Pages

விருந்தாடல்





கொஞ்ச நாள் முன்னாடி, ஒரு புதுமணத் தம்பதியரைப் பார்க்கப் போயிருந்தேன். தனக்கு இன்னும் சுவையாக டீ போடும் பக்குவம் கைவரவில்லை என்று வருத்தப்பட்டார் அந்தப் பெண். சரினு நானே போட்டு (demo) சொல்லிக் கொடுத்தேன். ரொம்ப நல்லாருக்குனு ரசிச்சுக் குடிச்சுட்டுச் சொன்னார், ’உங்களுக்குச் சமைக்கிறதுல நிறைய எக்ஸ்பீரியன்ஸ், அதான் இவ்வளவு ஈஸியா நல்லா டீ போடுறீங்க, இல்லையா?’னு அப்பாவியாக் கேட்டார். நான் சொன்னேன், “அப்படியில்லை. 15 வருஷமாச் சமைக்கிறவங்கிறதால, நான் சமைச்சா நல்லாருக்கும்னு (புதுசாச்) சாப்பிடுறவங்களுக்கு ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் என்னோட பலம். எப்படி சமைச்சாலும், டேஸ்டாருக்குன்னு சாப்பிடுக்கிடுவாங்க. பெரிய பெரிய படிப்பு படிச்சிருந்தாலும், புதுசா படிச்சுமுடிச்ச டாக்டரவிட, ஆயிரம் பேரக் கொன்னாத்தான்  அரை வைத்தியன்னு, கொஞ்சம் அனுபவமுள்ள டாக்டர்கிட்டதானே வைத்தியம் பாக்க விரும்புவோம்? !!”

14 வருஷம் முன்னே, ஒரு கையில ஆறுமாசப் பிள்ளையும், இன்னொரு கையில என் மைனி (அவங்க தம்பி நலனைக் கருதி) எழுதித் தந்த சமையல் குறிப்புகளுமா அபுதாபி வந்து இறங்கினப்போ நானும் இந்த நிலைமையிலத்தான் இருந்தேன். அதுவும் அப்பல்லாம், அபுதாபியில குடும்பத்தோட இருக்கவங்க ரொம்ப ரொம்ப அரிது. ஒரு சந்தேகம் கேக்கணும்னாகூட, ஊருக்கு ஃபோன் பண்ணி அம்மாகிட்டத்தான் கேக்கணும். இலவச இணைப்பா, ”கூடமாட நின்னு வேல செஞ்சாத்தானே”ன்னு ஆரம்பிக்கும் ஒரு பாட்டும்  பாடித் தருவாங்க எங்கம்மா!! இப்பப் போல இணையமோ, சமையல் தளங்களோ கிடையாதே. எல்லா டிவி சேனல்களிலும் வர்ற சமையல் நிகழ்ச்சிகளை (மட்டும்) ஒண்ணுவிடாமப் பார்ப்பேன் - மறு ஒளிபரப்பா இருந்தாலும்!!

நான் அமீரகம் வந்தப்போ, ஒவ்வொரு வார இறுதியிலயும் குறைஞ்சது 10-15 பேரு விருந்தினர்கள் வருவாங்க - எல்லாரும் பேச்சிலர்ஸ்தான். ரெண்டுபேருக்குச் சமைக்கவே திண்டாடிகிட்டிருக்கும்போது, 15 பேர்னா.. அழுகை அழுகையா வரும்...  இப்பப் போல ஹோட்டல்களோ, “ஃப்ரீ ஹோம் டெலிவரி”யோ கிடையாது. ஆனாலும் சமாளிச்சு நான் செஞ்ச சாப்பாடு, பெரும்பாலும் எனக்கே ஒண்ணும் மிஞ்சாது. அவ்வளவு ருசியான்னு சந்தேகம் வந்தாலும், ‘ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கர’யும் ஞாபகம் வரும்.  இன்னொரு உண்மையும் சொல்லணும், சரியான அளவு தெரியாம குறைச்சுச் சமைச்சிருப்பேன். ரெகுலரா வர்ற சில (சமைக்கத் தெரிஞ்ச) பேச்சிலர்ஸ், எனக்கு நிறைய டிப்ஸ் சொல்லித் தந்தாங்க. இப்படித்தான் சமையல் வளர்த்தேன்.

அப்புறம் அஞ்சாறு வருஷம் கழிச்சு நிறைய குடும்பங்கள் அமீரகத்துக்கு வர ஆரம்பிச்சுது.  சந்தேகம் கேக்க, வேற யாராவது சமைச்சதைச் சாப்பிட, புது ரெஸிப்பிகள் கேக்கன்னு வாய்ப்புகள் அமைஞ்சுது. ஆனா ரொம்பவே நடுக்கம் தந்த விஷயம், யாராவது குடும்பத்தோட விருந்துக்கு வர்றாங்கன்னு சொன்னாத்தான். பின்ன, பேச்சிலர்ஸ்னா என்னத்த போட்டாலும், அவங்க சாப்பிடுற ஹோட்டல்/மெஸ் சாப்பாட்டுக்கு இது அமிர்தம்னு சாப்பிட்டுகிடுவாங்க. ஆனா, சமையல்ல எக்ஸ்பர்ட் ஆன சீனியர் பெண்கள் வரும்போதுதான் தர்மசங்கடமாயிருக்கும். சிலர், பெருந்தன்மையா சாப்பிட்டு, நம்மை என்கரேஜ் பண்ணி, நிறைய டிப்ஸ்கள் தருவாங்க. இவங்க வந்தாலே சந்தோஷமாருக்கும்.

