Pages

நேசத்துடன் நான்




திவுலகத்தை வாசித்துமட்டுமே வந்த காலத்தில், வாசிக்க நேர்ந்த திருமதி. அனுராதா சேகர் அவர்களின் பதிவுகளால்தான் கேன்ஸர் பாதிப்படைந்த ஒருவர் என்னமாதிரியான சிகிச்சைகள் எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிந்துகொண்டேன். அதுவரை, அங்கொன்று இங்கொன்றாகக் கேள்விப்பட்டிருந்தேனேயொழிய நேரில் அறிந்ததில்லை. (இறைவன் இனியும் காப்பானாக) அந்தப் பாதிப்பில் நான் எழுதிய ஒரு பதிவே “எய்ட்ஸும், கேன்ஸரும்”. பெரும்பாலும் தவறான தொடர்புகளாலேயே வரும் எய்ட்ஸுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், காரணமேயில்லாமல் - அதுவும் தவறிழைக்காமலிருந்தாலும் -  வரக்கூடிய கேன்ஸருக்குக் கொடுக்கப்படவில்லையே என்ற ஆதங்கத்தைக் கொட்டியிருந்தேன் அந்தப் பதிவில்.

”நேசம்” அமைப்பு விழிப்புணர்வுக் கட்டுரைப் போட்டி அறிவித்தபோது, அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி புற்றுநோய் குறித்த ஒரு கட்டுரை எழுத எண்ணி, இணையத்தை வலம்வந்தபோது அறிந்துகொண்ட எண்ணற்ற விஷயங்களில் ஒன்று(மட்டும்) இனித்தது:  ”கேன்ஸர் வராமல் ஓரளவுக்குப்  பாதுகாக்க முடியும்” என்பதே அது.  புகை, குடி தவிர்ப்பதல்லாமல் இன்னும் சில வழிகள் புலப்பட்டது.  உதாரணமாக, நாம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்களான க்ரீம்கள், பவுடர் முதல் அத்தியாவசியப் பொருளான பல்தேய்க்கும் பேஸ்ட் வரை சேர்க்கப்பட்டிருக்கும் ”பாராபென்” என்ற வேதிப்பொருள் ஒரு முக்கிய கான்ஸர்-காரணி என்றறிந்துகொண்டேன்.

இப்படி நான் எழுதிய இரு கட்டுரைகளும் எனக்கும், வாசித்தவர்களுக்கும் சில புதிய தகவல்களைத் தந்தாலே அதற்கான பயன்கிடைத்த மாதிரி என்று நினைத்திருந்தேன். ஆனால் இரண்டு கட்டுரைகளுமே முதல் பரிசு பெற்றது ஒரு இன்ப அதிர்ச்சிதான். (என்ன, ரெண்டு கட்டுரைக்கும் தனித்தனியா பரிசுத் தொகை தந்திருக்கலாம்கிற ஒர்ரே வருத்தம்தான். :-D )

”நேசம்”  கட்டுரைக்களுக்காக இணையத்தை வலம்வந்தபோது, தொடர் அறிவியல் ஆராய்ச்சிகளாலும், அதன்விளைவாய் வளர்ந்து வரும் மருத்துவத் தொழில்நுட்பங்களாலும் புற்றுநோய் சிகிச்சை முறைகள் முன்னேற்றமடைந்துள்ளன என்ற நம்பிக்கை ஊட்டும் செய்திகளும் அறிய முடிந்தது. அவ்வாறான சில மருத்துவத் தொழில்நுட்பங்களையும், நம்பிக்கை தரும் சிகிச்சை முறைகளையும் பகிர்ந்து கொள்கிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை!!

1. கண்ணிவெடிகள்!!

