Pages

இ-மெயிலும், பேப்பரும்




காடுகளைப் பாதுகாப்போம்; சுற்றுச்சூழல் பேணுவோம்; பிளாஸ்டிக் தவிர்ப்போம்; மின்சார சிக்கனம் கடைபிடிப்போம்... இப்படி எத்தனையோ வாசகங்களை நாம் தினந்தோறும் பார்க்கிறோம், படிக்கிறோம். ஆனால் நடைமுறையில் சரியாகப் பின்பற்றப்படுகிறதா?

மரங்களைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாக, பேப்பர் பயன்பாட்டைக் குறைக்கச் சொன்னாங்க. அதனால பல அலுவலகங்களில் காகித வழித் தொடர்பைக் குறைத்துவிட்டு, பேப்பரில்லா இணைய வழி தொடர்பைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தாங்க. இது, காகிதத்தைக் குறைக்க பயன்படுதோ இல்லையோ, விரைவான செயலாக்கத்திற்கு வழிவகுப்பதால் இம்முறை எல்லோராலும் விரும்பப்பட்டது.

ஆனா, அதே சமயம் இத்தொடர்பு முறை காகிதப் பயன்பாட்டைக் குறைத்திருக்கிறதான்னு பார்த்தோம்னா, இல்லங்கிறதுதான் உண்மை. அட, குறைக்கலைன்னா கூடப் பரவால்லைங்க, அதிகப்படுத்தித்தான் இருக்கு!!

உதாரணமா, எங்க ஆஃபீஸ்ல, வரைபடங்கள் (design drawings) கணிணியிலேயே உருவாக்கி, அதைச் சம்பந்தப்பட்ட பொறியாளர், கிளையண்ட், கன்சல்டண்ட் ஆகிய நிறுவனங்களில் பலரின் (ஒவ்வொரு நிறுவனத்திலயும் குறைந்தது மூவருக்கு) ஒப்புதலுக்கு அனுப்புவாங்க. அவங்க என்ன பண்ணுவாங்க, அதைக் கணிணியில் பார்த்தாலும், தெளிவான பார்வைக்காகவும், விவாதத்திற்காகவும் ஆளுக்கு ஒரு பிரிண்ட் அவுட் எடுப்பாங்க.  அதைப் பார்த்துட்டு,  பொறுப்பா மறு-சுழற்சித் தொட்டியில் (re-cycling bin) கடாசிருவாங்க.

அதுவும் அந்த ஒருமுறை மட்டுமல்ல, எப்போவெல்லாம் தேவையிருக்கோ, அப்போவெல்லாம் பிரிண்ட் அவுட்தான். இதுவே காகித வழி தொடர்பு முறையா இருந்தா, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒன்று அல்லது இரண்டு நகல்கள் அனுப்புவோம். அவசியப்படும்போதெல்லாம் அதையே எடுத்துப் பார்த்துக்கிடுவாங்க.  இது வரைபடங்களுக்கு மட்டுமல்ல, கடிதங்கள் மற்றும் இன்னபிற வகைகளுக்கும் இதே நிலைமைதான்!! அதிலும் காகிதங்களின் ஒருபக்கம் மட்டுமே அச்சிடப்பட்டு, அடுத்த பக்கம் பயன்படுத்தப்படாமலே ரீ-சைக்ளிங் தொட்டியில் போடப்படும்!!

அலுவலகத்தில்தான் இப்படி என்றால், பிள்ளைகளின் பள்ளியில் இதைவிட அதிகம் பேப்பர் சீரழிகிறது!! ஒன்றாம் வகுப்பு படிக்கும் சின்னவனுக்கு,  30+ நோட்டுப் பத்தகங்கள்!! இதில வருஷ முடிவில, பத்து நோட்டுகள் கூட முழுசாக் காலியாகியிருக்காது!! மீதி பத்துல, கால்வாசி பேப்பர்கள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கும். மறு வருஷம் மீதி நோட்டுக்களைப் பயன்படுத்த முடியாதபடி, மறுபடியும் 30+ நோட்டுகள் கண்டிப்பா வாங்கியாகணும். இதுவரை என் ரெண்டு பசங்களுக்கும் மீதியான நோட்டுகளே குமிஞ்சிருக்கு. எங்க காலத்திலெல்லாம் பாடப் புத்தகங்கள் கூட சீனியர்ஸ்,ஜூனியர்ஸுக்கு நடுவில வித்துடுவோம். (Re-use)

