Pages

இதற்குத்தானே ஆசைப்பட்டாய்....




 
பள்ளியில் படிக்கும்போது வீட்டிற்கு அரிசி வயலில் இருந்து வரும். ஒரு முழு வயலில், ஒரு சிறிய பாகத்தில் மட்டும் நெற்பயிரிட்டு இரண்டு போகம் விளைவிக்கப்படும். வயலின் மீதி இடம்? சும்மா கிடக்கும்!! அம்மாக்கும், மேற்பார்வையிடுபவருக்கும் நடக்கும் விவாதங்கள் (ஏமாற்றப்படுவதால்), அரிசியின் தரம் (தீட்டப்படாத அரிசி என்பதால் நிறம் குறைவு, ஆனால் அதுதான் சத்தானது என்று தெரியாது :-( ), குறைந்த விளைச்சல், அதிகச் செலவு, அதிக விழிப்புணர்வில்லாமை இன்னும் எல்லாம் சேர்ந்து, “காசைக் கொடுத்தா கடையில் அரிசி கிடைக்கும்; மல்லிப்பூ மாதிரி சோறு இருக்கும். அதை விட்டுட்டு இப்படி அல்லாடணுமா?” என்று அம்மாவிடம் சண்டை போடுவதுண்டு. இருக்கும்போது அருமை தெரியவில்லை!! இப்படி எல்லாப் பக்கமும் ஆதரவின்மையால் அம்மாவும் விட்டுவிட்டார்!!

பிறகு, வீட்டில் ரோஜாச் செடிகள் என்ற அளவில் ஆர்வம் இருந்தது. கல்யாணம் என்ற நாற்றுப் பிடுங்கி நடுதலால், அதுவும் விட்டுப் போனது.  அபுதாபி வந்தப் பிறகு, மெல்ல ஆர்வம் தலைதூக்கினாலும், இடமின்மையால், வீட்டுத் தோட்டம் ஒன்று உருவாக்கினேன்.

அடுத்து, என்னவரின் வேலை காரணமாக, ஒரு பாலைவனக் கிராமத்துக்கு குடிபோனோம் அங்கே  என்னைத் தின்ற நேரத்தை நான் தின்னுவதற்காக வீட்டின் முன் இருந்த காலி புறம்போக்கு நிலத்தை வளைத்து (தமிழேண்டா!!), சிறு தோட்டம் உருவாக்கினோம். வேம்பு, அகத்தி, கருவேப்பிலை, முருங்கை, வெண்டை, தக்காளி, லவ் பேர்ட்ஸ், முயல், ஊஞ்சல் என்று அந்த ஐந்து வருடங்களும் ஒரு பொற்காலம் என் வாழ்வில்!!

தோட்டத்துல ஆவியுமா!!

இந்தத் தோட்டம் உருவாக்கும்போது, இந்தப் பாலைவனத்தில்  இதெல்லாம் முளைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. பாலைவனமாக இருந்த அமீரகம், பசுந்தோட்டமாகக் காட்சியளிப்பதின் காரணகர்த்தாவான மறைந்த அதிபர் ஷேக் ஸாயத் அவர்கள் அதிபராயிருந்தபோது பாலைவனத்தில் தோட்டங்கள் உருவாக்க எண்ணி, ஆங்கிலேயர்களைக் கொண்டு மண்ணைப் பரிசோதித்தபோது, “இம்மண்ணில் உயிரேயில்லை; ஒன்றுக்குமே லாயக்கில்லாத மண் இது.” என்று சொன்னார்களாம். அதற்கவர், “இறைவன் பெயரைச் சொல்லி (பிஸ்மில்லாஹ்) வையுங்கள். எல்லாம் வரும்” என்று உத்தரவிட்டாரம். அதுபோலவே பாலைவனம் பசுஞ்சோலையானதாம்!!

அதைப்போலவே நாங்களும் (ரங்ஸ், அவரின் நண்பர்கள் இருவர் மற்றும் நான்) தொடங்கினோம். பெரும்பாலும் நன்றாகவே வந்தது. அப்போதெல்லாம் இயற்கை உரம், விவசாயம் என்பது குறித்து எந்தத் தெளிவும் கிடையாது எனக்கு. அந்தத் தோட்டம் மெல்ல வளர்ந்து வந்தபோது, அந்த வீட்டில் எங்களுக்குமுன் குடியிருந்தவரை என்னவர் சந்திக்க நேர்ந்தது. அவர் எங்கள் தோட்டத்தைக் குறித்துப் பாராட்டிப் பேசும்போது, என்னவர், “இந்த மரமெல்லாம் வைத்தாலும் ஒரு நாள் இந்த ஊரைவிட்டுப் போய்த்தானே ஆகவேண்டும்?” என்ற ரீதியில் ஏதோ சொன்னபோது, அவரின் பதில், “ஏன் அப்படி நினைக்கிறாய்? நீ எங்கு சென்றாலும், இங்குள்ள அந்த மரத்தால் ஒரு சிறு குருவி பயனடைந்தாலும் அது உனக்கு நன்மை தரும்.” என்று சொன்ன அவர் அப்போது இரத்தப் புற்றுநோய்க்குச் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்!!

பின்னர் பெரியவனின் படிப்புக்காக (புடலங்காய்ப் படிப்பு - ரெண்டாங் கிளாஸ்தான்) மீண்டும் நகரத்தில் கான்கிரீட் சிறைவாசம். ஆனாலும், ருசி கண்ட பூனை என்பதால், பால்கனியில் கருவேப்பிலை, துளசி, ஓமவல்லி, செம்பருத்தி, சோற்றுக் கற்றாழை என்று “விரலுக்கேத்த வீக்கத்துடன்” அடைக்கலமானேன். ரியல் எஸ்டேட் விஸ்வரூபமெடுத்து, வீட்டைச் சுற்றி நாலாபுறமும் கட்டிடங்கள் கட்டப்பட ஆரம்பிக்க, கிளம்பிய தூசிதும்பில் செடிகள் வாடி, வதங்கத் துவங்கின. துளசியும், ஓமவல்லியும் கசந்துப் போயின - ஆமாம்!!  தூசிப்படலத்திலிருந்து தப்பிக்க பால்கனியை நிரந்தரமாக மூடவேண்டிவர, செடிகளுடன் ஆசைகளும் மடிந்தன!!

