Pages

முற்றுப்புள்ளி




சமரசம் 1-15 அக்டோபர், 2012 இதழில் வெளியான கட்டுரை:


இறைத்தூதரை அவமானப்படுத்திய திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து உலகெங்கும் இஸ்லாமியர்களால் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருவதை அறிவோம். நம் எதிர்ப்பை ஆக்கப்பூர்வமான முறையில் தெரிவிக்க வேண்டியது அவசியம்தான்.

எனினும், இக்கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மற்றும் அவைசார்ந்து ஆங்காங்கு நிகழ்ந்த வன்முறைகளால் நாம் நினைத்ததை - படத்தை யூ-ட்யூப்பிலிருந்து நீக்கப்படுவதையும், படம் தயாரித்தவன் அரசால் தண்டிக்கப்படுவதையோ - சாதித்துவிட்டோமா என்றால், வருத்தத்துடன் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

குறைந்தபட்சம், இனி இத்தகைய அவமதிப்புகள் நிகழாது என்ற நம்பிக்கையாவது கிட்டியிருக்கிறதா என்றால், தலைகவிழ்வதைத் தவிர வேறு பதிலில்லை!! எனில் இதற்கு என்னதான் வழி?

முன்பு டென்மார்க் கார்ட்டூன். இப்போது அவதூறு படம். அந்த எதிர்ப்பலை ஓயும் முன்பே, இதோ ஃப்ரெஞ்சுப் பத்திரிகையில் மீண்டும் கேலிச்சித்திரங்கள்! 


இந்த தொடர்கதைக்கு ஒரு கட்டாய முற்றுப் புள்ளியே இப்போதையத் தேவை.  ஒரு நிரந்தர புரிதலுக்கான வழியை இஸ்லாமிய அறிஞர்களும் தலைவர்களும் கண்டறிய வேண்டும். அது வன்முறையுமல்ல; அடங்கிப் போதலுமல்ல!! நமது உரிமையாக அந்த வழி இருக்க வேண்டும்!! அது சட்டபூர்வமான வழி!! ஆம், இஸ்லாத்திற்கு மாறான செயல்களில் ஈடுபட்டு, இஸ்லாமை இழிவுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்படவேண்டும்.

அதெப்படி சாத்தியமென வியக்கலாம். உதாரணங்களில் ஒன்றைக் கூறுகிறேன். ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய யூத பெரு இனவொழிப்பு (Holocaust) குறித்து அறிந்திருப்பீர்கள். அந்த இனவொழிப்பு சம்பவம் பொய்யென மறுத்து, ஏற்காதவர்கள் பலர் உலகில் உண்டு. அவர்கள்  அப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லையென ஆதாரங்களுடன் மறுத்து பேசி, எழுதி வருவதைத் தடுப்பதற்காக, “Laws_against_Holocaust_denial” என்ற யூதர்களுக்கு ஆதரவான சட்டம் இன்று பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் அமலில் உள்ளது.  


ஹிட்லர் ஆண்ட ஜெர்மனியிலும் இச்சட்டம் உண்டு என்பதுதான் கவனிக்கப்படவேண்டியது. அந்த நாடுகளில் இதன்மூலம் தண்டிக்கப்பட்டவர்களும் பலர்.

இன்று தன் குடிமகன் ஒருவன் நபி பெருமானாரின் கார்ட்டூனை வெளியிட்டிருப்பதை “தனிமதச் சுதந்திரம்” ,”பேச்சுரிமை”,  “கருத்துரிமை” என்றெல்லாம் காரணம் சொல்லி தண்டிக்க மறுக்கும் ஃப்ரான்ஸிலும் யூத இனவொழிப்பு எதிர்ப்புச் சட்டம் அமலில் இருக்கிறது.

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல, இஸ்லாமை அவமதிப்பதைத் தடுக்க ஒரு சர்வதேச சட்டத்தை (International law) உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதே இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் அவசரக் கடமை. பலம் வாய்ந்த இஸ்லாமிய அரசுகளின் உதவியைக் கொண்டும், சட்ட அறிஞர்களைக் கொண்டும் இச்சட்டம் வடிவமைக்கப்பட்டு, சர்வதேச சட்ட-நீதி மன்றங்கள் மற்றும் கூட்டமைப்புகளின் மூலம் உலக நாடுகளுக்கு பொது விதியாக்கப்படவேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் இன்றே தொடங்கினால்தான், சில ஆண்டுகளில் நடவடிக்கைகள் பூர்த்தியாகி, நடைமுறைக்கு வரும்.

