Pages

பண வளர்ச்சியா, மனமகிழ்ச்சியா?





 2011 டிசம்பர் 1-15 ”சமரசம்” இதழில்வெளியான எனது கட்டுரை.

செய்தித்தாட்களை ”அட்டை டூ அட்டை” வாசிப்பவர்கள், பிஸினஸ் பக்கங்களில் “GDP" என்ற வார்த்தையை அடிக்கடி பார்த்திருக்கக்கூடும். ”Gross Democratic Product" - ”மொத்த உற்பத்திக் குறியீடு” என்ற இந்த மதிப்புதான் ஒரு நாடு ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறதா என்பதைத் தெரிவிக்கும் அளவீடு. ஒரு நாட்டின் ஒருவருட மொத்தச் சந்தை உற்பத்தியை அளவிடும் இதை வைத்துத்தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியைக் கண்டிருக்கிறதா அல்லது பின்னடைவா என்று கணக்கிடப்படும். உலக நடைமுறை இது.

இந்த GDPயின் அடிப்படையிலான வளர்ச்சியின்படிதான்,  தற்போது முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவை 2050-ல் சீனா முந்திவிடும் என்றும், இந்தியா மூன்றாமிடத்திற்கு வந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுமைக்குமாகக் கணக்கிடப்படும் உற்பத்தியை, நாட்டின் மக்கள தொகையால் வகுத்தால், அந்நாட்டின் “தனிநபர் வருமானமும்” (GDP per capita) கிடைத்துவிடும்!! நாட்டின் GDPயில் ஏற்படும் மாற்றங்கள், அந்நாட்டு பங்குச் சந்தையிலும் கணிசமாக எதிரொலிக்கும் என்பதால், எல்லா தரப்பினராலும் இதன் மாற்றங்கள் கூர்ந்து கவனிக்கப்படும். மொத்தத்தில், பணவசதியைக் கொண்டு மனிதர்களை உலகம்  மதிப்பதுபோல, பொருள்சார்ந்த ஜி.டி.பி.யை வைத்துத்தான் ஒரு நாட்டின் மதிப்பும்!!

ஆனால், யோசித்துப் பார்த்தால், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்நாட்டு மக்களின் ”வாழ்க்கைத் தரத்தைத்” (standard of living) தீர்மானிக்கலாம்; ஆனால், மக்களின் மகிழ்ச்சியை, மன நிறைவைத் தீர்மானிக்குமா? மனிதனை, அவன் சொத்துமதிப்பைக் கொண்டு ”வசதி படைத்தவன்” என்று சொல்ல முடியும், ஆனால் பணம் மட்டும்தான் வாழ்க்கையா? பெரும் பணக்காரராக இருப்பவர்தான் வாழ்க்கையில் அதிக மனநிறைவைக் கொண்டவர் என்று சொல்ல முடியுமா என்றெல்லாம் கேள்விகள் நம்முள் எழும் அல்லவா?

இதே எண்ண அலைகள் ஒருசிலரிடையே தோன்றியதன் விளைவுதான் “GNH" என்ற அளவீடு உருவாக்கம். ஒரு நாட்டின் வளர்ச்சியை "GDP"ஆல் அளவிடக்கூடாது;  "GNH" - Gross National Happiness - தேசிய மகிழ்ச்சி அளவீடு - என்ற அலகால்தான் அளவிட வேண்டும் என்று குரல்கள் எழுகின்றன.  தற்போது, ஐ.நா. சபையின் பொதுக்குழுவே, தன் செயல்திட்டங்களில் ஒன்றாக இதனை ஏற்று, அதன்மீது உறுப்பு நாடுகளை விவாதிக்க அழைக்கும் தீர்மானம் நிறைவேற்றுமளவு இந்தக் குறியீடு முக்கியத்துவம் பெற்றுள்ளது!!

GNH - என்ன, எப்படி, யாரால்?

இந்தக் கொள்கையை - பொருள்சார் வளர்ச்சியைவிட, மக்களின் மன மகிழ்ச்சிக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் கொள்கையை - உலகுக்கு அறிமுகப்படுத்தியது, அதைத் தற்போது பின்பற்றும் ஒரே நாடான - பூடான்!! இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு சிறிய புள்ளி போன்ற நாடுதான் இவ்வளவு அரிய தத்துவத்தை உலகின் முன்வைத்திருப்பது!! ”வளர்ந்த நாடுகள்” என்று சொல்லிக் கொள்ளும் பலமான பொருளாதாரச் சக்தி கொண்ட பல பெரிய நாடுகள் எல்லாம் பணமே பிரதானம் என்று அதன்பின் ஓடிக் களைத்து, ”கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமாக” தற்போது கம்பெனிகளை ஒவ்வொன்றாக இழுத்துமூடும் அளவு பொருளாதாரப் பின்னடைவால் தத்தளித்துக் கொண்டிருக்கையில், ஒரு மிகச் சிறிய நாடு “இயைந்த சமூக-பொருளாதார முன்னேற்றமே உண்மையான  முன்னேற்றம்” என்று ஐ.நா. மூலம் உலகிற்கே பரிந்துரை சொல்வது விந்தைதான் இல்லையா?