 வேலை நடப்பது அடுத்த வீட்டிலயா, எங்க (முன்னாள்) பால்கனியிலயா?
 

வீடு மாற்றலாமா, வேண்டாமா என்று ஒரு ஆண்டாக யோசித்து, யோசித்து, ஒரு வழியாக “லாம்” என்றபோது, நான் “தோட்டத்தோட வீடு” என்று அடுத்த கல்லைத் தூக்கி ரங்ஸ் தலையில் போட்டேன். மகள் வேலைக்காரனைக் காதலிப்பதைக் கேட்ட சினிமா அப்பா போல நெஞ்சைப் பிடிச்சுட்டு உக்காந்துட்டார் என் ரங்ஸ்!! பின்னே, எங்கள் பட்ஜெட்டில் மூன்று அறை அபார்ட்மெண்ட் வீடே தக்கிமுக்கித்தான் முடியும்; இதில் தனிவீடா? எவ்வளவோ கெஞ்சினார். ம்ஹும்.. “மணந்தால் மகாதேவி; இல்லையேல்...” என்று நானும் உச்சாணிக் கொம்பில் நின்றேன். மீண்டும் காத்திருந்தோம்.. ஒண்ணரை வருஷம்.. ரியல் எஸ்டேட் அடிவாங்கி, வாடகை குறைய ஆரம்பிக்க... என் ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கையும் வர, தேட ஆரம்பித்தோம்.

அப்பத்தான் புரிஞ்சுது, இந்த குளோபல் வார்மிங், சப்புச் சவரெல்லாம் ஏன் வருதுனு!! பாத்த நூத்துக்கணக்கான வீடுகள்ல (எல்லாமே புதுசாக் கட்டினது)  தோட்டம் வைக்கிறதுக்கு இடமே இல்லை!! எண்ணி மூணே விடுகள்லதான் தோட்டத்துக்குன்னு இடம் விட்டிருந்தாங்க. அதுவும் எங்க பட்ஜெட்டுக்கு ஒத்து வராம, ஆசையைக் கைகழுவிவிட வேண்டியதுதானோன்னு ”சரிப்பா, நீங்க பாக்கிற மாப்பிள்ளையையே கட்டிக்கிறேன்”னு கண்ணைத் தொடச்சிக்க ரெடியானா,  ரங்ஸின் இடைவிடாத முயற்சியால் (ஃபோன் தொல்லையால்) இந்த வீட்டு ஓனர் வழிக்கு வந்தார்!!

இப்ப, ஒரு போகம் நெல்லே போடற அளவு இடமிருக்கு; ஆனா நேரமில்லையே; ஆஃபிஸையும், தோட்டத்தையும் எப்படிக் கவனிக்கப் பொறோம்னு (அடுத்த) கவலையோட நின்னா, என் மனசைப் புரிஞ்சிகிட்ட ஆஃபிஸ் மேனெஜ்மெண்ட், இப்ப வருமோ, அப்ப வருமோன்னு ஒன்றரை வருஷமா நான் எதிர்பார்த்துகிட்டிருந்த ”உங்கள் சேவைக்கு நன்றி” கடிதத்தை அனுப்பி வச்சாங்க!! சே, என்னைச் சுத்தி எல்லாருமே நல்லவங்களாவேயிருக்காங்க!!

இந்தப் புது வருஷத்துலருந்து நானும் ஃப்ரீ!! தோட்டத்துல உக்காந்து, ரசிச்சு ஒரு காஃபி குடிக்க ஆசைப்பட்டதெல்லாம் அந்தக் காலம். இப்போ தோட்டத்துல உக்காந்து பிளாக் வாசிக்க/எழுதத்தான் ஆசை!! அது நிறைவேற கொஞ்சம் மாசமாகும். ஏன்னா, இப்ப வெறும் மண்தரைதான் இருக்கு. இப்போ குளிர்காலம்கிறதால, செடிகள் வச்சாலும் சரியா வளர கோடை வரணும். கொளுத்தும் வெயிலில் மனிதர்கள் வாடிவதங்க, செடிகள் பச்சைப் பசேலென்று நிற்கும் அதிசய பூமி இது!! அதுவரை காய்கறிக் கழிவுகளைச் சேகரித்து உரமாக்க வேண்டும்.

ஏழைக்கேத்த எள்ளுருண்டையா, வலை ஊஞ்சல்தான் இப்ப!!

இது போரடிக்கும்போது, இடையிடையே பதிவெழுதலாம்; அதுவும் போரடித்தால், அடுத்த வேலை தேடலாம்!! “நான் ஸ்கூல்ல இருந்து வரும்போது நீ ஏன் வீட்டுல இருக்கமாட்டேங்குற”ன்னு முன்னெல்லாம் கேட்ட சின்னவன், இப்போ, “அப்ப நாங்க டெய்லி ஸ்கூல் போணும்; நீ மட்டும் ஜாலியா வீட்டுல இருப்பியா?”ன்னு சொல்லி அவங்கப்பாவுக்குச் சரியான வாரிசுன்னு நிரூபிக்கிறான். இதுக்காகவே வேலைக்குப் போணும்னு தோணினாலும், காடு (தோட்டம்தான்) வா, வா-ங்குது!!
   
    

Post Comment

59 comments:

ADHI VENKAT said...

அர்த்தமுள்ள பகிர்வு. எனக்கும் இப்படித்தான் தோட்டத்துடன் வீடு இருக்க வேண்டும் என்று ஆசை. நாம் வைத்த செடிகளில் இருந்து பறித்த காய்கறிகளில் சமைத்தா ஆஹா!!!. தில்லி வாழ்வில் பால்கனியில் இப்போதைக்கு துளசி, ஓமவல்லி, கறிவேப்பிலை உள்ளது.

