Pages

”வட இந்தியாவைவிட தமிழ்நாடு பாதுகாப்பானது...!!!”







ஃபாத்திமாவின் தாயின் இந்தக் கூற்று எத்தனை வலி நிறைந்தது என்று எனக்குத் தெரியும். ஏனெனில் நானும் என் மகனை இதைச் சொல்லித்தான் வட நாட்டில் படிக்க அனுமதி மறுத்தேன்!!

ஐ டி.....  இந்தியப் பெற்றோர்களின் பெருங்கனவு!!  என் பெரியவனையும் இந்தக் கனவோடுதான் வளர்த்தேன். ஐஐடியில் படிப்பு, அரசு வேலை,  இந்தியாவுக்கு சேவை என்று சொல்லிச் சொல்லியே வளர்த்தேன். அவனும் அதிலேயே மனம் கொண்டான்.

ஆனால், சரியாக அவன் கல்லூரி சேரும் சமயத்தில் இந்தியாவில்  பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்தது. வருமுன்பே வெறுப்பை வேரடி வரைப் பரப்பியிருந்தார்கள் என்பதால், மிகுந்த தடுமாற்றம் அவனை இந்தியாவில் சேர்ப்பதா வேண்டாமா என்று.  இப்போது ஃபாத்திமாவின் தாயாருக்கு இருக்கும் அதே பயம்  எனக்கும் - அன்றும் இன்றும்!!  

அவனுக்கு ஐஐடி கிடைக்கவில்லை என்பது அப்போது ஏமாற்றமாக இருந்தாலும், பின்னர் நடந்தவற்றால், நல்லவேளை கிடைக்கலை என்றே தோன்றியது.  முதுகலை படிக்க ஐஐடி போகலாம் என்று நினைப்பவனை நாங்களே இப்போது வேண்டாமென்கிறோம்!!

 JEE தேர்வில், மேற்கு வங்காளத்தில் உள்ள பிரபல கல்லூரியில் அவன் விரும்பிய துறையில் இடம் கிடைத்தது. கட்டணமும் மிகக் குறைவு. ஆனால், மமதாவின் ஆட்சிக்கெதிராக சங் பரிவாரங்கள் அப்போது அதிரடிகள் செய்யத் தொடங்கியிருந்தனர் என்பதால் அனுமதிக்கவில்லை. 

படித்தால் தமிழ் நாட்டில், அதிக பட்சம் தென்னிந்தியாவில். அதுதாண்டி போக வேண்டாம் என்று மறுத்ததால், நிறைய வாதாடினான். உறுதியாக மறுத்து விட்டோம்.  நல்லவேளை தமிழ்நாட்டிலேயே என்.ஐ.டி.யில் இடம் கிடைத்தது. எனக்கு ஓரளவு நிம்மதி.   

இன்றும் அவனுக்கு அந்த வருத்தம் உண்டு. அவ்வப்போது சொல்லிக் காட்டுவான். உன் படிப்பைவிட நீ உயிரோடு இருப்பது எனக்கு முக்கியம் என்பேன். எங்கள் முடிவு சரிதான் என்பது போல, ரோஹித் வெமுலா, நஜீப், கன்ஹையா குமார், உமர் காலித்  என்று பலப்பல சம்பவங்கள் தொடர்ந்த வருடங்களில்....  

என் மகன் எந்த  இயக்கத்திலும் புரட்சி நடவடிக்கைகளிலும் ஈடுபடுபவன் அல்ல.  ஆனால் தொழுவான், தாடி வைத்திருக்கிறான்... இது போதாதா உறுத்தலுக்கு... 

மட்டுமல்ல, மற்ற பெரும்பான்மை பிள்ளைகள் போல அல்லாமல், முகநூல் போராளியின் மகன் என்ற ஆபத்து வேறு அவனுக்கு!! 😅

அவன் படித்த நான்கு வருடங்களும் டென்ஷன்தான்...  ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசு தினம், பாபர் மசூதி தினம், பிள்ளையார் சதுர்த்தி... என ஒவ்வொரு விடுமுறையின்போதும்... தமிழ்நாடு பாதுகாப்பானதுதான் என்ற சூழலும் மெல்ல மாறி வந்த சமயம் அது...   

