Pages

ரெண்டாங்கல்யாணம்




உயிரோசை  05 - 09 - 2011 இதழில் வெளியான எனது சிறுகதை.



காலிங் பெல் அடித்தது. அலுவலகம் கிளம்பிக்கொண்டிருக்கும் இக்காலைநேரத்தில் யார்? அபுதாபியில் சேல்ஸ்கேர்ள்/மேன் எல்லாம் அபூர்வத்திலும் அபூர்வம். அதிலும் அபூர்வம் யாசகம் கேட்டு வருபவர்கள். நோன்பு காலத்தில் கொஞ்சம் வருவார்கள். அதுவும் பெண்கள்தான். அவர்களைப் பார்த்தால், அவர்கள்முன் நாம்தான் எளிமையாகத் தெரிவோம்.

கதவு லென்ஸ்வழி பார்த்தேன். பர்தாவுடன் ஒரு பெண். சரிதான், எவ்வளவு கொடுக்கலாம் என்று நினைத்து மீண்டும் பார்த்தபோது, கையில் பெட்டி, பையுடன் நிற்பது தெரிந்தது. குழப்பமாகக் கதவைத் திறக்க, அவள் அதற்குமேலான குழப்பப் பார்வையுடன், "இது அஜீஸ் வீடுதானே?". அட, தமிழ்தான்!! 

"அஜீஸ் பாய் வீடு மூணாவது ஃப்ளோர். இது ஃபர்ஸ்ட் ஃப்ளோர்."

"ஓ.. நான் இப்பத்தான் ஊர்லருந்து வரேன். லிஃப்ட்ல பட்டன் மாத்தி அமுத்திட்டேன்போல."

"பரவால்ல. நான் வேணா கூட வரவா லிஃப்ட்ல? நீங்க யாரு? கூட யாரும் வரலையா?"

"இல்லை, நானே போயிக்கிறேன். நான் அவர் வைஃப். அவர்தான் ஏர்போர்ட் வந்தார். கீழே கார் பார்க்கிங் பண்ணிட்டிருக்கார்."

சொன்ன பதிலில் நான் அதிர்ந்து நிற்க, அவள் போய்விட்டாள். புன்னகைத்த மாதிரிகூட இருந்தது. பின்னே, ஏற்கனவே மனைவியும், இரண்டு மகன்களுமாக இருப்பவருக்கு, இவளும் மனைவியென்றால் அதிராதா? சின்னப் பெண்ணாகவும் தெரியவில்லை. தாடியும், தலையில் எப்பவும் தொப்பியுமாகத்தான் இருப்பார் அஜீஸ்பாய். ஐவேளையும் மகன்களோடு பள்ளியில்தான் தொழுகை என்று என்னவர் சொல்வார். அப்படிப்பட்டவரா?

அவர் மனைவியோடு எனக்குப் பரிச்சயமில்லை; மற்ற ஃப்ளாட்டுகளில் இருப்பவர்களையாவது அவ்வப்போது லிஃப்டில் பார்க்கும்போது ஒரு புன்னகையும், "கேஸே ஹோ?" அல்லது "சுகந்தன்னே?" என்று ஒரு வரியில் நலம் விசாரிப்புடன் முடிந்துவிடும். அஜீஸ்பாய் மனைவியை மட்டும் பார்த்ததேயில்லை. ஏனென்று இப்போத்தான் கேள்வி வந்தது. அவரின் இரண்டாவது மகனுக்கு என் சின்னவனைவிட இரண்டொரு வயதே குறைவாக இருக்கும். இப்போப் போயி, ரெண்டாங்கல்யாணமா? தாங்கவே முடியலை.

மாலை வீட்டிற்கு வந்த என்னவரிடம், வாசற்கதவு திறந்த கையோடு இதைச் சொல்ல, அவருக்கும் அதிர்ச்சி. ஆனாலும், அது அவரை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. எனக்கோ இந்தச் சிந்தனை அரித்துக் கொண்டேயிருந்தது.  

ஒவ்வொரு முறை என்னவர் தொழுகைக்காகப் பள்ளி சென்று வந்தபோதும் "அஜீஸ்பாய் பாத்தீங்களா? ஏதாவது கேட்டீங்களா? அவராவது சொன்னாரா?" என்று கேட்க, கடைசியில் எரிந்தே விழுந்தார். "தொழ வந்திருக்க ஒரு மனுசங்கிட்ட, நீங்க ரெண்டாங்கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களாமேன்னு எப்படிபோய் கேக்கமுடியும்? அவரென்ன புதுவேலைக்குப் போறாரா? இல்லை புதுவீடு, கார் வாங்கிருக்காரா? விசாரிக்க? அவரென்ன பண்ணா நமக்கென்ன? உன்வேலையப் பார்."

கோபத்தில் முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டாலும், "நடந்தது என்ன?" பாணியில் அரித்துக் கொண்டேயிருந்தது. ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் நாங்கள் மட்டும்தான் குடும்பமாக வசிப்பது. மற்றதெல்லாம் பேச்சிலர்கள். அதனால் யாரிடம் விசாரிக்க? மற்ற ஃப்ளோர்களில் இருப்பவர்களிடமும் லிஃப்ட்-நட்பு மட்டுமே. அதில் இதைப் போய் எப்படிக் கேட்பது?
எதுவுமே தெரியவில்லை. இரு மனைவியரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிந்தது. இப்படியே ஒருவாரம் போனது. பின் மாதங்கள் கழிந்தது. மறந்துவிட்டாலும், அவ்வப்போது ஞாபகம் வந்துபோனது. 