சிநேகிதன் அக்பர் said...

விரைவில் செடிகள் பூத்துகுழுங்க வாழ்த்துகள்.

எனக்கு இதைப்படிச்சவுடன். "வீட்டுக்கு ஒரு மரம் வைப்பது இருக்கட்டும். வீடே இல்லையே என்ன செய்ய " என்று எங்கோ படித்ததுதான் ஞாபகம் வருகிறது.

ஸாதிகா said...

// ”உங்கள் சேவைக்கு நன்றி” கடிதத்தை அனுப்பி வச்சாங்க!! சே, என்னைச் சுத்தி எல்லாருமே நல்லவங்களாவேயிருக்காங்க!! //எற்கனவே நீங்கள் சொன்னது நடந்து விட்டதா?சீக்கிரம் இன்னொரு வேலை தேடிக்குங்க.ஏன்னா,ஆஃபீஸில் இருந்தால்த்தான் அடிக்கடி பதிவெழுதுவீர்கள்.வீட்டிலேயே இருந்தால் தோட்டத்தை கவனிச்சி,காய்கறி விவசாயம் பண்ணி காய் கறி செலவை மிச்சம் பிடித்து விடுவீர்கள்.

ராமலக்ஷ்மி said...

// பால்கனியை நிரந்தரமாக மூடவேண்டிவர, செடிகளுடன் ஆசைகளும் மடிந்தன!!//

நானும் எங்கள் வீட்டின் பிரதான சிட் அவுட்டில் ஏராளமான செடிகள் வைத்திருந்தேன். நேர் எதிரே அதே உயரத்துக்கு கட்டிடமும், மேற்கு வெயில் அத்தனை உகந்ததாக இல்லாமல் செடிகள் செழிக்காமல் போகவும் நிரந்தரமாக மூடி ஸ்டடி கம் ஜிம் ஆகி விட்டது அவ்விடம்:(! இப்போது கிழக்கு வெயில் வரும் வீட்டின் முகப்பில் மட்டும் சில செடிகள்.

உங்க விடா முயற்சியைத் தொடருங்க. இப்போதைக்கு உங்கள் சேவையில் செடிகள் செழிக்கட்டும்:))!

அருமையான பதிவு. ரசித்தேன்:)!

ஸ்ரீராம். said...

தோட்ட அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருந்தன. மாடியில் செடி வளர்த்த அனுபவம் எனக்கும் உண்டு. சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. உபயோகமானதும் கூட.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப ரசிச்சேங்க அதும்..
\\நீங்க பாத்த மாப்பிள்ளையே கட்டிக்கிறேன் // சூப்பர்

உரங்களெல்லாம் தயார் செய்துட்டு நல்ல தோட்டம் உருவாக்கி அதோட போட்டோ போடுங்க இங்கே.. வாழ்த்துக்கள்.

CS. Mohan Kumar said...

Congrats for coming in Top 100 of Thamizh Manam (Me too.. 100 th place.. :))

R. Gopi said...

எங்க பெங்களூர் அபார்ட்மெண்டைச் சுத்தி நிறைய செடி. எங்க கும்பகோணம் வீட்டில் பெரிய தோட்டம் உண்டு. தென்னை, பலா மரம் உண்டு. ஆனா அதை விக்கப் போறோம்:( டவுனில் இருந்து தூரமா இருக்குறதால இந்த முடிவு. டவுனுக்குள்ளே வாங்கும்போது எப்படியும் நெறைய பூத்தொட்டி வைக்க நிறைய இடம் இருக்குற மாதிர் வாங்கணும்

வெங்கட் நாகராஜ் said...

தில்லியில் இந்த கான்க்ரீட் காடுகளில் இழந்தவைதான் ஏராளம். நெய்வேலி போன்ற இடத்தில் பெரிய தோட்டம், தோட்டத்தில் மா, பலா, தென்னை, வேம்பு, நெல்லி, புளி, எலுமிச்சை, பம்ப்ளிமாஸ் போன்ற பலவித மரங்கள், மற்றும் ரோஜா, மல்லி, டிசம்பர், சாமந்தி, போன்ற பலவித மலர்கள் என அனுபவித்துவிட்டு இப்போது பால்கனி பாவையாய் துளசி மட்டுமே!! நல்ல பகிர்வு. பகிர்வுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

இங்கியும் பால்கனித்தோட்டம்தான். சில சமயங்களில் சோலைமாதிரி செழிச்சு பூத்துக்குலுங்கும்.. சிலசமயங்களில் ஏதோ இருக்கேன்னு இருப்பை நிரூபிக்கும் :-)))

அம்பிகா said...

நல்ல பகிர்வு ஹூசைனம்மா!
தோட்டம் விரைவில் செழிக்க வாழ்த்துக்கள்.

Prathap Kumar S. said...

மனுசனுக்கு ஆசை இருக்கலாம் பேராசை கூடாதுங்க.
பாலைவன பூமில இருந்துட்டு தோட்டம் வைக்கனும், தொறவு வைக்கனும்னுட்டு...உங்களுக்கே ஓவரா தெரில....:))

இங்க இருக்குற 90 சதவீத பசுமையும் Artificial greenery தான்.

வேணா ஒண்ணுப் பண்ணலாம் பேரீச்சம்மரம் வளருங்க. பேரீச்சம்பழமாவது பறிச்சு சாப்பிடலாம்..உடம்புக்கு நல்லதுங்க....:)))

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக...
ஆஹா... மிக நல்ல ஒரு இடுகை. மிக நல்ல எண்ணம்.உயர்ந்த நோக்கம்.

