Pages

Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

அது ஒரு அழகிய நிலாக்காலமாம்!!





குழந்தைப் பருவம், ஓடியாடும் பருவம், குமரி(ரன்) பருவம்... இவற்றைத்தான் அநேகமாக எல்லாருமே தத்தம் வாழ்நாளில் அழகிய நிலாக்காலமெனக் கொள்வோம்!!

கவலை ஏதுமிலா பாலகப் பருவமே மிக இனிது. நாம் நம் கையால் சாப்பாடை எடுத்து உண்ணக்கூடத் தேவையிலா காலம். நேரங்காலத்தில் கணவனுக்கு மனைவி உணவு பரிமாறி பணிவிடை ( :-D ) செய்கிறாரோ இல்லையோ, குழந்தைக்குத் தாய் மணியடித்தால் சோறு படைக்கும் காலம் அது.

காண்பதெல்லாம் இனிதாகத் தெரியும் குமரப் பருவமோ அதனைவிட இனிது. எதிர்காலம், அது கொண்டுவரக்கூடிய கவலைகள், சுமைகள் என்று எதுகுறித்தும் கவனம் கொள்ளாமல், நண்பர்களே உலகம் என வாழ்ந்த சுகமான பருவம்.

திருமணமான புதிதில் இதைவிட இனிமை வாழ்வில் உண்டோ என்று நினைத்த (காலமாகிவிட்ட) காலம். இந்த இனிமையும், ரசனையும், சுதந்திரமும் இனி நம் வாழ்நாள் முழுதும் நீடிக்கும் என்று நம்ம்ம்ம்பிய அப்பாவிக் காலம்!!

சுகமான சுமையைக் கருவில் ஏந்தி, பின்னர் அப்பூங்கொத்தைக் கையில் ஏந்தி, ஈங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்தேன் எனப் பெருமை கொண்ட காலம்.

ப்படி ஒவ்வொரு பருவமாகத் தாண்டி வரும்போதெல்லாம், அப்போதைய பருவமே அழகானதாக, மனதுக்குப் பிடித்ததாகத் தோன்றும். ஆனால், அது பாரமான சுமைகளைச் சுமக்கத் தொடங்கும் இந்தப் பருவம் வரைதான்.

அதுவும் பிள்ளைகள் வளர வளர, நம் வயது தேயத்தேய, காலம் கரையக் கரைய, கவலைகள் பிரச்னைகள் வளருங்காலமாகிவிட்டது இப்போது. ஒவ்வொன்றாக சிக்கவிழ்த்து முடித்து வைத்து நிமிரும்போது, அடுத்த சிக்கல் காலைக்கட்டத் தயாராக இருக்கும் காலமிது.

இந்தப் பருவத்தில்தான், நாம் கவலைகளின்றிப் பட்டாம் பூச்சிகளாகத் திரிந்த அந்தக் காலங்களெல்லாம் நம் நினைவுக்கு வந்து, “ஹூம்... அது ஒரு அழகிய நிலாக்காலம்...!!” என்று பெருமூச்சு விட வைக்கும்!!

ம்மிடம் டைம் மெஷினோடு ஒருவர் வந்து, “சரி, நீ அழகிய நிலாக்காலமாக நினைக்கும் அந்தக் காலத்திற்கே உன்னை மீண்டும் அனுப்பி வைக்கிறேன், வா!!” என்று அழைத்தால் இப்போதைய பிரச்னைகளிலிருந்து விடிவு கிடைக்கும் என்று மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்து அவரின் டைம் மெஷினுக்குள் ஓடிவிடுவோமா? இல்லையே, அவரிடமிருந்து தப்பித்து, வேறு பக்கமாகத்தான் ஓடுவோம்!!

எவ்வளவோ மூச்சுமுட்டுமளவு பிரச்னைகள் இருந்தாலும், இந்த நொடியை - நிகழ்காலத்தை விட்டுப் பிரிய மனம் வருவதே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

சிலர், “அந்தக்காலத்துல காற்று சுத்தமாருந்துது; தண்ணி சுத்தமாருந்துது; சாப்பாடும் விஷங்கள் கலக்காம இருந்துது... இண்டர்நெட் கிடையாது... ஸ்மார்ட் ஃபோன்கள் கிடையாது.. அதுதான் ஆரோக்கியமான காலம்...” என்று நீட்டி முழக்கி, “நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை....” என்ற வியக்கியானத்தோடு முடிப்பார்கள்.

அவர்களை மின்சாரம் இல்லாத... அட, குறைந்தபட்சம் ஏசி மட்டும் இல்லாத, ஓவர்ஹெட் டாங்க் இல்லாத, இண்டர்நெட் இல்லாத ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்து வீட்டில் இருக்கச்சொன்னால் அலறி விடுவார்கள்!!

தேபோலத்தான், (என்னைப் போல) இருக்கும் காலத்தைவிட்டு பழையதைப் போற்றுபவர்களும்!! இவர்களேதான், நாளை தத்தம் பேரப்பிள்ளைகளிடம் “நாங்கலாம் அந்தக் காலத்துல...” என்று ஆரம்பித்து.... இந்த - இதே பாரமான காலத்தையும், அதை தான் வெற்றிகரகமாகக் கடந்து வந்ததையும் பெருமையோடு பிரஸ்தாபிப்பார்கள்!!

நிலா வரும் காலமெல்லாம் - நிலா வரும்வரையான காலமும் - அதை நாம் பார்க்க முடிகிற ஒவ்வொரு காலமும் அழகான நிலாக்காலம்தான்!!

தென்ன “#நிலாக்காலம்”? ஏன் சூரியக்காலம் இல்லை? அல்லது நட்சத்திரக்காலம்?

நிலா, அதன் எல்லா அமைப்பிலும் அழகுதான். சிறு பிறையாக இருக்கும்போது, வளர்ந்து அரை வட்டமாக இருக்கும்போது, முழு நிலவாக இருக்கும்போது என, அதன் எல்லாப் பருவங்களிலுமே நிலவு அழகுதான். நிலாவே வராத அமாவாசை இரவுகூட ஒரு விதத்தில் அழகு!! இது நிலாவுக்கு மட்டுமே உள்ள சிறப்பு. அதனாலதான் நிலாக்காலம்!!

வாழ்க்கையும் அதன் எல்லாப்பருவங்களிலும் சிறப்புத்தான்!!





படத்தில்: #காலை நிலா!! இதிலும் நிலாதான் வித்தியாசமானது. இரவுதான் அதற்கானது என்றாலும், பகலில்கூட சில சமயங்களில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும்!!   

இரவில் சூரியன் வந்தா அது இரவே இல்லியே!! எட்டிப் பாத்தாக் கூட அது பகல் ஆகிடும். நட்சத்திரத்துக்கு அத்தனை பவர் கிடையாது.


(எப்படி இப்படிலாம்? எனக்கே தாங்கலை.... )

“டீக்கடை”  ஃபேஸ் குழுமத்தில் ” உங்கள் வாழ்வின் நிலக்காலம் எது?” என்ற போட்டிக்காக எழுதியது.

Post Comment

என்ன விலை அழகே..??




சில மாதங்களுக்கு முன்பு, சின்னவனுக்கு நெற்றியில் ஒரு சின்ன கொப்புளம் வர, அதற்காக மருத்துவரைச் சந்திக்க சென்றிருந்தோம். பரிசோதனைக்குப் பின், கொப்புளத்தைச் சிறு அறுவை சிகிச்சை செய்து நீக்கியாக வேண்டும் என்று சொன்ன மருத்துவர், தன் பேச்சினிடையில் ஒரு ஏழெட்டு முறையாவது “கண்டிப்பாக முகத்தில் தழும்பு வரத்தான் செய்யும்; அதுக்கு ஒண்ணும் செய்ய முடியாது” என்று சொல்லிவிட்டார்.

நான் அறுவை சிகிச்சை, அனஸ்தீஷியா என்ற கவலையில் இருந்ததால் அதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் சொல்லவும், ”ஏன் டாக்டர், தழும்பு இருந்தா என்ன? அதனால வேற எதும் பிரச்னை வருமா?” என்று நான் கேட்க... டாக்டர் ஒருமாதிரி ஜெர்க் ஆகிப்போனார். பிறகுதான் புரிந்தது.  அறுவை சிகிச்சை நிபுணரான அவரிடம் வருபவர்கள் அநேகமாக எல்லாருமே சொல்லும் முதல் கண்டிஷன், “தழும்பு வராத மாதிரி ஆபரேஷன் பண்ணுங்க” என்றுதானாம்!!

”அதனால் வருபவர்கள் எல்லோரையுமே, அடுத்த ரூமில் இருக்கும் ப்ளாஸ்டிக் சர்ஜனிடம் அனுப்பி விடுகிறேன். கீழே விழுந்து முகத்தைக் கிழித்துக் கொண்டு வரும் சிறுவர்களுக்குக்கூட தையல் தழும்பு தெரியக்கூடாது என்று பெற்றோர் சொல்கிறார்கள்.” என்று வருத்தப்பட்டுச் சொன்னார்!! அழகு படுத்தும் பாடு!!

