Pages

ஒரே ஒரு பொய் மட்டும்...




போன மாசம், லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங். இந்த மாசம் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்!

லான்ஸ் ஊக்க மருந்து பயன்படுத்தித்தான் பிடிபட்டார். ஆஸ்கர் அதையும் தாண்டி, கொலையே செய்திட்டார்னு குற்றச்சாட்டு. நாலஞ்சு மாசம் முன்னே நடந்த ஒலிம்பிக்ஸில் ஸ்டார் அட்ராக்‌ஷனாக இருந்த ஆஸ்கர், இப்ப கொலைகாரரா நிற்கிறார். 





ஆஸ்கர் பிஸ்டோரியஸ், பிறந்தவுடனே இரண்டு கால்களையும் இழந்தவர். பிற்பாடு செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன. இரண்டும் செயற்கைக் கால்களே என்றாலும், உடல் ஊனமுற்றவர்களுக்கான பாரா ஒலிம்பிக்ஸில் பல வெற்றிகளைக் குவித்திருந்தார். எனினும், பாரா ஒலிம்பிக்ஸோடு  தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல், முழு உடல் திறன் பெற்றவர்களுக்கான வழமையான ஒலிம்பிக்ஸில் பங்கு பெறும் உரிமையை, 2008 முதல் போராடி, சென்ற வருடம் பெற்றார். கால்களுக்குப் பதிலாக கார்பன் இழைகளால் செய்யப்பட்ட தகடுகளைக் கொண்டவர் என்பதால், “ப்ளேட் ரன்னர்” (Blade runner) என்றே அழைக்கப்பட்டார். 

சென்ற ஒலிம்பிக்ஸில் வெற்றி பெறாவிட்டாலும், மக்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர், இப்போது தனது காதலியைக் கொன்றதாகக் கொலைப் பழியோடு நிற்கிறார்!  “வேண்டுமென்றே கொல்லவில்லை; இரவில் திருடன் என்று நினைத்துத் தவறுதலாகச் சுட்டுவிட்டேன்” என்று மன்றாடினாலும், சாட்சியங்கள் மனக்கசப்பினால் நிகழ்த்தப்பட்டது என்றே நம்ப வைக்கின்றன.

லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்  “Tour de France" என்கிற சைக்கிள் மராத்தான் போட்டியில், கலந்துகொண்ட ஏழு முறையும் வென்றவர்.  இதுவே ஒரு அரிய சாதனை. அதிலும், கேன்ஸரால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர் என்பதால் கூடுதல் புகழ் பெற்றார். பலராலும் ஒரு முன்மாதிரியாகப் பார்க்கப்பட்டார்.

   

ஆனால்,  ஊக்க மருந்து பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மிகக் கடுமையாக அறிக்கைகள் விட்டு மறுத்துக் கொண்டிருந்தார்.  அமெரிக்க போதை மருந்து தடுப்புத் துறையும் (USADA) விடாமல் ஆதாரங்களோடு மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டியபோது, ஒரு கட்டத்தில், “இனி நான் போராட விரும்பவில்லை. இத்துடன் விலகிக் கொள்கிறேன்” என்றெல்லாம் கருத்து தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு அவருக்குப் பரிதாபங்களையும் பெற்றுத் தந்தது.  லான்ஸ் குற்றமற்றவராகவே இருப்பார்;  கேன்ஸரோடு போராடி உடல்நலம் பெற்று, பின் கடும்பயிற்சியின் மூலம் தொடர்வெற்றிகளைக் குவித்த அவரைப் பாராட்டுவதை விட்டுவிட்டு, இந்த அரசு இயந்திரங்கள் ரொம்பத்தான் படுத்துகின்றன என்றுதான் மக்களை எண்ண வைத்தன.

ஆனால், சில வாரங்கள் கழித்து ”நான் ஊக்க மருந்து பயன்படுத்தத்தான் செய்தேன்” என்று ஒத்துக் கொண்டபோது, உலகமே அதிர்ந்தது.   அவர் போதை தடுப்புத் துறையை மட்டும் ஏமாற்றவில்லை; இதன் மூலம் அவரை முன்மாதிரியாகக் கருதிப் பூஜித்து வந்த ரசிகர்களையும், அவரை நம்பி முதலீடு செய்த நிறுவனங்களையும் ஒருசேர நம்பிக்கை மோசம் செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டார்.

