Pages

ஆண்டுவிழாக்களும் நானும்




இன்னொரு தொடர்பதிவு. கொசுவத்தி சுத்துறதுன்னா அத விட சந்தோஷம் வேற எது? அந்த காலத்துலன்னு ஆரம்பிச்சு..  சரி..சரி..

பள்ளியில் ஆண்டுவிழாக் கொண்டாட்டம்னு சொன்னா, அது பெரும்பாலும் டான்ஸ்தான். அப்பவெல்லாம்  “ஜெயிக்கப் போவது யாரு”களோ, இல்லை அதற்காக உயிரை விட்டு உழைக்கிற பெற்றோர்களோ இல்லாத காலம்!! நடன நிகழ்ச்சிகள் வழங்குவதற்கென்றே குறிப்பிட்ட சில திறமையான மாணவியர் உண்டு. ஒவ்வொரு முறை விழாவின்போது ஆசிரியைகளிடம் அவர்களுக்கு கிடைக்கும் மதிப்பும், வகுப்புகளைக் கட் அடிக்க சிறப்பு அனுமதிகளும் என்று அவர்களைப் பார்க்கப் பொறாமையாக இருக்கும்.

குழுவாக ஆடும் நடனங்களில் வாய்ப்புகள் கிட்டவேண்டுமென்றாலும், கொஞ்சமாவது நிறமும், அழகும் இருக்க வேண்டும். அதனால் எனக்கு அதுவும் அமையவில்லை.  ஏன், நாடகங்களில்கூட வாய்ப்பு கிட்டவில்லை;  பேச்சு, ஓவியம், கட்டுரை, பாட்டுன்னு மற்ற போட்டிகளிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பும் அறவே இல்லை - சட்டியில இருந்தாத்தானே அகப்பையில்??!! ஆக ஆண்டுவிழா வாய்ப்பு ஒரு ஏக்கமாகவே இருந்தது.


இப்படியிருக்கையில நாலாம் வகுப்பில கிறிஸ்மஸை ஒட்டி நடந்த விழாவுல என்னையும் ஒரு குரூப் டான்ஸ்ல சேத்துகிட்டப்போ அளவில்லா மகிழ்ச்சி எனக்கு. “கிங்கிணி  கிங்கிணி என வரும் மாதா கோயில் மணியோசை” என்ற, சிவாஜி மாலைக்கண் நோய் உடையவரா நடித்த படத்தில் இடம்பெற்ற பாட்டுக்கு,(இது சினிமாப் பாடல்னு ரொம்ப வருஷங்கள் கழிச்சுதான் தெரியும் எனக்கு) அழகான  பிரைட் பேபி பிங்க் கலர்ல, ஸாட்டின் துணியில, அடுக்கடுக்கா ஃப்ரில் வச்ச ஃப்ராக்தான் டான்ஸ் காஸ்ட்யூம்!! அதுக்கு ரிகர்ஸல் நடந்துகிட்டிருந்தப்போ, ஒருநாள் என் டீச்சரை முந்திகிட்டு நான் ஏதோ ஐடியா சொல்லப்போக, டீச்சருக்கு என் மேல பயங்கர கடுப்பாகி, அந்த வருஷமுடிவு வரை அதைச் சொல்லியே திட்டிகிட்டு இருந்தாங்க.

இந்த அனுபவமும், உடைக்குரிய பணத்தை அம்மாகிட்ட வாங்கிறதுக்குள்ள பட்ட பாடும் என் டான்ஸ் ஆர்வத்தையே மூட்டை கட்ட வச்சுடுச்சு!!

அப்புறம், ஒரு நீண்ட இடைவேளைக்கப்புறம், பதினொன்றாம் வகுப்புல ஒருநாள் பி.டி.  டீச்சர் வகுப்புக்கு வந்து, சில மாணவிகளை அவங்களா எழுப்பி விட்டு, பேர்களைக் கேட்டு எழுதிட்டுப் போய்ட்டாங்க. என்ன ஏதுன்னு ஒண்ணு சொல்லல. மறுநாளும் அதே போல வந்து நான் உட்பட இன்னும் சிலரை எழுப்பிவிட்டு பேர்களை எழுதிகிட்டாங்க. அப்ப கிளாஸ் டீச்சர் அவங்ககிட்ட என்னன்னு விவரம் கேட்க, “இண்டிபெண்டண்ட்ஸ் டேக்கு வ.உ.சி. மைதானத்துல கலெக்டர் கொடியேத்தையில  நம்ம ஸ்கூல் சார்பா டான்ஸ்க்கு பிள்ளைங்க செலக்ட் பண்றோம். கொஞ்சம் கலரா உள்ள பிள்ளைங்களா மட்டும் பாத்து எடுத்தா பத்த மாட்டேங்குது; அதான் கொஞ்சம் சுமாரா இருந்தாலும் பரவால்லன்னு இன்னிக்கு இன்னும் கொஞ்ச பேர செலக்ட் பண்ணேன்”னு பி.டி.டீச்சர் சொன்னாங்க!!