ன்றரை வருடங்கள் கழித்து, நான் காலையில் ஆஃபீஸ் போக வண்டிக்காகக் காத்து நிற்கையில், அதோ அவளேதான் - அட, தள்ளுவண்டியில் ஒரு குழந்தையும்கூட!! 

புன்னகைத்துக் கொண்டோம், "எங்கே ஆளையேக் காணோம்?" என்ற என் கேள்விக்கு, "ஆஃபீஸுக்குக் கிளம்பியாச்சா?" என்ற கேள்வியையே பதிலாக்கினாள். பிறகு தினமும் அவளை அந்த நேரத்தில் பார்க்க முடிந்தது. மகனுக்குள்ள சரும பாதிப்பிற்காக, மருத்துவர் அறிவுரைப்படி காலைவெயிலில் வாக்கிங் போகிறாளாம். தொடர்ந்த நட்பில் பலதும் பேசினாலும், அந்தக் கேள்வி மட்டும் என் மனதில் தொக்கி நின்றபடியே இருந்தது. எப்படி இவளிடம் கேட்பது? அஜீஸ் பாயிடம் என்னவரைக் கேட்கச் சொன்ன நான், சம்பந்தப்பட்டவளே என்முன் நின்றபோதும் கேட்கத் துணிவில்லாமல் நின்றேன்.

பலநாட்கள் பேசியதில், ஏழைத் தகப்பனுக்குப் பிறந்த ஐந்து மகள்களில் கடைசி என்று தெரிந்தது. அதான், ஈஸியா ரெண்டாங்கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க முடிஞ்சுதுபோலன்னு நெனச்சுக்கிட்டேன். நட்பு தொடர்ந்து வீடு வரை வந்தது. ஒரு மாலைநேரம் தனியாக வந்திருந்தாள். இந்தியா செல்வதைச் சொல்லிவிட்டுப் போக வந்திருக்கிறாளாம். பேசிக்கொண்டிருந்தபோது, மனதிற்குள் அதே அரிப்பு, கேளு, கேளு என்று. மீண்டும் தயக்கம். 

வளே சொன்னாள், "நானும் குழந்தையும் மட்டும்தான் போறோம். அக்காவும், பிள்ளைகளும் இங்கதான் இருக்காங்க. நான் டெலிவரிக்குப் போனப்போ அவங்களும் வந்திருந்தாங்க என்கூட. இப்ப நல்லாருக்காங்க, தனியா சமாளிச்சுக்க முடியும் அதான், அவங்க வரலை."

இதென்ன புதுக்கதை? ஓ, முதல் மனைவிக்கு உடல்நலமில்லை என்பதால், இரண்டாங்கல்யாணமோ? "என்ன உடம்புக்கு?"

"உடம்புக்கு ஒண்ணுமில்லை; மனசுக்குத்தான் சுகமில்லாம இருந்தாங்க. இப்ப என் கவனிப்பில் வந்தப்பறம் நல்லா ஆகிட்டாங்க. ரெண்டாவது பிரசவத்துக்கு அவங்களால ஊருக்குப் போக முடியல. தனியா இங்கயே இருந்து கஷ்டப்பட்டுட்டாங்க போல, அதான் கொஞ்சம் குழம்புன மாதிரி ஆகிட்டாங்க."

"போஸ்ட்-பார்ட்டம் டிப்ரஷன்" என நான் என் அறிவை விளம்பரம் செய்ய, புரியாமல் விழித்தவள்,"இல்ல, சிலருக்கு டெலிவரி சமயத்துல இப்படி மனக்குழப்பங்கள் வரும், அதச் சொன்னேன்" என்றதும் தொடர்ந்தாள்.

"ஓ? அப்படித்தான் இருக்கும்போல. அவரும் நிறைய ட்ரீட்மெண்ட் எடுத்துப் பாத்திருக்கார். ஆனா தனியா, சின்னக் குழந்தைகளை வச்சுகிட்டு, சரியா கவனிக்கவோ, நேரத்துக்கு மருந்து, ட்ரீட்மெண்ட் கொடுக்கவோ அவருக்கும் முடியல. ஊருலயும் பொறுப்பா கவனிச்சுக்க சொந்தக்காரங்க யாரும் இல்ல. அதான், ரெண்டாவதா என்னைக் கல்யாணம் செஞ்சு கூட்டி வந்தார். கல்யாணத்துக்கு மின்னயே எல்லா விபரமும் சொல்லித்தான் சம்மதம் வாங்கினார்."
 
சட்டெனச் சொன்னேன், "அதுதான் காரணம்னா, வேலைக்காரி வச்சிருக்கலாமே?"

"வேலைக்காரி வச்சுப்பார்க்கிற ரோகமில்ல இது. தெரியாத நாட்டுல, பணத்துக்காக வேலை செய்ற வேலைக்காரிகிட்ட, கிட்டத்தட்ட தான் என்ன செய்கிறோம்னே தெரியாத நிலையில் இருக்கும் மனைவியையும், சின்னப் பிள்ளைகளையும் எப்படி விட்டுப் போக முடியும்? கூட வேற உறவுக்காரங்க இருந்தாக் கூட பரவால்ல. அதுவும் அவர் ஷிஃப்ட்ல வேலை பாக்கிறவர். ஒருநா காலயில வேலைன்னா, ஒரு நா ராத்திரி. உங்களுக்குத் தெரியாதா?"

