Pages

Gகத்தாமா - 2




"Gகத்தாமா - 1": 

அச்சமயம் என் சின்னவன் எல்கேஜி படித்துக் கொண்டிருந்தான். நான்கே வயதுச் சிறுவன், மதியம் 12 மணிக்கு பள்ளிவிட்டு வந்தபின் மாலை ஏழு மணிவரை பணிப்பெண் பொறுப்பில்தான் இருக்கவேண்டும் எனும்போது, அதற்கேற்ற குணமும், பொறுமையும், தமிழ் தெரிந்தவராயும் இருத்தல் வேண்டும். வேலைக்காரரை ஒரு குடும்ப உறுப்பினரைப் போலவேக் கருதி, நடத்துவேன். அப்போதுதான் அவருக்கும் நம் குழந்தையின்மீதும், குழந்தைக்கு அவரின்மீதும் ஒட்டுதல் வரும்.  எனவே, வேலைக்காரர்களை அடிக்கடி மாற்றுவதில் எனக்கு விருப்பமில்லை. அடிக்கடி ஆள் மாறுவது என்பது சிறுகுழந்தையின் மனதை பாதிக்கவும் செய்யுமே. (பள்ளியில் அடிக்கடி ஆசிரியர் மாறினாலே நல்லதில்லை என்று சொல்வோமே). பெரியவனுக்கும் 10 வயதுதான் ஆகியிருந்தது.

இருந்தாலும், இப்படி எத்தனை நாள் இப்படி சமாளிக்க முடியும்? என்னதான் அவசியத்திற்கோ அல்லது ஆர்வத்திற்காகவோ வேலைக்குப் போகிறோம் என்றாலும், குழந்தைகள் முக்கியம் என்பதால்தானே பார்த்துக் கொள்ள ஆட்களை நியமிக்கிறோம்? அங்கீகரிக்கப்பட்ட ”டே கேர்” சென்டர்கள் மிகச்சில இருந்தாலும், அவற்றின் தூரம் காரணமாகவோ, அல்லது அதிகக் கட்டணம் காரணமாகவோ பலரும் அதை விரும்புவது இல்லை. இங்கும் இந்தியாபோலவே பள்ளிக் கட்டணங்கள் மிக அதிகம்தான். அதற்குமேல் டே-கேருக்கெல்லாம் கொடுப்பதற்கு எல்லாராலும் இயலாது. அதே சமயம், அலுவலகம் செல்லும் பெண்களுக்கு வீட்டிலும் வேலை உண்டு என்பதால், குழந்தைகளோடு செலவிட நேரம் கிடைப்பது குறைவு. ஆகவே, பணிப்பெண்களை வைத்தால், நாமில்லாத சமயம் குழந்தையைத் தனிப்பட்ட கவனத்தோடு பார்த்துக் கொள்வதோடு, வீட்டு வேலை செய்வதிலிருந்தும் நேரம் மிச்சமாகும்.

இதனால்தான், இங்கு பலரும் பகுதி-நேரப் பணிப்பெண்களை வைத்துக்கொள்ள விழைவது. ஆண்கள் உதவுவார்கள் என்றாலும், அது ‘உதவி’தான் என்பதால் பெண்களின் “பொறுப்பு” பெரியதாக ஒன்றும் குறைந்துவிடுவதில்லை. உயிரான குழந்தையைப் பார்த்துக் கொள்வதோடு, வீட்டு வேலைகளிலிருந்தும் விடுதலை தருவதால், பெண்கள் தம் பணிப்பெண்களை மதிப்புடனேதான் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டை விடவும் இங்கு வேலைக்குத் தகுந்த ஆள் கிடைப்பதென்பது அரிதானதால், கிடைத்திருப்பவர்களைத் தக்கவைக்கவேணும் மரியாதையாகவே நடத்தப்படுவர்.

எனினும் பெரும்பான்மையான பணிப்பெண்கள் ஃப்ரீ விஸாவில் இருப்பவர்கள் என்பதால், எந்தக் கட்டுப்பாடும் அவர்களுக்கில்லை. திடீரென காரணமேயின்றிகூட நின்றுவிடுவார்கள். எதுவும் கேட்க முடியாது. எந்த சட்டபூர்வ அக்ரிமெண்டும் கிடையாது. அவர்களின் தொலைபேசி எண் மட்டுமே நமக்கு அவர்களோடான தொடர்பு எனும்போது, திடீரென தொடர்பு அற்றுப் போவது கடினமானது அல்லவே. மேலும், யாரையும் உடனே நம்பி வீட்டில் வைத்துவிட முடியாதே. இந்தமாதிரி வேலைக்கு வருபவர்கள் வீட்டில் உள்ளவற்றைத் திருடிவிட்டு ஓடிப் போவதும், குழந்தைகளைக் காயப்படுத்துவது என்றும் எத்தனை கேள்விப்படுகிறோம்.