wikipedia.com
1972-ல், பூடான் நாட்டு மன்னராகப் பதவியேற்ற பதினாறே வயதான ஜிக்மே சிங்யே வாங்சுக், தன் நாட்டு மக்களின் முன்னேற்றம் குறித்த பேச்சின் நடுவே தற்செயலாக  சொன்ன GNH- மொத்தத் தேசிய மகிழ்ச்சி என்ற வாக்கின் கருத்து சிறப்பானதாகத் தோன்றவே, அந்நாட்டு கல்வி மையம் செய்த பல ஆராய்ச்சிகளின் பின்னர், இதை அளவிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் வரைமுறைகள் உருவாக்கப்பட்டது.

அதன்படி, சந்தைப் பொருட்கள் உற்பத்தியோடு மக்களின் ஆத்மார்த்த வளர்ச்சியும் இணைந்து முன்னேற்றம் கண்டால்தான் நாடு வளர்ச்சியடைவதாகக் கருத வேண்டும். GNH-ன் நான்கு தூண்களான,

* தொடர்ச்சியான ஒப்புரவான சமூகப் பொருளாதார மேம்பாடு,
* பண்பாடு பேணுதல், 
* இயற்கைச் சுற்றுப்புறப் பாதுகாப்பு,
* நல்லாட்சி நிர்வாகம்

ஆகிய அனைத்தும் சமமாக முன்னேற்றம் அடையும்படி வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப் படுகின்றன. சுருங்கச் சொன்னால், இது ஒரு சமநிலையான, ஒருமுகப்படுத்தப்பட்ட முன்னேற்றத்திற்கான அணுகுமுறை.

இதன்படி, பூடான் நாட்டின் வகுக்கப்படும் கொள்கைகள், திட்டங்கள் யாவும் GNH-ன்  அடிப்படை விதிகளுக்கு மாறுசெய்யாமல் இருக்கிறதா என்று பரிசீலித்துத்தான் நிறைவேற்றுகிறார்களாம்!! தன் நாட்டின் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவசியமான மகிழ்ச்சியை, மனநிறைவை இயற்கையைப் பாதிக்காவண்ணம் தருவதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிறது பூடான்!! இக்குறிக்கோளைத் தாங்கள் இன்னும் முழுமையாக அடைந்துவிடவில்லை என்றபோதும், முயற்சிகளை அயராது தொடர்ந்துகொண்டிருக்கிறோம் என்றும் கூறுகின்றது.

தன் நாட்டில் இது சிறப்பாகக் கடைபிடிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து, உலக மக்களும் இதன் பயனைப் பெறவேண்டும் என்ற நல்லெண்ணத்தில், இக்கருத்தை தன் நாட்டிலும், பிற நாடுகளிலும் பல கருத்தரங்குகளின் வாயிலாக விரிவாக்கம் செய்ததின்பலனாக, பல்வேறு அமெரிக்க-ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சியாளர்கள் இக்கொள்கையின்மீது நடத்திய ஆராய்ச்சிகள் சாதகமான முடிவுகளையே தந்தன.  அந்த ஊக்கத்தாலும், “தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற உயரிய எண்ணத்தாலும்,  ஐ.நா. பொதுக்குழுவில் பூடான் விடுத்த வேண்டுகோளின்படி, ஐ.நா. தன் செயல்திட்டத்தில் இக்குறிப்பை ஏற்றுக்கொண்டு, இதன்மீது உறுப்புநாடுகள் விவாதிக்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

முடிவுரை:

GNH - இக்கொள்கையைப் பற்றி விரிவாக வாசிக்கும்போதே. நம் அனைவர் மனங்களிலும் ஒரு எண்ணம் ஓடியிருக்கக் கூடும். அது - இஸ்லாம் சொல்வதும் இதுதானே என்ற கேள்வி!!  தன்னம்பிக்கை டானிக்காக ஈமான்,  சமூக முன்னேற்றத்திற்காக ஸகாத், ஸதகா, பைத்துல் மால்; மன முன்னேற்றத்திற்காக நோன்பு, இத்திகாஃப், ஹஜ் என்று அரிய பல வழிகளை வகுத்துத் தந்து, பணத்தை வியாபாரப் பொருளாக்காதீர்கள், பணத்தைவிட இறைநம்பிக்கையே பெரிது, சகோதரத்துவமே சிறந்தது, உன் அயலான் பசித்திருக்க நீ உண்ணாதே,   அவசியமல்லாது மரத்தின் ஒரு இலையைப் பறிப்பதுகூடப் பாவச்செயல் என்று போதித்ததும் இஸ்லாம்!!