ஒருசிலர் இருக்காங்க, நாம செஞ்சு வச்சிருக்க மெனுவைப் பாத்துட்டு, “அய்ய, சப்பாத்திக்கு வெஜ் குருமாவா? எங்க வீட்டுக்காரர் தொடவே மாட்டார். மட்டன் முழம்புதான் வேணும்பார்”, “என் பொண்ணுக்கு சப்பாத்தியே பிடிக்காது. பரோட்டாதான் பிடிக்கும்” “குருமால கரம் மசாலா போடலையா, வாசனையே இல்லியே”னு என்னென்னவோ சொல்லுவாங்க.  அப்பல்லாம் எனக்கு அவ்வளவு விவரம் தெரியாதா, (நிஜம்ம்மாங்க) அதனால கண்ணுல தண்ணி முட்ட, அவங்க சொல்றதக் கேட்டுகிட்டு சும்மா நிப்பேன்!! அப்புறம் கொஞ்ச கொஞ்சமாத் தேறி,  யாராவது அப்படி சொன்னாங்கன்னா, “வழக்கமா மட்டன்தானே சாப்பிடுறீங்க, இன்னிக்கு வெஜ் குருமா சாப்பிட்டுப் பாருங்க. இனி மட்டன் பக்கமே போகமாட்டீங்க. உடம்பும் குறையும்”, “சப்பாத்தி நீங்க செய்ற மாதிரி இருக்காது. அதனால உங்க பொண்ணு கண்டிப்பா விரும்பி சாப்பிடுவா பாருங்க” அப்படின்னு ஒரு “உள்குத்தோட” பதில் சொல்லிடுவோம்ல!!

விருந்துக்குப் போனா, வழக்கமா வீட்டில சாப்பிடறதா இல்லாம, வித்தியாசமா வகைகளையும், டேஸ்டையும் சாப்பிடணும், செய்முறை கேக்கணும்னுதான் நிறைய பேரு விரும்புவோம் - என்னைப் போல. அப்படியில்லாம, வீட்டில சாப்பிடுற அதே வெரைட்டிதான் விருந்துக்கும் இருக்கணும்னு எதிர்பார்க்கிறவங்களப் பாத்தா எனக்கு ஆச்சரியமாவும், கடுப்பாவும் இருக்கும். எங்க பக்கம் ஒருத்தங்க இருக்காங்க, அவங்க வர்றாங்கன்னா ஃப்ரைட் ரைஸும், சில்லி சிக்கனும்தான் செய்யணும். இது அவங்க வீட்டிலயும் அடிக்கடி செய்றதுதான். கொஞ்ச நாள் ’கட்டுப்பட்டு’ செஞ்சேன்,  இப்ப எனக்கே அலுத்துப் போயி வேற எதாவது செஞ்சிடுவேன்.

அதே சமயம், சிலருக்கு சில உணவு ஒத்துக்காது. அதக் கேட்டுத் தெரிஞ்சுகிடறது அவசியம்தான். பிபி, சுகர் இப்பவெல்லாம் ரொம்ப சகஜமாகிட்டது. அதனால, அதுக்கேத்தமாதிரி மாற்று உணவும் வச்சிருக்கணும். அப்படிப்பட்டவங்க சிரமம் பாக்காம, விருந்து சமைக்கறவங்ககிட்ட கூப்பிட்டுச் சொல்லிடுறது நல்லது. அப்புறம், “எனக்கு பிபி இருக்குனு தெரிஞ்சே, பிரியாணியும் சிக்கன் ஃப்ரையும் செஞ்சு வச்சிருந்தா”னு குத்தம் மட்டும் சொல்லக் கூடாது!! ஒரு உறவினர், இப்படித்தான் ஹை பிபி, வீட்டில உணவுக் கட்டுப்பாடு இருந்துதுன்னு, கல்யாண வீடு வந்தா முத ஆளா போயிடுவாங்க. அப்புறம், வாதம் வந்து, படுக்கையில கஷ்டப்பட்டு.. எதுக்கு அதெல்லாம்..

என் வாப்பாவோட சிறுவயது நண்பர் ஒருவர், அவரே எழுதின கவிதை(!!) ஒண்ணை அடிக்கடி சொல்வார்:
               பருப்புன்னா வெறுப்பு
              பொறியல்னா மறியல்
              சட்டினின்னா பட்டினி
              கறின்னாதான் சரி!!
சில சமயம் கரெக்டா (உரிமையா) சாப்பாட்டுவேளையில் என் பாட்டி வீட்டிற்கு வந்தாலே புரிந்துவிடும்!! :-)))))