நாங்க எல்லாருமே ரொம்ப அனுபவிச்சு செஞ்ச நிகழ்ச்சி அது!! உடைக்குன்னு பெருசா செலவு எதுவும் இல்லைங்கிறதும் ஒரு காரணம். கலர்ப் பேப்பர் வாங்கி, யூனிஃபார்ம் பாவாடை, சட்டையில் அடுக்கடுக்காக ஃபிரில் போல சுருக்கு வைத்து தைத்துக் கொண்டால் உடை ரெடி!! அலை போல எழுந்து அடங்கும் டான்ஸ் அது. டான்ஸ் ரிகர்ஸல், உடை தயாரிப்பு என்று வகுப்புகளைக் கட் அடிக்கவும் முடிந்ததால் மிகவும் மகிழ்ச்சியான காலம் அது.

நிகழ்ச்சி அன்று, எங்களை அழைத்துச் செல்ல இரண்டு பெண் காவலர்களுடன் வந்திருந்த அரசு வாகனத்தில் (ஹி.. ஹி.. போலீஸ் வேனேதான்!!)  ஏறப்போனபோது, ஒரு காவலர் என்னிடம், “ஏம்மா மேக்கப் போடல? கொஞ்சம் பவுடராவது தேச்சுருக்கலாம்ல?”னு அப்பத்தான் பவுடர் போட்டுட்டு வந்த என்னைப் பாத்து கேட்டாரே பார்க்கலாம்!!  பி.டி. டீச்சர் செஞ்சது தப்பேயில்லைன்னு தோணுச்சு.

அடுத்தது, பன்னிரெண்டாம் வகுப்பு ஆண்டுவிழாவில், தமிழாசிரியை எழுதிய தமிழ் வரலாற்று நாடகத்தில் நான்தான் மெயின் ரோல் - அரசர் வேஷம்!! வீராவேசமான வசனங்கள் வேற!! ராஜா உடைக்காக, நல்ல கிராண்டாகப் பட்டுச்சேலை வேண்டுமென  சொல்ல, நான் அம்மா, சித்திகளின் கல்யாணச்சேலையைக் கொண்டு வந்தால், எதுவுமே கிராண்டாக இல்லை என்று ரிஜெக்ட் செய்துவிட்டார்!! சேலை கிடைக்கலைன்னா, அரசர் பதவி போய்டுமேன்னு நான் கலங்க, அம்மா, வசதியான வீட்டிலிருந்து வந்த அவரது அண்ணியிடம் போய்க் கேட்கச் சொன்னார்; அத்தைக்கு மனசேயில்லை; என்றாலும் கேட்பது நாத்தனார் மகளாச்சே, முடியாதுன்னு சொல்லமுடியுமா? “நிறைய பின் குத்தாதே”ன்னு ஒரு நூறுதரம் சொல்லித் தந்தாங்க.

நிகழ்ச்சியன்னிக்கு, தேசமில்லா ராஜாவா நான் கம்பீரமான உடையலங்காரத்தோட எங்க முறையை எதிர்பார்த்து நிக்க, அவசரமா டீச்சர் வந்து சொன்னாங்க, “நேரமாகிடுச்சு, அதனால நம்ம நாடகம் கேன்ஸல்!!”. கைக்கெட்டினது...


