Pages

புறப்பாடுகள்




வீட்டைப் பூட்டிவிட்டு எங்கும் போவதென்றால் அதற்கென செய்ய வேண்டிய வேலைகளும் முன்னேற்பாடுகளும் மலைப்பானவை. அது பற்றி ஏற்கனவே இங்கே எழுதிருக்கேன். அதுவும் இந்தியா போவதென்றால், கிளம்புமுன், தேவையான பொருட்கள் எடுத்துச் செல்வது போல,  மனதிலும் சில தயாரிப்புகள் செய்துகொள்ள வேண்டி இருக்கின்றது!!

மொழி:

அம்மா வீட்டில் நெல்லைத் தமிழ். மாமியார் வீட்டில், மலையாள ஆதிக்கம் செலுத்தும் தமிழ்!! இங்கு அமீரகத்தில் நாங்கள் பேசுவதோ ரெண்டுமில்லாத “நாகரீக” தமிழ்!! ஆகையால், ஊருக்குப் போகுமுன், ரெண்டு பிராந்திய பாஷைகளையும் அவற்றின் சிறப்புச் சொற்களையும் ரீ-கால் பண்ணிக்கணும். இல்லன்னா, அவோள்லாம் பேசும்போ பெப்ப்ரப்பேன்னு முழிச்சிகிட்டுலா நிக்கணும்.

முக்கியமாக, மலையாளத்திலும் தமிழிலும் சில பல வார்த்தைகள் க்ராஸ் ஆகும். அவற்றை கவனமா கேட்டுக்கணும்.  உதாரணமா,  மலையாளத்தில்  “ராவில”ன்னா காலை. அதுவே தமிழில் இரவு!! தமிழில் வருவதைச் சொல்லும் “வரறது” என்ற வார்த்தை, மலையாளத்தில் “வராதே” என்று அர்த்தம்!!

இதுக்கே “ஙே...”ன்னு இருக்கா..?  இதுக்கெல்லாம் மேலாக இன்னொண்ணு இருக்கு!! தமிழில் “மிளகு” என்றால் பெப்பர். ஆனால், மலையாளத்தில் அது மிளகாயைக் குறிக்கும்!!  


உணவு:

மாமி: இன்னிக்கு ”தோரன்” (பொரியல்) என்ன செய்யப்போறே?
நான்:  பீட்ரூட் வைக்கலாமா?
அது சுகருக்கு ஆகாது.
அப்ப, உருளை வறுவல் செய்வோமா?
அது “கேஸ்” (வாய்வு) வேண்டாம்.
 தக்காளி கறி?
“ஸ்டோனுக்கு” (சிறுநீரகக் கல்) தக்காளி சேக்கக் கூடாது!


இப்படியாக எல்லா காயும் க்ளீன் போல்ட் ஆகி, மிஞ்சுவது கேரட்-பீன்ஸ் மட்டுமே!!

திருநெல்வேலியில்:

நான்: வெண்டைக்காய் செய்வோம்.
அம்மா: அது “குளிர்ச்சி”, கால் வலிக்கும்.
அப்ப, கத்தரிக்காய், மாங்காய் போட்டு சாம்பார்?
ரெண்டுமே “சூடு”, வேண்டாம்.
முட்டைகோஸ்?
வாய்வைக் கிளப்பும்.

வாழைக்காய்?
”சிக்கல்” வரும்.
புளிக்குழம்பு?
”வாதம்” உண்டாக்கும்.

”ஆணியே புடுங்கவேண்டாம்”னுட்டு, அதே பீன்ஸ்-கேரட்தான் இங்கயும்!!

உறவுகள்:

நாகர்கோவிலில்:

“ஏங்க, இப்ப நாம யாரு வீட்டுக்கு போயிட்டிருக்கோம்?”

“ப்ச்... ஒவ்வொரு வருஷமும் சொல்லிக் கொடுத்தாலும், புதுசு மாதிரியே கேட்டுகிட்டிருக்க... என் சின்னம்மா மகள் வீடு”

இடையில் புகுந்த சின்னவன், “ம்மா.... இங்க போன வருஷம் நாம வரும்போது இங்க ஒரு ஆடு இருந்துச்சே...”

அவனுக்கே தெரியுது, எனக்குத்தான் 20 வருஷமாகியும்...

திருநெல்வேலியில்:

“இப்ப கல்யாணத்துக்கு அழைக்க வந்திருக்காங்களே, இவங்க யாரு...”

“என் தங்கச்சியோட மைனியோட பேத்திக்குக் கல்யாணம். போன வருஷமும் நீ வந்திருந்தப்பதான் அவங்க வீட்டுல ஒரு கல்யாணம் அழைக்க வந்தாங்க, மறந்துடுச்சா.... ” முறைப்புடன் பதில் வரும்.  யாருக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கு....

இப்படி, எல்லாமே நாகர்கோவிலில் ஒரு விதம் என்றால், திருநெல்வேலியில் இன்னொரு விதம்!! அதற்கேற்ற மாதிரி நம் மூளையை மாற்ற வேண்டுமே.... அதானே கஷ்டம்!! ஒரு வழியா சமாளிச்சு, மறுபடி அபுதாபி வரும்போது, நாகர்கோவில் திருநெல்வேலி சமாச்சாரங்களை மைண்டிலிருந்து க்ளீன் செய்யும்போது அபுதாபி மேட்டரும் சேந்து காணாமப் போயிடுது!!! அவ்வ்வ்வ்.....