இன்னொன்று, மின்சார விரயம்.வீட்ல கரண்ட் பில்லுக்குப் பயந்தாவது கவனமா இருக்கிற நாம, அலுவலகம்னா கண்டுக்கறதேயில்லை.  இப்ப மின்சாரப்பயன்பாட்டைக் குறைக்க ஃப்ளூரசண்ட் விளக்குகள்  பயன்படுத்துகிறோம். ஆனா, பயன்பாட்டுக்குப்பின் எறியப்படும்போது அதிலிருக்கும் பாதரசம் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என்பதால், சில நாடுகளில் இந்த வகை விளக்கைப் பொது குப்பைத் தொட்டியில் எறிவது தடைசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல, இக்காலங்களில் மிண்ணனு சாதனங்களின் பயன்பாடு அளவில்லாமல் அதிகரித்திருக்கிறது. தினம்தினம் புதுப்புது மாடல்கள் வரவும் செய்கின்றன. விலையும் வெகுவாகக் குறைந்துவருவதனால், வாங்குவதற்கு  யாரும் யோசிப்பதில்லை. அப்படியே தூக்கிப் போட்டுடற பழசுல, இருக்கிற பிளாஸ்டிக், காரீயம் (Lead) ரெண்டுமே சுற்றுச்சூழலுக்கு வேட்டு வைக்கக்கூடியவை. (எலெக்ட்ரானிக் ரீ-சைக்ளிங் இன்னும் முழு பயன்பாட்டுக்கு வரலை).

இதுனாலேயே பழசை என்ன செய்யறதுன்னு தெரியாமலேயே, நான் இன்னும் பழைய மாடல் மிக்ஸி, மைக்ரோ ஓவன், அடுப்பு, கிரைண்டர், கம்ப்யூட்டர், மொபைல்னு வச்சுகிட்டிருக்கேன். பார்ப்பவர்கள், கைநிறைய சம்பாதிச்சாலும், இப்படி கஞ்சத்தனமா இருக்கியேங்கிற மாதிரி லுக் விட்டுட்டுப் போறாங்க. இப்படித்தான் கண்ணுக்கு நல்லதுன்னு பிளாஸ்மா டி.வி.யும்,  எல்.ஸி.டி. மானிட்டரும் வாங்கினப்புறம், பழைய 21” டி.வி.யும், 14” மானிட்டரும் இன்னும் அப்படியே இருக்கு. சும்மா தரேன்னாகூட யாரும் வாங்கிக்க ரெடியாயில்ல!! அதனாலேயே பழைய மாடல் மொபைலையும் பலரின் ஏளனப் பார்வைகளை அலட்சியப்படுத்திவிட்டு வைத்துக் கோண்டிருந்தேன். புதுசு வாங்கச் சொல்லிக்கிட்டிருந்த என்னவரையும் மிரட்டி வச்சிருந்தேன். நேத்து சொல்லாம கொள்ளாமப் போய் புது மொபைல் வாங்கித் தந்தவர்கிட்ட,  இந்தக் காரணத்தினாலேயே ஏன் வாங்கினீங்கன்னு கோபப்பட்டுட்டேனேன்னு வருத்தமா இருக்கு.