ன் பெரியவனுக்கு, ஒன்றிரண்டு பற்கள் மட்டும் முன்பின்னாக இருக்கும். அதனால் பிரச்னைகள் இல்லை. ஆனால், ஒரு நண்பர் குடும்பத்தினர், என்னைப் பார்க்கும்போதெல்லாம், அவனது தெற்றுப்பல்லைச் சரியாக்கும்படி என்னை வலியுறுத்துவர். அதற்குக் காரணமென அவர்கள் சொல்வது, பேச்சு அல்லது உண்பது அல்லது பற்தூய்மை என்பவை அல்ல. நாளை அவன் வேலைக்கு இண்டர்வியூ போகும்போது, பல்வரிசை சரியா இல்லன்னா, அவனுக்கு Self-confidence இருக்காதாம்!! ஙே....

இப்ப ட்ரெண்ட் என்னன்னா,  தெத்துப் பல் ஒன்றுகூட இல்லாத பல்வரிசை இருக்கிறவங்ககூட “க்ளிப்” மாட்டிட்டு இருக்காங்க!!  ”அழகான” பல்வரிசைக்காகவாம்!! எனக்கு அதுல ஆச்சரியம் என்னன்னா,  பல்வலி வந்தாலே டாக்டர்கிட்ட போகப் பயம் - ஊசி போடுவாங்களே... அதுவும் கத்தமுடியாதபடிக்கு வாயத் திறந்து வச்சுல்ல போடுவாங்க!!  இதுவே, பல்வரிசையைச் சரிபண்ணனும்னா, எத்தனை ஊசி போடணும், எத்தனை பல் எடுக்கணும், அந்த க்ளிப்பை மாட்டி வச்சுகிட்டு சாப்பிடப் படுகிற அவஸ்தை இருக்கே... எப்பா....  அதைவிட முக்கியமாக அதற்கு ஆகும் செலவு!! ஆனா, “அழகு” என்ற ஒன்றுக்காக வலி, சிரமம், செலவு எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பவர்களைப் பார்க்கும்போது வருவது ஆச்சரியமா, அதிர்ச்சியா??!!

சென்ற வருடம் உறவு வட்டத்தில், ஒரே சமயத்தில் மூன்று குழந்தைப் பேறுகள் இருந்தன.  ஒருவரின் குழந்தை,  பிறந்து சில நாட்களில் இதயக் கோளாறு காரணமாய் இறந்துவிட்டது. இன்னொருவருக்கோ, சில பிரச்னைகளால் குறைமாதத்தில் பிறந்து, தொடர் ஆஸ்பத்திரி வாசம் என்று சிரமப்பட்டார்கள்.  இதையெல்லாம் யோசித்துக் கொண்டே, மூன்றாமவருக்கு தொலைபேசி, குழந்தை நலமா என்று விசாரித்தேன். பேசியவர், “நலம்தான், ஆனா...” என்று இழுத்தார்.

பதற்றத்தில், “என்னாச்சு” என்று கூட கேட்க முடியவில்லை என்னால். “ஆனா, கறுப்பா இருக்கு. பொம்பளப் புள்ள கறுப்பா பிறந்திருக்கேன்னு கவலையா இருக்கு” என்றார்!! அவரைச் சொல்லிக் குற்றமில்லை.  மேற்சொன்ன இரு நிகழ்வுகளையும் சொல்லி,  ஆரோக்கியமாய் அதுவும் சுகப்பிரசவமாய்ப் பிறந்ததே பெரிதல்லவா என்று கூறினேன்.  இந்தியா போகும்போதெல்லாம், சிலர் என்னிடமே  ”உன் மகன் கறுப்பா ஆகிட்டே வரான், அதைத் தேய் இதைக் குடு”ன்னு ஒரே டார்ச்சர்!!


இப்படி அழகு, அழகு என்று ஒரு மாயையில் மூழ்கிக் கிடப்பவர்களைக் குற்றம் சொல்வதா, அல்லது சமூகம்தான் அதற்குக் காரணம் என்று சொல்லி அவர்களை நியாயப்படுத்துவதா எனப் புரியவில்லை. ஆனால் ஒரு விஷயம், இந்த அழகு என்பது, பலருக்கும் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போதுதான் தேவைப்படுகிறது. வீட்டினுள் குறைந்தபட்ச சுத்தமாகக் கூட இருக்க முடியாதவர்கள், புற இடத்தில் மட்டும் அழகைப் பேணுவது புதிரானது.



புறஅழகு மட்டுமே இவ்வுலகில் பிரதானமாக இருப்பதன் தொடர்ச்சிதான், “ஆஸிட் வீச்சு”களும். காண்டாக்ட் லென்ஸ்கள்கூட.  அதிலும் இந்தப் புற அழகை, தன்னம்பிக்கையோடு தொடர்புபடுத்தும் வியாபாரத் தந்திரத்தை என்னவென்பது. சிவப்பாய், அழகாய் இருப்பதுதான் Confidence-ஆம்!! அதைப் புரிந்துகொள்ளாத இளைய தலைமுறையைக் கண்டு நம் மனம் பதறுகிறது.



தடுப்பூசி காணாத சென்ற தலைமுறைகளில், ”பெரியம்மை” என்றும் ஒரு நோய் இருந்தது. இந்நோயால் தாக்கப்பட்டவர்களின் முகங்கள் முழுதும் அம்மைத் தழும்புகளால் நிறைந்திருக்கும். பெண்களே ஆயினும், அத்தழும்புகள் அவர்களின் திருமணத்திற்கு ஒரு போதும் தடையாக இருந்ததேயில்லை!! இன்று...???

Post Comment

வாழ்வும், சாவும்




ரணம்... உலகப் பற்று நீங்கிய துறவியோ, அல்லது அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவரோ அல்லது இடைப்பட்டவரோ - எப்பேர்ப்பட்டவரையும் கொஞ்சமாவது அசைத்துப் பார்த்துவிடும். நிகழ்வாக இல்லாவிடினும், இந்த வார்த்தையே போதும் நெஞ்சைக் கொஞ்சம் ஆட்டி வைக்க. 

மரணமில்லா வீடு உலகில் இல்லையென்றாலும், நம் வீட்டை அது தொட்டுவிடுமோ என்கிற அச்சமும்தான் நம்மைக் கொஞ்சமாவது 
நல்லவர்களாக இருக்க வைக்கிறது என்றால் மிகையில்லை. மரணங்களில் சில, மரணித்தவருக்கோ அல்லது வேறு சிலருக்கோ விடுதலையாக இருக்கும். சில மரணங்கள் இருப்பவர்களின் வாழ்வை சுமையாக்கும். எதுவாகிலும், எல்லாருக்குமே மரணம் பல கேள்விகளை எழுப்புகின்றது. 

சென்ற வாரங்களில் தொடர்ச்சியாக இரு மரணச் செய்திகள். ஒன்று பிறந்து இரு நாளே ஆன சிசு. கருவிலேயே ஏற்பட்ட, பிறக்கும்வரை அறியப்படாத குறைபாடுகளால் மரணம். இன்னொன்று, சில குறைபாட்டுகளுடன் பிறந்து, 17 வருடங்கள் வாழ்ந்த ஒரு குழந்தை - ஆம், அவன் அப்போதும் குழந்தைதான். 

இந்தக் குழந்தை ஏன் பதினேழு வயது வரை வாழ்ந்து மரணிக்க வேண்டும்? அந்தக் குழந்தை ஏன் இரு நாட்களிலேயே வாழ்வை முடித்துக் கொண்டது? அவன் போட்ட புதிர்களின் விடை அவனன்றி யாருக்குத் தெரியும்?

திர்பாராத இந்த இரண்டுமே மனதைப் பாதித்திருந்த வேளையில், இன்னுமொரு தகவல். வெகுநாட்களாக ஒரு அரிதான நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு உறவினர் - இளைஞர்- கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிர்காக்கும் கருவியால்தான் மூச்சு இருக்கிறது, இன்னும் சில மணிநேரங்களே... என்றெல்லாம் கேட்டபோது... மற்ற இரண்டைவிட இத்தகவல் பேரதிர்ச்சியைத் தந்தது.


மரணித்துவிட்டார் என்பதைவிட, இதோ இன்னும் சில மணிநேரங்களே என்கிற தகவல் தரும் வேதனை மிக மிகக் கொடுமையானது. வெளிவட்ட உறவினரான நமக்கே இத்தனை பதைபதைப்பைத் தருகிறது என்றால், அருகே இருக்கும் பெற்றோர், மனைவி, உடன்பிறந்தோரின் நிலையைக் கற்பனை செய்யக்கூடப் பயமாக இருந்தது. ஏதேதோ நினைவுகள், எண்ணங்கள், கவலைகள்... பழைய நினைவுகளில் மூழ்கி, இப்படியிருந்தோமே, அப்படியெல்லாம் இருந்தானே என்று கலங்கி.. 

சிறு வயது என்பதால்தான் இத்தனைக் கலங்குகிறோமோ என்று தோன்றலாம். கல்லூரியில் படிக்கும்போது, சக தோழியின் தாத்தா இறந்துவிட்டார். இரண்டு நாள் கழித்து கல்லூரிக்கு வந்த அவளிடம், ஒரு நண்பன் “வயசானவர்தானே?” என்கிற ரீதியில் பேச கொதித்துப் பாய்ந்துவிட்டாள் தோழி!! நல்லவேளை நான் வாயைத் திறக்கவில்லை. ஏனெனில் நானும் கிட்டத்தட்ட அப்படி நினைத்திருந்ததால்தான் அவளிடம் எதுவும் விசாரிக்கவில்லை. அச்சம்பவம், பாசத்திற்கு வயதில்லை என்று கற்றுக் கொடுத்தது. 

