Pages

அப்படி நான் என்ன சொல்லிட்டேன்?





“என்னது, இப்பவா?”

“என்ன சொல்றே நீ? யோசிச்சுதான் பேசுறியா?”

“பிள்ளைக? பாவம் அதுக!!”

“நல்லா யோசிச்சுக்கம்மா. நல்ல விஷயம்தான் சொல்றே. ஆனாலும் இப்பவான்னுதான் வருத்தமா இருக்கு”

“ஏய், அறிவிருக்காடி உனக்கு? நீயெல்லாம் ஒரு அம்மாவா?” - இது தோழி.

”இப்ப என்ன அவசரம்? எப்பவும்போல ஜூலை, ஆகஸ்ட்னு பாக்கலாம்ல?”

இதெல்லாம் இந்தியாவில் உள்ள உறவுகள், நட்புகளிடமிருந்து கிடைத்த கமெண்ட்ஸ். அப்படி நான் என்ன சொல்லிட்டேன் இப்ப? ”இன்ஷா அல்லாஹ் மார்ச்சில் இந்தியா வரலாம் என நினைக்கிறோம்” - என்றதற்கான பதில்கள்தான்!! அவ்வ்வ்..... எல்லாம் இந்த கரெண்ட் கட் படுத்தும் பாடு!!


என்னாதிது, ஆளாளுக்கு இப்பிடி திகிலைக் கிளப்புறாய்ங்களேன்னு யோசிச்சுகிட்டே, துபாயில் இருக்கும் நண்பர் ஒருவரை, ஆலோசனை கேட்கலாம் என அழைத்தேன். அவர் வருடாவருடம் மார்ச், ஏப்ரலில்தான் இந்தியா செல்வார். அவர் அனுபவத்தைக் கொண்டு டிப்ஸ் கேட்கலாம் என்று நினைத்து அழைத்தேன். அவரிடம் ஊருக்கு எப்பண்ணே போறீங்க என்றதுதான் தாமதம். புலம்பித் தள்ளிட்டார், இந்த வருஷம் ஊருக்குப் போகலையாம். ஏன்? போன வருஷம் மார்ச்ல ஊருக்குப் போயிருந்தப்போ, வாயை வச்சுட்டுச் சும்மா இருக்காமே, அதிமுகவுக்கு ஓட்டுப் போடுங்கன்னு கேன்வாஸ் பண்ணிருக்கார். 

அவருக்கென்ன, சொல்லிட்டு டுபாய் வந்துட்டார். அவர் பேச்சைக் கேட்டு ஓட்டு போட்டவங்கள்லாம் பயங்கரக் கடுப்பாகி, அவர் எப்ப ஊருக்கு வருவார்னு காத்துகிட்டிருக்காங்களாம்!! அவரோட வீட்டம்மாகிட்ட ஒரே விசாரிப்பாம் எல்லாரும்!! அவரு ஊருக்கு வரட்டும் இருக்குன்னு, ஊர்க்காரவுங்க மட்டுமில்ல, வீட்டம்மாவும் திட்டுறாங்களாம்!!

”கவலைப்படாதீய, என்னா இப்ப அடுத்தாக்ல சங்கரங்கோயில் தேர்தல், அப்புறமேட்டு இன்னொரு எங்கவுண்டர் அப்படி இப்படினு எதாவது நடக்கும். அதுல மக்கசனம் இதெல்லாம் மறந்துருவாங்க. நீங்க ஜூலையில ஊருக்குப் போய்ட்டு வாங்க” டிப்ஸ் கேக்கலாம்னு போய் ஆறுதல் சொல்லிட்டு வந்தேன். என்ன செய்ய!! அந்த அளவுக்கு கரெண்ட் கட் ப்ராப்ளம், பிரபலமா இருக்கு.

அப்பத்தான் நான் போன வருஷம் கரண்ட் கட் குறித்து என் பதிவுகளில் எழுதுனது ஞாபகம் வந்தது!! (#பதிவருங்கோ!!) 

தேர்தலில் வெற்றி பெற்றதும், ‘அம்மா, ”சூரியன் இனிமே உதிக்கவே உதிக்காது”னு அடிச்சு சொல்லிருக்காங்க. ”தமிழகத்திற்கு இனி இருண்ட காலம்தான்”னு சிம்பாலிக்காச் சொல்றாங்களோ? (டிரங்குப் பொட்டி - 16)