இவ்வழகிய மார்க்கத்தை வாழ்வியல் நெறியாகக் கொண்ட ஒரு முஸ்லிம் நாடாவது இதைக் கடைபிடித்து, முன்வைத்திருக்க வேண்டாமா என்ற ஏக்கமும் தோன்றுகிறது.  ஏற்கனவே நமக்கு இஸ்லாம் வழங்கியுள்ள நெறிமுறைகளை, மேலைநாட்டுச் சித்தாந்தமாகச் சொல்லப்பட்டால்தான் ஏற்றுக்கொள்வோமா?
__________________________________________________________________________________
(பிற்சேர்க்கை)
மேலதிகத் தகவல்கள்:

ஏப்ரல் 2 - 2012,  அன்று, ஐ.நா. தலைமையகத்தில் பன்னாட்டுத் தலைவர்களும்கூடி இதுகுறித்துக் கலந்துரையாடினார்கள். அனைவரும் இதைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அடுத்து இரண்டு நாட்கள் இதுபற்றிய வொர்க்‌ஷாப்களும் நடந்தன. இறுதியாக, இவ்வினிய கொள்கையை ஐ.நா.வின் அனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் எடுத்துச் சொல்வது என்றும், ஜூன் மாத Rio +20 மாநாட்டிலும் 2013-ல் ஐ.நா. பொதுக்குழு கூட்டத்திலும் இதைப் பற்றிப் பேசுவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுருக்கமாச் சொன்னா, இதுபத்தி பேசிகிட்டே (மட்டும்) இருக்கப் போறாங்க!! :-))))

Ref:
http://www.gpiatlantic.org/conference/proceedings/thinley.htm
http://en.wikipedia.org/wiki/Gross_national_happiness#Weakness_of_GDP
http://www.un.org/wcm/webdav/site/ldc/shared/Bhutan.pdf
http://www.gnhusa.org/wp-content/uploads/2011/07/UN-Resolution-on-Happiness-Measures-7-13-2011.pdf
http://www.2apr.gov.bt/images/BhutanReport_WEB_F.pdf
http://chronicleproject.com/stories_362.html
http://www.un.org/apps/news/newsmakers.asp?NewsID=49

Post Comment

14 comments:

ராமலக்ஷ்மி said...

/தேசிய மகிழ்ச்சி அளவீடு /

பேசிக்கிட்டே மட்டும் இருந்திடக் கூடாதென்றே மனம் பிரார்த்திக்கிறது. நல்ல கட்டுரை. சமரசம் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.

அவள் விகடன் ‘வலைப்பூவரசி’ விருதுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் ஹுஸைனம்மா.

கோமதி அரசு said...

பணம் மட்டும்தான் வாழ்க்கையா? பெரும் பணக்காரராக இருப்பவர்தான் வாழ்க்கையில் அதிக மனநிறைவைக் கொண்டவர் என்று சொல்ல முடியுமா என்றெல்லாம் கேள்விகள் நம்முள் எழும் அல்லவா?//

நிச்சசியம் எழும் ஹூஸைனம்மா.

பணம் மட்டும் மகிழ்ச்சியை தந்து விடாது உண்மை.
ஒரு நாடு எல்லாவற்றிலும் தன் நிறைவு பெற்று இருக்க வேண்டும்.

மேலைநாட்டுச் சித்தாந்தமாகச் சொல்லப்பட்டால்தான் ஏற்றுக்கொள்வோமா? //


கொல்லையில் உள்ள மூலிகை மருந்துக்கு உதவாது என்பது பழமொழி.

நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

வலைப்பூவரசிக்கு நானும் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன்.

காற்றில் எந்தன் கீதம் said...

நல்ல பகிர்வு... பெசிளிட்டு மட்டும் இல்லாம நடைமுறைக்கு வரணும்னு வேண்டிக்குவோம்..

விகடன் வலைப்பூவரசி ஹுசைனம்மா வாழ்க வாழ்க....:)

சிராஜ் said...

/* ஏற்கனவே நமக்கு இஸ்லாம் வழங்கியுள்ள நெறிமுறைகளை, மேலைநாட்டுச் சித்தாந்தமாகச் சொல்லப்பட்டால்தான் ஏற்றுக்கொள்வோமா? */

ஓங்கி செவுட்டுல அறஞ்சது மாதிரி இருக்கு ஹுஸைனம்மா... ரொம்ப அருமையான பதிவு....

