Pages

இத்தோட முடிச்சுக்குவோம்




நானும் கண்காட்சிக்கு போனேன்!
சக்தி உலகின் மின்னும் நட்சத்திரங்கள்
மேலேயுள்ள பதிவுகளின் தொடர்ச்சியாக இந்த இறுதிப் பகுதி.

துவரை பார்த்ததெல்லாம் - CSP, bio-mass, Geothermal - இப்படி எல்லாமே பெரிய அளவில் அரசால் அல்லது பெரிய நிறுவனங்களால் மட்டுமே செய்யக்கூடியவை. தனிநபர்களாக நாம் என்னென்ன செய்ய முடியும் என்றால், குப்பைகளைத் தரம் பிரித்தல், மறுசுழற்சி ஆகியவைதான் ஞாபகம் வரும்.



இதுதவிர, வசதி மற்றும் விருப்பப்பட்டவர்கள், தம் வீட்டையே ”பேணுதலான வீடு” - "Sustainable home" - ஆக மாற்றுவதுதான் பூமிக்குச் செய்யும் பேருபகாரம். அதற்காகச் செய்யவேண்டியவற்றில் சில:

* அலுவலகங்கள் மற்றும் வீட்டைக் கட்டும்போதே, வீட்டினுள்ளே வரும் வெளிச்சம் மற்றும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் முறையில் வீட்டை வடிவமைப்பது; அதனால் மின்சாரச் செலவை வெகுவாகக் குறைக்கலாம்.


* கூரைகளில் சோலார் பேனல்கள் வைப்பதன் மூலமா, நமக்குத் தேவையான மின்சாரத்தை இயற்கைக்கு ஊறு இல்லாத மின்சாரம் தயாரித்தல்;
 

* தண்ணீர் சூடாக்க சோலார் ஹீட்டர்;

* வீட்டில் வெளியேற்றப்படும் கழிவு நீரை,  மறுசுழற்சி செய்து, தோட்டம், டாய்லெட்களில் பயன்படுத்துதல்.

அமீரகத்தில், இனி கட்டப்படும் ஒவ்வொரு கட்டிடமும், இதுபோன்று "sustainable"-ஆக இருக்கவேண்டுமென்று குறைந்தபட்ச விதிகள் (Estidama) ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

னி, சில குறிப்பிடத்தக்க-சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகள் குறித்துப் பார்ப்போம்.

தண்ணீர் சுத்திகரிப்பான்:


என்னதுன்னு புரியலையா... Water filter!! இப்ப புரியுதா? 
 இதிலே என்ன விசேஷம்னா, கரண்ட் தேவையில்லை என்பதுதான்.  இதில், கலங்கிய நீரை விட்டு, அத்தோடு கடல் தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட ”coagulant" வகை பொடியைக் கலந்து அந்தத் தொட்டியை, கொடுக்கப்பட்டுள்ள கைப்பிடியின் உதவி கொண்டு நன்கு சுழற்றினால், நல்ல நீர் கிடைக்கும்.  இந்த ஃபில்டர், குறிப்பா, சுத்தமான குடிநீர் கிடைக்காத எமெர்ஜென்ஸி காலங்களில் மின்சாரமும் இல்லாத சமயத்தில் பயன்படும்னு சொல்றாங்க. 

                                                 
இதேபோல, சூரிய ஒளியால் செயல்படும் தண்ணீர் சுத்திகரிப்பானும் இருக்கிறது.  இது, கடல்நீரைக் குடிநீராக்கும் முறையில் (desalination) முறையில் செயல்படுவதால், இதற்கு எந்தப் பொடியும் சேர்க்கத் தேவையில்லை. பூகம்பம், வெள்ளம் போன்ற சமயங்களில் மிகவும் பயன்படும்.

சென்ற மாதம், பேத்திக்கு பிரசவம் பார்க்க அமீரகம் வந்திருந்த பாட்டி ஒருவரைச் சந்தித்தேன். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அந்தக் காலங்களில், பிரசவித்தவர்களுக்கு கொடுப்பதற்கான குடிநீரை மண்பானையில் வைத்து, அதில் சுட்ட செங்கலைப் போட்டு வைப்பார்களாம்.