ஒரு நல்ல நியூஸ் சொல்லவா? பீஹார்ல “கயா”ங்கிற இடம் தெரியுமா? அதேதான், புத்தருக்கு ஞானம் கிடைச்ச இடம். அங்க, ஒரு நாளைக்கு நாலஞ்சு மணிநேரத்துக்குத்தான் கரண்ட் சப்ளை இருக்குமாம். நம்மூர்லயெல்லாம், நாலஞ்சு மணிநேரம்தான் இல்லாமப் போகும். அப்ப கலைஞ்சரும், ஆற்காட்டாரும் எம்பூட்டு நல்லவங்க? (டிரங்குப் பொட்டி - 15)
 
போன வருஷம் மாதிரியே இப்பவும் பவர் கட்; போன வருஷம் மாதிரியே இப்பவும் மழை, புயலால் இழப்புகள், சாலை பள்ளங்கள்; போன வருஷம் மாதிரியே சாலை விபத்துகள்; போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் எல்லாத்துக்கும் முந்தைய அரசுதான் காரணம்னு பழி சொல்றது...

மின் உற்பத்தியை அதிகரிக்கத்தான் உடனே முயற்சிகள் செய்யலை. அட்லீஸ்ட் இப்பவாவது முழிச்சுகிட்டு, transmission loss-ஐ தடுக்க வழிமுறைகள், மின்திருட்டைத் தடுக்க நடவடிக்கை, இலவச மின்சாரத்தை முறைப்படுத்துதல் - இப்படியான உடனடி நடவடிக்கைகளை எடுத்தால் ஏதோ கொஞ்சநஞ்ச மின்சார விரயத்தையாவது தடுக்கலாம். யார் செய்ய...

(”தடையில்லா மின்சாரம் சாத்தியமே” என்ற பதிவில் சொல்லிருக்க ’ரேஷன்’ வழிமுறைகளும் சாத்தியமானதாகவும், பலன்தரக்கூடியவையாகவும் இருக்குது. கட்டாயம் படிங்க!!)

என் பதிவில் இருந்து ஒரு டிப்ஸையும் தருகிறேன். ஏதோ என்னாலானது...

ஒரு பாட்டிலில் தண்ணீர் பிடித்து, வீட்டுக்கூரையில் ஒரு துளை இட்டு, சொருகி வைத்து விடுகிறார்கள். சூரிய ஒளி அந்தத் தண்ணீரில் பட்டு பிரதிபலித்து, வீட்டின் எல்லாத் திசைகளிலும் பரவி வெளிச்சம் அளிக்கிறது.(டிரங்குப் பொட்டி-17)

இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு பதிவர் ரஜின் கொடுத்த ஐடியா இது: இரவில் தண்ணி பாட்டில்  கீழ எல்.இ.டி. லைட் வச்சு பாத்தா பளீர்ன்னு ரூம் புல்லா லைட்... கரண்ட் போனா தேவை ஒரு பாட்டில் தண்ணி, ஒரு லைட்..அவ்ளோதான்...ரூம் ப்ரைட்..


வழக்கம்போல தமிழக மக்கள் எதையும் தாங்கும் இரும்பு மனது உள்ளவர்கள்னு நிரூபிச்சுகிட்டிருக்காங்க. பெரிசா ஒண்ணும் ரியாக்‌ஷன் இல்லை. ஏன்னா, ஆலைகளும் மின் ‘விடுமுறை’க்கேற்ற மாதிரி, தம் விடுமுறை தினங்களை மாற்றிக் கொண்டுவிட்டன. வீடுகளிலும், அதைக் கணக்குபண்ணி மின்சாரம் இருக்கிற நேரங்களில் வேலைகளை முடித்துக் கொள்ளப் பழகிவிட்டார்கள். எதிர்பாராத சமயங்களில் ஏற்படும் மின்வெட்டு மட்டுமே திணறடிக்கிறது. அப்படிப் பார்க்கும்போது மின்வெட்டினால் என்ன பயன் என்றுதான் தோன்றுகிறது.

hyderabaddaily.com
மின்வெட்டு... இல்லையில்லை.. மின்’விடுமுறை’ தரப்படுவது எதற்காக? போதிய மின்சாரம் இல்லை, இருப்பதைச் சிக்கனமாக்ப் பயன்படுத்தவென்றுதான். ஆனால், இங்கே அநேகமாக எல்லா வேலைகளையும் மின்சாரம் இருக்கும்போது திட்டமிட்டு முடித்துக் கொள்கிறோம். மின்சாரம் இல்லாததால் நிற்பது டிவியும்,  ஏஸியும் மட்டுமே. மீதி அத்தியாவசியங்களுக்கான மின்சாரம் இன்வெர்ட்டரில் சேமிக்கப்பட்டுவிடுகிறது. அப்புறம் என்னத்த சிக்கனம்?
நண்பர் ஒருவர் வீட்டில், மின்சாதனம் பழுதுபார்க்க எலெக்ட்ரீஷியன் ஒருவரை அழைத்திருந்தார்கள். அந்தா, இந்தான்னு இழுத்து ஒரு சுபயோக நேரத்தில் வந்தும்விட்டார். வந்த நேரம் பவர்கட் ஆகிவிட, ”நீங்க கூப்புடலயின்னா வேற இடத்துக்கு வேலைக்குப் போயிருப்பேன். இப்ப இங்க வந்ததால அதுபோச்சி. அதனால, என் ஒரு நாள் கூலியைத் தந்துடணும்’னு சொல்லி வாங்கிட்டேப் போய்ட்டார்!! நண்பர் பணம் போனதுபற்றிகூடக் கவலைப்படவில்லை; ‘இனி அடுத்தாக்ல ஆளு எப்ப கையில கிடைப்பானோ’ன்னுதான் கவலைப்படுகிறார்!!