இதுக்கு தீர்வுன்னு நாம சொல்ற "Reduce, Reuse, Recycle", அதாவது பயன்பாட்டைக் குறைத்தல், மீள் பயன்படுத்துதல், மறு சுழற்சி - இதில ரீ-சைக்ளிங்குக்கு நாம கொடுக்கிற முக்கியத்துவத்தை, மற்ற இரண்டுக்கும் (Reduce & Reuse)  கொடுக்கலங்கிறதுதான் வருத்தமான உண்மை!! இந்த மாதிரி வசதிகள் இல்லாத காலத்தில சிக்கனமாத்தானே இருந்தோம், இப்ப மட்டும் ஏன் சிக்கனம்கிறது அவசியமில்லாததா ஆகிடுச்சு? காலண்டர் ஷீட்டைக்கூட விடாம சேகரிச்சு எழுதுன பெரியவங்களும் உண்டே!! என் வீட்டினரை ஓரளவு என் வழியில் கொண்டுவந்துவிட்டேன். ஆனா ஆஃபீஸ்லயும்,  உறவுகள் மத்தியிலும், இப்படி சிக்கனம் பேண நான் செய்யும் சில முயற்சிகள் ஏளனமாகவே பார்க்கப்படுகின்றன. வருத்தமிருந்தாலும் என்னளவில் நான் முயற்சிகளைத்  தொடர்கிறேன், அவை கடுகளவே என்றபோதிலும்!!

Post Comment

43 comments:

எம்.எம்.அப்துல்லா said...

சீரியசான விஷயத்தை மிகவும் சுவையோடு சொல்லிருக்கீங்க. மகிழ்ச்சி.

:)

நட்புடன் ஜமால் said...

நீங்க நல்லவங்ன்னு தெரியும்

இம்பூட்டாஆன்னு தெரியாம போச்சே...

உங்க பழைய கணினியை குடுத்திடுங்களேன் மொபைலே நீங்களே வச்சிங்க.
--------------------

இது போன்ற எலக்ட்ரானிக் பொருட்களில் நமக்கு பழசு என்று நினைப்பதை உண்மையில் தேவை படுவோருக்கு குடுக்க ஒரு முயற்சி எடுத்தால் என்ன என்று - இந்த பதிவை படித்தவுடன் தோன்றுகிறது.

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை, இன்ஷா அல்லாஹ் இது சம்மந்தமா எதுனா தகவல் கிடைக்குதான்னு பார்ப்போம்.

---------------

நல்ல விழிப்புணர்வு ஹுஸைனம்மா.

கண்ணா.. said...

//பிளாஸ்மா டி.வி.யும், எல்.ஸி.டி. மானிட்டரும் வாங்கினப்புறம், பழைய 21” டி.வி.யும், 14” மானிட்டரும் இன்னும் அப்படியே இருக்கு. சும்மா தரேன்னாகூட யாரும் வாங்கிக்க ரெடியாயில்ல!! //

நான் ரெடியா இருக்கேன்....

ஃபிரீயா குடுத்தா பினாயிலை கூட குடிக்க நாஞ்சில் ரெடியா இருக்கான்...

எங்களையெல்லாம் வச்சுட்டு மேற்கொண்ட வாசங்கள் சொன்னதை வன்மையாக கண்டிக்கிறோம்...

Chitra said...

//////ஆனா ஆஃபீஸ்லயும், உறவுகள் மத்தியிலும், இப்படி சிக்கனம் பேண நான் செய்யும் சில முயற்சிகள் ஏளனமாகவே பார்க்கப்படுகின்றன. வருத்தமிருந்தாலும் என்னளவில் நான் முயற்சிகளைத் தொடர்கிறேன், அவை கடுகளவே என்றபோதிலும்!!///////


.......இந்த சலம்பலுக்கு எல்லாம் அசராதீங்க. நீங்க எடுத்துக் கொண்ட விஷயம் ரொம்ப அவசியமானது. Keep going!

இராகவன் நைஜிரியா said...

மிக நல்ல முயற்சி. சமூக அக்கறை கொண்ட இடுகை.

அன்புத்தோழன் said...

நீங்க பல விஷயங்கள்ல என்ன மாதரியே இருக்கீங்க ஹுஸைனம்மா....

நானும் இப்டி தான் எதாச்சும் பண்ணா நம்மை லூசும்பாங்க....

