Pages

ச்சும்மா ரெண்டு புத்தகம் வாசிச்சு...




1. புத்தகம்அக்கா
    எழுதியவர்: துளசி கோபால்



துளசிதளம்”  என்ற வலைப்பூவை பத்து வருடங்களுக்கு மேலாக நடத்தி வரும் திருமதி. துளசி கோபால் அவர்கள், தம் வலைப்பூவில் எழுதிவந்த தம் அனுபவங்களைத் தொகுத்து வெளியிட்ட புத்தகம்.

வீட்டின் கடைக்குட்டியான அவருக்கு, தன் சொந்த அக்கா, அண்ணன்களோடு கழிந்த - சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னான-   இளம்பிராயத்து அனுபவங்களின் தொகுப்புகளாக இப்புத்தகம் விளங்குகிறது.

“டீச்சர்” என்று அனைவராலும் மரியாதையாக விளிக்கப்படும் இப்பதிவரின் பதிவுகள் பொதுவாக  எள்ளலும், சிரிப்புமாக துடிப்போடு இருக்கும். அந்த எதிர்பார்ப்போடு இப்புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்த எனக்கு, இதில் வரும் சோகக் காட்சிகள் மிகவும் பாதித்துவிட்டன.

ஆசிரியரின் தாயார் ஒரு மருத்துவர் (அப்போதே..) அதைவிட ஆச்சரியம், அவரது பாட்டியும், மற்றும் பலரும் ஆசிரியைகள். ஆனால்.... அப்போதே மருத்துவராக இருந்தவர், தன் மூன்று மகள்களில் ஒருவரைக்கூட மருத்துவராக ஆக்க முனையாதது ஏமாற்றமளிக்கிறது. மருத்துவரென்ன, குறைந்த பட்சம் ஆசிரியை கூட ஆக்காமல், சீக்கிரமே இருவருக்குத் திருமணம் செய்து வைத்ததும் என்ன காரணத்தால் என்று சொல்லப்படவில்லை.

அம்மா இருக்கும்வரை ஒன்றாக இருந்த சகோதர சகோதரிகள், அம்மாவின் மறைவினால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில் இருக்க வேண்டிவருவது கண்ணீர் வரவழைத்தது - நிதர்சன உண்மையன்றோ இது. எந்தக் குடும்பத்திலும் அம்மாவோ, அப்பாவோதான் பிள்ளைகளை இணைக்கும் புள்ளியாக இருக்கின்றனர். அவர்களின் மறைவிற்குப் பிறகு, அந்த நெருக்கம் குறைந்து, பின் மறைந்தே விடுகிறது.

மற்றபடி, அக்காவுக்கும் அண்ணனுக்கும் நடக்கும் சண்டையால், அவர்களிடம் மாட்டிக் கொண்டு ஆசிரியர் பட்ட அவஸ்தைகள் சுவாரசியம். “ஏழை வாத்தியாருக்கு ஏழு பிள்ளைகளா?” என்ற டயலாக்கில் டீச்சரின் பஞ்ச் மார்க் தெரிகிறது!

சுவாரசியமாக ஆரம்பித்த புத்தகம், குணச்சித்திர படம் போல, சோகமாக முடிகிறது. பெரிய அக்காவும், அண்ணனும் இப்போது என்ன செய்கிறார்கள்? ஆசிரியர் அவர்களோடு தொடர்பில் இருக்கிறாரா? டீச்சர் தன் கணவரை எங்கு சந்தித்தார், எப்படி திருமணம் செய்தார்கள்? இப்படிப் பல கேள்விகளையும் எழுப்பிச் செல்கிறது புத்தகம்.

2. புத்தகம்: மகளிர் தினம் - உண்மை வரலாறு
    எழுதியவர்: இரா.ஜவஹர்

உலக மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8- அன்று கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் மார்ச் 8 என்று வரையறுத்தது யார், அதன் பிண்னணி ஆகியவற்றில் நிலவி வரும் குழப்பங்களை நீக்கி, அதன் உண்மை வரலாறு இப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆரம்ப காலங்களில், 1907-ல் நடந்த “உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாட்டில்” பெண்களுக்கு வாக்குரிமை கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மகளிரால் நடத்தப்பட்ட  பல்வேறு போராட்டங்கள், கூட்டங்கள், ஒரு பொதுவான  ”உலக மகளிர் தினம்” கடைபிடிப்பதின் அவசியத்தை உணர்த்தின. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், பின்வந்த வருடங்களில் வேறுபட்ட தினங்களில் (பெரும்பாலும் மார்ச் மாதத்தில்) ”உலக மகளிர் தினம்” கடைபிடிக்கபப்டன.