இப்படி தொடர்ந்து மூன்று  பேர் அடுத்தடுத்து வேலையை விட்டு நின்றுபோனதால், நாங்கள் செய்வதறியாது திகைத்து நின்றோம். அப்போதுதான், ஃப்ரீ விஸா என்பதால்தானே இத்தனை சிரமங்கள், அதிகச் செலவு என்றாலும், நாமே ஒருவரை நமது ஸ்பான்ஸரில் கொண்டு வருவோம் என்று முடிவு செய்தோம். அதற்கான சட்ட நடைமுறைகள் குறித்து, அதுபோல பணிப்பெண் விஸா எடுத்தவர்களிடம் விசாரித்தால், அனைவரிடமிருந்தும் வந்த முதல் பதில் “வேண்டாம், நீங்கள் விஸா எடுக்காதீர்கள்” என்று அட்வைஸ்! ஃபிரீ விஸா பணிப்பெண்கள் கிடைப்பதின் சிரமங்கள் குறித்துச் சொன்னால், பதில் “இவற்றைவிட அவை எவ்வளவோ பரவாயில்லை” என்று பதில்!! நாமல்லாம் சொன்னாக் கேட்டுப்போமா? பட்டாத்தானே புரியும்!!

ஊரில் ஆளைத் தேடிக் கண்டுபிடித்து, ஆயிரக்கணக்கில் செலவழித்து விஸா (இரண்டு முறை ரிஜக்ட் ஆகி, பின்) எடுத்து, கூட்டியும் வந்தாயிற்று.  ஏர்போர்ட்டில் வந்து இறங்கியவர் உடனே ஒரு மொபைல் வாங்கிக் கேட்டார். அமீரகத்திற்கு அவர் புதிது எனவும், அங்கு தன் உறவினர்கள் யாரும் இல்லை என்றும் சொல்லியிருந்தததால், தன் தாய் மற்றும் மகளோடு பேசுவதற்காக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.   திருநெல்வேலிக்கார பெண், ஏற்கனவே பத்து வருடங்கள் சவூதியில் அரபி வீட்டில் பணிபுரிந்திருக்கிறார் என்பதால் இங்கு பழகிக்கொள்ளப் பிரச்னையில்லை. எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது கொஞ்ச நாள்.  பிறகு அவர் ஃபோனுக்கு கணக்கில்லாத அழைப்புகள் வருவதும், நான் அலுவலகத்திலிருந்து அழைத்தால் வீட்டில் இல்லாதிருப்பதும், பிறகு ஒரு நாள் கையுங்களவுமாய் அகப்பட்டதும், போலீஸில் சொன்னதும் என... இரண்டு பதிவுகளுக்கான அளவு உண்டு சொல்வதற்கு.

உடனே அன்றே விஸா கேன்ஸல் செய்து, ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவரின் விஸா புதுப்பித்து ஒரு மாதம்தான் ஆகியிருந்தது என்பதால், எனக்கு கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் ரூபாய் வரை நஷ்டம்.. பெருநஷ்டம்.. ரெண்டு லட்சம் என்பது எனக்கு சிறிய தொகையல்ல. அதைவிட, எனக்கும், என் குடும்பத்திற்கும் ஏற்பட்ட மன உளைச்சல் எவ்வளவுக்கு மதிப்பிட முடியும்? ஐந்து வயது மகனிடம் என்ன காரணம் சொல்வது? இதுகுறித்துப் பலரிடம் பேசியதிலும், படித்ததிலும், பலருக்கும் என்னைவிடக் கசப்பான அனுபவங்கள் உண்டென அறிந்துகொண்டேன்.

அத்தோடு வேலைக்காரிகளுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, தங்கைகள் உதவியோடு சிலகாலம் கடத்தினேன். என்றாலும், பிள்ளைகள் பள்ளிவிட்டு வீட்டில் தனியே நிற்பது (சிலமணி நேரமே என்றாலும்) என்பது, மனதளவில் அவர்களுக்கும் பாதிப்பு தரும். தனியே வீட்டில் இருப்பது எத்தனை கொடுமையானது என்று வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் உடைய என் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.  எனக்கும் குற்ற உணர்வு. பொறுப்பான, அறிவான பிள்ளைகள் என்றாலும், அவர்களும் சிறுவர்கள்தானே? எப்போது என்ன செய்வார்கள் என்பதை கணிக்க முடியுமா? மேலும், சிறுவர்கள் வீட்டில் தனியே இருப்பதும் பாதுகாப்பல்லவே என்ற பயம் வேறு. என்னதான் அடிக்கொருதரம் ஃபோன் செய்துகொண்டாலும், ஆபத்து நேர்ந்தால் ஃபோன்வழியா காப்பாற்ற முடியும்?

ரெண்டு வருடம் முன்பு ஸ்டெல்லாவைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது. தற்போதும் (கிட்டதட்ட 30 வருடங்கள்!!) அதே அரபியின் ஸ்பான்ஸரில்தான் இருப்பதாகவும், அதே மலையாளிக் குடும்பத்தில்தான் வேலை செய்வதாகவும், மேலும் தன் இரு மகள்களையும், மருமகன்களையும் கூட அதே ஸ்பான்ஸரின் உதவியோடு இங்கு அழைத்து வந்திருப்பதாகவும் கூறினார்.