”அப்படின்னா ஒரு விதவையையோ, தலாக் ஆனவங்களையோ கட்டிக்கிடலாமே? ஏன் கல்யாணமாகாத உன்னைப் போயி?" சொல்லியபின், அப்படிச் சொல்லியிருக்க வேண்டாமோன்னு தோண, சாரி சொல்லவா வேண்டாமான்னு நிற்க, அவளோ சலனமில்லா முகத்துடன் தொடர்ந்தாள்.

 (படம்: உயிரோசை இதழில் கதையோடு வெளியானது)

"ம்.. அப்படித்தான் நினைச்சு ஒரு வருஷமா தேடிருக்காங்க. ஆனா, இப்பல்லாம் ரெண்டாங்கல்யாணம் பண்ற பொண்ணுங்ககூட, தனக்குப் பிள்ளைங்க இருந்தாலும், கட்டிக்கிற ஆம்பளைங்களுக்கு பிள்ளைங்க இருக்கக்கூடாதுன்னு கண்டிஷன் போடுறாங்களே. இதுல இவருக்கு, பிள்ளைக மட்டுமா, முதல் பொண்டாட்டியும்ல கூட இருக்காங்க. யாரு சம்மதிப்பா? எங்களுக்கு இந்த சம்பந்தத்தைத் துப்புச் சொன்னதே தலாக்கான ஃபிர்தௌஸக்காதான். அவங்களுக்கு வந்த சம்பந்தத்தைத்தான் எனக்கு அனுப்பிவிட்டாங்க. அஞ்சு பெத்தா அரசனே ஆண்டி. எங்க வாப்பா ஏற்கனவே ஆண்டிதான். நாலுபேரை தத்திமுத்தி கரையேத்தின வாப்பா, என்னைக் கரையேத்த வழியில்லாம கடன்ல முங்கிப் போயி கிடந்தாங்க. ஆனாலும், வாப்பா ரெண்டாந்தாரச் சம்பந்தம் வேண்டாமுன்னுதான் சொன்னாங்க. நாந்தான் வயசு முப்பதைத் தாண்டினப்புறம் என்ன வீராப்பு வேண்டிக்கிடக்கு? ஒவ்வொருத்தனைப் போல ஏமாத்தவா செய்றாங்க? உள்ளதச் சொல்லித்தானே சம்மதம் கேக்குறாகன்னு எடுத்துச் சொன்னேன். பொண்டாட்டி நோய்ல விழுந்தா, அவளைத் தள்ளிவச்சுட்டு, புதுசு தேடற இந்தக் காலத்துல, அவளைக் கவனிச்சுக்கவும், அதே சமயம், தன் விருப்பங்களையும் நோய்வாய்ப்பட்ட அவகிட்ட தீர்த்துக்க முனையாம, சட்டத்துக்குட்பட்ட நியாயமான வழியில நிறைவேத்திக்க நினைக்கிறவர் எனக்கு தப்பாத் தெரியல. அதான் சம்மதிச்சு கட்டிக்கிட்டேன். என் அன்பால பிள்ளைகளும் சந்தோஷமாருக்காங்க. அக்காவும் இப்ப என் கவனிப்பில நல்லா ஆகிட்டாங்க. இன்னும் ஒரு ஆறேழு மாசம் மாத்திரை சாப்பிட்டா போதும்னு டாக்டர் சொல்லிட்டார்."

"நல்லா ஆகிட்டாங்கன்னா? நீ யாருன்னு தெரியுமா? ஒண்ணும் சொல்லலையா? முழுசும் குணமாகி உன்னை வீட்டைவிட்டு அனுப்பிட்டா?"

"ஏன் எப்பவும் இப்படியே யோசிக்கிறீங்க? நல்லதும் நடக்க வாய்ப்பிருக்கில்ல? அக்காவுக்கு நான் யாருன்னு நல்லாவேத் தெரியும். அவங்களுக்கு அதில சந்தோஷமா இல்லையாங்கிறதைவிட, வருத்தமில்லைன்னுதான் சொல்வேன். முக்கியமா சின்னஞ்சிறுசுகளா இருந்த அவங்க பிள்ளைகளை நான் கண்ணும் கருத்துமா கவனிச்சிக்கிட்டதை, ரெண்டுபேரும் என்னையும் உம்மான்னு கூப்பிடறதிலிருந்து புரிஞ்சிக்கிட்டாங்க. அதனால என்னை எந்த பேதமும் இல்லாம தன் சொந்த சகோதரிபோலத்தான் பாக்கிறாங்க. என்னை வீட்டை விட்டு அனுப்பவேண்டிய அவசியம் எதுவும் இப்ப இல்லை; வரவும் செய்யாது."

"வந்துட்டா?"

உற்றுப் பார்த்தவள் சொன்னாள், "எப்பவுமே, இப்படியொரு சூழ்நிலை வருமோ வந்துடுமோன்னு பயந்துகிட்டே இருந்தா இருக்கும் வாழ்வை ரசிச்சு வாழ முடியாது. அதுக்காக, எதுவும் நடக்கலாம்கிறதையும் மறக்கல நான். அப்படியொரு சூழ்நிலை வந்தா, என் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டேன்கிறது அவருக்கு நல்லாவே தெரியும்."

"இருந்தாலும், அவர் ஆம்பிளைங்கிறதால இப்படி ரெண்டாங்கல்யாணம் பண்ணிக்க முடிஞ்சுது. இதுவே, ஒரு பொண்ணுக்கு, அவ புருஷனுக்கு அப்படி ஆகியிருந்தா, அவளால அப்படி கட்ட முடியுமா?"

