எனக்கு கூடப்பொறந்த அண்ணந்தம்பி இல்லைங்கிறதும், பெண்குழந்தை இல்லங்கிறதும் பதிவுலகுக்கு நல்லாவே தெரிஞ்ச விஷயந்தான். எத்தினி தடவ புலம்பிருக்கேன்? யாராலயாவது மறக்க முடியுமா என்ன?
நாங்க நாலு பேரும் பொண்ணுங்கங்கிறதுனால, வீடு ரொம்ப அமைதியா இருக்கும்னெல்லாம் கற்பனை பண்ணிக்காதீங்க. அப்பப்ப கொஞ்சம் கலவரம் நடக்கும்னாலும், அது அம்மாவோட ஒரே ஆர்டர்லயே ஊரடங்கு உத்தரவு பிறப்பிச்ச மாதிரி அமைதியாகிடும். சொந்தக்காரங்க வீட்டில பையங்க இருக்காங்கன்னாலும், அங்கயும் அதிகம் சேதாரங்கள் இருந்தமாதிரி பாத்த ஞாபகமில்ல. ஏன்னா, அப்பல்லாம் பசங்க என்னிக்கு வீடு தங்கிருக்காங்க, இன்னிக்கு மாதிரி? சாப்பிடவும், தூங்கவும்தானே வீட்டுக்கு வருவாங்க. அதனால, அந்த ஆபத்துகள் அப்ப புரியலை!!
அதனால, முதல் குழந்தை ஆசைப்பட்டபடியே பையனாப் பிறந்ததும் ரொம்ப சந்தோஷம். எஸ், நான்தான் ஆசைப்பட்டேன். ஏனா? அதான் சொன்னேனே, அதன் விளைவுகள் அப்பத் தெரியாதுன்னு!!
என்னது, பெரிசா பெண்ணுரிமை பேசிட்டு, பையனுக்கு ஆசைப்பட்டேன்னு கேக்கிறீங்களா? ஒரு காரணம், எங்க வீட்டில எல்லாம் பொண்ணுங்கிறதுனால, பையன்னா ஏதோ புண்ணியம் பண்ணவங்களுக்குத்தான் பிறக்கும் அப்படிங்கிற ரேஞ்சில அப்ப சிலர் நெனச்சிகிட்டு இருந்தாங்க. எனக்கும் பையன் பிறந்தா, எனக்கே பிறந்துடுச்சு, அதனால அதுக்குனு புண்ணியமெல்லாம் பண்ணத் தேவையில்லைன்னு புரிஞ்சுக்கலாமே. அதோட, பத்து பட்டுச்சேலை இருந்தாலும், நம்மகிட்ட இல்லாத ஒரு காட்டன் சேலைக்குத்தானே ஆசைப்படுவோம். அதப்போலவும்னு வச்சிக்கோங்களேன்.
சரி, முடிஞ்ச கதையை விடுங்க. முதல் பையனுக்கு ரொம்பவே அதிகமா ஆண்டவன்கிட்ட வேண்டிக்கிட்டேன்போல, அதான் ரெண்டாவதும் பையன்னு நினைச்சுகிட்டிருந்தேன். ஆனா, ரொம்ப பெண்ணுரிமை, பெண் சுதந்திரம்னு பேசினதோட விளைவோ (தண்டனையோ)ன்னு இப்பத் தோணுது.
