Pages

டூ பை த்ரீ - டீயில் மட்டுமில்லை, உணவிலும் வேண்டும்!!




 சமரசம் 1-15 ஜுலை 2012 இதழில் (பக்கம் 36) வெளியான எனது கட்டுரை

அழிவுப் பாதையில் சமுதாயம்!!

ட்புரீதியான விருந்தொன்றிற்கு அழைப்பு வந்திருந்தது. சென்றேன். பிரமித்து விட்டேன். எத்தனைவிதமான பதார்த்தங்கள்!! எவ்வளவுதான் சாப்பிடுவது? ’ஒரு சாண்’ வயிறுதானே, அதுவும் எவ்வளவுதான் தாங்கும்.

மீதமாகும் உணவுகள் வேறு யாருக்கும் வழங்கப்பட வாய்ப்பில்லை, வீணாகத்தான் போகும் என்று பேச்சிலிருந்து அறிந்துகொண்டதில் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. அதற்காக என் வயிற்றையா எலாஸ்டிக் பை போல விரித்து அத்தனையையும் கொட்டிக்கொள்ள முடியும்? என்னால் முடிந்தவரை, வழக்கமான அளவுக்குமேலேயே சாப்பிட்டு விட்டேன். என் எண்ணமெல்லாம் மீதமான வீணாக்கப்பட்ட உணவின்மீதே சுற்றி வந்ததில், பேச்சில் கவனம் இல்லாமல் போனது. இத்தனைக்கும், சந்தித்த நண்பர்கள், விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தவர் என எல்லாருமே முஸ்லிம்கள்தான்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  (புஹாரி 5392,Volume :6 Book :70)

இருவருக்குப் போதுமான உணவைக் கொண்டு மூவரைப் பகிர்ந்து உண்ணச் சொல்லும் இஸ்லாம் மார்க்கத்தில் இருந்துகொண்டுதானா நாம் இவ்வாறு உணவை வீணடிக்கிறோம்?

உணவு, உடை, உடைமைகள் என்று எல்லாவற்றிலும் சிக்கனம் தேவை என்பது குறித்து இஸ்லாம் சொல்லியிருப்பது - ஏன் கடுமையாகக் கண்டித்தேயிருப்பதை -  அறியாதவர்களாகவா இருக்கிறோம்? வீணாக்குமளவுக்கு செல்வம் மிதமிஞ்சிப் போய்விட்டதா அல்லது மறுமையைக் குறித்த அலட்சியம் மிகைத்துவிட்டதா? இஸ்லாமே தெரியாதவராயினும், நம்மைச் சுற்றி நிகழ்பவைகளை அறியாமலா இருக்கிறோம்?

விருந்தோம்பல் என்பதன் அர்த்தமே மாறிவிட்டது இன்று. வீட்டுக்கு வருபவர்களுக்கு நம்மால் முடிந்தவற்றை, நமக்கென சமைப்பதில், சிறிது கூடுதலாகச் சமைத்து, உடனிருத்தி அன்போடு பரிமாறுவதுதான் விருந்தோம்பலாக இருந்துவந்தது. ஆனால், புதிய புதிய பதார்த்தங்களைக் கண்டுபிடித்து, அளவுக்கதிகமாகச் சமைத்து வைப்பதே விருந்தின் இயல்பாகிவிட்டது.  ‘பசித்தவருக்கு உணவளிப்பது’ என்றில்லாமல், பெண்களுக்குத் தம் சமையல் திறமையை வெளிக்காட்டவும், ஆண்களுக்குத் தம் செல்வச் சிறப்பை விளம்பரம் செய்யவும்தான் விருந்து என்றாகிவிட்டது. 