ந்நிகழ்வுகளைப் பார்த்து ஒரு சாமான்ய மனிதனுக்கு என்ன எண்ணங்கள் வரும்? ஜெயிப்பதற்காக எதுவும் செய்யலாம் என்றா? ஜெயித்துவிட்டால் எதையும் செய்யலாம் என்றா?

இனி வெற்றியாளர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாமா?

ஆஸ்கரின் செயலாவது (நியாயப்படுத்த முடியாதென்றாலும்), கோபத்தினால் நொடியில் விளைந்தது. ஆனால், லான்ஸின் செயல் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட துரோகம் அல்லவா? “ஊக்க மருந்து இல்லையென்றால் ஏழு வருடம் என்னால் வெற்றி பெற்றிருக்க முடியாது” என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார் இப்போது.  எனில், இத்தனை வருடங்களாக அத்தனை பேரையும் அல்லவா ஏமாற்றியிருக்கிறார்.

இனி, இதுபோன்ற வெற்றியாளர்களின்மீது எம்மாதிரியானக் கண்ணோட்டம் இருக்கும்? ஏற்கனவே இந்தியாவில் அரசியல் குறுக்கீடுகளால், விருதுகள், பரிசுகள் பெறுபவர்கள், இந்திய அணிகளில் இடம்பெறுபவர்கள் மீது ஒரு நம்பிக்கையற்ற தன்மை நிலவுகிறது. வெளிநாடுகளில் அவ்வாறான அரசியல் குறுக்கீடுகள் ஏறக்குறைய அறவே இல்லை என்பதால், விளையாட்டுகளில் வெற்றி பெறுபவர்கள்மீது மிகுந்த மதிப்பு இருந்து வந்தது. ஆனால், லான்ஸின் இந்தச் செயல் அதற்கும் முடிவு கட்டிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். 90களில் பென் ஜான்ஸன் நிகழ்வுக்குப் பிறகு, அதே தாக்கம் தந்திருப்பது லான்ஸின் செயலே.

இனி “ரோல் மாடல்கள்” என்று நிகழ்கால மனிதர்கள் யாரையும் குறிப்பிட்டு, குழந்தைகளுக்கு அடையாளம் காட்டுவதற்குப் பெரிய தயக்கம் வரும்.

ப்போதேனும் ஒரு பொய் சொல்வதென்பது வேறு;  திட்டமிட்டு ஒரே பொய்யை, ஏழு வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து சொல்லி ஏமாற்றி வருவதென்பது வேறு என்று சிலர் சொல்லலாம்.  ஆனால், இந்தத் தொடர் பொய்யுரைத்தலுக்கு அந்த ”எப்போதேனும் ஒரு பொய்”தான் தொடக்கப் புள்ளி என்பதை மறந்துவிடுகிறோம்.

மனவள அறிஞர்கள் இது குறித்துச் சொல்லும்போது, “நாம் எல்லாருமே பொய் சொல்லத்தான் செய்கிறோம்.  எல்லாமே சின்னச் சின்னப் பொய்கள் என்பதால், அதில் தவறில்லையென்றே நம்புகிறோம்” என்கின்றனர். ஆஃபிஸிலிருந்து வீடு வரத் தாமதமானால், பரிட்சையில் மதிப்பெண் குறைந்தால், குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்கவில்லையென்றால், கடனைத் திருப்ப முடியவில்லையென்றால், தொலைபேசி அழைப்பினை எடுக்கவில்லையென்றால்... இப்படி எத்தனையோ சந்தர்ப்பங்கள் பொய் சொல்ல.. அந்தப் பொய்யுரைத்தலை நாம் நியாயப்படுத்துகின்றோம் என்பதுதான் இதில் விந்தை.

“பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது” என்ற பயமுறுத்தல் ஒரு புறம்; “பொய்மையும் வாய்மையிடத்து, புரைதீர்ந்த நன்மை பயக்குமெனில்” என்கிற அறிவுரை ஒருபுறம் என்று குழம்பிப் போகும் மக்கள் “White lies" - கள்ளமில்லாப் பொய்கள் என்று ஒரு வகையைப் பகுத்துக் கொண்டார்கள். இந்த வகைப் பொய்கள் ஆபத்தைத் தராதவை என்பதால், இது சரியே என்பது அவர்களின் வாதம்.

ஒரு மேலைநாட்டு ஆசிரியர், “பைபிளின் பத்து கட்டளைகளில் “பொய் சொல்லாதே” என்று சொல்லப்படவில்லை. ஆகவே பொய் சொல்லுவதில் தவறில்லை என்று நினைப்பவர்களும் உண்டு” என்கிறார்!!

அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள் என்று எல்லாத் தரப்பினரும் பொய் சொல்வது வெளிப்படையாகத் தெரிந்தாலும், அதை எதிர்க்கும் திராணி இருப்பவர்களும்கூட நம் வேலை சரியாக நடந்தால் போதும் என்று தன்னலத்தோடு இருந்துவிடுகிறோம். அல்லது, ஆடையணியாத அரசனிடம் உண்மையைச் சொன்னால் நம் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்று இருந்த மக்களைப் போல, பொய்யைப் புகழ்ந்து கொள்கிறோம். இதனால்தான் இன்றும் இலைகள் இறக்கைகள் ஆகின்றன.  ஏழே நாளில் டல் திவ்யா, தூள் திவ்யா ஆகிறாள்.

பொய் சொல்வது வெகு சாதாரணமாகிவிட்ட இக்காலத்தில், ஒருவரின் பெரிய பொய்கள் வெளிப்படும் சூழ்நிலை உருவானால், உடனே சம்பந்தப்பட்டவரே “ஆமாம், அறியாமல் பொய் சொல்லிவிட்டேன். என்னை மன்னியுங்கள்” என்று சொல்லிவிட்டால் உடனே “அதான் ஒத்துக்கிட்டு, மன்னிப்பு கேட்டுட்டாருல்ல? விடுங்கப்பா” என்று பரிதாப அலையை அள்ளிக் கொடுத்து மேலும் புனிதராக்கிவிடுகின்றோம்.

மொடாக்குடி தொடங்குவது ஒரு சிறு ஸிப்பில்; செயின் ஸ்மோக்கிங்கின் ஆரம்பம் ஒரே ஒரு இழுப்பு. போலவே, எல்லாப் பொய்களுக்கும் தொடக்கம் ஆபத்தில்லாததாகக் கருதப்படும் ”ஒரு சிறு பொய்”தான்.  அது நாம் விரும்பும் பலனைத் தரும்பட்சத்தில், அது சரியெனக் கருதப்படுகிறது. ஒரு பொய் சொன்னால், அதை மறைக்க ஒன்பது பொய் சொல்லியாக வேண்டும். இப்படியே ஒரு பொய் வளர்ந்து, பெரிதாகி, குட்டிகள் போட்டு, பல்கிப் பெருகுகின்றது. இதுவரையிலான பொய்களால் தீயது விளைந்திருக்காது. அந்நேர மகிழ்ச்சி தரும் விளைவுகளே கிடைத்திருக்கும். பொய் சொல்லியும் போஜனத்திற்குக் குறைவில்லை என்று பொய்-நம்பிக்கை தரும். அது துணைக்கு மற்றவற்றையும் அழைத்துவரும்.

பொய்யின் வகைகளில் ஒன்றாக, வீட்டினுள் ஒரு முகம், வெளியே வேறு முகம் காட்டுவதை நியாயப்படுத்துகிறோம். Etiquettes என்ற பெயர்களில், போலித்தனமாக சிரித்து, புகழ்ந்து நடித்து, பொய்யான ஒரு இமேஜைக் காணத் தருகிறோம்.  உற்றவர்களானாலும் தவறுகளை எடுத்துச் சொல்லித் திருத்த முனையாமல், ’அது நாகரீகமல்ல’ என்று பொய்ச்சமாதானம் சொல்லிக்கொள்கிறோம்.