ஆனாலும், அவ்வளவு சீக்கிரம் விட்டுக்கொடுத்திடுவோமா நாம? பொண்ணு இல்லாத பழியை என்னவர் தலையிலையே தூக்கிப் போட்டுட்டேன்ல!! “எங்க வாப்பா பொறுப்பில ஏழு பொண்ணைக் (3 தங்கைகள் + 4 மகள்கள்) கொடுத்த ஆண்டவன், உங்க பொறுப்பில ஒரு மகளையாவது, ஏன் அட்லீஸ்ட் உங்களுக்கு ஒரு தங்கச்சியாவது கொடுத்தானா?”னு சொல்லி பேசமுடியாம ஆக்கிட்டோம்ல. (இருந்தாலும், ரெண்டும் பையனா இருக்கதிலேயும் ஒரு நன்மை இருக்குது. அதை இங்க எழுதிருக்கேன் பாருங்க)
ஆனா, இந்த பருப்பெல்லாம் பையங்ககிட்ட வேகத்தான் கஷ்டமா இருக்குது. சின்னவனுக்கு, இப்பத்தான் பள்ளியில், Islamic Studies-ல், Creation of humans சொல்லிக் கொடுத்திருக்காங்க. அதைப் பத்தி பேசும்போது, அவன் என்னிடம், “மனுஷன எப்படி படைச்சான்னு உனக்குத் தெரியுமா?”ன்னு கேட்டான். நாமதான் சந்தர்ப்பம் கிடைச்சா விடமாட்டம்ல. உடனே, “ஆம்பளைங்கள களிமண்ணுல இருந்து படைச்சான். ஆனா, பெண்ணை ஒரு உயிருலிருந்து படைச்சான். நீங்கள்லாம் ஆஃப்டர்-ஆல் களிமண்லருந்து வந்தவங்க. ஆனா, நான் ஒரு living beingலருந்து வந்தவ”னு பெருமையாச் சொன்னேன்.
உடனே, பெரியவன் ஓடி வந்து, ”அதென்ன லிவிங்-திங்? ஆம்பளையிலிருந்துதானே பெண்ணைப் படைச்சான்?”
”அதேதான். ஆனா ஏன் ஆண்னு பாக்கிற? அதுவே பெண்ணை முதல்ல படைச்சு, பெண்ணிலிருந்து ஆணைப் படைக்கத் தெரியாதா ஆண்டவனுக்கு? அல்லது, ஆணைப் படைச்ச அதே களிமண்ணிலிருந்து பெண்ணைப் படைக்கத் தெரியாதா அவனுக்கு? பெண் பல சிறப்புகள், பெருமைகள் பெற்றவள் என்பதை உணர்த்தும் விதமாகத்தான் அவளை ஒரு உயிரிலிருந்து படைச்சான்”.
”இருந்தாலும், ஆண் தானே முதல் படைப்பு?”
சரி, அவன் வழியிலேயே போய்ப் புரியவைப்போம்னு, “டேய், எப்பவுமே முதல்ல செஞ்சு பாக்கிறது ஒரு டிரையல் மாதிரி. இப்ப பேனா எழுதுதான்னு பாக்க நீ முதல்ல எதாவது எழுதிப் பாப்பேல்லியா? ஏன், நான் இப்ப தோசை அல்லது ஆப்பம் சுடுறேன்னா, முதல்ல ஊத்துற ஆப்பம் சரியா வராது. அடுத்ததுதான் சரியா வரும். அதுமாதிரி, அதிகப் பொறுப்புள்ள இனமான பெண்ணைப் படைப்பதுக்கு முன்னால, ஆம்பளையைப் படைச்சு டிரையல் பாத்தமாதிரின்னு வையேன்?”
பதிலே வரலை. ஹா, ஹா, நம்மகிட்ட பேசி ஜெயிக்க முடியுமான்னு பெருமையா, “என்னடா, சத்தத்தையே காணோம்?”
”ம்ம்ம்... ஆண்டவனோட படைப்புகளிலேயே அற்புதப்படைப்பு மனித இனம். அதை நீ சுடற தோசையோடயும், ஆப்பத்தோடயும் ஒப்பிட்டுச் சொல்றியே? அதனாலத்தான் எல்லாம் அறிஞ்ச ஆண்டவன் பெண்ணைக் களிமண்ணுலருந்து படைக்கலை!!”
அவ்வ்வ்வ்... இப்பவும் நானாத்தானா....
|
Tweet | |||