Pages

புதிய பார்வை






ள்ளிகளுக்கு, ஜூலை-ஆகஸ்ட் இரண்டு மாத கோடை விடுமுறை ஆரம்பித்ததும், எங்க குர் ஆன் வகுப்புக்கும் லீவு விட்டுட்டாங்க. சின்னவனும் நானுமா நல்லா தூங்கி தூங்கி எழுஞ்சுகிட்டு இருந்தப்பதான், அந்த ஃபோன் வந்தது!!

குர் ஆன் வகுப்பு நடத்துகிற நிறுவனத்திலிருந்து, நடத்தும் பதின்பருவ மாணவிகளுக்கான இரு வார கால கோடை வகுப்புகளில் பணிபுரிய “தன்னார்வலர்கள்” தேவைப்படுவதாக வந்த அழைப்பு அது. என்ன, அட்டெண்டன்ஸ் எடுக்கச் சொல்வாங்க, அதோடு போர்டைக் க்ளீன் பண்றது போன்ற ஆஃபீஸ் வொர்க் செய்யலாம்னு நெனச்சு போனா, பாடம் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க!! அவர்களின் ஆஸ்தான ஆசிரியைகள் விடுமுறைக்குச் சென்றிருந்த நிலையில், முடியாதுன்னு பின் வாங்கவும் முடியலை….

என்னடா இது என் தூக்கத்துக்கு வந்த சோதனை… என்று சோகமாக இருந்தாலும், நல்ல விஷயம்தானே முயற்சி செய்வோம்… என்று மனதைத் தேற்றிக் கொண்டு, குர் ஆனின் கடைசிப் பகுதியில் வரும் சில சிறிய அத்தியாயங்களை எடுத்து, தஃப்ஸீர் - விளக்கம் தயாரித்துக் கொண்டேன். பத்து நாட்கள் நடக்கும் வகுப்புகளில் பத்து அத்தியாயங்களை எளிதாக நடத்திவிடலாம் என்று நினைத்த எனக்கு, ஐந்தைக் கூட முழுதாக முடிக்க முடியாத அளவுக்கு விரிந்து கொண்டு போன விளக்கவுரை பிரமிப்பைத் தந்தது!! இத்தனைக்கும் ஒவ்வொன்றும் மூன்று முதல் பத்து வாக்கியங்கள் உள்ள சிறுசிறு அத்தியாயங்களே. ஒவ்வொரு வகுப்பிலும், முடித்தாக வேண்டுமே என்று விரைவுபடுத்தினாலும் முடிக்க முடியாத அளவுக்கு விரிவான விளக்கங்கள்!!

குர் ஆன் என்றால் வழக்கமாக அரபியில் மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் என்ற அளவிலேயே அதுவரை பயின்று வந்த மாணவிகளுக்கு,  அதன் பிண்ணனி நிகழ்வுகள், உள்ளார்ந்த விளக்கங்கள், காரண காரியங்கள், சமகாலத்திற்கான படிப்பினைகள் ஆகியவை மிகவும் புதிதாக இருந்தமையால் மிகவும் ஆர்வத்தோடு வகுப்பில் ஒன்றியிருந்தார்கள்.

ஆகையால், விளக்கங்களோடு, மாணவிகளின் கேள்விகளும், சந்தேகங்களும், பிரமிப்புகளும், அனுபவங்களும், பகிர்வுகளும் என்று நேரம் போவதே தெரியாமல் அதிக சுவாரசியமாக இருந்தது. 

ந்த மாணவிகள் மட்டுமல்ல, நம்மில் பலரும் குர் ஆன் என்றால், அதை அரபியில் ஓதுவது மட்டுமே அவசியம் என்று நினைக்கிறோம். அதிகபட்சமாக, அதன் வாக்கிய அர்த்தங்களைத் தமிழில் வாசிப்பதோடு நமது கடமை முடிந்து விட்டதாகக் கருதுகிறோம். ஆனால், விரிவான விளக்கங்கள் எனப்படும் “ஃப்ஸீர்” மிக மிக அவசியம். இந்த விளக்கங்களைத் தெரிந்து கொள்வதுதான், குர் ஆனோடான நமது உறவை வலுப்படுத்தும். இதைத் தெரிந்து கொண்டவர்களால்தான் குர் ஆனை நமது அன்றாட வாழ்வில் வழிகாட்டியாகப் பயன்படுத்த முடியும்.

இஸ்லாம் குறித்து பொது தளங்களில் விவாதம் எழும்போதெல்லாம், முஸ்லிமல்லாதவர்கள் குர் ஆனில் இருக்கும் குறிப்பிட்ட சில வசனங்களைச் சுட்டிக்காட்டி சர்ச்சை எழுப்புவது வழக்கம். அதன் பின்புலங்கள் அறிய முற்படாமல், மேம்போக்கான பொருளை மட்டுமே எடுத்துக் கொள்வதுதாம் இதற்குக் காரணம்.

தஃப்ஸீரைக் கற்பவர்களுக்கு ஒரு இனிய எச்சரிக்கை:  தஃப்ஸீரைக் கற்கத் தொடங்கினால், மீள முடியாமல் அதில் மூழ்கி விட வாய்ப்புண்டு!! :-D அத்தனை விறுவிறுப்பு, சுவாரசியம், திகில், பயம், பரவசம், மகிழ்ச்சி எல்லாம் கலந்த ஒரு வழிகாட்டி… குர் ஆன்!!

