Pages

படகுச் சுற்றுலா




நேத்து தேக்கடியில் நடந்த விபத்த நினைச்சா நடுக்கமா இருக்கு. பாவம், சுற்றுலான்னு சந்தோஷமா வந்தவங்களுக்கு இப்படி ஆயிடுச்சே. வழக்கமா இதுபோல நடக்கும் விபத்துகளுக்கு பாதுகாப்பு குறைபாடுகள், பழைய படகு, அதிக ஆள் ஏற்றுதல் போன்றவை காரணமாக இருக்கும்.

ஆனால் இதில் புதிய படகு, லைஃப் ஜாக்கெட்கள் ஸ்டாக் இருந்தும், இப்படி ஆனதுக்குக் காரணம், மக்களின் அறியாமையே!! ஏன் நான் போயிருந்தா கூட நானும் இப்படித்தான் நடந்துகிட்டு இருப்பேனோ என்னவோ.

செய்திகளைப் பாத்துட்டிருந்த பெரிய மகன், படகு லேசா சரிய ஆரம்பிக்கும்போதே எல்லாரும் உடனே அடுத்த பக்கம் போயிருக்கலாமே என்று கேட்டான். நமக்கும் அதென்ன மழைத்தண்ணீரில் விடும் பேப்பர் போட்டா, படக்கென்று சரிய என்ற சந்தேகம் வந்தாலும், ஏன், எப்படி என்ற சில கேள்விகளுக்கு விடையறிய‌ முடியவில்லை.

நேற்றிலிருந்து இன்று காலை வீட்டை விட்டு கிளம்பும் வரை ஏஷியாநெட், கைரளி சேனல்கள் அந்த செய்திகளை மீண்டும் மீண்டும் அலசிக் கொண்டிருந்தார்கள், ஏதோ தேர்தல் முடிவுகள் போல, பலி எண்ணிக்கை வேறு. இந்த‌ அளவு இம்மாதிரி விபத்துக்களை விரிவாகக் காண்பிக்க வேண்டுமா என்று தோன்றியது. வர வர மீடியாக்கள் மீது ஒரு கோபம் வர ஆரம்பித்துவிட்டது. இரண்டு சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு தகவல்கள் தர முயன்றன. அங்கே நிற்பவர்கள், போனவர்கள், வந்தவர்கள் என்று பல‌ரிடமும் தொலைபேசி வழி பேட்டி!! நடந்த சில மணித்துளிகளில் படங்களும், நேரலை ஒளிபரப்பும் வேறு!!

பேசிய பொதுமக்கள் பலரும் பட‌ம் எடுத்திருப்பதாகச் சொன்னார்கள். எப்படி முடிகிறது? சூழ்நிலை தந்த அதிர்ச்சியையும் மீறி, மொபைல், கேமரா என்று ஃபோட்டோ எப்படி எடுக்க முடிகிறது? நம்மால் என்ன உதவி செய்ய முடியும் என்று பார்க்காமல், எப்படி படம் எடுத்துக் கொண்டிருக்க முடிகிறது? இந்த டி.வி.காரர்கள் வேறு, அதிகாரி, அமைச்சர் என்று ஒருவர் விடாமல் தொலைபேசிப் பேட்டி!! அவர்களை வேலை செய்யவிடாமல், இப்ப இந்த பேட்டியெல்லாம் தேவையா? அவுங்களே இந்த மாதிரி சமயத்துலதான் கொஞ்சம் வேலை செய்யுறாங்க. நிச்சயம் மீடியாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக்கூடிய சட்டங்கள் தேவை!!

காலை ஏழு மணியளவில் சின்னவனுக்கு சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு பெண்ணின் உடலைப் படகில் கட்டி எடுத்து வருவதைக் காண்பித்தார்கள். இரண்டு கைகளையும் மேலே தூக்கிய நிலையிலேயே உயிர் விட்டிருந்தார் அவர். சின்னவன் அதைப் பார்த்து ஏன் கை மேலே தூக்கியே வச்சுருக்காங்க என்று கேட்க, என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் சேனல் மாத்தினேன்.