இன்னொரு சம்பவம் என் தாயார் சொன்னது. 16 வருடங்களாகப் படுக்கையில் இருந்த தன் பாட்டி இறந்தபோது, அவரின் 16 வயதுப் பேத்தி, கதறிக் கதறி அழுததாகச் சொல்லி வியந்தார். எந்தளவுக்கு அவர்களுக்குள் பாசமும், நேசமும் இருந்திருந்தால் பிரிவு துயரம் வாய்ந்ததாக இருந்திருக்கும்? 

ந்த இளைஞரின் மனைவியை முன்பொருமுறை ஒரு ஐ.சி.யூ. வாசத்தின்போது ஆறுதல் கூறலாம் என்று சந்தித்தேன். ஆனால், அவரிடமிருந்து நான் அறிவுரை பெற்று வந்தேன்!! “எங்களுக்கு இந்நிலை இறைவனால் தரப்பட்டது. ’எந்தவொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி துன்புறுத்துவதில்லை’ என்று அவன் கூறியுள்ளான். எனவே நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். இவ்வுலகில் படும் சிரமங்களுக்கான நற்கூலிகள் மறுமையில் தரப்படும் என்று முழுமையாக நம்புகிறோம். ஆகையால் எங்களை இந்நிலைக்கு ஆளாக்கிவிட்டாயே இறைவா என்று ஒருபோதும் நாங்கள் எண்ணியதில்லை” என்றார். அவரின் மன உறுதி, திண்மை என்னை வாயடைக்கச் செய்தது!! 

ருத்துவர்கள் இனி காத்திருப்பதில் பயனில்லை, உயிர்காக்கும் கருவியை எடுத்துவிடலாம் என்று வற்புறுத்த, மனைவி மறுக்க, மற்றவர்கள் அதிர்ச்சியில்... விபரம் கேள்விப்பட்ட அனைவரும் - உறவுகள், உறவுகளின் உறவுகள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று அனைவரும் - பிரார்த்தித்தோம். 

அதிசயிக்கத்தக்க திருப்பமாக, மறுநாளே- இறைவன் கருணை - அவருக்கு நினைவு வந்து செல்ல, தன் தேவைகளை எழுதிக்காட்டுமளவு முன்னேற்றம் ஏற்பட்டது. மருத்துவர்களே இது மெடிக்கல் மிராக்கிள்  என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்க, “அணையப் போகிற விளக்கு பிரகாசமாக எரியும்” என்கிற விதமாக நிரந்தரமாக இறைவனிடத்து மீண்டுவிட்டார். அவர் நோயால் பட்ட துன்பங்களுக்குப் பகரமாக இறைவன் அவரது பாவங்களை மன்னித்து, மறுமை வாழ்வைச் சிறப்பித்துத் தருவானாக.

மேற்சொன்ன மூவரும் உறவுகள் என்பதால் அவர்களின் மறைவு என்னைப் பாதித்தது என்றால், டெல்லி துயரச்சம்பவத்தினால் மறைந்த ஜோதி ஏன் நம் அனைவரையுமே வருத்தப்படவைக்கிறார்? குழந்தை  விளையாடும்போது  கீழே விழுந்து காயப்பட்டு வந்தால்,  பதற்றமான தாய் “எதுக்கு ஓடுனே? ஒழுங்கா ஒரு இடத்தில் உட்கார்ந்து விளையாட வேண்டியதுதானே?” என்று அடிபட்ட குழந்தையின் முதுகிலே ரெண்டு போடுவதைப் போல,  மக்களைப் பாதுகாக்கத் தவறிய அரசு-காவல் துறையினரைக் கேள்வி கேட்கமுடியாத கையாலாகாத்தனத்தில், ஜோதியைப் பாத்து “ஏன் சினிமாவுக்குப் போனாய் - அதுவும் இரவில்?” என்று கேட்கத் துணிகிறேன்.

எனில், அதே டெல்லியைச் சேர்ந்த மூன்றரை வயதுச் சிறுமியிடமும், தமிழ்நாட்டின் மாணவி 13-வயது புனிதாவிடமும் “ஏன் பகலில் பள்ளிக்குப் போனீர்கள்?” என்று கேட்பதா!! இன்னும் கூட்டாகவும், தனியாகவும், வீட்டினுள்ளும் வெளியேயும், வன்புணரப்பட்ட எத்தனையோ பெண்களிடம் என்ன கேட்பது?  “ஏன் பிறந்தீர்கள்?” என்றா!!

எனது உறவுகளுக்கு, சுற்றங்கள் சூழ நேர்ந்த அமைதியான மரணங்கள்,  உற்றாருக்கு ஏற்படுத்தும் சோகத்தை, பாதிப்பை நினைத்துத்தான் வருந்த வைக்கின்றன. ஜோதி-புனிதாக்களின் மரணங்கள் மரணம் வந்த வழியை நினைத்துப் பதறிப் பரிதவிக்க வைக்கிறது. குற்றங்கள் செய்து, அவை நிரூபிக்கப்பட்ட பிறகும், தேசிய மரியாதையோடு மரணிப்பவர்களும் இருக்கும் இதே மண்ணில்தான்; ஒரு பாவமும் அறியாத, இன்னும் மண்ணில்கூட கால் வைக்காத சிசுவாக தாயின் வயிற்றில் இருக்கும்போதே, கூராயுதத்தால் கிழிக்கப்பட்டுக் கொல்லப்படுபவர்களும் உண்டு.

வாழ்வு மட்டுமல்ல, சாவும் நல்லதாக இருக்கவேண்டும் என்கிற பயம் வருகிறது. இறைவா!! வாழும் வாழ்க்கையை மட்டுமல்ல, இறப்பையும் துன்பமில்லாததாக, நிறைவானதாக, பயனுள்ளதாக ஆக்கித் தருவாயாக!!


Post Comment

மரியாதையாப் பேசுங்க..





கிராமங்களில் சித்தப்பு, வா, போலாம்; யத்தே, எங்கிட்டுப் போற; தாத்தா, கஞ்சி குடிச்சிட்டியா என்று, வயசானவங்களையும் சின்னவங்க நீ, வா, போன்னு பேசறதைப் பாத்திருக்கோம். 

சிலர்,  தங்களிடம் பணிபுரியும் முதியவர்களை நீர் வாரும், இரும், பாரும் என்று பேசக் கேட்டிருக்கிறோம். எங்கள் வீட்டில் வேலைபார்த்த உழவர்களும் வீட்டினரை  இதேபோல, ”ஏயம்மா, இங்கன வாரும்; இதை எடுத்துத் தாரும்” என்றுதான் விளிப்பார்கள். எங்கள் ஊருக்கு மிகவும் அன்னியமான பேச்சு வழக்கு என்பதால் அதையெல்லாம் ரசித்துக் கேட்டதுண்டு.

சினிமாப் படங்கள் மட்டுமே ஒரே பொழுதுபோக்காக  மிகைத்துப் பேசப்பட்ட அந்த காலகட்டத்தில், வீட்டிற்கொரு ‘ஜிவாஜி’, ‘ரஜினி’, கமலாசன்’ அவதாரங்கள் உண்டு. ஆங்காங்கு திண்ணைகளில், வயதுபேதம் இல்லாமல் “ரஜினி என்னா மாதிரி ஃபைட்டு பண்ணான் தெரியுமா?” “கமலாசன் ஆடற மாதிரி எவனுக்குலே ஆட வரும். அவந்தாம்லே டாப்பு” என்ற பேச்சுகள் நடக்கும்.

நானும் கிராமத்தில் என் அம்மா வீட்டில், உறவினர்கள் சூழ சிறுவயதில் வளர்ந்தவள்;  மூத்தப் பேத்தி என்பதால் செல்லம் அதிகம். அம்மா தன் உடன்பிறப்புகளை எப்படி அழைப்பாரோ அதேபோலவே நானும் அழைத்து உரையாடுவேன். அம்மாவின் அண்ணன் எனக்கும் “காக்கா”தான்!! அம்மாவின் தம்பி, தங்கைகள் எல்லாரும் எனக்கும் அப்படியே என்பதுபோல, பெயர் சொல்லியே அழைத்து வந்தேன்.

நான் ஒரே பேத்தியாக, தனிக்காட்டு ராணியாக இருந்தவரை இது யாருக்கும் பெரிய தவறாகத் தெரியவில்லை. பெரிய சாச்சிகளுக்கும் பிள்ளைங்க பிறந்து, வளந்து, அந்த நண்டு-சிண்டுகளெல்லாம் அழகா மரியாதையா “சாச்சி”, “மாமா”ன்னு கூப்பிட ஆரம்பிச்சதும் என் மவுசு கொஞ்சமா குறைய ஆரம்பிச்சுது!! ”சின்னப் புள்ளையே சாச்சினு கூப்பிடுது, நீயென்ன பேர் சொல்லிக் கூப்பிடுறே”ன்னு எப்பவாவது யாராவது கேட்டாலும்,  அதையெல்லாம் பெரிசா எடுத்துக்கிறதில்ல. ஏன்னா, நான்தான் அப்பவே ஒரு காதுல ‘entry' போர்டும்,  இன்னொன்னுல 'exit' போர்டும் மாட்டி வச்சிருந்தேனே!!

மேலும்,  தாய்மாமா, சாச்சிகளில் என் வயதையொத்தவர்களும் இருந்ததால், எல்லாரையுமே ஒருமையில் அழைப்பதில் பெரிய தவறொண்ணும் இருக்கிறதாப் படலை எனக்கு. அவங்களும் யாரும் எதுவும் அப்ப சொல்லலை.