மின்வெட்டால் பாதிக்கப்படுவது சிறு தொழில் செய்பவர்கள்தான். வெளிநாடுகளில் யாரேனும் வேலை பார்க்க வர நினைத்தால், ‘என்ன வளம் இல்லை நம் நாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’,  ’அங்க உழைக்கிறதை இங்க உழைக்கக் கூடாதாய்யா?’ என்றெல்லாம் உணர்ச்சிகரமாகப் பேசுவார்கள். அதை நம்பி லோன் வாங்கி, மீதிக்கு தாலிமுதற்கொண்டு அடகுவைத்து தொழில் தொடங்கினால், இப்படி ‘பவர்’கட் செய்து, அவர்களின் வாழ்வை கட் செய்துவிடுகிறார்கள். இந்தப் பணத்தைவச்சு ஒரு ’விஸா’வாவது வாங்கியிருக்கலாமே என்றுதான் தோணும் அவர்களுக்கு!!

சிறுதொழிலையும் ஏதாவது ஃபாரின் கம்பெனி கொல்லாபரேஷனில் ஜாயிண்ட் வென்ச்சர் வச்சு  துவங்கினா ‘தடையில்லா மின்சாரம்’ கிடைக்குமோ?

மின்வெட்டால் வாழ்வு திருடர்களுக்குத்தான்!! சொல்லிவச்சு கரெண்ட் போவதால், அவர்களுக்கும் இன்ன நேரம் இன்ன இடம் என்று பக்காவா ப்ப்ப்ளான் பண்ணி திருட வசதியாருக்கு!! காற்றுக்காக ஜன்னலைத் திறந்துவைத்துக் கூடத் தூங்க முடியவில்லை மக்கள். திருடிவிட்டு உயிரோடு விட்டுட்டால் பரவாயில்லை. நகைக்காகக் கொலையும்ல பெருகிப்போச்சு -  ஒரு பவுன் இருபத்தியையாயிரமாமே!!

இதுல ஒருசில திருட்டுச் சம்பவங்களில் வடநாட்டவர் ஈடுபட்டதால்,  தமிழர்களை வேலையில் வைக்காமல், இவர்களை வைத்தால் இப்படித்தான்; ஊரைவிட்டே அனுப்பவேண்டும் என்கிற ‘தாக்கரே சிண்ட்ரோம்’ தமிழகத்திலும் பரவிவருகிறது. அய்யா, தமிழர்கள் வேலை  செய்வார்களாயிருந்தால் இவர்களின் வருகைக்கு அவசியம் என்ன? ஆமாம், பீஹாரிலும் ஒரிசாவிலும் இங்கே இருக்கிற மாதிரி இலவசங்கள் கிடையாதே!!

ஜூவியில் வாசித்தேன். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளரிடம் கரண்ட்கட் பற்றிப் புகார் செய்த வயதானவரிடம், தொணடர் ஒருவர் “வெளிநாட்டிலருந்து ஏகப்பட்ட கரெண்ட் வாங்கி வச்சிருக்கோம். தேர்தல் கமிஷன்தான் தர வுடமாட்டெங்குது. தேர்தல் முடிஞ்சதும் குடுத்துருவம்” என்று சொன்னாராம்.இப்படி கில்லாடித்தனமா பேசுறவுகளும், அத நம்பி ஏமாந்துப் போற அப்புராணிகளும் இருக்கிறவரை.... கரெண்ட் கட்டும் இருக்கும்!!

Post Comment

48 comments:

Admin said...

அவசியம் ஊருக்கு போயிட்டு வாங்க! ஒரு பதிவு எழுதிடலாம். #பதிவருங்கோ!!

//“வெளிநாட்டிலருந்து ஏகப்பட்ட கரெண்ட் வாங்கி வச்சிருக்கோம். தேர்தல் கமிஷன்தான் தர வுடமாட்டெங்குது. தேர்தல் முடிஞ்சதும் குடுத்துருவம்”//

இது தான் டாப்பு. :) :) :)

Admin said...