இன்னொரு கஷ்டம், எத்தனை பேரு வர்றாங்கன்னு தெரிஞ்சுக்கிறது. சில சமயம், சிலர் நண்பர்களையோ, குடும்பத்தையோ உடன் அழைச்சுகிட்டு வருவாங்க. நேரா கேக்கவும் தயக்கமாருக்கும். சிலர், அப்படிக் கேக்கறதையே குத்தமா எடுத்துக்குவாங்க!! எத்தினி பேர் வந்தாலும் நிமிஷத்துல சமைச்சுப் போடத் தெரியணுமாம்ல குடும்பப் பொண்ணுக்கு?! பல சமயம், அளவு தெரியாம நிறைய சமைச்சு, மிஞ்சுனத ரெண்டு நாள் சாப்பிட்டு, அப்புறமும் காலியாகாம, மனசில்லாம தூரப் போட வேண்டிய நிலையும் (ராப்பிச்சை கிடையாதே இங்கே) வந்ததுண்டு. அதுக்குப் பயந்து, நாலு பேர் வருவாங்கன்னு அளவாச் சமைச்சா, எட்டு பேர் வந்து நிப்பாங்க!! இப்பல்லாம் இதுக்கொரு வழி கண்டுபிடிச்சுட்டேன்.. வரமுன்னாடி விருந்தாளிக்கு ஃபோன் பண்ணி, “எல்லாரும் கண்டிப்பா வரணும். அத்தை, மாமா, சித்தி எல்லாரையும் கூட்டிட்டு வாங்க”னு மனசார  அழைச்சா, அவங்க மனசும் குளிரும்; “இல்லைம்மா, மாமாவுக்கு கால் வலி. அதனால வரமுடியாது. அத்தை அவங்க துணைக்கிருப்பாங்க. நானும், மச்சானும், பிள்ளைகளும் மட்டும் வர்றோம்”னு துல்லியமா சமைக்கிறதுக்கு அளவும் தெரிஞ்சிடும். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!!

என் தோழியின் மாமியார், திடீர்விருந்தினர்களுக்காகன்னு தினமும் சமைக்கும்போது இரண்டு கப் அரிசி சேர்த்துத்தான் சமைப்பாராம். அவர்கள் இருப்பது நகரத்தில் என்பதால், விருந்தினர்கள் அவ்வப்போது வருவதுண்டு என்றாலும், தினமும் வருவதில்லை. அரிசி விலை கிலோ முப்பத்தாறு ரூபாய். இதிலே தினமும் அதிகமா சமைத்து பழையது சாப்பிடவோ அல்லது வேலையாளுக்குக் கொடுப்பதோ ஏன்? அருகிலே நிறைய உணவகங்கள் உண்டு. அதுவுமில்லாமல், பழைய காலம் போலல்லாமல், இப்போ அலைபேசி வசதி இருப்பதால், தெரிவிக்காமல் யாரும் வருவதில்லை எனும்போது பணமும், உணவும் ஒருசேர வீணாக்க வேண்டாம் என்று எடுத்துச் சொல்லியதில், மாமியார் புரிந்துகொண்டார்.

உண்மைதானே? ஹோட்டல்களும், வேகத்தகவல்தொடர்பு முறைகளும் இல்லாத அக்காலங்களில் விருந்தோம்பல் என்று காரணம் சொல்லி, ஒருபடி அரிசி அதிகமாகவே சமைப்பார்கள். அப்படி யாரும் வரவில்லையென்றாலும், அந்த உணவு வீணாகாதபடிக்கு, இரவிலும் சாதம் உண்ணும் பழக்கமோ, அல்லது பணியாளர்கள், உறவினர்கள் என்று நிறைய பேர் இருப்பார்கள். இப்போவெல்லாம் மாலையில் டிஃபன்தான் பெரும்பாலான வீடுகளில். பணியாளர்களும் சரி, இரப்பவர்களும் சரி, மீந்த சாதம் பெற விரும்புவதில்லை.  கால மாற்றத்திற்கேற்ப நாமும் மாறித்தான் ஆக வேண்டியிருக்கிறது.

இன்னும் சிலர், சும்மா அவங்க வீட்டுக்கு நட்புரீதியில் (அறிவிக்காமல்) பார்க்கப் போனாக்கூட, சாப்பிட்டுட்டுத்தான் போணும்னு அடம்பிடிப்பாங்க. வீட்டில் அதற்கான பொருட்கள் இருக்கிறதா, கைக்குழந்தை வைத்திருக்கும் மனைவிக்குச் சமைக்க வசதிப்படுமா, உடல்நலக்குறைவு இருக்கிறதா என்று எதுபற்றியும் கவலைப்படுவதில்லை. அதற்குமேலே செல்ல மிரட்டலும் விடுப்பார்கள், “எங்கவீட்ல சாப்பிடாட்டி, உங்க வீட்லயும் நாங்க சாப்பிடமாட்டோம்” - சின்னப் பிள்ளைகள் ‘உன் பேச்சு கா’ என்பதுபோல..

இன்னும் சிலரின் வீட்டுக்கு விருந்துக்குப் போகவே பயமாருக்கும். எக்கச்சக்க வகைகளில் உணவு செய்து/வாங்கி வைத்துக் கொண்டு, எல்லாத்தையும் சாப்பிட்டே ஆகணும்னு அன்புத் தொல்லை செய்வாங்க. ஒருசாண் வயித்துல எவ்வளவுதான் திணிக்க முடியும்? வேண்டாம்னு மறுத்தா, ‘பந்தா’ பண்றோம்னு நினைக்கிறாங்க. அப்படித்தான் ஒரு நண்பர் வீட்டில், கட்டாயப்படுத்த, ‘வேணும்னா பார்சல் கொடுத்திடுங்க. ரெண்டு வேளை உங்க பேரைச் சொல்லிச் சாப்பிட்டுக்கிறேன். ஆனா, இப்ப என் வயித்துல துளிகூட இடமில்லை”னு கெஞ்ச வேண்டிய நிலைமையாகிடுச்சு.