”இன்னும், எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான் கூட்டாளியாவான்)”  4:38

சாதாரண விருந்துகளில் மட்டுமல்ல, கல்யாண விருந்துகளிலும்கூட இப்படித்தான் உணவு வீணடிக்கப்படுகிறது. விதவிதமான உணவு வகைகள், உண்பவரின் கொள்ளவுக்கு மேலாகத் திணிக்கப்படுகிறது.  உணவுத் தட்டில் ஒரு பருக்கைகூட மீதி வைக்காமல், கைவிரல்களிலிருக்கும் உணவுத்துகள்களையும் வீணாக்காமல் உண்ணச் சொலவது இஸ்லாம். ஆனால்,  உண்டதுபோக இன்றைய ”நாகரீகம்” கருதி மீதம் வைக்கப்பட்ட உணவோடே இலை குப்பையில் எறியப்படுகிறது. 

”உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒரு துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம்” என்று  அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நகர்களில், திருமணங்களில் மிஞ்சும் உணவை, அக்கம்பக்கம் உள்ள எளியவர்களுக்கோ அல்லது ஆதரவற்றோர் இல்லங்களுக்கோ விநியோகம் செய்யப்படுவதைவிட, அக்குடும்பத்தினரின் வசதியான உறவுகளுக்கும், சம்பந்திகளுக்கும் கொடுப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படும். இப்படித்தான் இருக்கிறது தமிழக முஸ்லிம்கள் மனப்போக்கு.

மேலும் முன்காலங்களில், கல்யாண விருந்து என்றால், சீமான்-எளியவர் பேதமில்லாமல் ஊருக்கேற்றவாறு ஒரே ‘மெனு’தான் இருந்துவந்தது. ஆனால், வசதிகள் பெருகப் பெருக, கல்யாண விருந்துகளில் விளம்பப்படும் பதார்த்தங்களின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கிறது. ஏன், சில கல்யாண விருந்துகளில், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைப் போல பஃபே சிஸ்டமே வைக்கிறார்கள்!! சமூகத்திற்கு உதாரணமாக இருக்கவேண்டிய செல்வந்தர்கள் படோடோபம் செய்வதைப் பார்த்து, வசதியில்லாதவர்களும் விட்டில்பூச்சிகளாகின்றனர்.

கல்யாணத்திற்கு மட்டுமா விருந்து. இன்று இஸ்லாமிய சமுதாயத்தில், நின்றால் விருந்து, நடந்தால் விருந்து, இருந்தால் விருந்து, வந்தால் விருந்து, போனால் விருந்து என்று எதற்கெடுத்தாலும் - உண்பதற்காகவே படைக்கப்பட்ட சமுதாயமாகி வருகிறோமோ என்று ஐயப்படுமளவுக்கு என்றென்றும் விருந்துமயம்தான்!!

விருந்துகளில் மட்டுமா, பெரும்பாலான இஸ்லாமிய இல்லங்களின் உணவுப் பழக்கங்களை அவதானித்தால், நாம் வாழ்வதற்காக உண்கிறோமா (Eat to live), அல்லது உண்பதற்காகவே உயிர் வாழ்கிறோமா (Live to Eat) என்ற சந்தேகம்தான் வரும்.  இறைவன் நமக்கு அசைவமும் சாப்பிட அனுமதியளித்திருக்கிறான். ஆனால், ஏதோ அசைவம் மட்டுமே சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டதுபோல, தினமும் கறி, கோழி, மீன், முட்டை,மாசி அட அட்லீஸ்ட் கருவாடாவது இருந்தால்தான் உணவு தொண்டைக்குழிக்குள் இறங்கும் என்று சொல்லும்படியல்லவா நிலைமை மாறிவிட்டது!!