ரியோடி ஜெனிரோ மாநாடு, கியோட்டா ஒப்பந்தம், மார்ச்-22 ' உலக நீர்வள நாள்' , ஏபரல்-22'உலக பூமி நாள்' இவற்றால் என்ன பலன்? 'கட்டாய மரம் வளர்ப்பை' இன்னும் இவ்வுலகில் எந்த ஒரு அரசும் தம் குடிமக்களுக்கு சட்டமாக்காத அவல நிலையை எண்ணி எனக்கு கோபம் கோபமாய் வருகிறது.

உலக வெப்பமயமாதலுக்கு தெளிவான தீர்வான 'மரம் வளர்ப்பு'க்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு, பில்லியன் டாலர் செலவழித்து, உறைபனி அளவுக்கு குளிரூட்டப்பட்டதால் அரங்கிற்கு வெளியே கடும் வெப்பத்துடன் பூமியின் பாதுகாப்பிற்கான ஓசோன் லேயரை ஓட்டை போடும் குளோரோ புளோரோ கார்பன்களை டன் கணக்கில் கக்கும் 'நட்சத்திர பிரம்மாண்ட குளுகுளு' அரங்கத்தில் 'உலகவெப்பமயமாதல்' பற்றி மாநாடு போடுவார்களாம் மறை கழண்டவர்கள்... மன்னிக்கவும் ...உலக நாட்டுத்தலைவர்கள்...!

http://pinnoottavaathi.blogspot.com/2010/10/we-want-more-more-green.html

ஹுஸைனம்மா said...

பிரதாப்,

என்னது “செயற்கைப் பசுமையா”? அப்படின்னா, பிளாஸ்டிக் செடிகள்னு சொல்றீங்களா, இல்லை, நிறைய உரம் போடுறாங்கன்னு சொல்றீங்களா? 5 வருஷமா, எந்த செயற்கை/இயற்கை உரங்களும் போடாம, இதே மண்ணில் மரம், செடி வளத்து நான் சாப்பிட்டிருக்கேன். நம்ம ஊர்ல துவர்த்துக் கசக்கிற அகத்தி, இந்த ஊர்ல பறிச்சு சாப்பிடப்போ ஒரு துளி கசப்பு இல்லை. அருமையான டேஸ்ட்னு என் மாமியார் இங்கருந்து அகத்தி விதை கொண்டு போனாங்க.

செய்ற முறையில (நம்பிக்கையோட) செஞ்சா எந்த ஊர்லயும் நல்லாவே வரும் பிரதாப்.

Mahi_Granny said...

'கொளுத்தும் வெயிலில் மனிதர்கள் வாடிவதங்க, செடிகள் பச்சைப் பசேலென்று நிற்கும் அதிசய பூமி இது!! ' நானும் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன். நம்பிக்கையோடு ஆரம்பியுங்கள். பலன் வரும் நிச்சயமாய் .

தூயவனின் அடிமை said...

சகோதரி மொத்தத்தில் ஒரு பசுமை புரட்சி (பெண்) நடத்திருக்கிங்க.

a said...

விரைவில் தோட்டத்து செடிகொடிகளோடு
உறவாடலாம்.

santhanakrishnan said...

இப்ப எங்க ஊர்ல
வேலைக்குப் போவதைவிட
தோட்டத்தில்
காய்கறி பயிரிட்டால்
அதக் லாபமாக்கும்.
( வெங்காயம் கிலோ நூறு ரூபாய்)

பா.ராஜாராம் said...

சீரியசான விஷயங்களை ஜாலியா சொல்லும் போது என்ன அழகா உட்காருது!

\\நீங்க பாத்த மாப்பிள்ளையே கட்டிக்கிறேன் //

:-)) fantastic!

ஆமினா said...

இருக்கும் போது(சென்னையில்) அருமை
தெரியல. இப்ப வெறும் பூச்செடி மட்டும் தான் முடியும். அதுவும் தொட்டிகளில்!!!!!

விரவில் தோட்டம் செழிக்க வாழ்த்துக்கள்

Anonymous said...

அழகான எழுத்து நடை. காலையிலேயே படிச்சேன். புன்னகையுடன் கிளாசுக்கு கிளம்பிட்டேன். இப்போ தான் பின்னூட்டம் போட நேரம் கிடைச்சுது.

Prathap Kumar S. said...

பிளாஸ்டிக் செடி மட்டுமல்ல, வறண்ட நிலத்தை அதிகப்பொருட்செலவில் தற்காலிமாக, செயற்கையாக மண்வளத்தைப்பெருக்கி பசுமையாக காட்சிப்படுத்துவதும் ஒரு வகையான Artificial Greenery தான்.

இதை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும் என்றே சில பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு முற்றுகையிட்டுள்ளது.

நம்மூர் மாதிரி விதையை வச்சுவிட்டா நாலு தலைமுறைகளக்கு அதை கவனிக்கவே வேண்டாம் அந்த மாதிரி மண் இங்கு இல்லை. இங்கு ஒரு மாசம் அதைகவனிக்கலைன்னா பசுமையோட நிலைமை என்ன ஆகும்ஙகறது தெரியும்.

இங்குள்ள பூங்காக்களில் இருக்கும் பசமையான புல்தரை மண்ணில் முளைத்த புற்கள் அல்ல. இதற்கென்றே பிரத்யேகமான ஒரு "Sheet" ல் வளர்க்கப்பட்டு தரையில் விரிக்கப்படுகிறது.

புல்கூட வளராத தரையில் பசுமை புரட்சி நடத்தும் இவர்களின் முயற்சி பாராட்டுக்குறியது. நம்மூரில் மண்வளம் இருந்தும் வளர்ப்பதிற்கு பதிலாக வெட்டுகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

உடனே டென்ஷனாயிடறதா? :)

தராசு said...

ஏயப்பா,

ஒரு செடி வைக்கறதுக்கு இன்னா பில்டப்பூ.....

கோமதி அரசு said...