ன் சந்தேகம் இதுதான்: அரபிகள் கொடுமைப்படுத்துகிறார்கள என்று சொல்கிறார்கள்.  எவ்வளவுக்கு உண்மையோ.  ஆனால், எந்தக் கொடுமைகளும் செய்யாத, பணிப்பெண்களைக் குடும்பத்து அங்கத்தினர் போலப் பாவித்துப் பழகும் எங்களைப் போன்ற சக நாட்டவரை ஏன் இப்பெண்கள் ஏமாற்றிக் கைவிடுகின்றனர்? சொந்தமாக விஸா எடுக்குமளவு வசதி இல்லாதவர்கள், ஃபிரீ விஸா பணிப்பெண்களை வைத்தால், திடீர் திடீரென நின்றுவிடுவது, அல்லது இருப்பதைக் கொள்ளையடித்துவிட்டு ஓடுவது போன்றவையில் ஈடுபடுவது; அதிகச் செலவு செய்து விஸா எடுத்தால், வீட்டில் ஆள் இல்லாததைப் பயன்படுத்தி, தவறான காரியங்களில் ஈடுபடுவது, திடீரென (காரணமேயில்லாமல்) ஊருக்குப் போகணும் என அடம் பிடிப்பது, தூதரகத்தில் பொய்யான புகார் கொடுப்பது - இவையெல்லாம் ஏன்? எங்களைப் போலவே நீங்களும் குடும்பத்திற்காக வருந்தி பணம் சம்பாதிக்க வந்திருக்கிறீர்கள் என்பதாலும், உறவுகளை விட்டுப் பிரிந்திருக்கிறீர்கள் என்பதாலும், எங்களுக்கும் உங்கள் சேவை அவசியம் என்பதாலும் உங்களிடம் அன்போடு நடந்துகொண்டும் ஏன் இப்படி வஞ்சகம் செய்து எங்களை நோகடிக்கிறீர்கள்?

இவை என் கேள்விகள் மட்டுமல்ல; என்னைப் போலவே இந்தப் பிரச்னையாலும் “ஆணியே புடுங்க வேண்டாம்” என்று வீட்டில் இருக்கும் பல ஆயிரக்கணக்கானப் பெண்களின் கேள்விகளும்கூட.

Post Comment

32 comments:

CS. Mohan Kumar said...

பிரச்சனையை பற்றி விரிவாக எழுதிடீங்க. வெளிநாட்டு வாழ்வில் தான் எவ்வளவு கஷ்டங்கள் !

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லா சொல்லியிருக்கீங்க.. வீட்டு பணிப்பெண்கள் வைத்துக் கொள்வதினால் வரும் பிரச்சனைகளை உங்களின் அனுபவத்தின் மூலம் சுவைபட சொல்லியிருக்கீங்க..

\\\ஃபிரீ விஸா பணிப்பெண்களை வைத்தால், திடீர் திடீரென நின்றுவிடுவது, அல்லது இருப்பதைக் கொள்ளையடித்துவிட்டு ஓடுவது போன்றவையில் ஈடுபடுவது; அதிகச் செலவு செய்து விஸா எடுத்தால், வீட்டில் ஆள் இல்லாததைப் பயன்படுத்தி, தவறான காரியங்களில் ஈடுபடுவது, திடீரென (காரணமேயில்லாமல்) ஊருக்குப் போகணும் என அடம் பிடிப்பது, தூதரகத்தில் பொய்யான புகார் கொடுப்பது - இவையெல்லாம் ஏன்? எங்களைப் போலவே நீங்களும் குடும்பத்திற்காக வருந்தி பணம் சம்பாதிக்க வந்திருக்கிறீர்கள் என்பதாலும், உறவுகளை விட்டுப் பிரிந்திருக்கிறீர்கள் என்பதாலும், எங்களுக்கும் உங்கள் சேவை அவசியம் என்பதாலும் உங்களிடம் அன்போடு நடந்துகொண்டும் ஏன் இப்படி வஞ்சகம் செய்து எங்களை நோகடிக்கிறீர்கள்?\\\

நியாயமான கேள்விகள்.. இதற்கு பதில் அவர்கள் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். அருமையான இடுகை.

ஸ்ரீராம். said...

எவ்வளவு அனுபவங்கள்? எவ்வளவு கஷ்டங்கள்....மன உளைச்சல்கள்? உங்கள் கேள்விகள் நியாயமானவை. பதில்தான் கிடைக்காது!

RAMA RAVI (RAMVI) said...

ரொம்பக் கொடுமைதான் ஹுஸைனம்மா.இந்தியாவிலாவது வேலை செய்பவர் இருந்தாலும், அவசரத்திற்கு பக்கத்தில் இருக்கும் நண்பர்களும் உறவினர்களும் உதவிக்கு வருவார்கள்.அயல் நாடுகளில் இருப்பவர்களின் பாடு கஷ்டம்தான்.
பெஹரைனில் என் தங்கை இருகிறார்,அவருக்கும் இந்த மாதிரி சில பிரச்சனைகள் வந்தது. தற்போது குழந்தைகள் சற்று பெரியவர்களாகி விட்டதால் சற்று நிம்மதி.

