய்வுக்கூடக் கட்டுமான செய்தி, கூடங்குளம் பரபரப்பினால் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளது. சமீபத்தில், ‘ஹிக்ஸ் போசான்’என்கிற கடவுள் துகள் கண்டுபிடித்தார்களே, சுவிட்சர்லாந்தில் CERN என்ற ஆய்வுக்கூடத்தில்? அதுபோன்றதொரு ஆய்வு மையம், நம் தமிழகத்தில், மதுரை அருகில், மேற்குத் தொடர்ச்சி மலையைக் குடைந்து பூமிக்கடியில் அமைக்கப்படவுள்ளது.

சுமார் 1350 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள இந்த ஆய்வகம், இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகுந்த பெருமை சேர்க்கும். அறிவியல் ஆராய்ச்சிகளில் இந்தியாவுக்கும் ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தரும். ”இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம்” (Indian Neutrino Observatory)  என்கிற இந்த ஆய்வகத்தின் பணிகளில், இந்தியாவிலுள்ள 25 ஆய்வு மையங்கள், அனைத்து ஐ.ஐ.டி.க்கள், பல்வேறு பல்கலைக்கழகங்கள் இணைந்து பணியாற்றப் போகுமளவு முக்கியத்துவம் வாய்ந்த, இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆய்வகமாக இது அமையும்.

என்ன சிறப்பு இந்த நியூட்ரினோவில்?


யற்கையாகவே அண்டத்தில் காணப்படும் துகள்களே “நியூட்ரினோ” என்பவை. இவை சூரியக்கதிர்களிலும் காணப்படும்; தவிர நட்சத்திரங்களின் பிறப்பு-இறப்பு, விண்வெளியில் நடக்கும் சூப்பர்நோவா போன்ற நட்சத்திர வெடிப்புகள் போன்ற எல்லா அணுவெடிப்பு – அணுசேர்ப்பு (nuclear fission/ fusionநிகழ்வுகளிலும் நியூட்ரினோக்கள் உருவாகும். பூமியில் நடக்கும் அணு நிகழ்வுகளிலும் இவை உருவாகும். ஒரு நொடியில், பல கோடி நியூட்ரினோத் துகள்கள் பூமியை வந்தடைகின்றன. இவற்றைப் “பிடித்து” ஆராய்ச்சி செய்தால், பிரபஞ்ச உருவாக்கத்தைக் குறித்த பல ரகசியங்களையும் அறிந்துகொள்ளலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அவை பிரபஞ்சம் உருவான காலந்தொட்டே இருக்கின்றன. அண்டத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டபொழுதிலும், நியூட்ரினோ துகள்களில் எந்த மாற்றமும் இதுவரை ஏற்பட்டதில்லை. நியூட்ரினோக்கள், எந்த ஆபத்தும் இல்லாதவை. எதையும் ஊடுறுவும் திறன் கொண்ட இவை, ஒளியின் வேகத்தில் செல்லும். ஒரு நொடியில், டிரில்லியன் கணக்கான நியூட்ரினோக்கள் நமது உடலையும் ஊடுருவிச் சென்று வருகின்றன. இவற்றிற்கு எடை கிடையாது; கதிர்வீச்சும் இல்லை; மின்னூட்டமும் (electric charge) கிடையாதென்பதால், பூமியின் மின்காந்த புலங்கள் உட்பட, எவற்றாலும் பாதிக்கப்படுவதில்லை. ஏன், மலைமுழுங்கி மகாதேவன்களாகிய ”கருந்துளைகள்”கூட (black holes), இவற்றை ஒன்றும் செய்வதில்லை!! ஆகையால் பூமியை வந்தடையும்போது எந்த மாற்றமும் இல்லாமல், தோன்றியது போலவே வந்தடையும். இப்படி ”என்றும் மார்க்கண்டேயனாக” இருக்கும் இந்தப் பண்பே, விஞ்ஞானிகளுக்கு இதனை ஆராயும் ஆவலைத் தூண்டுகிறது.

என்ன ஆய்வு மையம் அது?

லகில், கனடா,  ஜப்பான்,  அண்டார்டிக்கா, ஸ்விட்சர்லாந்து போன்ற மிகச்சில இடங்களில் மட்டுமே நியூட்ரினோ ஆய்வகங்கள் உள்ளன. தற்போது நம் நாட்டில் ஒன்று புதிதாகக் கட்டப்படவுள்ளது. நியூட்ரினோ ஆய்வுக்கூடங்கள் நமக்கொன்றும் புதிதல்ல. 1965-லேயே, கோலார் தங்கவயலின் சுரங்கத்தில் விஞ்ஞானி பாபா தலைமையில் ஆய்வுகள் நடந்தன. பின்னர் அது மூடப்பட்டுவிட்டது. தற்போது கொல்கத்தாவில் ஒரு சைக்ளோட்ரான் ஆய்வகத்தில் இதன் ஆராய்ச்சியும்  மிகச்சிறிய அளவில் நடைபெற்று வருகிறது.