மாணவிகளில் பெரும்பான்மையோர் இந்தியர், ஒரு பாகிஸ்தானி, ஒரு அரபி மாணவியும் இருந்தனர். அவர்களில் பாகிஸ்தானி மாணவியும், அருகில் அமர்ந்திருந்த இந்திய மாணவியும் எப்போதுமே பேசிக் கொண்டிருந்ததால் அவர்களிடம் “நீங்கள் இருவரும் உறவினரா?” என்று கேட்டேன். அதற்கு அந்த இந்திய மாணவி, படபடவென அவசரமாக, “ஒரு பாகிஸ்தானி எப்படி எனக்கு உறவினராக முடியும்?” என்று கேட்டாளே பார்க்கணும்!!

ஏன் இருக்க முடியாது என்று விளக்க முற்பட்டேன். அதற்கு அவள், “டீச்சர், நான் இந்தியா போகும்போது எனக்கு பாகிஸ்தானி தோழிகள் இருக்கிறார்கள் என்று நான் சொன்னாலே, என்னை தேசத் துரோகி போல பார்த்து, “எப்படி உன்னால் அது முடிகிறது” என்று கேட்கிறார்கள்.” என்று வருத்தத்துடன் சொன்னாள்!! :-( 
 
ஒரு நாள், அந்த பாகிஸ்தான் மாணவி, ”இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று விடுவார்களாமே?” என்று கேட்க, அதே இந்திய மாணவி, “அதெல்லாம் கிராமங்களில் படிக்காதவர்கள்தான் அவ்வாறு செய்வார்கள்” என்று தற்காப்பு செய்தாள். “ஆம், படித்தவர்கள் கருவிலேயே கொல்வார்கள், படிக்காதவர்கள் பிறந்தபின் கொல்வார்கள்” என்று சொல்ல நினைத்ததை நான் சொல்லவில்லை.

இன்னொரு இந்திய மாணவி, தனது பள்ளியில் சிலர் bullying செய்வதாகவும், அரபி மாணவர்கள்தாம் அப்படிச் செய்தாகவும் தன் அருகில் இருந்த அரபி மாணவியைப் பார்த்துக் கொண்டே குற்றம் சாட்டுவது போல கூற, நான் “எந்தவொரு நாட்டினரையும் பொதுவாகக் குற்றம் சொல்வது தவறு; எல்லா நாட்டிலும் நல்லவர்களோடு கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்” என எடுத்துரைக்க அந்த அரபி மாணவி முகத்தில் புன்னகை. இன்னொரு இந்திய மாணவி, “Thank you for saying that teacher” என்றாள். 

இன்னொரு மாணவிக்கோ, தன் தாய் தன்னை ஃபோன் பேச விடுவதில்லை – லேப்டாப் பயன்படுத்த விடுவதில்லை என்ற குறை!! அவ்வ்வ்…… என் மகன்களும் இப்படித்தான் அவர்களின் ஆசிரியர்களிடம் குறை சொல்லியிருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டேன். 

ப்படிப் பல கலவையான நிகழ்வுகளுடன் மிகவும் இனிமையாக வகுப்புகள் முடிந்தன. தங்களுடைய “feedback form”-ல் அவர்கள் அனைவருமே, “இவ்வகுப்பு, குர் ஆனை தாங்கள் இதுவரை பார்த்திராத வேறொரு கோணத்தில் பார்க்க உதவியதாகவும், தொடர்ந்து கற்கவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுவதாகவும்” குறிப்பிட்டிருந்தனர்.

ஆசிரியப் பணி எத்தனை சக்தி வாய்ந்தது, பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியது என்பதை முழுமையாக உணர்ந்தேன். இளம் சமுதாயத்தினரிடம் இருக்கும் அறியாமைகளைக் களைந்து அவர்களை நெறிப்படுத்த வேண்டியதன் அத்தியாவசியமும் – ஆனால், அதில் நாம் எத்தனை அலட்சியமாக இருக்கிறோம் என்றும் அறிந்து கொள்ள முடிந்தது. 

அதே சமயம், இளைய சமுதாயத்தினை ஆசிரியர்களிடம் மட்டும் ஒப்புவித்துவிட்டு பெற்றோர்கள் தம் பொறுப்பைத் துறந்துவிட முடியாது. அவர்கள் தம் பிள்ளைகளுக்கு ஒரு உதாரண ஆசிரியராகவும் இருக்க வேண்டும். இதனால்தான், “உங்கள் பிள்ளைகள் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சோதனைகள்” என்று இறைவன் குர் ஆனில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறான் போல!!

Post Comment

1 comments:

கோமதி அரசு said...

இவ்வகுப்பு, குர் ஆனை தாங்கள் இதுவரை பார்த்திராத வேறொரு கோணத்தில் பார்க்க உதவியதாகவும், தொடர்ந்து கற்கவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுவதாகவும்” குறிப்பிட்டிருந்தனர்.//
நல்ல ஆசிரியர் கிடைத்தார், குழந்தைகளுக்கு.
நல்ல சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது உங்களுக்கு.
தூக்கத்தை விட்டு சாதனை படைத்து விட்டீர்கள்.

வாழ்த்துக்கள் ஆசிரியருக்கு.