Pages

சதிபதி டெலிபதி




காலையில நல்லாத்தானே இருந்தது. எல்லாரையும் அனுப்பிவிட்டு, தனியே காஃபியுடன் பேப்பரை கையில் எடுத்ததிலிருந்து மீண்டும் அந்த எண்ணம் தலைதூக்கியது. இன்றில்லை, ரெண்டுமூணு நாளாகவே இந்த எண்ணம் - உணர்வு என்றுதான் சொல்லவேண்டும். அதுவும், கோபமா, எரிச்சலா, ஆதங்கமா என்று பிரித்தறிய முடியா ஒன்று, மனதில் உருண்டுகொண்டேயிருக்கிறது. ஏன் என்றும் சொல்லத்தெரியாமல், எதற்கு என்றும் புரியாமல்... என்னவொரு அவஸ்தையிது!!

இது புதிது என்றோ, முதல்முறை என்றோ சொல்ல முடியாதுதான். முன்பும் பலமுறை இப்படி இருந்திருக்கிறது, ஆனால் ஏதேனும் காரணத்தோடு. ஆனால், இப்போது ஏன், என்ன காரணம் என்றே தெரியவில்லை என்பதுதான் கூடுதல் தவிப்பு தருகிறது.

குழம்பாதீர்கள், விஷயம் இதுதான். ரெண்டு மூணு நாளாவே என்னவர் மேலே ஒரு.. ஒரு... இது.  அதான், கோவம் கோவமா வருது. எப்பவும் எதாவது எடக்கு மடக்காச் செஞ்சு வைப்பார். அப்ப கோவம் எரிச்சல் காண்டு எல்லாமே வர்றது வழக்கம்தான். ஆனா, இப்ப ஒண்ணும் விசேஷமா இல்லாதப்பவும் ஏன் இப்படின்னுதான் புரியலை.

எல்லா பெண்களுக்கும் வழக்கமா உள்ளதுதானேன்னு நினைப்பீங்க. சே.. சே.. நான் அப்படிலாம் இல்லீங்க. காரணமில்லாம கோவப்படவே மாட்டேன். அப்படி கோவப்பட்டுட்டாக்கூட, ஒரு காரணத்தைக் கண்டுபிடிச்சுக் கொண்டாந்துடுவேன். (அதுக்கு ரொம்பவெல்லாம் மெனக்கெடவும் வேண்டாம்).

வழக்கமா, குளிச்சுட்டு ஈரத்துண்டை படுக்கை மேல சுருட்டி வீசிவைப்பார். அதுகூட (அப்பப்ப) திருந்திட்டாரே, அப்புறம் ஏன் இந்தக் கோவம்னு தெரியலையே.

ஒருதரம், காய்கறி வாங்கக் கொடுத்துவிட்ட லிஸ்டில், ‘கத்தரி’ என்று எழுதிருப்பதைப் பாத்து, கத்திரிக்கோல் வாங்கிட்டு வந்தாரே, அந்த ’புத்திசாலித்தனத்தைக்’ கண்டுகூட இப்படி எரிச்சல் வரலையே? பசங்களோடு சேர்த்து ஓட்டத்தானே செஞ்சோம்.

ல்யாணத்துக்கு முன்னாடியே ரெண்டு பேர் பேரும் English alphabets-ல் இரண்டு எதிரெதிர் முனைகளில் உள்ள எழுத்துகளில் தொடங்குதுன்னு பாத்ததும், அப்பவே லைட்டா ஒரு கலக்கம் .... “சேச்சே... ’வேற்றுமையில் ஒற்றுமை’ காணப்போகிறோம் என்பதற்கான அடையாளம் இது”ன்னு மனசைச் சமாதானப்படுத்திகிட்டேன். ஆனா,  கல்யாணமான புதுசிலேயே,  எங்க ரெண்டு பேருக்கும் இருக்குற ‘ஒத்துமை’களைப் பாத்து கோவம்கோவமா வந்தப்பக்கூட, கலங்காமல் “அதெல்லாம் திருத்திடலாம்”னு நம்ம்ப்பியிருந்தேன். ஆனா, வித்தியாசம் எங்க ரெண்டு பேருக்கிடையில மட்டுமில்லை, ரெண்டு பேர் குடும்பத்துக்கே இருக்குன்னு தெரிஞ்சப்போதான்... கொஞ்சம் நடுங்கியது.