அப்புறம், கல்லூரி இறுதியாண்டுல நாங்க பொறுப்பெடுத்து நடத்துன ஆண்டுவிழாவில், ஒரு நிகழ்ச்சியிலாவது பங்குபெறணும்னு தேர்ந்தெடுத்த நிகழ்ச்சி “விளம்பரம் செய்வது”. நாங்க நாலு தோழிகள் சேர்ந்து, கான்செப்ட் ரெடிபண்ணி, வசனமெல்லாம் எழுதி ரெடி பண்ணியாச்சு. இப்ப ஒரே ஒரு “ஹீரோ” வேணும்!! 24 பெண்கள் + 6 ஆண்கள் உள்ள எங்க வகுப்பில உள்ள ஆறு ஆண்கள்ல யாருமே முடியாதுன்னுட்டாங்க. அப்புறம், அடுத்த டிபார்ட்மெண்ட்ல உள்ள ஸ்மார்ட்டான ஒரு பையன் சரின்னு வந்தான். ஒத்திகையெல்லாம் பாத்துகிட்டிருக்கும்போது, ஒரு நாள், எங்க டீம்ல உள்ள ஒரு பெண்ணை, அவளின் அடர்ந்த நிறத்தையும் அழகையும் குறிப்பிட்டு அவன் டீஸ் பண்ண, கோவம் வந்து நாங்க மூணுபேரும் அவன்கிட்ட சண்டை போட, நிகழ்ச்சி கேள்விக்குறியானது. அப்புறம், சில “நல்ல நாட்டாமை”களின் உதவியோடு அவன் மீண்டும் எங்கள் டீமில் வந்து நடித்துத் தந்தான். அதுக்கு ரெண்டாவது பரிசும் வாங்கிட்டோம்!!

என்னவோ ஆண்டுவிழாக்கள் (கூட!!) எனக்குத் தகராறாவே ஆகிப்போச்சு. பசுமையான நினைவுகளை அசைபோட வச்ச அழைப்புக்கு நன்றி தீபா!!


  
 
  

Post Comment

38 comments:

தேவன் மாயம் said...

ஆண்டு விழா அருமை!

Deepa said...

சுவாரசியமா எழுதி இருக்கீங்க.
ஆனா நிறத்தை அடிப்படையா பிள்ளைகளை நிகழ்ச்சிக்குத் தேர்ந்தெடுத்தது அதிர்ச்சியாவும் ஆத்திரமாவும் இருக்கு. நல்லா நினைவு படுத்திச் சொல்றேன், எங்க ஸ்கூல்ல இப்படி நடந்ததே இல்லை.
நாடகத்துக்கு பாத்திரங்களின் தன்மைக்கேற்ப உயரம், குரல் இதெல்லாம் பொருத்தமா இருக்கான்னு பார்ப்பாங்க; அவ்ளோ தான் மத்தபடி ஒழுங்கா யாரு டயலாக் சொல்றாங்களோ இல்ல டான்ஸ் ஆடறாங்களோ, அவங்களுக்குத் தான் சான்ஸ்.

//சேலை கிடைக்கலைன்னா, அரசர் பதவி போய்டுமேன்னு நான் கலங்க, // ராஜாவுக்கு எப்படி சேலை கட்டி விட்டாங்க? :))

அப்துல்மாலிக் said...

நல்ல பகிர்வு

சாந்தி மாரியப்பன் said...

பயங்கர சுவாரஸ்யமா இருக்கு..:-)))))

Anonymous said...

//கொஞ்சம் கலரா உள்ள பிள்ளைங்களா மட்டும் பாத்து எடுத்தா பத்த மாட்டேங்குது; //

அந்த கலரா இருக்க பிள்ளைங்களும் வெயில்ல நின்னு ப்ராக்டிஸ் பண்ணி கருத்துப்போயிடுங்க

தூயவனின் அடிமை said...

உங்கள் பள்ளி நாட்களை கூறி, அனைவரின் பள்ளி நாட்களையும் நினைவு படுத்தி விட்டிர்கள்.

ராமலக்ஷ்மி said...

வழக்கம் போலவே வெகு சுவாரஸ்யம்:))! சூப்பர் (ராஜ) நடை.

நாடோடி said...

உங்க‌ளுடைய‌ நாட‌க‌ அனுப‌வ‌ம் ந‌ல்லா இருக்குங்க‌.. :))

Menaga Sathia said...

ரொம்ப சுவராஸ்யமா இருந்துச்சு...

Prathap Kumar S. said...

உங்க வாழ்க்கைல இவ்ளோ ட்ராஜிடி நடந்திருக்கா.... ம்ச்...ஆனாலும் ஒரு பெண்ணின் இளமை காலங்கள் இவ்ளோ ட்ராஜிடியா ஆனது ஒவர்தான்...:)

கண்ணா.. said...

கொசுவத்து நல்லா சுத்திருக்கீங்க.... நானெல்லாம் எதுலயும் கலந்துகிட்டதுல்ல.... கலந்துகிட்டவங்களை கலாய்க்கிறதுதான் வேலை...:)

மாதேவி said...