//இப்போ தோட்டத்துல உக்காந்து பிளாக் வாசிக்க/எழுதத்தான் ஆசை!! அது நிறைவேற கொஞ்சம் மாசமாகும். //

உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்
ஹீஸைனம்மா.

அரபுத்தமிழன் said...

ஹுசைனம்மா, உங்க பதிவுகளிலே 'ரொம்பப் பிடித்தது' இந்தப் பதிவுதான்.
எல்லாம் சரியான அளவில் தூவப்பட்ட அருமையான பதிவு. தமிழ்மணம் 55 க்கு வாழ்த்துக்கள். நூத்துல ஒண்ணுன்னு நிரூபிச்சீட்டீங்க :)

Vidhya Chandrasekaran said...

சீக்கிரமா எங்க வீட்டுத் தோட்டம்ன்னு ஒரு ஃபோட்டோ போஸ்ட் போட வாழ்த்துகள்:)

RAZIN ABDUL RAHMAN said...

சகோ ஹுஸைனம்மா,
தோட்டம் குறித்த எனது உள்ளக்கிடக்கை,தங்களின் பதிவு சொல்வதுபோல் உள்ளது.தங்களின் விடா முயற்சியின் விளைவாக அங்கங்கு விளைச்சலை கண்டுவிட்டீட்கள்..
பட் நான்,,ம்ம்ஹ்ம்..பிகாஸ் பேஸிக்காவே நா ஒரு சோம்பேறி..
சரி அத விடுங்க...

புத்தாண்டும் அதுவுமா தங்களின் ஆர்வத்துக்கு தீனீ பொட்ரமாதிரி ஒரு தளம் உங்கள் பார்வைக்கு...

வீட்டுத்தோட்டம் பற்றி,மற்றும் பல குறிப்புகளுடன் இந்த தளம் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென நினைக்கிறேன்..
http://maravalam.blogspot.com/

அன்புடன்
ரஜின்

அமுதா கிருஷ்ணா said...

nice..

enrenrum16 said...

தோட்டம் வைக்க வசதியுடன் கூடிய வீடு கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.

//”உங்கள் சேவைக்கு நன்றி” கடிதத்தை அனுப்பி வச்சாங்க!!// வேலை போனதை சந்தோஷமா சொல்ற ஒரே ஆளு நீங்கதான்!

//இந்தப் புது வருஷத்துலருந்து நானும் ஃப்ரீ!! // என்ன வாங்கினா ஃப்ரீயா கிடைப்பீங்க? ஹி.ஹி.. ஃப்ரீங்கிற வார்த்தையைக் கண்டாலே ஒரு அல்ப சந்தோஷம்.

பூத்துக் குலுங்கும் உங்க வீட்டுத் தோட்டத்தைப் பற்றி விரைவில் பதிவெழுத வாழ்த்துக்கள்.

எல் கே said...

என் சகோதரி வீட்டில் மாடி செல்லும் படிக்கட்டுகளில் செடிகள் வைத்துள்ளோம்

R.Gopi said...

ஹுஸைனம்மா...

தோட்டக்கலை அனுபவங்கள் படிக்க ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருந்தது...

நாம இருக்கற துபாய்ல பச்சை பசேல்னு செடி, கொடியெல்லாம் வளர்க்கறேன்னு கனவு காணாம, பேரீச்சம்பழ மரம் வைங்க... காய்ச்சப்புறம் சொல்லியனுப்பினா, வண்டியோட வர்றேன்...

ஒரு முக்கியமான விஷயம் - “விருதகிரி” விமர்சனம் இன்னும் உங்க ப்ளாக்ல வரல....

R.Gopi said...

ஹுஸைனம்மா...

தோட்டக்கலை அனுபவங்கள் படிக்க ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருந்தது...

நாம இருக்கற துபாய்ல பச்சை பசேல்னு செடி, கொடியெல்லாம் வளர்க்கறேன்னு கனவு காணாம, பேரீச்சம்பழ மரம் வைங்க... காய்ச்சப்புறம் சொல்லியனுப்பினா, வண்டியோட வர்றேன்...

ஒரு முக்கியமான விஷயம் - “விருதகிரி” விமர்சனம் இன்னும் உங்க ப்ளாக்ல வரல....

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் வேலை போனதுக்கு :))

இனி அபிதாபி வந்தா தோட்டத்துல சேர் எல்லாம் போட்டு உட்கார வச்சு காஃபி கொடுப்பீங்களா? இதே மாதிரி செட்டப் இருக்குற ஹோட்டல்ல (மெரீனா வாக் மாதிரி) எல்லாம் பயங்கர விலை! ஹி ஹி உங்க புண்ணியத்துல அபிதாபியில ஃப்ரீயா குடிச்சுக்கிறேன் :)

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் வேலை போனதுக்கு :))

இனி அபிதாபி வந்தா தோட்டத்துல சேர் எல்லாம் போட்டு உட்கார வச்சு காஃபி கொடுப்பீங்களா? இதே மாதிரி செட்டப் இருக்குற ஹோட்டல்ல (மெரீனா வாக் மாதிரி) எல்லாம் பயங்கர விலை! ஹி ஹி உங்க புண்ணியத்துல அபிதாபியில ஃப்ரீயா குடிச்சுக்கிறேன் :)

இல்யாஸ்.மு said...

இயற்கை விவசாயம், பாரதியார் மாதிரி காணி நிலம் வேண்டும் என்று கனவு காண்பதெல்லாம் வெறும் கனவாக இருப்பதுதான் உங்களுக்கு நல்லது. விவசாயம் என்கிற ஆசை கான்க்ரீட் சுவர்களுக்கு மத்தியில் அமர்ந்துகொண்டு யோசிக்கையில் பசுமையாகத்தான் தெரியும். மண் சார்ந்த வாழ்கையை விட்டு நாமெல்லாம் ரொம்ப தூரம் வந்தாச்சு. வேறு துறைகளில் போதிய வருமானமும் பண இருப்பும் இருக்கிறவர்களுக்கு மட்டுமே இன்றைய விவசாயம் சாத்தியம்

ஒரு டாக்டர், என்ஜினியர், விஞ்ஞானி, இவர்களுக்கு இருக்கும் சமூக மரியாதையும், வாழ்க்கை வளமும் மண்ணில் ரத்தம் சிந்தும் விவசாயிக்கு இருப்பதில்லை. டாக்டர் மகன் டாக்டர் ஆகா ஆசைப்படுவது போல எந்த விவசாயியும் தன மகன் விவசாயம் படிப்பதை விரும்புவதில்லை. அவனாவது படித்து விவசாயத்தினால் வந்த கடனை அடிப்பானோ என்பதே விவசாயியின் கவலையாகிவிடுகிறது.