உதாரணத்துக்கு ஒண்னு சொல்றேன்: எங்க வீட்டுல தின்னவேலிலருந்து சென்னை போக ரெயிலைப் பிடிக்கணும்னா, வடிவேலு மாதிரி, வண்டியக் கிளம்ப விட்டுத்தான் ஏறுவோம். அவ்வளவு ஏன், அடுத்த ஸ்டேஷன்ல போயி ரயிலைத் துரத்திப் பிடிச்ச ”வீர வரலாறு” கூட உண்டு. ஆனா, அவங்க வீட்ல மாலையில் சென்னை போகணுன்னா, அன்னிக்குக் காலையில் சென்னைலருந்து தின்னவேலிக்கு வந்த
ரயிலை நெல்லை ஸ்டேஷன்ல  ஹால்ட் போடுவாங்க தெரியுமா, அப்பவே மூட்டை முடிச்சோட ஏறி உக்காந்துக்குவாங்க. மட்டுமில்ல,  டூட்டி முடிச்சு ஃப்ளாட்ஃபாரத்துல நடந்துபோற டி.டி.ஆர்.கிட்டயே “ஏன் இன்னும் வண்டி எடுக்க மாட்டுக்கான்?”ன்னு கேப்பாங்க!!

ப்படி கண்ணுக்கெட்டியவரை வறட்சியே தென்பட்டாலும், தின்னவேலிக்காரியால சமாளிக்கமுடியாததான்னு வீறாப்பா இருந்தேன். அதன் தொடர்ச்சியா, சதி-பதி எங்களுக்குள்ள அருமையான டெலிபதி வளர்ந்துச்சு. எப்படின்னா, ’குளிருதே, ஃபேனை ஆஃப் பண்ணுவோம்’ என் மனசுல லைட்டா எண்ணம் தொடங்கத்தான் செய்யும். உடனே, அங்கே பல்ப் எரியும். “ஸ்ஸப்பா... என்னாமா வேர்க்குது... அந்த ஏஸியப் போடு”ம்பார்!!

அந்த ‘டெலிபதி’ அப்படியே வளந்து வளந்து, இப்ப ஒருத்தருக்கு high BP; ஒருத்தருக்கு low BPங்கிற அளவுல வளந்திருக்குன்னா பாருங்களேன்!! ஆக,  ஒருத்தருக்கு உப்பு குறைக்கணும்; ஒருத்தருக்கு கூட்டணும். அதுவரை சாப்பாடுல உப்புல மட்டுந்தான் பொருத்தமிருந்துது!! இப்ப அதுலயும் ஏறுக்குமாறு!! என்ன ஒற்றுமை! என்ன பொருத்தம்!!

இவர் ’தண்ணி’ டிபார்ட்மெண்டில் (நோ, நோ, இது அசல் ஒரிஜினல் ‘தண்ணீர்’ - Water Distribution) வேலை பார்ப்பதால், ஒருமுறை, ஒரு குறிப்பிட்ட ஏரியாவுக்கு தண்ணீர் வழங்குவதுகுறித்து, இருவேறு கம்பெனிகளுக்கு நடுவில் பிரச்னை வர, அதைச் சுமுகமாகத் தீர்த்து வைத்ததைச் சொல்லிகிட்டிருந்தார். உடனே, எனக்கு மூளைக்குள் பல்பு எரிய, இவரை தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வாங்கித்தர கர்நாடகாவுக்கு அனுப்பலாமா, கேரளாவுக்கு அனுப்பிவைக்கவான்னு ஒரு யோசனை!! யோசிச்சுகிட்டிருக்கும்போதே சொன்னார், பிரச்னையைத் தீர்த்து வைத்ததும், கூட இருந்த ஒரு ஆப்பீசர் “Now you are suitable for that" அப்படின்னாராம்.

அட, என் யோசனை அந்த ஆப்பீசருக்கு எப்படித் தெரிஞ்சுது, அவரும் தமிழரா இருக்குமோன்னு ஆவலோடு, “for what?"னு கேட்டேன். “You are now suitable to marry four wives"ன்னாராம்!! அப்பக்கூட துளிக்கோவம் வரலையே?