பொய் பேசும் விளம்பரங்கள்.  அந்த விளம்பரங்களுக்கு ஆகும் செலவையும், பெரிய கட்டிடங்களின் வாடகையையும் பொருளின் விலையில் சேர்த்து அதிக விலைக்கு விற்கப்படுவதைத்தான் “க்வாலிட்டி நல்லாருக்கும்” என்று தெரிந்தே பொய்யாக நம்புகிறோம். ஒப்பனைகள் பூசி பொய்யான மு(அ)கத்தைக் காட்டுபவர்களை உயர்வானவர்களாகக் கருதுகிறோம். பொய் சொல்வதற்கென்றே ஏப்ரல் ஃபூல் என்றொரு நாள் ஒதுக்கி, பொய் சொல்லி ஏமாற்றுவதைப் பெருமையாக நினைத்துக் கொண்டாடி மகிழ்கிறோம். 


சிறுவயதில் படித்த கல்கண்டு வார இதழில் லேனா தமிழ்வாணன் ஒருபக்கக் கட்டுரைகள் எழுதி வந்தார்.  நல்ல அறிவுரைகளை, சுவாரசியமான நடையில் எழுதுவதால், பல மனதில் இறுக்கமாகப் பதிந்ததுண்டு. அவற்றில், “பிள்ளைகளிடம் நீங்கள் ஏதேனும் வாக்கு கொடுத்தால் அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுங்கள். “ஆமா, நீ எப்பவும் இப்படித்தான் சொல்லுவே, ஆனா செய்யமாட்டே” என்று சொல்லிவிட்டால் அது பெற்றோராக நீங்கள் தோல்வியடைந்ததைக் காட்டுகிறது” என்பதும் ஒன்று.

இதையே பின்னாட்களில் ஹதீஸ் புத்தகங்களில் நபிகளாரின் அறிவுரையாகவும் கண்டேன்:  ஒரு சிறுவனை,   அன்னை ”இங்கே வா, நான் உனக்கு ஒன்று தருகிறேன்” என்று அழைத்தபோது நபி(ஸல்) அவர்கள் ”அவ்வாறு அழைத்துவிட்டு, அவருக்கு ஒன்றும் தராமல் இருந்தால் நீங்கள் பொய் கூறியவராகியிருப்பீர்கள்” என்று கூறினார்கள்.

ஆனால், வீட்டில் இருந்துகொண்டே இல்லையென்று சொல்வது; அப்பாவுக்குத் தெரியாமல் அம்மா மகனுக்கு பாக்கெட் மணி தருவது என, பெற்றோர்களின் பொய்களைக் கேட்டு வளரும் குழந்தைகளும் பொய் சொல்லுவது தவறில்லை என்று எடுத்துக் கொள்கின்றனர்.  அப்பெற்றோர்களும், “என்னிடம் பொய் சொல்லாத வரை சரி” என்று அதைக் கண்டுகொள்வதில்லை.

இந்த ”எப்போதேனும் ஒரு பொய்”தான் எல்லா குற்றங்களுக்கும் ஆதாரஸ்ருதியாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்வதே இல்லை. 


திருந்தி வாழ நினைத்த ஒருவன், அதற்கான வழியைத் தேடியபோது, அவனிடம் ஒருவர் “எது வேண்டுமோ செய்துகொள். பொய் மட்டும் சொல்லாமலிரு.” என்றாராம்.  ”வாய்மை” என்ற தலைப்பில் ஓர் அதிகாரம் எழுதியுள்ள வள்ளுவரும் இதையே சொல்கிறார்:
”பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று"                        
”பொய்யுரைக்காமையை மட்டும் கடைபிடித்து வந்தாலே போதும்;  மற்ற அறங்கள் செய்யத் தேவையில்லை”  என்று திருவள்ளுவர் எடுத்துரைப்பதிலிருந்து தெரியவருவது: ஒரு பொய்.. அதைச் சொன்னால் அது எல்லாத் தீயவைகளின் தொடக்கமாக அமையும்.  தவிர்த்தால்,  நல்வாழ்வின் தொடக்கம்.


Post Comment

24 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பிறர்க்குக் குற்றம்தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்
பொய்மையும் வாய்மை இடத்து...

