Pages

புதிய பார்வை






ள்ளிகளுக்கு, ஜூலை-ஆகஸ்ட் இரண்டு மாத கோடை விடுமுறை ஆரம்பித்ததும், எங்க குர் ஆன் வகுப்புக்கும் லீவு விட்டுட்டாங்க. சின்னவனும் நானுமா நல்லா தூங்கி தூங்கி எழுஞ்சுகிட்டு இருந்தப்பதான், அந்த ஃபோன் வந்தது!!

குர் ஆன் வகுப்பு நடத்துகிற நிறுவனத்திலிருந்து, நடத்தும் பதின்பருவ மாணவிகளுக்கான இரு வார கால கோடை வகுப்புகளில் பணிபுரிய “தன்னார்வலர்கள்” தேவைப்படுவதாக வந்த அழைப்பு அது. என்ன, அட்டெண்டன்ஸ் எடுக்கச் சொல்வாங்க, அதோடு போர்டைக் க்ளீன் பண்றது போன்ற ஆஃபீஸ் வொர்க் செய்யலாம்னு நெனச்சு போனா, பாடம் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க!! அவர்களின் ஆஸ்தான ஆசிரியைகள் விடுமுறைக்குச் சென்றிருந்த நிலையில், முடியாதுன்னு பின் வாங்கவும் முடியலை….

என்னடா இது என் தூக்கத்துக்கு வந்த சோதனை… என்று சோகமாக இருந்தாலும், நல்ல விஷயம்தானே முயற்சி செய்வோம்… என்று மனதைத் தேற்றிக் கொண்டு, குர் ஆனின் கடைசிப் பகுதியில் வரும் சில சிறிய அத்தியாயங்களை எடுத்து, தஃப்ஸீர் - விளக்கம் தயாரித்துக் கொண்டேன். பத்து நாட்கள் நடக்கும் வகுப்புகளில் பத்து அத்தியாயங்களை எளிதாக நடத்திவிடலாம் என்று நினைத்த எனக்கு, ஐந்தைக் கூட முழுதாக முடிக்க முடியாத அளவுக்கு விரிந்து கொண்டு போன விளக்கவுரை பிரமிப்பைத் தந்தது!! இத்தனைக்கும் ஒவ்வொன்றும் மூன்று முதல் பத்து வாக்கியங்கள் உள்ள சிறுசிறு அத்தியாயங்களே. ஒவ்வொரு வகுப்பிலும், முடித்தாக வேண்டுமே என்று விரைவுபடுத்தினாலும் முடிக்க முடியாத அளவுக்கு விரிவான விளக்கங்கள்!!

குர் ஆன் என்றால் வழக்கமாக அரபியில் மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் என்ற அளவிலேயே அதுவரை பயின்று வந்த மாணவிகளுக்கு,  அதன் பிண்ணனி நிகழ்வுகள், உள்ளார்ந்த விளக்கங்கள், காரண காரியங்கள், சமகாலத்திற்கான படிப்பினைகள் ஆகியவை மிகவும் புதிதாக இருந்தமையால் மிகவும் ஆர்வத்தோடு வகுப்பில் ஒன்றியிருந்தார்கள்.

ஆகையால், விளக்கங்களோடு, மாணவிகளின் கேள்விகளும், சந்தேகங்களும், பிரமிப்புகளும், அனுபவங்களும், பகிர்வுகளும் என்று நேரம் போவதே தெரியாமல் அதிக சுவாரசியமாக இருந்தது. 

ந்த மாணவிகள் மட்டுமல்ல, நம்மில் பலரும் குர் ஆன் என்றால், அதை அரபியில் ஓதுவது மட்டுமே அவசியம் என்று நினைக்கிறோம். அதிகபட்சமாக, அதன் வாக்கிய அர்த்தங்களைத் தமிழில் வாசிப்பதோடு நமது கடமை முடிந்து விட்டதாகக் கருதுகிறோம். ஆனால், விரிவான விளக்கங்கள் எனப்படும் “ஃப்ஸீர்” மிக மிக அவசியம். இந்த விளக்கங்களைத் தெரிந்து கொள்வதுதான், குர் ஆனோடான நமது உறவை வலுப்படுத்தும். இதைத் தெரிந்து கொண்டவர்களால்தான் குர் ஆனை நமது அன்றாட வாழ்வில் வழிகாட்டியாகப் பயன்படுத்த முடியும்.

இஸ்லாம் குறித்து பொது தளங்களில் விவாதம் எழும்போதெல்லாம், முஸ்லிமல்லாதவர்கள் குர் ஆனில் இருக்கும் குறிப்பிட்ட சில வசனங்களைச் சுட்டிக்காட்டி சர்ச்சை எழுப்புவது வழக்கம். அதன் பின்புலங்கள் அறிய முற்படாமல், மேம்போக்கான பொருளை மட்டுமே எடுத்துக் கொள்வதுதாம் இதற்குக் காரணம்.

தஃப்ஸீரைக் கற்பவர்களுக்கு ஒரு இனிய எச்சரிக்கை:  தஃப்ஸீரைக் கற்கத் தொடங்கினால், மீள முடியாமல் அதில் மூழ்கி விட வாய்ப்புண்டு!! :-D அத்தனை விறுவிறுப்பு, சுவாரசியம், திகில், பயம், பரவசம், மகிழ்ச்சி எல்லாம் கலந்த ஒரு வழிகாட்டி… குர் ஆன்!!

மாணவிகளில் பெரும்பான்மையோர் இந்தியர், ஒரு பாகிஸ்தானி, ஒரு அரபி மாணவியும் இருந்தனர். அவர்களில் பாகிஸ்தானி மாணவியும், அருகில் அமர்ந்திருந்த இந்திய மாணவியும் எப்போதுமே பேசிக் கொண்டிருந்ததால் அவர்களிடம் “நீங்கள் இருவரும் உறவினரா?” என்று கேட்டேன். அதற்கு அந்த இந்திய மாணவி, படபடவென அவசரமாக, “ஒரு பாகிஸ்தானி எப்படி எனக்கு உறவினராக முடியும்?” என்று கேட்டாளே பார்க்கணும்!!

ஏன் இருக்க முடியாது என்று விளக்க முற்பட்டேன். அதற்கு அவள், “டீச்சர், நான் இந்தியா போகும்போது எனக்கு பாகிஸ்தானி தோழிகள் இருக்கிறார்கள் என்று நான் சொன்னாலே, என்னை தேசத் துரோகி போல பார்த்து, “எப்படி உன்னால் அது முடிகிறது” என்று கேட்கிறார்கள்.” என்று வருத்தத்துடன் சொன்னாள்!! :-( 
 
ஒரு நாள், அந்த பாகிஸ்தான் மாணவி, ”இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று விடுவார்களாமே?” என்று கேட்க, அதே இந்திய மாணவி, “அதெல்லாம் கிராமங்களில் படிக்காதவர்கள்தான் அவ்வாறு செய்வார்கள்” என்று தற்காப்பு செய்தாள். “ஆம், படித்தவர்கள் கருவிலேயே கொல்வார்கள், படிக்காதவர்கள் பிறந்தபின் கொல்வார்கள்” என்று சொல்ல நினைத்ததை நான் சொல்லவில்லை.