அவசியம் ஊருக்கு போயிட்டு வாங்க! ஒரு பதிவு எழுதிடலாம். #பதிவருங்கோ!!

//“வெளிநாட்டிலருந்து ஏகப்பட்ட கரெண்ட் வாங்கி வச்சிருக்கோம். தேர்தல் கமிஷன்தான் தர வுடமாட்டெங்குது. தேர்தல் முடிஞ்சதும் குடுத்துருவம்”//

இது தான் டாப்பு. :) :) :)

suvanappiriyan said...

//தேர்தலில் வெற்றி பெற்றதும், ‘அம்மா, ”சூரியன் இனிமே உதிக்கவே உதிக்காது”னு அடிச்சு சொல்லிருக்காங்க. ”தமிழகத்திற்கு இனி இருண்ட காலம்தான்”னு சிம்பாலிக்காச் சொல்றாங்களோ?//

அம்மா சொன்னதை செயலில் காட்டுறாங்க. வேறு என்ன சொல்ல. தமிழகத்தின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது.

ஸாதிகா said...

இப்படி கில்லாடித்தனமா பேசுறவுகளும், அத நம்பி ஏமாந்துப் போற அப்புராணிகளும் இருக்கிறவரை.... கரெண்ட் கட்டும் இருக்கும்!!//

கரெக்டா சொன்னீங்க ஹுசைனம்மா.ஊரில் 10 மணி நேரத்திர்கும் மேல் கரண்ட் கட் பண்ணுகின்றார்களாம்:(


இந்தியாவுக்கு வரணும் என்று நினைச்சால் வந்து மாட்டிக்காதீங்க.அதிலும் மார்ச் ஏப்ரல்..ம்ஹு..நொந்து நூடுல்ஸா போய்டுவீங்க.

ஹுசைனம்மா காதில் புகை வருவதற்கு ஒரு நியூஸ்.’


ஊரெல்லாம் இரண்டு மணி நேரம் கரண்ட் கட் என்று கதறும் இந்த தருணத்தில் எங்க ஏரியாவில் கரண்ட் கட்டே இல்லை.இந்த ஏரியாவை மறந்து விட்டார்களோ அல்லது வி ஐ பி ஒருவர் வசிக்கும் ஏரியா என்பதலோ தெரியவில்லை.எந்த ஏரியா என்ரு எடக்கு மடக்கா கேட்டுடாதீங்கப்பா/மின்சாரகட்டுப்பாடு முடிந்ததும் சொல்லுகிறேன்.

சாந்தி மாரியப்பன் said...

//ஊரைவிட்டே அனுப்பவேண்டும் என்கிற ‘தாக்கரே சிண்ட்ரோம்’//

இங்கேயும் அப்படித்தான்.. மண்ணின் மைந்தர்களை விட மத்தவங்களோட வேலைத்திறனும் திறமையும் கூடுதல். அதுக்காகவே இங்கே வடக்கர்கள் எல்லா இடத்துலயும் கோலோச்சறாங்க. இது தங்களோட வேலை வாய்ப்பை பாதிக்குதுன்னுதான் தாக்க ஆரம்பிச்சார் தாக்கரே. ஒழுங்கா வேலை செஞ்சா வேலைவாய்ப்பு ஏன் பாதிக்கப் படுதுன்னு யாரும் கேக்க மாட்டாங்க. ஏன்னா, சேனையைத்தொட்டா என்னாகும்ன்னு எல்லோருக்குமே தெரியும். தொட்டவன் கைதான் புண்ணாகும். அவ்வ்வ்வ்..

pudugaithendral said...

ஊரிலிருந்து வந்திருந்த அப்பா அம்மா பரவாயில்லையே இங்க கரண்ட் கட்டே இல்லையே என்றார். இன்வர்டர் இருப்பதால் இரண்டு மணிநேரம் கரண்ட் கட்( அதுவும் காலையில் இரு மணிநேரம், மதியம் ஒரு மணிநேரம்)என
இருந்ததால் கரண்ட் கட் மாதிரியே தெரியவில்லை அவர்களுக்கு.

புதுகையில் கிட்டத்தட்ட 8 மணிநேரம் நோ கரண்ட். பாவம்.

(நல்ல வேளை சென்னை வேணாம்னு இங்க வந்தோம்னு நினைக்கிறேன். :))

Roomil said...

thankalathu pathivai paarthathum enkalathu kadanthakalam thaan ninaivukku varukirathu pattaakkuraikal thattuppaadu puthiyavattin kandupidippukku thoondum poar kaalathil cycle dynamo vai sinna kaattadi il inaithu minsaaram ippadi etthanaiyo.....
nalla oru pahirvu nanri

rajamelaiyur said...

