Pages

க்ரூப் ஸ்டடி!!




ள்ளி, கல்லூரியில் படிக்கும்போது வகுப்புகளில் படித்த நாட்களைவிட, பரீட்சை காலங்களில் தோழிகளோடு சேர்ந்து “க்ரூப் ஸ்டடி” செய்த நாட்கள்தான் இனிமையானவை!! யாராவது ஒருவர் வீட்டில், கூட்டமாகச் சேர்ந்து,  படிக்கிறோம் என்ற பெயரில் கூத்தடித்து... இடையிடையே கொஞ்சம் படிக்கவும் செய்து....  இதெல்லாம் தெரியாத அம்மாக்கள் “பிள்ளைங்க என்னமா படிக்குது..” என்று கவலைப்பட்டு அவ்வப்போது பஃப்ஸ், வடை முதல் கடலைமிட்டாய், எள்ளுமிட்டாய் வரை படைத்து, டீயும் போட்டுக் கொடுக்க அதைச் சாப்பிடுவதற்கென்று தனியாக ப்ரேக்குக்கு நடுவிலேயே ஒரு பிரேக் எடுத்து....  மிக மிக இனிய நாட்கள்!!  

அந்த “கம்பைண்ட் ஸ்டடி” சமயங்களில், நமக்குப் புரியாத பாடப்பகுதி மற்றவர்களுக்கும் புரியவில்லை என்பதில் சந்தோஷம் அடைவதும்; மற்றவர்கள் எல்லாம் ஏற்கனவே படித்து முடித்திருப்பார்களோ என்று கவலைப் பட்டுக் கொண்ட நேரத்தில் யாரும் படிக்க ஆரம்பிக்கக் கூட இல்லை என்று நல்ல சேதி சொல்லும்போது சற்று நிம்மதி கொள்வதும்..... அதெல்லாம் ஒரு காலம்....

கஷ்டமான ஒரு பாடத்தை “அறிவாளியான” ஒரு தோழி சொல்லிக் கொடுக்க முன்வரும்போது, அவளைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவளுக்குத் தெரிந்ததையும் தெரியாமல் ஆக்கி, மண்டையைக் குழப்பி “சேது” லெவலுக்கு ஆக்கிவிட... சொல்லிக் கொடுக்க வந்தவளைக் கெடுத்ததற்காக மற்றவர்கள் நம்மை திட்ட....  ”புரியாமத்தானேப்பா கேட்டேன்” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கோண்டு பரிதாபமாகப் பதில் சொல்வதும்.. அடடா... அடடா....
 
பள்ளி - கல்லூரி நாட்களைவிட அதிகமாக நினைவு கூறுவது இந்நாட்களைத்தான்!! அந்த நாட்களெல்லாம் இனி வரவே வாய்ப்பில்லை என்று ஆசைகளைப் பரணில் போட்டு வைத்திருந்த சமயத்தில்தான்.... நான் மறுபடியும் வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன்... 

டந்த இரு வருடங்களாக குர் ஆன் விளக்க வகுப்புகளுக்குச் செல்கிறேன். ஆரம்பத்தில் போய்த்தான் பார்ப்போமே என்று போன நான், இன்று ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆர்வத்தோடு செல்கிறேன். முன்பு போல, கல்லூரி போன்ற அட்மாஸ்ஃபியர் தரும் ஆனந்தம், ஆனால் கல்லூரிப் பாடம் போல வருடாந்திர பரீட்சைக்காக மட்டும் படிப்பதாக அல்லாமல்,  இப்போது படிக்கின்ற பாடத்தில் கிடைக்கும் புதிய  கண்ணோட்டங்களும், விளக்கங்களும், அறிவை விசாலமாக்குவதோடு அன்றாட வாழ்க்கைக்கும் பயன்படுகின்றன என்பதால்  வகுப்புக்குத் தவறாமல் செல்லும் உந்துதலைத் தருகிறது.
 