Jaleela Kamal said...

ஆமாம் ஹுஸைனாம்மா இதே போல் பத்து வருடம் முன் நடந்த சம்பவத்த கூட பகிரனும், அரபிகளில் நிறைய பேர் நல்ல வர்களும் இருக்கிறார்கள்

suvanappiriyan said...

//என் சந்தேகம் இதுதான்: அரபிகள் கொடுமைப்படுத்துகிறார்கள என்று சொல்கிறார்கள். எவ்வளவுக்கு உண்மையோ. ஆனால், எந்தக் கொடுமைகளும் செய்யாத, பணிப்பெண்களைக் குடும்பத்து அங்கத்தினர் போலப் பாவித்துப் பழகும் எங்களைப் போன்ற சக நாட்டவரை ஏன் இப்பெண்கள் ஏமாற்றிக் கைவிடுகின்றனர்? சொந்தமாக விஸா எடுக்குமளவு வசதி இல்லாதவர்கள், ஃபிரீ விஸா பணிப்பெண்களை வைத்தால், திடீர் திடீரென நின்றுவிடுவது, அல்லது இருப்பதைக் கொள்ளையடித்துவிட்டு ஓடுவது போன்றவையில் ஈடுபடுவது; அதிகச் செலவு செய்து விஸா எடுத்தால், வீட்டில் ஆள் இல்லாததைப் பயன்படுத்தி, தவறான காரியங்களில் ஈடுபடுவது, திடீரென (காரணமேயில்லாமல்) ஊருக்குப் போகணும் என அடம் பிடிப்பது, தூதரகத்தில் பொய்யான புகார் கொடுப்பது -//

ஒரு பணிப் பெண் ஊருக்கு செல்ல முனையும் போது சந்தேகப்பட்ட அவர் அரபி அவரது பெட்டியை அன்றுதான் சொதனையிட்டார். அந்த பெட்டிக்குள் கிட்டத்தட்ட 30 பவுன் திருடி வைக்கப்பட்டிருந்தது. அந்த பணிப்பெண்ணும் அதனை ஒத்துக் கொண்டார். ரிடர்ன் விசா அடித்த அந்த அரபி அந்த பெண்ணுக்கு உடன எக்ஸிட் விசா அடித்து இலங்கைக்கு அனுப்பி வைத்தார். இது நான் தபூக்கில் இருந்த போது நடந்தது. உங்கள் பதிவை படித்தவுடன் எனக்கு இந்த சம்பவம் ஞாபகம் வந்தது.

சிநேகிதன் அக்பர் said...

கசப்பான அனுபவம்தான்!

நான் பார்த்த வரையில் இங்கு சவுதியிலும் பெரும்பாலான அரபிகள் பணிப்பெண்களையும், வீட்டு டிரைவர்களையும் அதிகம் கஷ்டப்படுத்துவதில்லை.சில இடங்களில் மட்டும் சம்பளம் குறைவு அதிக வேலை என கஷ்டப்படுத்துகிறார்கள்.

என்னைக்கேட்டால் இரண்டு பக்கமுமே நல்லவர்களும் இருக்கிறார்கள், மோசமானவர்களும் இருக்கிறார்கள். நாம் தான் சரியானவற்றை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். அதுக்கு இது போல் அனுபவங்களை சந்தித்தால் மட்டுமே முடியும். என்ன அதற்கு நாம் கொடுக்கும் விலைதான் அதிகம்.

போலவே ஏதாவது அரபிக்காரரின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே வெளி நாடு வரவேண்டும் என்ற நிபந்தனை இல்லா விட்டால் உங்களை வஞ்சித்ததை விட அரபிகளை அதிகம் வஞ்சிப்பார்கள்.

பல திறமைகள் இருக்கும் ஒருவர் இங்கு வந்து நன்றாக சம்பாதிக்க வேண்டும் என எண்ணினால் அதற்குரிய விசாவில் வருவது நல்லது. பெரிய டிரைலர் ஓட்டும் திறமையுள்ள ஒருவர். வீட்டு டிரைவர் பணிக்கு வந்து விட்டு சம்பளம் போதவில்லை என்று வருத்தப்படுவதை நான் பல முறை கண்டிருக்கிறேன்.

அரபிகள் மட்டுமல்ல எல்லா நாட்டில் உள்ள முதலாளிகளும் நமக்கு என்னவெல்லாம் தெரிந்திருக்கிறது என்பதை பார்த்து சம்பளம் கொடுப்பதில்லை அவர்களுக்கு தேவையான வேலைக்கு உரிய சம்பளம் மட்டுமே அவர்கள் கொடுப்பார்கள்.

எனவே வெளிநாடு கிளம்பும் முன்பே வேலை பற்றிய விபரங்களையும், சம்பளத்தையும் சரியாக கேட்டுக்கொண்டால் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

என்னைப் போலவே இந்தப் பிரச்னையாலும் “ஆணியே புடுங்க வேண்டாம்” என்று வீட்டில் இருக்கும் பல ஆயிரக்கணக்கானப் பெண்களின///



ஆணியைப்பிடுங்கிக்கொண்டு இத்தனை அவஸ்தைகளையும் அனுபவித்துத்தான் தீரணுமா?இதுதான் என் கேள்வி.