“என்ன, கிச்சன்ல நின்னு ரொம்ப நேரமா முறைச்சு பாத்துகிட்டே நிக்கிற....”

“இல்லங்க,  அடுப்புக்குப் பக்கத்துல ரெண்டு பாட்டில் வச்சிருப்பேன்னு ஞாபகம் இருக்கு. ஆனா, அதுல என்ன போட்டு வச்சிருந்தேன்னு யோசிச்சு யோசிச்சு பாக்கறேன், நினைவுக்கே வரமாட்டேங்குது....”

“அதுசரி... ஒரு இருவது நாள் ஊருக்கு போய்ட்டு வந்ததுக்கே இப்படியா..... சமையல் செய்றது எப்படின்னு ஞாபகம் இருக்கா, அதுவும் மறந்து போச்சா....”

Post Comment

11 comments:

கோமதி அரசு said...

பதிவு அருமை, கடைசி கேள்வி மிக அருமை.
எனக்கும் கோவை, மதுரை, மாயவரம் என்று குழம்பி போகிறது மனது.
அங்கே உள்ளதை இங்கும்,, இங்கே உள்ளதை அங்கேயும் நினைத்து கை எடுக்க வருகிறது.
ஒவ்வொரு மாதமும் இந்த மூன்று ஊர்களிலும் வசிக்கிறேன்.

புறப்பாடுகளும் உங்களை போலதான். இந்த ஊரிலிருந்து அங்கு கொண்டு போக வேண்டிய சாமான்கள்லிஸ்ட் அங்கிருந்து இங்கு கொண்டு வர வேண்டிய சாமன்கள் லிஸ்ட் மறக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

என் அப்பாவுடன் பல ஊர்களில் வாசம் செய்ததால் எல்லா ஊர் பேச்சுகளும் கொஞ்சம், கொஞ்சம் பேசுவேன். அப்பா ஊர் திருநெல்வேலி பேச்சு(நெல்லை தமிழ்) அம்மா ஊர் திருவனந்தபுரம் மலையாளம் கலந்த தமிழ், புகுந்த வீடு கோவை மரியாதை கலந்த பேச்சு.

யாஸிர் அசனப்பா. said...

செம

ஸ்ரீராம். said...

ஓ... இந்தியா வந்து சென்றீர்களோ!

நட்புடன் ஜமால் said...

ROFL
.
“அதுசரி... ஒரு இருவது நாள் ஊருக்கு போய்ட்டு வந்ததுக்கே இப்படியா..... சமையல் செய்றது எப்படின்னு ஞாபகம் இருக்கா, அதுவும் மறந்து போச்சா....”

Aashiq Ahamed said...

சூப்பர் :-) :-)

Nooruddin said...

சிரிக்க வைத்த கட்டுரை. நன்று.

தமிழில் நன்றாக எழுதுவீர்கள் என்று தெரியும். முத்தமிழில் பேசுவீர்கள் என்பது இன்றுதான் தெரியும்.

பி.கு.: ஒரு டவுட்டு. ராப்பிச்சைக்காரனை மலையாளத்தில் என்ன சொல்வார்கள்?

அப்பாதுரை said...

அட்டகாசம் போங்க!

ராவுனா காலையா? நான் கடி/ரம்பம் போடுறதுனு நினைச்சேன். சென்னையில ராவல்னா அதான் அர்த்தம். தக்காளி சிறுநீரகத்துக்கு ஆகாதா? வெண்டைக்காய் குளிர்ச்சியா? இதெல்லாம் தெரியவே தெரியாதுங்க!

ஹுஸைனம்மா said...

@கோமதிக்கா!!

ஒரே மாசத்தில மூணு ஊரா!!!!! எப்படிக்கா?? எப்படித்தான் சமாளிக்கிறீங்களோ... :-)

@ யாஸிர் அசனப்பா.

நன்றிங்க.

@ஸ்ரீராம் சார்:

ஆமாம், வந்திருந்தேன். :-)

ஹுஸைனம்மா said...

@ஜமால் தம்பி:

பேலியோவுக்கு மாறியதில் சமையல் கொஞ்சம் கொஞ்சமா மறந்துகிட்டுதான் வருது. :-)


@ஆஷிக் தம்பி:

நன்றி.


@நூருத்தீன் அண்ணே:

/ராப்பிச்சைக்காரனை மலையாளத்தில் என்ன சொல்வார்கள்?//

தெரியலையே....

ஹுஸைனம்மா said...

@அப்பாதுரைஜி:

“நம்ம” தமிழ்ல, “ராவுறது”ன்னா சீவுறது அல்லது கடிக்கிறதுன்னு அர்த்தம். வேற தமிழ்களில் வேற அர்த்தம் இருக்குமாயிருக்கும். தமிழ் ஒரு செம்மொழியாக்கும்!!

//தக்காளி சிறுநீரகத்துக்கு ஆகாதா? //
கற்களில் பல வகை உண்டு. அதில் ஒரு வகைக்கு தக்காளி ஆகாதாம். இன்னொரு வகைக்கு பால் ஆகாது. எலுமிச்சையும் தவிர்க்கச் சொல்வார்கள். கிட்னி கல்லிலும் பல வகை உண்டு!! :-)

Nasar said...

நல்லா இருக்கு...