”ம்க்கும்!..  ஏற்கனவே நான் உங்க மூணாவது பொண்டாட்டிதாங்கிற விவரத்தைச் சொல்றதுதானே அவர்கிட்ட? அதுலயும் அந்த மூத்தகுடியா படுத்துற பாடு... தெனோமும் காலையிலருந்து சாயங்காலம் வரை ’அங்கே’யே இருந்தாலும், வீட்டுக்கு வந்தப்புறமும் ஆயிரத்தெட்டு ஃபோன் பண்ணி தொந்தரவு பண்றது, ஓரோரு சமயம் நடுராத்திரின்னுகூடப் பாக்காம ‘இப்பவே வா’ன்னு மிரட்டுறதும்,
ஒடனே நீங்க ஓடுறதும்னு நடக்கிற எல்லாக் கொடுமையையும் சொல்றதுதானே?”ன்னுதானே கிண்டல் பண்ணேன்!!?? இப்ப ஏன் இப்படி....


ந்தக் கோவத்தை மாத்துறது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. அவரைப் பக்கத்துல உக்கார வச்சிட்டு, ஒரு காமெடி படம் பார்த்தா எல்லாம் சரியாகிடும். ஒவ்வொரு ஜோக்குக்கும் பக்கத்துல இருக்கவங்களை ஓங்கி “அடிச்சு அடிச்சு” சிரிக்கிறப்போ கிடைக்கிற நிம்மதி இருக்கே... அலாதியானது!! படம் பார்த்து முடிச்சதும் மனசு அப்படியே லேசாகிடும்.

ஆனா, முதல்ல காரணம் என்னன்னு தெரியலைன்னா மண்டையே வெடிச்சுடும்போல இருக்கே... வொய் திஸ்.. வொய் திஸ் எரிச்சல்...

”தர்மயுத்தம்” படத்துல ரஜினியை ஒவ்வொரு பௌர்ணமிக்கும் கட்டி வச்சிடுவாங்க. அன்னிக்கு அவருக்கு முத்திடுமாம். அதுமாதிரி இன்னிக்கு எதாவது இருக்குமோன்னு டவுட்டு வந்துது. அப்படிப் பாத்தா  ஒருநாள் ஸோலோ, ஒருநாள் டூயட், அப்பப்ப ஃபேமிலி சாங்னு நாம நெதமும் ஆடுற “ருத்ரதாண்டவத்துக்கு” நித்தமும்ல பௌர்ணமியா இருக்கணும். மனசு இப்படிச் சொன்னாலும், கண்ணு காலண்டர் பக்கம் போச்சு...

ஆ... நான் நெனச்சது சரியாப் போச்சு!! ஆமா... இன்னைக்கு... இன்னைக்கு... இன்னிக்குதான் எங்க கல்யாண நாள்!!

டிஸ்கி:  


மக்காஸ், உடனே வாழ்த்துகளை அள்ளிக் கொட்டிடாதீங்க. ”சம்பவம்” நடந்தது அக்னி நட்சத்திரம் கொளுத்திய ஒரு மே மாசத்தில. இன்னிக்கு இல்லை. எல்லாரும் எழுதுறாங்களே, நாமளும் எழுதுவோமேன்னு ஒரு ஆர்வக்கோளாறுல எழுதுனது. எழுத மனசு ஆசைப்பட்டபோதே, புத்தி எச்சரித்தது. அதெல்லாம் அங்கங்க ‘மானே, தேனே, பொன்மானே’ போட்டுச் சமாளிச்சடலாம்னு நினைச்சு ஆரம்பிச்சேன். ஹும்... என்ன மேக்கப் போட்டாலும் இப்பிடித்தான் வருது!!   மே மாசமே எழுதிட்டேன். சரி, சண்டையில்லாத ஒரு திருநாளாப் பாத்து பதிவு போட்டுடலாம்னு காத்திருந்து... காத்திருந்து...  ஜூலையே வந்துடுச்சு. சரி, கடல்ல அலை எப்போ ஓயுறது, நாம எப்ப குளிக்கிறதுன்னு... பதிவுல போட்டாச்சு.

Post Comment

44 comments:

Unknown said...

ஒருதரம், காய்கறி வாங்கக் கொடுத்துவிட்ட லிஸ்டில், ‘கத்தரி’ என்று எழுதிருப்பதைப் பாத்து, கத்திரிக்கோல் வாங்கிட்டு வந்தாரே, அந்த ’புத்திசாலித்தனத்தைக்’ கண்டுகூட இப்படி எரிச்சல் வரலையே? பசங்களோடு சேர்த்து ஓட்டத்தானே செஞ்சோம்.//அப்ப அண்ணன் நம்ம கேஸ்தான் ..ஹா ஹா

ஸ்ரீராம். said...