ஆனாலும் விடுவதில்லை....

ஒருமுறை ஒருபக்கம் பிரிண்ட் செய்யப்பட்ட பேப்பர் அதன் உபயோகத்திற்கு பிறகும் என் பிரிண்டரில் இருக்கும்.... தலைகீழாய்.....

இரண்டு வாரமாதும் உபயோக படுத்திய பேப்பரை தூக்கி போடுவதில்லை.... எதுக்கு தூக்கி போடனுமேனு தான்.... குறைந்தது எடுத்துக்கொண்ட வேலை முடியும் வரை(until finishing up the task) மறுபடி தேவை பட்டா அதையே பிரிண்ட் செய்ய வேண்டி வருமே என்பதற்காக....

மறுப்பக்கம் உபயோகப்பட்ட பின்பு அவசியம் இல்லாவிடில் தூக்கி போடுவதில்லை சில காலங்களுக்கு....

அன்புத்தோழன் said...

//எங்க காலத்திலெல்லாம் பாடப் புத்தகங்கள் கூட சீனியர்ஸ்,ஜூனியர்ஸுக்கு நடுவில வித்துடுவோம். (Re-use)//

அதிலும் நல்லா படிச்சவங்க புத்தகங்களுக்கு தான் மவுசு அதிகம்... ஏனா ஒன்னு அதே புத்தகத்தில் படிச்சா எங்க அவங்கள போல நல்ல மதிப்பெண் வந்துவிடாதா என்கிற நப்பாசை... இன்னொன்னு..... அதில் பதில்களும், குறிப்புகளும் வேலையை மிச்சப்படுத்தும் என்பதால்.... பள்ளி நியாபகத்த தொண்டிட்டீங்க போங்க....

ஸாதிகா said...

சபாஷ!!

gulf-tamilan said...

நல்ல முயற்சி. தொடர்ந்து அப்படியே கடைப்பிடித்தால் நல்லது.
/பழைய 21” டி.வி.யும், 14” மானிட்டரும் இன்னும் அப்படியே இருக்கு. சும்மா தரேன்னாகூட யாரும் வாங்கிக்க ரெடியாயில்ல!/
ஜெத்தாவுக்கு அனுப்புங்க!!! :))))

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு.

Prathap Kumar S. said...

---------------
---------------
பேச்சே வரலை ஹுசைனம்மா... பதிவைப்படிச்சு அப்படியே மெய்மறந்து உக்காந்துருக்கேன்...2012 க்குள்ள உங்க லட்சியத்தை அடைஞ்சிருவீங்கபோலருக்கு :)

Prathap Kumar S. said...

//எங்களையெல்லாம் வச்சுட்டு மேற்கொண்ட வாசங்கள் சொன்னதை வன்மையாக கண்டிக்கிறோம்..//

இந்தக்கூட்டத்துல என்னை எதுக்குவே சேர்த்தீரு... இப்படி பதிவு பதிவாப்போய் என்பேரை நாறடீக்கீரே... நல்லாருவே...

ஜெய்லானி said...

நிறைய யோசிக்க வேண்டிய கேள்விகள்.......நாமும் முயற்சிப்போம்.

Unknown said...

அழகாக சொல்லியிருக்கிங்க.. இரண்டு முறை வந்து இந்த பதிவை படித்தும் உடனே பதில் போடமுடியவில்லை..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

:)) உங்களுக்கு இன்னொரு தொணையும் இருக்கு.. கவலப்படாதீங்க ஹூசைனம்மா! அப்பப்ப நாம ஒருத்தருகொருத்தர் ஆறுதல் சொல்லிக்கலாம் :)

நானெல்லாம் பத்தாவது பன்னெண்டாவது அப்ப ஸ்லேட் பலக, பென்சில் வாங்கி கணக்க அழிச்சு அழிச்சுப் போட்டு பாத்து பழகின ஆளு! கஞ்சத்தனமில்ல.. தேவையில்லாம பேப்பர் வீணாகக்கூடாதுன்னு தான்.. என்னால வீட்டுல ரீசைக்கிள் பண்ண முடியாது.. முத ரெண்டையும் முடிஞ்சளவு பண்ணிட்டு இருக்கேன்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல மேட்டர் , எல்லோரும் இதை கவனத்துல கொள்ள வேண்டியது .
நல்ல பதிவு ஹூசைனம்மா

*இயற்கை ராஜி* said...