அதேபோல, விருந்துக்கு வர்றவங்களையும் இப்படிக் கட்டாயப்படுத்தணும்னு சிலர் எதிர்பார்ப்பாங்க.. எனக்கு நிஜமாவே அதல்லாம் வரமாட்டேங்குது. எப்படி நான் விருந்தினராகப் போகும்போது, எனக்குப் பாசாங்கு பண்ணத் தெரியாதோ, அதேபோல, வந்த விருந்தினர்கள் ‘வேண்டாம்’னு ரெண்டுதரம் சொல்லிட்டா, நிஜமாவே போதும்போலன்னு விட்டுடுவேன். எனக்கு அப்படிக் கட்டாயப்படுத்தத் தெரில.. இதுக்கும் ஒருத்தர் இருக்கார், இடியாப்பம் (அல்லது வேற எதாவது) வைக்கட்டுமா என்று கேட்டால், ‘ஒண்ணே ஒண்ணு வை’ என்று சொல்லிக் கொண்டே ‘முன்று விரல்’ காட்டுவார்!!

இப்ப நோன்பு நேரம்கிறதால, ‘இஃப்தார்’ விருந்துகள் களைகட்டும் காலம்!! (’இஃப்தார்’ விருந்துன்னா, நோன்பு திறக்கும் விருந்து - அரசியல்வாதிகள் நோன்பு கஞ்சி குடித்தார்கள்னு செய்திகள்ல படிச்சிருப்போமே - அதுபோல!!) மற்ற நேரங்களிலாவது கொஞ்சம் அதிகப்படியா சாப்பிட முயற்சிக்கலாம். ஆனா, நோன்பு நேரத்துல  அப்படி முடியாது. பசிச்சிருந்த வயிறைக் கவனமாப் பாத்துத்தான் உணவு கொடுக்கணும். ஒரேடியாத் திணிச்சா, மக்கர் பண்ணிடும் - வயிறு மட்டுமில்லை, முழு உடம்பும்!!  நோன்பினால் உண்டாகக்கூடிய உடல் சூட்டையும், வாய்வையும் குறைக்கக் குடிக்கும் நோன்புக் கஞ்சியைக் கூட சிலர் கறி போட்டு, பிரியாணி ரேஞ்சுக்குச் செஞ்சிருப்பாங்க!! அதுமட்டுமில்லை, பொறித்த அயிட்டங்களும் கணக்கில்லாம சேத்துப்பாங்க சிலர்.  இறைவனுக்காகப் பசித்திருக்கிறோம். அதேசமயம், இறைவன் தந்த உணவையும், உடலையும் வீணாக்காமல் பராமரிக்க வேண்டியதும் நம் கடமைதானே.

மற்ற சமயங்களில் வீணாகும் உணவு அளவைவிட, நோன்பு காலங்களில் இஸ்லாமியர்கள் வீணாக்கும் உணவு அதிகமோன்னு தோணுது. இதுக்கு எச்சரிக்கை தர, சோமாலியாவைப் பாருங்கன்னு சொல்ல மாட்டேன். நம்ம அண்டை, அயல்களைப் பார்த்தாலே போதும்!! பசியைக் கட்டுப்படுத்த நாம் பெறும் பயிற்சி, சரிவிகித உணவை அளவோடு உண்பதிலும் இருக்க வேண்டும். உணவை வீணடித்தலைவிட பெரிய பாவம் இல்லைன்னுதான் சொல்லணும். அளவோடு சமைத்து, அளவோடு உண்டு, அவசியமானவர்களுக்குப் பகிர்வோம்.

Post Comment

40 comments:

நட்புடன் ஜமால் said...

எல்லா டிவி சேனல்களிலும் வர்ற சமையல் நிகழ்ச்சிகளை (மட்டும்) ஒண்ணுவிடாமப் பார்ப்பேன் - மறு ஒளிபரப்பா இருந்தாலும்!!]]


சும்மா வேடிக்கை பார்த்திருப்பீங்க

அப்படித்தானே :P

நட்புடன் ஜமால் said...

நான் அமீரகம் வந்தப்போ, ஒவ்வொரு வார இறுதியிலயும் குறைஞ்சது 10-15 பேரு விருந்தினர்கள் வருவாங்க]]

விபரம் தெரியாம வந்திருப்பாங்க ...

இப்பவெல்லாம் வரமாட்டாங்களே :P

நட்புடன் ஜமால் said...

“அய்ய, சப்பாத்திக்கு வெஜ் குருமாவா? எங்க வீட்டுக்காரர் தொடவே மாட்டார். மட்டன் முழம்புதான் வேணும்பார்”, “என் பொண்ணுக்கு சப்பாத்தியே பிடிக்காது. பரோட்டாதான் பிடிக்கும்” ]]

மொக்கு மொக்குன்னு மொக்கனும்

குத்து குத்துன்னு குத்தனும் ...

நட்புடன் ஜமால் said...

தெரிவிக்காமல் யாரும் வருவதில்லை எனும்போது பணமும், உணவும் ஒருசேர வீணாக்க வேண்டாம் என்று எடுத்துச் சொல்லியதில், மாமியார் புரிந்துகொண்டார். ]]

நல்ல “மா”
நல்ல “ம”

நட்புடன் ஜமால் said...