ஆஹா.... வாழ்த்துகள். (இதை மே மாசமே படிச்சுட்டதா நினைச்சுகிட்டாலும் சரி, அடுத்த வருஷத்துக்கு அட்வான்ஸா வச்சுகிட்டாலும் சரி!)

sathishsangkavi.blogspot.com said...

.. ‘மானே, தேனே, பொன்மானே’ போட்டுச் சமாளிச்சடலாம்னு நினைச்சு ஆரம்பிச்சேன். ..

அதைவிட அற்புதமா கலக்கீட்டீங்க...

மேமாதம் எழுதினால் என்ன... படிக்க படிக்க சுவாரஸ்யம் குறையாமல் இருப்பதே போதுமல்லவா...

திருமண நாள் வாழ்த்துக்கள்...

ராஜி said...

வாழ்த்திக்குறேனுங்க

சாந்தி மாரியப்பன் said...

//ஒவ்வொரு ஜோக்குக்கும் பக்கத்துல இருக்கவங்களை ஓங்கி “அடிச்சு அடிச்சு” சிரிக்கிறப்போ கிடைக்கிற நிம்மதி//

என்னா வில்லத்தனம் :-))

//ரெண்டு பேர் பேரும் English alphabets-ல் இரண்டு எதிரெதிர் முனைகளில் உள்ள எழுத்துகளில் தொடங்குதுன்னு பாத்ததும், அப்பவே லைட்டா ஒரு கலக்கம்//

சத்தியமா இப்படியொரு கலக்கம் எனக்கும் வந்தது. என் பெயரோ அமைதின்னு அர்த்தம் வரும். அவர் பெயரோ உக்கிரத்துக்குப் பெயர் போன தெய்வத்தின் பெயர். முட்டி மோதிக்கிற மாதிரி தெரிஞ்சாலும் எதிர் துருவங்கள்தான் ஒன்றையொன்று ஈர்க்குமென்பது அறிவியல்ங்க :-)))

தாமதமான வாழ்த்துகள்.

துளசி கோபால் said...

ஹாஹா நோ ஒர்ரீஸ்.

அடுத்த அக்னி நட்சத்திர கல்யாண நாளுக்கு அட்வான்ஸ் வாழ்த்து(க்)கள்.

இப்படி ஏட்டிக்குப் போட்டியா இருக்கக் கொடுத்து வச்சுருக்கணுமே!!!!

நல்லா இருங்க.

இப்படிக்கு,

இன்னொரு கொடுத்து வைத்தவள்:-))))

அமுதா கிருஷ்ணா said...

ஒரு ஓ போட்டுக்குறேன்.

இனிமே மே மாதம் யாரும் கல்யாணம் செய்யாம பாத்துக்கோணும்.

உங்க பக்கத்துல உக்காந்து சிரிப்பு சினிமா பார்க்க கூடாது.

”தளிர் சுரேஷ்” said...

நகைச்சுவை மிளிர்கிறது உங்கள் எழுத்தில்! அருமையான பகிர்வு! லேட்டா பதிவிட்டாலும் டேஸ்ட்டா இருக்கு எழுத்து! நன்றி!

ராமலக்ஷ்மி said...

எப்போது சொன்னால் என்ன:)? இனிய மணநாள் வாழ்த்துகள்!

நிலாமகள் said...


உங்க ஸ்டைலே தனி! வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...

Avargal Unmaigal said...


பதிவு முழுவதும் சிரிக்க வைத்தது, இப்படிபட்ட பதிவுகளை உங்களால்தான் ஜோக்காக எழுத முடியும் காரணம் நீங்க ஜோக் " அடிக்கிறங்கவளாச்சே..
//ஒவ்வொரு ஜோக்குக்கும் பக்கத்துல இருக்கவங்களை ஓங்கி “அடிச்சு அடிச்சு” சிரிக்கிறப்போ கிடைக்கிற நிம்மதி இருக்கே.

கோமதி அரசு said...

