என்ன, “தென்றல் புயலாகிறது”, “பூ ஒன்று புயலானது” வரிசையில் சினிமாத் தலைப்புப் போல இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இதுவும் அப்படித்தான், “பொறுத்தது போது பொங்கியெழு” என்று பூமி எரிமலையாகப் பொங்கிய கதைதான்!!
mapsofworld.com
ஐஸ்லாந்து நாடு - கிரீன்லாந்து பக்கத்தில், அட்லாண்டிக் கடலில் இத்தணூண்டு தீவு என்று ஏழு அல்லது எட்டங்கிளாஸில் புவியியலில் படித்திருப்போம். பேரிலிருந்தே தெரிகிறது, முழுதும் ஐஸால் மூடியிருக்கும். இவ்வளவுதான் அதிகப்டசத் தகவல் எனக்கும் தெரியும் ஐஸ்லாந்து குறித்து!! இந்தக் குட்டித் தீவுதான், இப்ப ஐரோப்பாக் கண்டத்தையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது!!
நீரும், நெருப்பும்!!
ஐஸ்லாந்து, பொதுவாகப் பனிப் பிரதேசம் என்றாலும், சில எரிமலைகளையும் உள்ளடக்கியது!! எல்லா எரிமலைகளையும்போல, இவையும் சில சமயம் குழம்பைக் கக்கினாலும், பெரிதும் அமைதியாகவே இருக்கும். இங்குள்ள ”ஐயாஃப்யாத்லாஜோகுத்ல்” (Eyjafjallajokull) என்ற பனி ஆற்றின் (Glacier) அடிவாரத்தில் உள்ள எரிமலை சென்ற புதனன்று (14-ஏப்ரல்) குழம்பைக் கக்க ஆரம்பித்ததில் ஏற்பட்ட புகைமண்டலம் ஏற்படுத்தும் பாதிப்புத்தான் ஐரோப்பாவை ஸ்தம்பிக்க வைத்துள்ளது!!
bbcnewscom
இந்த எரிமலைக் குழம்பினால் ஏற்பட்ட புகைமண்டலம், ஐஸ்லாந்தில் தரைவழிப்போக்குவரத்தைத் தடை செய்ததோடல்லாமல், வான்வழிப் போக்குவரத்தையும் பாதித்துள்ளது. இது அப்படியே பரவி, பிரிட்டன், செர்மனி, ஃப்ரான்ஸ், டென்மார்க் என்று ஐரோப்பாவின் வளிமண்டலத்திலும் பரவ, ஐரோப்பா முழுவதும் வான்வழிப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது!! இப்போது இப்புகை ரஷ்யாவிலும் பரவத்தொடங்கியுள்ளதாகத் தகவல்!! இந்நாடுகளுக்கு உலக முழுவதுமிருந்தும் விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது!!
இன்றோடு மூன்றாவது நாளாக விமானங்கள் நிறுத்திவைக்கப் பட்டுள்ளதால், நாளொன்றுக்கு 200 மில்லியன் டாலர்கள் விமானத் துறைக்கு மட்டுமே நஷ்டமாகிறது என்றால், அதன் தொடர்புடைய தொழிற்துறைகளுக்கு நஷ்டம் எவ்வளவோ!!
cbsnews.com
ஏன் பறக்கக்கூடாது?
1. புகைமண்டலம், வான்வெளியை அடைத்திருப்பதால், தெளிவான காட்சி (visibility) இருக்காது.
2. புகையினால், வானில் பறக்கும் இரண்டாவது நிமிடமே, மூச்சுமுட்டல் ஏற்படலாம்.
3. எரிமலைக் குழம்பில் கண்ணாடி போன்ற கூரிய பனிக்கட்டித் துகள்களும், தூசி, மண், உலோகத் துகள்களும் கலந்திருப்பதால், அவை விமான இஞ்சினில் சென்று அவற்றைச் செயலிழக்கச் செய்யும். மேலும் விமானத்தின் கண்ணாடிகளையும் உடைக்கவோ, சேதப்படுத்தவோ செய்யலாம். (முன்பு சிறிய அளவில் நடந்திருக்கின்றன).
இன்னொரு முக்கியக் காரணம், இம்மாதிரிச் சம்பவம் வரலாற்றில் முன்நடந்திராததால், பாடம்படிக்க முன்அனுபவமும் இல்லை.1783ல் இதேபோல வேறொரு எரிமலையின் புகை 1784 வரை ஐரோப்பாவின்மீது பரவியிருந்ததாகவும், அதனால் தட்பவெப்ப மாறுதலால் பல ஆயிரம் உயிரிழப்பு நேர்ந்ததாகவும் தெரிந்தாலும், வான்வழியில் பாதிப்பு என்னவாக இருக்கும் என்பது அறுதியாக யூகிக்க முடியவில்லை.