பருப்புன்னா வெறுப்பு
ரசம்னா விசம்
சட்னின்னா பட்டினி
பொறியல்னா மறியல்
கறின்னாதான் சரி

கேட்க வேடிக்கையாக இருந்தாலும்,  இன்று இதுதான் வாடிக்கையாக இருக்கிறது. காய்கறிகளும் நமக்கு  அனுமதிக்கப்பட்டவையே என்பதை மறந்துவிட்டோமா அல்லது மட்டன் குழம்பு வைக்கத் தேவையான வெங்காயம், தக்காளி, இஞ்சிபூண்டு, தேங்காய் ஆகியவற்றோடு நம் காய்கறி வட்டத்தைச் சுருக்கிக் கொண்டோமா?

பொய்யாகச் சொல்லவில்லை. உங்களுக்கு எத்தனை காய்கறிகள் தெரியும் என்று சொல்லிப் பாருங்கள். ஐந்து, ஆறு... பலருக்குப் பத்து தாண்டாது நிச்சயம். ஒவ்வொரு காயிலும் ஒவ்வொரு நன்மை உள்ளது. ஆனால், சர்க்கரை நோய் வரும்வரை பாகற்காய் யார் கண்ணிலும் படுவதில்லை; சிறுநீரகக் கல் வரும்வரை வாழைத் தண்டு, வாழைப்பூ ஆகியவை இன்னதென்று தெரிவதுமில்லை. மூலநோய் வரும்வரை கீரைகள் ஆடுமாடுகளின் உணவு என்ற எண்ணத்திலே இருக்கிறோம்!!

அசைவம் சாப்பிடுகிறோமே, அதையாவது முறையாகச் சமைத்துச் சாப்பிடுகிறோமா என்றால் அதுவும் இல்லை!! மட்டன், கோழி எதுவானாலும் அவற்றில் இயற்கையாகவே உள்ள கொழுப்போடு  (நீக்கினால் ருசி போய்விடுமாம்) சேர்த்தே,  எண்ணெய், நெய், தேங்காய், முந்திரி என அபரிமிதமான கொழுப்புகளைக் கலந்து உண்கிறோம். மீன்  நல்ல சத்துக்கள் மிகுந்த உணவுதான். ஆனால் உண்பது எவ்வாறு? மசாலாக்கள் கலந்து தேங்காயில் மிதக்கவிட்டு   குழம்பாக அல்லது எண்ணெயில் மூழ்கடித்துப் பொறித்து உண்ணும்போது அதிலிருக்கும் சத்து செத்துதான் போகும்.

முன்காலத்தில் வயதானவர்களை மட்டுமே தாக்கும் நோயாக இருந்த உயர் இரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும், இன்று உலக சுகாதார மையமே வேகமாகப் பரவிவரும் நோய்களாகக் குறிப்பிடுமளவுக்கு, இளம்வயதினரிடையேயும் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறுகள், வாதம், இதயக் கோளாறுகள் வருவது சாதாரணமாக ஆகிவிட்டது. ஏற்கனவே உலகமயமாக்கல், விலைவாசி, கலாச்சாரச் சீரழிவு, வேலைப்பளு என்று மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு, உணவும் தகுந்தபடி இல்லாதுபோனால் உடல்நலம் பாதிக்கப்படுவது இயல்பே.  மற்றவை நம் கட்டுப்பாட்டில் இல்லையெனும்போது, நம் கட்டுப்பாட்டு எல்லையில் உள்ள உணவிலாவது நாம் பேணுதலோடு நடக்க வேண்டாமா?

“உணவே மருந்து; மருந்தே உணவு” என்ற பழஞ்சொல்லில்தான் எவ்வளவு உண்மை உள்ளது? நம் அன்றாட உணவை உடலுக்கான மருந்தாக நினைத்து, நல்ல உணவு வகைகளை, அவசியமான அளவு மட்டும் உண்டு வந்தால் உடல்நலம் சிறப்பாக இருக்கும். அதுவே, தேவைக்கு  மிஞ்சி ஆசைக்காக உண்ணுவதை வழக்கமாக்கிக் கொண்டால், உடல்நலம் சீர்கெட்டு, பின்னர் அதற்கான மருந்துகளே நம் உணவாகிவிட நேரிடும்.