உங்களுக்கு இரண்டு வழி இருக்கிறது. ஒன்று, விவசாயம் என் பொழுதுபோக்கு. இரண்டாவது விவசாயம் என்கிற வருமானம் எதிர்நோக்காத சேவை. இது ரெண்டுமே சரி வராவிட்டால் மீண்டும் வேலைக்கு செல்வதே நல்லது.

Jaleela Kamal said...

படிக்க படிகக் ரசிக்கும் படியா எழுதியிருக்கீங்க்,

\\நீங்க பாத்த மாப்பிள்ளையே கட்டிக்கிறேன் //
ஹ்ஹா
எனக்கும் ரொம்ப ஆசை ஹுஸைனாமமா,
தோட்டத்தோடு வீடு, ஆனால் இங்குள்ள வாழ்க்கை முறைக்கு அதேல்லாம் முடியாது., அதேல்லாம் ஏழாம் வகுப்போடு முடிந்துவிட்டது.

Jaleela Kamal said...

வேலை போனா என்னா கொஞ்சம் ரெஸ் எடுத்து கொள்ளுங்கள், பிறகுதேடுங்கள் கிடைக்கும் ஆனால் வீட்டுக்கு எதிரில் கிடைப்பது தான் சிரமம் இல்லையா?

Thenammai Lakshmanan said...

பால்கனியில் பனை மரம் சைஸுக்கு க்ரோட்டன்ஸ் வளர்க்கும் பச்சைத் தமிழச்சி ஹுஸைனம்மா வாழ்க..:))

எனக்கும் தோட்டம் பிடிக்கும்பா.. ஆனா பால்கனியில் எல்லாம் போட முயன்றதில்லை..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//மகள் வேலைக்காரனைக் காதலிப்பதைக் கேட்ட சினிமா அப்பா போல நெஞ்சைப் பிடிச்சுட்டு உக்காந்துட்டார் என் ரங்ஸ்//
ச்சே... உங்களுக்கு தான்க்கா இப்படி எல்லாம் தோணும்...ஹா ஹா ஹா ..சூப்பர்...

// ”உங்கள் சேவைக்கு நன்றி” கடிதத்தை அனுப்பி வச்சாங்க//
அடப்பாவமே... அப்போ இனி எங்களையும் செடி கொடிகளையும் காப்பாத்தவே முடியாதா... ஜஸ்ட் கிட்டிங்...சாரி அக்கா...

//“அப்ப நாங்க டெய்லி ஸ்கூல் போணும்; நீ மட்டும் ஜாலியா வீட்டுல இருப்பியா?”ன்னு சொல்லி அவங்கப்பாவுக்குச் சரியான வாரிசுன்னு நிரூபிக்கிறான்//
ஹா ஹா ஹா...சூப்பர் சுட்டி தான் குட்டி பையன்... நீங்க தோட்டம் போடுங்க அக்கா...ஆவறது ஆகட்டும்... எங்கள் ஆதரவு உங்களுக்கே... Expecting more posts from you

Vijiskitchencreations said...

நல்ல பதிவு. எனக்கு தோட்டம், அதிலும் நம்ம கையால விதை போட்டு செடி வளர்ந்து காயானும் சரி பூவானும் சரி அதோட சுகமே தனி.
இங்கும் அதே கதை தான். பெரிய வீடு ஆனல் 3 மாதம் தான் வெயில் அதற்க்குள் என்ன பயிரிட்டு கிடைக்குமோ அது தான்.
எங்க வீட்டில் உள்ளே நான் வாழை, மனி ப்ளாண்ட் வைத்திருக்கென். இப்ப 4 குட்டி போட்டுஇருகு. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
ஆல் தி பெஸ்ட் விரைவில் உங்க ஆசை நிறைவேறட்டும்.

Anisha Yunus said...

எல்லாம் சரிதான் பின்னே செடி வளரலை காய் கனியலைன்னு சொல்லி அரேபிய வேளாண்பல்கலைக்கழகத்துக்கும் கடிதம் எழுதாம இருந்தால் நல்லது :)) ஹி ஹி.. உங்க தனிமனித சேவையை என்ன சொல்லி பாராட்டலாம்னு யோசிக்கறேன். அடுத்த சி என் என் ஹீரோ லி்ஸ்ட்டுல சேர்ந்துடுங்க :))


http://www.muslimgrower.com/discussionforum/index.php
இன்ஷா அல்லாஹ் உபயோகமான தளம். கலக்குங்க :))

Butter_cutter said...

வழக்கம்போல் அருமை

vanathy said...

எனக்கும் ஆசை இருக்கு. ஆனா, ஆசை எல்லாம் இப்ப மூட்டை கட்டி வைச்சாச்சு. தோட்டம் இருக்கு. கூடவே முயல்களும் அதிகம் நாங்கள் இருக்கும் பக்கம். பயிரிடும் காய்கறி விதைகள், செடிகள் எதையும் விட்டு வைக்காதுங்க. அப்படியே சாப்பிட்டு, ஏப்பம் தான்.

ஹுஸைனம்மா said...

வாங்க தமிழ் உலகம். நன்றி.

கோவை2தில்லி - பால்கனியானாலும் செடிகள் வைக்கும் திருப்தி தனிதான் இல்லையா?