எனக்குப் பாசாங்கு பண்ணத் தெரியாதோ, அதேபோல, வந்த விருந்தினர்கள் ‘வேண்டாம்’னு ரெண்டுதரம் சொல்லிட்டா, நிஜமாவே போதும்போலன்னு விட்டுடுவேன். ]]

வரும் முன் தான் யோசனை

வந்த பின் ஏன் வெட்கம், பாசாங்கு இல்லாமல் சாப்பிட வேண்டியது தான்

நட்புடன் ஜமால் said...

உண்மை

நோன்பில் தான் அதிகம் வீன் விரயம்

என்ன செய்வது :(

ஹுஸைனம்மா said...

//ஆயிரம் பேரக் கொன்னாத்தான் அரை வைத்தியன்//

விளக்கம்: ஆயிரம் வேரையாவது... பேரை அல்ல.. அதாவது, ஆயிரம் மூலிகைகளையாவது அறிந்திருந்தால்தான் அரை வைத்தியன் என்றாவது சொல்லிக் கொள்ளலாமாம் அப்போ!!

ஹுஸைனம்மா said...

ஜமால்...

:-))))))

கோமதி அரசு said...

பசியைக் கட்டுப்படுத்த நாம் பெறும் பயிற்சி, சரிவிகித உணவை அளவோடு உண்பதிலும் இருக்க வேண்டும். உணவை வீணடித்தலைவிட பெரிய பாவம் இல்லைன்னுதான் சொல்லணும். அளவோடு சமைத்து, அளவோடு உண்டு, அவசியமானவர்களுக்குப் பகிர்வோம்.//
ஹீஸைனம்மா,
அருமையான பகிர்வு. அவசியமான பகிர்வு.

கால நேரத்திற்கு ஏற்ற பதிவு.

நீங்கள் சொல்வது 100க்கு 100 சரியே.
யாரும் மீதமான உணவை வாங்க விரும்புவது இல்லை.

மூன்று நாள் விடுமுறையில் மதுரை போய் இருந்தேன். எங்கள் பக்கத்து வீட்டு பெண் நோன்பு கஞ்சி குடியுங்கள் அக்கா என்று கஞ்சி ,பருப்பு வடை,உளுந்து வடை எல்லாம் கொடுத்தார்கள்.

எங்கள் பக்கத்தில் சொல்வார்கள் “ஆடிக்கூழ் தேடி குடி” தேடி வந்த கூழை விட்டு விடுவேனா மனது மகிழ குடித்தேன் நோன்பு கூழை அவர்களை வாழ்த்தி.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு...

டிவி சேனல்களில் சமையல் நிகழ்ச்சிகள்... ஒன்றும் சொல்வதிற்கில்லை... :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) போதும்னா போதும் தான்..கூட வைக்கத்தெரியாது எனக்கும்..

விருந்தாடல் பதிவு செம விருந்து எங்களுக்கு..அப்பாவி ஹுசைனம்மா..சமையலோடு சேர்த்து
உள்குத்து கத்துக்கிட்டீங்க ம்ம்..

CS. Mohan Kumar said...

//வந்த விருந்தினர்கள் ‘வேண்டாம்’னு ரெண்டுதரம் சொல்லிட்டா, நிஜமாவே போதும்போலன்னு விட்டுடுவேன். //

Thanks. உங்க வீட்டுக்கு வந்து சாப்டா இது யூஸ் ஆகும். இதை நாங்க மைண்ட்ல வச்சிக்கிறோம் :))

ILA (a) இளா said...

பருப்புன்னா வெறுப்பு
பொறியல்னா மறியல்
சட்டினின்னா பட்டினி
ரசம்னா விசம்,
கறின்னாதான் சரி!!

இப்படியும் எங்க ஊர்ல சொல்லுவாங்க

Hussain Muthalif said...

புதுசா குடும்பத்தை வெளிநாட்டுக்கு கூப்புட்டு வரும் அத்தனை பேருக்கும், ஏற்கனவே குடும்பத்தோடு இருக்குரவங்களுகும் நல்லா உபயோகமான டிப்ஸ்.

பீர் | Peer said...

நோன்பு திறக்க பலதும் ஆர்டர் செய்துவிடுகிறோம். ரெண்டு பேரித்தம் பழமும் ஒரு கப் தண்ணீரும் உள்ளே சென்ற பிறகு எல்லாமே போதும் என்றாகிவிடுகிறது. (போதும் என்ற மனம் இதில் மட்டுமே வருவதால்.. கட்டாயப்படுத்த மனமின்றி விட்டுவிட நேர்கிறது)வீணாவதை தவிர்க்க முயற்சிக்கணும், இன்ஷாஅல்லாஹ்.

@ஜமால், அடுத்த ரவுண்டு ஆரம்பம் போல? ;)

ஸ்ரீராம். said...

பிரமாதம். விருந்தாடலில் உள்ள பிராக்டிகல் சிரமங்களை 'சுவைபட' கூறியுள்ளீர்கள்!

சமையல் நல்லாயிருக்குன்னு சொல்ல வைக்க இன்னொரு டெக்னிக் இருக்கு! நான் சமைக்க நேரிடும்போது கையாள்வது! லேட்டா ஆரம்பிச்சு நல்ல பசி வந்த நேரத்தில் சூடாய் நைசாய் பரிமாறும் வண்ணம் வைத்துக் கொண்டால் ரொம்பச் சுவை என்று சொல்லி விடுவார்கள்!