இன்னொரு இந்திய மாணவி, தனது பள்ளியில் சிலர் bullying செய்வதாகவும், அரபி மாணவர்கள்தாம் அப்படிச் செய்தாகவும் தன் அருகில் இருந்த அரபி மாணவியைப் பார்த்துக் கொண்டே குற்றம் சாட்டுவது போல கூற, நான் “எந்தவொரு நாட்டினரையும் பொதுவாகக் குற்றம் சொல்வது தவறு; எல்லா நாட்டிலும் நல்லவர்களோடு கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்” என எடுத்துரைக்க அந்த அரபி மாணவி முகத்தில் புன்னகை. இன்னொரு இந்திய மாணவி, “Thank you for saying that teacher” என்றாள். 

இன்னொரு மாணவிக்கோ, தன் தாய் தன்னை ஃபோன் பேச விடுவதில்லை – லேப்டாப் பயன்படுத்த விடுவதில்லை என்ற குறை!! அவ்வ்வ்…… என் மகன்களும் இப்படித்தான் அவர்களின் ஆசிரியர்களிடம் குறை சொல்லியிருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டேன். 

ப்படிப் பல கலவையான நிகழ்வுகளுடன் மிகவும் இனிமையாக வகுப்புகள் முடிந்தன. தங்களுடைய “feedback form”-ல் அவர்கள் அனைவருமே, “இவ்வகுப்பு, குர் ஆனை தாங்கள் இதுவரை பார்த்திராத வேறொரு கோணத்தில் பார்க்க உதவியதாகவும், தொடர்ந்து கற்கவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுவதாகவும்” குறிப்பிட்டிருந்தனர்.

ஆசிரியப் பணி எத்தனை சக்தி வாய்ந்தது, பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியது என்பதை முழுமையாக உணர்ந்தேன். இளம் சமுதாயத்தினரிடம் இருக்கும் அறியாமைகளைக் களைந்து அவர்களை நெறிப்படுத்த வேண்டியதன் அத்தியாவசியமும் – ஆனால், அதில் நாம் எத்தனை அலட்சியமாக இருக்கிறோம் என்றும் அறிந்து கொள்ள முடிந்தது. 

அதே சமயம், இளைய சமுதாயத்தினை ஆசிரியர்களிடம் மட்டும் ஒப்புவித்துவிட்டு பெற்றோர்கள் தம் பொறுப்பைத் துறந்துவிட முடியாது. அவர்கள் தம் பிள்ளைகளுக்கு ஒரு உதாரண ஆசிரியராகவும் இருக்க வேண்டும். இதனால்தான், “உங்கள் பிள்ளைகள் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சோதனைகள்” என்று இறைவன் குர் ஆனில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறான் போல!!

Post Comment

சிங்கமும் புலியும்




காலையில் எல்லாரையும் ஆஃபீஸ்-பள்ளி அனுப்பிவிட்டு, சில்லறை வேலைகளை முடித்துவிட்டு, ‘பிஸ்மில்லாஹ்’ என கம்ப்யூட்டரை ஆன் செய்துவிட்டால், அது பயன்பாட்டுக்கு ரெடியாகிவர ஒரு எட்டு-பத்து நிமிஷம் ஆகும். என்ன செய்ய... பழைய கம்ப்யூட்டர்.. (அதற்காக, வாசகர்கள் உடனே புது லேப்டாப் வாங்கி அனுப்பிவிடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்)

அந்த பத்து நிமிஷத்தையும் வேஸ்ட் பண்ண மனசில்லாம (ம்க்கும்...) ஏதேனும் வாசிப்பேன். இன்றும் அப்படித்தான் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்தேன். வாசிக்க ஆரம்பித்ததில், கம்ப்யூட்டரை முற்றிலுமாக மறந்து, சுமார் ஒன்றரை - இரண்டு மணி நேரமாகத் தொடர்ந்து அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டுத்தான் கீழே வைத்தேன்!!

வாசித்த சம்பவங்களின் பிரமிப்பில் இருந்து மீள முடியாமலேயே புத்தகத்தை மூடியபோது, பின் அட்டையில் கலைஞர் கருணாநிதி அவர்கள் இப்புத்தகத்தைப் பற்றித் தெரிவித்த கருத்து கண்ணில் பட்டது: “சென்னையிலிருந்து ஈரோடுக்கு இரயிலில் செல்லும்போது, சற்று நேரம் மட்டும் வாசித்துவிட்டுக் கண்ணயரலாம் என்று நினைத்துக் கையில் எடுத்த புத்தகத்தைக் கீழே வைக்கும்போது ரயில் ஈரோடுக்கு அருகில் வந்திருந்தது!!”

அப்படி எந்த புத்தகம் அது? நாவலர் ஏ.எம்.யூசுப் அவர்கள் எழுதிய, “பாலைவனச் சிங்கம்” என்றழைக்கப்படும் உமர் முக்தார் அவர்களின் போராட்ட வரலாறு.


ம் இந்தியா, பிரிட்டிஷாரால் ஆக்கிரமிக்கப்பட்டதுபோல, ஆப்பிரிக்க நாடான “லிபியா”வும் இத்தாலியால் ஆக்கிரமிக்கப்பட்டது. அப்போது மக்களைத் திரட்டி ஒன்று சேர்த்து சுதந்திர உணர்வையூட்டி, போராட்டத்திற்கு வித்திட்டவர்தான் இந்த உமர் முக்தார். இவர் ஒரு எளிய ஆசிரியர் என்பதும், எழுபதுகளில் உள்ள ஒரு முதியவர் என்பதுவும்தான் இவ்வரலாற்றின் ஆச்சரியப்புள்ளிகள். புரட்சிப் படையினருக்குப் போர் தந்திரங்களையும், கெரில்லா போர் முறையையும் பயிற்றுவித்தது எழுபதைத் தாண்டிய ஒரு முதியவர் என்பது ஆச்சரியம்தானே!!

உமர் முக்தார் தலைமையிலான புரட்சிப் படையின் போராட்டத்தை அடக்கி, அடியோடு அழித்துவிடவென இத்தாலியின் முசோலினி சிறப்பு அதிகாரம் கொடுத்து, ஜெனரல் ரொடோல்ஃபோ கிராஸியானி-யை லிபியாவுக்கு அனுப்பி வைக்கிறார். வந்ததும், ஆரம்ப ஜோரில் ஆழம் தெரியாமல் காலைவிட, இராவணுத்திற்கு பெருநஷ்டம் ஏற்படுகிறது. போரைத் தொடர்ந்து நடத்த, இத்தாலியிலிருந்து கூடுதல் படை வந்தால் மட்டும் முடியும் என்ற நிலையில், படை வந்து சேரும் காலம் வரை புரட்சிப் படையினரைத் தாக்குதலில் ஈடுபடாமல் தடுத்து வைக்க “பேச்சு வார்த்தை” என்னும் உபாயத்தைக் கைகொள்கிறார் கிராஸியானி!!

வழக்கமாகப் போராளிக் குழுக்கள்தாம், தம் கைவசம் உள்ள ஆயுதங்கள் தீர்ந்து போகும்போது, ஆயுத பலத்தையும் படை பலத்தையும் பெருக்கிக் கொள்ள போர் நிறுத்த அவகாசம் கோருவார்கள். ஆனால், இங்கு இராணுவமே அதைச் செய்வதிலிருந்து இராவணுத்துக்கு ஏற்பட்ட இழப்பின் அளவு எத்தனை வலியது என்று தெரிகிறது. ஆயுத பலத்திலும், படைபலத்திலும் அசுரனாய் நிற்கும் இத்தாலி இராணுவத்தின் முன்பு, எந்தவித முறையான பயிற்சியோ, கிஞ்சிற்றேனும் ஆயுதங்களோ, அதற்கான பணமோ, படைபலமோ எதுவுமே இல்லாத போதிலும், லிபிய புரட்சிப் படையால் அவர்களுக்கு எங்ஙனம் பலத்த நஷ்டத்தை உண்டாக்க முடிந்தது?