ன் அம்மாவும் கண்டிக்கலையான்னு கேப்பீங்க. கிராமங்களில் ஆண்களுடன் பேசும்போது “லே” என்கிற மரியாதையான விகுதி சேர்ப்பதுபோல, எங்க ஊரில், பெண்களுக்கு “ளா” என்கிற அதிவிசேஷ விகுதி உண்டு #சமத்துவம்!!  அதுல என்ன ஒரு வித்தியாசம்னா, (மகன், தம்பி போன்ற) தங்களைவிட இளையவயது ஆண்களுக்கு  மட்டுமே இந்த “லே” விகுதி பொருந்தி வரும். ஆனால், பெண்களுக்கோ, வயது வித்தியாசமே இல்லாமல் (“பெரிம்மா, இங்க வாயேம்ளா”) எல்லாருமே சர்வசாதாரணமாக “ளா” போட்டு அழைக்கப்படுவர். (மாமியார்கள் மட்டும் விதிவிலக்கு... க்ர்ர்ர்... ) நான் அந்தமாதிரி யாரையும் மரியாதைக் குறைவாகப்  பேசாமல் பழக்கியது என் அம்மாதான். அப்போ அதுவே பெரிய விஷயம்.

அப்புறம், மாமாக்களுக்கு கல்யாணம் ஆகி, மாமிகள் வந்தாங்க. இப்ப நானும் காலேஜ் ஸ்டூடண்டாகி, ‘ஒரு பொறுப்புள்ள குடிமகள்’ ரேஞ்சுக்கு வளந்து, பெண்ணுரிமைல்லாம் பேச ஆரம்பிச்சிட்டதால, மாமிகளை (மட்டுமாவது) மரியாதையா ”வாங்க-போங்க மாமி”ன்னு சொல்லியாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன். இல்லைன்னா, “படிச்ச புள்ளையளே இப்பிடித்தான்”னு ஒட்டுமொத்த பெண் படிப்பாளிகளோட மரியாதையும்  காத்துல பறந்துடுமே!!

என் சாச்சிகளும் ”ஏய், நாங்கல்லாம் இப்ப நாத்தனார் ஆகிட்டோம்.  இன்னுங்கொஞ்ச நாளில் மாமியார் ஆகப்போறோம். இனிமயும் பேர் சொல்லி கூப்பிட்டே...”னு என்னை மிரட்டவே ஆரம்பிச்சுட்டாங்க!! அப்பத்தான் சாச்சிகிட்டே சொன்னேன், “அஞ்சில வளையாதது இருவதில் வளையுமா? நான் சின்னப் புள்ளையா இருந்தப்பவே நீங்கல்லாம் என்னைக் கண்டிச்சிருக்கணும். அப்பம்லாம் பேசாம இருந்து செல்லம்கொடுத்துகிட்டு, இப்பம் குறை சொல்லி என்ன பிரயோஜனம்?”. சரிதானே?? இருந்தாலும், கொஞ்சமா என்னை மாத்திக்கிடவும் ஆரம்பிச்சேன்.

காலேஜ்ல, ஒரு நாள் என் நெருங்கிய தோழியிடம் ஏதோ ஒரு படத்தைப் பற்றிப் பேசிட்டிருந்தேன். ரொம்ப ஆர்வமா ஒன்றிப்போய் பேசிகிட்டிருந்தப்போ, “அப்ப சிவாஜி வந்தானா...”ன்னு சொல்ல, உடனே அவ, “வந்தார்” அப்படினு திருத்தினா. அந்தக் காலத் திரைப் படங்களில், அடிக்காமலேயே கன்னத்தில் ‘பளார்’, ’பளார்’னு அடி வுழுற மாதிரி தலையைச் சிலுப்புவாங்களே, அப்படி ஆகிப்போச்சு எனக்கு!! இதுதான் என் கதையின் க்ளைமாக்ஸ். இப்ப முழுசாவே திருந்த முடிவு பண்ணி, முக்கால்வாசி திருந்தியும் விட்டேன்!!

நாம படிக்காம விட்ட படிப்பையும், கத்துக்காம விட்ட கலைகளையும் நம் வாரிசுகளிடம் கடத்திவிடுவதைப்போல,  நாம செஞ்ச தவறுகளையும் அவர்கள் செய்யாமல் பார்த்துக்கணுமே!! என் மகன் பேச ஆரம்பித்தபோதே அவனுக்கு இதேபோல் அனுபவங்கள் ஏற்படாவண்ணம், எல்லாரையுமே மரியாதையாக அழைக்கப் பழக்கினேன் - அவன் பேச ஆரம்பித்த முதல் வார்த்தை, ’அம்மா’ இல்லை, “மாமா”தான்!!

இந்தியாவில், வீட்டில் வேலை பார்த்த ‘ராமு’ என்ற பெண்ணை என் 2 வயது மகன் ‘ராமு மாமி’ என்று அழைத்தபோது அவர் நெகிழ்ந்து சிரித்தது இன்னும் என் நினைவில்.  இங்கே அபுதாபியில் முதலில் வேலைக்கு வந்த ஸ்டெல்லாவை என் இரண்டரை வயது மகன் மாமி என்று அழைத்தபோது அவர், “என் பதினாறு வருட அமீரக வாழ்வில், இன்றுதான் என்னை முதல்முதலில் ஒரு குழந்தை மரியாதையோடு அழைக்கிறது. மலையாளி வீடுகளில்கூட பிள்ளைகள் என்னை ஸ்டெல்லா என்றுதான் கூப்பிடுவார்கள். ” என்று மகிழ்ந்தார்.

வளர்ந்தபிறகு, ‘விஜய் மாமா’, வடிவேலு மாமா’ என்றெல்லாம் சொல்லுவதைப் பார்த்து சில நண்பர்கள், உறவுகள் கிண்டல் செய்யத் தொடங்கியதால், ‘விஜய் நடிச்சிருக்கார்’, ‘வடிவேலு சொன்னார்’ என்ற அளவுக்கு நாசூக்காக தாமே  மாறிக் கொண்டார்கள்.


ல்லாம்சரி,  ஆனால், என்னை என் பிள்ளைகள் இன்றும் நீ,வா, போ என்றுதான் சொல்கிறார்கள். ஆரம்பத்தில் அதையும்  மாற்ற முயற்சி செய்தேன். என்னதான் நான் அவனிடம் என்னை “நீங்க”னு சொல்லு என்று வற்புறுத்திச் சொன்னாலும், அதை வழிமொழிவதற்கு வீட்டில் ஆளில்லை!! என்னை எல்லாருமே - என் தந்தை, என்னவர், உறவினர்கள் - எல்லாருமே ”நீ” என்று சொல்வதால், அவனுக்கும் அது முழுமையாக வரவில்லை. (மரியாதை தானா வரணும், கேட்டு வாங்கப்படாது).  இரண்டாவது, நானே என் அம்மாவை ‘நீ’ என்றுதான் சொல்கிறேன். நாளை அவன் வளர்ந்து, என்னைப் பார்த்து ”நீ(ங்க) மட்டும் உன்(ங்க) அம்மாவை நீ-ன்னு சொல்றீ(ங்களே)யே?” ன்னு கேட்டா என்ன செய்றதுங்கிற யோசனை வேறு!!  

அதனால, யோசிச்சுப்பாத்து, ”என்னை ’நீ’ன்னே சொல்லிக்கோ”ன்னு ஒரு தாய்க்கேயுரிய கருணையோட (நோ, நோ பேட் வேர்ட்ஸ்!!) அனுமதி கொடுத்துட்டேன்.

இது ஒரு சமாதானமாத் தெரிஞ்சாலும், இன்னிக்கும் சிலரை நாம உரிமையோடு ’நீ’யென்று சொல்வதே அவர்களை மனதுக்கு ரொம்ப  நெருக்கமானவங்களா இருக்கவைக்குதுன்னு சொல்லலாம். சிலர் தன் தந்தையைக் கூட “நீ”ன்னு ஒருமையில் சொல்லி, நண்பர்களைப் போல பழகுறதைப் பார்த்திருக்கேன்.

உலகத்துல உயர்ந்த சிறந்த மனிதர்களை நாம் மரியாதையுடன் அவங்க, இவங்கன்னு சொன்னாலும், அவர்களையும் படைத்த, அவர்களைவிட மேலான எல்லாம் வல்ல இறைவனை ‘அவன்’ என்றுதானே சொல்றோம். அதனால்தானே அவனோடு நம் நெருக்கம் அதிகமாக இருக்கு!!

இன்னும் ஆராஞ்சுப் பாத்தா, நம்ம இந்திய மொழிகளில் மட்டும்தான் நீ-நீங்க என்று ரெண்டு வகையான பதங்களும் இருக்குதுன்னு நினைக்கிறேன். எனக்குத் தெரிஞ்சு ஆங்கிலம் மற்றும் அரபி மொழியில் இப்படி இல்லை. ஆங்கிலத்தில் யாரானாலும் "You" மட்டும்தான். அரபியில் “இன்த” என்று சொல்வார்கள்.

இங்கு அலுவலகங்களில்,  ஆங்கிலேயர்களை "Hi James"  என்று அழைத்துப் பேசமுடிகிறது. அதுவே, இந்தியர்கள் என்றால், ”சார், சார்”!! நாம பேர் சொல்லி அழைச்சாலும் ஒண்ணும் சொல்லமாட்டாங்கதான், ஆனாலும் அந்தக் கலாச்சாரம் தெரிந்திருப்பதால் (அவமதிப்பாகக் கருதப்படுமோ என்று எண்ணி) அப்படிச் சொல்ல முடிவதில்லை.