நல்ல சமூக அக்கறை

செந்தில் நாதன் Senthil Nathan said...

//சீரியசான விஷயத்தை மிகவும் சுவையோடு சொல்லிருக்கீங்க//

உண்மை..

எனக்கு இந்த குளோபல் வார்மிங்-ள நம்பிக்கை கிடையாது.
ஆனா "Reduce, Reuse, Recycle" விசயத்துல நானும் உங்க கட்சி தான். ஆபீஸ்-ல பல பேர் தேவையே இல்லாம பிரிண்ட் பண்ணும் போது மனசு கேட்காது. சில நேரம் ஒரு முழு புத்தகத்தையே பிரிண்ட் பண்ணுவாங்க. அதுவும் ஒரு பக்க பிரிண்ட். பின் பக்கம் ஒன்னும் இருக்காது. :(

டவுசர் பாண்டி said...

காந்தி தாத்தா இருந்தாரே !! அவரு இது மேரி ஆளு தான் , ஒரு சின்னப் பேப்பரு கெடச்சா கூட அதுல தான் லெட்டரு எழ்துவாராம் !! நல்ல விசியம் !!

SUFFIX said...
This comment has been removed by the author.
அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல இடுகை.

இந்த டி.வி. விஷயத்துல ஒரு பெரிய கொடுமை என்னன்னா, தமிழ்நாட்டுல இலவச டி.வி. கொடுத்தப்பிறகு வீட்டுக்கு ரெண்டு டி.வி இருக்கு. இதனால கேபிள் பில்லும், கரண்ட் பில்லும் கூடுனதுதான் மிச்சம். கூடுதலா சில வீடுகளில் இந்த டி.வி.யைப் பயன்படுத்தாம எலிகளுக்கு புகலிடம் கொடுத்து வெச்சிருக்காங்க :((((

அரசாங்கமே இதை ஊக்குவிக்கிறா மாதிரி இருக்கு.

மொபைல்: டி.வி.யில ஒரு விளம்பரம் வந்துச்சு. உங்ககிட்ட இருக்கிற பழைய மொபைல் போன்களை முதியோர் இல்லங்களுக்கு / ஆசிரமங்களுக்கு வழங்குங்கள் அப்படின்னு. நல்ல யோசனையாதான் பட்டுச்சு.

பேப்பர் விஷயத்துல உங்க ஆபிஸ் மாதிரிதான் எங்க ஆபிஸும். எனக்கும் கடுப்பாதான் வரும், என்ன செய்றது :(

SUFFIX said...

நல்ல இடுகை ஹூசைனம்மா, அதுவும் இந்த ஈமெயில் பிரிண்ட் எடுப்பது மிகவும் கொடுமை, CC வேற போடுவதனால எல்லோரும் ஆளுக்கொரு பிரதி எடுத்து, சருட்டுன்னு கிழிச்சுப் போடுவது அன்றாட காட்சி. நான் எழுதிய இந்த இடுகையையும் பாருங்களேன்.

Abu Khadijah said...

நிறைய யோசிக்க வைச்சிட்டிங்க,
அதெப்படி அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வர்ரது, சும்மா தந்தா கூட வாங்குவதற்கு யாருமே ரெடியா இல்லேன்னு? அட்ரஸ் தாரேன் கூரியர்ல அனுப்பிடுங்க(ஆனால் கூரியர் செலவும் உங்களோடுதான்)

நாஸியா said...