மார்பகப் புற்றுநோயைக் கண்டுபிடிப்பதற்கு, “மேம்மோகிராம்” எனப்படும் அடர்த்தியான எக்ஸ்-ரே கதிர்களை உடலில் அனுப்பிச் செய்யப்படும் பரிசோதனை முறையே இந்நாள்வரை பின்பற்றப் படுகிறது.  இதில் எக்ஸ்-ரே கதிர்கள் பயன்படுத்தவதால், உடலுக்குக் கேடு என்பதாலேயே 40-வயதுக்குக் கீழுள்ளோருக்குப் பரிந்துரைக்கப் படுவதில்லை. மேலும், இளவயதினருக்கேயுரிய அடர்த்தியான திசுக்களினுள்ளே இக்கதிர்கள் சரியாக ஊடுறுவாமல் போய்விட வாய்ப்பிருக்கிறதென்பதும் ஒரு காரணம். 

ஆனால், தற்போது ஒரு புது பரிசோதனை முறை அறிமுகத்தப்படவுள்ளது. கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம்தான் இதன் அடிப்படை என்று அறிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!! இப்புதிய முறை தீங்கு விளைவிக்காதது, செலவு குறைந்தது, முக்கியமாக வலியில்லாதது. வெறும் எட்டு நொடிகள் போதும் இந்தப் பரிசோதனைக்கு!! 

2. கொதிக்க வைத்துக் கட்டியைக் கரைப்பது:

தற்போது ஆராய்ச்சியின் இறுதிகட்ட நிலையில் இருக்கும் இந்த சிகிச்சை முறை, மார்பகப் புற்றுநோய்க்குரியது. புற்றுநோய்க் கட்டியின்மீது, ஊசியில் இணைக்கப்பட்ட ஒரு மின்தகடை (electrode), மிகச்சரியாகக் கட்டியின்மீது வைத்து, மின்சாரத்தினால் 70 - 90c வரைச் சூடாக்கினால் கட்டி அப்படியே கரைந்துவிடும். இதுவும் பின்விளைவுகளற்ற, வலியில்லாத, நேரம் குறைவாக எடுக்கும் செலவு கூறைந்த சிகிச்சை முறை. இதற்கு Preferential Radio Frequency Ablation  என்று பெயர். இம்முறை பயன்படுத்த, புற்றுநோய்க் கட்டியின் அளவு குறைந்தது 2 செ.மீ. அளவேனும் இருக்க வேண்டும்.

3. பெயிண்ட் அடிச்சாப் போய்டும்:

இம்முறையில், அரிதாகக் கிடைக்கும் ரீனியம்-188 என்ற கதிரியக்க ஐஸோடோப்பு பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட கதிரியக்கக் க்ரீம் உயோகிக்கப் படுகிறது.  தோல் கேன்ஸரின் ஒரு வகையான, கார்ஸினோமா வகை புற்றுநோய்க்கு அக்கட்டி இருக்கும் இடத்தின் மேல்தோல்மீது மருத்துவ உலோகத்தாள் (surgical foil) வைத்து, அதன்மீது இந்த க்ரீமை பெயிண்ட் போலத் தடவி இரண்டு மணிநேரம் வைத்தால், போயே போச்சு அந்தக் கட்டி!!
 
கதிரியக்கக் க்ரீமிலிருந்து வரும் கதிரியக்கங்கள் அந்தக் கட்டியைக் கரைப்பதுடன், நல்ல செல்களை 
(தோலை) வளரவும் வைக்கிறது என்கிறது ஆராய்ச்சி. இம்முறையில் பக்கவிளைவுகளில்லை, செலவு குறைவு, வலி இல்லை, தழும்புகூட ஏற்படுவது இல்லை என்பதால் பிரபலமடைந்து வருகிறது. முகம் போன்ற இடங்களில் ஏற்படும் கான்ஸர் கட்டிக்கு இம்முறையிலான சிகிச்சை ஒரு வரப்பிரசாதமே!!

4. ஆசைகாட்டி கட்டியைக் கரைப்பது!!

வெளிநாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஈடாக, நம் இந்திய இராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் (DRDO) புற்றுநோய் சிகிச்சைகளுக்கான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கிய சிகிச்சை முறை ஒன்று நல்ல பலன் தருவதாக அமைந்துள்ளது.

கேன்ஸர் செல்கள், நம் உடலில் இருக்கும் குளுக்கோஸை உறிஞ்சி சக்தி பெறுகின்றன. மேலும், அதை உறிஞ்சுவதில் மட்டுமே தம் சக்தியைச் செலவழிக்கின்றன.  இச்சிகிச்சை முறையில், குளுக்கோஸ் போன்றே தோற்றம்  தன்மையும் கொண்ட 2-DG என்ற வேதிப்பொருளை உடலில் செலுத்தவேண்டும். செலுத்தினதும், கேன்ஸர் செல்கள் இவற்றை உறிஞ்சி தம் சக்தியை இழக்கும். ஆனால், 2-DG செல்களிடமிருந்து சக்தி எதுவும் கிடைக்காது. அதனால், கேன்ஸர் செல்கள் சக்தி இழந்து, தளர்ந்துவிடும்.  இச்சமயத்தில் வழக்கமான ரேடியேஷன் சிகிச்சை மேற்கொண்டால், கேன்ஸர் செல்களால் எதிர்த்துப் போராட முடியாதென்பதால், பலன் அதிகமாக இருக்கும். ரேடியேஷனின் பக்க விளைவுகளும் குறைவாக இருக்கும்.

5. ரேடியேஷன் பக்கவிளைவுகள்:

ரேடியேஷன் - கதிர்வீச்சு என்பது புற்றுநோய் சிகிச்சையில் மிக அவசியமான சிகிச்சையாகும். ஆனால், இதன் பக்க விளைவுகள் அதிகம். நோயாளிக்குப் பல்வேறு துன்பங்களைத் தரக்கூடியது. இத்தகைய பக்க விளைவுகளை, துளசிச் செடியின் ஆண்டி-ஆக்ஸிடண்ட் தன்மையானது பெரிதும் குறைக்கக்கூடியது என்று இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) கண்டறிந்துள்ளது. இன்னும் சில மாதங்களில்  சந்தைப்படுத்தப்படப்போகும் இந்த மருந்து புற்றூநோயாளிகளுக்கு மிகுந்த பயனளிக்கக்கூடியதாக எதிர்ப்பார்க்கப்படுகீறது.

6. ஊதினால் கான்ஸரைக் கண்டுபுடிக்கலாம்!!

அமெரிக்க நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ள ”ரெவெலர்” (Revelar) என்ற கருவியின்மூலம், வாயால் ஊதினாலே, நுரையீரல் புற்றுநோய் உள்ளதா இல்லையா என்று ஏழே நிமிடங்களில் கண்டுபிடித்துவிடலாம். நம் உடலில் செல்கள் தாக்கப்படும்போது, “ஆல்டிஹைட்ஸ்” (aldehydes) என்ற வேதிப்பொருள் நாம் வெளிவிடும் மூச்சுக்காற்றில் காணப்படும்.  இதுவே இச்சிகிச்சை முறையின் அடிப்படையாகும். வழக்கம்போல, இந்தப் பரிசோதனை முறையும் வலியில்லாத முறை என்பதால் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.


7. தடுப்பு ஊசிகள்:

புற்றுநோய்க்குத் தடுப்பூசி என்பது இன்னும் ஆராய்ச்சி அளவிலேயே உள்ளது. காரணம், புற்றுநோய்க்குக் காரணம் இன்னதுதான் என்று வரையறுக்கப்படாததால், தடுப்பூசிகள் கண்டுபிடிப்பது சிரமமானதாக உள்ளது. கருப்பை புற்றுநோய்க்கு தற்போது தடுப்பூசிகள் - Gardasil and Cervarix -  கண்டுபிடிக்கப்பட்டு, அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளது என்றாலும், இது ஒரு குறிப்பிட்ட வகை வைரஸால் வரும் புற்றை மட்டுமே தடுக்கும். 