ஆனால், ‘சார்’ என்று அழைப்பதால் ஒரு பயன் என்னன்னா, ஒரு  எல்லைக்கோடு வரைந்துகொள்ள வசதியாக இருக்கும்.  ஆங்கிலேயர்களிடம் “Mr.James என்பது இதற்கு உதவும். :-)


ன்று உறவுகளிலும் மரியாதை என்பதும் நிறைய மாற்றம் கண்டிருக்கிறது. ஒரு காலம்வரை ஒருவழிப்பாதையாக மட்டுமே இருந்துவந்த மரியாதை, இருவழிப்பாதையாக மாறியிருப்பது  “காலத்தின் கட்டாயம்”!!!

அத்தை-மாமா மட்டுமல்ல, மாமனார்-மாமியாரும்கூட,  அங்கிள்-ஆண்ட்டி என்று ஆகிப்போனது, அவர்களுக்கும் நமக்குமான நெருக்கத்தைக் குறைத்து விட்டதுபோலவே உணர்கிறேன். 

அதே சமயம், ஆண்பிள்ளையானாலும், தொடாமல் இரண்டடி தள்ளி நின்றே,
“அப்பா” என்றழைத்து, கண்டிப்புடன்கூடிய அன்பைத் தம் தந்தையிடம் அன்று பெற்றுக்கொண்ட ”இன்றைய” அப்பாக்களை, “Dad” என்றழைத்தவாறு இளம்பெண்கள்கூட தோள்மீது கைபோட்டுப் பேசும்போது இருவருக்குமிடையில் பாசம் கொஞ்சம் அதிகம்போலத்தான் தெரிகிறது.
 

’ப்ராணநாதா’, ‘ஸ்வாமி’ களில் பதிபக்தியோடு ஆரம்பித்து, அத்தான், மாமா, மச்சான் என்றெல்லாம் பாசமிகு சதி-பதியாகப் பயணித்தாலும், ‘என்னாங்க’, ‘இந்தாங்க’வையும் விட்டுவிடாது ‘ஏங்க’வும் வைத்து நட்புணர்வு பெருகச்செய்து,  பின்னர் 90-களில் பெண்கள், கணவரைப் பெயர் சொல்லி அழைப்பதில் அதிக நெருக்கத்தை உணர்ந்ததுபோல, இக்காலத்து மங்கையர் கணவனை “டேய்” என அழைப்பதில் அன்பு அதிகரிக்கக் காண்கிறார்கள்போல.

நம் தலைமுறையினர், கண்டபொழுதிலெல்லாம் “குட் மார்னிங் மிஸ்” என்று ஆசிரியர்கள்முன் கைகட்டி நின்றபோது, அங்கு மரியாதையைவிட பயமே அதிகம் இருந்தது. இன்றோ, ”ஹாய் மிஸ்” என்று அழைப்பதையும், நண்பர்கள்போல ஜோக் அடித்துப் பேசிக்கொள்வதையும் நாம் வாய்பிளந்து பார்த்தாலும், கூடவே பொறாமையும் வரத்தான் செய்கிறது.


மாறிவரும் உலகில், மரியாதை என்பதன் வரையறையும் மாறிவிட்டது.  சிலருக்கு அது ”மரியாதை மனசிலயாவது இருந்தாச் சரிதான்” என்று புலம்ப வைக்கும். சிலருக்கு “மரியாதை மனசில் மட்டும் இருந்தாப் போதும்” என்று சொல்ல வைக்கும்.

Post Comment

பெண்ணுரிமைப் புலிகள்




வெகுநாளைக்குப் பிறகு - மாதங்களுக்குப் பிறகு என்றுதான் சொல்லவேண்டும் - கலாவைச் சந்திக்கிறேன். அவளிடம் என்னவோ வித்தியாசமாகத் தெரிகிறது, ஆனால் என்னவென்று சட்டென்று பிடிபடவில்லை. அவளோ ”அக்கா, அக்கா” என்று ஆர்வமாகப் பேசிக்கொண்டே இருக்கிறாள்.  என் எண்ணத்தை ஓடவிட்டுக்கொண்டே, அவளிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன். 

பேசிமுடித்ததும், அவள் சுடிதார் துப்பட்டாவைச் சரிசெய்தவாறே.. ஆ.. சுடிதார்.. எப்பவும் சேலையில் மட்டுமே பார்த்த கலா இப்போ சுடிதாரில்!!”இப்போ சுடிதார் போடத் தொடங்கியாச்சா? வெரிகுட்!!” என்றேன். புன்னகைத்தவாறே விடைபெற்றாள்.  “அக்கா, இவருக்கு சுடிதார், நைட்டி எதுவும் பிடிக்காதாம். சேலைதான் கட்டிக்கணும்னு சொல்றார். எனக்குச் சேலைன்னாலே பிடிக்காது. இதவச்சே பெரிய்ய சண்டை வருது” என்று முன்பு புலம்பியது நினைவுக்கு வந்தது.

”ஊருலகத்துல ஹஸ்பெண்ட் வைஃபுக்குள்ள என்னென்னவோ பிரச்னைகள் வருது. பேப்பர் வாசிக்கிறீங்கள்ல? அதெல்லாம் பார்க்கும்போது சேல கட்டிக்கச் சொல்றதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை கலா. உங்களவரை ஒரு ஃப்ரெண்டா நினைச்சுக்கோங்க. உங்க டியர் ப்ரெண்ட் கேட்டாச் செய்யமாட்டீங்களா? அப்புறம் கொஞ்ச நாள்ல அவரும் புரிஞ்சுகிட்டு மாறிடுவார்” என்றதற்கு, “என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொன்னப்போ, எல்லாருமே இப்பவே அவர் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டினா, அப்றம் உன் பேச்சே எடுபடாதுன்னாங்க. நீங்கதான் முதமுதல்ல வேற மாதிரி சொல்றீங்க”  என்று பதிலளிக்கும்போது அவள் முகத்தில் இருந்த பலத்த சிந்தனை நன்றாக நினைவிருக்கிறது. அதன்பிறகு அவளை இப்போதான் பார்க்கிறேன்.

ரஹீமாவும் இப்படித்தான் சொன்னாள். புதிதாய்த் திருமணமாகி அமீரகம் வந்தபோது அளவிலா மகிழ்ச்சியோடுதான் வந்தாள்.  பின்னர், வெளிநாட்டு வாழ்வுக்கேயுரிய இயல்பான தனிமையில் துவங்கியது பிரச்னை. கணவரின் நீண்ட வேலைநேரம் காரணமாய்,  தனிமை வாட்டத்துவங்கிய போது, புதுவாழ்வு சலிக்க ஆரம்பித்தது.  தொடங்கிய  சண்டை சச்சரவுகள் கொஞ்சம் சீரியஸாகி, அவள் ஊருக்குச் செல்லப் போவதாக என்னிடம் சொன்னபோது,”எவ்வளவோ பெண்கள், வெளிநாடுகளில் வேலைபார்க்கும் தம் கணவரின் நிதிநிலைமை அல்லது குடும்பச்சூழ்நிலை இடம்கொடுக்காததால் வருடக்கணக்கில் பிரிந்து இருக்கிறார்கள்.  ஆனால், உங்களுக்கு இறைவனருளால் இந்தப் பாக்கியம் கிடைத்திருக்கிறது.   தனிமையை வெல்வதொன்றும் பெரிய விஷயமில்லை. இதற்காக ஊருக்குச் செல்வதென்பது முட்டாள்தனம்.  மேலும் அங்கும் பேனைப் பெருமாளாக்கும் சிலரால் பிரிவு பிளவாகலாம்” என்றபோது “ஊருல நான் இங்க கிளம்பும்போதே நிறையப் பேர் போர் அடிக்குமேன்னுதான் சொன்னாங்க.  இபபவும் நாங்கதான் அப்பவே சொன்னோமேன்னு சொல்றாங்க.  நீங்க ஒருத்தர்தான் இப்படிச் சொல்லிருக்கீங்க.” என்றாள். எனினும் கிட்டத்தட்ட 12 வருடங்கள் அமீரகத்தில் இருந்துவிட்டு, தற்போது அவள் ஆசைப்படியே கணவரோடே இந்தியா போய் செட்டிலாகிவிட்டாள்!!

(இதெல்லாம் ஒரு பிரச்னையா என்று கேட்பவர்கள், சிநேகா-சேரன் நடித்த “பிரிவோம் சந்திப்போம்” படத்தைப் பார்க்கக் கேட்டுக்கொள்கிறேன். )

இதற்கு நேரெதிர் நிலை ஃபௌஸியாவினது. மாமியாரின் தலையீடு காரணமாய் திருமணமாகிச் சில வருடங்கள் கழித்தே கணவனுடன் அமீரகம் வந்து குடித்தனம் செய்ய முடிந்தது.  இப்போது மாமியார் இங்கு வரப்போகிறாராம். வந்தபின், மகனை எதெற்கெல்லாம் தூண்டிவிடுவாரோ என்ற பயம் அவளுக்கு. பொதுவாகவே ஆண்களுக்குள்ள குணம், கல்யாணம் வரை அம்மாவை அலட்சியப்படுத்தியதற்கான பிராயசித்தமாகக் கருதிக்கொண்டு, கல்யாணத்திற்குப் பின் மனைவியை அலட்சியப்படுத்துவது!! அதைப் புரிந்துகொள்ளாத சில பெண்கள் சரியாகக் கையாளத் தெரியாமல் குழம்(ப்)பிவிடுகிறார்கள்.  அப்படியிருந்த ஃபௌஸியாவிடம் “அதுக்கேன் பயப்படுறீங்க? வரட்டுமே! நினைச்சாலும் வீண் செலவுகள் செய்யமுடியாதபடி, நீங்க இங்கே குழந்தைகளோட இப்பிடி ஒரு குருவிக்கூட்டுல, அதுவும் கட்டுசெட்டா (சிக்கனமாக) இருக்கீங்கன்றதைப் பார்த்துப் பாராட்டிட்டுத்தான் போவாங்க பாருங்க.” என்று நம்பிக்கை கொடுத்தேன்.  வெளிநாடு வரும் அநேக மாமியார்கள் இந்தியா திரும்பிச் செல்லும்போது தவறாமல் சொல்லிச் செல்வது தான்!!