நல்லா சொன்னிங்க

rajamelaiyur said...

இன்று
அஜீத் - ஆர்யா-விஷ்ணுவர்தன் 'ரேஸ்'!

ஸ்ரீராம். said...

இப்போதைக்கு 'என்ன குறை இல்லை எந்தன் திருநாட்டில்' தான் ...சகல விதங்களிலும் குறைகள்....தொலைநோக்குப் பார்வையும் அர்ப்பணிப்பும் இல்லாத ஆட்சியாளர்கள், சுயக் கட்டுப்பாடும் ஒழுக்கங்களும் கைவராத மக்கள்... என்னவோ போங்க.... நாளைப் பொழுதுகளாவது நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கைக் கொள்ள வேண்டியதுதான்...!

வலையுகம் said...

சகோ ஹுஸைனம்மா

//இந்த வருஷம் ஊருக்குப் போகலையாம். ஏன்? போன வருஷம் மார்ச்ல ஊருக்குப் போயிருந்தப்போ, வாயை வச்சுட்டுச் சும்மா இருக்காமே, அதிமுகவுக்கு ஓட்டுப் போடுங்கன்னு கேன்வாஸ் பண்ணிருக்கார்.//

ஹா ஹா

ஆனால் நான் மார்ச்சில் தான் (இன்ஷா அல்லாஹ்) ஊருக்கு போகிறேன் அதுக்குலாம் ஒரு தகிரியம் வேனும்

பி.கு
நான் ஓட்டு போடச் சொல்லி யாரை கேன்வாஸ் பண்ணவில்லை என்பதையும் கவனிக்கவும்

Anonymous said...

//“வெளிநாட்டிலருந்து ஏகப்பட்ட கரெண்ட் வாங்கி வச்சிருக்கோம். தேர்தல் கமிஷன்தான் தர வுடமாட்டெங்குது. தேர்தல் முடிஞ்சதும் குடுத்துருவம்"//

அரசியல் செய்வதில் நம்மூர் ஆட்களை அடித்து கொள்ள முடியாது!!

பாச மலர் / Paasa Malar said...

கடைசி வரி..வெளி நாட்டு கரண்ட் வரும் சமாச்சாரம்...இன்னும் 50 வருஷம் கழிச்சுக் கூட இப்படித்தான் சொல்வாங்களோ..

கீதமஞ்சரி said...

இந்தியப் பயணம் சுகமாய் அமைய வாழ்த்துக்கள்.

சில வீடுகளில் இன்வர்ட்டர் இருந்தாலும் அதற்கு சார்ஜ் ஏறவும் மின்சாரம் போதுமான அளவு இருப்பதில்லையாம். புலம்பலைக் கேட்கவே கஷ்டமா இருக்கு.

ராமலக்ஷ்மி said...

எல்லாமே சரியாதான் சொல்லியிருக்கீங்க இலவச மேட்டர் வரை:)! இன்றுகூட இந்தியா வந்திருக்கும் நண்பரிடம் நலம் விசாரிக்கையில் முதலில் நொந்து கொண்டது மின் தடை குறித்துதான்.

கௌதமன் said...

நானும் மார்ச் மாதம் சென்னை போக வேண்டும். (இரண்டு நாட்கள்தான் கேம்ப்!!:))

ஹுஸைனம்மா said...

பாஸித் - நானும் அதப்பாத்து அசந்துபோயிட்டேன்.
ஊருக்குப் போயிட்டுவந்து பதிவு எழுதும் எண்ணமில்லை; எப்பப் பாத்தாலும் புலமிபிட்டே இருக்க எனக்கே எரிச்சலாருக்கு!! :-)))))

சுவனப்பிரியன் - ‘சொன்னதைச் செய்யும் அம்மா’ன்னு போஸ்டர் ஒட்டிடலாமா? :-))))

ஸாதிகாக்கா - உங்க ஏரியாவுல இருக்கிற வி.ஐ.பி. நீங்கதானே? :-))))

ஹுஸைனம்மா said...

அமைதிக்கா - எல்லா ஊர்க்காரங்களும், நாட்டுக் காரங்களும் இப்படித்தான் போலருக்கு. வேற்றூரில் மாடாய் உழைத்தாலும், சொந்த ஊரில் உழைக்க யோசிக்கிறார்கள். என் உறவில் ஒருவர் தன் மச்சானோடு வெளிநாட்டில் ஒரே ரூமில் வசித்து வந்தார். சகஜமாகப் பழகி வேலைகளைப் பகிர்ந்து செய்வார்கள். இதுவே விடுமுறையில் ஊருக்கு வந்தால், அந்த மச்சானுக்கு ‘மாப்பிள்ளை முறுக்கு’ வந்துவிடும்!!! அதுமாதிரித்தான்!! :-))))))))

அம்பலத்தார் said...