இப்படி கண்ணுக்கெட்டியவரை வறட்சியே தென்பட்டாலும், தின்னவேலிக்காரியால சமாளிக்கமுடியாததான்னு வீறாப்பா இருந்தேன். அதன் தொடர்ச்சியா, சதி-பதி எங்களுக்குள்ள அருமையான டெலிபதி வளர்ந்துச்சு. எப்படின்னா, ’குளிருதே, ஃபேனை ஆஃப் பண்ணுவோம்’ என் மனசுல லைட்டா எண்ணம் தொடங்கத்தான் செய்யும். உடனே, அங்கே பல்ப் எரியும். “ஸ்ஸப்பா... என்னாமா வேர்க்குது... அந்த ஏஸியப் போடு”ம்பார்!! //

ஆஹா! என்ன ஒற்றுமை எங்கள் வீட்டிலும் அப்படித்தான்.

நான் பேசிக் கொண்டே இருப்பேன் யாரும் இல்லை என்றாலும் என் மனதோடு

அவர்கள் அவசியம் என்றால் , தேவை என்றால் வாய் திறப்பது.
எதிர் எதிர் துருவம் தான்.

உங்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்.
சதிபதி டெலிபதி வாழ்க!
வாழ்க வளமுடன்.






அப்பாதுரை said...

அந்த fortune cookie சொல்லுற சேதி.. அடடா.. பாவங்க அவரு. என்ன ஒரு சோதனை. என்ன ஒரு சோதனை.

நானும் இந்த பின்னூட்டத்தை மே மாசமே எழுதி வச்சிருந்தேனுங்க. இப்படியே சிரிச்சுக்கிட்டு நல்லா இருங்க.

GEETHA ACHAL said...

பரவாயில்லை லேட் ஆனாலும் சரி... இனிய திருமண நாள் வாழ்த்துகள்..

என்னமா எழுதிருங்க...அப்படியே நிறைய பேர் வீட்டில் நடப்பது தானே....சூப்பர்...எதனையும் விடாமல் படிக்க வைப்பது தானே உங்க ஸ்பெஷல்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கணவனை புத்திசாலின்னு ஏத்துக்கற மனைவியை பாக்கணும்னு ஒரு பேராசை எனக்கு உண்டு

Naazar - Madukkur said...




திருமண நாள் வாழ்த்துக்கள்,

அண்ணனுக்கும் தவறாமல் தெரிவித்து விடுங்கள்

ஆதி மனிதன் said...

Congratulations.

You rock. I could not control my laugh...

வெங்கட் நாகராஜ் said...

அடுத்த கல்யாண நாள் வரப்போகுது சீக்கிரமாவே. அட இன்னும் 10 மாசம் தான் ஓட்டமா ஓடிடும்!

அதனால இப்பவே அட்வான்ஸா ஒரு வாழ்த்து!

Vijiskitchencreations said...

Late aa pottalum latest.

Vaazthukal.

Unknown said...

முரளிதரன் ஐயா கருத்திற்கு உடன்படுகிறேன்

ezhil said...

ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருந்தா வாழ்க்கையில சுவாரசியமே இருக்காதுங்க... இப்ப பாருங்க வாழ்க்கை எப்படி சுவையா, சுவாரசியமா போயிட்டிருக்கு... இங்கயும் அப்படித்தான் ..சில நிகழ்வுகள் அப்படியே...:)

Rafik said...

உங்களுக்கு ரொம்ப தைரியம் தான். :)

அவர் கிட்ட கேட்டாத்தான், அவர் (சோகக்) கதை தெரியும். இதைவிட பெரிய பதிவோ இருக்குமோ..? Ya, from his shoe. :)

abdul said...

என்ன்ன வில்லத்தனம்
வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

எப்போதும். இனிய மணநாள் வாழ்த்துகள்!

மனோ சாமிநாதன் said...

தாமதமாகிப்போனாலும் இனிய நல் வாழ்த்துக்கள் ஹுஸைனம்மா!

ADHI VENKAT said...

அடுத்த வருடத்துக்கான அட்வான்ஸ் வாழ்த்துகள்....

கலக்கிட்டீங்க...:)) அடிகொடுக்க என்ன ஒரு சான்ஸ்...:) குறிச்சு வெச்சுக்கிறேன்...

இங்கயும் மே மாசம்...ஏட்டிக்கு போட்டி எல்லா இடத்திலும் தான்...:))

ஸாதிகா said...

ஆ... நான் நெனச்சது சரியாப் போச்சு!! ஆமா... இன்னைக்கு... இன்னைக்கு... இன்னிக்குதான் எங்க கல்யாண நாள்!! //யப்பா..என்னா பிலட்ப்பூ..தங்கச்சிக்கு வாழ்த்துக்கள்,துஆக்கள்.