விவாகரத்தின் விளிம்பில் நின்ற சஜினாவிடம் பேசியதுதான் மறக்கமுடியாது. “என் சிரமங்களையெல்லாம் சொல்லிட்டேன். கஷ்டம்தான்னு ஒத்துக்கிறீங்க. ஆனா, விவாகரத்து செய்யப் போறேன்னு சொன்னா மட்டும் அவசரப்படாதே, யோசிக்கலாம், பேசிக்கலாம்னு சொல்றீங்களே” என்று புலம்பினாள். உண்மைதான். துயரங்களிலிருந்து விடுபடட்டுமே என்று தோன்றினாலும், பிரிந்துவிடும்படி மனதாரச் சொல்லமுடியவில்லை. எப்படியாவது இருவரும் மனம்மாறி ஒன்றுசேர்ந்துவிடமாட்டார்களா என்றுதான் இருந்தது. பிரிப்பது மிகச்சுலபம். “உனக்கென்ன, சொந்தக் காலில் நிற்கிறாய். பெற்றோர் ஆதரவும் இருக்கு, அப்புறமென்ன” என்று ஒருவரி போதும் அதற்கு.  பின், நீதிமன்றம் வரை துணைக்குப் போகலாம். அதன்பின்னான வாழ்வை அவர்களல்லவா தனியே, அதுவும் குழந்தைகளோடு, எதிர்கொள்ளவேண்டும்?

விரும்பியபடியே, ஆனால் எதிர்பார்க்கவே இல்லாமல், ஒருசில லீகல் கவுன்சிலிங்குகளின் பின்னர் இப்போது சஜினாவும் கணவரும் இணைந்துவாழ்கிறார்கள்.  இது இன்னுமொரு படிப்பினை எனக்கு.

ஒருமுறை நெருங்கிய உறவினப் பெண்ணின் கணவர் ஃபோன் செய்து தன் மனைவியைக் குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.  எல்லாம் கேட்டபின், அவரிடம் இப்பிடியிப்பிடி நடந்து பாருங்களேன் என்று ஆலோசனை கூறியபோது, வைத்தாரே ஒரு குற்றச்சாட்டு!! “அவ உங்க சொந்தக்காரிங்கிறதனாலத்தானே அவளைக் குத்தம் சொல்லாமே, நாந்தான் திருந்தணும்னு சொல்றீங்க?” என்று எகிறினார். இது பரவால்லை, உறவு என்பதால் குற்றமானது. சிலர், நீங்களும் பெண் என்பதால் பெண்களை விட்டுக்கொடுக்கவேமாட்டீங்களே என்பார்கள்.

அவரிடம் “ஏற்கனவே நீங்க கோவமா இருக்கும்போது, அவ செய்றது தப்புதான்னு உங்ககிட்ட சொன்னா உங்களுக்கு வெறுப்புகூடித்தான் போகுமே  தவிர குறையாது. அது பிரச்னையத் தீர்க்கவும் செய்யாது. அதனாலத்தான், அவ இப்படி நடந்துக்கிறதுக்கு என்ன காரணமா இருக்கும்னு என் பார்வையில் யோசிச்சு, உங்களைக் கொஞ்சம் மாத்திக்கச் சொல்றேன். உங்க தவறுகளை உங்ககிட்டதான் சொல்லணும். உங்க வைஃப்கிட்டதான் அவ எப்படியிருக்கணும்னு சொல்லமுடியும். அவங்கவங்க தப்பு அவங்களுக்குத் தெரியாது, வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்குத்தான் தெரியும்.” என்று விளக்கியபிறகு அமைதியானார்.

இதுவே அவளிடம் பேசியபோது, “நீ பெரூசா பெண்ணுரிமை, பெண்ணீயமுன்னெல்லாம் பேசுற. ஆனா, இப்போ என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கோன்னு சொல்றே. பேச்சுல புலி, வீட்டுல எலிதானா நீயும்!!” என்று கிண்டல் செய்தாள்!! அடிப்பாவி, பெண்ணுரிமை பேசினால், பாயும் புலியாய்தான் எப்போதும் இருக்க வேண்டுமா? சூழ்நிலைக்கேற்ப “பதுங்கும்” புலியாகவும் அவ்வப்போது இருந்தால்தான் ராஜாவான ‘சிங்கமும்’ அடங்கும் என்று அவள்பாணியிலேயே விளக்கினேன்.

பெண்ணுரிமைகள் காப்பதற்கு புலியாகவோ, சிங்கமாகவோத்தான் இருக்கவேண்டும் என்றில்லை.  அல்லது கொடிபிடித்து, போராட்டம் நடத்தினால்தான் பெண்ணுரிமை காக்கிறோம் என்றும் பொருளில்லை. அதுவெல்லாம் இல்லாமல், எத்தனையோ அக்காக்கள், மாமிகள் வீட்டிலேயேயிருந்தாலும், உள்ளார்ந்த அன்போடு தக்க அறிவுரைகொடுத்து வழிகாட்டுகிறார்கள். இணைந்துவாழ்வதே நன்மை என்று, புதுவாழ்வெனும் சக்கரசுழற்சியில் தோன்றும் சின்னச்சின்னப் பொறிகளை அணைத்து விடுபவர்களாயிருக்கிறார்கள். 

சின்னப் பொறிகள்தானே பெருநெருப்பின் தொடக்கம்? அந்தப் பொறியை, ‘விட்டுக்கொடுத்தல்’ என்ற நீரைத் தெளித்து ஆரம்பத்திலேயே அணைத்துவிட்டால், சிறு புகையோடு தப்பித்துவிடலாம். விட்டுக் கொடுத்தல் என்றால் தங்கள் உரிமைகளையோ, சுயமரியாதையையோ விட்டுக் கொடுப்பதல்ல;  ’ஈகோ’வை விட்டுவிடுதல் மட்டுமே.  உரிமைகளை விட்டும்விடாமல், பறிக்கவும் அவசியப் படாமல், வேண்டிய இடத்தில், தக்க நேரத்தில் பெண்ணுக்குத் தானே கிடைக்கும்படியான வாழ்க்கையை வழிகாட்டும் இவர்களெல்லாம் தங்களைப் பெண்ணுரிமைப் புலிகள் என்று பெயரிட்டுக் கொள்வதுமில்லை.

Post Comment

துபாய் ரொம்ப சீப்!!





இந்தியா போகும்போது ரொம்பப் பயந்த (எல்லாரும் பயங்காட்டுன) விஷயம் மின்சாரத் தடை. கஷ்டத்தை எதிர்பார்த்தே போனதால், பெருங்கஷ்டமாத் தெரியலை. சமையலறையில் மட்டும் - கரண்ட் இருந்தாலும், இல்லாவிட்டாலும்- வியர்க்கத்தான் செய்கிறது. வீட்டில் இன்வர்ட்டர் இல்லை என்பதால் வாடகைக்கு எடுத்து வைத்துக் கொண்டோம். ஆனால், அதுவும் கடைசி நாட்களில் கொஞ்சம் அதிகமாகப் பயன்படுத்த வேண்டிவந்ததால் உயிர் ஊசலாடும் நிலைமைக்குப் போய்விட்டது.

only4funny.blogspot.com
இன்வர்ட்டரில் ஒருமுறை முழுமையாக சார்ஜ் இறங்கிவிட்டதென்றால், பின்னர் 12 மணிநேரம் தொடர்ச்சியாக சார்ஜ் ஏற்றினால்தான் சரியாக வேலை செய்யுமாம். இருக்கும் கரெண்ட்கட்டில் 12 மணி நேரம் எப்படி சார்ஜ் செய்வது? அந்த கம்பெனிக்காரர்களிடம் சொன்னால், எடுத்துக் கொண்டுபோய் (ஜெனரேட்டர் மூலம்) சார்ஜ் செய்து தருவார்கள்.

மின்சாரப் பற்றாக்குறை ஒருபக்கம் என்றால், சமையல் கேஸ் பற்றாக்குறை இன்னொரு பக்கம். அதற்காக, இண்டக்‌ஷன் அடுப்பு வாங்கிவைத்து, “நேரங்காலம்” பார்த்து, சமைக்கிறார்கள் மக்கள்!!

இந்த வெயில் காலத்திலும் கொசுக்கள் தாராளமாக இருக்கின்றன என்பது ஆச்சர்யம்!!

பாண்டிச்சேரி போயிருந்தேன்.   கரண்ட் கட் இல்லை; வியர்வை இல்லை... ஹூம், கொடுத்துவச்ச மக்கள்ஸ்.