இப்போதைய புதிய ஆய்வுக்கூடம், தமிழ்நாடு-கேரளா எல்லைக்கருகில், தேனி மாவட்டத்தில், பொட்டிப்புரம் என்ற ஊரில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக்குக்கீழ் அமைக்கப்படவுள்ளது. மலைப்பாங்கான இடம் என்பதே இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம். அண்டக் கதிர்களில் (cosmic rays)  உள்ள நுண்ணிய நியூட்ரினோத் துகள்களை வடிகட்டிப் பிடிப்பதற்கு, அடர்த்தியான கற்களைக் கொண்ட மலைப்பிரதேசமாக இருத்தல் அவசியம். அதே சமயம், மழைப்பொழிவு இல்லாத இடமாகவும் இருக்க வேண்டும். பொட்டிப்புரத்தில் உள்ள பொட்டிதட்டி மலை என்கிற குன்று இதற்குத் தோதாக உள்ளதாக விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர்.

நியூட்ரினோக்கள் அண்டத்தில் அதிகமதிகம் காணப்படுபவை என்றாலும், எதனோடும் வினைபுரியாத அவற்றைப் பிடிப்பதுதான் மிகவும் சிரமமான செயல். அதற்காகத்தான் சிறப்புக் கருவிகளோடான ஆய்வுக்கூடங்கள் அவசியமாகின்றன. பூமிக்கடியிலும் தடையின்றி ஊடுருவிச் செல்லக்கூடிய நியூட்ரினோக்களை, 1 கி.மீ.க்கும் கூடுதலான ஆழத்தில் பிடிப்பது சற்றே இலகு என்பதாலேயே, இதற்கான ஆய்வுக்கூடங்கள் பெரும்பாலும் நிலத்தடியில் அமைக்கப்படுகின்றன.


Schematic view of the detector at INO
தேனியில் அமையப்படவுள்ள ஆய்வுமையமும், மலையைக் குடைந்து, சுமார் 2 கி.மீ. ஆழத்தில்தான் கட்டப்படவுள்ளது. ஆய்வகத்தை முக்கிய சாலையுடன் இணைப்பதற்கு, 2 கி.மீ. நீள சுரங்கப்பாதையும் அமைக்கப்படும். ஆய்வகத்தில் 50,000 டன் எடைகொண்ட காந்தம் பயன்படுத்தப்படும். ஸ்விட்சர்லாந்தில் உள்ள CERN ஆராய்ச்சிக்கூடத்தில் இருப்பதைவிட இது நான்கு மடங்கு பெரிது!! மட்டுமல்ல, உலகிலேயே பெரிய காந்தமும் இதுவே.
நியூட்ரினோ துகளைப் பிடித்தும் ஆராய்ச்சி செய்வது மட்டுமல்லாமல், பிற்காலத்தில் உலகிலுள்ள மற்ற ஆய்வுக்கூடங்களுடன் நியூட்ரினோ கற்றைகளை நிலத்தடிவழியே பரிமாற்றம் செய்து கொள்ளும் திட்டமும் உள்ளது.

சரி, இந்த ஆய்வுகளால் என்ன பயன்?

* முன்பே சொன்னதுபோல, பூமி பிறந்த காலம்தொட்டு மாற்றமேதுமின்றி, ‘அழியாமை’ கொண்ட நியூட்ரினோக்களை ஆராய்ந்தால் பிரபஞ்ச உருவாக்கம் குறித்த உண்மைகளை அறியலாம்.

*சூரியனிலிருந்து தோன்றும் நியூட்ரினோக்களை ஆய்வதன்மூலம், சூரியனின் மையம் (core) குறித்த தன்மைகளை அறியலாம்.

* சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் குறித்தும் முன்னறிவிப்புப் பெற இயலுமா என்ற முயற்சியும் இருக்கும்.

* மிக முக்கியமாக, நியூட்ரினோக்களை கதிர்வீச்சு உள்பட எதுவும் பாதிக்காது என்பதால், கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு பெறும் வழிகள் கிடைக்கலாம்.

* ஆய்வுமையத்தால் தமிழ்நாடு – தேனி உலக அளவில் விஞ்ஞான முக்கியத்துவம் பெறும். வேலைவாய்ப்பு பெருகும். உலக அரங்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு சிறப்பு.

யன்கள் என்ன என்று கேட்கும்போதே, அப்போ தீமைகளும் உண்டோ என்ற சந்தேகம் எழுகிறதல்லவா?

முன்பே கூறியதுபோல, நியூட்ரினோக்கள் எந்த ஆபத்துமில்லாதவை. நேரிடையாக நியூட்ரினோக்களால் அசாதாரணங்கள் எதுவும் நிகழ வாய்ப்பில்லை என்றபோதும், பரிசோதனைக் கூடங்களாலும், முறைகளாலும் சுற்றுப்புறத்திற்கு மறைமுகமாக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக, ஆய்வுக்கூடக் கட்டுமானப் பணியின்போதுதான் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது. ஆய்வுக்கூட பணிகள் ஆரம்பித்த பின்னர், கதிர்வீச்சு போன்ற ஆபத்துகள் இல்லை என்ற போதும், பலத்த அதிர்வுகள், அதிகத் தண்ணீர் பயன்பாடு, மின்சாரப் பயன்பாடு, தொடர் வாகனப் போக்குரத்து போன்றவற்றால் சூழல் பாதிக்கப்படக்கூடும்.  
 
