Pages

பிஸ்கட்டும், பழமும்




அறைக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. தட்டும்போது “யாரோ”வாக இருப்பவர், திறந்தபின்,  அக்கா, அண்ணன், பெரியப்பா, நண்பன் என்று உருவெடுப்பார்கள். யோசித்துக்கொண்டே இருக்கும்போது மகன்தான் போய்க் கதவைத் திறந்தான். ஒரு பெரியவர், திருமண் அணிந்து, கையில் சுருட்டிய மஞ்சள் பையோடு நின்றிருந்தார். நூல்கரை போட்ட வெள்ளை வேஷ்டியும், வெளிர்நீல நிற அரைக்கைச் சட்டையும் பளிச்சென்று இருந்தாலும், அயர்ன் செய்யப்படவில்லை.கையில் சிறு துண்டு பேப்பர் வைத்திருந்தார். அவருக்கு எப்படியும் அறுவத்தஞ்சு, எழுபது வயசாவது இருக்கும்.

இந்த ஆஸ்பத்திரியில் சேர்ந்து இன்றோடு பத்து நாள் ஆகிறது. வாப்பாவும், உம்மாவும்தான் கூட இருக்கிறார்கள். அவர் லீவு கிடைக்காததால் வரவில்லை. புது வேலை வேறு. பெரியவனும் உடனிருந்தான். அப்போ இருந்ததே இவன் ஒருத்தன்தானே, அப்புறம் என்ன ’பெரியவன்’?

மூன்றரை வயது மகனை குடும்ப நண்பர் வீட்டில் விட்டிருந்தாலும், அவ்வப்போது அழைத்து வருவதுண்டு. குளிக்க, துணி துவைக்க என்று உம்மாதான் நண்பர் வீட்டுக்கு போய்விட்டு, வரும்போது கூட்டி வந்தால், ராத்திரி வாப்பா அங்கே படுக்கப் போகும்போது கூட்டிப் போய்விடுவார்கள். எல்லா நாளும் இல்லை. சில நாட்கள் தான்.

பாவம் அவர்களுக்கும் என்னால் சிரமம். அபுதாபியில் கூடப் பழகிய பாவத்துக்குப் பரிசாய் எங்களது தொந்தரவு. மழை, குளிர் என இருக்கக்கூடிய டிசம்பர் மாதத்திலும் தண்ணீர்ப்பஞ்சம் வாட்டும் சென்னை மாநகரம். சென்னையில் இருக்கும் ஒன்றிரண்டு உறவினர்களும் ஒண்டுக் குடித்தனத்தில். இதில் நாம் எங்கே போய் ஒண்டுவது. நண்பர்தான் தனி வீட்டில் இருக்கிறார்.

எல்லாம் சரி, வந்தது யார்? தெரிந்த முகமாகவே இல்லையே. அதுவும் திருமண் அணிந்த பெரியவர் எப்படி இங்கே? ரூம் நம்பர் தெரியாமல் வந்திருப்பாராயிருக்கும். வாப்பாவின் முகத்திலும் அதே கேள்விகள். “வாங்க. யாரைப் பார்க்கணும்?” தயக்கத்தோடே கேட்க, பெரியவரோ, பேப்பரைப் பார்த்து, என்னவரின் பெயரைச் சொல்லி, ”அவரின் மனைவி இருப்பது இந்த ரூம்தானே?” என்று கேட்டார். அப்ப சரியாத்தான் வந்திருக்கார். ஆனா, யாருன்னு தெரியலையே?

அவரே சொன்னார், அபுதாபியில் என்னவரோடு பணிபுரியும் சங்கரன் சாரின் தந்தையாம். சொன்னதும் வாப்பா பரபரப்பாகிவிட்டார். ”வாங்க, உள்ள வாங்க” என்றழைத்து, சேரை இழுத்துப் போட்டு உட்காரச் சொன்னார். எனக்கும் ஆச்சர்யமாயிருந்தது. சங்கரன் சார் எங்களுக்கு நெருங்கிய நண்பர். நண்பர் என்பதைவிட ஒரு அட்வைஸர் என்று சொல்லலாம். வயதில் மூத்தவர்.வாப்பாவுக்கும் சங்கரன் சார் நல்ல பழக்கம்.