அன்பு என்ற பெயரில் அளவுக்கதிகமாய்ப் பரிமாறித் தொல்லை கொடுப்பது, நீ என் வீட்டில் சாப்பிடாட்டி நான் உன் வீட்டில் சாப்பிடமாட்டேன் என்ற 'புரிந்துணர்வில்லா ' ஒப்பந்தங்கள், எல்லாமே எங்கள் அனுபவங்களையும் நினைக்க வைத்தன.

இன்னும் நிறைய பகிரத் தோன்றுகிறது. அப்புறம் பின்னூட்டம் பதிவு மாதிரி ஆகி விடும்!

மொத்தத்தில் பிரமாதமாக எழுதப் பட்டுள்ள அருமையான பதிவு. ரசித்து, ருசித்துப் படித்தேன்.

ஆமினா said...

//“வழக்கமா மட்டன்தானே சாப்பிடுறீங்க, இன்னிக்கு வெஜ் குருமா சாப்பிட்டுப் பாருங்க. இனி மட்டன் பக்கமே போகமாட்டீங்க. உடம்பும் குறையும்”, “சப்பாத்தி நீங்க செய்ற மாதிரி இருக்காது. அதனால உங்க பொண்ணு கண்டிப்பா விரும்பி சாப்பிடுவா பாருங்க” அப்படின்னு ஒரு “உள்குத்தோட” பதில் சொல்லிடுவோம்ல!! //

சமையல்ல தேறிட்டா பேச்சு கூட வந்துடுமா.... அப்ப மொதல்ல நல்லா சமைக்க கத்துக்குறேன்.. அப்ப தான் உள்குத்தோட பேச முடியும்...ஹி...ஹி....ஹி....

ஸாதிகா said...

/// ஒரு நண்பர் வீட்டில், கட்டாயப்படுத்த, ‘வேணும்னா பார்சல் கொடுத்திடுங்க. ரெண்டு வேளை உங்க பேரைச் சொல்லிச் சாப்பிட்டுக்கிறேன். ஆனா, இப்ப என் வயித்துல துளிகூட இடமில்லை”னு கெஞ்ச வேண்டிய நிலைமையாகிடுச்சு.///

இங்கே..இங்கே..இங்கே..இங்கேதான் ஹுசைனம்மா நிக்கறாங்க.

ஸாதிகா said...

/// இடியாப்பம் (அல்லது வேற எதாவது) வைக்கட்டுமா என்று கேட்டால், ‘ஒண்ணே ஒண்ணு வை’ என்று சொல்லிக் கொண்டே ‘முன்று விரல்’ காட்டுவார்!!
//

ஆஹாஹா...விருந்தாடல் தலைப்பிட்டு நிறைய டிப்ஸா கொடுக்கறீங்களே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஸாதிகா said...

//மற்ற சமயங்களில் வீணாகும் உணவு அளவைவிட, நோன்பு காலங்களில் இஸ்லாமியர்கள் வீணாக்கும் உணவு அதிகமோன்னு தோணுது.// ரொம்ப சரி ஹுசைனம்மா.

RAMA RAVI (RAMVI) said...

//வரமுன்னாடி விருந்தாளிக்கு ஃபோன் பண்ணி, “எல்லாரும் கண்டிப்பா வரணும். அத்தை, மாமா, சித்தி எல்லாரையும் கூட்டிட்டு வாங்க”னு மனசார அழைச்சா, அவங்க மனசும் குளிரும்; “இல்லைம்மா, மாமாவுக்கு கால் வலி. அதனால வரமுடியாது. அத்தை அவங்க துணைக்கிருப்பாங்க. நானும், மச்சானும், பிள்ளைகளும் மட்டும் வர்றோம்”னு துல்லியமா சமைக்கிறதுக்கு அளவும் தெரிஞ்சிடும். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!!//

பலே! பலே!. நல்ல அனுபவங்கள்.
எனக்கு கூட இந்த கஷ்டங்கள் வந்ததுண்டு. எத்தனை பேர்கள் வருகிரார்கள் என்று தெரியாமல் மீதமாகிவிடுமே என்று பயந்து பயந்து சமையல் செய்ததுண்டு.
நல்ல பகிர்வு.

pudugaithendral said...

ஹுசைனம்மா நீங்க என்னோட பல பதிவுகள்ல சொல்லியிருக்காப்ல நான் சொல்லச் சொல்ல நீங்க எழுதினா மாதிரி இருக்கு இந்தப் பதிவு. என்னுடைய ஆரம்ப கால சமையல், நண்பர்கள் விருந்துக்கு வருவது எல்லாம் அப்படியே மறுஒளிபரப்பு பாத்தா மாதிரி இருக்கு.

:)))))))))

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. திருமணமான புதிதில் வாரா வாரம் நண்பர்களை நாங்களும் அழைப்போம் அவர்களும் குடும்பத்துடன் சாப்பிட வருவார்கள்.
அப்போது தான் சமைக்கும் அளவையும் நான் கற்றுக் கொண்டேன். இப்போது எத்தனை பேர் வந்தாலும் சமாளித்து விடுவேன்.
சில பேர் எதுக்கெடுத்தாலும் குறை சொல்வாங்க.
உள்குத்து நல்லாயிருக்கே!!