இனி இதுபோல கீழ்த்தரமான தூற்றுதல் வேலைகளில் யாரேனும் ஈடுபட்டால், இஸ்லாமியர்கள் உணர்ச்சிகளால் ஆளப்படாமல், அறிவால் எதிர்கொள்வதே விவேகமான செயலாகும்.  சட்ட ரீதியாக எதிர்கொண்டு, கடுந்தண்டனை வாங்கிக் கொடுப்பதன்மூலம்தான் "Freedom to abuse"  - ”அவமதிக்கும் உரிமை” தொடராமல் தடுக்க முடியும்.  


Post Comment

30 comments:

Seeni said...

yosikka koodiya visayam...

ஸ்ரீராம். said...

நல்ல யோசனை. உணர்சிகளால் உந்தப் பட்டு காட்டும் எதிர்ப்பை விட அறிவின் மூலம் எதிர்கொள்வது சிறந்தது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவர்களுடைய நம்பிக்கைகள் புண்படுத்தும் போக்கு ஒழிக்கப் பட வேண்டும்.

அப்பாதுரை said...

இப்படி ஒவ்வொரு மதமும் சட்டம் ஏற்படுத்தினால் என்னாகும்?

Sathish Murugan . said...

அன்பின் அக்காவுக்கு வணக்கங்கள்,
தாங்களும் வீட்டினரும் நலம் என நம்புகிறேன்.
வன்முறையினால் தன்னை கேலி செய்வதை தடுக்க முடியாது என்பது முற்றிலும் உண்மை. எந்த மதமும் எவரையும் தூற்ற கற்று கொடுக்கவில்லை. சில மத வெறியர்கள் அடுத்தவர் மதங்களை சுரண்டி பார்ப்பதில் சுகம் காண்கின்றனர். எந்த மத கோட்பாடும் தற்கால வாழ்வியலுக்கு நூறு சதம் பொருந்தாது, ஆனால் அதன் உட்பொருள் என்றுமே அன்பை மட்டுமே போதிக்கும். அன்பின் அக்கா, தங்கள் மதத்தை சார்ந்த சிலர், இந்துக்களை தூற்றுவதை தன் கடமையாய் செய்கின்றனர், அவர்களுக்கு பதிலளிக்கையில் மனம் சற்றே வேதனைக்குள்ளகிறது என் இஸ்லாமிய நண்பர்களின் சமய சார்பற்ற நட்புகளை என் வார்த்தைகள் காயப்படுத்துமோ என்று. சர்வதேச சட்டம் வந்தால் நலமே பயக்கும். மத வெறியர்களுக்கு சரியான சவுக்கடியாவும் அமையும். எண்ணங்கள் ஈடேற எல்லாம் வல்ல இறைவனை துதிப்போம்.

நாஸியா said...

இதே போல யாசிர் காதி பயானில் ஒரு விஷயம் சொன்னதாக நினைவு. அதாவது ஈராக் போன்ற நாடுகளில் இறந்த அமெரிக்க ராணுவ அதிகாரிகளின் உடல்கள் திரும்ப அவர்களுடைய ஊர்களுக்கு வரும்போது ஒரு குழுவை சேர்ந்தவர்கள் (முஸ்லிம்கள் அல்ல) அவர்களை பற்றின அவதூறு பரப்பும் வாக்கியங்கள் அடங்கிய போர்டுளை கொண்டு விமான நிலையத்தில் வர்வேற்பார்களாம் (!). அவர்கள் தொல்லை தாங்க முடியாமல் அவர்களை சிறையில் அடைக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டதாம். இப்போ எங்கே போனது கருத்து சுதந்திரம்?

இப்படி ஒரு சட்டம் நிறைவேற்றப்படுமா என்பது கேள்விக்குறி தான். ஆனால் இது ஒரு மிகச்சிறந்த யோசனை.

RAMA RAVI (RAMVI) said...

மிக நல்ல யோசனை ஹுஸைனம்மா.சிந்தனையை தூண்டும் பதிவு..