அவரின் தந்தை இருப்பது திருச்சி ஸ்ரீரங்கமல்லவா? அங்கிருந்தா இங்கு வந்திருக்கிறார்? உடல்நலமும் சிறிது சீராக இல்லை என்று சொன்னாரே? நான் நினைக்க, நினைக்க வாப்பா அவரிடம் அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். சென்னையில் இருக்கும் இன்னொரு மகனைப் பார்க்க வந்தாராம். அபுதாபியிலிருந்து மகன் அழைத்து, முடிந்தால் போய்ப் பார்த்துவரும்படிச் சொன்னாராம். சென்னையில் என்றாலும், இந்த மருத்துவமனை இருப்பது சற்று ஒதுக்குப் புறமாகத்தான். புதிதாக வருபவர்களுக்குக் கண்டுபிடிப்பது சிரமம்தான். க்டைகளும் ஒன்றும் கிடையாது. ஒவ்வொரு நாளும் சாப்பாடு வாங்குவது சிரமமாத்தான் இருந்தது.

பாவம், அவரும் அலைந்துதான் கண்டுபிடித்தாராம். “தப்பா நெனச்சுக்காதீங்க, இடம் கண்டுபிடிக்கவே சிரமமாகிவிட்டது; பக்கத்துல கடை எதுவும் இல்ல. அதுனால பழவஸ்து எதும் வாங்கிவர முடில. சின்னக் கொழந்த வேற இருக்கான். வெறுங்கையோட வந்துட்டனேன்னு சங்கடமா இருக்கு” என்று சொல்ல, வாப்பாவோ, “நீங்க வயசுல பெரியவங்க. அலைஞ்சு வந்திருக்கீங்க. அதுவே போதும். வாங்கிட்டெல்லாம் வரணும்னு இல்ல” என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் காஃபி சாப்பிடறீங்களா என்று கேட்க, அவர் பரவால்ல, எதுவும் வேண்டாம் என்று சொன்னார். மீண்டும் கேட்கும்போது, அதே பதிலைச் சொல்ல, பிறகு வற்புறுத்தவில்லை. இருவரும் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மகன் பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்துக் கொண்டிருந்தான். சங்கரன் சாரின் மிஸஸ் சொன்னது ஞாபகம் வந்தது. சென்னையிலிருக்கும் மகனும், தாங்களும் சொல்லியும் ஸ்ரீரங்கத்தை விட்டு வர அவர்கள் விருப்பப்படவில்லையாம் .  திடீரென்று மகன், என்ன நினைத்தானோ, அவரிடம் சென்று, ”இந்தாங்க, பிஸ்கட் சாப்பிடுங்க” என்று நீட்டினான். அவரோ, “வேண்டாம்ப்பா, நீ சாப்பிடு” என்று சொல்ல, அவனோ விடாமல், “பரவால்ல, ஒண்ணே ஒண்ணு சாப்பிடுங்க” என்று தொடர்ந்து வற்புறுத்த, அவரும் வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். பின் எங்களுக்கும் பிஸ்கட் தந்தான் மகன்.

பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினார். இதற்குள் மூன்று, நான்கு முறை பழம் வாங்கிவராததற்கு வருத்தம் தெரிவித்திருந்தார். அவர்போன பிறகு, கொஞ்ச நேரம் பேசியிருந்துவிட்டு, தூங்கலாம் என்று நினைத்தபோது, மீண்டும் கதவு தட்டும் சத்தம். சங்கரன் சார் அப்பாதான் இப்பவும்!! வழி எதும் மிஸ்ஸாயிடுச்சோ, இல்ல எதும் விட்டுட்டுப் போயிட்டாரா, என்னன்னு தெரியலயேன்னு பாத்திட்டிருக்கும்போதே, மகன் கையில் அவர் கொண்டுவந்த சில பைகளைக் கொடுத்தார். “சின்னக் குழந்த, எனக்கும் தந்து சாப்பிடுறான். வழில கடை ஒண்ணு பாத்தேன், அதான். வர்றேன்.” போய்விட்டார்.

Post Comment

31 comments:

Chitra said...

wow! அந்த மனிதரின் மேல் நிறைய மரியாதையும் அன்பும் மதிப்பும் வருகிறது. பதிவு, ரொம்ப அருமையாய் இருக்கு.

ராமலக்ஷ்மி said...