இந்த வகுப்புகள் தரும் உற்சாகமும் புதிது. அன்று பொறுப்புகள் ஏதுமில்லா இளவயது. இன்றோ காலையில் வகுப்புக்கு வருமுன் அன்றைய வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து, குழந்தைகளின் பராமரிப்புக்கும் ஏற்பாடுகள் செய்துகொண்டு, ”வீட்டுப் பாடங்களை”யும் செய்துவிட்டு பரபரப்போடு வகுப்புக்கு வரும் அனுபவமும் புதிது. 
 
ஓரிரண்டு வகுப்புகளுக்குத் தொடர்ந்து லேட்டாக வந்தால், “அட்டெண்டஸ் கட் செஞ்சிடுவேன்”, “ஃபைன் கட்டு” “அப்பாவைக் கூட்டிட்டு வா” என்ற பயமுறுத்தல்கள் இல்லாமல், நாம் இழக்கும் பாடங்களைச் சுட்டிக் காட்டி, அவற்றைத் தவற விடுவதன் பாதிப்பைச் சொல்வது, அடுத்த வகுப்புக்குச் சீக்கிரம் செல்ல வைத்துவிடுகிறது. வீட்டுப் பாடத்தை, “உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதம்” என்று சொல்லிவிடுவதால் செய்யாமல் போவதற்கு வழியே இல்லாமல் போய்விடுகிறது. (இஸ்லாத்தில் அமானிதம் காப்பது - ஒப்படைக்கப்பட்ட பொருள்/ வாக்கு - காப்பாற்றுவது ஒவ்வொருவரின் கட்டாயக் கடமை)


ப்படியாகப் போகும் படிப்பில், பரீட்சை என்று ஒன்று வரும்போதுதான் சற்று கலக்கம் வரும். அதைத் தவிர்க்கத்தான் நாங்கள் பயன்படுத்தும் யுத்தி, “கம்பைண்ட் ஸ்டடி”!! ஆனால், கல்லூரி கால கம்பைண்ட் ஸ்டடிக்கும் இப்போதைய கம்பைண்ட் ஸ்டடிக்கும் நிறைய வித்தியாசங்கள். அப்போது எல்லாரும் ஒரே வயதினராகத்தான் இருப்போம். இப்போதோ, 20+, 30+, 40+, 50+ என்று பல ஏஜ் குரூப்புகளில் மாணவிகள்!! ஒரே வயதில் படித்தாலே களை கட்டும்; இப்போது கதம்பமாகக் கலந்து படிப்பதால், இன்னும் செம ரகளையாக இருக்கிறது!!
 
எந்த அளவுக்கு என்றால், முதல் பரீட்சையின்போது மூன்று பேரோடு தொடங்கிய க்ரூப் ஸ்டடி, மூன்றாவது பரீட்சையில் ஆறு பேர் ஆகி, தற்போது “அட்வான்ஸ்ட் டெக்னாலஜி”  உதவியால், ஸ்கைப்பிலும் ஒருவர் இணைய.... ஆஹா... ஓஹோதான்....
 
கல்லூரி கால க்ரூப்  ஸ்டடிக்கும், இப்போதைய கூட்டுப் பிரார்த்தனைக்கும்.. ச்சே... (இதுக்குத்தான் தமிழ்ல எழுதுறது இல்லை, ஆங்கிலத்திலேயே சொல்லிட்டுப் போறேன்... ) க்ரூப் ஸ்டடிக்கும் உள்ள வித்தியாசம் என்னன்னா... முன்பு விளையாட்டுப் பேச்சில் நிறைய நேரம் போகும். இப்போதோ, அடுத்தடுத்த கடமைகள் காத்திருப்பதால், அதிக நேரம் - நாட்கள் ஒதுக்க இயலாமையால் - நேரத்தை வீணாக்காமல், எவ்வளவு முடியுமோ அவ்வளவு நிறைய பாடங்களைப் படித்துவிட வேண்டுமென்ற முயற்சி எல்லாரிடமுமே இருக்கிறது.
 