"நீங்க படிச்சவங்க இல்லியா" என்று புன்னகைத்தவள், மீண்டும் சலனமற்ற முகத்துடன், "உண்மைதான், அவர் ஆம்பளையா இருக்கப் போயி, அதுவும் ஒண்ணுக்கு மேலே கட்ட அனுமதி இருக்கறதாலத்தான் என்னையக் கட்டிகிட்டார். இதே நெலம பொண்ணுக்கு வந்தா என்ன செய்வாள்னோ, என்ன செய்யணும்னோ எனக்குத் தெரியலை. நீங்க சொல்லுங்களேன். இப்படியொரு நிலைமைல நீங்க இருந்தா என்ன செய்வீங்க?"

திடீர்த்தாக்குதலாகத் தோன்றிய இந்தக் கேள்வியால் நிலைகுலைந்த நான், "சே, என்ன சொல்ற, அவருக்கு அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது" என்றேன் பதறியவளாய்.

"நெருப்புன்னா வாய் சுடுமா என்ன? உங்க அறிவை வச்சுச் சொல்லுங்களேன், ஒரு பெண் அப்படியொரு நிலைக்கு ஆளானா என்ன செய்யணும்னு?"

"அது... " தடுமாறினேன். "பெண்ணுக்கு இருக்கக்கூடிய ஒரே வாய்ப்பு, அவரை உடனிருந்து கண்ணுங்கருத்துமா கவனிச்சுக்கிறது; இல்லைன்னா விவாகரத்து செஞ்சுட்டு, வேற திருமணம் செஞ்சுக்கிறது. ஆணைப் போல ரெண்டாங்கல்யாணமாம் செஞ்சுக்கவா முடியும்?"

"ஏன் முடியாதுன்னு நினைக்கிறீங்க? ஒருவேளை சட்டபூர்வமா அப்படி அனுமதியிருந்தா செய்வீங்களா?"

"அது எப்படி.. சே.. சே.."

"அத நீங்க உங்க மனசாட்சிப்படி தப்புன்னு நினச்சு, பண்ணக்கூடாதுன்னு நினைக்கிறீங்களே தவிர, அப்படி ஒரு பெண்ணுக்கு ஒரே சமயத்துல சட்டப்படி கணவனா இருக்க ஆண்கள் சம்மதிப்பாங்களான்னு நினச்சுப் பாக்கலை நீங்க".

"ஏன், பாஞ்சாலி ஒரே சமயம் அஞ்சு பேரக் கல்யாணம் பண்ணினாளே?"
 
"அது புராணக்கதை. நடந்துதா இல்லை கதையான்னு சந்தேகத்தோட இருக்கற கதை அது. அதுவும் அவளே விருப்பப்பட்டுச் செய்யவில்லை. அந்தக் கதைல கூட, அவ வருஷத்துக்கு ஒருத்தர்னு ஒரு சமயத்துல ஒருத்தர்கூடத்தான் மனைவியா வாழ்ந்தா. அஞ்சுபேரும் கூடப் பிறந்த சகோதரர்களா இருந்தும்கூட அவளை ஒரே சமயத்துல மனைவியா வைத்துக்கொள்ளும் பக்குவம் இல்லை அவங்களுக்கு."

"அதுதான் நீயே சொல்றியே புராணக்கதைன்னு. எழுதுனதும் ஒரு ஆணாகத்தானே இருக்கும்?" பிளேட்டைத் திருப்பிப் போட்டேன்.

"ஓ,  உங்களுக்கு நிஜக்கதை வேணுமா? அஞ்சாறு வருஷம் முன்னே வடக்கே ஒரு பொண்ணு, கார்கில் போருக்குப் போன புருஷன் செத்துட்டதா நினைச்சு, ரெண்டாங்கல்யாணம் பண்ணப்புறம் திரும்பி வந்தாரே முதல் புருஷன், ஞாபகம் இருக்கா? அப்ப எவ்வளவு சர்ச்சை, விவாதம் நடந்துது? ஆளாளுக்கு ஆலோசனை சொன்னாங்களே? மரம் வெட்டுறவன்லருந்து, மாளிகைல இருக்கிறவங்க வரை அந்தப் பொண்ணு மொதப் புருசன்கூட போகணுமா, இல்ல ரெண்டாம் புருசன்கூட வாழணுமான்னு ஐடியா சொன்னாங்களே? அதில ஒருத்தர், யாராவது ஒருத்தர், ஒரே ஒருத்தராவது, அவ ரெண்டு பேரோடயும் சேந்து வாழட்டும்னு சொன்னாங்களா? ஏன், நீங்களாவது அப்படி நினச்சீங்களா?"

Post Comment

41 comments:

மனோ சாமிநாதன் said...

வழக்கம்போல, சுவாரஸ்யமான, சரளமான நடை! அருமையான விவாத‌ங்கள்! கடைசி கேள்வி நெத்தியடியாக இருந்தது. எதையும் கேள்வி கேட்பது சுலபம். அதே நிலையை தன் நிலையாய் எண்ணி உணர்ந்து பேசுவது
நடைமுறையில் நடப்பதில்லை.

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் ஒரே பத்திரிக்கைகளுக்கு கதையா எழுதி தள்ளுறீங்க்போல
ஆனால் எல்லாமே உயிரோட்டமான கதை தான்

Jaleela Kamal said...

தமிழ் மனம் ஓட்டு போட்டாச்சு, இண்ட்லி தான் இப்ப எனக்கு ஓட்டு போட முடியல

வெண்கல கடை said...

wonderful knot :) romba rasichu padichen and also padichu mudichu romba neram aanapram kooda...yosichundu iruken idha pathi :) thanks for this wonderful post :)

ராமலக்ஷ்மி said...

