Pages

மரியாதையாப் பேசுங்க..





கிராமங்களில் சித்தப்பு, வா, போலாம்; யத்தே, எங்கிட்டுப் போற; தாத்தா, கஞ்சி குடிச்சிட்டியா என்று, வயசானவங்களையும் சின்னவங்க நீ, வா, போன்னு பேசறதைப் பாத்திருக்கோம். 

சிலர்,  தங்களிடம் பணிபுரியும் முதியவர்களை நீர் வாரும், இரும், பாரும் என்று பேசக் கேட்டிருக்கிறோம். எங்கள் வீட்டில் வேலைபார்த்த உழவர்களும் வீட்டினரை  இதேபோல, ”ஏயம்மா, இங்கன வாரும்; இதை எடுத்துத் தாரும்” என்றுதான் விளிப்பார்கள். எங்கள் ஊருக்கு மிகவும் அன்னியமான பேச்சு வழக்கு என்பதால் அதையெல்லாம் ரசித்துக் கேட்டதுண்டு.

சினிமாப் படங்கள் மட்டுமே ஒரே பொழுதுபோக்காக  மிகைத்துப் பேசப்பட்ட அந்த காலகட்டத்தில், வீட்டிற்கொரு ‘ஜிவாஜி’, ‘ரஜினி’, கமலாசன்’ அவதாரங்கள் உண்டு. ஆங்காங்கு திண்ணைகளில், வயதுபேதம் இல்லாமல் “ரஜினி என்னா மாதிரி ஃபைட்டு பண்ணான் தெரியுமா?” “கமலாசன் ஆடற மாதிரி எவனுக்குலே ஆட வரும். அவந்தாம்லே டாப்பு” என்ற பேச்சுகள் நடக்கும்.

நானும் கிராமத்தில் என் அம்மா வீட்டில், உறவினர்கள் சூழ சிறுவயதில் வளர்ந்தவள்;  மூத்தப் பேத்தி என்பதால் செல்லம் அதிகம். அம்மா தன் உடன்பிறப்புகளை எப்படி அழைப்பாரோ அதேபோலவே நானும் அழைத்து உரையாடுவேன். அம்மாவின் அண்ணன் எனக்கும் “காக்கா”தான்!! அம்மாவின் தம்பி, தங்கைகள் எல்லாரும் எனக்கும் அப்படியே என்பதுபோல, பெயர் சொல்லியே அழைத்து வந்தேன்.

நான் ஒரே பேத்தியாக, தனிக்காட்டு ராணியாக இருந்தவரை இது யாருக்கும் பெரிய தவறாகத் தெரியவில்லை. பெரிய சாச்சிகளுக்கும் பிள்ளைங்க பிறந்து, வளந்து, அந்த நண்டு-சிண்டுகளெல்லாம் அழகா மரியாதையா “சாச்சி”, “மாமா”ன்னு கூப்பிட ஆரம்பிச்சதும் என் மவுசு கொஞ்சமா குறைய ஆரம்பிச்சுது!! ”சின்னப் புள்ளையே சாச்சினு கூப்பிடுது, நீயென்ன பேர் சொல்லிக் கூப்பிடுறே”ன்னு எப்பவாவது யாராவது கேட்டாலும்,  அதையெல்லாம் பெரிசா எடுத்துக்கிறதில்ல. ஏன்னா, நான்தான் அப்பவே ஒரு காதுல ‘entry' போர்டும்,  இன்னொன்னுல 'exit' போர்டும் மாட்டி வச்சிருந்தேனே!!

மேலும்,  தாய்மாமா, சாச்சிகளில் என் வயதையொத்தவர்களும் இருந்ததால், எல்லாரையுமே ஒருமையில் அழைப்பதில் பெரிய தவறொண்ணும் இருக்கிறதாப் படலை எனக்கு. அவங்களும் யாரும் எதுவும் அப்ப சொல்லலை.