அக்பர் - வாங்க; //வீடே இல்லையே என்ன செய்ய// வீடிருந்தாலும், இல்லைன்னாலும் மரம் நிறைய வைக்கலாமே? நிழல் தரும். கனி தரும். நாங்களும் இப்ப வாடகை வீடுதான்.

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - நீங்க உங்க ஆப்பீஸ் பிராஞ்ச் இங்க தொடங்குங்கக்கா இங்க. நம்ம ஆஃபீஸ்னாதான் ஃபிரீயா பதிவெழுத முடியும்!! :-))

ராமலக்‌ஷ்மிக்கா - நீங்களும் ஸேம் பிளட்டா? ஜிம் ரெகுலரா போறீங்களா? :-)))

முத்துலெட்சுமிக்கா - ஆமா, நாங்களும் இனி தோட்டத்து இற்றைகள் எழுதுவோம்ல!! :-))

மோகன் - தகவலுக்கு நன்றிங்க. அட, நீங்க நூத்துக்கு நூறா? கங்கிராட்ஸ்!!

ஹுஸைனம்மா said...

கோபி - பூர்வீக வீட்டை விக்கிறது ரொம்ப வருத்தமானது. ஆனா, தவிர்க்கவும் முடியறதில்லை. வாங்கப் போற வீடும் உங்க மனசுக்கெத்த மாதிரி இருக்க வாழ்த்துகள்.

வெங்கட் சார் - வாங்க. வேலை காரணமா நாம எல்லாருமே மிஸ் பண்ணதுல, இந்தச் செடி கொடிகளும் கூடத்தான் இல்லையா?

அமைதிச்சாரல் - வாங்கப்பா. அதேதான், அப்பப்போ இருப்பை நிரூபிக்க நாமும் இப்படித்தான் இருக்க வேண்டியிருக்கு.

அம்பிகா - நன்றி!!

ஹுஸைனம்மா said...

பிரதாப் - டென்ஷன்லாம் இல்லை; இங்கேயும் பலவகை மரங்கள் பல தலைமுறையா தானேதான் வளந்திருக்கு. தானே வளர்றதையும், தடியால் அடிச்சு வளக்குற லேண்ட்ஸ்கேப்பிங் கம்பெனிகள் பற்றிச் சொல்றீங்களா? அது உண்மைதான். ஆனா அதெல்லாம் 5 ஸ்டார் ஹோட்டல்கள், பெரிய பன்னாட்டு நிறுவனங்கள்லதான். நான் போற ஃபிரீ எண்ட்ரன்ஸ் பார்க்குகளில் எல்லாமே இயற்கையாத்தான் இருக்கும். (எத்தனை செடிகளைப் பிடுங்கி வந்து நட்டிருக்கேன்?)

ஆனா, என் (முந்தைய) தோட்டத்தில எல்லாமே (புல்தரைகூட) இயற்கையாத்தான் வளந்துது. மண்கூட எதுவும் மாத்தலை.

அதோட, அமீரகத்தைப் பசுமையாக்கும் முயற்சிகளை நிச்சயம் பாராட்ட வேண்டும். இயற்கையோ, செயற்கையோ முடியாதென்றதை முயன்று முடித்திருக்கிறார்கள். இப்போ “ஹைட்ரோஃபோனிக்ஸ்” முறைப்படி farming செய்வதில் வெற்றி பெற்றிருக்கீறார்கள்.

ஹுஸைனம்மா said...

ஆஷிக் - வாங்க; நன்றி. நம்மால் முடிவதைச் செய்வது நல்லதுதானே. நன்றிங்க.

மஹி-கிரானி - வாங்க மேடம். ரொம்ப நன்றி வாழ்த்துக்கு. அமீரகம் வருவதுண்டா நீங்க?

தூயவன் - அட, புரட்சிலாம் இல்லைங்க. இங்க நிறைய பேர் செய்றதுதான். நன்றி.

யோகேஷ் - ஆமாங்க, அங்க நின்னு ஒவ்வொரு இலையா முளைக்க்றதைப் பாக்கிறதே ஒரு சந்தோஷம்.

ஹுஸைனம்மா said...

சந்தானகிருஷ்ணன் - ஆமாங்க, அதான் லாபம். ஆனா, எப்பவும் ஒரே விலை கிடைக்காதே? அதான் கஷ்டம்.

பா.ரா. - அட, இது யாரு? வாங்க, வாங்க. ரொம்ப சந்தோஷமாருக்கு. ரொம்ப நன்றியும்கூட பாராட்டுக்கு.

ஆமினா - ஆமாப்பா, இருக்கும்போது தெரியுறதில்லை. நானும் அப்படித்தான்.

அனாமிகா - வாங்கப்பா. ரொம்ப நன்றி. மகிழ்ச்சி.

ஹுஸைனம்மா said...

தராசு - ஹி..ஹி.. செடி வைக்கிறதெல்லாம் இப்ப ஃபேஷனாக்கும் தெரியுமா? பில்டப்பு கொடுக்கணுமில்ல?

கோமதிக்கா - நன்றி!

அரபுத்தமிழன் - ரொம்ப நன்றி பாராட்டுக்கும், வாழ்த்துக்கும்!!

வித்யா - செடி வளந்தாத்தானே தோட்டம் வரும். வளரட்டும், படம் போட்டுடலாம்!!

ஹுஸைனம்மா said...

ரஜின் - எல்லாருக்குமே இந்த ஆசை அடிமனசுல இருக்கு, இல்லையா? தளத்தின் சுட்டிக்கு நன்றி. முன்பே அறிந்ததுதான் என்றாலும்.

அமுதா - நன்றி. ரொம்ப சுருக்கமாத்தான் பேசுவீங்க போல!! :-))

என்றென்றும் 16 - வேலை போயாச்சு, அதையும் ஒரு கெத்தா சொல்லணும்ல. கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல ரேஞ்சுக்கு..