"நிறத்தை அடிப்படையா பிள்ளைகளை நிகழ்ச்சிக்குத் தேர்ந்தெடுத்தது"
கவலை கொள்ள வைக்கிறது. மற்றையவை ரசனை.

அபி அப்பா said...

அடடா ஹுசைனம்மா,அப்படீன்னா உங்க ஊர்ல ராணி எல்லாம் வேஷ்டியா:-)))

நல்லா இருக்கு கொசுவத்தி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிறம் ப்ரச்சனையா இருப்பது ஆண்டுவிழா ல கூடயா :(

ரிஷபன் said...

என்னவோ ஆண்டுவிழாக்கள் (கூட!!) எனக்குத் தகராறாவே ஆகிப்போச்சு.
அப்படி ஆனதாலதான் இப்ப சுவாரசியமா பதிவு கிடைச்சிருக்கு.

நசரேயன் said...

//அந்த கலரா இருக்க பிள்ளைங்களும் வெயில்ல நின்னு ப்ராக்டிஸ் பண்ணி
கருத்துப்போயிடுங்க//

இதனாலே தான் நான் கருப்பு ஆகிட்டேன்

நசரேயன் said...

நல்ல கொசுவத்தி

vanathy said...

ஹூசைனம்மா, நல்ல பதிவு. இப்படி கலர் பார்ப்பது பெரும்பாலும் எல்லா பள்ளிகளிலும் நடக்கும். நான் படித்த பள்ளியிலும் அப்படித்தான். கலராக இருந்தால் அவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். அதோடு பள்ளிக்கு யாராவது பெரிய தலைகள் வருகிறார்கள் எனில் வாசலில் பட்டுப்புடவை கட்டி, பூத் தட்டுடன் நிற்பவர்களும் நல்ல கலராக இருக்க வேண்டும்.

Abdulcader said...

சகோதரி! நல்ல கொசுவத்தி சுத்துறீங்க.ஒரு அருமையான மலரும் நினைவு.

Abdulcader said...

சகோதரி! நல்ல கொசுவத்தி சுத்துறீங்க.ஒரு அருமையான மலரும் நினைவு.

Abdulcader said...

சகோதரி! நல்ல கொசுவத்தி சுத்துறீங்க.ஒரு அருமையான மலரும் நினைவு.

அம்பிகா said...

பகிர்வு படு சுவாரஸ்யம்.
\\தீபா,
ராஜாவுக்கு எப்படி சேலை கட்டி விட்டாங்க? :))\\
பட்டுசேலைய ஒரு மாதிரி பஞ்சகச்சம் மாதிரி கட்டி விடுவாங்க

Thenammai Lakshmanan said...

நல்லா இருக்கு ஹுசைனம்மா..
அது சரி பெரிய வசனமா ஒண்ணு பேசிக் காட்டுங்க..:))))

Chitra said...

கலராக இருக்கும் பிள்ளைகள் தான் திறமைசாலிகள் என்ற நினைப்பு....... இந்த மாதிரி யோசிக்காமலே பேசும் ஆசிரியர்கள் இருக்கும் போது, மற்ற பிள்ளைகளை குறை சொல்லவும் முடியாது... இதையெல்லாம் தாண்டி வந்து, இன்று அதை பற்றி பேசி சிரிக்க முடிகிறதே..... நல்ல வரம் தான்.... அமர்க்களமான பதிவுங்க!

ஸ்ரீராம். said...

நல்லதொரு நினைவுப் பதிவு.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பகிர்வு...

ஹுஸைனம்மா said...

டாக்டர், வாங்க நன்றி.

தீபா, நிறம் பார்ப்பதற்கு (பார்த்ததற்கு) இப்பப் போல வகை வகையான அழகு சாதனப் பொருட்கள் இல்லாததும் அதுக்கு முக்கிய காரணம்னு நினைக்கிறேன். ஆனால், நிறம் மட்டுமே பங்கேற்பவர்களைத் தீர்மானிப்பதில்லை; திறமையையும் கணிக்கவே செய்தார்கள்.

ராஜாவுக்கு எப்படி உடை அணிவித்தார்கள் என்று ஞாபகமில்லை; ஆனால் இந்தப் பளபளா சேலையை முதுகில் மாட்டி விட்டிருந்தார்கள். (லக.. லக..வில் ரஜினிக்கு தொங்குமே அது போல...)

அப்துல் மாலிக், நன்றி.

ஹுஸைனம்மா said...

சின்ன அம்மிணிக்கா, வாங்க. ஆமாக்கா, அதுவும் இந்த ஸ்போர்ட்ஸ் டேக்கு மார்ச் பாஸ்ட்ல ரெண்டு பேராவது மயங்கி விழுவாங்க தெரியுமா!!