//ஏன், நீங்களாவது அப்படி நினச்சீங்களா?"//

இந்தக் கேள்விக்கு எவரிடமும் பதில் இருக்காது என்றுதான் நினைக்கிறேன். நல்ல கதை ஹுஸைனம்மா.

ஸ்ரீராம். said...

கேள்வி அப்படியே நிற்கிறது. வேறு வழியில்லை என்றாலும் வாழ்க்கையை அதன் போக்கில் எதிர் கொண்டுள்ளாள் உங்கள் கதையின் நாயகி. பாசிடிவ் திங்கிங். ஒரு சிறந்த சிறுகதை. வாழ்த்துகள்.

pudugaithendral said...

அருமையான நடை. கதையை ரசித்தேன்
ஹுசைனம்மா

ஸாதிகா said...

ஹுசைனம்மா,இது கற்பனை கதையா?இல்லை உங்கள் அபுதாபி பிளாட்டில் நடந்த உண்மைகதையா?

ஸாதிகா said...

//அவரின் இரண்டாவது மகனுக்கு என் சின்னவனைவிட இரண்டொரு வயதே குறைவாக இருக்கும். இப்போப் போயி, ரெண்டாங்கல்யாணமா? தாங்கவே முடியலை.//நீங்க வேற..உங்கள் இரண்டாவது பையனை சொல்ல வந்துட்டீங்க.என் முதல் பையனை விட இரண்டொரு வயது அதிகமாக உள்ள வயதில் இருக்கும் பிள்ளையின் தந்தையே இரண்டாம் கலயாணம் செய்வத்ற்கு ஆசைப்படுகின்றாரே?

சாந்தி மாரியப்பன் said...

அருமையான கேள்வி, பதில் சொல்லத்தான் யாருக்கும் தெரியலை. ஆனா, அந்தப் பொண்ணும் மனசுல குமைஞ்சுக்கிட்டே இருந்துருக்கும் இல்லையா.

அசத்தலான நடை..

துபாய் ராஜா said...

இயல்பான எழுத்து நடையில் அருமையான விவாதங்களோடு அழகான கதை. வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL said...

பாவம் தான் அந்த பொன்னு...தெரிந்து இப்படி பல இடங்களில் நடக்க தான் செய்யுது...என்ன செய்வது...

சார்வாகன் said...

nice story
tamilmanam 6th vote

Thenammai Lakshmanan said...

உயிரோசையிலேயே படித்தேன் அருமைக் கதை.

ADHI VENKAT said...

அருமையான கதை.
கேள்வி நல்லா தான் இருக்குது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))
ஹுசைனம்மா..நல்லா வந்திருக்கு.. என்னா மடக்கு மடக்குது அந்த பொன்ணு ..

Menaga Sathia said...

கதை மிக நன்றாக இருக்கு..வாழ்த்துக்கள்!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

கதை ரொம்ப இன்ரஸ்டிங்கா இருக்கு.. பல கேள்விகணை தொடுத்து ஒரு பூமாலையாய் இங்கே சிறுகதை வடிவில். ஆனால் விடை?..

நிஜத்தில் நடந்த கதையா ஹூசைனம்மா.

Unknown said...

உயிரோட்டமான கதை ஆனா கடைசி கேள்விக்கு தான் இன்னும் பதில் தெரியல

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ஹுசைனம்மா,

கதை படித்தேன்.
பிரச்சினைகளுக்கு உரிய தெளிவான ஒரு தீர்வை கதை தரவில்லை.
சில குழப்பங்கள் உள்ளன.
அதனால் சில கேள்விகள் பிறந்துள்ளன. கதாசிரியர் என்ற அடிப்படையில் வாசகனின் சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி ஒன்று-
அஜீஸ் பாய் நல்லவரா; கெட்டவரா..? அவர் செய்த செயல் சரியா; தவறா..?

கேள்வி இரண்டு-
கதை மாந்தர்கள் (மற்றும் இங்கே பின்னூட்டம் இட்டவர்கள் உட்பட), யாருமே தன்னை அஜீஸ் பாயின் முதல் மனைவியின் நிலையில் வைத்து பிரச்சினையை நோக்க வில்லையே ஏன்..?

கேள்வி மூன்று-
இரண்டாவது மனைவியின் இந்த இரண்டாந்தார கல்யாணத்துக்கு காரணம் சமூகத்தில் நிலவும் நோயான 'வரதட்சினை கொடுமை' என்று தெளிவாக அறிந்தும்... அவரின் தந்தையும், அஜீஸ் பாயும் கதையில் வில்லனாக்கப்படுவது ஏன்..? (இவர்கள் இருவருமே வரதட்சினை கொடுக்கவோ வாங்கவோ இல்லையே)

கேள்வி நான்கு-
அப்புறம் கடைசி கார்கில் நிஜக்கதைக்கும் இந்தக்கதைக்கும் எந்தவொரு ஒப்புமையும் இல்லையே..? அதில் கார்கில் ரிடர்னோ(பழைய கணவர்)... அல்லது புதிய கணவரோ மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்லரே..?

கேள்வி ஐந்து-
//அதில ஒருத்தர், யாராவது ஒருத்தர், ஒரே ஒருத்தராவது, அவ ரெண்டு பேரோடயும் சேந்து வாழட்டும்னு சொன்னாங்களா? ஏன், நீங்களாவது அப்படி நினச்சீங்களா?//

---சரி, ஒருத்தர் அப்படி சொல்லிட்டார்னே வச்சுக்குவோமே...

