Pages

நெட்டிஸன்களுக்காக




வல்லமை மின்னிதழின் மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, ”இணையத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி” என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டி சென்ற வருடம் ஜூலை  மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.  இதில் எனது கட்டுரை, சிறப்புப் பரிசுக்கானதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.  சென்னை ஐக்கியா (AIKYA) தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திரு வையவன் அவர்கள் ரூ.450 மதிப்புள்ள “நர்மதாவின் தமிழ் அகராதி” பரிசாக வழங்கினார். வல்லமைக்கும், ஐக்கியாவுக்கும் எனது நன்றிகள்.

பரிசுக்கானக் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்த திரு. மணி மு. மணிவண்ணன் அவர்கள், சிமண்டெக் நிறுவனத்தின் சென்னைக் கிளையில் முதுநிலை நெறியாளர். எனது கட்டுரையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்:
ஹுசைனம்மாவின் கட்டுரையும் வருணனின் கட்டுரைக்கு ஏறத்தாழ இணையாக அமைந்திருக்கிறது.  ஆனால், வருணன் அளவுக்கு அவரது கட்டுரையில் முழுமையான தகவல்கள் இல்லை.  இருப்பினும், இணையத்தில் பாதுகாப்பாக இயங்கத் தேவையான செயலிகளை வாங்க வேண்டியதன் அவசியத்தை அவர் மிகவும் பொறுப்புடன் விளக்கியுள்ளார். எனவே வருணனின் கட்டுரையைப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கிறேன்.  ஹுசைனம்மாவின் கட்டுரையை சிறப்புப் பரிசுக்குப் பரிந்துரைக்கிறேன்.
 முதற்பரிசு வென்ற திரு. வருணனின் கட்டுரையும் நாம் அவசியம் வாசித்தறிய வேண்டிய ஒன்று என்பதால் பரிந்துரைக்கிறேன். 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

முன்னுரை:
இணையம் என்றால் என்ன என்று அறிமுகம் தேவையில்லாத அளவுக்கு, இன்று இண்டர்நெட் எங்கும் பரவியுள்ளது. இணையத் தொடர்பு இல்லா வீடும் இல்லை; அலுவலகங்களும் இல்லை. ஏன்,  கிராமங்களில் மாடுகள் வைத்து பால் விற்கும் படிப்பறியாப் பெண்கள்கூட, தங்கள் வியாபாரத்திற்காக இணையத்தைப் பயன்படுத்துமளவு இணையத்தின் பயன்பாடுகள் எண்ணற்றவை.

தமிழகத்தின் சென்ற ஆட்சிகளில், இலவசமாக செருப்புகள் தந்தார்கள்; சைக்கிள்கள் தந்தார்கள்; டிவிக்கள் தந்தார்கள்.  ஆனால், இன்றைய தமிழக அரசு, ”விலையில்லா” மடிக்கணினியை வழங்கிவருவது ஏன்? இன்டர்நெட்டின் பயன்களை அறிந்தமையால்தானே, அதை முறையாகப் பயன்படுத்த லேப்-டாப் இல்லாத வீடுகளே இருக்கக்கூடாது என்று கொடுக்கிறார்கள்!!

சரியான முறையில் பயன்பாடு:
எந்தப் பொருளும் நம்மிடம் இருப்பது மட்டுமே நமக்கு பலன் அளிப்பதாக ஆகிவிடாது. அதைச் சிறப்பான முறையில் பயன்படுத்தத் தெரிந்தால் மட்டுமே, நாம் பலன்பெற முடியும்.  உதாரணமாக, நம்மிடம் ஒரு கேமரா செல்ஃபோன் இருக்கிறதென்றால், அதைக் கொண்டு தொலைபேசுதல், குறுஞ்செய்தி அனுப்புதல், அலாரம் வைத்தல் மட்டுமல்லாது, அதைப்  புகைப்படக் கருவியாகவும் பயன்படுத்தினால்தான் அதன் பயன் முழுமையடையும்.