எங்க ரங்ஸ்ட்ட கேட்டேன், எதுவுமே நீங்க வாங்காமலே என்னை ஃப்ரீயா அனுப்பி வைக்கிறாராம்; திருப்பி அனுப்பக்கூடாதுன்ற ஒரே ஒரு கண்டிஷந்தானாம்!! ரெடியா?

எல்.கே. - அட, மாடிப்படியைக் கூட விடாத அளவு ஆர்வமா? வாழ்த்துகள் அக்காவுக்கு.

ஹுஸைனம்மா said...

ஆர். கோபி - நீங்க நம்ம பிரதாப்புக்குச் சொந்தமா? ரெண்டு பேரும் ஸேம் பிளட்டாயிருக்கீங்க? வண்டியோட வாங்க, வெண்டைக்காய் தருவேன்.

விருதகிரியா? அவ்வ்வ்வ்வ்வ்... ஏன், ஏன்... ? (அப்படின்னா, எந்திரனுக்கு விருதகிரி பரவால்லைங்கிறீங்களா?)

ஆதவா - வேலை போனதுக்கு வாழ்த்துகளா? எனிவே தேங்க்ஸ்!! கண்டிப்பா, தோட்டத்துல பார்பெக்யூவே செஞ்சு கொடுக்கிறேன் உங்களுக்கு. காசெல்லாம் வேணாம்; ஒன்லி க்ளீனிங்தான் செய்யணும்!! :-)))))

ஹுஸைனம்மா said...

இல்யாஸ் - நீங்க சொல்றது சரிதான். வருமானத்துக்கு வேறு வேலை பார்த்துக் கொண்டு, விவசாயத்தைப் பொழுதுபோக்காக அல்லது சேவையாகச் செய்வதுதான் சாத்தியாமாயிருக்கு இப்போ. ஆனாலும், வசதிப்படுமெனில் அப்படியாவது செய்து விவசாயத்தை வளர்க்க வேண்டும் என்பதே என் எண்ணம்.

இவ்வளவு பேசும் நானும் என் மகனை விவசாயக் கல்லூரிக்குப் படிக்க அனுப்புவேனா (அவன் விரும்பினாலொழிய) என்பது சந்தேகமே. எனினும், முயற்சி செய்வது தவறில்லையே இல்யாஸ்?

ஹுஸைனம்மா said...

ஜலீலாக்கா - நன்றிக்கா. வீட்டுக்கு எதிரே வேலையா? அப்படின்னா பெட்டிக்கடைதான் வைக்கணும்!! :-)))

தேனக்கா - ‘பச்சைத் தமிழச்சி’ பட்டம் நல்லாருக்கே? ரொம்ப தேங்ஸ்!!

அப்பாவி தங்ஸ் - உங்க ஆதரவு இருக்க வரை, உங்களையெல்லாம் விடுறதா இல்லை!! நன்றிப்பா.

ஹுஸைனம்மா said...

விஜி - வீட்டுக்குள்ளே வாழையா? நல்லா வருதா? குலை தள்ளுச்சா? ஆச்சர்யமாருக்கு.

அன்னு - //அரேபிய வேளாண்பல்கலைக்கழகத்துக்கும் கடிதம்// ஹி.. ஹி.. நல்ல ஐடியாவா இருக்கே? பாராட்டுதானே, என்ன சொன்னாலும் ஓகே!! (நோ பேட் வேர்ட்ஸ்) :-)))

சிட்டி பாபு - வாங்க. நன்றிங்க.

வானதி - ஆமாங்க, என் தங்கை வீட்டிலயும் எலித் தொல்லையால செடி வளர்ற வரை ராத்திரியில மூடியே வச்சிருப்பா செடியை. வேலியையும் தாண்டி உள்ளே வந்துடுமா முயல்கள்?

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//எற்கனவே நீங்கள் சொன்னது நடந்து விட்டதா?சீக்கிரம் இன்னொரு வேலை தேடிக்குங்க.ஏன்னா,ஆஃபீஸில் இருந்தால்த்தான் அடிக்கடி பதிவெழுதுவீர்கள்.வீட்டிலேயே இருந்தால் தோட்டத்தை கவனிச்சி,காய்கறி விவசாயம் பண்ணி காய் கறி செலவை மிச்சம் பிடித்து விடுவீர்கள்//

ரிப்பிட்டு.

மிகவும் நல்ல கருத்துக்கள் சகோதரி. இப்ப தான் வேலை இல்லையே அடிக்கடி பதிவெழுதுங்க

R.Gopi said...

//விருதகிரியா? அவ்வ்வ்வ்வ்வ்... ஏன், ஏன்... ? (அப்படின்னா, எந்திரனுக்கு விருதகிரி பரவால்லைங்கிறீங்களா?)//

******

ஆஹா...ஹுஸைனம்மா கிட்ட உஷாரா இருங்க, இல்லேன்னா, தாக்குதல் பலமா இருக்கும்னு ஜலீலா சொன்னாங்க..

உங்களோட இந்த கமெண்ட் பார்த்தா அது சரிதான்னு தோணுது!!

ரிஷபன் said...

தோட்ட கனவு எனக்கும்.. ஆனால் பன்மாடிக் குடியிருப்பில் அந்த ஆசைக்கு வழி இல்லாமல் போனது.. கஷ்டத்தை சுவாரசியமாய் சொல்லி விட்டீர்கள் .

வல்லிசிம்ஹன் said...

அருமையான பசுமையான் பதிவு ஹுசைனம்மா. உங்கள் மனம் போல வாழ்வு நலம் பெறட்டும். எங்கள் மகன் வீட்டுப் பால்கனியிலும் இவர் வைத்த மல்லி,இன்னும் கருவேப்பிலை எல்லாம் நன்றாக வளருகின்றன.
மனம் வைத்தால் நடத்திக்காட்ட ஆண்டவன் உதவுவார். தோட்டம் செழிக்க இல்லம் செழிக்கும்.வாழ்த்துகள் மா.