கலங்கிய நீரில் தேத்தாங்கொட்டையைப் போட்டு வைத்தால், நீர் தெளிவடைந்து சுத்தமாகும் என்று படித்த ஞாபகமும் வருகிறது.

கழிவு நீர் சுத்திகரிப்பான்: (Sewerage treatment)

 
  


5 பேர், 10 பேர், 20 பேர் உள்ள வீடுகளுக்கு ஏற்றவாறு சிறிய அளவுகளில் உள்ளது. மின்சாரம் தேவையில்லை. நுண்ணுரிகளைப் பயன்படுத்தி, இயற்கையான முறையில் செயல்படுவதால், எதுவும் சேர்க்க, எடுக்க தேவையில்லை. 

OLED Light Panels:

கவனத்தை ஈர்த்த இன்னொரு பொருள், "OLED panels" எனப்படும் விளக்குகள். பல்புகள், ட்யூப் லைட்டுகள் இவையெல்லாம் தவிர்த்து, இப்போது அதிக மின்சார சேமிப்பிற்காக ஃப்ளூரஸண்ட் பல்புகள் பயன்படுத்துகிறோம்.  என்றாலும், இதன் ஆயுட்காலம் முடிந்ததும் இவற்றிலுள்ள பாதரசத்தினால் சுற்றுச்சூழலுக்கு உள்ள ஆபத்துகள் குறித்து பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை. 


 

இதைத் தவிர்க்க வந்திருப்பதுதான் OLED panels. பேருக்கேற்றபடி, இவை “பேனல்கள்” போலத்தான் இருக்கும்; இதன் விகுதி (thickness) 2.3 மில்லிமீட்டர்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.  எடை, வெறும் 107 கிராம்தான்!! இதிலுள்ள வாயுக்களால் வெளிச்சம் கிடைக்கிறதென்பதால், மிக நீஈஈண்ட ஆயுட்காலம்.  மின்சார சேமிப்பும் மிக அதிகம். சுவற்றில் பதிக்கும் வசதியால், வீட்டின் அழகும் கூடும்.

வழக்கமாக, விளக்குகளின் ஒளியில் நிறங்கள் வித்தியாசமாத் தெரியும். (கடையில் பார்த்த மயில் கழுத்து சேலை, வீட்டிலே வேற கலரில் இருக்குமே) ஆனால், இதில் அப்படி இல்லையாம். மெர்க்குரி கிடையாதென்பதால், சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலில்லை.

வைதவிர, எதிர்காலத்தில் (2050) வரவிருக்கும் புதிய கண்டுபிடிப்புகள் என்று பார்த்தவைதான் வியப்புக்குரியவையாக இருந்தன. நம்மைத் தயார்ப்படுத்திக்குவோம்!!

1. எதிர்காலத்தில் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச, லேசர் கதிர்களால் மழைபெய்ய வைக்கப்படும்.
பம்புசெட், வாய்க்கா வரப்பு எல்லாம் கிடையாது.  கூடவே, வாய்க்கா வரப்பு தகராறும் காணாமப் போயிடுமா?

2. வாகனங்கள் ஓடுவதற்கு, ஹைட்ரஜன் வாயு - மின்சாரம் - சூரிய சக்தி ஆகியவை தேவைப்படும்.

3.  மனிதர்களுக்குத் தேவையான புரதச் சத்துக்களுக்காக, “சூப்பர் பீன்ஸ்” எனப்படும் “காய்கறி” பிரத்தியேகமாக வடிவமைக்கப்படும்.

4. ”நினைப்பது நடக்கும்”!! - நீங்கள் நினைத்தாலே அதைச் செயல்படுத்தும் கணிணிகள் கிடைக்கும். (ஹூம், இப்பவே கிடைச்சா, தினம் ரெண்டு பதிவு எழுதலாம்!!)

5.   கேட்டால் கிடைக்கும்!!


                                       
 
நாம் கேட்பதை உடனே ”பிரிண்ட்” செய்து தரும் 3D printer  உண்டு. என்னாது, பிரிண்டரைப் போய் பெரூசாச் சொல்லிகிட்டுன்னு நினைக்கிறீங்கதானே? இந்த பிரிண்டரில் வருவது காகிதம் அல்ல!! வீடும், உணவும், எலெக்ட்ரானிக் பொருட்களும்!! ஆமாம், நீங்க உங்க தேவைகளைச் சொன்னா அதைச் சரிவிகிதத்தில் கலந்து உணவாகவோ, வீடாகவோ, மொபைல் ஃபோனாகவோ ரெடிமேடாகப் பிரிண்ட் எடுத்துத் தந்துவிடும்!! என்னாங்க, “லூஸு”  லைலாவைப் பாக்கிற மாதிரி பாக்குறீங்க? நானே திகைச்சுப் போய்த்தான் நின்னேன்.