இது மனித உறவுகளுக்கும் உரித்தாகும். உதாரணமாக, ஒரு மேலாளர் தன்கீழ் வேலைபார்ப்பவர்களின் திறமைகளைப் புரிந்து, அதற்கேற்ற வேலைகளைக் கொடுத்துவந்தால்தான் முழுப்பயன்.

இந்தியாவில் இணையம் வெகுஜனப் புழக்கத்திற்கு வந்து, பத்து வருடங்களுக்கு மேலாகியும், முறையாகப் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து இன்னும் பலரும் அறியாமல் இருப்பதே இன்று பலரும் இணையத்தால் ஏமாந்தோம் என்று குற்றம்சாட்டக் காரணம்.  இன்றைய காலத்தில் இணையம் என்பது தவிர்க்கவே முடியாததாகிவிட்டபடியால்,  அதன் பயன்பாடுகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து அனைவரும் தெரிந்துகொள்வதும் அவசியம். அறிவோம் வாருங்கள்.

பாதுகாப்பு:
எப்பொழுதுமே புதிய விஷயங்கள் அறிந்துகொள்ளும்போது, அதன் பயன்களோடு, இலவசமாக இணைந்து வரும் ஆபத்துகளையும், அவற்றை எதிர்கொண்டு தடுக்கும் வழிகளையும் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இணையத்திலும் பயன்களும் ஏராளம்; உடன்வரும் தாக்குதல்களும் தாராளம். எனினும், இதில் கவனமாக இருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இணையம் ஒரு திறந்தவெளிபோல என்பதால், சட்டவிரோத ஊடுறுவல்கள் (hacking) நடப்பது எளிது.  அதாவது, நாம் ஒரு மூடிய வீட்டினுள் இருப்பதைவிட, திறந்தவெளியில் நடந்து செல்லும்போது சமூக விரோதிகளால் ஆபத்து நேரும் வாய்ப்புகள் அதிகம் அல்லவா? அதுபோலத்தான், இணையமும்.

அவ்வாறாக திறந்த வெளியில் செல்ல வேண்டிவரும்போது, நாம் நம் பாதுகாப்பிற்காக சில ஏற்பாடுகளை – நகைகள் அணிவதைத் தவிர்ப்பது, அதிகப் பணம் எடுத்துச் செல்லாமலிருப்பது போல- செய்துகொள்வோம்தானே? அதுபோலவே, இரகசியத் தகவல்களை – இணையத் தள கடவுச்சொற்கள் (பாஸ்வேர்டுகள்), வங்கி விபரங்கள், தனிப்பட்ட தகவல்கள் போன்றவற்றை -   மின்னஞ்சல்களின் மூலம் பகிர்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

இணையம் என்பது கோடிக்கணக்கான கணினிகளின் தொகுப்பு என்பதால், ஒரு கணினி பாதிக்கப்பட்டால், அப்பாதிப்பு மற்ற கணினிகளையும் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பும் அதிகம். எப்படி நாம் மற்றவர்களின் ஜலதோஷம், காய்ச்சல் நம்மைத் தொற்றிக் கொள்ளக் கூடாது என்று தடுப்பூசிகள், மருந்துகள் எடுத்துக் கொள்வோமோ அதுபோல கணினிகளுக்கும் ‘தடுப்பு மருந்துகள்’ வேண்டும்.

நம் கணினிகளில் கண்டிப்பாக ’ஆண்டி-வைரஸ்’ எனப்படும் தடுப்பு மருந்தை, களை அகற்றும் நிரல்களை நிறுவிக்கொள்ள வேண்டும். அவை நம் கணினியைப் புறத்தாக்குதலிலிருந்து பாதுகாக்கும்.