அவர்களுக்கு அனுகூலமாய் இருந்த பாலை நிலப் பிரதேசத்தின் இயல்பை முழுமையாக அறிந்திருந்ததும், கைவசம் இருக்கும் சிறு படை மற்றும் தளவாடங்களைக் கொண்டு கச்சிதமாகத் திட்டமிட்டதுடன், இறையச்சத்தை முழுமையாகக் கைகொண்டு, நாட்டுச் சுதந்திரத்துக்காகப் போரிடுவதை தேசபக்தி என்றெல்லாம் செயற்கையாகப் பெயரிடாமல், அந்நிய ஆதிக்கத்தை எதிர்க்கும் இறைவழியிலான போர் என்ற முழுநம்பிக்கையுடன் செயல்பட்டதுதான்!!

மேலும், நோக்கம் நேராக இருந்து, கூடவே இறைபக்தியும் இருந்தால், படைபலம் - தளவாடம் குறித்த எண்ணிக்கைக் குறைவு இலட்சியத்தை அடைய ஒருபோதும் தடையில்லை என்பது இஸ்லாமிய வரலாற்றில் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்ட ஒன்று!!

பேச்சுவார்த்தையின் அழைப்புக்குப் பின் உள்ள தந்திர நோக்கம் புரிந்தாலும், அமைதியை நாடி புரட்சிக்குழுவினர் அதற்குச் சம்மதிக்கின்றனர். அந்தச் சந்திப்பில், உமர் முக்தார், தமது போராட்டம் மற்றும் கோரிக்கைகளின் நியாயத்தைப் புரிய வைக்கும் முயற்சியில் எதிரியாக இருக்கும் கிராஸியானியைத் தமக்கு ஆதரவாக மாற்றிவிடுகிறார்!! அதன் பலனாக, போராட்டக் குழுவுக்கு ஆதரவாகத் தன் அதிகாரத்தைக் கொண்டு தாக்குதலின் கடுமையைக் குறைக்கிறார்.

ஆரம்ப காலம் தொட்டு, இஸ்லாமிய வரலாறுகளில் நுணுக்கமாகக் கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். அன்று முதல் இன்று வரை, எதிர்த் தரப்பிலிருந்து முக்கியமான ஒருவர், முஸ்லிம் படைகளின் நடவடிக்கைகளால் கவரப்பட்டோ, பேச்சு வார்த்தையின்போதோ, இஸ்லாமிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு முஸ்லிமாக மாறி விடுவார்!! இன்றும் இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்த்த எத்தனையோ பேர் முஸ்லிம்களாக மாறி இருக்கின்றனர்.  இங்கும்,  தொடக்கத்தில் உமர் முக்தாருக்கு ஆதரவாக மட்டும் மாறும் ஜெனரல் கிராஸியானியின் மனம், படிப்படியாக இஸ்லாத்தின் பக்கமாகச் சாய்ந்துவிடுகிறது.

ஆனால், விதி இப்போது முஸோலினியால் அனுப்பப்படும் “ஜெனரல் மக்ரோனி” என்கிற இன்னொரு எதிரி வடிவில் வந்து பேயாட்டம் போடுகிறது. அதனால் நடக்கும் தாக்குதல்களில், மக்ரோனி உயிரிழக்கவும், உமர் முக்தார் பிடிபடவும் நேருகிறது. தூக்கு தண்டனையைக் குறைத்துவிடுவதாக ஆசை காட்டினாலும் முஸோலினிக்கு மன்னிப்புக் கடிதம் எழுத மறுக்கிறார். அதன் பின் சிறையில் இருக்கும்போதும், தூக்குமேடையிலும் அவர் காட்டிய கம்பீரமும் உறுதியும் அமைதியும் இத்தாலியப் படையினரையே வியப்பில் ஆழ்த்தியதென்பது, இஸ்லாமிய வரலாற்றில் புதியதல்ல!! 

னி சில சுவாரஸ்யமான சம்பவங்களைப் பார்ப்போம்!!
#**# பேச்சுவார்த்தையின்போது, முகத்தை மறைத்து வரும் புரட்சிக் குழுவினரிடம், ஜெனரல் கிராஸியானி “முகம் பார்த்துப் பேசினால் மனம் திறந்து உரையாடலாமே?” என வினவ, ”முகத்தை மூடியிருப்பவர்களெல்லாம் மனதை மூடியிருப்பவர்களல்ல; முகத்தைத் திறந்திருப்பவர்களெல்லாம் மனதைத் திறந்திருப்பவர்களுமல்ல என்பது ஜெனரலுக்குத் தெரியாதா?” என பேச்சுவார்த்தையின் நோக்கத்தைச் சுட்டிக்காட்டி “பஞ்ச்” வைக்கிறார் உமர் முக்தார்!!

#**# பேச்சுவார்த்தையின்போது உமர் முக்தார் வைக்கும் ஒரே வேண்டுகோள், புரட்சிப் படையின் மீதுள்ள கோபத்தை அப்பாவிப் பொதுமக்களிடம் காட்ட வேண்டாம் என்பதே.... இன்றும்கூட இராணுவங்களின் ஒரே யுக்தி அதுவாகத்தானே இருந்து வருகிறது!! :-(

#**# லிபியாவை அடிமைப்படுத்திய இத்தாலி நாடு, முன்னர் அந்நிய நாடான சர்தீனியாவின் ஆட்சியின் கீழ் இருந்தது;  அப்போது இத்தாலியின் விடுதலைக்காக பெனிடோ முஸோலினியின் தலைமையில் போராடினார்கள்; விடுதலை கிட்டியதும் ஆட்சித்தலைவராகப் பதவியில் ஏறிய அதே முஸோலினி பின்னர் இத்தாலியின் சர்வாதிகாரியாக ஆகிவிட்டார்!! மேலும் அண்டை நாடுகளைப் பிடித்து அடிமைப்படுத்தவும் செய்தார்; தமது பதவிக்கு எதிராக இருப்பவர்களின் மீது பொய்யான #தேசத்துரோகக்_குற்றம் சுமத்தி சிறையிலடைக்கவோ, தூக்கிலிடவோ செய்தார்!! அதிகார போதை எதுவும் செய்ய வைக்கும்!!

#**# போராட்டக் குழுவில், உமர் முக்தாருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் அல்-கரீமி. உமர் முக்தார் சிங்கம் என்றால், அல்-கரீமி புலி! ஆரம்பத்தில் இத்தாலிய இராணுவத்தில் இருந்தவர்.   அவர், முஸோலினியைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது,  லிபிய இளைஞர்கள் அரசுப் பணிகளில் குமாஸ்தா பதவிக்கு மேல் செல்ல முடியாத நிலையைச் சுட்டிக் காட்டி, அவர்களின் படிப்புக்கு ஏற்ற வகையில் உரிய பதவி உயர்வுகளும், உயர் அரசுப் பதவிகளும் கொடுத்தால் இளைஞர்கள் புரட்சிப் படையில் சேருவதைத் தடுக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறார். அதை ஏற்க மறுக்கும் முஸோலினி, “உங்களைப் போல ஓரிருவர் உயர் பதவிகளில் இருப்பதே லிபியர்களுக்கு மிகவும் அதிகம்” என்று கூறிவிடுகிறார்.