6. நலந்தானா!!



 உங்களின் விரலை மட்டும் வைத்துப் பரிசோதித்து, (ரத்தம் எடுக்காமலேயே) அதன் மூலம் உங்கள் டி.என்.ஏ. வரை ஆய்ந்து, முழு உடல்நல குறைபாடுகளைக் கண்டறிந்து, அதற்கேற்ற மருந்துகளைக் கலந்து தரும் “தானியங்கி மருந்தகம்” இருக்கும். இதற்குத் தேவையான சக்தி, சூரிய ஒளிமூலமோ, சுற்றுப்புறத்திலிருக்கும் ரேடியோ அலைகள் மூலமோ எடுத்துக்கொள்ளப்படும்.

 7.  எந்திரன் “தேனீ”:

சமீபத்தில் ஒரு பத்திரிகையில், தேனீக்கள் அருகி வருவதைப் பற்றி எழுதிருந்தாங்க.  ரசாயன உரங்கள் ஒரு காரணம் என்றால், மொபைல் ஃபோன் மற்றும் அதன் டவர்கள்தான் மிக முக்கியக் காரணமாம். இவற்றினால் வரும் மின் அலைகளினால் தேனீக்கள், தம் தேனடைக்குச் செல்ல வழி தெரியாமல்
குழம்பிப் போய்விடுகின்றனவாம். புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்னாராம், “தேனீக்கள் இல்லையென்றால் மகரந்தச் சேர்க்கை இல்லை;  மகரந்தச் சேர்க்கை இல்லையென்றால் உணவு இல்லை; உணவு இல்லையென்றால் மனிதன் உட்பட்ட உயிரினங்களும் அடுத்த நான்கே வருடங்களில் இல்லாமல் போய்விடும்”!!


 

இதைப் படித்துக் கவலைப்பட்டேன். அடுத்த வாரமே “ரோபோ தேனீ”யைப் பார்க்க நேர்ந்தது. அதானே, விஞ்ஞானம் இருக்கும்போது, கவலை ஏன்! இந்தத் தேனீ, பெரும் பண்ணைகளில் வேலையாட்கள் பற்றாக்குறைக்குக் கைகொடுக்கும்.  மண்ணில் தண்ணீர் போதுமா, செடிகளில் வாட்டம் ஏன், என்ன சத்து குறைவு என்று பரிசோதித்து, அதற்கேற்ற உரங்களைத் தெளிப்பது, பூச்சிபொட்டுகளை அழிப்பது என்று எல்லாமே பார்த்துக் கொள்ளுமாம்.

8.  விண் பறவை:

 

எதிர்காலத்தில், விமானப் பயணங்களின் நேரம், எரிபொருள் பயன்பாடு
இரண்டுமே வெகுவாகக் குறைக்கப்படும்படியான திட்டமிட்ட விமான வடிவமைப்புகள் இருக்கும். தற்கால விமானங்களில் பார்த்திருப்பீங்க, விமானத்தின் உடலும், இறக்கைகளும் தனித்தனியாகத் தெரியும். இதில் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு முறை மாற்றம் செய்யும்போது, மேலே குறிப்பிட்ட இரண்டு எதிர்பார்ப்புகளும் நிறைவேறும். அதாவது, உடலோடு சேர்ந்த இறக்கைகள் இருந்தால், வேகம் அதிகரிக்க முடியும். 


தற்கால பயணிகள் விமானம்
போர் விமானம்
கன்கார்ட் விமானம்

எல்லா நாடுகளும் பயன்படுத்தும் விமானப்படை விமானங்களும், அதிவேக பயணிகள் விமானச் சேவை செய்து, தற்போது ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள “கன்கார்ட்” வகை விமானங்களும்,  இந்த வடிவமைப்பைக் கொண்டவையே. 