ன் அம்மாவும் கண்டிக்கலையான்னு கேப்பீங்க. கிராமங்களில் ஆண்களுடன் பேசும்போது “லே” என்கிற மரியாதையான விகுதி சேர்ப்பதுபோல, எங்க ஊரில், பெண்களுக்கு “ளா” என்கிற அதிவிசேஷ விகுதி உண்டு #சமத்துவம்!!  அதுல என்ன ஒரு வித்தியாசம்னா, (மகன், தம்பி போன்ற) தங்களைவிட இளையவயது ஆண்களுக்கு  மட்டுமே இந்த “லே” விகுதி பொருந்தி வரும். ஆனால், பெண்களுக்கோ, வயது வித்தியாசமே இல்லாமல் (“பெரிம்மா, இங்க வாயேம்ளா”) எல்லாருமே சர்வசாதாரணமாக “ளா” போட்டு அழைக்கப்படுவர். (மாமியார்கள் மட்டும் விதிவிலக்கு... க்ர்ர்ர்... ) நான் அந்தமாதிரி யாரையும் மரியாதைக் குறைவாகப்  பேசாமல் பழக்கியது என் அம்மாதான். அப்போ அதுவே பெரிய விஷயம்.

அப்புறம், மாமாக்களுக்கு கல்யாணம் ஆகி, மாமிகள் வந்தாங்க. இப்ப நானும் காலேஜ் ஸ்டூடண்டாகி, ‘ஒரு பொறுப்புள்ள குடிமகள்’ ரேஞ்சுக்கு வளந்து, பெண்ணுரிமைல்லாம் பேச ஆரம்பிச்சிட்டதால, மாமிகளை (மட்டுமாவது) மரியாதையா ”வாங்க-போங்க மாமி”ன்னு சொல்லியாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன். இல்லைன்னா, “படிச்ச புள்ளையளே இப்பிடித்தான்”னு ஒட்டுமொத்த பெண் படிப்பாளிகளோட மரியாதையும்  காத்துல பறந்துடுமே!!

என் சாச்சிகளும் ”ஏய், நாங்கல்லாம் இப்ப நாத்தனார் ஆகிட்டோம்.  இன்னுங்கொஞ்ச நாளில் மாமியார் ஆகப்போறோம். இனிமயும் பேர் சொல்லி கூப்பிட்டே...”னு என்னை மிரட்டவே ஆரம்பிச்சுட்டாங்க!! அப்பத்தான் சாச்சிகிட்டே சொன்னேன், “அஞ்சில வளையாதது இருவதில் வளையுமா? நான் சின்னப் புள்ளையா இருந்தப்பவே நீங்கல்லாம் என்னைக் கண்டிச்சிருக்கணும். அப்பம்லாம் பேசாம இருந்து செல்லம்கொடுத்துகிட்டு, இப்பம் குறை சொல்லி என்ன பிரயோஜனம்?”. சரிதானே?? இருந்தாலும், கொஞ்சமா என்னை மாத்திக்கிடவும் ஆரம்பிச்சேன்.

காலேஜ்ல, ஒரு நாள் என் நெருங்கிய தோழியிடம் ஏதோ ஒரு படத்தைப் பற்றிப் பேசிட்டிருந்தேன். ரொம்ப ஆர்வமா ஒன்றிப்போய் பேசிகிட்டிருந்தப்போ, “அப்ப சிவாஜி வந்தானா...”ன்னு சொல்ல, உடனே அவ, “வந்தார்” அப்படினு திருத்தினா. அந்தக் காலத் திரைப் படங்களில், அடிக்காமலேயே கன்னத்தில் ‘பளார்’, ’பளார்’னு அடி வுழுற மாதிரி தலையைச் சிலுப்புவாங்களே, அப்படி ஆகிப்போச்சு எனக்கு!! இதுதான் என் கதையின் க்ளைமாக்ஸ். இப்ப முழுசாவே திருந்த முடிவு பண்ணி, முக்கால்வாசி திருந்தியும் விட்டேன்!!

நாம படிக்காம விட்ட படிப்பையும், கத்துக்காம விட்ட கலைகளையும் நம் வாரிசுகளிடம் கடத்திவிடுவதைப்போல,  நாம செஞ்ச தவறுகளையும் அவர்கள் செய்யாமல் பார்த்துக்கணுமே!! என் மகன் பேச ஆரம்பித்தபோதே அவனுக்கு இதேபோல் அனுபவங்கள் ஏற்படாவண்ணம், எல்லாரையுமே மரியாதையாக அழைக்கப் பழக்கினேன் - அவன் பேச ஆரம்பித்த முதல் வார்த்தை, ’அம்மா’ இல்லை, “மாமா”தான்!!