1.  மலையுச்சியிலிருந்து சுமார் 2 கி.மீ. ஆழத்தில் அமையவிருக்கும் ஆய்வகத்திற்குச் சென்றுவர சுரங்கப்பாதையும் அமைக்கப்படும். இந்தப் பணிகளுக்காக, மலையைக் குடைந்து சுமார் இரண்டேகால் லட்சம் கனமீட்டர் கல் வெட்டி எடுக்கப்படும்போது, காற்றில் தூசி பரவும். இதைத் தடுக்க, சரியான தடுப்பு பணிகள் செய்யப்படாவிட்டால் தூசு மண்டலம் சூழ வாய்ப்புள்ளது.


வெட்டி எடுக்கப்பட்ட கற்களும் அவ்விடத்திலேயே சிறிதுகாலம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் என்பதும், அது காற்று அதிகம் வீசும் இடம் என்பதும், தூசு பரவுவதை அதிகரிக்கச் செய்யும்.  சிறிய அளவில் கற்கள் வெட்டி எடுக்கப்படும் குவாரிகளினால் ஏற்படும் தூசி பாதிப்பே சுற்றுப்புற மக்களைப் பெருமளவு பாதிக்கிறது. பெரிய மலையை வெட்டி எடுக்கும்போது வரும் பெரிய பாதிப்புகளைக் குறைக்க – முழுமையாகத் தடுக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியே.

 2.  இந்த இடத்திலிருந்து சுமார் 40கி.மீ. தொலைவில் இடுக்கி அணையும், 100 கி.மீ. தொலைவில் முல்லைப் பெரியாறு அணையும் இருக்கின்றன. மலையைக் குடையும்போதும், சுரங்கப்பாதைகள் அமைக்கும்போதும் ஏற்படும் அதிர்வுகள் அவற்றைப் பாதிக்கலாம் எனக் கூறப்படுகின்றது. கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், இதைச் சுட்டிக்காட்டி இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
3.  ஆய்வகம் அமையவிருப்பது மரங்கள் நிறைந்த ஒரு மலைப்பிரதேசம். கட்டுமான பணிகளுக்காகவும், சாலைகள் அமைப்பதற்காகவும், இங்கிருக்கும் மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டும். பசுமை அழியும். இதன் பின்விளைவுகளாய், ஏற்கனவே குறைந்த அளவே மழைப்பொழிவு கொண்ட தேனியில்  மேலும் மழை குறையும். வறட்சி ஏற்படும்.
 
4.  மரங்கள் வெட்டப்பட்டு, வாகனப் போக்குரத்தும், மனித நடமாட்டமும் அதிகரிக்கும்போது, இங்கு வாழும் பிராணிகள் தம் இருப்பிடத்தை இழக்க நேரிடும். தொடர்ச்சியாக அவற்றின் எண்ணிக்கை குறையும்; உயிர்ச்சூழலியல் பாதிக்கப்படும்.
 
5.  கட்டடப் பணிகளுக்கும், பின்னர் ஆய்வகப் பயன்பாட்டிற்கும், ஐம்பதாயிரம் டன் எடையுள்ள காந்தத்தைக் குளிர்விக்கவும், அதிகளவு தண்ணீர் தேவைப்படும். இந்த நீர் வெளியிலிருந்து டேங்கர்கள் மூலம் கொண்டுவரப்படும் என்று சொல்லப்பட்டாலும், அது எவ்வளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. அங்கிருந்தே நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டால், 
மரங்களும் வெட்டப்பட்ட சூழ்நிலையில் வறட்சி பெருகும்.
 
6.  மின்சாரத் தேவையும் அதிகளவில் இருக்கும். மின்சாரத் தட்டுப்பாட்டில் தவிக்கும் தமிழகத்தில், வழக்கம்போல மக்களை இருளில் மூழ்க விட்டு, பன்னாட்டு ஆலைகளும் ஆய்வகங்களும் மட்டும் ஒளிமயமாக இருக்கும்.
 
7.  வாகனப் போக்குவரத்துகள் அதிகரிப்பதனால் ஏற்படும் மாசு, இயற்கைப் பிரதேசத்தைப் பாதிக்கும். வனச்சூழல் அழிந்து, நகரமயமாக்குதல் நடக்கும். ஏற்கனவே காடுகளைப் பெருமளவு இழந்துவருகிறோம்.
 
8. கட்டுமானப் பணியின்போதும், ஆய்வகப் பணிகளின்போதும் ஒலி மாசும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும்.
 
9. கழிவு மேலாண்மை – ஆய்வகக் கழிவுகள், சுற்றுப்புறத்திற்குப் பாதிப்பின்றி உரிய முறையில் அப்புறப்படுத்தப்பட வேண்டியதும் அதிஅவசியம். நீர்மப்பொருட்கள், பேட்டரிகள், வேதிப்பொருட்கள், வேதிவாயுக்கள் எனப் பல்வேறு விதமான கழிவுகளோடு, மிகச் சிறிய அளவில் கதிர்வீச்சுக் கழிவுகளும் வெளியேற்றப்பட வாய்ப்புண்டு என்று CERN சுற்றுச்சூழல் வலைத்தளம் தெரிவிக்கிறது. இத்தாலியில் உள்ள க்ரான் ஸாஸ்ஸோ என்கிற நியூட்ரினோ ஆய்வகத்திலிருந்து ஒருமுறை தவறுதலாக pseudocumene என்கிற ஒரு வேதிப்பொருள் வெளியேறிய காரணத்தால், ஆய்வகம் சிலகாலம் மூடப்பட்டது.