    

மேலும், பறவைகள் கூட்டமாக இடம்பெயரும்போது V வடிவில் செல்வதைப் பார்த்திருப்போம்.  காற்றின் தடையை எதிர்த்துச் செல்லவே இம்முறையில் பறக்கின்றன. இதேபோல, விமானங்கள் கூட்டாகச் சேர்ந்து பறந்தால்,  காற்றின் எதிர்ப்பு குறையும். இதன்மூலமும் எரிபொருள் சிக்கனம் செய்யலாம்.

பல விமானங்கள் சேர்ந்து ஒண்ணா ஒரே நேரத்தில பறக்கணும்னா, “துபாய், லண்டன், ஃப்ரான்ஸ், அம்மேரிக்கா, கன்னடா”ன்னு கூவிக்கூவி அழைச்சு டிக்கட் போட்டு, வண்டி - ஐ மீன், ஃப்ளைட்கள் நிரம்புன பிறகுதான் கிளம்புவாங்களோ? இருக்கும்.

இது தெரிஞ்சா, இனி அரசியல்வாதிகள், “கார்கள்” அணிவகுத்து வருவதுபோல, இனி “விமானங்கள்” அணிவகுக்க வருவாங்களோ!!


Post Comment

33 comments:

அமுதா கிருஷ்ணா said...

எதிர்காலத்தில் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச, லேசர் கதிர்களால் மழைபெய்ய வைக்கப்படும். இது சூப்பர் ஐடியா.ரோபாட் தேனீ..என்னவெல்லாம் யோசனை.சூரிய ஒளியில் வண்டி ஓட்டினா..எல்லாமே சூப்பரா இருக்கே.லைட் OLED பேனல் அழகா இருக்கும்ல.

அனைவருக்கும் அன்பு  said...

ஆச்சர்யமான அதிசய தகவல்களை அள்ளி கொடுத்த உங்களுக்கு பாரட்டுக்கள்

RAMA RAVI (RAMVI) said...

அஹா.. எத்தனை அதிசயமான தகவல்கள்.இவை எல்லாம் செயல்பட்டால் எதிர்காலத்தில் உலகம் sci-fi சினிமாவில் பார்பது போல இருக்கும்.

தகவல்கள் எல்லாமே அருமை. அதனுடன் படங்களும் சிறப்பு.

ADHI VENKAT said...

எல்லாமே சூப்பரான தகவல்களா இருக்கேங்க...பயன்பாட்டுக்கு வந்தால் நல்லா தான் இருக்கும்..

திண்டுக்கல் தனபாலன் said...

சந்தோசமான, நிம்மதியான, திருப்தியான வாழ்க்கை தவிர எல்லாமே இனி கிடைக்கலாம்...! ஹிஹி... பல தகவல்களுக்கு நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

கவனத்தை ஈர்த்த அருமையான வியப்பளிக்கும் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.

அப்பாதுரை said...

பிரமாதம். மிகவும் சுவாரசியமான பதிவு.
சுத்திகரிப்பான்கள் proto typeஆ இல்லை அசலில் வேலை செய்பவையா?

தேத்தாங்கொட்டை - கேள்விப்பட்டதே இல்லை. இது என்ன காயா பழமா?

ஹுஸைனம்மா said...

@அப்பாதுரை:

இந்த சுத்திகரிப்பான்கள் எல்லாமே working machines - for sale! ஏற்கனவே பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றிற்கான வலைத்தளங்களில், அதிக விபரங்கள் கிடைக்கும். :-)

தேத்தாங்கொட்டை - தேற்றான் கொட்டை என்பதுதான் இப்படியாகிவிட்டது. இந்த வார பசுமை விகடனில் ஒரு கட்டுரையே இது பத்தி வந்திருக்கு, பாருங்க. முன்பெல்லாம், நீர்நிலைகளின் தண்ணீரைச் சுத்தம் செய்ய, கரையோரங்களில் இந்த மரத்தை வளர்ப்பார்களாம். :-)

ஹுஸைனம்மா said...

அமுதா - உங்களைப் போலவே நிறைய விஷயங்கள் எனக்கும் ஆச்சரியமா இருந்துது. நன்றிங்க.

கோவை மு.சரளா - நன்றிங்க.