இந்த மூன்று பேரின் குடும்ப&குழந்தைப்பேறு வாழ்க்கையும்...

ஒருவேளை பின்னர் குணமாகிவிட்ட அஜீஸ் பாய் முதல் மனைவி மற்றும் இரண்டாம் மனைவி இணைந்த அந்த மூன்று பேரின் குடும்ப&குழந்தைப்பேறு வாழ்க்கையும்...

ஒரே மாதிரி..
ஒரே நீதியுடன்..
சமமாக இருக்குமா...?

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பு சகோ
இந்த ஆக்கத்தின் கருப்பொருளாக நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்., இரண்டாம் திருமணம் கூடாதென்றா...? அல்லது அப்படி முடிப்பதாக இருந்தாலும் விதவையோ அல்லது விவாகரத்து ஆனா பெண்கள் தான் தகுதி பெறுவார்கள் என்றா..?

உங்கள் சொல்லாடலிலும் பாருங்கள்., அந்த இரண்டாம் மனைவி தன் கணவரின் பக்கமும் நியாயமிருப்பதையும் முதல் மனைவியின் இயலாமையும் சுட்டிக்காட்டி பின்னரே திருமணத்திற்கு சம்மதிக்கிறார். ஆக இதில் எந்த பக்க சார்புநிலை அநியாயமாக இருப்பதாக சொல்ல வருகிறீர்கள்?

//"இருந்தாலும், அவர் ஆம்பிளைங்கிறதால இப்படி ரெண்டாங்கல்யாணம் பண்ணிக்க முடிஞ்சுது. இதுவே, ஒரு பொண்ணுக்கு, அவ புருஷனுக்கு அப்படி ஆகியிருந்தா, அவளால அப்படி கட்ட முடியுமா?"//
தெளிவான முரண்பாடு., இங்கே பொருள் பொதிந்த கேள்வியை கேட்டு(?) அதற்கு மாற்று தீர்வை பதிலாக தருவீர்களென பார்த்தால் உடனேயே
//"அது எப்படி.. சே.. சே.."// என சொல்கிறீர்கள்., சகோ இந்த ஆக்கத்தை நீங்கள் மார்க்கரீதியில் அணுக வில்லையென்ற போதிலும் மார்க்கத்திற்கு முரணான வகையில் அணுகி எழுதியுள்ளதாக எண்ண தோன்றுகிறது மேற்கண்ட உங்களின் எழுத்து நடை.
,
சரி நீங்கள் சொல்வதுப்போல //"ஏன் முடியாதுன்னு நினைக்கிறீங்க? ஒருவேளை சட்டபூர்வமா அப்படி அனுமதியிருந்தா செய்வீங்களா?"// அனுமதி வழங்கப்பட்டாலும் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட கணவரோடு வாழ்வை தொடர்வது சாத்தியமா...? நம் வாழ்வில் நடைமுறைப்படுத்த முடியாத நிகழ்வுகளை மார்க்கம் சொல்வதில்லை.
அப்புறம் புராணக்கதைகளை மேற்கோள் காட்டியும் கார்கில் நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தியும் உரையாடல்கள் தொடர்கிறது அதிலும் நீங்கள் எதை குறித்து சொல்ல வருகிறீர்கள் என்பதும் தெளிவற்ற குழப்பமாக இருக்கிறது.,

சகோதரி எந்த ஒரு விசயத்தையும் விமர்சிப்பதாக இருந்தால் அது எங்கனம் பொருந்தாது என்பதை விளக்குதல் வேண்டும் அஃதில்லையேல் குறைந்த பட்சம் தர்க்கரீதியாக உலகில் நடைமுறை படுத்தப்படக்கூடிய வகையிலாவது உணரப்படவேண்டும்.,
ஆக இங்கு இரண்டாம் திருமணம் குறித்து என்ன சொல்ல வருகிறீர்கள்., ? என்பதே கேள்வி

மாற்றுக்கருத்துக்கள் இருப்பின் மற்றவை பிற
-இறை நாடினால் இனியும் சந்திப்போம்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நெத்தியடி கதை... மனதில் ஒரு கணமும் ஏறியது... சில கேள்விகள் கேட்க மட்டுமே நம்மால் இயலும், பதில் சொல்வது சாத்தியமில்லை

Avargal Unmaigal said...

இது உண்மை சம்பவமா அல்லது கற்பனை கதையா? எதுவாக இருந்த போதிலும் சிந்திக்க வைத்த கதை.

///பயந்துகிட்டே இருந்தா இருக்கும் வாழ்வை ரசிச்சு வாழ முடியாது///

நூற்றுக்கு நூறு உண்மை

வெங்கட் நாகராஜ் said...

உயிரோட்டத்துடன் ஒரு சிறுகதை..... அப்பெண் கேட்ட கேள்விகள்... நெத்திஅடி....

Butter_cutter said...

நல்லா இருக்கு

கீதமஞ்சரி said...

மனம் தொட்ட கதை. சில பிரச்சனைகளுக்கு அந்தந்தப் பிரச்சனைகளின் சூழலும் சம்பந்தப் பட்டவர்களின் மனநிலையுமே தீர்வுகளை வழங்க முடியும். பார்வையாளர்களோ கேள்விகளை கேட்டுவிட்டு ஒதுங்கிக்கொள்வார்கள். பதில்?

நட்புடன் ஜமால் said...