சரி, நாம் வெளியில் செல்லாவிட்டாலும், நம் வீட்டிற்கு வருபவருக்குத் தொற்று நோய் ஏதேனும் இருந்தால், அவரிடமிருந்து நமக்குத் தொற்றுவதை தவிர்க்க, நாம் ‘மாஸ்க்’ அணிவது, கைகளில் ‘ஆண்டி-செப்டிக்’ லோஷன் போடுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

அதுபோல, நம் கணினி சரியாக இருந்தாலும், நமக்கு வரும் மின்னஞ்சல்களில்  ‘வைரஸ்’ இருந்தால், அதனிடமிருந்து பாதுகாப்புப் பெறவும் இந்த ‘ஆண்டி-வைரஸ்’ நிரல்கள் மிகமிக அவசியம். உலகில் புதுப்புது நோய்க்கிருமிகள் தோன்றுவதைப் போல, இணைய உலகிலும் புதுப்புது வைரஸ்கள் தோன்றிவருகின்றன. அவற்றிலிருந்தும் நம் கணினியைப் பாதுகாக்க, நம் ‘ஆண்டி-வைரஸ்’ ப்ரோக்ராம்களை புதுப்பித்துக் (அப்-டேட்) கொள்ளவேண்டும்.

இந்த ஆண்டி-வைரஸ் ப்ரோக்ராம்களை வாங்கவும், அவ்வப்போது அப்-டேட் செய்யவும் கட்டணம் வசூலிக்கப்படும்.சிலர், இந்தக் கட்டணத்திற்குப் பயந்து இவற்றைத் தவிர்ப்பார்கள். இன்ஷூரன்ஸ் வாங்கக் கஞ்சத்தனம் செய்தால், பாதிப்பு வரும்போது பெரும் நஷ்டமாகும். அதுபோல, ஆண்டி-வைரஸ் ப்ரோக்ராம்கள் வாங்கவில்லையெனில், வைரஸ் தாக்குதலின்களின்போது கணினியில் நாம் சேமித்து வைத்திருக்கும் தகவல்கள், எழுத்துகள் அத்தனையும் பறிபோகும் ஆபத்து இருக்கிறது. தகவல்கள் மட்டுமல்ல, அதன்மூலம் நம் வங்கிக் கணக்கு விபரங்களைத் திருடர்கள் அறிந்து, மோசம் செய்யவும் வாய்ப்புண்டு என்பதை மறக்கக் கூடாது.

தகவல் பரிமாற்றம்:
இணையம் என்றதுமே மின்னஞ்சல்தான் முதலில் ஞாபகம் வரும்.  அதிவேக செய்திப் பரிமாற்றத்திற்காகத்தான் இணையம் உருவாக்கப்பட்டது என்பதால், தொடக்கத்தில் மின்னஞ்சல்தான் அதன் முக்கியப் பயன்பாடாக இருந்தது. ஏன், இன்றும் செய்திப் பரிமாற்றம்தான் அதன் பயன்களில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

உறவுகளுக்கிடையே, அலுவலர்களுக்கிடையே, நட்புகளுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு, கடிதப் போக்குவரத்தே இன்று அரிதாகிவிட்டது என்னுமளவுக்கு,  மின்னஞ்சல்தான் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகிறது!! கையால் எழுதப்படும் கடித்ததின் உணர்ச்சி வெளிப்பாடுகள் இதில் இல்லை என்று சொல்லப்பட்டாலும், செய்தி சென்றடையும் வேகத்திற்காகவே மின்னஞ்சல் முன்னிலை வகிக்கிறது. இன்னொரு பயனாக காகிதப்பயன்பாட்டைக் குறைக்கிறது என்பதற்காகவும் மின்னஞ்சல் ஊக்கப்படுத்தப்படுகிறது.

இப்போது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தகவல் பரிமாற்ற தளங்கள் நிறைய, பயன்பாட்டில் உள்ளன. இவற்றினால் பல நல்ல காரியங்கள் நடக்கின்றன. சமீபத்தில் நடந்த துனிசியா, எகிப்து புரட்சிகளில், அன்னா ஹஸாரே லஞ்ச ஒழிப்பு போராட்டத்தில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரின் பங்கு மிகப்பெரிது. போலவே பல விழிப்புணர்வு செய்திகளைப் பகிரவும் மிகவும் உதவுகின்றன.  மருத்துவம், கல்விக்கு உதவி கேட்டு வரும் தகவல் பரிமாற்றங்களால் எத்தனையோ பேருக்கு நல்லது நடந்திருக்கிறது.