ஹுஸைனம்மா said...

ராம்வி - ஆமாக்கா, இந்தியாவுக்குள்ள இருந்தாலும், வெளி மாநிலங்களில் இருக்கவுங்களுக்கே இந்தப் பிரச்னை உண்டு. அதிலும், இங்க யாருகிட்டப் போய் நிக்கீறது? நன்றிக்கா.

ஸ்ரீராம் - ஆமாம் சார், பதில் வராதுதான். ஆனாலும், இப்படியும் பிரச்னைகள் உண்டு என்று தெரிந்துகொள்ளட்டும் மக்கள். நன்றி.

மோகன் - ஆமாங்க, சில பிரச்னைகள் பொதுவில பகிர்ந்தா, மத்தவங்களும் தெரிஞ்சுக்கலாமேன்னுதான்.

ஹுஸைனம்மா said...

ஸ்டார்ஜன் - ஆமாங்க, இதுல ஒரு தரப்பு வாதங்களை மட்டுமேதான் ஒருசிலர் பார்க்கிறாஙக். நன்றி.

ஜலீலாக்கா - நீங்களும் எழுதுங்கக்கா. வேலை பாக்கிறவங்களுக்குத்தான் இந்தக் கஷ்டம் நல்லாப் புரியும்.

ஹுஸைனம்மா said...

வனப்பிரியன் - எப்பப் பாத்தாலும் அரபிங்க கொடுமைப்படுத்துறாங்க, ஆணி அடிக்கிறாங்கன்னெல்லாம் சொல்றாங்க. நாங்க அப்படியெல்லாம் செய்றதில்லையே, அப்புறமும் ஏன் சில பணிப்பெண்கள் எங்ககிட்ட இப்படி நடந்துக்கிறாங்கங்கிறதுதான் என் ஆற்றாமை!!

20 வருடங்களுக்கு மேலாக இங்கு ஒரே அரபியிடம் வேலைபார்க்கும் எத்தனையோ பெண்களை, ஆண்களைக் கண்டதுண்டு, கேட்டதுண்டு. எல்லாரையும் ஒரே மாதிரி எடைபோடக்கூடாது.

ஹுஸைனம்மா said...

சிநேகிதன் அக்பர் - அருமையான கருத்துங்க.

//என்னைக்கேட்டால் இரண்டு பக்கமுமே நல்லவர்களும் இருக்கிறார்கள், மோசமானவர்களும் இருக்கிறார்கள்.//
நான் சொல்ல வருவதும் இதேதான்!!

//எல்லா நாட்டில் உள்ள முதலாளிகளும் நமக்கு என்னவெல்லாம் தெரிந்திருக்கிறது என்பதை பார்த்து சம்பளம் கொடுப்பதில்லை அவர்களுக்கு தேவையான வேலைக்கு உரிய சம்பளம் மட்டுமே அவர்கள் கொடுப்பார்கள்.//
நிச்சயமாக!!

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - //ஆணியைப்பிடுங்கிக்கொண்டு இத்தனை அவஸ்தைகளையும் அனுபவித்துத்தான் தீரணுமா//
அக்கா, இறைவனருளால் என் சம்பளம் என் குடும்பத்திற்குத் தேவைப்படுகின்ற சூழ்நிலை இல்லை. அதனால், இத்தனைக் கஷ்டப்பட்டு வேலைக்குச் செல்லவேண்டுமா என்று நிறுத்திவிட்டேன். ஆனால், எல்லாருடைய நிலைமையும் அப்படி இருக்காதல்லவா?

ஒருசிலருக்குக் குடும்பச் சிக்கல்கள், அவசியத்தேவைகள் போன்ற அத்தியாவசியக் காரணங்களால் வேலைக்குப் போய்த்தான் ஆக வேண்டும். அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்! அதுதவிர, எத்தனை பேருக்கு கணவரே வேலைசெய்யச் சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள்?

இவர்களுக்கெல்லாம் வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதுதான் வழி. அதையும் அதிகச் செலவு என்று வைக்காது போகிறவர்கள், தைரியமாகப் பிள்ளைகளைத் தனியே வீட்டில் விட்டுச் செல்கிறார்கள்.

சமீப காலமாக, இங்கே அமீரகத்தில் வீட்டில் தனியே இருக்கும் பிள்ளைகள் அகால மரணமடைவது அதிகரித்துள்ளது என்பது நடுக்கும் செய்தி!!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

காவ்யா மாதவன் நடித்த கதாமா என்ற மலையாளப் படம் ஒரு பணிப்பெண்ணைப் பற்றியதுதான். உங்கள் அனுபவம் கசப்பானதுதான்.

ADHI VENKAT said...