இப்படியும் எடுத்துக் கொள்ளலாம்...

கவனிக்க : பிறர்க்கு...

அருமையான குறளோடும் குரலோடும் முடித்தமைக்கு பாராட்டுக்கள்...

கோமதி அரசு said...

ஏழே நாளில் டல் திவ்யா, தூள் திவ்யா ஆகிறாள். //

பொய்யிலேயே பெரிய பொய் இது தான்.

கோமதி அரசு said...

”பொய்யுரைக்காமையை மட்டும் கடைபிடித்து வந்தாலே போதும்; மற்ற அறங்கள் செய்யத் தேவையில்லை” என்று திருவள்ளுவர் எடுத்துரைப்பதிலிருந்து தெரியவருவது: ஒரு பொய்.. அதைச் சொன்னால் அது எல்லாத் தீயவைகளின் தொடக்கமாக அமையும். தவிர்த்தால், நல்வாழ்வின் தொடக்கம்.//

ஆம், உண்மை. நல்ல பதிவு.
வாழ்த்துக்கள் ஹுஸைனம்மா.

சாந்தி மாரியப்பன் said...

//ஒரு பொய் சொன்னால், அதை மறைக்க ஒன்பது பொய் சொல்லியாக வேண்டும். இப்படியே ஒரு பொய் வளர்ந்து, பெரிதாகி, குட்டிகள் போட்டு, பல்கிப் பெருகுகின்றது.//

ரொம்பச்சரி,. அப்புறம் அந்தக் குட்டிகளும் குட்டி போட்டு கடைசியில் குழியில் தள்ளிரும். தேவையா இது?.

இராஜராஜேஸ்வரி said...

, “பைபிளின் பத்து கட்டளைகளில் “பொய் சொல்லாதே” என்று சொல்லப்படவில்லை. ஆகவே பொய் சொல்லுவதில் தவறில்லை என்று நினைப்பவர்களும் உண்டு” என்கிறார்!!

அரிச்சந்திரன் கதையை கடைசி வரிகள் நினைவூட்டின..

பொய்மையும் வாய்மையிடத்தே புரை தீர்ந்த நன்மை ப்யக்குமெனில்..

அப்பாதுரை said...

நல்ல கட்டுரை.
பொய்யாமை ரொம்பக் கஷ்டம் - கடவுள், மதம்லேந்து தொடங்கணும் இல்லையா?
ஏமாற்றாமை ரொம்ப சுலபம் - சக மனிதர் மேல் மதிப்பிருந்தால்.
ஆர்ம்ஸ்றாங்க் செய்தது நம்பிக்கைத் துரோகம் கலந்தப் பெரிய குற்றம். ஆஸ்கரின் வெறி ஒரு பிரபலத்தின் தனிப்பட்ட விவகாரம்.

வெங்கட் நாகராஜ் said...

”ஒரு பொய்யாவது சொல் கண்ணே” என பாட்டு எழுதுபவர்கள் இங்கே! :)

ஒரு பொய் சொல்ல ஆரம்பித்து அதைக் காக்க பல பொய்கள் சொல்ல வேண்டியிருப்பதால், பொய்யே சொல்லாது இருப்பது மேல்!

ஸ்ரீராம். said...

இரண்டு விளையாட்டு வீரர்கள் கதையும் வருந்தத் தக்கதுதான். இந்த போதை மருந்து அல்லது ஸ்டீராய்ட் யூஸ் பண்றது பற்றியும் சில சந்தேகங்கள் உண்டு.சில இருமல் மருந்துகளிலும், சில வலி நிவாரணிகளிலுமே தடை செய்யப் படும் மருந்தின் பாகங்கள் உண்டு என்று செய்தி படித்தேன்.

ஆனால் நீங்கள் சொல்வது போல விளம்பரம் முதல் அரசியல் வரை பொய் மக்களுக்குப் பழகி விட்டது.

RAMA RAVI (RAMVI) said...

//மொடாக்குடி தொடங்குவது ஒரு சிறு ஸிப்பில்; செயின் ஸ்மோக்கிங்கின் ஆரம்பம் ஒரே ஒரு இழுப்பு. போலவே, எல்லாப் பொய்களுக்கும் தொடக்கம் ஆபத்தில்லாததாகக் கருதப்படும் ”ஒரு சிறு பொய்”தான். //

சிறப்பு.