றிவியலும் வாழ்க்கையும் பிரிக்க முடியாதவை. அறிவியலே இவ்வுலக வாழ்க்கையில் பெரும்பங்கு வகிக்கிறது. அறிவியல்சார் ஆராய்ச்சிகள்தான்,  இன்றைய பல நவீன முன்னேற்றங்களுக்கும் காரணம் என்பதை மறுக்கமுடியாது. எனினும், ஆராய்ய்சிகளால் தடுக்கவியலாப் பக்க விளைவுகள் உண்டு என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும்போது, ஆராய்ச்சிகளின் முடிவுகள் மட்டும் மக்களின் நலனுக்காக என்றில்லாமல், ஆராய்ச்சிகளின்போது வரும் விரும்பத்தகாத விளைவுகளையும் தடுத்து, மக்களைப் பாதுகாப்பதுதான் முழுமுதல் நோக்கமாக இருக்க வேண்டும்.

அதுவும் இந்தியா போன்ற நாடுகளில், மக்கள் நலன் என்பது இரண்டாம்பட்சமாகவே உள்ளது. மக்கள் நலன் முன்னிலைப்படுத்தப்படும் சூழ்நிலையை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாக இருக்க வேண்டியதுபோய், தம் குறைந்தபட்ச அடிப்படை உரிமைகளுக்காகவும்கூட மக்களே போராட வேண்டிய சூழல் உள்ள நம் இந்தியத் திருநாட்டில், தொடங்கவிருக்கும் நியூட்ரினோ ஆராய்ச்சிப் பணிகளிலும் நம் நலனை நாமே உறுதிசெய்துகொள்வோம்.

வெளிநாடுகளில் இதுபோன்ற ஆய்வகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றிலெல்லாம் சூழல் பாதிப்பு வரவா செய்கிறது என்று கேள்வி எழலாம். அங்கிருப்பதுபோல மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் அரசுவிதிகளும், கடுமையான தரக்கட்டுப்பாடு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு முறைகளும் இங்கு இல்லை என்பதுதான் பிரச்னையே. மேலும், “வெளிப்படைத்தன்மை” (transparency) என்பது துளியளவும் இங்கு இல்லை என்பது நாம் அறிவோம்.

சுவிட்சர்லாந்தின் CERN ஆய்வகத்தில் ஏற்படக்கூடிய மாசுகளைக் குறித்து தனி தளமே வைத்து விளக்கமளிக்கிறார்கள். இது போன்றதொரு வெளிப்படைத்தன்மையை இங்கு நாம் எதிர்பார்க்க முடியுமா?

இந்த ஆய்வகத்திற்காக, டார்ஜிலிங், நீலகிரி பகுதிகளை முதலில் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். நீலகிரியில் யானை உட்பட்ட வனவிலங்குகள் பாதிக்கப்படக்கூடும் என்கிற அபாயத்தால், கடும் எதிர்ப்புகள் எழுந்தமையால் அதைக் கைவிட்டு, இறுதியில் தேனிப் பகுதியைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.
ஆய்வகக் கட்டுமானப் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. திட்டப்படி, இந்த வருடமே ஒன்றிரண்டு மாதங்களில் துவங்கும் என்று சொல்லப்படுகிறது. கூடங்குளம் அணுநிலையத்தைப் போல, தலைக்குமேல் வெள்ளம்போய், நிலைமை கைமீறியபின் போராடாமல், வருமுன் காக்க இப்போதே விழித்துக் கொள்வோம்.




மேல்விபரங்களுக்கு:
http://www.facebook.com/ino.neutrino
http://uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2412
http://siragu.com/?p=1733
http://www.sinthikkavum.net/2012/01/blog-post_19.html
http://www.poovulagu.net/2012/02/blog-post_21.html
http://www.ino.tifr.res.in/ino/faq.php
http://en.wikipedia.org/wiki/India-based_Neutrino_Observatory
http://www.newscientist.com/article/dn19620-indian-neutrino-lab-to-boast-worlds-biggest-magnet.html
http://www.imsc.res.in/~ino/OpenReports/minirep.pdf
http://www.thehindu.com/opinion/lead/a-controversy-we-can-do-without/article3975090.ece


பண்புடன்” இணைய இதழில் April 4, 2013 அன்று வெளிவந்த கட்டுரை.

Post Comment

டெக்கி பக்கீஸ்





”என்னாங்க, இந்த பேங்க்லருந்து என்னமோ மெயில் வந்திருக்கு.  உங்களுக்கு ஃபார்வேர்ட் பண்ணிருக்கேன். பாத்துட்டு, என்னன்னு பேங்க்ல கூப்பிட்டுப் பேசுங்க.”

“ஏன், உனக்கு பேசத் தெரியாதா? நீ கூப்பிட்டு கேளேன்.”

“அதெல்லாம் பேசத் தெரியும்.  கூப்பிட்டா ஆயிரத்தெட்டு டீட்டெய்ல்ஸ் கேப்பாங்க. எனக்கு வேலை இருக்கு. நீங்க சும்மாத்தானே இருக்கீங்க? பேசுங்க”

“ம்க்கும்...  தெரியாதுன்னு ஒத்துக்கோ. அதவிட்டுட்டு, நேரமில்லன்னு சாக்கு.. ப்ரைம் மினிஸ்டர் பி.ஏ.ன்னு நெனப்பு..”