தமிழகத்தில் இன்னும் பல குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இல்லை. அதனால் போர் தண்ணியையே குடித்து வந்தனர். இம்முறை அநேகமாக எல்லா வீடுகளிலும் ஒரு "RO plant with filter" (உப்புநீரை குடிநீராக்கிச் சுத்திகரிக்கும் மெஷின்) இருக்கிறது. விலையும் 12,000 ரூபாயதான்; பராமரிப்பும் வருடத்திற்கொருமுறை மட்டுமே என்பதால் யாரும் கார்ப்பரேஷன் தண்ணீர் குறித்துக் கவலைப்படுவதில்லை!!


அதேபோல பாரபட்சமில்லாமல் எல்லா மக்களிடமும் இருக்கும் கண்டிப்பாக இருக்கும் இன்னொரு பொருள் - டார்ச்!! வெளியே செல்லும் எல்லாரும் ஒரு சிறிய பென் டார்ச் கொண்டுசெல்லத் தவறுவதில்லை. ”எவரெடி” காலம் திரும்புகிறது!!

மதுரை திருமலைநாயக்கர் மஹாலில் நடைபெறும் “ஒலி - ஒளி காட்சி” பார்க்கப் போயிருந்தோம். பல வருடங்களாய் மதுரையில் இருக்கும்  நண்பர்களிடம் கேட்டபோது ”பார்த்ததில்லை” என்றார்கள்!! ம்ம்ம்... முற்றத்து மல்லிகைக்கு வாசமில்லை!!




 வெளிநாடுகளில் “ஒலி-ஒளி” காட்சிகளைப் பார்த்தபின், இது ரொம்ப சிம்பிளாகத்தான் தெரிகிறது. இருந்தாலும் பார்க்கலாம். காட்சிக்கேற்றபடி நகரும் ஒளி அமைப்புகள் வித்தியாசம். ஒலியோடு, ஒளியாலான உருவ அமைப்புகளும் இருந்திருந்தால் (animation போல) இன்னும் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்.

ஒலி-ஒளி காட்சியின்போது பிரகாசிக்கும் மஹால்
திருமலை நாயக்கரின் காலத்தில் நடந்த சில நிகழ்வுகளை “ஒலி”யாக தகுந்த இசையோடு விவரிக்கிறார்கள். நாங்கள் பார்த்தது ஆங்கிலக் காட்சி. அவ்வளவாக இனிமையாயில்லை. தமிழ்க் காட்சி பார்த்திருந்தால் நன்றாக ரசித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆரம்பத்தில் நிறைந்திருந்த பார்வையாளர் அரங்கம், ஆங்கிலத்தில் வர்ணனை ஆரம்பித்ததும் மெல்ல மெல்லக் காலியாகியே விட்டது!!


இக்காட்சி நடப்பது நாயக்கர் அரண்மனையின் தர்பார் ஹாலில். அருகிலேயே உள்ள அரண்மனையையும் சுற்றிப் பார்க்கலாம். ஆனால், மாலை ஐந்து மணி வரை மட்டுமே அதற்கு அனுமதி. ஒலி-ஒளி காட்சிகள் 7 மணிக்குத் துவங்கும்.
மேலதிகத் தகவலுக்கு: http://www.maduraidirectory.com/palace/sl.php


வழக்கம்போல ”பைக்”குகள் ராஜ்யம்தான் நாட்டில். ஏப்ரல் வெயிலில் நானும் என்னவரோடு பைக்கில் சுற்ற வேண்டியிருந்த போது,   ஒரு கடைக்குப் போயிட்டு வந்து வெயிலில் நிற்கும் பைக்கில் உக்கார முடியல.. சீட் கொதிக்குது.... “ஹெல்மெட் மாதிரி, பைக் சீட்டுக்கும் ஒரு தெர்மோகோல் கவர் செஞ்சு வச்சுக்கணும்” என்று தோன்றியது.  உடல்நலத்தைப் பாதிக்கும் விஷயம் என்பதால் பைக்கிலேயே சுற்றும் மக்கள் யோசிக்கவும்.

என்னவரிடம் இதைச் சொன்னபோது, “இதுக்கே இப்படியா? அபுதாபியின் கோடைக்குமுன் இது ஒன்றுமேயில்லை. எப்படியோ எங்க (ஆண்களின்) கஷ்டம் புரிஞ்சாச் சரி” என்றார். அபுதாபி சம்மரில் காரினுள் இதுபோல அனலாக இருக்கும். ஸ்டீரிங்கைக் கூடத் தொடமுடியாது. ஏஸியை ஆன் செய்தாலும், கார் குளிர வெகுநேரம் எடுக்கும்.

இரு புதிய நாகர்கோவில்/கேரளா ஸ்பெஷல் பழவகைகள் உண்ணக் கிடைத்தன. ஒன்று, அயினிச் சக்கை; மற்றது “ஜம்பக்கா”!! யாரக்கா? ஜம்பக்கா..




மேலே படத்தில் இருப்பது அயினிச் சக்கை. இது பலாப்பழ வகையைச் சேர்ந்தது. பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட  ஒரு மினி பழாப்பழம் போலவே, ஆனால் ஆப்பிள் சைஸில் இருக்கும். பலாப்பழத்தின் “மைக்ரோ-மினி” வடிவம் என்றுகூடச் சொல்லலாம். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை.

ஜம்பக்கா(ய்), பார்க்க அழகாய் இருக்கிறது. முழுதாக அப்படியே கடித்துச் சாப்பிடவேண்டியதுதான். ஆனால், இனிப்பே இல்லாமல், துவர்ப்பாய் இருக்கும் என்பதால் தொடர்ந்து சாப்பிட ஆசை வராது.  Looks deceive!! :-D

 
ஆங்கிலத்தில் Wax apple என்று பெயர். சில மனிதர்களைப் போல, தோற்றத்தில் ஜம்பமாக இருந்து, உள்ளே சுவையில்லாமல் இருப்பதால்தான் இதுக்கு “ஜம்பக்காய்” என்று பேர் வந்ததோ? 


மகன்களுக்கு வெள்ளியில் மோதிரம் வாங்க நகைக்கடைக்குப் போயிருந்தேன். அங்கேதான் ’பகல்கொள்ளை’  என்றால் என்னவென்று புரிந்தது. 3 கிராம் எடையுள்ள மோதிரத்திற்கு சேதாரம் 2.5 கிராம் எனச் சொன்னார்கள்!!  பேசியதும் கொஞ்சம் (மட்டும்)  குறைத்தார்கள்.

அதே கடையில், ஒரு நடுத்தரக் குடும்பம், நகைச்சீட்டில் சேர்ந்திருந்த பணத்திற்கு நகை வாங்க வந்திருந்தார்கள். நகைச்சீட்டில் உள்ள பணத்திற்கு ஏற்றபடி, ஒரு சிறிய வெள்ளி டம்ளர் தேர்ந்தெடுத்து பில் போடச் சொன்னார்கள். (ரூ. 2000+)  உடன்வந்திருந்த மகளின் கல்யாணத்திற்காயிருக்கும்போல. அந்த மகளோ, “ரெண்டா வாங்கினாத்தான் என்னவாம்?” என்று அம்மாவைக் கேட்டுக் கொண்டிருந்தாள்!! அதுவல்ல விஷயம்.

நகைச்சீட்டு சேரும்போது செய்கூலி, சேதாரம் கிடையாது என்று சொன்னார்களாம். இப்போது எவ்வளவு நகை வாங்கினாலும் - தங்கமோ, வெள்ளியோ - எவ்வளவு வாங்கினாலும்,  அதில் 0.850 மில்லிகிராமுக்கு மட்டுமே செய்கூலி கிடையாது; மீதி நகைக்கு செய்கூலி உண்டு என்றார்கள்!!  ஒரு கிராம் கூட இல்லை, வெறும் 0.850 மில்லிகிராம்!! அந்தக் குடும்பத்தலைவர் வெறுத்துப்போய் ஒன்றும் வாங்காமலே கிளம்பிவிட்டார். ஏப்ரல், மே கல்யாண சீஸன் என்பதால், கடையில் கூட்டம் அலைமோதிக் கொண்டுதான் இருந்தது.

ரயில் - சாலைப் பயணங்கள்...  வழக்கம்போலத்தான். சாலைப் பயணங்கள் தற்போது விரைவாகவும், சுகமாகவும் இருந்தாலும், பயமாக இருக்கிறது. அதற்காக ரயிலில் போனால், சர்வம் அழுக்கு மயம்!!

ஒரு ரயில்பயணத்தில், நடு இரவில்  “குடிமகன்” ஒருவன் செய்த அலம்பலில் பயணிகள் எரிச்சலடைய, டி.டி.ஆர். அவரை அவரது சீட்டுக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து,  ”இதுதான் உங்க இடம். இங்கேதான் இருக்கணும். வேற எங்கயும் போகக்கூடாது. சரியா?” என்று மிகப் பவ்யமாகப் பேசினார்!! அரசு ஊழியர், அதுவும் மத்திய அரசு ஊழியர் இவ்வளவு பணிவாகப் பேசியது ஆச்சர்யம்தான். ஆனாலும் ஒரு குடிகாரனிடம்போய் இந்தப் பணிவு தேவையா என்றும் கோபம் வந்தது. ஒருவேளை கோவப்பட்டிருந்தால் அவன் இன்னும் அதிகம் கலாட்டா செய்திருக்கலாம் என்று பொறுமையாப் பேசினாரோ என்னவோ.