சாந்தி மாரியப்பன் said...

//உணவை வீணடித்தலைவிட பெரிய பாவம் இல்லைன்னுதான் சொல்லணும்//

சரியாச்சொன்னீங்க..

எல் கே said...

எம்புட்டு பெரிய பதிவு...

//விளக்கம்: ஆயிரம் வேரையாவது... பேரை அல்ல.. அதாவது, ஆயிரம் மூலிகைகளையாவது அறிந்திருந்தால்தான் அரை வைத்தியன் என்றாவது சொல்லிக் கொள்ளலாமாம் அப்போ!!/

நான் சொல்ல வந்தேன். நீங்க முந்திக்கிட்டீங்க

மனோ சாமிநாதன் said...

கை கொடுங்கள் ஹுஸைனம்மா! ரொம்பவும் அட்டகாசமான, சுவாரஸ்யமான பதிவு! பெண்கள் அத்தனை பேருக்கும் ஏற்படும் அனுபவங்களை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!

வல்லிசிம்ஹன் said...

அருமை ஹுசைனம்மா. விருந்தும் மருந்தும் உங்க ஊர்ல முப்பது நாளுமா:)

கீபோர்டில கைய வச்சதும் எழுத்துகள் வந்து விழுமோ.

பாராட்டுகள் மா

ஹுஸைனம்மா said...

ஜமால் - ஆரம்பத்துல, டிவி சமையல் நிகழ்ச்சிகளை நிஜம்மா வேடிக்கைதான் பார்த்தேன். அப்புறம் அப்படியே பிக்கப் ஆகி, நாங்களும் சமைக்க அரம்பிச்சுட்டோம்ல!!

ஹி..ஹி.. அப்புறம், கரெக்டாச் சொன்னீங்க, இப்பம்லாம் விருந்தினர்கள் ரொம்பக் கம்மிதான்.. அதுவும் எந்தங்கச்சிங்கதான் அப்பப்ப வராங்க.. ஆமா, நீங்க ஷார்ஜாவிலதானே.. ஒருநா விருந்துக்கு வாங்களேன்.. எனக்கும் யாருக்கா-ஆ-வது சமைச்சுப் போட கை அரிக்குது!! ;-))))))

கோமதிக்கா - இங்கே மீதமாகும் நல்ல உணவை, சில மால்களில் அல்லது சாலைகளில் வேலை பார்க்கும் துப்புரவுப் பணியாளர்களிடம் கொடுப்பதுண்டு - மிக அரிதாக. ஆனால், அதற்கும் குற்ற உணர்ச்சி மேலோங்கும்.

ஹுஸைனம்மா said...

வெங்கட் - ஏங்க, டிவி சமையல் நிகழ்ச்சிகள் மேல இப்படி ஒரு சலிப்பு? இப்பத்திய நிகழ்ச்சிகளைவிட, அப்பத்திய சமையல் நிகழ்ச்சிகள் நல்லாருக்கும். நேரடியா சமைக்கீறதைக் காட்டறதுனால, சமையல் பொருட்களை எப்படிக் கையாளுகிறார்கள் என்று பார்த்துத் தெரிந்துகொள்ள வசதி.

முத்து அக்கா - ஆமாக்கா, சாப்பிடன்னு வந்துட்டு இங்கயும் ஃபார்மாலிட்டியெல்லாம் எதிர்பார்த்தா...

மோகன்குமார் - கண்டிப்பா வாங்க. கம்பல்ஷனே கிடையாது என் தரப்பில். ஆனா, எங்கூட்டுக்காரர் நீங்கக் கதறக் கதற வச்சு திணிப்பார்!! என்னால மாத்தவே முடியலை அவரை.. :-((((

ஹுஸைனம்மா said...

இளா - ஆமாங்க, ரசம்-விசமும் உண்டு கவிதையில.. சின்ன வயசிலக் கேட்டதா, மறந்துடுச்சு இப்ப. ஆமா, இந்தக் கவித உங்க ஊர்லயும் உண்டா? அப்ப அவர் எழுதினதில்லையா? நான் அப்படில்ல நினைச்சுட்டிருந்தேன்!!

ஹுஸைன் முத்தலிப் - டிப்ஸா? எதோ தாக்குறீங்கன்னு மட்டும் புரியுது!!

ஹுஸைனம்மா said...

பீர் - இங்கே ஷாப்பிங் செய்யும்போது அநாவசியமாகப் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கவென்று சில டிப்ஸ்கள் கொடுப்பார்கள். அதில் முக்கீயமான - பலன் தந்த ஒன்று - பசியோடிருக்கும்போது ஷாப்பிங் செய்ய வேண்டாம்!! அதேபோல, பசித்திருக்கும்போது பலதையும் உண்ண வேண்டும் என்று விரும்புகிறோம், ஆனால் முடிவதில்லை. ஹோட்டல் செல்லும்போதும் இதுதான் உணவு வீணாகக் காரணமும்.