“ஹலோ.. கல்யாணத்துக்கு முன்னாடி எங்கூட்ல உள்ள எல்லார் அக்கவுண்டையும் மேனேஜ் பண்ணது நாந்தான் தெரியுமா? இப்ப ‘குடும்பத்தலைவி’ன்னு ப்ரமோஷன் ஆனப்புறமும் இந்த ஸில்லி மேட்டரெல்லாம் நான் பார்க்கமுடியுமா? ... வெவரமில்லையாம்ல...”

____________________________

“”ம்மா... அந்தக் காரைப் பாரு.. அது என்ன மாடல் சொல்லு பாப்போம்..... “

“என்னதுடா அது.. டொயோட்டாவா,  நிஸ்ஸானா...?”

“ம்ம்ம்ம்மாஆஆஆ.. இந்த ரெண்டையும் விட்டா உனக்கொண்ணும் தெரியாதா? அது "செவி கேமரோ” (Chevrolet Camaro) கார். ஜஸ்ட் 3.9 செகண்ட்ஸ்ல 100கி.மீ. ஸ்பீடுக்குப் போயிடலாம்...”

“டேய்.. உங்கும்மாக்கு அம்பாஸடர், ஃபியட் பத்மினியைத் தவிர டொயோட்டோவும், நிஸ்ஸானும் தெரிஞ்சிருக்கதே பெரிய விசியம்...”

“ஆம்மா...  இந்த கொமாரோ டமாரோல்லாம் தெரிஞ்சுகிட்டதனால உங்க இஸ்கூல்ல ரெண்டு மார்க்  கூடப்போடுவாங்களா, இல்ல உங்க ஆப்பீஸ்லதான் இந்த மாசம் நூறு ரூவா சம்பளம் கூட்டித் தரப்போறாங்களா..? நமக்குப் பைஸா பிரயோஜனமில்லாததத் தெரிஞ்சுக்காததனால எனக்கு ஒண்ணும் குறைஞ்சு போகல...!!”

_____________________________________

“டேய்.. இந்த கேமராவுல  வீடியோ எடுக்கும்போது, க்ளோஸப்-பா எடுக்க முடியல, என்னன்னு பாரு...”

“..... ஆமா, பிக்ஸல் கூட்டி வச்சா, எப்படி க்ளோஸப் வரும்..? இது ஒரு சிம்பிள் மேட்டர்தானம்மா.. இதக்கூடப் பாத்து சரிபண்ணத் தெரியாதா உனக்கு?”

“எலேய்.. நானா பிக்ஸல் கூட்டி வச்சேன்.. எல்லாரும் கேமராவ எடுத்து நோண்டவேண்டியது; அதில யார் என்னத்த செஞ்சு வெக்கிறீங்கன்னு எனக்கெப்படித் தெரியும்?”

“நீயும் எடுத்துப் பாக்குறதுதானே... இல்ல அட்லீஸ்ட் இப்ப ப்ரச்னை வந்தப்புறமாவது என்ன ஏதுன்னு நோண்டிப் பாக்குறதுதானே? எதாவது ட்ரை பண்ணாத்தானே புதுசாப் படிக்க முடியும்?”

“டேய்... ரொம்ப அட்வைஸ் பண்ணாத... நீயெல்லாம் பொறக்க முன்னாடியும், எங்கல்யாணத்துக்கு முன்னாடில்லாம் எனக்கு யாரு இதெல்லாம் செஞ்சுத் தந்தா? நானேதான் எல்லாம் பாத்துக்கிட்டேன். அப்ப செஞ்ச எனக்கு இப்ப செய்யத் தெரியாதா? உங்களையெல்லாம் வேலை வாங்க வேணாமா, அதுக்குத்தான்”

“மேனேஜர் மாதிரி பேச்சுக்கொண்ணும் கொறவில்ல. இப்படிப் பேசியே சமாளிச்சிடு..”

___________________________________________

”இந்தாங்க, இந்தக் கம்ப்யூட்டரைக் கொஞ்சம் என்னன்னு பாருங்க. எப்பப்பாத்தாலும் ஹேங்காகித் தொலையுது. எல்லாரும் புதுசு புதுசா லேப்டாப் வாங்கி வச்சிருக்காங்க. எனக்குதான் இன்னும் இந்த பழைய பீஸியைக் கட்டிகிட்டு...”

“உன்னைப் புதுசா வாங்கக்கூடாதுன்னு யாராவது கையப் பிடிச்சாங்களா..?  சிக்கனம், சுற்றுச்சூழல், பொல்யூஷன்னு  புதுசு புதுசா நீ பல்லவி பாடிகிட்டு வாங்காம இருந்தா நானா பொறுப்பு...?”

“ஸ்ஸு.. எம்மா... அந்த ஆண்டி-வைரஸை ஆஃப் பண்ணுனா சிஸ்டம் பாஸ்ட் ஆகிடும்..  வெரி சிம்பிள்... இதுகூடத் தெரியாம... நீயெல்லாம் நெசம்மாவே காலேஜ்ல படிச்சியாம்மா?”

“அடிங்.. ரொம்பப் பேசாத.. என்னத்தப் படிச்சு என்னத்துக்கு? நீ சின்னவனா இருக்கப்ப, உன்ன ஒருவேளை சாப்பிட வைக்கிறதுக்கு நான் பட்ட பாட்டுல என் டிகிரியெல்லாம் காத்துல பறந்துபோச்சு! இப்பவும் உன்ன சாப்பிட வா, வான்னு கூப்பிட்டேதானடா நான் தேஞ்சு போறேன்?! இதுல இதயும் நானே பாக்கணுமாக்கும்...“

__________________________

ஐபிஎல்... சென்னை... தோனி.... என்று என்னென்னமோ அப்பாவும் புள்ளையும் பேசிகிட்டிருக்காங்க....