ராம்விக்கா - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

கோவை2தில்லி - ஆமாங்க, சில நல்ல விஷயங்கள் இப்பவே பயன்பாட்டில் இருக்கிறதென்றாலும், இப்ப எல்லாமே புதுசு என்பதால் விலை கொஞ்சம் அதிகமாருக்கும். சீக்கிரமே எல்லாருக்குமே பயன்படணும்.

ஹுஸைனம்மா said...


தி. தனபாலன் - //சந்தோசமான, நிம்மதியான, திருப்தியான வாழ்க்கை தவிர எல்லாமே இனி கிடைக்கலாம்...!//

கரெக்டுங்க!!
இருப்பதைக்/கிடைப்பதைக் கொண்டு சந்தோசமான, நிம்மதியான, திருப்தியான வாழ்க்கையை அடைவது நம் சாமர்த்தியம்!!

ராஜேஸ்வரி மேடம் - நன்றிங்க.

எல் கே said...

ஹ்ம்ம் ஹ்ம்ம் என்ன என்னமோ சொல்றீங்க.. பார்ப்போம்

Sangeetha said...

படிப்பதற்கு நன்றாக இருக்கிறது.
//எதிர்காலத்தில் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச, லேசர் கதிர்களால் மழைபெய்ய வைக்கப்படும்.//
வரப்பு தகறாரு தீருமோ இல்லையோ காவிரி நதி நீர் பிரச்சனை தீரும்.

கோமதி அரசு said...

உங்களின் விரலை மட்டும் வைத்துப் பரிசோதித்து, (ரத்தம் எடுக்காமலேயே) அதன் மூலம் உங்கள் டி.என்.ஏ. வரை ஆய்ந்து, முழு உடல்நல குறைபாடுகளைக் கண்டறிந்து, அதற்கேற்ற மருந்துகளைக் கலந்து தரும் “தானியங்கி மருந்தகம்” இருக்கும். இதற்குத் தேவையான சக்தி, சூரிய ஒளிமூலமோ, சுற்றுப்புறத்திலிருக்கும் ரேடியோ அலைகள் மூலமோ எடுத்துக்கொள்ளப்படும்.//

இது நல்லா இருக்கே!

நிறைய நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

பல விமானங்கள் சேர்ந்து ஒண்ணா ஒரே நேரத்தில பறக்கணும்னா, “துபாய், லண்டன், ஃப்ரான்ஸ், அம்மேரிக்கா, கன்னடா”ன்னு கூவிக்கூவி அழைச்சு டிக்கட் போட்டு, வண்டி - ஐ மீன், ஃப்ளைட்கள் நிரம்புன பிறகுதான் கிளம்புவாங்களோ? இருக்கும்.

இது தெரிஞ்சா, இனி அரசியல்வாதிகள், “கார்கள்” அணிவகுத்து வருவதுபோல, இனி “விமானங்கள்” அணிவகுக்க வருவாங்களோ!!//

ஹுஸைனம்மா, இந்த செய்தியை கற்பனை செய்து பார்த்தால் நல்லா சிரிப்பு வருது.
உங்களுக்கு கற்பனை சக்தியும் நகைச்சுவை உணர்வும் அதிகம்.

ஸ்ரீராம். said...

மின்சாரம் தேவை இல்லாத தண்ணீர் சுத்திகரிப்பான் பயனுள்ளது. எவ்வளவு நேரம் கையால் சுற்ற வேண்டும் என்று ஒன்று இருக்கே... ரொம்ப நேரம் சுற்றினால்தான் நல்ல சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என்ற பிரமை ஏற்பட்டால்.! :))

OLED LIGHT PANELS உபயோகமான + அழகான ஒன்றாக இருக்கும் என்று தெரிகிறது.

கேட்டால் கிடைக்கும் 3D பிரிண்டர்...!!!!!


நிலாமகள் said...

நினைப்பது நடக்கவும் கேட்டது கிடைக்கவும் எத்தனை எத்தனை கருவிகள் இன்னும் இன்னும்...!!!!

S.டினேஷ்சாந்த் said...

அருமையான பதிவு
செயற்கை மழை பொழிய வைப்பதற்கு ஏற்கனவே சில்வர் அயடைட் பயன்படுத்துகின்றார்களே.ஏன் புதிதாக லேசர்.லேசரை பயன்படுத்துவதால் என்ன நன்மை.விளக்க முடியுமா?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நல்ல, புதிய தகவல்களுடன் கூடிய பதிவு.