அட, யோசிக்க வேண்டிய பதிவு... நானும் முடிந்த அளவுக்கு சாமான்களை சும்மாவாச்சும் வாங்கி சேர்க்காம இருக்கேன்.. புதுசா வீடு குடி வந்தப்போ மளிகை சாமான் போட்டு வைக்க குறைந்த அளவே டப்பா வாங்கினேன்.. எப்படியும் சில பொருட்கள் வாங்கும்போது டப்பா கிடைக்கும், அது முடிய்ம்போது பாவிக்கலாம்னு..


ஆனா கொஞ்ச நாளா மக்கர் பண்ணிட்டு இருக்குற என்னுடைய லேப்டாப்ப குடுத்துட்டு புதுசு ஒண்ணு வாங்கனும்னு தோணுது.. இப்ப யோசிக்கிறேன்..

ஜஸகல்லாஹு க்ஹைர்

அன்புத்தோழன் said...

இந்த பதிவுக்கு முதல் முதலில் நான் தான் பின்னூட்டம் போட்டேன் ஆனா காணோம்( some technical faulto)... எது எப்டியோ ஹுஸைனம்மா... நானும் உங்க கட்சி தான் இந்த விஷயத்துல... ரொம்ப நல்ல விஷயங்களை சொல்லிருக்கீங்க.... தற்போதுள்ள சூழ்நிலையில் இவைகளை இப்படி ஒரு பதிவை போட்டு நியாபக படுத்துவது ரொம்ப அவசியமான ஒன்று தான்....

ஹுஸைனம்மா said...

அன்புத்தோழன்,
//முதலில் நான் தான் பின்னூட்டம் போட்டேன் //

நீங்க சொன்னப்புறம்தான் கவனிச்சேன். என் மெயிலுக்கு வரும் பின்னூட்டங்களைத்தான் அங்கிருந்தே பப்ளிஷ் செய்வேன். இப்ப சில நாளா, டேஷ் போர்டில சில கமெண்ட்ஸ் இருக்கு, மெயிலுக்கு வராமலேயே!! என்ன காரணம்னு புரியல.

நல்லவேளை சொன்னீங்க, இல்லைன்னா அடுத்த பதிவு போடும்போதுதான் பாத்திருப்பேன். ரொம்ப நன்றிங்க.

அன்புத்தோழன் said...

//ரொம்ப நன்றிங்க//

நல்ல நட்பிற்குள் நன்றி எதற்கு.... இப்படிப்பட்ட பெரிய வார்த்தைகளை எல்லாம் சேர்த்து வைங்க.... பின்னாடி உதவக்கூடும்...

ஹுஸைனம்மா said...

அப்துல்லா - நன்றி.

ஜமால் - கணிணி வந்து வாங்கிக்கோங்க. இலவச சர்வீஸெல்லாம் கிடையாதாஆன்னா, இல்லை. ;-)

சில சம்யம் நல்ல நிலையில் இருக்கும் பழைய மொபைல், டி.வி. போன்றவற்றை இங்கே தெரிந்த கீழ்நிலைப் பணியாளர்களுக்குக் கொடுப்பதுண்டு.

கண்ணா - நோ ஃபிரீ சர்வீஸ்; வந்து வாங்கிட்டுப் போலாம்!! பிரதாப்பும் உங்கள மாதிரின்னா சொல்றீங்க? ;-)

சித்ரா - ஆமா, அதெல்லாம் கண்டுக்கிறதில்லை. கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரமாய் இப்பத்தான் நிறைய கம்பெனிகள் சிக்கன நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

ராகவன் சார் - நன்றி. அடிக்கடி வாங்க.

ஹுஸைனம்மா said...

அன்புத்தோழன் - அப்ப என்னையும் சைக்கிள் கேப்ல உங்கள மாதிரி லூஸுங்கிறீங்க? அதுக்கெல்லாம் அசர மாட்டோம்ல!! ;-)

ஆனா, நானும் நல்லா படிச்சாலும், என் புக்ஸ் விலைபோகல; ஏன் தெரியுமா? அதான் படிச்சுக் கிழிச்சிட்டேன்ல!! எப்பூடி!!

ஸாதிகாக்கா - நன்றி.