இப்போது படித்து முடித்து விட்டு, வட இந்தியாவில் வேலை சார்ந்த பயிற்சிக்காக இருக்கிறான்!!   அவனுக்கும்  அவன் வேலைசார் வளர்ச்சி முக்கியமல்லவா? இந்தியாவில்தான் படிப்பு, வேலை என்று சொல்லிச் சொல்லியே வளர்த்தவனைத் திடீரென்று வெளிநாடு போ என்றால்?

சமீபத்திய பிள்ளையார் சதுர்த்தி அன்றும், பாபர் மசூதி தீர்ப்பு அன்றும்  அவனை ரூமை  விட்டு வெளியே வந்து விடாதடா என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். இதுதான் இங்கு எதார்த்த நிலை.  அதனால்தான் எனக்கு ஃபாத்திமாவின் தாயின் வேதனை புரிகிறது!!

ற்கனவே இங்கு கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஒரு “சர்வ அதிகாரம்” பொருந்திய ”சாம்ராஜ்ய சக்கரவர்த்திகள்” போன்ற மனநிலைகளில்தான் இருக்கிறார்கள். அடித்தட்டுகளில் இருந்து வரும் மாணவர்களை ஏளனக் கண்ணோட்டத்துடன்தான் பார்க்கிறார்களே தவிர, அவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி, கை கொடுத்துத் தூக்கிவிடும் உயர்ந்த உள்ளம் அவர்களில் பெரும்பாலோனோர்க்கு இல்லை.  இது குறித்து ஏற்கனவே இரு பதிவுகள் எழுதியுள்ளேன்:

https://hussainamma.blogspot.com/2016/01/blog-post.html
https://hussainamma.blogspot.com/2012/05/blog-post_23.html

அதிலும், சங் பரிவார வளர்ச்சிக்குப் பின்னர், குறிப்பாக, தமிழகத்திலும் அது பள்ளி கல்லூரி அளவில் ஊடுருவிய பின்னர், இந்த மனோபாவம் இன்னமும் விரிந்து கொண்டுதான் போகும். அதன் விளைவுகள்தான் சமீபத்திய தற்கொலைகள்.

கல்லூரி படிப்பு என்பது முன்பு  போல ஜாலியானது அல்ல... கல்லூரி வாழ்க்கையை மாணவர்கள் அனுபவித்தது என்பதெல்லாம் சினிமாவில்தான்... இப்போது மட்டுமல்ல எப்போதுமே அது அதிக ஸ்ட்ரெஸ் கொடுக்கும் வாழ்க்கை.  

வெளிநாடுகளில் கஷ்டமான படிப்பை மட்டுமே சமாளிக்க வேண்டும்.  இந்தியாவிலோ படிப்போடு இது போன்ற அரசியல்களையும் சமாளிக்க வேண்டியிருப்பது நம் மாணவர்களின் துரதிர்ஷ்டம். மன உறுதி, தைரியம் இல்லாத மாணவர்கள் இதை எதிர்கொள்வதில் சிரமப்பட்டு வாழ்வில் தோல்வி அடைய வாய்ப்புண்டு. மன நலப் பிறழ்விற்கும் வாய்ப்புண்டு.

ல்லாம் முடித்து வெளியே வந்தாலும், இயற்கை விவசாயம் செய்பவர்கள்தான் உண்மையான தேசபக்தி உள்ளவன் என்று சொல்லி ஃபீல்டிலிருந்து துரத்தியடிப்பார்கள்!! 

ஏன், இந்தத் தற்கொலைகளைப் பார்க்கும்போது, நாமே நம் பிள்ளைகளை ”விவசாயமோ, பெட்டிக்கடையோ வச்சுப் பிழைச்சா போதும்பா!! நீ படிக்கலாம் வேணாம்பா...” என்று சொல்லிவிடக்கூடும்... அதைத்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்....