இதைப் பார்க்கும்போது போன வருடம் மஸ்கட்டில் போட்டிங் போகும்போது பாதியில் (பாதிகூட இல்லை, கால்வாசி தூரத்தில்) பயந்து என்னைக் கொண்டு கரையில் விட்டுடுங்கோ என்று அடம் பிடித்து சின்னவனையும் இழுத்துக்கொண்டு இறங்கியது நினைவுக்கு வருகிறது. கடல் என்றாலே எனக்குப் பயம். பின்னே, நீச்சல் தெரியாது! இத்தனைக்கும் சிறு வயதில் எங்க ஊர் வழியா போன ஒரு சின்ன ஆற்றில் நீந்தி விளையாடிவள்தான். காலப்போக்கில் ஆறு கழிவு நீர் கலந்து மாசடைந்ததில் விட்ட பழக்கம். இருந்தாலும் தண்ணீரில் விழுந்தால் நீச்சல் மீண்டும் தன்னே வந்துவிடும் என்று நம்பியிருந்தேன். சில வருடங்களுக்கு முன் அதை உறுதி செய்துகொள்ள ஒரு நீச்சல் குளத்தில் இறங்கிய போதுதான் தெரிந்துகொண்டேன், “டச்சு விட்டுப் போச்சு” என்று!! பிறகு முயற்சிக்கவில்லை. அதிலிருந்து கடல் மீதான பயம் அதிகமாகிவிட்டது.

இப்பவும் அந்த போட்டில் போன வெளிநாட்டவர் சிலர் நீந்தி கரை சேர்ந்துவிட்டனராம். இனி எங்கே சுத்திப்பாக்கப் போனாலும் நோ போட்டிங்!!

Post Comment

5 comments:

பீர் | Peer said...

வருந்தத்தக்க நிகழ்வு :((

நானும் தேக்கடி படகுசவாரி சென்றிருந்த போது, பயத்துடனே பயணிக்க வேண்டியிருந்தது...

இப்போதைய விபத்திற்கு, ஒரு பக்கமாய் மக்கள் சென்றது காரணம் என்று சொல்லப்பட்டாலும், படகுஓட்டி பட்டென படகை திருப்பியது தான் காரணம் என்றும் சிலர் சொல்கின்றனர்.

மீடியாக்களுக்கு இத்தகைய நிகழ்வுகள் 'அல்வா' மாதிரி... சாவு வீட்டிலும்..

//இனி எங்கே சுத்திப்பாக்கப் போனாலும் நோ போட்டிங்!!//

இதற்கெல்லாம் பயந்தால், ஒன்றும் செய்ய முடியாது.

ஹுஸைனம்மா said...

வருகைக்கு நன்றி பீர்!!

//இதற்கெல்லாம் பயந்தால், ஒன்றும் செய்ய முடியாது.//
உண்மைதான், ஆனால் பயத்தையும் தவிர்க்க முடியவில்லை :‍_((

SUFFIX said...

//வர வர மீடியாக்கள் மீது ஒரு கோபம் வர ஆரம்பித்துவிட்டது//

எனக்கும் இப்பொழுதிலிருந்து அல்ல, சமீப காலமாகவே, அதனால் பெரும்பாலும் நான் செய்திகளை காண்பதைவிட நெட்டில் படிப்பதோடு சரி, அதுவே போதுமாக இருக்கிறது. நல்லா எழுதியிருக்கிங்க.

Yousufa said...

//ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...
நல்லா எழுதியிருக்கிங்க.//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஷஃபி!!

cheena (சீனா) said...

அன்பின் ஹூஸைனம்மா

தேக்கடி விபத்து - ஒன்றும் சொல்வதற்கில்லை

இனி இது மாதிரி நடவாமல் இறைவன் பார்த்துக் கொள்ளட்டும்

நல்வாழ்த்துகள்