சுவாரசியமாகவும் சிந்தனையை தூண்டும்விதத்திலும் நல்ல பதி தந்திருக்கிறியள். வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

புதுகைத் தென்றல் - நாங்களும் இன்னும் இதுபோல பல காரணங்களுக்காகத்தான் இந்தியாவில் குடியேறுவதைத் தள்ளிப் போட்டு வருகிறோம்ப்பா.

ஹுஸைனம்மா said...

இப்ராஹிம் ரூமில் சார் - உண்மைதான். “Necessity is the mother of invention” என்று சொல்வார்கள். மக்கள் அப்படி அட்ஜஸ்ட் செய்துகொண்டும், புது வழிமுறைகள் கண்டுகொண்டும் வாழப் பழகிவிட்டார்கள்.

ராஜபாட்டை ராஜா - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - //என்ன குறை இல்லை எந்தன் திருநாட்டில்' // நம்ம நாட்டை மத்தவங்ககிட்ட விட்டுக் கொடுக்க முடியாட்டாலும், குறிஅகளைக் காணும்போது வருத்தமாத்தான் இருக்குது.

ஹைதர் தம்பி - அப்போ நீங்களும் தைரியசாலிதான், என்னைப்போல!! :-))))

ஹுஸைனம்மா said...

சிவகுமார் - ஆமாங்க, உலகத்துக்கே அரசியல் பண்ணச் சொல்லிக் கொடுக்கலாம். அதிலத்தான் டாப்பா இருக்கோம்.

பாசமலர் - எனக்கும் அந்த வரியைப் பாத்துட்டுப் பொறுக்கலைப்பா. எப்படிலாம் ஏமாத்துறாங்க பாருங்களேன்!!

கீதம்ஞ்சரி - ஆமாப்பா, அப்படியும் கேள்விப்படுறேன்.

ஹுஸைனம்மா said...

ராமல்க்ஷ்மிக்கா - //இந்தியா வந்திருக்கும் நண்பரிடம் நலம் விசாரிக்கையில் முதலில் நொந்து கொண்டது மின் தடை//
அனலடிக்கும் வெயில் இல்லைன்னா, மின் தடை குறித்து இவ்வளவு கவலை இருக்காது.

கௌதமன் சார் - ரெண்டே ரெண்டு நாள்தானே? அதுவும் சென்னைக்குத்தானே.. அங்க ஏது கரெண்ட் கட்? :-))))

அம்பலத்தார் said...

இந்த மின்வெட்டு கூடங்குளவிடயத்தில் மக்களின் மனநிலையை மாற்ற அரசு செய்யும் ஒரு தந்திரமோ?

ஹேமா said...

இந்தியாவில் மின்சாரம் படுத்தும் பாடா...இணையத்தில் பலர் புலம்பும் பதிவாக இருக்கிறது !

Seeni said...

nalla sollideenga!

ADHI VENKAT said...

எங்க பார்த்தாலும் இதே பேச்சு தான்....:(((

சீக்கிரம் தீர்வு கிடைத்தால் தேவலை...

வல்லிசிம்ஹன் said...

ஹுசைனம்மா, வெய்யில் வேற கூடிப்போச்சுப்பா. இன்னிக்கு என்னவோ மழை மேகம் வருது பார்க்கலாம். இன்வர்ட்டர் இருந்துதான் என்னா அதுக்கும் தகறாரு வருது சிலசமயம்.
நீங்க சொன்ன கூரை ஐடியா நல்லா இருக்கு.வரமுறை சொன்னால் நல்லா இருக்கும். கூரைல ஓட்டை போட்டா,கூடவே வேற ஏதாவது வந்துதுன்னால்:)

Starjan (ஸ்டார்ஜன்) said...

//“வெளிநாட்டிலருந்து ஏகப்பட்ட கரெண்ட் வாங்கி வச்சிருக்கோம். தேர்தல் கமிஷன்தான் தர வுடமாட்டெங்குது. தேர்தல் முடிஞ்சதும் குடுத்துருவம்” என்று சொன்னாராம்.///

என்ன செய்ய இந்தமாதிரியானவர்களை?..

கரெக்டா சொன்னீங்க ஹூசைனம்மா.. நல்ல இடுகை.

வெங்கட் நாகராஜ் said...

ஊருக்குப் போயிட்டு வாங்க!.... அவசியம். அப்பதானே மின்சாரம் எவ்வளவு பிரச்சனை கொடுக்குது நம் மக்களுக்குன்னு தெரியும்!