இதைக் கேட்ட அதிர்ச்சியில் தம் பதவியை இராஜினாமா செய்து, புரட்சிக் குழுவில் சேர்ந்து, தம் இராணுவ அறிவின் மூலம் பல வெற்றிகளுக்கு வழிவகுத்துக் கொடுத்தார்!!

#**#  இரண்டாம் உலகப் போரில், முஸோலினியின் கூட்டாளியான ஹிட்லர் தற்கொலை செய்துகொள்ள, அண்டை நாட்டுக்குத் தப்பித்து ஓட முயன்ற முஸோலினி மக்களாலேயே சுடப்பட்டு, பின் தலைகீழாகத் தூக்கில் போடப்பட்டார். அவரது பிணம் மக்களால் சிதைக்கப்பட்டது!! சகல அதிகாரம் பொருந்திய சர்வாதிகாரிகளின் மரணங்கள் இவ்வாறாக அமைந்தன.

ரு நாட்டில் போராட்டங்களும், புரட்சிகளும் அநீதியான அடக்குமுறைகளை எதிர்த்தே எழுகின்றன என்ற வரலாற்றினையே “உமர் முக்தார்” புத்தகமும் மீண்டும் உறுதி செய்கிறது!! ஒரு போராளியின் அணுகுமுறை, போராட்ட வழிமுறை எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் உமர் முக்தாரின் வாழ்க்கை முழுதும் நிறைந்துகிடக்கின்றன.

Post Comment

ஆடையில்லா மனிதன்...




பிரபல ஆயத்த ஆடையகம் அது. பண்டிகையோ, விடுமுறை தினமோ, முகூர்த்த தினமோ இல்லாத அந்த நாளன்றுகூட, ஒருவர் கால்மீது கால் மிதிபடுமளவு கூட்டம்!! விடுமுறை நாட்களில் வந்தால் கூட்டம் இருக்கும் என்று வேலை நாளை தேர்ந்தெடுத்து வந்த பின்பும் இவ்வளவு கூட்டமா என்று கவலையோடு பிரமித்து நின்றேன். ஒவ்வொரு விடுமுறையிலும், குடும்பத்தினருக்கான ஆடையை இந்தியா வரும்போதே வாங்கிச் செல்வது வழக்கம். அதற்காக வந்தபோதுதான் பிரமிப்பு .
 
முன்பெல்லாம், வருடத்திற்கு இரண்டு பெருநாட்களுக்கு மட்டும்தான் மக்கள் ஆடைகள் வாங்குவர். (இப்போதும் நான் அப்படித்தான்). ஆனால், சமீப வருடங்களாக ஆடைகள் வாங்குவதற்கு தனி சந்தர்ப்பங்கள் என்று தேவைப்படுவதில்லை மக்களுக்கு. “ஷாப்பிங்” என்பது ஒரு பொழுதுபோக்காக - hobby- ஆகிப் போகியிருக்கிறது. பணப்புழக்கம் அதிகரித்து விட்டதா அல்லது துணிகள் விலை குறைந்து விட்டனவா?
 
நாம் ஏன் ஆடை அணிகிறோம்? நம் மானம் மறைக்க, நம்மை அழகுபடுத்த, குறைகள் வெளியே தெரியாமலிருக்க, தட்பவெப்பங்களிலிருந்து பாதுகாக்க, நம்மைப் புற அசுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள என்று பல காரணங்கள்.
 
ஆனால்.... இன்றுள்ள ஆடைகள் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனவா; அல்லது, இன்று அதிக எண்ணிக்கையில் ஆடைகள் வாங்கப்படுவது உண்மையிலேயே இந்தக் காரணங்களை முன்னிட்டுத்தானா?
 
குர் ஆனில் இறைவன், கணவன் - மனைவியை “ஒருவருக்கொருவர் ஆடையாக இருக்க வேண்டும்” என்கிறான். இது ஏதோ சும்மா ஒரு உதாரணத்துக்குச் சொன்னது என்று எண்ணத் தோன்றும். ஏன் ஆடையைச் சொல்ல வேண்டும்? எத்தனையோ நபிமார்கள் இருக்கின்றனர், அவர்களில் ஒரு தம்பதியைச் சொல்லி, இவர்களைப் போல வாழுங்கள் என்று சொல்லியிருக்கலாம். அல்லாமல், ஆடையைச் சொன்ன காரணம் என்ன?
 
2:187. .... அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்....
 
உலகத்தின் உயிரினங்களில், ஆறறிவு என்பது மனிதனுக்கு மட்டுமே உரியது. போலவே, ஆடையும் மனிதனுக்கு மட்டுமே உரியது. இதிலிருந்தே அதன் சிறப்பு புரியும். அதைத் தம்பதியருக்குப் பொருத்திப் பார்த்ததன் உயர்வு புரியும். வாழ்க்கைத்துணையைக் கூறும் இடத்தில் ஆடையும் ஆடையைக் கூறும் இடத்தில் வாழ்க்கைத்துணையும் எவ்வாறு பொருந்திப்போகின்றனர் பாருங்கள்.. சுப்ஹானல்லாஹ். அந்த ஒற்றை வசனத்தில் தான் அல்லாஹ் நமக்கு எத்தனை அழகிய பாடங்கள் வைத்திருக்கிறான்!!!
 
 
 
டையின்றி மனிதன் இல்லை. உணவு, உறைவிடம் இல்லாமல் இருந்துவிட முடியும்.  தமக்கென தனியே இல்லாவிடினும், உணவையும் உறைவிடத்தையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம்.  ஆனால், ஆடை..?  எல்லாவற்றையும் விட அத்தியாவசியமானது ஆடை. வாழ்க்கைத் துணையும் அதைப் போன்ற அத்தியாவசியமானவர். நம் மானம் காக்க உதவுபவர். நம் குறைகள் வெளியே தெரியாமல் பாதுகாக்க வேண்டியவர்;
 
ஆடை அறியா இரகசியமுண்டா நம் உடலில்? கணவன் - மனைவியும் அதுபோல தமக்கென தனிப்பட்ட இரகசியம் இல்லாத புரிந்துணவுடன் வாழ வேண்டியவர்கள்.
 
உடலில் குறைகள் எத்தனை இருப்பினும், அதை மறைக்க வேண்டிய விதத்தில் மறைத்து, நம்மைக் கௌரவமாகத் தோன்றச் செய்வது ஆடை. வாழ்க்கைத் துணையும் அவ்விதமே இருக்க வேண்டியவர். ஒருவர் அடுத்தவரின் குணத்தில் உள்ள குறைகளை மறைத்து, வெளியாரிடம் பெருமைப்படச் செய்ய வேண்டியவர்.
 
கடும் வெயிலிலும் குளிரிலும் பனியிலும் நம்மைப் பாதுகாப்பது நம் உடை. தம்பதிகளும் அவ்விதமே ஒருவருக்கொருவரை, மற்றவர்களின் தீய எண்ணங்கள், இச்சைகள் போன்ற புற தீங்குகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வர். தம்மிலிருந்து மற்றவரை நோக்கித் தோன்றக்கூடிய தீய எண்ணங்கள், இச்சைகளை உரிய முறையில் தடுத்துக் கொள்ள கருவியாக இருக்க வேண்டியவர்கள்.
 