பகிர்வுக்கு நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சுவாரசியமான புதிய தகவல்கள்.

சாந்தி மாரியப்பன் said...

ஹைய்யோ.. தகவல் சுரங்கம்ப்பா இந்த இடுகை.

நினைச்சதைச் செயல்படுத்தும் கணினியா? கேக்கவே அருமையாயிருக்கு.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Emmaadi.... embuttu matter...:)
But all informative and interesting. Thanks for sharing. Then, dubai nalamaa akka?

pudugaithendral said...

சுவிச்ச்சு ஒண்ணைத்தட்டிவிட்டுப்புல்ல தட்டுல ரெண்டு இட்லியும், கெட்டி சட்னியும் வந்து விழுந்திடும்னு என் எஸ்கே பாடியது நடக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லைனு தோணுது உங்க பதிவு படிச்சதும்.

pudugaithendral said...

சுவிச்ச்சு ஒண்ணைத்தட்டிவிட்டுப்புல்ல தட்டுல ரெண்டு இட்லியும், கெட்டி சட்னியும் வந்து விழுந்திடும்னு என் எஸ்கே பாடியது நடக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லைனு தோணுது உங்க பதிவு படிச்சதும்.

ஹுஸைனம்மா said...

எல்.கே. - நன்றிங்க.

சங்கீதா - //வரப்பு தகறாரு தீருமோ இல்லையோ காவிரி நதி நீர் பிரச்சனை தீரும்//
ஆஹா, பாஸிடிவ் திங்கிங் என்பது இதுதானோ! நல்ல கருத்துங்க.

கோமதிக்கா - நன்றி அக்கா. சில விஷயங்கள் பிரமிப்பாக இருக்கின்றன; சில சிரிப்பாக.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - //எவ்வளவு நேரம் கையால் சுற்ற வேண்டும் என்று ஒன்று//
இது அவசர நிலைகளில் பயன்படுத்தக்கூடியது. சுத்தினாத்தான் சுத்தத்தண்ணி கிடைக்கும்னா சுத்தித்தானே ஆகணும்! :-)

நிலாமகள் - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

டினேஷ்சாந்த் - // ஏற்கனவே சில்வர் அயடைட் பயன்படுத்துகின்றார்களே.ஏன் புதிதாக லேசர்//
நல்ல கேள்வி. எனக்கும் தோன்றியது. கேட்கத்தான் அங்கு ஆட்கள் இல்லை. நானா யோசிச்ச பதில் இதோ: சில்வர் அயோடைட் என்றால், விமானத்தில் பறந்து போய் மேகத்தில் தூவினால்தான் மழை பெய்யும். லேசர் லைட் என்றால், நின்ற இடத்திலிருந்தே மழை பெய்ய வைக்கலாம் அல்லவா?

ஆமா, அது என்ன டினேஷ்? “தினேஷ்” இல்லயா? :-)))

ஹுஸைனம்மா said...

அறிவன் - நன்றிங்க.

முரளிதரன் - நன்றிங்க.

அமைதிக்கா - //நினைச்சதைச் செயல்படுத்தும் கணினி// எனக்கும் அதுதாங்க பிடிச்சிருந்துது. எவ்ளோ பதிவு போடலாம், மெயில் எழுதலாம்.. :-)))

ஹுஸைனம்மா said...

அப்பாவி - யாரு வந்திருக்காக பாரு? அடப்பா... சாரி, அப்பாவியா!! அடடே? நல்லாருக்கீங்களா? துபாய் - நீங்க இல்லாததாலும், நான் பக்கத்தூரில் இருப்பதாலும் நலமோ நலம். :-)))
உங்க கண் நலமா?

புதுகைத் தென்றல் - அதே பாட்டுதாங்க நானும் நினைச்சுகிட்டேன்!! நாம எப்பவுமே ஸேம் ப்ளட்!! :-))))

F.NIHAZA said...

Nalla article

F.NIHAZA said...

Nalla article

Kanchana Radhakrishnan said...

தகவல்கள் எல்லாமே அருமை.

enrenrum16 said...

நல்ல அறிமுகங்கள்...இடையிடையே நக்கல்களுடன் படிக்க சுவாரசியமாக இருக்கிறது பதிவு.