Ranjani Narayanan said...

ஹூஸைனம்மா....வயத்த வலிக்குது! அதுவும் //ஒவ்வொரு ஜோக்குக்கும் பக்கத்துல இருக்கறவங்க ஓங்கி அடிச்சு அடிச்சு சிரிக்கிரதுல..// அய்யய்யோ தாங்க முடியலே..
சிரித்து சிரித்து வழியும் ஆனந்தக் கண்ணீருடன் வாழ்த்துக்கள்!

இப்படியே எதிரும் புதிருமா இன்னும் பல்லாண்டு வாழ்க!

enrenrum16 said...

/“ஏன் இன்னும் வண்டி எடுக்க மாட்டுக்கான்?”/ செம செம... உங்களுக்கேத்த ஆளுங்கதான்...

/அட, என் யோசனை அந்த ஆப்பீசருக்கு எப்படித் தெரிஞ்சுது, அவரும் தமிழரா இருக்குமோன்னு ஆவலோடு, “for what?"னு கேட்டேன். “You are now suitable to marry four wives"ன்னாராம்!! / இது உங்க ரங்க்ஸ் போட்டுக்கிட்ட எக்ஸ்ட்ராபிட் என என் எட்டாவது அறிவு சொல்கிறது... இவ்ளோ அப்பாவியா இருக்காதீங்க.... (ஏதோ என்னால் முடிஞ்சது..:) )

/ஏறுக்குமாறு!! என்ன ஒற்றுமை! என்ன பொருத்தம்!!/ முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்ன்ற பழமொழி எனக்கு இப்ப ஏன் ஞாபகம் வருது?? ஏதாவது பரிகாரம் இருந்தா செய்துடுங்க ஹுஸைனம்மா... ஹி..ஹி..ஹி...

ஹுஸைனம்மா said...

ஜப்பார் - /அப்ப அண்ணன் நம்ம கேஸ்தான் .//

ச்சே.. ச்சே.. அந்தளவுக்கெல்லாம் மோசம் இல்லை!! :-))

ஸ்ரீராம் சார் - நன்றிங்க.

சங்கவி - நன்றிங்க.

ராஜி - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

அமைதிக்கா - //எதிர் துருவங்கள்தான் ஒன்றையொன்று ஈர்க்குமென்பது அறிவியல்//
வில்லேஜ் விஞ்ஞானி நீங்க!! வாழ்த்துக்கு நன்றிங்க.

துளசி டீச்சர் - //ஏட்டிக்குப் போட்டியா// அதேதான்.. அது என்னவோ அப்படித்தான் மாத்தி பேசணும்னு மனசுல பதிஞ்சு போச்சு!! நன்றி டீச்சர்.

அமுதா - பள்ளி விடுமுறை என்பதால், மே மாசம்தான் கல்யாண சீசன்னு ஆகிப்போச்சு இப்பல்லாம். :-)

//உங்க பக்கத்துல உக்காந்து சிரிப்பு சினிமா பார்க்க கூடாது. // ஹி.. ஹி..

ஹுஸைனம்மா said...

சுரேஷ் - நன்றிங்க.

ராமலக்ஷ்மிக்கா - நன்றிக்கா.

நிலாமகள் - //உங்க ஸ்டைலே தனி// நன்றிங்க.

தி. தனபாலன் - ரொம்ப நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

அவர்கள் உண்மைகள் - //இப்படிபட்ட பதிவுகளை உங்களால்தான் ஜோக்காக எழுத முடியும் // நம்ம வாழ்க்கை அப்படிச் சிரிப்பா சிரிக்குது!! :-)))))

கோமதிக்கா - //அவர்கள் அவசியம் என்றால் , தேவை என்றால் வாய் திறப்பது.//

இது கஷ்டமாத் தெரிஞ்சாலும், ஒரு விதத்துல சண்டை வராம இருக்க உதவும். (எங்க வீடு மாதிரி) சில வீடுகளில் பேசிப்பேசியே சின்னச் சின்னச் சண்டைகள் நிறைய நடக்கும். :-))))

வாழ்த்துக்கு ரொம்ப நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

அப்பாதுரைஜி - // பாவங்க அவரு. என்ன ஒரு சோதனை// ம்க்கும்... உங்க இனமாச்சே, அதான் பரிதாபம் அந்தப் பக்கமாப் போகுது! :-))

கீதா ஆச்சல் - //அப்படியே நிறைய பேர் வீட்டில் நடப்பது தானே.//
எல்லாருமே ‘Made for each other'ங்கிற ரேஞ்சுலதான் கல்யாண நாள் பதிவுகள் எழுதுறாங்க. எனக்கே சந்தேகமாகிப் போச்சு, நாங்க மட்டும்தான் இப்படியான்னு!! இப்பத்தான் நிறைய உண்மைகள் தெரியுது!! :-))))))))

ஹுஸைனம்மா said...