தூயவன், நன்றி.

ராமலக்‌ஷ்மிக்கா, டபுள் நன்றி. (பின்ன, ராஜ நடைன்னு பாராட்டிருக்கீங்களே!)

நாடோடி, நன்றி.

மேனகா, நன்றி.

ஹுஸைனம்மா said...

பிரதாப்: ஆமா பிரதாப், இவ்வளவு டிராஜிடியையும் தனியொரு ஆளா நின்னு ஜெயிச்சு வந்திருக்கேன்னா அதுக்கு என்ன காரணம்னு யோசிச்சுகிட்டிருந்தேன் இவ்வளவு நாளா. இப்பத்தான் புரியுது, பதிவுலகத்துக்கு வர்றதுக்குதான்னு!! ;-))

கண்ணா - அது தனி சுகம்ங்க, கலாய்க்கிறது.

மாதேவி - இப்ப மாறி வருகிறது. நன்றி.

அபி அப்பா - ராணிக்கு வேஷ்டியா.. அவ்வ்வ்வ்...

ஹுஸைனம்மா said...

முத்துலட்சுமிக்கா - ஸ்கூல்ல அப்ப மட்டும்தான் பிரச்னை. :-)))

ரிஷபன் சார் - வாங்க, நன்றி.

நசரேயன் - இப்பத்தான் கருப்பா, அதுக்கு முன்னாடி, யானைச் சிவப்போ நீங்க? :-))) முதல் வருகைக்கும், தொடரப்போகும் வருகைகளுக்கும் நன்றி.

வானதி - ஆமாங்க, வரவேற்புக்கு நிக்கணும்னா ஸ்பெஷல். ஆனா, அந்த வெயில்ல நிக்கிற கொடுமைக்கு, நல்லவேளை நானெல்லாம் நிறமாயில்லன்னு சந்தோஷப்பட்டுக்குவேன்!!

காயலாங்கடை காதர் - வாங்க நன்றி.

ஹுஸைனம்மா said...

அம்பிகா - நன்றிப்பா.

தேனக்கா - நன்றி. அவ்வ்வ், இப்படிலாம் ராகிங் பண்ணுவீங்களா நீங்க?

சித்ரா - ஆமாப்பா, அப்ப நடந்ததெல்லாம் நினைச்சா இப்ப சிரிப்புதான் வருது!! சில படிப்பினைகளும் கிடைச்சுது.

ஸ்ரீராம் - வாங்க, நன்றி.

வெறும்பய - நன்றி.

ஜெய்லானி said...

இப்ப கிடைக்குற மேக்கப் செட் அப்ப இல்ல இதான் பிரச்சனையே... ரஜினி , விஜய் , கவுண்ட மணி எல்லாம் அட்டை பூச்சி கலர்


நல்ல பதிவு

Muniappan Pakkangal said...

Nice Husainammaa,nalla ninaivalaigal.VOC ground at Palayamkottai ?

சிநேகிதன் அக்பர் said...

எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இன்று நல்ல நிலையில் இருப்பது இறைவன் குடுத்த வரம்.

நம் அழகை தீர்மானிக்க அவர்கள் யார்.

மற்ற‌படி இடுகை வழக்கம்போலவே உங்கள் பாணியில் நன்றாக உள்ளது.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

படிக்க நல்லாயிருந்தது ஹூசைனம்மா.. அதுவும் உங்க ஏக்கங்கள நகைச்சுவையாச் சொல்லியிருந்தது பிடிச்சிருந்தது.. எனக்கும் இப்பிடி பல ஆப்புகள் கிடைச்சிருக்கு :))

pudugaithendral said...

எல்லாத்துக்கும் கொசுவத்தி சுத்த எப்படியோ ரெடியா இருக்கீங்க..ம்ம்ம்ம்
ரசிச்சேன்

கோமதி அரசு said...

ஆண்டுவிழா மலரும் நினைவுகள் நல்லா எழுதியிருக்கிறீர்கள்.

ப்ராடிக்ஸ் செய்ய வகுப்பு கட் ஆகும் போது மகிழ்ச்சிதான்.

என் பள்ளி காலமும் நினைவு வந்தது

நல்ல பகிர்வு.

R. Gopi said...

ஓ, இது ஒரு தொடர் பதிவா? நான்தான் அழைப்பே இல்லாமல் உள்ளே வந்துவிட்டேனா?