டைகளைப் பராமரிப்பது என்பது ஒரு கலைத்திறமைக்கு ஒப்பானது. ஆடைகளின் தன்மையைப் பொறுத்து அதைப்  பேணும் முறையும் அமைகிறது.  ஆடையை அணிந்தால் அழுக்காகத்தான் செய்யும். அழுக்காகி விட்டது என்பதற்காக அதை குப்பையில் வீசிவிடுவதில்லை. தகுந்த முறையில் சுத்தம் செய்து மீண்டும் அணிகிறோம்.
 
ஒருவேளை சிறு கிழிசல்கள் ஏற்பட்டுவிட்டாலும், அதைத் தூக்கியெறிந்து விடுவதில்லை. முறையாகச் செப்பனிட்டு, பயன்பாட்டைத் தொடர்கிறோம்.
 
விசேஷ சந்தர்ப்பங்களின்போது அணிந்த ஆடைகளைப் பாதுகாத்துப் பராமரித்து வருகிறோம். ஃபேஷன் மாறினாலும், அதைத் தூர எறிந்து விடாமல், காலத்துக்கேற்றவாறு “ஆல்டர்” செய்து  அணிந்து அழகுபார்க்கிறோம்.
 
தற்காக அளவு மாற்றமாகிப் போய் அணியவே முடியாதபடி ஆகிப்போன உடையையோ, இனி தைக்கவே முடியாதபடி கிழிசலாகிப் போன உடையையோ ‘செண்டிமெண்ட்’ என்ற பெயரில் வைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை!!
 
மானம் மறைத்து, அழகுபடுத்தி, குறைகள் வெளியே தெரியாமல், புற அசுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமளவு உறுதியாக இருப்பவையே சிறந்த ஆடைகள்.  மாறாக, குறைகளை வெளிச்சம் போட்டு காட்டும், அல்லது புற தீங்குகள் நம் உடலைத் தாக்க ஏதுவாக நம் உடலை வெளிப்படுத்தி துன்பத்தை வரவைப்பவை அல்ல!
 
முன்பெல்லாம் ஆடைகள் வாங்குவதென்பது ஒரு திருவிழாவுக்கு இணையான கொண்டாட்டமாக இருந்தது. இன்று ஆடைகள் வாங்குவது மிக சாதாரணமான செயலாகிவிட்டது. அன்று புத்தாடைகளுக்கு கிடைத்த மதிப்பும், பேணுதலும், இன்றைய புத்தாடைகளுக்குக் கிடைப்பதில்லை. காரணம், ஆடைகள் மிகுந்து போனதால் இருக்குமோ? நாள்தோறும் மாறும் நாகரீகத்திற்கேற்றவாறு அணிவதற்காக, பழைய ஆடைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, புதிய ஆடைகள் வாங்குவதென்பது மிக இலகுவாகிப் போனதாலா?
 
அன்று வாங்கும் ஆடைகள் காலத்துக்கும் நீடித்து உழைப்பவாய் இருந்தன. பாட்டியின் உடைகள் பல தலைமுறைக்கும் நீடித்து வருமளவு சிறந்தனவாய் இருந்தன. இன்று வாங்கும் உடைகளோ, பார்க்கப் பகட்டாய் இருந்தாலும், சில முறை அணிவதற்குள்ளேயே இத்துப் போய்விடுகின்றன. ஆடைகளின் தரம் குறைந்துவிட்டது காரணமா, பராமரிப்பு குறைவா?
 
றைவன் ஆதி மனிதன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து சுவர்க்கத்தில் குடியேற்றியபோது, சுவர்க்கத்தில் இல்லாத வசதிகள் இல்லை. எனினும், மனிதனால் தனிமையில் இனிமை காண முடியாது என்பதை அறிந்ததால்தான், துணையைப் படைத்தான். எப்பேர்ப்பட்ட வசதிகள் இருந்தாலும், துணை இருந்தால்தான் வாழ்வு ருசிக்கும்.
 
”ஆடையில்லா மனிதன் அரைமனிதன்” என்பது பழமொழி. இதையே நபி(ஸல்) அவர்கள், “திருமணம் ஈமானில் பாதி” என்று உணர்த்தினார்கள்.
 
சுகந்தத்தின் மணம் காற்றில் கலந்துவிட்டால், பின்னர் அதைப் பிரிக்க இயலாது. திரு’மணம்’ என்ற நிகழ்வில் இணையும் இருமனங்களும் பிரிக்க இயலாதபடி கலந்துவிடுவதே மணவாழ்வை “மணக்கச்” செய்யும். 
 
இஸ்லாமிய பெண்மணி” வலைத்தளத்தில் 13-2-2016 அன்று வெளியான கட்டுரை.

Post Comment

ஜீவனாம்சம்




மீபத்தில் விவாகரத்தான ஒரு நண்பரையும், அவரது தாயாரையும் சந்திக்க நேர்ந்தது. நண்பர் மிகவும் வாடிப் போய் இருக்க, தாயாரோ புலம்பித் தள்ளி விட்டார்கள். விஷயம் இதுதான்: தலாக் சொல்லியபோது, இரு குடும்பத்தார்களுக்கும் பொதுவாகப் பேசி காரியங்களைச் சுமுகமாக்கி வைத்த ஊர் ஜமாத்தார்கள் பெண் தரப்பிற்கு அதிக நஷ்ட ஈட்டை வாங்கித் தந்துவிட்டார்களாம். “எனது இத்தனை வருடகால உழைப்பும் இதற்கே சரியாகிவிட்டது. இனி எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்க வேண்டும்” என்று வருந்தினார் நண்பர். பரிதாபமாக இருந்தது.

”இஸ்லாத்தில் இந்த நஷ்ட ஈடு, ஜீவனாம்சம் எதுவும் கிடையாது. ஆனா, பொம்பளைன்னா இரக்கம் காட்டணும்னு சொல்லிகிட்டு இஸ்லாத்துக்கு மாறா நடக்குறாங்கம்மா… உன்னை மாதிரி பெண்ணுரிமை பேசுற ஆட்கள் இதையும் சரின்னு சொல்வீங்களே…” என்று என்னையும் தாக்கினார்!!

அவரிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன், “விவாகரத்து இஸ்லாமிய முறைப்படி நடக்கலை, சரி. கல்யாணம் இஸ்லாமிய முறைப்படிதான் நடத்துனீங்களா?”

ஸ்லாம் அதிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்ட இந்த காலகட்டத்திலும், திருமணம் என்பது இன்னும் பெண் வீட்டாருக்கு ஒரு பொருளாதாரச் சுமையாகவே இருக்கிறது.

மகளுக்கு நகைகள், பட்டாடைகள், பாத்திர பண்டங்கள், கட்டில், பீரோ மற்றும் வாஷிங் மெஷின் – ஃப்ரிட்ஜ் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்கள், மாப்பிளைக்கு பைக்-வாட்ச்-செயின், மாமியார் நாத்தனார்களுக்கும் நகைகள் இவைபோக, மப்பிள்ளை வீட்டார் போக்குவரவு – தங்குவதற்கான செலவுகள், திருமண மண்டபச் செலவுகள், பல வித விருந்து செலவுகள், சீர்கள் என்று மூச்சு முட்ட வைக்கும் அளவுக்கு செலவுகள் திருமணத்தின்போது!!

இத்தோடு முடிந்ததா? வருடா வருடம் நோன்புச் சீர், பெருநாள் சீர்கள்; தவிர குழந்தைகள் பிறந்தால் மருத்துவச் செலவும் பெண்வீட்டாருடையதே. பிறந்த குழந்தைக்கு நகைகள், விருந்துகள், இன்ன பிற செலவுகள்.