அரபுநாடுகளில் அசைவம்தான் பெரிதும் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. ஆனால், அரபிகளிடையே வாதம், இதய நோய், கொழுப்பு, இரத்த அழுத்தம் போன்ற விளைவுகள் நம் நாட்டைவிட மிகக் குறைவு. ஏன்? அவர்களின் உணவு முறையில் இதுபோன்ற அதிகப்படி மசாலா, எண்ணெய், நெய், தேங்காய் எதுவும் சேர்க்கப்படுவதில்லை என்பதும் ஒரு முக்கியக் காரணம். மேலும் மாமிசத்தைப் பொறிப்பதைவிட, தீயில் சுட்டோ, அவித்தோதான் உண்பர்.

மைதா என்றொரு உணவுப்பொருளின் தீமைகளை அறிவோமா நாம்?  கோதுமைமாவு தயாரிக்கும்போது கிடைக்கும், எந்தச் சத்துமில்லாத ஒரு சக்கையான இறுதிப் பொருள்தான் அது.  உடல் பருமனுக்கும், பல்வித நோய்களுக்கும் காரணமான அதை வெண்மையாக்குவதற்காகச் சேர்க்கப்படுகின்ற வேதிப்பொருள் ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யபட்டது. ஆனால் அந்த மைதாதான் நம் இல்லங்களில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. பரோட்டா, முர்தபா, ஜாலர் அப்பம், பெட்டி பணியாரம், டோப்பிடஹான், பூரியான், கோழியாப்பம், பின்னல் பணியாரம், சொக்காப்பூ உள்ளிட்ட எண்ணிலடங்கா பலகாரங்கள் இதைக்கொண்டே செய்யப்படுவது முஸ்லிம்கள் தம் உடல்நலத்தைக் காட்டிலும் ருசிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தையே காட்டுகிறது.

இதில் சந்தேகம் இருந்தால், இன்று நல்ல நிலைமையில் உள்ள முஸ்லிம்களைக் கவனித்துப் பாருங்கள். அதில் எத்தனை பேர் தொப்பையில்லாமல் இருக்கிறார்கள்? ஆண், பெண் வித்தியாசமின்றி உடல் பருமனும், தொப்பையும், அதன் பக்கவிளைவுகளான பல நோய்களும் தாக்காத மக்களை விரல்விட்டு எண்ணிவிடும் அளவில்தான் உள்ளனர். ஏனிந்த நிலை? இப்படியே போனால், முஸ்லிம்களின் அடையாளமாகக் கருதப்படும் தாடி, தொப்பி ஆகிவற்றோடு, இனிவருங்காலங்களில் தொப்பையும் இடம்பிடித்துவிடும்போல!!

மனம், நாவு அடக்குதல் என்பது மற்றெல்லோரையும்விட, நோன்பு எனும் அருட்கொடையுடைய முஸ்லிம்களுக்கல்லவா எளிதானதாக இருக்க வேண்டும்? ஆனால், நாம்தான் உணவைப் பிரதானப்படுத்துபவர்களாக இருக்கிறோம். அதிலும் நோன்பு காலங்களில்தான் அளவுகடந்து உணவு வீணாக்கப்படுவதும் நடக்கிறது. 

முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் இறக்கும்வரை, கோதுமை ரொட்டியை தொடர்ந்து  மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை. (சஹீஹ் முஸ்லிம் 5682; அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி))

நபிவழியில் நடக்கவேண்டுமென்று பட்டினி கிடக்கவேண்டிய அவசியமில்லை. தொழுகைக்கு நேரமானாலும், உணவு தயாராக இருப்பின், உணவை முதலில் உண்ணச் சொல்லித் தந்தார்கள் நபி பெருமானார்(ஸல்) அவர்கள். அத்தகைய முக்கியத்துவம் கொண்டது பசி தீர்ப்பது. அப்பேர்ப்பட்ட உணவை எப்படி உண்ணுவது என்றும் நாயகம் (ஸல்) அவர்கள் படிப்பித்துள்ளார்கள்.