“என்னத்த ஐபியெல்லு... இன்னும் இது முடிஞ்சுத் தொலையலையா... ஆமா, மேட்ச் ஃபிக்ஸிங் போயி, இப்பப் புதுசா ஸ்பாட் ஃபிக்ஸிங் நடக்குதாமே..  என்னதுங்க அது?”

”ம்மா...,  க்ரிக்கெட் பத்திக்கூட தெரியுமா உனக்கு? க்ரேட்மா!!”

“ஹலோ, நாங்களும் காலேஜ் க்ளாஸ் கட் அடிச்சுட்டு, நைட் தூங்காம இருந்துன்னெல்லாம்கூட மேட்ச் பாத்தவங்கதான்; எப்ப கல்யாணமுன்னு ஒண்ணு ஆச்சுதோ, அப்பவே பழைய கஷ்டத்தயாவது தலைமுழுகுவோம்னு க்ரிக்கெட் பாக்கிறதை விட்டுட்டேன்!!”

__________________________________

”இந்த கிச்சன் ஸிங்க்ல பைப் ஆடிகிட்டே  இருக்கு.. என்னன்னு பாருங்க..”

“இந்த ஸ்பான்னர் எடுத்து, அத லேசா டைட் பண்ணா முடிஞ்சுது.. இதுக்கும் நான் வரணுமா...”

”ஓ அவ்ளோதானா”ன்னு என் மைண்ட் வாய்ஸ் சொன்னாலும், சுதாரிச்சுகிட்டு பதில் பேசுறதுக்கு முன்னே, மகன், “வாப்பா... நீங்க உம்மாவுக்கு இதெல்லாம் தெரியாதுன்னு நெனக்காதீங்க. ஆனா, உம்மா இப்ப ஜெனரல் மேனேஜர் ரேஞ்சுக்குப் போயாச்சு; இந்த மாதிரி சில்லி வொர்க்கெல்லாம் செய்யமாட்டாப்ல... இல்லம்மா?” 

“நக்கலு... ம்ம்? வரும்டா, எனக்கும் காலம் வரும்...”

போங்கடா போங்க.. 
என் காலம் வெல்லும்... 
வென்ற பின்னே 
வாங்கடா வாங்க...

________________________ 

 அந்தக் காலமும் வந்தது. பேப்பரில் “முப்பதே நாளில் ஆல்-இன்-ஆல் டெக்னிக்கல் பிஸினஸ் கோர்ஸ்” விளம்பரம் பார்த்து,  அதில் சேர்ந்து, எல்லாரும் பள்ளி, ஆபிஸ் போனதும் ரகசியமாக க்ளாஸுக்குப் போய் வந்து, கடைசி நாள் பரிட்சையன்று வீட்டிற்குத் திடீர் விருந்தினர் வந்த போதும்கூட மனம் தளர்ந்துவிடாமல், ஆன்லைனில் பரிட்சை எழுதி பாஸ் செய்து, ஸர்ட்டிஃபிகேட்டும் வாங்கிவிட்டேன்!! “வெற்றி, வெற்றி!!” என்னையுமறியாமல் கண்ணீரோடு சொல்லிக் கொண்டேன்...

‘ஹலோ, என்னாச்சு... தூக்கத்திலயே வெற்றிமுழக்கமெல்லாம் போடுற? என்ன, கனவுல பிரியாணி கஞ்சியாகாம பிரியாணியாவே வந்துடுச்சா?”

சடாரென்று எழுந்தேன்.. ச்சே.. கனவு!!

________________________________________

“டேய்.. இந்த  எரர் மெஸேஜ் என்ன செஞ்சாலும் போக மாட்டேங்குது.. என்னன்னு பாரு..”

வந்து நொடியில் சரிசெய்துவிட்டு, வழக்கம்போல என்னை நோக்கி “லுக்கு”விட்டு ஏதோ சொல்ல ஆரம்பிக்க... 

“வாயத் திறக்காத... எனக்கும் மூளை இருந்துச்சு... நீங்க ரெண்டு பேரும் என் வயத்துல இருந்தப்போ, அதை ஆளுக்குப் பாதியாப் பிரிச்சுக் கொடுத்ததுலத்தான் நான் இப்படி ஆகிட்டேன்... என்னோட பாதிமூளை வச்சிருக்க நீயே இப்படி அறிவாளியா இருக்கன்னா, முழு மூளையும் வச்சிருந்தப்போ நான் எவ்ளோ அறிவாளியா இருந்திருப்பேன்?”

என்னமோ அதிசயமா ஒண்ணும் பேசாமப் போய்ட்டான். ஆனாலும் எனக்கு அவன் எப்போ வந்து, “ஜீன்ஸ், டிஎன்ஏ ங்கிறதெல்லாம் தெரியாதாமா? உன் மூளையத் தந்தேங்கிறியே? அப்ப கைகால்லாம் யாரு தந்தது?”ன்னு கேப்பானோன்னு திக்திக்குன்னு இருக்கு!

___________________________

ஹி..ஹி.. “இங்லீஷ்-விங்லீஷ்” படம் பார்த்ததுல தோன்றிய நிஜம் கலந்த கற்பனைக்கதை!!