வெறும கதையாக படிச்சிட்டு போக முடியலை ...

நிறைய கேள்விகள் மனதில் எழத்தான் செய்கின்றன,

geetha santhanam said...

பெண்கள் அதுவும் ஏழைப் பெண்களுக்குத்தான் இப்படி நடக்கிறது. எங்கள் ஊரில் 50 வயதிற்கும் மேலான ஒருவர் முதுமையில் தன்னைக் கவனித்துக்கொள்ள ஒரு இளம் வயது பெண்ணை மணந்து அவளுக்கு இரு குழந்தைகளையும் கொடுத்துவிட்டு 5-6 வருடங்களில் காலமாகிவிட்டார். சின்னப் பெண்குழந்தைகளை அந்தப் பெண் தனியாளாய் வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு எப்பவும் என் மனதில் மிகுந்த மரியாதை உண்டு.

enrenrum16 said...

அப்பா...சும்மா பட் பட்னு வார்த்தைகளைக் கோர்த்து வாசிக்கிறவங்களை யோசிக்கவிடாம கதையை நல்லா கொண்டு போயிருக்கீங்க...(ஒரு வேளை நாந்தான் ட்யூப்லைட்டோ? :-()

காரணமே இல்லாம இஷ்டத்துக்கு கல்யாணம் பண்றவங்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் உண்மையாயிருக்கும் அஜீஸும் அவரது மனைவிகளும் ஆச்சரியமான கேரக்டர்கள்! தன் கணவருடைய இரண்டாம் திருமணத்தில் முதல் மனைவியின் அனுமதி தேவையில்லை என்பதாலும் அஜீஸ் ஒரு நேர்மையானவர் என்பதாலும் அவரது இரண்டாம் மனைவிக்கு எதிர்காலத்தைப் பற்றிய பயம் தேவையில்லாதது.

என்னதான் ஆணுக்கு பெண் சமம்னும், ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதியான்னு வாதம் பண்ணினாலும் பெண்ணால் செய்ய முடியும் சில விஷயங்களை ஆணால் செய்யமுடியாது. ஆண்களால் இயன்ற சில விஷயங்களை பெண்களால் செய்ய முடியாது. ஆண் செய்கிறான் என்பதற்காக நானும் செய்வேன் என்று பெண்ணும் பல திருமணம் செய்தால் அவளுக்குத்தான் கஷ்டம்.

ஆனா என் மூளைக்கு எட்டிய ஒரு நல்ல விஷயம் இது மட்டுந்தான்.... ஒரு கணவனிடம் ஏதாவது வாங்கிக் கேட்டு கிடைக்கலைன்னா மற்றொருவரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளலாம். ( நான் இவ்ளோ கஷ்டப்பட்டு ஒரு கதையின் மூலம் புரட்சி செய்திருக்கிறேன்.... நீ இப்டி அல்பத்தனமா யோசிக்கிறியான்னு முறைக்காதீங்க... ச்சும்மா லுலுல்லாயீ...எஸ்கேப்)

கோமதி அரசு said...

ஒரே ஒருத்தராவது, அவ ரெண்டு பேரோடயும் சேந்து வாழட்டும்னு சொன்னாங்களா? ஏன், நீங்களாவது அப்படி நினச்சீங்களா?"//

கேரளாவில் இரண்டு கணவருடன் ஒரு பெண் வாழ்வதாய் ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.

கதை நன்றாக இருக்கிறது.

மனைவியை இழந்தவர் தன் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொடுத்து விட்டு(இரண்டு பெண்களும் வெளி நாட்டில் இருக்கிறார்கள்) தனக்கு கடைசிக் காலத்தில் உதவிக்கு துணை வேண்டும் என்று மறு மணம் செய்து கொண்டார்.( தன் குடும்பத்திற்காக 50 வயது வரை திருமணம் செய்து கொள்ளாதவரை)

சமூக அமைப்பு சில விஷயங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

பாச மலர் / Paasa Malar said...

பொட்டில் அறைகிற மாதிரி நிறைய கேள்விகள்....நல்லதொரு கதை..கதைய்ல்ல..நிஜம் என்றே சொல்லத் தோன்றுகிறது..

ஹுஸைனம்மா said...

மனோ அக்கா - ஆமாம்க்கா; கேள்வி கேட்பது சுலபம். நம்மை அச்சூழ்நிலையில் நிறுத்தி வைத்துப் பார்த்தால்தான் நியாயங்கள் புரியும்.

ஜலீலாக்கா - நன்றிக்கா.

வெண்கலக் கடை - பேர் சூப்பராருக்கு!! அப்ப நானெல்லாம் ‘ஆனை நுழைஞ்ச வெங்கலக் கடை’ன்னு பேர்வச்சிருக்கணும் போலயே? :-)))

ஹுஸைனம்மா said...

ராமலக்ஷ்மிக்கா - உயிரோசையில படிச்சுட்டு அப்பவே உடனே பாராட்டுனதுக்கும் நன்றிக்கா. யாராலும் பதில் சொல்ல முடியாத கேள்விதான்.

ஸ்ரீராம் சார் - நன்றி சார்.

புதுகைத் தென்றல் - நன்றிப்பா.

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - கற்பனையும் கலந்ததுதானே கதை? :-)))

இரண்டாவது திருமணம் என்றாலே தவறென்று அர்த்தமில்லை. அது எச்சூழ்நிலையில் செய்யப்படுகிறது என்பதுதான் அதை அர்த்தப்படுத்துகிறது. இந்தக் கதையிலும், ரெண்டாங்கல்யாணத்தைத் தவறான நோக்கத்திலேயே பார்க்கும் ஒருத்தி, அது செய்யப்படும் கோணத்தை உணர்ந்துகொள்ளுவதுதானே கரு?