துளசி கோபால் said...

வாயுள்ள புள்ளெ பொழைச்சுக்குமாம்!

வெளிநாட்டுக் கரண்டைப் பதுக்கி வச்சுருக்கும் குடோன் எங்கே இருக்குன்னு பாருங்க!!!!!!

Vijiskitchencreations said...

பாவம் எல்லாரும் சேர்ந்து இப்படி சொல்லிட்டாங்க. ம்.என்ன செய்ய சென்னையில் எப்ப விடிவு காலம் வருமோ தெரியல்லை. கஷடபடுறது எல்லாம் மிடில்க்ளாஸ் தான். டாப் ஆட்கள் எல்லாம் நல்ல ஏ ஸி யோட எந்த கவலையும் இல்லாமல் இருப்பாங்க. நாங்க அதனால் எப்பவும் ஆக்ஸ்ட் முதல் வாரம் தான் செல்வது வழக்கம்.
அய்ய ஆட்சிக்கு வந்ததும் அம்மாவை எப்படி உள்ள தள்ளாலாம் என்று ப்ளான் (ப்ராஜக்ட்) நடக்கவே நேரம் பத்தாது. அம்மாவும் அப்படிதான் சேரில் அமர்ததும் முதல் வேலை அய்யா பேரில் என்னசெய்து உள்ள தள்ளாலாம் என்று தானே தவிர மக்களுக்கு நாட்டுக்கு என்ன செய்யலாம் என்று எண்ணும் போது பதவி+கஜானா எல்லாம் காலி.
இன்று போய் நாளை வா.
என்ன ஹுஸைனம்மா எதுக்கும் எல்லா பேகப்பும் கைவசம் வைத்து கொள்ளவும். Have a nice trip.

கீதமஞ்சரி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/

சிராஜ் said...

சலாம் சகோ ஹுசைன்மதர்,

எங்கள் தங்கத் தமிழ்நாட்டை ஏகத்துக்கு கிண்டல் பண்ணி கட்டுரை எழுதிய உங்கள் பயணம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலே அமைய என் வாழ்த்துக்கள்.
ஹி..ஹி..ஹி... என்ன மேட்டர்னா, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின் வெட்டு நேரம் இன்னும் அதிகரிக்கும். நீங்க எந்த ஊருன்னு தெரியல???
ஆனா சென்னையா இருக்க கூடாது. அப்ப தான் மின் வெட்டோட முழுத் தாக்கத்த நீங்க உணர முடியும். சென்னையில் மின் வெட்டு வெரி மினிமல். ஒன்லி 2 ஹவர்ஸ்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

திகிலாத்தான் இருக்கு..
நாங்களூம் டிக்கெட் எல்லாம் போட்டாச்சு..

மனோ சாமிநாதன் said...

அருமையான அலசல் ஹுஸைனம்மா! என்னதான் புலம்பினாலும் இந்த சமயம் ஊருக்குப்போனால் இந்தக் கொடுமையில் மாட்டிக்கொள்ள வேன்டியது தான்! நான் இந்த மாதம் ஊருக்குப்போக வேன்டிய அவசியத்திலிருந்து தப்பித்து விட்டேன். ஜுன் மாதம் தான்! ஆனால் அப்போதும் சூடு தான். மின்வெட்டு தான்!

மாதேவி said...

கரண்ட் கட்டா...தொடர்கதை.
நாங்களும் சில வருடங்களுக்கு முன்பு அனுபவித்து இருக்கின்றோம்.

vanathy said...

வெளிநாட்டிலருந்து ஏகப்பட்ட கரெண்ட் வாங்கி வச்சிருக்கோம். தேர்தல் கமிஷன்தான் தர வுடமாட்டெங்குது. தேர்தல் முடிஞ்சதும் குடுத்துருவம்” ///அடேங்கப்பா! இப்படியெல்லாம் அண்டப் புளுகு புளுக அரசியல் வாதிகளால் தான் முடியும். என்ன சொல்றீங்க????

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள். :)) (துன்பம் வரும் வேளையில் சிரிங்க)

நட்புடன் ஜமால் said...

என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, குடும்பத்தோடு கொஞ்ச நாள் இருக்க வாய்ப்பு கிடைக்குதேன்னு இதோ பொட்டி கட்டிங்ஸ், இன்ஷா அல்லாஹ் சனி மாலை ஊரில்

ஹுஸைனம்மா said...

அம்பலத்தார் - அப்படியும் ஒரு பேச்சு உலவுது. நன்றிங்க.