ஏற்கனவே, பொருளாதாரத் தாழ்வால் ஆட்டம்கண்டிருக்கும் நிலையில், இன்னுமொரு ரிஸ்க் எடுக்க அவை தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.
என்ன செய்வது?
1. புகைமண்டலம் 20-30,00 அடிஉயரே மட்டும் இருப்பதால், தாழ்நிலையில் (3000 அடி) விமானங்கள் பறக்கலாம். ஆனால், பல நாடுகளும் தாழ்நிலையில் பறப்பதை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறுகாரணங்களுக்காகத் தடை செய்திருக்கின்றன!!
லூஃப்தான்ஸா, கே.எல்.எம். ஆகியவை இம்முறையில் பரிசோதனை ஓட்டங்கள் செய்துவருகின்றன. அவசரத் தேவைகளுக்காக, இராணுவ விமானங்கள் அவ்வாறே தற்போது பறந்துகொண்டிருக்கின்றன. சுவிஸ் நாடு, 36,000 அடிக்கு மேலே பறக்க அனுமதியளித்துள்ளதாம்.
2. புகைமண்டலம் நீங்கும்வரை காத்திருப்பது. இதற்கு எத்தனை நாளாகும் என்று தெரியவில்லை. இந்த எரிமலை தொடர்ச்சியாக ஆறுமாதம் வரை குழம்பைக் கக்கக்கூடும் என்பதால், இதன் பாதிப்பு பெரிய அளவில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
3. மாற்றுவழிகள் - சாலை, ரயில், கடல் வழிப் போக்குவரத்தை நாடுவது. ஆனால், பிரிட்டனிலிருந்து ஆஸ்திரேலியா போகவேண்டியவர் என்ன செய்வார்?
தொடர் விளைவுகள்:
இதுகுறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
1. எரிமலை வெடித்தது, பனிப்பிரதேசம் என்பதால், பனிப்பாறைகளை உருக்கி, வெள்ள அபாயம் ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், (முன் நடந்ததைப் போல) இது தொடரப்போகும் மற்ற எரிமலை வெடிப்புகளுக்கும், பூகம்பங்களுக்கும் அறிகுறி என்றும் சொல்கின்றனர். அதன் விளைவுகள் என்னென்னவோ?
2. எரிமலைக் குழம்பில் வெளிப்படும் ஸல்ஃபர் வாயு, ஹைட்ரோசல்ஃபியூரிக் அமிலமாக மாறக்கூடும் என்றும், அதனால் வளிமண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பொதுவான விளைவு.
3. புகை கீழிறங்கி பூமியின் மேற்பரப்பில் வந்தால், சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம்.
4. ஆனால், இதே எரிமலைக் குழம்பின் அடர்ந்த புகை, வளிமண்டலத்தின் (atmosphere) Stratosphere என்ற மண்டலத்திற்குப் போகும்போது, பூமியைக் குளிரவைக்கும் என்றும், வெப்பமயமாக்குதலைத் தடுக்கும் என்றும் கூறப்பட்டாலும், அதன் (ஓஸோன் பாதிப்பு போன்ற) பின்விளைவுகள் அதிகம் என்பதால், இவை விரும்பத்தக்கவையுமல்ல.
5. ஐஸ்லாந்தின் புவியியல் அமைப்பு, அமெரிக்கன் பூமித்தட்டு (American plate) மற்றும் யுரேஷியன் தட்டு (Eurasian Plate) ஆகியவற்றிற்கு மத்தியில் அமைந்ததால், அதன் ஒவ்வொரு நிகழ்வும் மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
5. ஐஸ்லாந்தின் புவியியல் அமைப்பு, அமெரிக்கன் பூமித்தட்டு (American plate) மற்றும் யுரேஷியன் தட்டு (Eurasian Plate) ஆகியவற்றிற்கு மத்தியில் அமைந்ததால், அதன் ஒவ்வொரு நிகழ்வும் மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடந்த ஒரு சிறு நிகழ்வு, உலகத்தையே ஓரளவு ஸ்தம்பிக்க வைத்துள்ளது என்பது, “உலகம் சுருங்கிவிட்டது” என்ற சொல்லாடலின் அர்த்ததையே மாற்றியமைக்கிறது!!
|
|
Tweet | |||