”நீங்கள் உண்ணும்போது மூன்றில் ஒரு பகுதி உணவும், மூன்றில் ஒரு பகுதி தண்ணீரும், மீதமுள்ள பகுதியை (மூச்சு விடுவதற்காக) காலியாகவும் விட்டு வையுங்கள்”

இல்லறம், உணவு, உடை, உலக வாழ்வு என்று எதிலானாலும், இஸ்லாம் துறவறத்தை அனுமதிக்கவில்லை. எதிலுமே அளவோடு இருக்கும்படிதான் அறிவுறுத்துகிறது என்பதற்கு மேற்சொன்ன நபிமொழி இன்னொரு சாட்சி. அவசியத்திற்கு மட்டுமே உண்டு, அதையும் பகிர்ந்து உண்ணுவதன் மூலம் இறைவனின் அருளையும், ரிஸ்க் விஸ்தீரணமும் ஒருங்கே பெற்று வளமோடு வாழவே இஸ்லாம் சொல்லித் தருகிறது.

வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (6:141)

உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.  (7:31)


உலகின் ஒரு பக்கம் பட்டினிச் சாவுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், நாம் அளவுக்கு மிஞ்சி உணவின்மீது ஆர்வம் கொண்டு வீண் செலவுகள் செய்வது, இறைவன் நமக்களித்துள்ள அருட்கொடைகளை அவமதிப்பதாகாதா? இறைவன் வீண் விரையம் செய்பவர்களை நேசிப்பதில்லை என்ற இறைவாக்கு நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை மணி. 

Post Comment

3 comments:

கோமதி அரசு said...

//உலகின் ஒரு பக்கம் பட்டினிச் சாவுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், நாம் அளவுக்கு மிஞ்சி உணவின்மீது ஆர்வம் கொண்டு வீண் செலவுகள் செய்வது, இறைவன் நமக்களித்துள்ள அருட்கொடைகளை அவமதிப்பதாகாதா? இறைவன் வீண் விரையம் செய்பவர்களை நேசிப்பதில்லை என்ற இறைவாக்கு நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை மணி.//

அருமையான பதிவு ஹூஸைனம்மா.

அடிக்கடி இப்படி நல்ல பதிவுகளை அளிக்க வலைத்தளம் வாருங்கள்.

கோமதி அரசு said...

//கல்யாணத்திற்கு மட்டுமா விருந்து. இன்று இஸ்லாமிய சமுதாயத்தில், நின்றால் விருந்து, நடந்தால் விருந்து, இருந்தால் விருந்து, வந்தால் விருந்து, போனால் விருந்து என்று எதற்கெடுத்தாலும் - உண்பதற்காகவே படைக்கப்பட்ட சமுதாயமாகி வருகிறோமோ என்று ஐயப்படுமளவுக்கு என்றென்றும் விருந்துமயம்தான்!! //


வெளிநாட்டிலிருந்து ஒரு மாத விடுமுறையில் வந்தவர் இப்படி விருந்து விழாக்களில் கலந்து கொண்டே இருப்பார். திரும்பி பார்ப்பதற்குள் விடுமுறை முடிந்து போய் இருக்கும், அவர் மனைவி ஒரு வேளை நிம்மதியாக கணவருக்கு ஆர அமர சமைத்து கொடுத்து உண்ணுவதை பார்க்க முடியாமல் இருக்கிறது என்று புலம்புவார்கள். (இவர் போகாவிட்டாலும் அவரை பார்க்க ஊரிலிருந்து உறவுகள் வந்து விடுவார்கள்)

பக்கத்து வீட்டு இஸ்லாமிய சகோதரியின் புலம்பல்.





shameeskitchen said...

Arumaiyaana pathivu sagothari...