இங்கு சொல்லியிருப்பவையெல்லாம் குறைந்த பட்சம்தான். ஊருக்கு ஊர் வசதிக்கேற்றவாறு இன்னும் கூடுதலாகவே உண்டு.

ப்படி, ஒரு மகளுக்கே தந்தை தன் வாழ்நாள் சேமிப்பைக் கரைக்க வேண்டியிருக்கிறது!! இதில் ஒன்றுக்கு மேற்பட்ட மகள்கள் இருந்தால், தந்தையின் நிலை பரிதாபம்தான்!!

இதுவா இஸ்லாம் சொல்லும் திருமண முறை? கேட்டால் மாப்பிளை தரப்பில் சொல்லுவார்கள், “நாங்களும்தான் மஹர் நகை போடுறோம். வலீமா விருந்து வைக்கிறோம்”. சிரிப்பு வருகிறதா, சிரித்து விடுங்கள்.

3 முதல் 10 பவுன் நகையை மஹர் என்ற பெயரில் போடுகிறார்கள். அந்த நகை கணவன் அல்லது அவர் வீட்டார் சுய விருப்பத்தின் பேரில் மனைவிக்கு அளிப்பது. மஹர் என்றால் என்ன? பெண்ணின் விருப்பத்திற்கு ஏற்ப நகையோ, பணமோ, அல்லது அவள் கேட்கும் பொருட்கள் வடிவில் கொடுப்பதுதான் மஹர். இவர்களாகவே ஒரு அளவை நிர்ணயம் செய்து கொடுப்பது மஹராகுமா? அல்லது பெண் விருப்பத்தைக் கேட்டுச் செய்யும் நிலைதான் இங்கு நிலவுகிறதா என்ன?

திருமணத்தன்று, மணமகளின் தந்தை செலவில் இரு தரப்பிலுமாக குறைந்த பட்சம் ஆயிரம் ரெண்டாயிரம் பேர்கள் விருந்துண்டபின், மணமகன் தன் தரப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறவினர்களுக்கும், மணமகள் வீட்டைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்படும் சிறிய அளவிலான விருந்தை வலீமா என்று சொல்லிக் கொள்கிறார்கள்!!

ரபுநாடுகளில், அரசுகள் ஆணின் திருமண செலவுக்கு நிதியுதவி செய்வதற்கென மையங்கள் வைத்து இருக்கின்றன. நம் நாட்டிலோ, அரசுகள் மதபேதமின்றி பெண்ணின் தாலிக்கு தங்கமும், சீருக்கு பணமும் தருகின்றன. வங்கிகளும் “மகள்களின் திருமணத்திற்கு” என பல திட்டங்கள் வைத்திருக்கின்றன!!

இப்படி சேமிப்பு அனைத்தையும் கரைத்து, கடனுக்கு மேல் கடனும் வாங்கி திருமணம் செய்து வைத்த மகள், ஒருவேளை மணவாழ்க்கை தோல்வியுற்று திரும்பி வந்தால், பின்னர் அவள் நிலை என்ன? அவளும் அவள் குழந்தைகளும் தந்தை வீட்டில் அடைக்கலமாகின்றனர். அவளுக்கு அடுத்து ஒரு திருமணம் என்பதெல்லாம் நம் நாட்டில் கனவுதான்.

விவாகரத்தான அல்லது விதவையான பெண் குறித்து இஸ்லாம் சொல்வதென்ன? “தலாக் என்றால், கொடுக்கப்பட்ட மஹர் திரும்பி வாங்கப்படக்கூடாது. குழந்தைகளின் (இருப்பின்) எல்லாவித செலவும் அக்குழந்தைகளின் தந்தையுடையதே”.

துணையை இழந்தாலும், பிரிந்தாலும், அவர்கள் உரிய காலத்தில் உடன் மறுமணம் செய்துகொள்ளுதல் வேண்டும். இது ஆண், பெண் இருவருக்குமான பொதுவிதி. இதற்கு வயது ஒரு தடையே கிடையாது. “திருமணம் ஈமானில் பாதி” என்ற ஹதீஸ் முதல் திருமணத்திற்கானது மட்டுமல்ல. முஸ்லிம் ஆணும், பெண்ணும் இறுதி வரை ஒரு திருமண பந்தத்தில் இருக்க வேண்டும். அதுதான் இஸ்லாமிய கட்டளை.

தனால்தான் விவாகரத்தான பெண்ணுக்கு ஜீவனாம்சம் என்பது இஸ்லாத்தில் கிடையாது. தன்னை வேண்டாமென்று ஒதுக்கிவிட்ட ஒருவனின் பணத்தை எதிர்பார்த்து வாழும் அவலநிலையை விட்டும் பெண் பாதுகாக்கப்பட்டு, அதே சமயம், எந்நாளும் ஒரு குடும்பத்தின் தலைவியாக இருக்கும் உயர்வு கொடுக்கப்பட்டுள்ளாள். ஆனால், இங்கு நடப்பது என்ன? ஒரு முறை திருமண பந்தத்திலிருந்து விலகிவிட்டால், அந்தப் பெண்ணுக்கு அடுத்த திருமணம் என்பது எந்தளவு சாத்தியம் என்பதை யாரும் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.
அதுவும் குழந்தைகள் உடைய பெண் என்றால், கேட்கவே வேண்டாம். 
 
குழந்தைகள் தாயின் மறுமணம் வரை மட்டுமே தாயுடன் இருக்க வேண்டும், மறுமணம் செய்யாத பட்சத்தில் 7 வயது வரை இருக்கலாம். அதன் பின், குழந்தைகளின் விருப்பம் மற்றும் நலனைப் பொறுத்து தாயுடனோ தந்தையுடனோ இருக்க வேண்டும்; எனினும் தந்தையுடன் இருப்பதே வலியுறுத்தப்படுகிறது. இதுதான் இஸ்லாமிய சட்டம்.

இங்கோ குழந்தைகள் இருந்தால், அப்பெண் தன் சுகதுக்கங்களை மறந்து, அக்குழந்தைகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு வாழ்க்கையைத் தனியாகவே எதிர்கொள்ள வேண்டும் என்பதே நடைமுறையாகிவிட்டது. தாய் என்றால் தியாகத்தின் திருவுரு என்று சொல்லிச் சொல்லியே, பெண்ணாக அவளின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

ஸ்லாமிய சட்டப்படி, விவாகரத்து பெற்ற பெண், மறுமணம் வரை தந்தை அல்லது சகோதரர்கள் பொறுப்பில் ஆகிறாள். அவளோடு, அவளின் குழந்தைகளுக்கும் அவர்கள் செலவு செய்யும் நிர்பந்தம் ஏற்படுகிறது. அவளின் முதல் திருமணத்திற்கென செய்த செலவுகளே பெரும் கடனாகி நிற்கும் நிலையில், இப்போதும் நிரந்தரமாக அவளைப் பராமரிக்கும் நிலை ஏற்படுத்திய பொருளாதாரச் சுமையின் காரணமாக, அவளை வெறுப்புடன் நடத்தும் நிலை ஏற்பட்டு விடுகிறது. பல குடும்பங்களில் சம்பளமில்லா வேலைக்காரி நிலை என்றால், சில இடங்களில் கழிவிரக்கம் காரணமாக அதிகாரம் செலுத்தும் நாத்தனாராக!!