இந்தியாவில், வீட்டில் வேலை பார்த்த ‘ராமு’ என்ற பெண்ணை என் 2 வயது மகன் ‘ராமு மாமி’ என்று அழைத்தபோது அவர் நெகிழ்ந்து சிரித்தது இன்னும் என் நினைவில்.  இங்கே அபுதாபியில் முதலில் வேலைக்கு வந்த ஸ்டெல்லாவை என் இரண்டரை வயது மகன் மாமி என்று அழைத்தபோது அவர், “என் பதினாறு வருட அமீரக வாழ்வில், இன்றுதான் என்னை முதல்முதலில் ஒரு குழந்தை மரியாதையோடு அழைக்கிறது. மலையாளி வீடுகளில்கூட பிள்ளைகள் என்னை ஸ்டெல்லா என்றுதான் கூப்பிடுவார்கள். ” என்று மகிழ்ந்தார்.

வளர்ந்தபிறகு, ‘விஜய் மாமா’, வடிவேலு மாமா’ என்றெல்லாம் சொல்லுவதைப் பார்த்து சில நண்பர்கள், உறவுகள் கிண்டல் செய்யத் தொடங்கியதால், ‘விஜய் நடிச்சிருக்கார்’, ‘வடிவேலு சொன்னார்’ என்ற அளவுக்கு நாசூக்காக தாமே  மாறிக் கொண்டார்கள்.


ல்லாம்சரி,  ஆனால், என்னை என் பிள்ளைகள் இன்றும் நீ,வா, போ என்றுதான் சொல்கிறார்கள். ஆரம்பத்தில் அதையும்  மாற்ற முயற்சி செய்தேன். என்னதான் நான் அவனிடம் என்னை “நீங்க”னு சொல்லு என்று வற்புறுத்திச் சொன்னாலும், அதை வழிமொழிவதற்கு வீட்டில் ஆளில்லை!! என்னை எல்லாருமே - என் தந்தை, என்னவர், உறவினர்கள் - எல்லாருமே ”நீ” என்று சொல்வதால், அவனுக்கும் அது முழுமையாக வரவில்லை. (மரியாதை தானா வரணும், கேட்டு வாங்கப்படாது).  இரண்டாவது, நானே என் அம்மாவை ‘நீ’ என்றுதான் சொல்கிறேன். நாளை அவன் வளர்ந்து, என்னைப் பார்த்து ”நீ(ங்க) மட்டும் உன்(ங்க) அம்மாவை நீ-ன்னு சொல்றீ(ங்களே)யே?” ன்னு கேட்டா என்ன செய்றதுங்கிற யோசனை வேறு!!  

அதனால, யோசிச்சுப்பாத்து, ”என்னை ’நீ’ன்னே சொல்லிக்கோ”ன்னு ஒரு தாய்க்கேயுரிய கருணையோட (நோ, நோ பேட் வேர்ட்ஸ்!!) அனுமதி கொடுத்துட்டேன்.

இது ஒரு சமாதானமாத் தெரிஞ்சாலும், இன்னிக்கும் சிலரை நாம உரிமையோடு ’நீ’யென்று சொல்வதே அவர்களை மனதுக்கு ரொம்ப  நெருக்கமானவங்களா இருக்கவைக்குதுன்னு சொல்லலாம். சிலர் தன் தந்தையைக் கூட “நீ”ன்னு ஒருமையில் சொல்லி, நண்பர்களைப் போல பழகுறதைப் பார்த்திருக்கேன்.

உலகத்துல உயர்ந்த சிறந்த மனிதர்களை நாம் மரியாதையுடன் அவங்க, இவங்கன்னு சொன்னாலும், அவர்களையும் படைத்த, அவர்களைவிட மேலான எல்லாம் வல்ல இறைவனை ‘அவன்’ என்றுதானே சொல்றோம். அதனால்தானே அவனோடு நம் நெருக்கம் அதிகமாக இருக்கு!!

இன்னும் ஆராஞ்சுப் பாத்தா, நம்ம இந்திய மொழிகளில் மட்டும்தான் நீ-நீங்க என்று ரெண்டு வகையான பதங்களும் இருக்குதுன்னு நினைக்கிறேன். எனக்குத் தெரிஞ்சு ஆங்கிலம் மற்றும் அரபி மொழியில் இப்படி இல்லை. ஆங்கிலத்தில் யாரானாலும் "You" மட்டும்தான். அரபியில் “இன்த” என்று சொல்வார்கள்.

இங்கு அலுவலகங்களில்,  ஆங்கிலேயர்களை "Hi James"  என்று அழைத்துப் பேசமுடிகிறது. அதுவே, இந்தியர்கள் என்றால், ”சார், சார்”!! நாம பேர் சொல்லி அழைச்சாலும் ஒண்ணும் சொல்லமாட்டாங்கதான், ஆனாலும் அந்தக் கலாச்சாரம் தெரிந்திருப்பதால் (அவமதிப்பாகக் கருதப்படுமோ என்று எண்ணி) அப்படிச் சொல்ல முடிவதில்லை.