இந்தத் துறை ஆராய்ச்சியில் மட்டும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் வந்துவிட்டால், மனித இனத்தைப் பிடித்தாட்டும் புற்றை முழுமையாக ஒழிக்கும் காலம் வந்துவிடும்.

8. மூல உயிரணு (Stem-cell) சிகிச்சை:

ஸ்டெம் செல் சிகிச்சையானது மிகவும் நம்பிக்கையூட்டும், நிச்சயமான பலன்தரும்  சிகிச்சை முறையாகும். ஆனால், இது, எலும்புப் புற்று, ரத்தப்புற்று போன்ற குறிப்பிட்ட வகைகளுக்கு மட்டுமே செய்யக்கூடிய சிகிச்சையாகும். இதிலே சிகிச்சைக்கான ஸ்டெம் செல்கள், அந்த நோயாளியின் உடம்பிலிருந்தே எடுக்கப் படுவதால் ஒவ்வாமை போன்ற பின்விளைவுகளும் இருப்பதில்லை.

முதலில் நோயாளியின் உடலில் உள்ள கேன்ஸர் கட்டிகளை, அடர்ந்த ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி மூலம் அழித்தபின்னர், முன்பே அவரின் இடுப்பெலும்பிலிருந்து எடுத்துப் பாதுகாத்து வைத்திருந்த மூல உயிரணுக்களை உடலினுள் செலுத்தினால், அவை நல்ல செல்களாகப் பல்கிப் பெருகி, கேன்ஸர் செல்களைப் பெருகவிடாமல் செய்யும்.

கேன்ஸர் சிகிச்சையின் பக்க விளைவுகளையும், வலிகளையும் குறைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களாலும், ஆராய்ச்சிகளாலும் புதியப்புதிய முறைகள் மருத்துவத் துறையில் அறிமுகமாகி வருவது நோயாளிகளுக்கு மட்டுமல்லாது, அவர்தம் உறவுகளுக்குமே மகிழ்ச்சியான செய்தி.

முன்காலத்தில், போலியோ, காசநோய் போன்ற பலநோய்கள் உலகை ஆட்டிப் படைத்து வந்தன. இவற்றைக் குணபாடுத்தவே முடியாது என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. ஆனால், அவை இன்று முழுமையாக அழிக்கப்பட்ட/ குணப்படுத்தக்கூடிய நோய்களாக ஆக்கியதும் இதே மருத்துவ முன்னேற்றங்களே. புற்றுநோயும் அவற்றின் வரிசையில் சேரும் நாள் தூரமில்லை!!

Post Comment

8 comments:

ராமலக்ஷ்மி said...

இரண்டு கட்டுரைகளுமே முழுமையான தகவல்களுடன் சிறப்பாக இருந்தன. நேசத்தில் வாசித்திருந்தேன்.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்புகளுக்குக் கிடைத்த அங்கீகாரத்துக்கு மீண்டும் வாழ்த்துகள்!

CS. Mohan Kumar said...

Lot of information. Good article.

Last para gives some hope. Everyone prays for this only.

ஸ்ரீராம். said...

பயனுள்ள பல தகவல்கள் சொல்லும் பதிவு.

ஸாதிகா said...

பயனுள்ள பகிர்வு.நல்ல விழிபுணர்வு மிக்க தகவல்கள்.

ஹுஸைனம்மா said...

நன்றி ராமல்க்ஷ்மிக்கா.

நன்றி மோகன்குமார்.

நன்றி ஸ்ரீராம் சார்.

ஸாதிகாக்கா நன்றி.

கீதமஞ்சரி said...

மிகவும் பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிகவும் நன்றி ஹூஸைனம்மா.

arul said...

nice and superb

ஹுஸைனம்மா said...

சசிகலா - ரொம்ப நன்றிப்பா.

கீதமஞ்சரி - நன்றிப்பா.

அருள் - நன்றி.