நட்பு

அன்பு

பண்பு

எல்லாம் சிறப்பிக்கபட்ட நிகழ்வு.

அருமையான பகிர்வு.

ஜெய்லானி said...

பெரியவர்கள் எப்போதுமே பெரியோர்கள்தான்.(மன அளவில் குழந்தையும்,பெரியவர்களும் ஒன்னுதானே).

Prathap Kumar S. said...

உங்களோட பதிவுலேயே இதுதான்
தி பெஸ்ட்-னு நினைக்கிறேன். ஜெயகாந்தனின் ஒரு நல்ல சிறுகதை போலி்ருந்தது. சல்யூட்.

அம்பிகா said...

பதிவு அருமையா இருக்கு.
இப்படியும் அன்பானவர்கள் இருக்கிறார்கள். ஒரு நல்ல விஷயத்தை பதிவிட்டு இருக்கிறீர்கள்.

Thenammai Lakshmanan said...

மனதுக்கு மதமில்லை ஹுசைனம்மா அருமையான அன்பான பகிர்வு வெல்டன்

Anonymous said...

க்ளாசா இருக்கு கதை. Voted

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஓ.. மறுவடியும் கடைக்கு போயி வாங்கிதந்துட்டு போனாரா? :))) நல்ல மனுஷன்..

நட்புடன் ஜமால் said...

நெகிழ்வாய் இருந்திச்சிங்க

உங்களின் நட்பின் ஆழமும் அதில் விளங்கிற்று.

ஆர்வா said...

இப்படி கூட ஆட்கள் இருப்பாங்களா?

நாஸியா said...

super! super!

ஸாதிகா said...

இப்படியும் சிலர்.நல்ல பகிர்வு.

Unknown said...

அக்கா ரொம்ப அருமையான பாசம் நிறைந்த கதை.. பாராட்டுக்கள்

SUFFIX said...

வயதிற்கே உரிய பக்குவம், அமைதி, பெரியவரின் நடை, எல்லாவற்றையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்.

செ.சரவணக்குமார் said...

உண்மையில் ஒரு சிறுகதை வாசித்த உணர்வு ஏற்பட்டது ஹுஸைனம்மா. மிக நல்ல பகிர்வு.

கண்ணா.. said...

அன்பை பகிரும் சம்பவத்தை நெகிழ்ச்சியான வார்த்தைகளால் சொல்லிட்டீங்க

அருமையான எழுத்து நடை...

கலக்குறீங்க...

( அப்புறம்....எப்போ உங்க புத்தக வெளியீட்டு விழா..)

CS. Mohan Kumar said...

அருமை. சிறு கதையாகவே எழுதலாம்.. நடை அருமை..

Abu Khadijah said...
This comment has been removed by the author.
அப்துல்மாலிக் said...

நிச்சயம் இப்படியும் சில மனிதர்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்

எங்கயாவது போகும்போது என் வாப்பா இப்படிதான் ஏதாவது கிடைப்பதை வாங்கி செல்வார், அதையே நானும் பின்பற்றுகிறேன் என்பதில் சந்தோஷம். நிச்சயம் ஆழ்மனது குத்தும் வெறும்கையோடு சென்றால் அதை நானும் உணர்ந்திருக்கேன்

நல்ல பகிர்வு ஹுஸைனம்மா

Abu Khadijah said...

என்ன ஒரு அருமையான பதிவு,

அன்புத்தோழன் said...

மேட்டருக்கேத்த டைட்டில் ஹுஸைனம்மா.... தற்போது நலம் தானே.... இன்ஷா அல்லா, தாங்கள் என்றும் நல்ல சுகத்துடன் இருக்க துஆ செய்றேன்....

சாந்தி மாரியப்பன் said...

நெகிழ்வான பகிர்வு ஹுஸைனம்மா.பக்குவமான நடை. உடம்பு தேறிவிட்டதா?.

☀நான் ஆதவன்☀ said...

+1 :)

செந்தில் நாதன் Senthil Nathan said...

இப்போ உடம்பு நல்லா இருக்கா?

"என்ன லேபில் போட"..ஹ்ம்ம்..இத்தகைய நட்பை தந்த "கடவுளுக்கு நன்றி"-னு போடுங்க..

இந்த மாதிரி மனிதர்கள் தான் நம் வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறார்கள்..

ஹுஸைனம்மா said...