தளிகா said...

நல்லதொரு யோசனை ஹுஸெனம்மா..மதத்தின் பெயரால் இழிவுபடுத்துவது யாருக்கும் அழகே இல்லை..இது எந்த மதத்திலும் சொல்லப்படவும் இல்லை..மதம் நம்மை நாமே தூய்மைப்படுத்திக் கொள்ள தான் , அடுத்தவர்களை சீண்டிப் பார்க்கவல்ல.அடுத்தவர்கள் உணர்ச்சிகளை இழிவுபடுத்துபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்

Thenammai Lakshmanan said...

மிகச் சரியான பகிர்வு ஹுசைனம்மா. உங்கள் எண்ண ஓட்டங்களோடு ஒத்துப் போகிறேன்.

suvanappiriyan said...

சிறந்த பகிர்வு! இது போன்ற சட்டம் மிக அவசியம்.

சாந்தி மாரியப்பன் said...

நல்லதொரு கட்டுரை ஹுஸைனம்மா..

வல்லிசிம்ஹன் said...

கருத்துச் சுதந்திரம் அளவு கடந்து போகிறது.தன் மதத்தைப் போற்றும் அதே நேரம் பிற மதங்களை மதிக்கத் தெரிந்த மனிதர்களுடன் வாழ்த் தெரியாமல் அவர்களைத் துன்புறுத்துவதில் நியாயம் என்ன இருக்கிறது.

Asalamsmt said...

நடப்பதாக இருந்தால் மிக்க நல்லதுதான். பூனைக்கு மணி கட்டுவது யார்? அதுதான் முக்கியம் இப்பொழுது

Asalamsmt said...

சரியான பதிவு தான்.

ADHI VENKAT said...

நல்ல யோசனை தான்....

சிராஜ் said...

சர்வதேச சட்டம் என்ற ஐடியா நல்ல ஐடியா தான்... பகிர்விற்க்கு நன்றி...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல யோசனை ஹுசைனம்மா...

Nasar said...

ஆஹா ..அருமையான சிந்தனை...வரவேற்கவேண்டிய சட்டம்,
சகோ ஹுசைனம்மா இஸ் கிரேட்

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு சிந்தனை... நன்றி...

ஹுஸைனம்மா said...

சீனி - நன்றி.

ஸ்ரீராம் சார் - நன்றி சார்.

அப்பாதுரை - //இப்படி ஒவ்வொரு மதமும் சட்டம் ஏற்படுத்தினால் என்னாகும்? //

சட்டத்தைக் கையில் எடுப்பதைவிட இது நல்லதுதானே. ஆரோக்கியமான விமர்சனங்கள் தடுக்கப்படக்கூடாது. ஆனால் அவமதித்தல் தடை செய்யப்படவேண்டியதே.

ஹுஸைனம்மா said...

தீஷ் முருகன் - வாங்க. நலமே. நன்றி.
அடுத்தவரின் மதத்தை தூற்றுவது மிகத்தவறு. ஆரோக்கியமான விமர்சன - விவாதங்களின்போது சிலர் இழிவாகப் பேசத் தலைப்படுவதும் கண்டிக்கப்படவேண்டிய தவறு. எதிர்தரப்பு தரக்குறைவாகப் பேசினாலும், நாம் பொறுமையைக் கைவிடாமல், கண்ணியமாகப் பேசினால், எதிர்தரப்பில் உள்ளவரும் மனம் மாறுவார். நமக்கும் நம் நட்புகளைக் காயப்படுத்துகிறோமோ என்ற வேதனையும் இருக்காது.

//எண்ணங்கள் ஈடேற எல்லாம் வல்ல இறைவனை துதிப்போம்.// - நாம் அனைவரும் விரும்புவதும் அதே.

மிக்க நன்றி.

ஹுஸைனம்மா said...

நாஸியா - எப்பவுமே “இஸ்லாமியக்” கண்ணுக்கு மட்டும் சுண்ணாம்புதான்!!

ராம்வி - நன்றிக்கா.

தளிகா - ரொம்பச் சரியாச் சொன்னீங்க தளிகா.

தேனக்கா - நன்றி அக்கா.

ஹுஸைனம்மா said...

சுவனப்பிரியன் - நன்றி.

அமைதிக்கா - நன்றிக்கா.