1917-மார்ச் 8-ல் பெண் தொழிலாளர்களால், ”உணவும் சமாதானமும்” என்ற பெயரில் ரஷ்யப் புரட்சி  நடத்தப்பட்டு, மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு, சோவியத் ரஷ்யா உருவானது. 1920-ல், மார்ச் 8 மகளிர் தினமென  விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஆக, உலக மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8- அன்று கடைபிடிக்கப்படுவதற்கு, சோஷலிச-கம்யூனிஸ பெண்களே காரணம் என்றும், ஐ.நா.சபையோ, வேறு நாடுகளோ காரணமல்ல எனப்து வரலாற்றுப் பிண்னணியில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. பல பெண் கம்யூனிஸ தலைவர்களையும் அவர்களின் செயல்பாடுகளையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

ப்புத்தகத்தில் ஒரு சம்பவம் கவனத்தை மிக ஈர்த்தது. நம(என)க்கும் மிகப் பொருந்திப் போகக்கூடியது என்பதால் இருக்குமோ....

ரஷ்யாவில் கம்யூனிஸம் தொடங்கிய காலத்தில் மன்னராட்சியின் அடக்குமுறை அதிகமாக இருந்ததால், இயக்க நடவடிக்கைகளை இரகசியமாகவே தொடர முடிந்தது. அதில் ஒன்றாக, 1923-ல் மார்ச் 2 அன்று மகளிர் தினக்கூட்டம் ஒன்று, “அறிவியல் காலை” என்ற பெயரில் நடத்தப்பட்டது. அதில் பேசுவதற்காக “அலெக்சீவா” என்ற ஒரு பெண் தொழிலாளி, தன் உரையைத்  (தலைவர்களின் உதவியோடு) தயாரித்துக் கொண்டு வந்திருந்தார். அரங்கில் மக்கள் கூட்டத்தோடு, போலீஸும் குவிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து, வாழ்நாளில் முதல் முறையாக உரை நிகழ்த்த வந்த அந்தப் பெண்ணிற்கு ஏற்பட்ட நடுக்கத்தில் எழுதி வைத்திருந்ததில், எழுத்துகள் மறைந்து,  எல்லாமே புள்ளிகளாகத் தென்பட்டன.

குறிப்பேட்டை மூடி வைத்துவிட்டு, தன் தொழிற்சாலை அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தார். அங்கு பெண்கள் எப்படியெல்லாம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்,  நேரும் பாலியல் தொந்தரவுகள், நிர்ணயிக்கப்பட்ட 11 மணி நேர வேலைக்குப் பதிலாக, 18 மணி நேரம் வேலை வாங்குவது  போன்ற எல்லாவற்றையும் சொன்னார். இந்தக் கொடுமைகளால் பெண்கள் விபசாரத்திற்குத் தள்ளப்படும் அவலம் குறித்துப் பேசினார். பேசி முடித்ததும், கைதட்டல் விண்ணைப் பிளந்தது. அவர் பேச்சு ஏற்படுத்திய தாக்கம், அன்று இரவே அவர் கைது செய்யப்பட்டதில் தெரிந்தது!!

Post Comment

1 comments:

கோமதி அரசு said...

வெகு நாட்களுக்கு பின் வலைத்தளம் விஜயம்!
அருமையான நூல்கள் விமர்சனம்.

தாய், தந்தைதான் உறவுகளின் இணைப்பு. (அம்மாவின் பங்கு அதிகம்)
அம்மா சொல்லும் வார்த்தை நீர் அடித்து நீர் விலகுமா? என்று சொல்லி உறவு பாலமாய் இருப்பார்கள்.

அவர்களுக்கு பின் ஒற்றுமையாக இருப்பது கொஞ்சம் கஷ்டம் தான். வேறு இரு சகோதர்களுக்கு இடையில் சண்டை என்றால் நடுநிலையாளர்கள் பாடு திண்டாட்டம் தான்.

மகளிர் தின உருவாக காரணம் மற்றும் செய்திகளை சொல்லும் நூல் விமர்சனம் அருமை.

அடிக்கடி இங்கு வாருங்கள், நல்லதை பகிர்ந்து கொள்ள.