சித்ரா - நன்றி.

ராமலக்‌ஷ்மியக்கா - நன்றி அக்கா.

ஜெய்லானி - நன்றி.

பிரதாப் - ரொம்ப நன்றிப்பா பாராட்டுக்கு.

அம்பிகா - நன்றிங்க.

தேனக்கா - நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

சின்னம்மிணி - நன்றி - பாராட்டு, ஓட்டு ரெண்டுக்கும். (இனி எல்லா பதிவுக்கும் ஓட்டு போட்டுடணும் சரியாக்கா?)

எல் போர்ட் - கதை புரிஞ்சிடுச்சில்ல, அப்பாடா. நன்றி.

ஜமால் - நன்றி. வேறு வேலைக்கு என்னவர் மாறியபோதும் இன்றும் நட்பு தொடர்கிறது.

கவிதை காதலன் - என்ன இப்படி கேட்டுட்டீங்க? நம்முள்ல முக்காவாசிப்பேரு இப்படித்தான்.

நாஸியா - நன்றி.

ஸாதிகாக்கா - நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

சிநேகிதி - நன்றிங்க. சந்தடி சாக்குல என்னை அக்கான்னுட்டீங்களே.

சரவணக்குமார் - நன்றிங்க.

கண்ணா - நன்றி. என்னது, புத்தக வெளியீட்டு விழாவா? உங்கள மாதிரி யூத் விகடன்ல பதிவு வந்தவங்கள்லாம் இப்படி கேட்டா?

மோகன்குமார் - நன்றிங்க.

அபுஅஃப்ஸர் - நன்றி மாலிக். நம்மில் மிகுதிபேர் இப்படித்தான்.

அதிரை எக்ஸ்பிரஸ் - நன்றி.

ஹுஸைனம்மா said...

அன்புத்தோழன் - நன்றி, பாராட்டுக்கும், பிரார்த்தனைக்கும்.

அமைதிச்சாரல் - நன்றி. நல்லா இருக்கேன் எப்பவும்போல இறையருளால்.

ஆதவன் - நன்றி. அப்போ இதுவரை ஓட்டு போட்டதில்லியா? ஆட்டோ அனுப்பணுமா?

செந்தில்நாதன் - நல்லா இருக்கேங்க. ஆமாம், அர்த்தத்துடன், நம்பிக்கையும் தருகிறார்கள்.

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான ஒரு பகிர்வு.
என்றுமே பெரியவர்கள் பெரிய்வர்கள் தான்.

என் பையனும் அப்படி தான் ஒரு சிப்ஸ் வாங்கி வந்தாலும், யாரோ தெரியாதவர்கள் அருகில் இருந்தாலும், ஓப்பன் செய்ததும் பாக்கெட்டை அப்படியே நீட்டுவான், ஊருக்கு போய் இருந்த போது கூட சிப்ஸ் வாங்கி வீட்டுக்கு வந்து எங்க உம்மா வாப்பா கிட்ட பிரித்தது எடுத்துக்கங்க என்று சொன்னானாம், அவர்கள் ஆச்சரியமா பார்த்தார்கள், அவர்களுக்கெல்லாம் (பெரியவர்கள் என்று) எந்த பிள்ளைகள் போய் சிப்ஸ் கொடுப்பார்கள்,(சிப்ஸ் விஷியத்தில் மட்டும் இல்லை, ரொம்ப நல்ல வளர்த்து இருக்க பிள்ளையை ரொம்ப நல்ல பையன்,) ஒரு மாதம் தங்கி இருந்தான் (அப்ப தான் எங்க உம்மாஅவே)அதில் கண்டு சொன்னார்கள், அப்ப‌ தான் ஒரு தாயா பிள்ளைகளை நல் வழி நடத்தி இருக்கோம் என்று எனக்கும் பெருமையா இருந்ததும், இங்கிருந்த வரை எனக்கு அது சற்றும் தெரியவில்லை.



உங்கள் ஹஸும் அவ்வளவு நல்ல பழகியதாலும், உதவியதாலும் தான் அந்த பெரியவர் சிரமம் பார்க்காமல் தேடி வந்துள்ளார்.

சிநேகிதன் அக்பர் said...

பதிவு அருமை.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

மிகவும் நல்ல பதிவு ஹுஸைனம்மா,

Hats off to that old gentleman and to your son