விதயா - நன்றி.

பிரதாப் - உண்மையிலேயே பாராட்டுறீங்களா? ஆனா, 2012ன்னு சொல்லறதை பாத்தா...

ஹுஸைனம்மா said...

ஜெய்லானி -நன்றிங்க.

சிநேகிதி - இரண்டு முறை படிச்சீங்களா? ரொம்பப் பொறுமைங்க உங்களுக்கு!!

எல் போர்ட் - சந்தோஷமாருக்கு இப்படியும் என்னைப் போலவும் ஆட்கள் இருக்காங்கங்கிறது!! ;-)

ஸ்டார்ஜன் - நன்றி.

இயற்கை - நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

நல்ல பகிர்வு ஹுஸைனம்மா.

//வருத்தமிருந்தாலும் என்னளவில் நான் முயற்சிகளைத் தொடர்கிறேன், அவை கடுகளவே என்றபோதிலும்!!//

வெல்டன்....

செந்தமிழ் செல்வி said...

ரொம்ப நல்ல பதிவு. அலுவலகத்தில் நான் எழுந்து வரும் போது ஃபேன், லைட் எல்லாம் ஆஃப் செய்தி்ட்டு வருவேன். மற்றவர்கள் ஏளனமாகப் பார்ப்பார்கள். நம்மைப் பார்த்து ஒருவராவது மாறினால், அது நமக்குக் கிடைக்கும் வெற்றியே!

அம்பிகா said...

//ஆனா ஆஃபீஸ்லயும், உறவுகள் மத்தியிலும், இப்படி சிக்கனம் பேண நான் செய்யும் சில முயற்சிகள் ஏளனமாகவே பார்க்கப்படுகின்றன. வருத்தமிருந்தாலும் என்னளவில் நான் முயற்சிகளைத் தொடர்கிறேன், அவை கடுகளவே என்றபோதிலும்!!//

அருமையான பகிர்வு ஹூசைனம்மா.
அவசியமானதும் கூட.

enrenrum16 said...

Hussainamma....என்னை பொருத்த வரையில் நாம சிக்கனமா இருக்கிறத விட கஞ்சத்தனம் காட்டினால் தப்பேயில்ல. அலுவலகங்களிலும் மற்ற இடங்களிலும் பார்க்கும் விரயங்களை பார்த்தா கோபமும் வருத்தமும் வரும்.தனி மனிதர்கள் சிலர் கூட தங்களோட மனசாட்சிக்கு விரோதமா பந்தா பன்னிட்டு நாட்டையும் வீட்டையும் கெடுக்கிறத விட கொஞ்சமாவது யோசிக்கணும். அமிர்தவர்ஷினி அம்மா சொன்ன மாதிரி அட்வைஸும் பன்னிட்டு அதுக்கு விரோதமா நடந்துக்கிற அரசாங்கத்தை நினைச்சா நம்ம பி.பி. எகிறுது.அதுவும் கண்ணுக்கெதிரில் துபை பண்ற அநியாயத்தை பார்த்தா....ஸ்ஸூ...அப்பா...லைட்ட அணைச்சுட்டு தூங்க போறேன். Indeed a very important post in need.

athira said...

ஹூசைனம்மா... முதலில் ஒரு சிறுகதை.....

எனக்கு இவ்வளவுகாலமும் தெரியாது, நீங்கதான் திருமதி ஹூசைன் என்று:), நான் யாரோ பெரியவராக்கும் என ரொம்ப மரியாதைகொடுத்துக் கதைத்து வந்தேன்...:)..முறைக்கப்படாது முழுவதையும் சொல்ல விடவேணும்..


இப்போ கண்டுபிடிச்சிட்டேனெல்லோ.. அழக்கா விஷயங்களைச் சொல்கிறீங்க வாழ்த்துக்கள்.. அதையும் தாண்டி ஒவ்வொருவரது கொமென்சும் சிரிக்க வைக்குது... எல்லாமே அருமை.

கண்மணி/kanmani said...