முரளிதரன் - //கணவனை புத்திசாலின்னு ஏத்துக்கற மனைவியை பாக்கணும்னு ஒரு பேராசை//
உங்க வீட்டம்மா அவங்க ஃப்ரண்ட்ஸ்கிட்ட பேசும்போது ஒட்டுக் கேளுங்க, உங்க ஆசை நிறைவேறும்!!

நாஸர் மதுக்கூர் - நன்றிங்க.

ஆதி மனிதன் - ரொம்ப நன்றிங்க. //I could not control my laugh...// சந்தோஷமாருக்கு. :-)

ஹுஸைனம்மா said...

வெங்கட் நாகராஜ் - அட்வான்ஸ் வாழ்த்துக்கு நன்றிங்க.

விஜி - நன்றிப்பா.

சக்கரகட்டி - முரளிக்கு எழுதின பின்னூட்டத்தைப் பாருங்க.

எழில் - //ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருந்தா வாழ்க்கையில சுவாரசியமே இருக்காதுங்க//
அழகான உண்மைங்க.. ரொம்ப நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

ரஃபீக் - //உங்களுக்கு ரொம்ப தைரியம் தான்//
என்னவோ Snowden, Manning, Assange மாதிரி இராணுவ இரகசியங்களை எழுதின மாதிரி சொல்றீங்க? :-)

//அவர் கிட்ட கேட்டாத்தான், அவர் (சோகக்) கதை தெரியும்//
நல்லவேளை அவருக்கு ப்ளாக், ஃபேஸ்புக் எதிலயும் அக்கவுண்ட் இல்லை. :-)

ஹுஸைனம்மா said...

அப்துல் - நன்றிங்க.

இராஜி மேடம் - வாழ்த்துகளுக்கு நன்றி மேடம்.

மனோ அக்கா - நன்றிக்கா.

கோவை2தில்லி - //அடிகொடுக்க என்ன ஒரு சான்ஸ்// - உக்காந்து யோசிச்சு கண்டுபுடிச்சதாக்கும். :-)

ஓ, நீங்களும் மே மாசமா? :-)

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - //யப்பா..என்னா பிலட்ப்பூ..// பில்டப்புலதான் நம்மள மாதிரி பதிவர்களுக்கு வாழ்க்கை ஓடுது அக்கா!! (உங்க ஜெல்லி பதிவுல இல்லாத பில்டப்பா?) :-)))))))))

ரஞ்சனி மேடம் - வய்த்துவலி வருமளவு நீங்க சிரிச்சு சந்தோஷமாருந்தது எனக்கு சந்தோஷமாருக்கு! வாழ்த்துகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி மேடம்.

என்றென்றும் 16 - //முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்ன்ற பழமொழி எனக்கு இப்ப ஏன் ஞாபகம் வருது?? ஏதாவது பரிகாரம் இருந்தா செய்துடுங்க ஹுஸைனம்மா... //

யானைக்கு காலம் now; பூனைக்கு also ஒன் காலம் coming!! ;-)))))

மாதேவி said...

ஹா..ஹா...இனிய வாழ்த்துகள்.

Unknown said...

ஏன் இப்போது எழுதுவதை விட்டுவிட்டீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஹுசைனம்மா.
இன்னோரு தடவை படிக்கிறேன்.
ஹைய்யோ.ஹைய்யோ.
என்னாளும் திரு நாளாக இருக்க இறைவன் அருள் புரிவானாக,

ஹுஸைனம்மா said...

மாதேவி: நன்றி!!

வல்லிமா: ரொம்ப நன்றி வல்லிமா! எப்படி இருக்கீங்க?

ஜரீனாக்கா: வேற என்ன காரணம்... இந்த மொபைலும், ஃபேஸ்புக்கும்தான்... :-(