மேலும், முதுமையில் தனிமை என்பது கொடுமை. அதைத் தவிர்க்க திருமணம் செய்யலாம் என்பது என் கருத்து. இறைவன் காக்கவேண்டும் எல்லாரையும்.

கீதா - நன்றி.

சார்வாகன் - நன்றி.

ஹுஸைனம்மா said...

தேனக்கா - உயிரோசையில படிச்சுட்டு அப்பவே உடனே பாராட்டுனதுக்கும் நன்றிக்கா.

முத்துலெட்சுமிக்கா - ஆமாக்கா, ரொம்பவே மடக்குது அந்தப் பொண்ணு!! :-)))

மேனகா - நன்றிப்பா.

ஹுஸைனம்மா said...

கோவை2தில்லி - நன்றிப்பா.

அவர்கள் உண்மைகள் - ஆமாங்க, நாளை வருவதை யாரறிவார்? நன்றிங்க.

அமைதிக்கா - அந்தப் பொண்ணு ரொம்பத் தெளிவாத்தான் இருக்கா; வெளியே இருந்து பாக்கிறவங்கதான் குழம்(ப்)பிடுறாங்க. :-)))

துபாய் ராஜா - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

ஸ்டார்ஜன் - கதைகளுக்கு நிஜங்கள்தானே ஆதாரம்? நன்றிங்க.

ஜ.ரா. ரமேஷ் - நன்றிங்க. உங்க பேர் ஜ.ரா.சுந்தரேசனை நினைபடுத்துகிறது.

அப். தங்ஸ் - நலமா? நன்றிப்பா.

வெங்கட் - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

கீதா - உண்மைங்க; பார்வையாளர்கள் பலவிதம் கருத்துச் சொல்லலாம், ஆனால் அச்சூழ்நிலையில் இருப்பவருக்குத்தான் பாதிப்பின் வலி புரியும்.

கீதா சந்தானம் (ஆஹா, இந்தப் பதிவில இதுவரை மூணு கீதா ஆச்சு!! :-))) ) - நீங்க சொல்லியிருக்க சம்பவம் வருந்த வைக்குது. ஆனால், கோமதிக்கா சொல்லியிருக்கும் கடைசிச் சம்பவம் சரியாகப் படுது பாருங்க.

என்றென்றும் 16 - நீங்க ஒரு ஆள்தான் சொல்ல வந்ததைக் கரெக்டாப் புரிஞ்சிருக்கீங்க. இதத்தான் “ஸேம் பிளட்”டுன்னு சொல்வாங்களோ? :-))))

ஹுஸைனம்மா said...

கோமதிக்கா - கேரளப் பெண்ணைப் போல, ராஜஸ்தானிலும் ஒரு பெண்ணின் கதை முன்பு வாசித்த நினைவு. எப்படி சாத்தியப்படுகிறது என்பது கேள்விக்குரியதுதான்.

மேலும் நீங்கள் சொல்லும் இரண்டாம் திருமணம் செய்தவர் சரியானதைச் செய்து உதாரணமாக அமைகிறார்.

பாசமலர் - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

ஆஷிக் & குலாம் - வ அலைக்கும் ஸலாம்.

இரண்டாம் திருமணம் தவறென்று சொல்லப்படவில்லையே? இன்னும் சொல்லப்போனால், அந்த மாதிரிக் கண்ணோட்டத்திலிருக்கும் ஒருவரின் கருத்தை கதையின் நாயகி மாற்றுவதாகத்தானே கதை இருக்கிறது?

மேலும், இஸ்லாத்தில் பலதார மணம் என்பது ஒரு “option", அவ்வளவே. It is not a condition. ஆனால், “Option" எனப்படும்போதே "conditions apply" என்பதும் கண்கூடு.

இரண்டாம் கல்யாணம் செய்வதும், யாரைச் செய்வதென்பதும் ஒருவரின் தனிப்பட்ட விஷயம். என்றாலும், செய்பவருக்கே முதல் முறையாக இல்லை எனும்போது, அவரால் செய்யப்படுபவருக்கும் இரண்டாவதாக இருப்பதில் தவறில்லையே? மேலும், அதுதானே ஒரு “balanced society"க்கு வழிவகுக்கும்? விதவைகளுக்கும், விவாகரத்துச் செய்த பெண்களுக்கும் மறுதிருமணம் முடிப்பது இன்றைய சூழ்நிலையில் எளிதாகவா உள்ளது, சொல்லுங்கள்?

//நம் வாழ்வில் நடைமுறைப்படுத்த முடியாத நிகழ்வுகளை மார்க்கம் சொல்வதில்லை. //
அதைத்தான் இந்தக் கதையும் சொல்கிறது என்பது உங்களிருவருக்கும் புரியாதது ஆச்சர்யமே!!

ஹுஸைனம்மா said...

இன்று தற்செயலாக ஒரு செய்தி வாசித்தேன்: http://gulfnews.com/news/world/india/rape-victim-s-son-has-three-fathers-1.903143
செய்தியின் சாராம்சம் வேறென்றாலும், அது உணர்த்துவது என்ன?

சமீபத்தில் ஒரு பெண்ணுக்கு ஒரே கருவில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்று கணவனுக்கும், ஒன்று காதலனுக்கும் பிறந்ததாகச் செய்திகள் வந்தது நினைவிருக்கும்.