சிலரிடம் நாம் நேரில் பேசத் தயங்கும் விஷயங்களை மனம்விட்டுப் பேச இணையம் கைகொடுக்கும். விரிவாகப் பேசலாம். இணையவழி பரிமாற்றங்களில் நேரில் காணாவிட்டாலும், நேரில் பேசுவதைவிட அதிகம் தாக்கம் ஏற்படுத்தும். அதேசமயம், எழுத்து என்பது உணர்ச்சிகளற்றது. எழுதுபவர் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியில் எழுதியிருந்தாலும், அதை வாசிப்பவர் எந்த மாதிரியான உணர்ச்சியில் எடுத்துக் கொள்வார் என்பது புரியாது.  உதாரணமாக, “உடம்பு எப்படியிருக்கு?” என்று நீங்கள் அன்பாக நலம் விசாரிக்கும் தொனியில் எழுதியிருக்கலாம். வாசிப்பவர், அதை மிரட்டல் தொனியில் எழுதியிருப்பதாக நினைத்து வாசிக்கலாம். ஆகவே, வார்த்தைப் பிரயோகங்களில் மிகுந்த கவனம் தேவை.

 சிலர் தம் பெயர், முகவரி, புகைப்படம் மற்றும் அன்றாட செயல்பாடுகளைத் தயக்கமின்றி இதுபோன்ற வலைத்தளங்களில் பொதுவில் பகிர்கின்றனர்.  இது, கடைத்தெருவில், ஒரு தட்டியில் எழுதிவைப்பதற்குச் சமமானது.  நம் வீட்டு வாசலில்கூட  நம்மைப்பற்றிய இந்த விபரங்களை எழுதிவைக்கமாட்டோம்; ஆனால் தயக்கமின்றி யார் வருவார், யார் போவார் என்று அறியாத இணையத்தில் பகிரத் துணிகின்றனர்!! சமீபத்தில் சென்னையில் ஒரு பெண் தான் தனியாகத் தன் வீட்டில் இருப்பதை ஃபேஸ்புக்கில் பகிர, அதைப் படித்த ஒரு சமூக விரோதியால் அவர் அன்று பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுவிட்டார். பரிதாபம்!!

சிலர், நாங்கள் எங்கள் நண்பர்களிடம் மட்டும்தான் பகிர்கிறோம் என்று சொல்வார்கள். நேரில் பழகும் நபர்களே நமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யும் உலகமிது. இணையத்தில் புதிதாகக் கிடைக்கும் அன்பர்கள் எத்தனை உண்மையாக இருப்பார்கள் என்று நாம் கணிக்க முடியுமா? அதற்காக யாரோடும் பழகவே கூடாது என்றில்லை. ஒரு லக்ஷ்மண்ரேகா- எல்லைக்கோடு வேண்டும் எதிலும்.

அறிவுப் பகிர்வு:
இணையத்தின் இன்னொரு மிக மிக முக்கியப் பயன்பாடு – அறிவுப் பகிர்வு. அதாவது நாம் அறியாத விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்வது.

1. நோய்வாய்ப்படும் சமயம், நமக்கு வரும் உபாதைகளை வைத்து, அது எந்த நோயின் அறிகுறிகளாக இருக்கலாம் என்பதை யூகிக்க இணையத்தில் இருக்கும் பல்வேறு மருத்துவ தளங்கள் உதவும். மேலும், இன்று மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்தியலாளர்கள் என்று எல்லாருமே நம்பகத்தன்மையை இழந்துவரும் காலச்சூழலில், நமக்குப் பரிந்துரைக்கப்படும் சிகிச்சை முறைகளையும், மருந்துகளையும் சரிபார்க்கவும் இவ்வலைத்தளங்கள் உதவும்.

ஆனால், ஒருபோதும் இவ்வலைத்தளங்களைக் கொண்டு சுயமருத்துவ முயற்சியில் இறங்கக் கூடாது. மேலும், மருத்துவர்களுக்கு ஒருபோதும் இத்தளங்கள் மாற்றாக முடியாது. இவ்விரண்டும் மறக்கவே கூடாத விதிகள்!!