ஆனால், ‘சார்’ என்று அழைப்பதால் ஒரு பயன் என்னன்னா, ஒரு  எல்லைக்கோடு வரைந்துகொள்ள வசதியாக இருக்கும்.  ஆங்கிலேயர்களிடம் “Mr.James என்பது இதற்கு உதவும். :-)


ன்று உறவுகளிலும் மரியாதை என்பதும் நிறைய மாற்றம் கண்டிருக்கிறது. ஒரு காலம்வரை ஒருவழிப்பாதையாக மட்டுமே இருந்துவந்த மரியாதை, இருவழிப்பாதையாக மாறியிருப்பது  “காலத்தின் கட்டாயம்”!!!

அத்தை-மாமா மட்டுமல்ல, மாமனார்-மாமியாரும்கூட,  அங்கிள்-ஆண்ட்டி என்று ஆகிப்போனது, அவர்களுக்கும் நமக்குமான நெருக்கத்தைக் குறைத்து விட்டதுபோலவே உணர்கிறேன். 

அதே சமயம், ஆண்பிள்ளையானாலும், தொடாமல் இரண்டடி தள்ளி நின்றே,
“அப்பா” என்றழைத்து, கண்டிப்புடன்கூடிய அன்பைத் தம் தந்தையிடம் அன்று பெற்றுக்கொண்ட ”இன்றைய” அப்பாக்களை, “Dad” என்றழைத்தவாறு இளம்பெண்கள்கூட தோள்மீது கைபோட்டுப் பேசும்போது இருவருக்குமிடையில் பாசம் கொஞ்சம் அதிகம்போலத்தான் தெரிகிறது.
 

’ப்ராணநாதா’, ‘ஸ்வாமி’ களில் பதிபக்தியோடு ஆரம்பித்து, அத்தான், மாமா, மச்சான் என்றெல்லாம் பாசமிகு சதி-பதியாகப் பயணித்தாலும், ‘என்னாங்க’, ‘இந்தாங்க’வையும் விட்டுவிடாது ‘ஏங்க’வும் வைத்து நட்புணர்வு பெருகச்செய்து,  பின்னர் 90-களில் பெண்கள், கணவரைப் பெயர் சொல்லி அழைப்பதில் அதிக நெருக்கத்தை உணர்ந்ததுபோல, இக்காலத்து மங்கையர் கணவனை “டேய்” என அழைப்பதில் அன்பு அதிகரிக்கக் காண்கிறார்கள்போல.

நம் தலைமுறையினர், கண்டபொழுதிலெல்லாம் “குட் மார்னிங் மிஸ்” என்று ஆசிரியர்கள்முன் கைகட்டி நின்றபோது, அங்கு மரியாதையைவிட பயமே அதிகம் இருந்தது. இன்றோ, ”ஹாய் மிஸ்” என்று அழைப்பதையும், நண்பர்கள்போல ஜோக் அடித்துப் பேசிக்கொள்வதையும் நாம் வாய்பிளந்து பார்த்தாலும், கூடவே பொறாமையும் வரத்தான் செய்கிறது.


மாறிவரும் உலகில், மரியாதை என்பதன் வரையறையும் மாறிவிட்டது.  சிலருக்கு அது ”மரியாதை மனசிலயாவது இருந்தாச் சரிதான்” என்று புலம்ப வைக்கும். சிலருக்கு “மரியாதை மனசில் மட்டும் இருந்தாப் போதும்” என்று சொல்ல வைக்கும்.

Post Comment

முற்றுப்புள்ளி




சமரசம் 1-15 அக்டோபர், 2012 இதழில் வெளியான கட்டுரை:


இறைத்தூதரை அவமானப்படுத்திய திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து உலகெங்கும் இஸ்லாமியர்களால் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருவதை அறிவோம். நம் எதிர்ப்பை ஆக்கப்பூர்வமான முறையில் தெரிவிக்க வேண்டியது அவசியம்தான்.