அடுத்த ஸ்டேஷனில் வேறொருவர் வந்து அந்த குடிமகனின் சீட்டைத் தன் இடம் என்று சொல்ல, டிடிஆர் செக் செய்து பார்த்தால், குடிமகன் இருப்பது சரியான சீட் எண்தான்; ஆனால் ‘கம்பார்ட்மெண்ட்’ நம்பர்தான் வேறே!!


சமச்சீர் கல்வி பத்தாம் வகுப்பு புத்தகங்கள் பார்த்தேன். நல்லா இருக்கு. Monotone-ஆக இல்லாமல், தியரி, செய்முறை விளக்கம், டிப்ஸ், புதிர் என்று கலர் கலர் கட்டமாக, பார்க்கும்போதே படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது (- பெற்றோர்களுக்கு!!).  ஒரு மாணவியிடம் (உறவினர் மகள் ) கேட்டபோது, வெறுமே மனப்பாடம் செய்ய முடியாது, புரிந்தால்தான் படிக்க முடியும், அதுவும் அறிவியலில், தியரியாக இல்லாமல், ப்ராக்டிக்கலாக தியரியை அப்ளை செய்து தீர்க்கும் முறையில் பாடங்கள் இருக்கின்றன என்று சொன்னாள்.

தமிழ்ப் பாடத்தில், கொடுக்கப்படும் தலைப்புக்குக் கவிதைகூட எழுதணுமாம். ரொம்பக் கடினமா இருக்குன்னு சொன்னாள். ஒரு பதிவரா இருந்துட்டு கவிதை எழுதத் தெரியலைன்னு சொல்றதைக் கேட்டுட்டுச் சும்மா இருக்க முடியுமா? கவிதை எழுதுவதற்கு எளிய வழி சொல்லிக் கொடுத்துவிட்டு வந்தேன். ஹி.. ஹி.. அதான் “எண்டர் தட்டுறது”!!

  பள்ளிகள் கட்டணம் இன்னும் பயமுறுத்துவதாகத்தான் இருக்கின்றன. இங்கிருக்கும் ஒரு நண்பர், தம் மூன்று பிள்ளைகளையும் இந்தியாவில் பள்ளியில் சேர்க்கலாம் என்று நினைத்திருந்தவர், எண்ணத்தை மாற்றிக் கொண்டார். மூன்று பேருக்கும் பள்ளி கட்டணம், பேருந்து கட்டணம், வீட்டுச் செலவுகள் எல்லாமே அமீரகம் போலத்தான் இருக்கின்றது. மேலும் டொனேஷனாகப் பெருந்தொகை வேறு கொடுக்க வேண்டும். எல்லாம் கணக்கிட்டுப் பார்க்கும்போது, பள்ளிப் படிப்பு இங்கு முடித்துவிட்டு, கல்லூரிப் படிப்புக்கு இந்தியா போவதே நல்லது என்று முடிவெடுத்துவிட்டார்.

துபாய்த் தோழியின் தம்பி, சென்னைவாசி. துபாய்க்குச் சுற்றுலா வந்திருந்தவன், “அக்கா, சென்னையைவிட துபாய் சீப்பாகத் தெரிகிறதே!!” என்று சொன்னானாம்.  ஒவ்வொருமுறை இந்தியா போய் வரும்போதும் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது!!

Post Comment

திறப்புவிழா






ஸ்ஸப்பா... வருஷா வருஷம் இது ஒரு வேலையாப் போச்சு. நம்மூர்ல போகிப் பொங்கலுக்கு இதைச் செய்வாங்க. நான் வருஷத்துக்கொருவாட்டி ஊருக்குப் போகும்போதெல்லாம் இதைச் செய்யவேண்டி இருக்கு...

என்னன்னு சொல்லாமலே புலம்பிகிட்டிருக்கேன் பாத்தீங்களா.. என் ரங்க்ஸும் இதத்தான் சொல்வாரு. முதல்ல விஷயத்தைச் சொல்லிட்டு அப்புறம் புலம்புன்னு. அப்படின்னா அவரும் கரெக்டாத்தான் சொல்லிருக்காரு போல.. நாந்தான் உடனே அதுக்கும் கூட நாலு புலம்பல் சேர்த்துப் புலம்புவேன்.

சரி..சரி.. நீங்களும் டென்ஷனாகாதீங்க..  வேறென்னங்க.. வருஷா வருஷம் லீவுல ஊருக்குப் போறோம்னு ஒருவார்த்தையில சொல்லிட்டுக் கிளம்பிடுறோம். ஆனா, அந்த ஒரு வார்த்தைக்குப் பின்னாடி எம்புட்டு வேலை இருக்கு தெரியுமா? கிளம்புற ஒரு மாசத்துக்கு மின்னயே அரிசி, பருப்பு, புளின்னு மளிகைகளை எல்லாம் கணக்குப் பாத்துச் செலவு பண்ணிக் காலி பண்ணிடனும். ஃப்ரிட்ஜிலயும் காய்கறிகளோட பட்டர், ஜாம், சாஸ்,சீஸ் எல்லாத்தையும்  காலி பண்ணனும். அதுவும் எப்படின்னா, கரெக்டா கடைசி நாள்தான் எல்லாம் காலியாகிற மாதிரி பாத்துக்கணும். கடைசி நாள் சிம்பிளாவாவது சமைக்கவேண்டாமா பின்ன? (யாரது.. தினமுமே என் சமையல் சிம்பிள்தானே நக்கலடிக்கிறது..)

அப்புறம் பேப்பர், ஃபோன், தண்ணி கட் பண்றதுக்கு ஃபோன் பண்ணியாச்சான்னு ரங்க்ஸை நச்சரிக்கணும்.. கிச்சன்ல அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர் முதல் ஹால் ஃபர்னிச்சர் - ஸோஃபா, டைனிங் டேபிள், சேர், கம்ப்யூட்டர்+டேபிள் போன்ற எல்லாத்தையும் தூசி அடையாம இருக்க பெட்ஷீட் அல்லது பேப்பர் போட்டு மூடணும். இடையில் ஊருக்குப் போற ஷாப்பிங், பேக்கிங்.. நடுவுல பசங்க பரிட்சை, ஹோம் வர்க்.. இதுல குக்கிங்கும் செய்யணும்...  கதவு, ஏஸி, ஜன்னல்னு காத்துல தூசி வீட்டுக்குள்ள வர்ற வழிகளை டைட்டா மூடி/பேப்பர் வச்சு அடைக்கணும்.

இருந்தாலும் ஒரு பத்து நாளைக்கொரு தரம் வீட்டைத் திறந்து பாத்துக்கச் சொல்லி யார்கிட்டயாவது பொறுப்பாச் சாவி கொடுக்கணும். நட்புகள், உறவுகள்னு எல்லார்கிட்டயும் ஊருக்குப் போறேன்/வர்றேன்னு தகவல் சொல்லணும். செடிகளுக்குத் தண்ணி ஊத்த ஆள் ஏற்பாடு பண்ணனும். அந்த ஆள் தவறாம வர்றாரான்னு கவனிச்சுக்க இன்னொரு ஆள்கிட்டச் சொல்லி (alternative) வைக்கணும்... என்னது இதுக்கே “ஸ்ஸப்பா”ங்கிறீங்க..



இப்ப ஊருக்குப் போயாச்சு. அப்பாடான்னு மூச்சு விடாதீங்க.. அங்க பூட்டிக் கிடக்கிற வீட்டைத் திறந்து ”திறப்பு விழா”  நடத்தணும்.. அதாங்க.. சுத்தம் செய்யணும். அவ்வ்வ்வ்...  பேப்பர், பால், தண்ணி, வேலைக்காரர் எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணனும்.  சமையலுக்கு இங்க போட்ட மாதிரியே ஒரு ஸ்பூன் மிளகாய்ப் பொடியைப் போட்டுட்டு, “அச்சச்சோ, காரம் கூடிப் போச்சே”ன்னு மாமியார்கிட்டே அசடு வழியணும்... ஒரு வழியா “கை திருந்தி” சமைக்க ஆரம்பிக்கும்போது லீவு முடியும். மறுபடி எல்லாம் ஏறக்கட்டி,  காலி பண்ணி...  கிளம்பி இங்க வந்து... ”இனிமே யாராவது லீவுல ஊருக்குப் போணும்னு சொல்லிப் பாருங்க”ன்னு புலம்பிகிட்டே இங்க மறுபடி எல்லாத்துக்கும் ”திறப்பு விழா” நடத்தி...

அதெங்கே..? ‘பிரசவ வைராக்கியம்’ மாதிரி அடுத்த மாசமே, “இன்ஷா அல்லாஹ் அடுத்த வாட்டி ஊருக்குப் போகும்போது...”ன்னு ஆரம்பிக்கிறது வேற யாரு.. நானேதான்... ஹூம்...

இதெல்லாம் போறாதுன்னு இப்ப ஒரு மூணு வருஷமா இன்னொன்னுக்கும் சேத்து மூடு விழா/ திறப்புவிழா நடத்த வேண்டியிருக்கு. என்னன்னு கண்டுபிடிங்க பாப்போம்..  ஆமாம், “வலைப்பூ”வுக்குத்தான்!!

ஊருக்குப் போயாச்சு, வந்தாச்சு.. அப்புறமென்ன... வழக்கம்போல அடுத்த பதிவு “India Special Edition"தான்!!

Post Comment