2. விடுமுறைப் பயணங்கள் செல்வதற்கு உரிய விவரங்களைச் சேகரிக்க எண்ணற்ற வலைத்தளங்கள் உள்ளன. அவற்றைப் பார்த்து, செல்லுமிடத்தில் காணத் தவறவிடக்கூடாத இடங்கள், தங்குவதற்கு வசதியான இடம், சென்றுவரும் பயணத்திற்கான முன்பதிவுகள், செல்லத் தகுந்த காலநிலை ஆகியவற்றிற்கு வலைத்தளங்களின் உதவி இன்றியமையாதவை. எனினும், ஏமாற்றங்களைத் தவிர்க்க, அரசு சார் சுற்றுலா மையங்களையோ, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களையோ மட்டும் சார்ந்திருப்பது நல்லது. எதிலுமே முன்பணம் செலுத்துவதில் கவனம் தேவை.

மேலும் முன்பே சொன்னபடி, நம் பயணத்திட்டங்களைப் பொதுவில் பகிர்வது திருடர்களுக்குத் தோதாக அமையும். திருடர்கள் என்றால், லுங்கி கட்டி, கழுத்தில் கத்தி வைத்திருப்பதெல்லாம் அந்தக் காலம். திருடர்களும் நவீனமயமாகி விட்டனர்!!

3. வீட்டில் சின்னச் சின்ன ரிப்பேர் வேலைகளுக்கு, ப்ளம்பர், பெயிண்டர், கார்பெண்டர்களையெல்லாம் தேடிக்கொண்டிருந்தால் காரியம் ஆவதில்லை. இன்று பெரிய பெரிய ஆபிசர்களிடம்கூட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிவிடலாம், ஆனால் இதுபோன்ற தொழிலாளர்கள் கிடைப்பதுதான் அரிதாகிவிட்டது. எனவே, நாமே சிறுசிறு வேலைகளைச் செய்துகொள்வது உடலுக்கும் நல்லது, பர்ஸுக்கும் நல்லது. ‘எனக்குச் செய்யத் தெரியாதே’ என்கிறீர்களா? அதற்குத்தான் இன்று எத்தனையோ “Do it Yourself” (DIY) தளங்கள் உள்ளனவே. அதைப் பார்த்துச் செய்தால், நாமும் வல்லுநர்களாகிவிடலாம்!!

4. இன்று மத்திய/மாநில அரசுகள் தம் எல்லா சேவைகளையும் கணினிமயமாக்கி வருகிறது. அதில், நிலங்கள், கட்டிடங்களின் தகவல்களும்கூட இணையத்தில் கிடைக்கின்றன. ஆகையால், ஒரு சொத்து வாங்குவதாக இருந்தால், அதன் வில்லங்கம், அரசாங்க சந்தை மதிப்பு போன்ற விபரங்களைத் தெரிந்துகொண்டால் ஏமாறாமல் தப்பிக்கலாம்.
மேலும், புதிய வரிவிதிப்புகள், அதன் விதிமுறைகள், கணக்கிடப்படும் மூறைகள் என்று எல்லாவற்றிற்குமே இணையத்தில் விவரங்கள் காணக்கிடைக்கின்றன. ஆடிட்டர் சொல்வதைச் சரிபார்த்து, அவருக்கே ஆலோசனைகள் சொல்லலாம் நாம்!!

இப்போதெல்லாம், காவல் துறையில் புகார் செய்ய வேண்டுமென்றால்கூட இணையம் வழி செய்திடலாம். நேரில் காவல்நிலையம் செல்லத் தயங்கி, பலரும் பல அநீதிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். இணையம் எனும்போது, தயக்கம் நீங்கும். தைரியம் பெருகும்.