மிக நல்லதொரு அலசல்.
ஒரு பொய் சொன்னால் தொடர்ந்து பொய் சொல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறோம்.
அதனால் ஒரு உண்மையை மட்டும் சொல்லிவிட்டு நிம்மதியாக இருக்கலாம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பொய் பற்றிய விரிவான விளக்கம் அருமை.

எல் கே said...

மேலை நாட்டு வீரர்களில் முக்கால்வாசி பேர் ஊக்க மருந்து உபயோகிப்பவர்கள்தான்.அதில் மாட்டாமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதையும் செய்வார்கள். அதையும் மீறி மாட்டினால் இப்படிதான்.

பூ விழி said...

//பொய்யின் வகைகளில் ஒன்றாக, வீட்டினுள் ஒரு முகம், வெளியே வேறு முகம் காட்டுவதை நியாயப்படுத்துகிறோம். Etiquettes என்ற பெயர்களில், போலித்தனமாக சிரித்து, புகழ்ந்து நடித்து, பொய்யான ஒரு இமேஜைக் காணத் தருகிறோம். உற்றவர்களானாலும் தவறுகளை எடுத்துச் சொல்லித் திருத்த முனையாமல், ’அது நாகரீகமல்ல’ என்று பொய்ச்சமாதானம் சொல்லிக்கொள்கிறோம்.//

சரியாக சொல்லி டீங்க நாமே நம்மை ஏமாற்றி கொள்வதில் சுகம் காண்கிறோம்

ADHI VENKAT said...

சிறப்பான பகிர்வு. எதற்காக பொய் சொல்ல வேண்டும். பின்பு மாட்டிக் கொண்டு முழிக்க வேண்டும்..:)

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் ஹுசைனம்மா.இணையத்தைக்கலக்கும் இலக்கிய பெண்கள் வரிசையில் நீங்களும் இடம் பெற்றமைக்கு.இது போல் பல அங்கிகாரங்கள் கிடைக்க இனிய வாழ்த்துக்கள்.

enrenrum16 said...

//ஏழே நாளில் டல் திவ்யா, தூள் திவ்யா ஆகிறாள். //// நான் எப்போதும் வாங்கும் சோப் பொடிகள் அவ்வளவு எளிதில் அழுக்கைப் போக்கவில்லை என விலை உயர்ந்த சோப் பொடி வாங்கி அவர்கள் ’செய்து காட்டியது’ போல் துணியை ஊற வைத்து தூக்கிப் பார்த்தால்.... அவ்வ்வ்வ்.... அதே பழைய கதை... இந்த அளவுக்கு வெகுளியா இருக்கிறது என் தவறோ?? விளம்பரங்களில் காட்டப்படும் பொய்களையும் நாம் ரசித்துத் தானே பார்க்கிறோம்... அது தானே அவர்களது வெற்றி.

ஹுஸைனம்மா said...

@ஸாதிகா அக்கா: “ஒரே ஒரு பொய்” என்று தலைப்பு வைத்த இந்தப் பதிவில் வந்து வாழ்த்து சொல்வதில் உள்குத்து எதுவும் இல்லையே அக்கா? :-))))))))))))

வாழ்த்துக்கு நன்றி அக்கா.

கோமதி அரசு said...

தினகரன் வசந்தம் இதழில்(மகளிர் தின சிறப்பு மலர்) இணையத்தைக் கலக்கும் இலக்கியபெண்கள் வரிசையில் நீங்கள் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள். ராமலக்ஷ்மி பதிவு மூலம் அறிந்து கொண்டேன்.

ஹுஸைனம்மா மேலும் மேலும் சிறப்புகள் சேர வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

இணையத்தைக்கலக்கும் இலக்கிய பெண்கள் வரிசையில் நீங்களும் இடம் பெற்றமைக்கு.இது போல் பல அங்கிகாரங்கள் கிடைக்க இனிய வாழ்த்துக்கள்.//ஹுசைனம்மா..எனக்கு உள்குத்தெல்லாம் உங்களைப்போல் அவ்வளவாக வராதுப்பா.ஹா..ஹா..