வல்லிமா - //கருத்துச் சுதந்திரம் அளவு கடந்து போகிறது// ஆமாம் வல்லிமா. ஒரு கடிவாளம்தான் தேவை இப்போது.

ஹுஸைனம்மா said...

அஸலம் - //பூனைக்கு மணி கட்டுவது யார்? அதுதான் முக்கியம் // தனிமனிதர்கள் நம்மால் சொல்லத்தான் முடியும், செயல்வடிவம் கொடுக்க வேண்டியது அதற்கான பொறுப்புகளில் உள்ளவர்கள்தான்.

ஏன், போராட்டம் நடத்திய இயக்கங்களே ஒன்றிணைந்து இதை முன்னெடுத்துச் செல்லலாம். செய்வார்களா?

ஹுஸைனம்மா said...

சிராஜ் - சர்வதேச சட்டம் என்கிற எண்ணம் குறித்து, இன்று பல பெரிய பள்ளிகளின் இமாம்கள் மற்றும் இஸ்லாமியப் பத்திரிகையாளர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கான செயல்திட்டம் வருமாவென ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஹுஸைனம்மா said...

கோவை2தில்லி - நன்றிப்பா.

வெஙகட் - நன்றிங்க.

நாஸர் - நன்றி.

தனபாலன் - நன்றிங்க.

Anisha Yunus said...

mmm....mindla vechukkaren :)

அன்புடன் மலிக்கா said...

நல்லதொரு யோசனை ஹுசைன்னம்மா.

//எப்பவுமே “இஸ்லாமியக்” கண்ணுக்கு மட்டும் சுண்ணாம்புதான்!! // வெண்ணையாகும் காலம் வெகுவிரைவில் வரும்.. இன்ஷாஅல்லாஹ்..

NAGARAJAN said...

சகோதரி அவர்களே, ஓவியர் ஹுசைன் ஹிந்துக்கள் வணங்கும் சரஸ்வதி தேவியையும் பாரத மாதவையும் நிர்வாணமாக வரைந்த போது, ஹிந்து இயக்கங்கள் கண்டித்தன, அவரது கண் காட்சியைத் தாக்கின. இச் சாயலுக்கு ஹுசைன் சார்பாக பலர் வக்காலத்து வாங்கினர், கலை என்ற பெயரில். அப்போது, எந்த முஸ்லீம் அமைப்புகளும் ஹுசைனிடம் இவ்வாறு பிற மத உணர்வுகளை புண் படுத்தும் ஓவியங்களை வரைய வேண்டாம் என்று சொல்லவும் இல்லை மற்றும் ஹுசைனது செயலை கண்டிக்கவுமில்லை. ஆனால், முஸ்லீம் மத உணர்வு புண்படும் போது அது தவறு என்று கூறுவது ஏன்? மனது புண்படுவது ஒரு வழிப் பாதையாக இருக்கக் கூடாது.

ஹுஸைனம்மா said...

@ திரு. நாகராஜன்:

எம்.எஃப்.ஹுஸைனின் செயலை எனக்குத் தெரிந்து எந்த இஸ்லாமிய இயக்கமும், தனி முஸ்லிமும் ஆதரிக்கவில்லை. குறிப்பிட்ட படத்தை மட்டுமல்ல, அதற்குமுன்பே மொத்தமாக அவர் உருவ ஓவியங்கள் வரைவதையே இஸ்லாத்தில் அனுமதிக்கபப்டாத ஒன்று என்று சொல்லி பெரும்பான்மையான முஸ்லிம்கள் அவரை எதிர்த்து வந்தனர். அவர் பிறப்பால், பெயரால் மட்டுமே முஸ்லிம் என்பதாகத்தான் கருதப்பட்டு ஒதுக்கப்பட்டிருந்தார். அவர் இந்து தெய்வத்தைச் சர்ச்சைக்குரிய விதத்தில் வரைந்து, இந்துக்கள் மனதைப் புண்படுத்தியதை ஒட்டுமொத்தமாக எல்லா முஸ்லிம்களும் கண்டிக்கவே செய்தனர்.

//மனது புண்படுவது ஒரு வழிப் பாதையாக இருக்கக் கூடாது//
நிச்சயமாக!!





Unknown said...

nalla yosanai..