எவ்வளவு கஷ்டங்கள், மன உளைச்சல்......வெளிநாட்டு வாழ்க்கையில். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

அக்கம் பக்கமெல்லாம் பாத்துப்பாங்க என்பது நம்ம ஊரில் தான். எங்க எதிர் வீட்டில் இருப்பவரை பார்த்தே ஒரு மாதத்திற்கும் மேலே இருக்கும்.....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆதங்கமான கேள்வி.
பிரச்னைக்கு தீர்வுதான் தெரியவில்லை.

சிராஜ் said...

/* இதனால்தான், இங்கு பலரும் பகுதி-நேரப் பணிப்பெண்களை வைத்துக்கொள்ள விழைவது. ஆண்கள் உதவுவார்கள் என்றாலும், அது ‘உதவி’தான் என்பதால் பெண்களின் “பொறுப்பு” பெரியதாக ஒன்றும் குறைந்துவிடுவதில்லை. */

சலாம் ஹுசைனம்மா,

நல்ல பதிவு. உங்கள் அனுபவங்களை அழகாக சொல்லி உள்ளீர்கள். உங்கள் நண்பர்கள் வேண்டாம் என்று சொல்லும் பொழுதே சுதா பண்ணி இருக்கலாம். என்ன பண்றது இரண்டு இலட்ச ருபாய் போகணும்னு இருக்கயில என்ன பண்ண முடியும்....

/* இதனால்தான், இங்கு பலரும் பகுதி-நேரப் பணிப்பெண்களை வைத்துக்கொள்ள விழைவது. ஆண்கள் உதவுவார்கள் என்றாலும், அது ‘உதவி’தான் என்பதால் பெண்களின் “பொறுப்பு” பெரியதாக ஒன்றும் குறைந்துவிடுவதில்லை. */

எல்லாம் சரி. சந்தடி சாக்கில ஆண்களோட "உதவி" யினால எந்த பிரயோஜனமும் இல்லைன்னு ஒரு வாரு வாரி இருக்கீங்களே?? நியாயமா?????

வெங்கட் நாகராஜ் said...

கசப்பான அனுபவங்கள் தான் கிடைக்கும் போல....

எம் அப்துல் காதர் said...

கஷ்டமே பட்டாலும் சுவாரஸ்யமா சொல்லி இருக்கீங்க ஹுசைனம்மா!!

எம் அப்துல் காதர் said...

பெரும்பாலும் இங்கே (சவுதியில்) கத்தாமாக்கள் + டிரைவர் (அவங்க புருஷனோடு)தான் வேலைக்கு வருகிறார்கள். அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாட்டினர் நிறையபேர் இங்கே கத்தாமா வேலையில் இருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து கத்தாமாக்கள் வருவது தடை செய்யப் பட்டிருப்பதாக தெரிகிறது. ஆகவே ஸ்ரீலங்கன் கத்தாமாக்கள் நிறையவே இங்கு வருகிறார்கள். பெண்கள் என்பதால் சிற்சில இடங்களில் நாகரீகம் நழுவிப் போகிறதென்னவோ மறுக்க முடியாத உண்மை ஹுசைனம்மா!!

ஹுஸைனம்மா said...

வித்யா மேடம் - வாங்க. ஆமாங்க; அந்தப் படம் நானும் பார்த்தேன். நன்றிங்க.

கோவை2தில்லி - அமீரகத்தில் வாழும் இந்த 15 வருஷமாக, எனக்கு அக்கம்பக்கத்தில் வாய்ப்பது, ஒன்று பேச்சலர்ஸாக இருக்கும்; அல்லது ஏதாவது கம்பெனி இருக்கும். ஒரே ஒருமுறை ஒரு மும்பை பெண் எதிர்வீட்டில் வந்திருந்தாள். ஆனால், பணம் கொடுத்தால்கூட பேசமாட்டேன்னு சொல்லிட்டா போங்க!! :-))))

நிஜாம் பாய் - வாங்க. நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

சிராஜ் - //உங்கள் நண்பர்கள் வேண்டாம் என்று சொல்லும் பொழுதே சுதா பண்ணி இருக்கலாம்... இரண்டு இலட்ச ருபாய் போகணும்னு இருக்கயில..//
இல்லைங்க; நாம கூட்டி வர்றவங்களும் பிரச்னை பண்ணத்தான் செய்வாங்கன்னு ஏன் முதல்லயே நினைக்கணும்; நான் நல்லவளா இருக்கதுனால, (நெசமாங்க) எல்லாரையும் நல்லவங்களாகவே பாக்கிறேன். அதான்!!

//சந்தடி சாக்கில ஆண்களோட "உதவி" யினால எந்த பிரயோஜனமும் இல்லைன்னு//
இல்லைங்க, பிரயோஜனம் இல்லைன்னு சொல்லலை. ஆண்கள் எவ்வளவு உதவி செஞ்சாலும், முழுசா அவங்க நம்மளை replace பண்ணிட மாட்டாங்கன்னு சொல்ல வந்தேன். என்னதான், அஜிஸ்டெண்ட் குக் இருந்தாலும், மெயின் குக் மாதிரி வருமா? :-))))

ஹுஸைனம்மா said...