//என்னளவில் நான் முயற்சிகளைத் தொடர்கிறேன், அவை கடுகளவே என்றபோதிலும்!!//

இப்படி சின்ன கடுகளவு முயற்சி கூடகொஞ்சம் கொஞ்சமா சேர்ந்தா மலையளவு ஆகிடுமே

ஹுஸைனம்மா said...

செந்தில்நாதன் - நன்றிங்க. எனக்கும் குளோபல் வார்மிங் விஷ்யத்துல ரொம்ப பயங்காட்டுறாங்களோன்னு ஒரு ஃபீலிங். ஆனா, நம்ம கடமைய ஒழுங்கா செஞ்சா, பூமியும் சரியா இருக்குமில்லியா?

பாண்டியண்ணே - நல்ல விசியம் ஃபாலோ பண்ணுவோம். நன்றி.

ஷஃபிக்ஸ் - ஆமாங்க; அது மெயில்லதான அனுப்புறோம்னு கூட ஒரு 4 பேருக்கு CC போடுறதையும் தவிர்க்கணும்.

அமித்தம்மா - நன்றிங்க. //கேபிள் பில்லும், கரண்ட் பில்லும் கூடுனதுதான் மிச்சம்// அதுதானே அவங்க எதிர்பார்த்ததே!!

பழைய சாதனங்கள், பொதுவா இங்க தெரிஞ்ச லேபரர்ஸ்க்குக் (அவங்க விரும்பினா) கொடுக்கிறதுண்டு.

ஹுஸைனம்மா said...

அதிரை எக்ஸ். - ஏற்கனவே சொல்லிட்டேன், நோ ஃப்ரீ சர்வீஸ்!!

நாஸியா - லேப்டாப்ல இதான் பிரசனை வந்துதுன்னா, தொட்டுத்தொட்டு வந்துகிட்டேயிருக்கும். சரி பண்ணப் பாருங்க முடிஞ்சளவு.

ஆரம்ப காலங்கள்ல ஆசைப்பட்டு நிறைய சாமன்கள் வாங்கி நிறைக்கிற தப்பு நானும் பண்ணிருக்கேன்!! ;-))

அமைதிச் சாரல் - நன்றிங்க.

செல்விக்கா - வாங்க, வாங்க. காலேஜ் தொடங்கி இப்ப வரைக்கும் அந்த வேலை எனக்குன்னே வச்சிட்டாங்கக்கா!! சில ஃபிரண்ட்ஸ் மாறினதுண்டு.

ஹுஸைனம்மா said...

அம்பிகா - நன்றிங்க.

என்றும் - வாங்க; சில விஷயங்கள்ல கஞ்சத்தனமும் நல்லதுதான்.

ஹை அதிரா!! //யாரோ பெரியவராக்கும் என ரொம்ப மரியாதைகொடுத்துக் கதைத்து வந்தேன்// இப்பத் தெரிஞ்சிடுச்சா, நான் பெரியவ இல்லை, உங்கள விடச் சின்னவன்னு!! ;-)) நன்றி வருகைக்கு.

கண்மணி - நன்றிங்க.

சாமக்கோடங்கி said...

லேட்டா வந்துட்டேன்..

என்னோட கருத்துகளோட ஒத்துப் போகும் விஷயங்கள்..

என்னோட பகுதிக்கும் வந்து பாருங்க.. நானும் சொல்லி இருக்கேன்..

நன்றி..

pudugaithendral said...

ரொம்பவே லேட்டா வந்திருக்கேன்,

நல்ல விழிப்புணர்வு தரும் பதிவுக்கு நன்றி ஹுஸைனம்மா.

ராமலக்ஷ்மி said...

//கடுகளவே என்றபோதிலும்!!//

எல்லா புரட்சிகளும் ஒரு கடுகு ஒரு பொறியிலிருந்துதானே ஆரம்பம். எல்லோரையும் சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு.

பாத்திமா ஜொஹ்ரா said...

அழகா விளக்கி இருக்கீங்க அக்கா