Post Comment

புலி வால் பிடிச்ச...




டம் பேர் என்னன்னு ஞாபகம் இல்லை. அந்தப் படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரிக்கு ‘அ, ஆ, இ, ஈ...’ சொல்லிக் கொடுத்து, ஒரு பாட்டும் பாடுவார் என்பது ஞாபகம் இருக்கிறது. அவரும், சிவாஜியும் இராணுவ வீரர்கள்.  அவர்களிருவரையும் சீன எதிரிகள் பிடிக்க வரும்போது, சிவாஜி, அவர்களின் கவனத்தைத் தன் பால் ஈர்த்து, ஜெமினியைத் தப்புவிக்க வைப்பார்.

இன்றும்,  நம் கவனத்தை அவசியமற்ற வேறு யாரோ/எதுவோ ஆக்கிரமித்து வைத்திருக்க, அதிமுக்கியமானவைகளில் நடப்பது என்னவென்றே கவனிக்காமல் இருந்துவிடுகிறோம்.  இந்திய எல்லையில், லடாக்கில் சீன ஆக்கிரமிப்பும் அப்படி நடந்ததுதான். பாகிஸ்தான் மட்டுமே நமது பயங்கரமான எதிரி என்று நம்பவைக்கப்பட்டிருப்பதன் விளைவே இது!!

 


இரு வாரங்களுக்கு முன்பு, சீன இராணுவம் லடாக் பிரதேசத்தில், இரு நாடுகளுக்கும் இடையேயான LAC  எனப்படும் எல்லையைத் தாண்டி,  சுமார் 19 கிமீ தூரம் உள்ளே ஊடுருவி வந்து,  நான்கு கூடாரங்கள் அடிச்சுத் தங்கிருக்காங்க. (முதலில்  இதைவிட அதிகதூரம் ஊடுருவியிருந்தார்கள். இந்தோ-திபெத்திய படையினரின் தலையீட்டால், சுமார் 5 கிமீ பின்னேறிச் சென்று கேம்ப் அடித்திருக்கிறார்கள்). அதுமட்டும் இல்லை, ”நீங்கள் சீனப் பகுதியில் இருக்கிறீர்கள்”னு (You are in Chinese side) என்று ஒரு பேனர் எழுதியே வைத்துவிட்டார்கள்!!

சீனா செய்ததில் பத்தில் ஒரு பங்கு பாகிஸ்தான் எல்லையில் நடந்திருந்தது என்றால், உடனே நம்ம நாட்டுப் பற்று உசுப்பிவிடப்படும். போர் முரசு கொட்டப்படும். திரை உலகத்தினர் கலைநிகழ்ச்சிகள் நடத்தி, நிதி சேகரிப்பார்கள். உயிருக்குயிரான தங்கச்சிய வில்லன் கடத்திட்டுப் போனாக்கூட அசராம வெறப்பா நின்னு, தேசிய கீதம் பாடுவோம். இந்த சீன ஆக்கிரமிப்பு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்கிறதே கேள்விக்குறி. கார்கில் போர் நடந்ததற்கு, இந்திய எல்லையில் பாகிஸ்தான் சுமார் 10 கிமீ தூரம் ஊடுருவியதே காரணம். இப்போதைய 19 கிமீ சீன ஊடுருவலை அதோடு ஒப்பிடவே முடியாதாம்!!

சீன இராணுவம் நம்ம வீட்டு வாசல்லயே வந்து நின்னாலும், அவங்களோட சமாதானப் பேச்சு நடத்த நம்ம அமைச்சரை நிதானமா ஒரு மாசம் கழிச்சு சீனாவுக்கே அனுப்பிவைப்போம்.  வரும் அக்டோபர் மாதம் அவர்களோடு கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். இவ்வளவு நடந்துகிட்டிருக்கும்போதே, அங்கே லடாக்கில் சீன வீரர்கள் கூடுதலா ஐந்தாவதாக இன்னொரு கூடாரமும் அடிச்சுகிட்டாங்க!!

இதுக்கிடையில், இந்திய அமைச்சரின் விஸாவை சீனா இதுவரை உறுதி செய்யவில்லைன்னு ஒரு செய்தி உலவிக்கிட்டிருக்கும்போதே, எந்தவிதப் பரபரப்பும் சஞ்சலமும் இல்லாமல் “உழைப்பாளர் தினமான” மே 1- அன்று,  (வேறொரு) எல்லைப் பகுதியில் சீன வீரர்களோடு, வழமைபோல குடும்பங்கள் சகிதம்,  நம்ம இராணுவத்தினர் உழைப்பாளர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடுனாங்க.  நண்பேன்டா!!

தே கதைதான் இப்போ பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்திலும் நடந்துகிட்டிருக்கு. முன்பு இதுபோன்ற வழக்குகளில், நல்லபடி உயர்கல்வி கற்று, பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களைக் கைது செய்ததற்கு எதிர்ப்பு அதிகரித்தபடியால், இம்முறையும்  உண்மைக் குற்றவாளிகள்க் கண்டுபிடிக்கும் முயற்சியே எடுக்காமல், திருந்தி வாழ்ந்து கொண்டிருப்பவர்களைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து சிறையில் போட்டிருக்காங்க. இப்படித்தான், தானா சரணடைஞ்சு,  காவல் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தவரையே “கூட்டு மனசாட்சி”யைத் திருப்திப் படுத்த தூக்கிலிட்டாங்க. இப்ப அடுத்து, ‘பொறியல் மனசாட்சி’யாக இருக்கும்.

”திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”னு பாடினவங்க இப்ப இருந்தா, “போலீஸாய்ப் பார்த்து திருந்த விடாவிட்டால் முடியாது”னு பாடுவாங்களோ!!

 ந்த நாட்டைப் பார், பெண்களை எப்படிக் கொடுமைப்படுத்துகிறார்கள்! இந்த நாட்டைப் பார், எல்லாப் பெண்களின்மீதும் ஆஸிட் ஊற்றுகிறார்கள் என்று சொல்லி, பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களோடு மெயில்கள் ஃபார்வேர்டு செய்து கொண்டிருந்தோம். இன்று, புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் பெண்களின் மீதான ஆஸிட் வீச்சு அதிகரித்து வருகிறதாம்!! ஆஸிட் வீசியவர்களுக்கு கடும் தண்டனையும் கிடையாது. ஆஸிட் விற்பனையும்  முறைப்படுத்தப்படும் வழிவகைகளும் காணோம். ”ஆஸிட் வீசப்பட்ட இந்தியப் பெண்கள்” என்று ஃபார்வேட் மெயில்கள் ஏதேனும் வலம் வருகிறதா?

ட்டு, பதவி, ஆட்சிக்காக  ஜாதி அரசியலை ஆதரித்து வளர்த்துவிடுகிறோம். பின்னாட்களில்  வளர்த்த கடாவே மார்பில் பாய்கிறது.

பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததுபோய், இப்ப சின்னக் குழந்தைகளைக்கூட விட்டுவைக்காத நாசகாரங்க அதிகமாகிட்டு வர்றாங்க. மக்களும் தண்டனையைக் கடுமையாக்கணும்னு மட்டும்தான் போராட்டம் செய்றாங்க.  கடுமையான, அதேசமயம் உடனடித் தண்டனைகள், குற்றங்களைக் குறைக்க உதவும்தான். ஆனா, அதுமட்டுமே போதுமா? ”நோய்முதல்” நாடவேண்டாமா?

குடி - எல்லாப் பாவங்களின் ஊற்றுக்கண்ணான குடியைத் தடுக்கும்வரை, இந்தக் கொடுமைகள் முழுமையாக நிற்கப் போவதில்லை.

ஊடகங்கள் பெண்களைப் போகப்பொருளாகச் சித்தரிப்பதையோ, பெண்களே தம்மைக் காட்சிப் பொருளாக ஆக்கிக் கொள்வதையோ இப்போதெல்லாம் யாரும் கண்டிப்பதில்லை. அதெல்லாம் இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது. இப்போது, குழந்தைகளுக்கும் போடப்படும் அதீத மேக்கப் என்ன? நடிகைகளை மிஞ்சிவிடும்படியாக அணியப்படும் ஆடைகள்தான் என்னென்ன?  போதாதற்கு, ‘ஜூனியர் டான்ஸர்’ங்கிற பேர்ல “கலை” நிகழ்ச்சிகள் நடத்தி, அதில் குழந்தைகளை அரைகுறையா ஆட விடுறாங்க. இப்படி வக்கிரமாக ஆடவிட்டுட்டு, எல்லாரையும் ரசிக்க வச்சு, சின்னக் குழந்தைகளையும் அடையாளம் காட்டிக் கொடுத்தோம். இப்ப அடிச்சுக்கிறோம்.  இந்த ஆட்டத்தை, குடிகாரப் பாவிகள் என்ன கலைக்கண்ணோடா ரசித்திருப்பார்கள்?


பாவம் ஓரிடம், பழி ஓரிடம்கிற கதையா, ஆபாசத்தைத் தூண்டிவிட்டவர்கள்  பாதுகாப்பாகவே இருந்துகொள்கிறார்கள். அறிவு மழுங்கிப் போன,  தூண்டப்பட்டவர்கள், எதிர்க்கத் திராணியற்ற அப்பாவிகளிடம் தம் வன்மத்தைத் தணித்துக் கொள்கிறார்கள்.

ப்படி ஆபாசம், குடி, குறைவான தண்டனைச் சட்டங்கள் என்று குற்றத்தை ஊக்குவிக்கும் எல்லா ஊற்றுக்கண்களையும் சுதந்திரமாக ஓடவிட்டுக் கொண்டே,  நாட்டில் எல்லாரும் ஒழுக்கமா இருக்கணும்னு எப்படி எதிர்பார்க்கிறது?

சென்ற டிசம்பர் 16 அன்று டெல்லியில் தொடங்கிய  பாலியல் வன்முறை எதிர்ப்பு போராட்டங்கள், இன்றும் முடி(த்துவிட முடி)யாமல்  தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால், அதில் ஒரு சதவிகிதத்தினராவது குடியைத் தடுப்போம் என்று போராடுகிறார்களா? சென்னையில், திரு. சசி பெருமாள், சாகும்வரை உண்ணாவிரதம் என்று போராடினாரே, அதற்கு எத்தனை இளைஞர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்?


ல்லாவற்றிலும் இப்படியே தும்பை விட்டு வாலைப் பிடிக்க எத்தனிக்கிறோம். கடைசியில் அது புலிவால் பிடிச்ச நாயர் கதையாகிவிடுகிறது.

Post Comment