ஹேமா - தமிழகம் மட்டுமல்ல, இன்னும் பிற மாநிலங்களிலும் மின்வெட்டு இருக்கிறது. ஆனால், தமிழகம் போலக் கொடுமை இல்லை!!

சீனி - நன்றிங்க.

கோவை2தில்லி - தில்லியில மின்வெட்டு உண்டாப்பா?

ஹுஸைனம்மா said...

வல்லிமா - கூரையில் ஓட்டை போட்டு போடுவது நமக்குத் தேவைப்படாது. அது பகலில் வெளிச்சம் கிடைப்பதற்கு. ஆனால், இரவில் கரண்ட் கட் ஆனால், ஒரே ஒரு சின்ன பேட்ட்டரி லைட் மூலம் அறைமுழுதும் பிரகாசமடையச் செய்ய அந்த உத்தியைக் கொஞ்சம் மாற்றிச் செய்ய வேண்டும். அதாவது, பேட்டரி லைட்டை எரிய வைத்து, ஒரு பாட்டில் தண்ணீரை (கோலா பாட்டில் போல அகண்ட கீழ்ப்பக்கம் கொண்ட பாட்டிலில், ஸ்டிக்கரைக் கழட்டிவிடவேண்டும்) அதன்மேல்பக்கம் வைத்தால், ரூம் முழுதும் பளீர் வெளிச்சம் கிட்டும் என ஒரு பதிவர் டிப்ஸ் சொல்லிருக்கார். நானும் ஊர்போய்த்தான் செய்து பார்க்கணும்!! :-)))

ஹுஸைனம்மா said...

ஸ்டார்ஜன் - ஆமாங்க, பாத்ததும் நானே ஜெர்க் ஆகிட்டேன். இப்படியுமா ஏமாத்துவாங்க?

வெங்கட் - அப்ப நீங்க ஊருக்குப் போலியா? :-))))

துளசி டீச்சர் - ஆமால்ல, குடவுனைக் கேட்டு நம்மளும் கொஞ்சம் ’பிடிச்சுட்டு’ வரலாம்! :-)))

விஜி - ஆமாப்பா, அரசியல்வாதிகளுக்கு ஏது இந்தப் பிரச்னைக்கெல்லாம் நேரம்? படுறது நம்மளைப் போல ஆட்கள்தான்!! நன்றிப்பா.

ஹுஸைனம்மா said...

சிராஜ் - //சலாம் சகோ ஹுசைன்மதர்//
ஸலாம் சிராஜ் பிரதர். அதென்ன ‘எங்கள்’ தங்கத் தமிழ்நாடு? அவ்வளவு இடம் வாங்கிப் போட்டாச்சா? ஒரே ஒரு ‘நில அபகரிப்பு புகார்’தான்!! அப்புறம் என்ன நடக்கும் தெரியும்ல? கபர்தார்!! என்னையா கிண்டல் பண்றீங்க? :-))))

முத்தக்கா - எல்லாருமே திகிலோடுதான் இருக்கோம்போல!! :-)))

மாதேவி - ஆமாப்பா, இது ஒரு முடிவில்லாத தொடர்காதையாத்தான் போய்கிட்டிருக்கு. கன்னித்தீவுபோல!!

ஹுஸைனம்மா said...

மனோ அக்கா - நன்றிக்கா. ஜூன் மாதம் இறுதியில் என்றால் கொஞ்சம் தாங்கிக் கொள்ளலாம்.

வானதி - ஆமாப்பா. ஓட்டுக்காக என்ன வேணும்னாலும் சொல்வாங்க இவங்க.

துபாய் ராஜா - ம்ம்.. ஏன் சொல்ல மாட்டீங்க? வாழ்த்துகளா? யானைக்கொரு காலம்னா பூனைக்கும் நேரம் வரும்!!

ஜமால் - நீங்களும் ஊருக்கா? நல்லது. ஆமா, துணிஞ்சிட்டோம்ல!!

Jaleela Kamal said...

இந்த முறை ஊருக்கு போன கரண்ட் கட்டை நினைத்தால் அவ்வ்வ் . டான்னானு மன்ணியடிச்சா சோறு மாதிரி லோ ஷெடுயில் போட்டு கட் பண்றாங்கோ.

சுசி said...

கரண்ட் இல்லாததால் டிவி பார்ப்பது குறைந்து வீட்டில் ஒருவர்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்ளவும், பிள்ளைகள் வெளி காற்றில் விளையாடவும் சொந்த பந்தங்களை தொடர்பு கொள்ளவும் முடிகிறது. இது நான் அனுபவத்தில் உணர்ந்து சொல்வது. கரண்ட் கட்டால் சீரியல் பார்ப்பது கட்டானது ஒரு மிகபெரிய நன்மை.