5. வேலை – பொழுதுபோக்கு – வருவாயுடன்:
அலுவலகம் சென்று வேலை செய்வதற்கு எல்லாப் பெண்களுக்கும் வாய்ப்பு அமைவதில்லை. அத்தகையவர்களுக்கு இணைய வழி வேலைவாய்ப்பு ஒரு வரம். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகளிலிருந்து பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து, வீட்டிலிருந்தே மனதுக்குப் பிடித்த வேலைகள் செய்யலாம்.  ஆரம்பத்தில் வெளியே சென்று வேலை பார்ப்பதை விட, வருமானம் குறைவாக இருந்தாலும்,  அனுபவம் அதிகமாகி, வாய்ப்புகள் பெருகும்போது, வருமானமும் பெருகும். குடும்பப் பொறுப்புகளையும் தவறவிடத் தேவையில்லை.

இன்னும் பலருக்குத் தம் திறமைகளை வெளிக்கொணரும் தளமாக, இணையம் உதவுகிறது. எழுத்தார்வம் உள்ளவர்கள், கவி படைப்பவர்கள், அருமையான கைவேலைப்பாடு செய்பவர்கள், சமையல் அரசிகள் என்று பலருக்கும் தம் திறமைகளை வலைப்பூக்கள், இணையப் பத்திரிகைகள் மூலம் மற்றவர்கள் பார்வைக்குப் படைத்து, பாராட்டுகளும், மேலும் மெருகேற்ற ஆலோசனைகளும் பெற இணையமே உதவுகிறது.

வலைப்பூவை ஆரம்பப் புள்ளியாகக் கொண்ட எத்தனையோ பேர், பத்திரிக்கைகளில் எழுதும் வாய்ப்புகள் அமைந்து, பிரபலமாகிவிட்டனர்.
எனினும், இணையத்தில் வலைப்பூக்கள் ஆரம்பித்து எழுதும்போது கிடைக்கும், தணிக்கையற்ற அதிகச் சுதந்திரம், ஆரம்பத்தில் இனித்தாலும், பின்விளைவுகள் தரக்கூடியது என்பதைப் புரிந்து, நடந்துகொள்ள வேண்டும்.

முடிவுரை:
இணையத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள, மேலே சொல்லியுள்ள உதாரணங்கள், வழிமுறைகள் மிகச்சிலதான். சிற்பி கருங்கல்லைச் செதுக்கி அழகுச்சிலையாக்குவதுபோல, ஒவ்வொருவர் தம் கற்பனை, திறமைகளைப் பொறுத்து, இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் அதன் தீமைகளை வடிகட்டி,  நன்மைகளை மட்டும் வருவித்துக் கொள்வதென்பதும்கூட பயன்படுத்துவோர் கையில் மட்டுமே உள்ளது.

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கத்தி, மின்சாரம், செல்ஃபோன் போல கவனமாகப் பயன்படுத்த வேண்டியவற்றின் வரிசையில் இணையமும் இணைந்துவிட்டது.  எல்லாவற்றிற்கும் பொருந்தும்  கீழ்க்கண்ட சில பழமொழிகள், பெரியோர் வாக்குகள் இணையத்திற்கும் பொருந்தும்:

“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” - இணையத்தில் செலவழிக்கும் நம் நேரத்திற்கும் இது பொருந்தும். அங்கே கொட்டிக் கிடக்கும் அபரிமிதமான தகவல்களுக்கும் பொருந்தும்!!

“பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே” – நேரில் இருவர் பேசிக்கொள்வதற்கே இப்படியொரு அறிவுரை என்றால், இணையம் போன்ற பொதுத்தளங்களில், நம் தனிப்பட்ட விபரங்களைப் பகிர்வதற்கு என்ன சொல்வது?

“இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து” – இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்கள், செய்திகள் ஏராளம், ஏராளம். அனைத்தையும் நாம் பயன்படுத்த நினைத்தால், குழப்பமே மிஞ்சும். ஆகவே, தகுதியான, நம்பகத்தன்மை மிகுந்த தளங்களையே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும். அதற்குக் கட்டணங்கள் கொடுக்க வேண்டியிருந்தாலும் சரி!!

“ஆனை வாங்கினவன் அங்குசம் வாங்க மாட்டானாம்”  – நிஜ வாழ்வில் நமக்கு பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு, கணினிக்கும் தகுந்த ஆண்டி-வைரஸ் ப்ரோக்ராம்களின் பாதுகாப்புச் சுவர் முக்கியம்.