இஸ்லாம் பெண்களுக்கு ஏற்றம் தருகிறது என்று சொல்லிக் கொண்டு மட்டும் இருக்கிறோம். ஆனால் நடைமுறையில், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று மக்களைச் சொல்ல வைத்தது இஸ்லாத்திற்கு மாற்றமான நமது செயல்பாடுகளே!!

லீஃபா அபூபக்கர் அவர்களின் மனைவிகளில் ஒருவரான அஸ்மா பின்த் உமைஸ் என்பவர். இவர் 15 வருடங்களுக்கு மேல் ஜாஃபர் இப்னு அபூதாலீப் அவர்களின் மனைவியாக இருந்து, அவரின் மரணத்திற்குப் பின் அபூபக்கர்(ரலி) அவர்களை மணந்தார். சுமார் ஐந்து வருடங்களுக்குப் பின் அவர் மரணித்தபின், அலீ இப்னு அபூதாலிப்(ரலி) அவர்களை மணந்தார்.

நபி(ஸல்) அவர்களின் முதல் திருமணமானது, கதீஜா(ரலி) அவர்களுக்கு மூன்றாவது திருமணம்!!

ஜாஹிலியா (அறியாமை) காலத்திற்கெல்லாம் போக வேண்டாம், இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன் தவ்ஹீது அறியாத தர்ஹா காலத்தில்கூட, நம் பாட்டிகளுக்கெல்லாம் மறுமணங்கள் வெகுஇயல்பாக நடந்தது கண்டிருக்கிறோம்.

ஆனால், இன்று பலப்பல முன்னேற்றங்களைக் கண்ட, இஸ்லாமிய கொள்கைகள் சிறப்பாகப் புரியப்பட்டுள்ள இக்காலத்தில் பெண்ணுக்கு மறுமணம் என்பது குதிரைக் கொம்பாக ஆகிவிட்டது!!

ரு பெண்ணுக்கு வாழ்நாளில் ஒரு திருமணம் மட்டுமே என்றாகிவிட்ட நிலையில், அதுவுமே முடிவுக்கு வருமானால், தனியே கடந்தாக வேண்டிய அவளது மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை உத்தேசித்துதான் ஜமாத்தார்கள் நஷ்ட ஈடு, அதுவும் அவளது பெற்றோர் செலவு செய்த தொகைக்கு ஈடாகவே மீட்டுத் தருகிறார்கள்.

இதில் கணவனின் குடும்பத்தினர், செட்டில்மெண்டாக தாம் முன்னர் பெற்ற சீர்ப் பொருட்களையும் திருப்பிக் கொடுக்கின்றனர். பயன்படுத்தப்பட்ட கட்டில், மெத்தை, பாத்திர பண்டங்கள் எல்லாவற்றையும் திருப்பிக் கொடுப்பது, அப்பெண் அவற்றைத் தினமும் கண்முன் வைத்து கடந்த காலத்தை மறந்துவிடாமல் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கவா??

எப்போதுமே விளைவுகளைப் பற்றி மட்டுமே பேசப்படும் இவ்வுலகில், மூலகாரணங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை. அதுபோலத்தான் இங்கும், விவாகரத்தில் இஸ்லாம் பேணப்படுவதில்லை என்று கொதித்தெழும் நாம், திருமணத்தில் – திருமண வாழ்வில் இஸ்லாம் எள்ளளவும் பேணப்படுவதில்லை என்ற மூல காரணத்தைப் புறந்தள்ளிவிடுகிறோம்.

இதற்கு திருமண இருதரப்பு வீட்டாரோடு, திருமணத்தை நடத்தி வைக்கும் ஜமாத்தாரும் காரணம்தான். ஆனால், மணமகன் வீட்டார்தான் முதல் முயற்சி எடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.

பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதில் காட்டும் தீவிரத்தை, ஏற்கனவே நமக்கிருக்கும் தனியார் சட்ட உரிமைகளை முறையாகப் பயன்படுத்துவதிலும் காட்ட வேண்டும். திருமண விஷயங்களில் முஸ்லிம் சட்டம் என்பது பலதார மணத்திற்கும், விவாகரத்தில் ஜீவனாம்சம் கொடுக்க மறுப்பதற்கும் மட்டுமல்ல; திருமணம் என்பது பெண் வீட்டினருக்கு சற்றுகூட சுமையாக இல்லாமலும் இருப்பதும்தான் முஸ்லிம் சட்டம். பெண்ணுக்கு மறுமணம் என்பதும் இலகுவாக்கப்பட வேண்டும்.

இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த சமுதாய, இயக்க, ஜமாத் தலைவர்கள் முழுமுயற்சி எடுக்க வேண்டும். நமக்களிக்கப்பட்ட இஸ்லாமியச் சட்டத்தைக் கொண்டு நம் சமுதாயத்தில் பெண்கள் நிலையை மேம்படுத்தி, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அதைக் கொண்டு இஸ்லாத்தின் மேன்மையை எடுத்து சொல்லவேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது.

ஒரு மகளின் திருமணச் செலவுகள், பெற்ற தந்தையின் வாழ்நாள் சேமிப்பையே மொத்தமாகக் காலி செய்யும் நிலை மாறாதவரை, விவாகரத்து என்பதும் கணவனின் ஒருசில ஆண்டுகால சேமிப்பை உறிஞ்சுவதாகத்தான் இருக்கும்.

என்றைக்கு திருமணங்கள் முழுமையாக இஸ்லாமிய முறைப்படி நடக்கின்றனவோ அப்போதுதான், அக்காலத்தில் நடக்கும் மிகச் சொற்ப விவாகரத்துகளும் இஸ்லாமிய முறைப்படி நடக்கும்!!


இஸ்லாமிய மாதமிருமுறை இதழான ”சமரசம்” 2015 டிசம்பர் 16-31 பதிப்பில் வெளிவந்தது.

Post Comment

பாஸானா என்ன, ஃபெயிலானா என்ன




ல்லூரிப் படிப்பு முடிந்ததும், அதே கல்லூரியில் இரண்டரை வருடங்கள் போல ஆசிரியையாக வேலைப் பார்த்த சமயம் அது.  சம்பாதித்துக் கொண்டே படிப்பது போன்ற இரண்டாம் கல்லூரி காலம் அது.  அதே கல்லூரி என்பதால், படிக்கும்போது இருந்ததைவிட அதிக ஜாலியாக இருந்தது.

ஒரு நாள்  வேறு துறையைச் சேர்ந்த ஒரு மூத்த பேராசிரியர் திடீரென்று என்னை வரச் சொன்னார். அப்படியொரு ஆசிரியர் அங்கு இருக்கிறார் என்பது முன்பே தெரியும் என்றாலும், வேறு துறை என்பதால் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒருவர் எதற்கு வரச் சொன்னார் என்று குழப்பத்தோடு சென்றேன். 

சென்றதும் நலம் விசாரித்துவிட்டு, “ஏம்மா, இந்த வருஷம் உங்க ஊர்லருந்து ஒரு பையன் நம்ம காலேஜ்ல சேந்திருக்கானே, உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அவ்வ்வ்... அதெல்லாம் யாருக்குத் தெரியும்.. நான் உண்டு, என் வேலை உண்டு, வகுப்பெடுக்கும் நேரம் போக, என் சக தோழியரோடு மாணவிகளையே மிஞ்சுமளவுக்கு நாங்கள் அடிக்கும் கொட்டம் உண்டு என்று “அடக்கமாக” இருக்கும் எனக்கு அதெல்லாம் எப்படித் தெரியும்? “நான் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு  பாடம் எடுக்கிறதில்லை சார்” என்று ”பொறுப்பாக”ப் பதில் சொன்னேன்.