தப்பித் தவறி அப்படி யாரேனும் ஏதேனும் கதைகள் பேச ஆரம்பித்தால், மீதி அனைவரும் சேர்ந்து அவரை சுற்றி வளைத்து “ஏய்... “ என சவுண்டு விட்டு மிரட்டும் அபாயத்தால், யாரும் கோட்டைத் தாண்டிப் போக முயற்சிப்பதே இல்லை. என்னைப் பொறுத்த வரை, இதையெல்லாம்விட  பெரும் சோகம் என்னன்னா, இடையிடையே நொறுக்குத் தீனி - பண்டங்கள் - டீ - காஃபி வேணும்னா நாமளே போட்டுக்க வேண்டியிருப்பதுதான்!!

இப்படியாகப் படித்துத் தயாரான பின்னும், பரீட்சைக்கு முந்திய நாள் இடைவிடாமல் ஃபோன் கால்கள் வருவதும் போவதுமாயிருக்க, “எக்ஸாமுக்கு முந்தின நாள்தான் உங்களுக்கெல்லாம் டவுட் வருமா?” என்ற அவனுக்கான என் டயலாக்கை, என்னை நோக்கி என் சின்னவன் கேட்டே விட்டான்!!! என்ன செய்ய.... வழிந்து கொண்டேன்...  பரீட்சை முடிந்து வந்ததும்  ”உங்களுக்கெல்லாம் Open House ஏன் வைக்க மாட்டேன்கிறாங்க?”  என்று  கேட்கவும் செய்தான். பழி வாங்க முடியலையே என்ற கவலை!!
 
ரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் வரும் இயந்திரத்தனமான வாழ்க்கை சிலருக்கு போரடித்துப் போகும்போது, அதிலிருந்து மீள, அவரவருக்கு ஆர்வமுள்ள ஒன்றைக் கற்றுக் கொள்வது - கற்றுத் தருவது சிறந்த வழி. சிலர் பணம் சம்பாதிப்பது மட்டுமே உற்சாகம் தரும், ஆகவே வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, அதைவிட,  உங்களை இளமைக்குத் திரும்ப வைக்கக் கூடிய ”கற்றலே” சிறந்த வழி.
 
ஏனெனில், நம்மால் இனி புதிதாக ஒன்றை கற்றுக் கொள்வதெல்லாம்  முடியாத காரியம் என்ற எண்ணம் ஊறியிருக்கும்போது, அதை மீறி புதிதாக ஒன்றைக் கற்று, அதன்வழி மறைந்துள்ள நம் திறமை வெளிப்படும்போது, கிடைக்கும் உற்சாகம் தனி!! அது மட்டுமல்ல, நம் தன்னம்பிக்கையையும் வலுப்படுத்தி, வாழ்க்கையை "Refresh" செய்து விடுகிறது!!

Post Comment

5 comments:

ஸ்ரீராம். said...

வாழ்க்கை முழுவதும் ஏதாவது கற்றுக் கொண்டே இருப்பது பாராட்டுக்குரியது. க்ரூப் ஸ்டடி பற்றி நீங்கள் சொல்லி இருப்பது சுவாரஸ்யமானது!

வெங்கட் நாகராஜ் said...

க்ரூப் ஸ்டடி... எவ்வளவு ஸ்வாரசியமான நினைவுகள். எனக்கும் எனது நினைவுகளை மீட்டெடுக்க ஒரு வாய்ப்பு....

இரண்டு நாட்களாகவே ஏதாவது படிக்க வேண்டும் [Correspondence Course] என யோசனையாக இருக்கிறது......

Abi Raja said...

//நமக்குப் புரியாத பாடப்பகுதி மற்றவர்களுக்கும் புரியவில்லை என்பதில் சந்தோஷம் அடைவதும்// நம்ம தான் இப் படினா எல்லாருமே அப்படி தான் போல..

மோகன்ஜி said...

ரூப் ஸ்டெடி நினைவுகள் அருமை மேடம்... பழைய ஞாபகங்களை கிளறி விட்டது

அப்பாதுரை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!