வெங்கட் - நிறைய கசப்பான அனுபவங்களும் கிடைச்சதுன்னாலும், ஸ்டெல்லா மாதிரி அனுசரணையானவங்களும் இருக்கத்தானே செய்றாங்க. மனிதர்கள் பலவிதம். ஒருத்தரைவச்சு எல்லாரையும் எடை போட முடியாதுல்லியா? நன்றிங்க.

அப்துல்காதர் - அங்கே கணவன் மனைவியாவே வர்றாங்களா, பரவால்லையே. இங்கேயும் ஒண்ணுரெண்டு அப்படி இருக்கலாமாயிருக்கும். நன்றிங்க.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ஹுசைனம்மா,
இரண்டு பகுதிகளையும் படித்தேன்.
Gகத்தாமா விஷயத்தில் எனக்கு அனுபவம் இல்லை.

இதுவரை, 'தொழிலாளித்துவ பார்வையில்' எழுதப்பட்ட பதிவுகளில் கஃபீல்களை அரக்கர்கள் போல சித்தரிப்பார்கள். ஆனாலும் Gகத்தாமா வேலைக்கான விசாவுக்கு அலை மோதும் ஒரு கூட்டம் மறுபக்கம். 'எங்கோ தவறு உள்ளதே' என படிக்கும் போதே நெருடும்.

அதேபோல, அரபிய முதாலாளித்துவ பார்வையில் எழுதப்பபடும்போது அநியாயத்துக்கு Gகத்தாமாவை வில்லியாக... இல்லை... பயங்கரவாதிபோலவே காட்டுவார்கள்.

எனக்கு தெரிந்தவகையில் நீங்கள்தான் Gகத்தாமா வைத்து இருந்த முதல் 'எக்ஸ்பாட் கஃபீல்'.

ஆஹா..! இந்த பதிவில் நீங்கதான் எவ்வளவு நடுநிலையோடு எழுதி உள்ளீர்கள்..! அனைத்து விஷயங்களையும் சமநோக்கோடு அலசியுள்ளீர்கள்.

இந்த இரண்டு பதிவும் Gகத்தாமா கொண்டுவர நாடும் வெளிநாடு வாழ் மக்களுக்கு ஒரு சிறந்த பாடம்.

மிகவும் பயனுள்ள பதிவுகள். நன்றி சகோ.ஹுசைனம்மா.

Avargal Unmaigal said...

/ஆண்கள் எவ்வளவு உதவி செஞ்சாலும், முழுசா அவங்க நம்மளை replace பண்ணிட மாட்டாங்கன்னு சொல்ல வந்தேன். //

நீங்கள் சொன்ன இந்த கருத்தை நான் முழுமையாக மறுக்கிறேன். அதற்கு உதாரணம் என்னையையே எடுத்து கொள்ளலாம் என்னை மாதிரி பல ஆண்களையும் பார்த்து இருக்கிறேன்.


என்னதான், அஜிஸ்டெண்ட் குக் இருந்தாலும், மெயின் குக் மாதிரி வருமா? :-))))// ஆமாம் மெயின் குக் எங்களை போல அஜிஸ்டெண்ட் குக் நீங்க வரமுடியாது.

நீங்கள் என் வீட்டிற்கு பக்கத்தில் இருந்தால் நீங்கள் ஆண்களைப் பற்றி மேற்சொன்ன இரண்டு கருத்துக்களையும் சொல்லி இருக்கமாட்டிர்கள்

ஒரு நடை அமெரிக்கா வந்துட்டுதான் போங்க

ஹுஸைனம்மா said...

முஹம்மது ஆஷிக் -வ அலைக்கும் ஸலாம்.

நன்றி கருத்துக்கு. ஆம், இரு தரப்பிலுமே தவறுபவர்கள் இருக்கிறார்கள்.

ஹுஸைனம்மா said...

அவர்கள் உண்மைகள்:

///ஆண்கள் எவ்வளவு உதவி செஞ்சாலும், முழுசா அவங்க நம்மளை replace பண்ணிட மாட்டாங்கன்னு சொல்ல வந்தேன். //

நீங்கள் சொன்ன இந்த கருத்தை நான் முழுமையாக மறுக்கிறேன். அதற்கு உதாரணம் என்னையையே எடுத்து கொள்ளலாம் //

விதிவிலக்குகள் எப்பவுமே உண்டு. ஆனா, பெரும்பான்மை நான் சொன்னதுபோலத்தான். சில ஆண்களின் குணம் அப்படியாகவும் இருக்கலாம், அல்லது வேலை மற்ற சூழ்நிலை காரணமாகவும் இருக்கலாம்.

இதைக் குறித்து மேலும் பேசிக்கொண்டு போனால், பதிவு திசை திரும்ப வாய்ப்புள்ளது. இன்னொரு சம்யம் இதுபற்றிப் பேசலாமே. நன்றிங்க கருத்துக்கு.

கீதமஞ்சரி said...

அப்பப்பா... எத்தனைப் பிரச்சனைகள்! ஒருவழியாய் மீண்டு வந்தீர்களே... பிள்ளைகளைத் தனியாய் வீட்டில் விடுவது அவ்வளவு நல்லதில்லை. பணிப்பெண்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான் போலும். நல்லதொரு எச்சரிக்கைப் பதிவு.