சிராஜ் said...

ம்ம்.. சமரசத்துல கட்டுரை வருதா?? ம்ம்... நடத்துங்க நடத்துங்க... கம் கம்மா பண்றீங்க எல்லாத்தையும்...

வாழ்த்துக்கள்....

pudugaithendral said...

இந்த வார வலைப்பூவரசிக்கு வாழ்த்துக்கள்.

ரொம்ப சந்தோஷம்.

enrenrum16 said...

/சுருக்கமாச் சொன்னா, இதுபத்தி பேசிகிட்டே (மட்டும்) இருக்கப் போறாங்க!! :-))))/ கரக்ட்டு... அதேதான். சமரசத்திலும் வாசித்தேன். நல்ல கட்டுரை.... பூடான் மாதிரி எல்லா நாட்டையும் டீனேஜ் பசங்ககிட்ட ஒப்படைச்சா GDH வர வாய்ப்பு உண்டுன்னு நினைக்கிறேன். ;))

ஓக்கே... வலைப்பூ அரசி ஹுஸைனம்மா வீட்டில் அடுத்த வாரம் விருந்து....எல்லாரும் சாப்பிட வந்துடுங்க... டும்..டும்..டும்... ந்னு அபுதாபி பூரா ஒரே அறிவிப்பா இருக்கு..???? .வர்றோம்...வர்றோம்...(எப்பூடீ? ;)))

சாந்தி மாரியப்பன் said...

அருமையான கட்டுரை ஹுஸைனம்மா.

அவள் விகடனில் பார்த்தேன். வலைப்பூவரசிக்கு வாழ்த்துகள் :-)

ஹுஸைனம்மா said...

ராமலக்ஷ்மிக்கா - மிகவும் நன்றிக்கா.

கோமதிக்கா - வாழ்த்துக்கு மிகவும் நன்றிக்கா.
//கொல்லையில் உள்ள மூலிகை மருந்துக்கு உதவாது//
புதிய பழமொழி அறிந்துகொண்டேன்.

காற்றில் எந்தன் கீதம் - நன்றிங்க.

சிராஜ் - நன்றி.
//கம் கம்மா பண்றீங்க// அதென்ன கம்-கம்? புதுசா இருக்கு? நான் எதுவும் பண்ணலீங்களே??!! :-))

புதுகைத் தென்றல் - நன்றிப்பா.

அமைதிக்கா - நன்றி.

என்றென்றும் 16 -
//பூடான் மாதிரி எல்லா நாட்டையும் டீனேஜ் பசங்ககிட்ட ஒப்படைச்சா //
செய்யலாம்தான். நிச்சயமா நாட்டுக்கு என்று வரும்போது நல்லபடி செயல்படுவார்கள். (ஆனாலும், ஒரு பயமும் வருது.)

//அடுத்த வாரம் விருந்து..... வர்றோம்...வர்றோம்//
உங்க தைரியம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு!!

புதுகை.அப்துல்லா said...

பொதுவாக பொருளாதாரம் அதை விரும்பிப் படிக்கும் மாணவர்களுக்கே பல சமயம் போர் அடிக்கும் விசயம். எளிய தமிழில் சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள். ஒரு பொருளியல் மாணவனாக உங்கள் கட்டுரைக்கு பத்துக்கு ஒன்பது மதிப்பெண்கள் வழங்குகிறேன் :)

ஹுஸைனம்மா said...

அப்துல்லா!!

ரொம்ம்ம்ம்ப நாள் கழிச்சு வருகை! மகிழ்ச்சி. நலம்தானா?

//ஒரு பொருளியல் மாணவனாக உங்கள் கட்டுரைக்கு பத்துக்கு ஒன்பது மதிப்பெண்கள்//

ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. நன்றியும்.

புதுகை.அப்துல்லா said...

ரொம்ம்ம்ம்ப நாள் கழிச்சு வருகை!

//

அதெல்லாம் தொடர்ந்து வந்துகிட்டுதான் இருக்கோம். ரகசியமா வந்துட்டு ஓடிருவோம் :)

ஹுஸைனம்மா said...

//ரகசியமா வந்துட்டு ஓடிருவோம்//

வெளியே ”அம்மா” ஆட்சி, அதனால் பயம்(னு சொல்லலாம்). இந்த ஹுஸைன்”அம்மா”வுக்குமா? :-))))

Unknown said...

வலைப்பூ அரசி ஹுசைனம்மா,
பொருளாதாரத்தைக் கூட சும்மா
பொரியல் மாதிரி அசால்ட்டா சொல்லிட்டீங்க அருமையா இருக்கு.