இந்த வரிகளை கவனிக்க.

//////இணையத்தைக்கலக்கும் இலக்கிய பெண்கள் வரிசையில் //////நீங்களும் இடம் பெற்றமைக்கு.இது போல் பல அங்கிகாரங்கள் கிடைக்க இனிய வாழ்த்துக்கள்.



மேலும் இதற்கென்று நீங்கள் தனிப்பதிவு எழுத மாட்டீர்கள் என்றும் தெரியும்.அதான் இதிலே வாழ்த்தினேன்.

அன்புடன் மலிக்கா said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஹுசைனம்மா.இணையத்தைக்கலக்கும் இலக்கிய பெண்கள் வரிசையில் நீங்களும் இடம் பெற்றமைக்கு.இது போல் பல அங்கிகாரங்கள் கிடைக்க எனது இனிய வாழ்த்துக்கள்.


இதில் உள்குத்து வெளிக்குத்து எதுவும் இல்லவேயில்லை

RAZIN ABDUL RAHMAN said...

பொய் சொல்வது வெகு சாதாரணமாகிவிட்ட இக்காலத்தில், ஒருவரின் பெரிய பொய்கள் வெளிப்படும் சூழ்நிலை உருவானால், உடனே சம்பந்தப்பட்டவரே “ஆமாம், அறியாமல் பொய் சொல்லிவிட்டேன். என்னை மன்னியுங்கள்” என்று சொல்லிவிட்டால் உடனே “அதான் ஒத்துக்கிட்டு, மன்னிப்பு கேட்டுட்டாருல்ல? விடுங்கப்பா” என்று பரிதாப அலையை அள்ளிக் கொடுத்து மேலும் புனிதராக்கிவிடுகின்றோம். //

உண்மையிலும் உண்மை.. பொய் சொல்லி தப்பிக்க காத்திருப்பவர் கள்ளச்சிரிப்புடன் அப்பாவியாகநிற்க...பாதிக்கப்பட்டவர் கையை பிசையும் நிலைக்குள்ளாகும் இந்த நிலையை அனுபவித்திருக்கிறேன்...

பொய் குறித்த உங்களது எல்லா வாதங்களிலும் ஒரே கோட்டில் உடன்படுகிறேன்...

நல்ல கட்டுரை,,,.வாழ்த்துக்கள்

அன்புடன்
ரஜின்

மனோ சாமிநாதன் said...

வழக்கம்போல சரியான, அருமையான அலசல்!

எப்போதுமே 'முன் மாதிரிகள்' கதாநாயகர்களின் இலக்கணத்தோடு தான் இருக்க நாம் விரும்புவோம். அப்போது தான் அவர்களை நாம் கம்பீரமாக உணர்வோம். அவர்களின் சாதனைகளும் தன்னம்பிக்கை வரலாறுகளும் அப்போது தான் மற்ற‌வர்களின் மனங்களில் ஆழமாகப் பதிகின்றன!

இப்போதெல்லாம் திரைப்பட கதாநாயகர்கள் கூட அழகாய் இருக்க வேண்டியதில்லை. இலக்கண‌ங்கள் மாறுகின்றன. அது போலத்தான் சாதனையாளர்களின் புற இலக்கணங்களும் மாறுகின்றன, ' என் சாதனைகளை மட்டும் பார், என்னைப்பார்க்காதே' என்பது போல!'

பொய்மை குறித்த அலசல்கள் அருமை!

வானவில் said...

அருமையான பதிவு ஹுசைனம்மா ......

நாம் சொல்லும் சிறு பொய்களை கூட சில சமயங்களில் நியாயப்படுத்திக் கொள்கிறோம்.அதுவும் தவறு என கட்டுரையை படிக்கும் பொழுது உணர முடிகின்றது.

Anbazhagan Ramalingam said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள் ஹுஸைனம்மா.

மாதேவி said...

ஒரு பொய்.. அதைச் சொன்னால் அது எல்லாத் தீயவைகளின் தொடக்கமாக அமையும். தவிர்த்தால், நல்வாழ்வின் தொடக்கம்.// நல்ல கருத்து.