மேற்கூறியவைகளை இணையப் பயன்பாட்டிற்கான “தங்க விதிகளாக” மதித்துச் செயல்பட்டோமானால், சிறந்த பலன்களைப் பெற முடியும்!!


Post Comment

22 comments:

Unknown said...

romba payanulla thagaval.. sirapu parisuku vaalthukal..

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் ஹூசைனம்மா! கலக்குங்க!

கோமதி அரசு said...

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கத்தி, மின்சாரம், செல்ஃபோன் போல கவனமாகப் பயன்படுத்த வேண்டியவற்றின் வரிசையில் இணையமும் இணைந்துவிட்டது.//
ஆம், ஹுஸைனம்மா உண்மை.

அழகாய், அருமையாக இணையத்தின் சாதகம், பாதங்களை விரிவாய் நல்ல எடுத்துக் காட்டுகளுடன் சொல்லியமைக்கு நன்றி.
எதுவும் அளவோடு இருப்பது நல்லது தான்.
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

முதற்பரிசு வென்ற திரு. வருணனின் கட்டுரையும் நாம் அவசியம் வாசித்தறிய வேண்டிய ஒன்று என்பதால் பரிந்துரைக்கிறேன். //

உங்கள் பரிந்துரைக்கு நன்றி படித்தேன் நன்றாக எழுதி இருக்கிறார்.
அவருக்கும் வாழ்த்துக்கள்.

RAMA RAVI (RAMVI) said...

மிகவும் சிறப்பான தகவல்கள் அதை விளக்கிய விதமும் அருமை..

சிறப்புப் பரிசுக்கு வாழ்த்துக்கள்.

அமுதா கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள். மிக பொறுமையாக விஷயத்தை அலசி எழுதி இருக்கிறீர்கள்.

வரதராஜலு .பூ said...

ரொம்ப தெளிவான விளக்கங்கள்.

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் மேடம்.

Menaga Sathia said...

வாழ்த்துக்கள் ஹூசைனம்மா,கலக்குறீங்க....

இமா க்றிஸ் said...

அருமையான கட்டுரை ஹுசைனம்மா. பரிசு கிடைத்ததில் ஆச்சரியம் இல்லை. உங்களுக்கு என் பாராட்டுக்கள். வருணனின் கட்டுரை இணைப்புக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

பயனுள்ள கட்டுரை. பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்.

பூந்தளிர் said...

வாழ்த்துக்கள் ஹுசைனம்மா. பகிர்வுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் ஹுஸைனம்மா..

சமீரா said...

மிக அழகான விளக்கமான ஒரு கட்டுரை!! வாழ்த்துக்கள்!!!

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான அலசல் ஹுஸைனம்மா.

வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகளும்!

இராஜராஜேஸ்வரி said...

பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்

ADHI VENKAT said...

சிறப்பான கட்டுரைக்கு, சிறப்பு பரிசு கிடைத்ததற்கு வாழ்த்துகள்.

ஸாதிகா said...

பரிசு பெற்ரமைக்கு வாழ்த்துகக்ள் ஹுசைனம்மா.தெலிவான விலக்கங்கள் இலகுவில் புரியும்படியான வாக்கியங்கள் அமைத்து இருக்கின்றீர்கள்.

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் ஹுஸைனாம்மா.
அனைவருக்கும் தேவையான மிக முக்கியமான தகவலகளை பகிர்ந்து இருக்கீங்க/

pudugaithendral said...

வாழ்த்துக்கள்பா,

அழகா விரிவா போரடிக்காம சொல்லியிருக்கீங்க.

Riyas said...

வலைச்சரத்தில் உங்கள் பதிவையும் அறிமுகம் செய்திருக்கிறேன் முடிந்தால் வந்து பாருங்கள்.

http://blogintamil.blogspot.com/2013/01/blog-post_22.html

நிலாமகள் said...

பயனுள்ள கட்டுரை. பரிசுக்கு வாழ்த்து!

துளசி கோபால் said...

அருமை!!

மனம் நிறைந்த இனிய பாராட்டுகள் !