நேற்று உண்ட அளவையும், வீணான உணவையும் நினைவில் வைத்திருந்து இன்று ஆர்டர் செய்யுங்க. தவிர்க்கலாம். இன்ஷா அல்லாஹ்.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - நீங்களும் சமைப்பீங்களா? //லேட்டா ஆரம்பிச்சு நல்ல பசி வந்த நேரத்தில் // ஹி.. ஹி.. நான் சீக்கிரமே ஆரம்பிச்சாலும், வந்தவங்க “பசி.. பசி”னு கதர்ற வரை சமைத்து முடிப்பதில்லை. கொஞ்சம் ஸ்லோ நானு!! உங்க அனுபவஙக்ளையும் பதிவா எழுதுங்களேன்.

ஆமினா - நான் சமையல்ல தேறிட்டேன்னு எங்கே சொன்னேன்? பேச்சை வச்சே காலத்தை ஓட்டுறேன்.. ஹி.. ஹி...

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - //இங்கேதான் ஹுசைனம்மா நிக்கறாங்க// என்னை அப்பப்ப இப்படி நிக்கவக்கிறீங்க, பனிஷ்மெண்டா அக்கா? சிலை வைக்காம இருந்தாச் சரி.. :-)))))

ராம்வி - உணவு மீதமாவதுதான் எனக்குப் பிடிக்காத விஷயம். கொஞ்சமா மிஞ்சினா, நாம அடுத்த நாள் சாப்பிட்டுக்கலாம்.

தென்றல் - ஆமாப்பா, நிறைய விஷயங்கள் புதுசா சமைக்கறவங்களுக்கு எல்லாம் நடக்கறதுதானே.. நீங்க இதச் சொல்லக் கேட்க ஆறுதலாருக்கு. ஏன்னா, அப்பப்ப எனக்கு மட்டும்தான் இப்படிலாம் நடக்குதா/தோணுதான்னு நினைப்பேன்.

ஹுஸைனம்மா said...

கோவை2தில்லி - கரெக்ட் ஆதி, அப்போ அவ்ளோ பேர் விருந்தினரா வந்ததுனாலத்தான் என்னால சமைக்கவும், அளவுகளும் கத்துக்க முடிஞ்சுது.

அமைதிக்கா - நன்றி.

எல்.கே. - அப்படியா, நீளமாருக்கா? எத விடன்னு தெரீல.. //நீங்க முந்திக்கிட்டீங்க// யாராவது சொல்லுவாங்கன்னு தெரியும், அதான் நானே..

ஹுஸைனம்மா said...

மனோக்கா - ஆமாக்கா, ஆரம்பகால சமையல்ங்கிறது எல்லாப் பெண்களுக்குமே நடுக்கமாத்தான் இருக்கும். அதிலும், தனிக்குடித்தனம் இருக்கும் கணவர்கள்தான் பாவம்.

வல்லிம்மா - நன்றி. கொசுவத்தி சுத்துறதுன்னா கேக்கணுமா, அதுபாட்டுக்கு வந்துகிட்டே இருக்குமே.

Anisha Yunus said...

கலகலப்பா ஆரம்பிச்சு எங்கேயோ கொண்டு போயி முடிச்சிட்டீங்க. ஆனா என் மாதிரி ஆளுங்களுக்கு நிறைய டிப்ஸும் கிடைத்ததுதான் உண்மை. என் கல்யாணம் நடந்த புதிதில் இன்னொரு புதிதாய் கல்யாணமான ஜோடியை விருந்துக்கு அழைத்து, நாள் முழுதும் யோசித்து, கஷ்டப்பட்டு மெனு தயார் செய்து, மீன், இறால் என்று அசத்தலாய் (அப்படித்தான் எனக்கு தோன்றியது)... செய்து வைத்தால், அந்த அண்ணன் கடல் வகையறாக்களை தொட்டும் பார்த்ததில்லையாம். வெறும் நெய்சோறும், ஆம்லெட்டுமாக அவர் விருந்து முடிந்தது. அது பெரிய ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்தது. அதே போல் எனக்கு தெரிந்த பல வட இந்திய குடும்பங்களிலும் கடல் சார் உணவுகளை தொடுவதே இல்லை. இப்பல்லாம் கொஞ்ச வெவரம் வந்துடுச்சில்லா....வேற யாரு, எனக்குத்தேன் :))))))

மாதேவி said...

"விருந்தாடல்" நல்லநேரம்.

நோன்பு விருந்துக்கு வந்துவிட்டேன் :)

Jaleela Kamal said...

பதிவு அருமை.

ஆரம்ப கால சமையல் , சமையல் நலல தெரிந்து இருந்தாலும் நிரைய ஆட்கள் என்றால் கொஞ்சம் உதரல் தான்.

பார்சல் ஐடியா சூப்பர்

இடியாப்பம் ஹா ஹா நானும் நிரைய இடத்தில் பார்த்து இருக்கேன் வேன வேனான்னுட்டு ஹிஹி தட்ட நீட்டிட்டே இருப்பாஙக்

தராசு said...

விருந்தாடலே ஒரு விருந்துதான்

ஹுஸைனம்மா said...

அன்னு - விருந்து அன்னிக்கு உங்க நிலைமை எப்படிருந்திருக்கும்னு புரியுது. ஆமா, நீங்க சொன்னப்பறம்தான் யோசிச்சேன், வட இந்தியர்கள் மீன் வகைகள் சாப்பிட்டே பாத்த மாதிரி ஞாபகமில்லை.

மாதேவி - வாங்கப்பா. ஆளே காணோம்?

ஜலீலாக்கா - உங்களுக்கே உதறலா? அப்ப நானு?

தராசு - வாங்க. நன்றி.