பாச மலர் / Paasa Malar said...

//இவை என் கேள்விகள் மட்டுமல்ல; என்னைப் போலவே இந்தப் பிரச்னையாலும் “ஆணியே புடுங்க வேண்டாம்” என்று வீட்டில் இருக்கும் பல ஆயிரக்கணக்கானப் பெண்களின் கேள்விகளும்கூட.//

ஆணியே பிடுங்க வேண்டாம் பெண்கள் வரிசையில் நானும்தான்...

என்ன என்ன கஷ்டங்கள்...நல்ல அனுபவப் பகிர்வு ஹுஸைனம்மா..

துளசி கோபால் said...

நேற்றுதான் கத்தாமா படம் பார்த்தேன்.அதன்பின் வலை வீசுனதில் நீங்க ஆப்ட்டீங்க.

பணிப்பெண்கள் இருந்தாலும் கஷ்டம், இல்லைன்னாலும் கஷ்டம் என்று ஆகி இருக்கு.

எங்க ஊரில் சுத்தம்........ வேலைக்கு ஆள் வச்சுக் கட்டுப்படி ஆகாது. மணி நேரத்துக்கு 15 டாலர் குறைஞ்சபட்சம் கொடுக்கணும்.

சம்பாரிக்கிறதையெல்லாம் வரி கட்டவும், வேலைக்கு ஆள் வைக்கவும் செலவு பண்ணினால்... நமக்கு என்ன பயன்?

மேலும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வீட்டில் ஹோம் அலோனாக விட்டால் நம்மைப் புடிச்சு உள்ளே போட்டுருவாங்க. பேபி சிட்டருக்குக் கொடுத்துக் கட்டுப்படி ஆகாது.

அதான் இருப்பது போதுமுன்னு பெரும்பாலான பெண்கள் முடிவு செஞ்சுடறோம்.

பசங்க பெருசானதும் வேலைக்குப் போகலாம்தான். ஆனால் உடம்பு வணங்கணுமே!

அதுக்குத்தான் பார்ட் டைம் கிடைச்சால்
விடுவதில்லை. வேலைக்கு வேலை வீட்டுக்கு வீடு.

ஹுஸைனம்மா said...

கீதமஞ்சரி - நன்றிங்க.

பாசமலர் - நன்றிங்க கருத்துக்கு. சவூதியில் வேலைக்கு ஆள் கிடைப்பது இன்னும் கஷ்டம்னு கேள்விப்பட்டேன்.

துளசி டீச்சர் - ரொம்ப நாளாச்சு உங்களையெல்லாம் ‘பார்த்து’. :-)

//சம்பாரிக்கிறதையெல்லாம் வரி கட்டவும், வேலைக்கு ஆள் வைக்கவும் செலவு பண்ணினால்... நமக்கு என்ன பயன்?//

உண்மைதானக்கா. பணிப்பெண்கள் வைப்பது கட்டுபடியாகாததாக அகிவிட்டதால், வேலைக்குப் போகும் பெண்களுக்கு சுத்தம் செய்வது, குழந்தை பராமரிப்பு, தோட்டம் போன்ற மேல்வேலைகளிலேயே நேரம் கழிந்துவிடுகிறது. அப்புறம் எங்கே சமைக்க? அதான், ரெடிமேட் உணவு, ஹோட்டல்களிலும், ஃபாஸ்ட் ஃபுட் ரெஸ்டாரண்ட்களிலும் கூட்டம் களை கட்டுகிறது. பல பெண்களும் சின்ஸியராக சமைக்க முயற்சிக்கிறார்கள் என்றாலும், அவர்களும் மெஷினல்லவே?

//மேலும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வீட்டில் ஹோம் அலோனாக விட்டால் நம்மைப் புடிச்சு உள்ளே போட்டுருவாங்க.//

இங்கே அப்படி கட்டுப்பாடு எதுவும் கிடையாது என்பதால், பலரும் - குறிப்பாக இந்தியர்கள் - மூணாங்கிளாஸ் நாலாங்கிளாஸ் பிள்ளைகளிடம்கூட வீட்டுச்சாவியக் கொடுத்து தனியே இருக்க விடுகிறார்கள். சில விபத்துகளும் நடந்திருக்கிறது.

//பசங்க பெருசானதும் வேலைக்குப் போகலாம்தான். ஆனால் உடம்பு வணங்கணுமே!//

ஆமாம்க்கா. அதே சமயம், நம்ம படிச்ச ஃபீல்டைவிட்டும் விலகி வந்துறதால, அப்போ நினைச்ச வேலை என்பதைவிட கிடைக்கிற வேலைக்குத்தான் போக வேண்டிருக்கீறது.

//அதான் இருப்பது போதுமுன்னு பெரும்பாலான பெண்கள் முடிவு செஞ்சுடறோம்.//

அதே அதே :-( :-( என்னவோ ப்ளாக் ஒண்ணு இருக்கிறதால, வேலைக்குப் போகாத வருத்தம் ரொம்பத் தெரிவதில்லை. :-)))