சிரித்துவிட்டு, “சரி போகட்டும். இன்ன வகுப்பில் இன்ன மாணவன்தான் உங்க ஊர்க்காரன். அவன் அப்பா என்னைப் பார்க்க வந்திருந்தார். படிப்பு கஷ்டமாருக்கு, இனி காலேஜுக்கு வரமாட்டேன்னு பையன் சொல்றானாம். அவர் வந்து வருத்தப்பட்டார். உங்க ஊர்ப் பையந்தானே, நீங்க பேசிப்பாருங்களேன்” என்றார்.

”கண்டிப்பாப் பேசுறேன் சார்”னு சொல்லிட்டு வந்தேன்.

ரசு பொறியியற் கல்லூரிகளில், இப்போது போலவே அப்போதும் அட்மிஷன் கிடைப்பது கொஞ்சம் சிரமமே . நுழைவுத் தேர்வு இருந்த காலம் என்பதால், ப்ளஸ் டூ மார்க் மட்டுமல்லாது, நுழைவுத் தேர்விலும் சிறப்பான மதிப்பெண் பெற்றால்தான் அரசு கல்லூரியில் இடம் கிடைக்கும். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளும் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் அன்று இருந்தன. 

தமிழ்வழி பள்ளிக்கூடங்கள்தாம் அதிகம் அன்று. ஆங்கில வழி பள்ளிகளில் படித்தவர்களுக்கே, பொறியியற் கல்லூரிகளின் டெக்னிக்கல் ஆங்கிலம் வெகு சிரமப்பட்டுத்தான் ”கை வரும்”.  என் உடன் படித்த மாணவர்களில், வேறு துறையில் ஒரு மாணவி இரண்டாம் வருடத்தோடு படிப்பை நிறுத்தி விட்டாள். ஒரு மாணவர் பாஸ் பண்ண முடியாமல் (Break system இருந்ததால்) மூன்றாம் வருடம் தற்கொலை செய்துகொண்டார்.  அதற்கு முன்பும் சில சீனியர் மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இறுதி வருடம் படிக்கும்போது ஒரு பரிட்சை நாளன்று பரிட்சை தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன், இன்னொரு மாணவி படித்தது எதுவுமே நினைவில் இல்லை என்று, நானும் இன்னொரு தோழியும் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் அழுதுகொண்டே வீட்டிற்குக் கிளம்பிவிட்டாள்.

தெல்லாம் நினைவுக்கு வர, உடன் அம்மாணவனைச் சந்தித்து, அவனிடம் மற்ற விபரங்கள் எதுவும் கேட்காமல், சும்மா பேசுவதுபோல பேசினேன். அதே ஆங்கிலப் பிரச்னைதான். என் துறை என்பதால், என்னுடைய நோட்ஸ், புத்தகங்களைக் கொடுத்தேன்.

பேராசிரியரும் அவனை அழைத்து வைத்து பேசி, ஆலோசனைகள் தந்தார் என்று அறிந்தேன்.  பின்னர் மேற்படிப்பும் முடித்து, தற்போது நல்லதொரு வேலையில் இருப்பதாகக் கேள்வி. :-)

இது எனக்குத் தெரிந்த ஒரே ஒரு கதைதான். இது போல எத்தனை பேர்களை அவர் கைகொடுத்து தூக்கிவிட்டாரோ!!

ப்போ இந்த கொசுவர்த்தி ஏன்னு கேட்டா.... சென்ற வருட கல்வி ஆண்டு ஆரம்பத்தில் உறவினர் ஒருவர், அவரது நெருங்கிய நண்பர் - மிக வசதிக் குறைவானவர், பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர் - தனது மகனுக்கு கவுன்சலிங் வழியாகவே ஒரு முன்ணணி அரசு கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டதாக மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாகச் சொன்னார். “அப்பாவோட கஷ்டம் புரிஞ்சு, நல்ல காலேஜ்ல இடம் கிடைக்கிற அளவுக்கு மகன் நல்லாப்  படிச்சுட்டான்” என்று உறவினர் சந்தோஷப் பட்டார்.

அது மிகவும்  பிரபல கல்லூரி என்பதால், அதில் இடம் கிடைக்குமளவு சிரமப்பட்டு படித்த மாணவனின் உழைப்பை நாங்களும் பாராட்டி பேசிக் கொண்டோம். உறவினரும், நண்பனின் மகனுக்கு தேவையான சில கல்வி சாதனங்கள் வாங்கி பரிசாக அனுப்பி வைத்தார்.

சென்ற மாதம் இந்தியா சென்று வந்த அவர், அந்த அதிர்ச்சிச் செய்தியைச் சொன்னார். ஆம், அந்த மாணவன் மொழி மற்றும் பாடம் சிரமமாக இருக்கிறது என்பதால் படிக்க முடியாது என்று திரும்பி வந்துவிட்டானாம்!!

மாணவனின் தந்தை சென்று ஆசிரியர்களைப் பார்த்துப் பேசியபோது, அவர்களோ ”சார், அவன் படிக்க முடியாதுன்னு சொன்னா நீங்க கட்டாயப் படுத்தாதீங்க. சில பசங்க இப்பிடித்தான் சீட் கிடைச்சிதுன்னு படிக்க வந்துட்டு, அப்புறம் படிக்க முடியலைன்னு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அதனால நீங்க உங்க பையனைக் கூட்டிட்டு போயிடுறதுதான் நல்லது” என்று சொன்னார்களாம்!!

குறிப்பிட்ட மாணவன், தேர்வுகளை எழுதி,  நல்ல மதிப்பெண்கள் பெற்றதால்தான் அந்தக் கல்லூரியில் சேர முடிந்திருக்கிறது. அப்படியொன்றும் படிக்க முடியாத தகுதியற்ற மாணவன் அல்ல. விருப்பமில்லாமல் சேர்ந்த படிப்பும் அல்ல. மிகவும் விரும்பி ஆசைப்பட்டுத்தான் சேர்ந்திருக்கிறான். சற்றே பட்டை தீட்டினால் வைரமாய் ஜொலித்திரா விட்டாலும், இமிடேஷன் கல் அளவுக்காவது ஆகியிருக்க மாட்டானா?

எந்த விசாரணையும் இல்லாமல், “தற்கொலை செஞ்சுக்கப் போறான்” என்று தீர்ப்பையும் இவர்களே வழங்கிவிட, பதறிப் போன அந்த பாவப்பட்ட தந்தை, “நீ படிக்கவே வேணாம் ராசா. நான் வச்சு காப்பாத்தறேன் வா”ன்னு கூட்டிட்டு கெளம்பிட்டார்!! :-(

நான் கல்லூரி படிக்கும்போது, ஒரு ஆசிரியர் - மிக நல்லவர், மாணவர்கள் தம் பொறுப்புணர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் - அடிக்கடி வகுப்பில், “நீ பாஸ் பண்ணாலும் வாத்தியார்களுக்கு சம்பளம் கூடப் போறதில்லை; நீ ஃபெயிலானாலும் வாத்தியார்களுக்கு சம்பளம் குறையப் போறதில்லை. ” என்பார். அதுதான் நினைவுக்கு வருகிறது.

Post Comment