எனினும், இக்கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மற்றும் அவைசார்ந்து ஆங்காங்கு நிகழ்ந்த வன்முறைகளால் நாம் நினைத்ததை - படத்தை யூ-ட்யூப்பிலிருந்து நீக்கப்படுவதையும், படம் தயாரித்தவன் அரசால் தண்டிக்கப்படுவதையோ - சாதித்துவிட்டோமா என்றால், வருத்தத்துடன் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

குறைந்தபட்சம், இனி இத்தகைய அவமதிப்புகள் நிகழாது என்ற நம்பிக்கையாவது கிட்டியிருக்கிறதா என்றால், தலைகவிழ்வதைத் தவிர வேறு பதிலில்லை!! எனில் இதற்கு என்னதான் வழி?

முன்பு டென்மார்க் கார்ட்டூன். இப்போது அவதூறு படம். அந்த எதிர்ப்பலை ஓயும் முன்பே, இதோ ஃப்ரெஞ்சுப் பத்திரிகையில் மீண்டும் கேலிச்சித்திரங்கள்! 


இந்த தொடர்கதைக்கு ஒரு கட்டாய முற்றுப் புள்ளியே இப்போதையத் தேவை.  ஒரு நிரந்தர புரிதலுக்கான வழியை இஸ்லாமிய அறிஞர்களும் தலைவர்களும் கண்டறிய வேண்டும். அது வன்முறையுமல்ல; அடங்கிப் போதலுமல்ல!! நமது உரிமையாக அந்த வழி இருக்க வேண்டும்!! அது சட்டபூர்வமான வழி!! ஆம், இஸ்லாத்திற்கு மாறான செயல்களில் ஈடுபட்டு, இஸ்லாமை இழிவுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்படவேண்டும்.

அதெப்படி சாத்தியமென வியக்கலாம். உதாரணங்களில் ஒன்றைக் கூறுகிறேன். ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய யூத பெரு இனவொழிப்பு (Holocaust) குறித்து அறிந்திருப்பீர்கள். அந்த இனவொழிப்பு சம்பவம் பொய்யென மறுத்து, ஏற்காதவர்கள் பலர் உலகில் உண்டு. அவர்கள்  அப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லையென ஆதாரங்களுடன் மறுத்து பேசி, எழுதி வருவதைத் தடுப்பதற்காக, “Laws_against_Holocaust_denial” என்ற யூதர்களுக்கு ஆதரவான சட்டம் இன்று பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் அமலில் உள்ளது.  


ஹிட்லர் ஆண்ட ஜெர்மனியிலும் இச்சட்டம் உண்டு என்பதுதான் கவனிக்கப்படவேண்டியது. அந்த நாடுகளில் இதன்மூலம் தண்டிக்கப்பட்டவர்களும் பலர்.

இன்று தன் குடிமகன் ஒருவன் நபி பெருமானாரின் கார்ட்டூனை வெளியிட்டிருப்பதை “தனிமதச் சுதந்திரம்” ,”பேச்சுரிமை”,  “கருத்துரிமை” என்றெல்லாம் காரணம் சொல்லி தண்டிக்க மறுக்கும் ஃப்ரான்ஸிலும் யூத இனவொழிப்பு எதிர்ப்புச் சட்டம் அமலில் இருக்கிறது.

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல, இஸ்லாமை அவமதிப்பதைத் தடுக்க ஒரு சர்வதேச சட்டத்தை (International law) உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதே இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் அவசரக் கடமை. பலம் வாய்ந்த இஸ்லாமிய அரசுகளின் உதவியைக் கொண்டும், சட்ட அறிஞர்களைக் கொண்டும் இச்சட்டம் வடிவமைக்கப்பட்டு, சர்வதேச சட்ட-நீதி மன்றங்கள் மற்றும் கூட்டமைப்புகளின் மூலம் உலக நாடுகளுக்கு பொது விதியாக்கப்படவேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் இன்றே தொடங்கினால்தான், சில ஆண்டுகளில் நடவடிக்கைகள் பூர்த்தியாகி, நடைமுறைக்கு வரும்.

இனி இதுபோல கீழ்த்தரமான தூற்றுதல் வேலைகளில் யாரேனும் ஈடுபட்டால், இஸ்லாமியர்கள் உணர்ச்சிகளால் ஆளப்படாமல், அறிவால் எதிர்கொள்வதே விவேகமான செயலாகும்.  சட்ட ரீதியாக எதிர்கொண்டு, கடுந்தண்டனை வாங்கிக் கொடுப்பதன்மூலம்தான் "Freedom to abuse"  - ”அவமதிக்கும் உரிமை” தொடராமல் தடுக்க முடியும்.  


Post Comment