Post Comment

ஒரு கொடுங்கோல் அதிபரின் கதை!!




(டிஸ்கி: நீங்களா இதை அவருடைய கதையோ, இவருடைய கதியோன்னுன்னு நினைச்சுகிட்டா, அதுக்கு அவருதான் பொறுப்பு. நான் இல்லை!!)

ஒரு நாட்டில் ஒரு அதிபர். (பின்னே, ரெண்டு அதிபரா இருப்பாங்கன்னு குறுக்க கேக்குறவங்களுக்கு “இவ்ளோ அறியாமையில இருக்கீங்களே” என்பதுதான் என் பதில்) ஓகே, இனி குறுக்க யாரும் பேசக் கூடாது.

அந்த நாட்டில் இருவேறு இனத்தைச் சார்ந்த மக்கள் இருந்தாங்க. (ஸ்... கீப் கொயட்!!) அதில் பெரும்பான்மையான ஒரு இனமே அரச பதவிகளில் அதிகமா இருந்தாங்க. அப்ப, சிறுபான்மையா இருந்த  இனத்தைச் சேந்த ஒருத்தரு தனது அறிவுத் திறமையால அரசுல முக்கியமான துறையில் அமைச்சரா ஆனாரு. ஆகி, எந்த வேறுபாடும் பார்க்காம, எல்லா மக்களோட துயர் தீர்க்கவும் மனசார உழைச்சாரு. அப்புறம், அவரோட இனத்தைச் சார்ந்தவங்களும் கடினமா உழைச்சு திறமையை வச்சு, உயர் பதவிகளை அடைஞ்சாங்க.

இப்படியே இவங்க சில தலைமுறைகளா உயர்ந்துவிட்டு வர்றதைப் பார்த்த மற்ற இனத்தினரில் சிலர், பொறாமை அடைஞ்சாங்க. இவங்களை இப்படியே விட்டா ஆட்சியையே பிடிச்சிடுவாங்க அப்படி இப்படின்னு மன்னர்கிட்ட வத்தி வச்சாங்க. தம் வேலை வாய்ப்புகள் இவங்களால பறி போவதா, தன் இன மக்களிடையேயும் பரப்பி விட்டாங்க. இவுங்களை அடக்கலன்னா, நாம சிறுபான்மை ஆகிடுவோம்னு பயமுறுத்துனாங்க. அதனால், மக்கள் மன்னன் இரண்டு தரப்புலயும் இவங்க மேலே வெறுப்பு வளந்துச்சு. இவங்க எவ்வளவோ புரிய வைக்கப் பாத்தாலும் அவங்க ஏத்துக்கலை. (நோ டாக்கிங்... உங்க யூகங்களை நீங்களே வச்சுக்கோங்க...)

ஒரு கட்டத்தில், அந்தச் சிறுபான்மை மக்களை அடிச்சு உதைச்சாங்க. ஆண்களைக் கொன்றார்கள். பெண்களை அடக்கியாண்டார்கள். இப்படி அவங்க உயிருக்கே போராட வேண்டிய நிலை வந்ததால், அவங்களோட வளர்ச்சியும் முன்னேற்றமும் குறைந்து, குறைந்து உயிருக்கும் உணவுக்கும் போராடி போராடி, ஒரு கட்டத்தில் அவங்க எல்லாருமே அடிமட்டத் தொழிலாளர்களாக, உடல் உழைப்பாளர்களாக ஆகிப் போனாங்க.  இந்த அடக்குமுறைக்கும், கொலைகளுக்கும் பெரும்பான்மை மக்களே ஆதரவு கொடுக்க ஆரம்பிச்சாங்க. அந்த அளவுக்கு அதிகார வர்க்கத்தினால் அவர்களிடையே வெறுப்பும் வன்மமும் விதைக்கப்பட்டது.

ஆனா, நாட்டுக்கு ஒரு நெருக்கடி வரும்போது மட்டும், உடனே அந்த அதிபர்,  சிறுபான்மையினரிடம் வந்து, “நீங்க அவ்ளோ நல்லவங்க.. இந்த நாடு உங்களை வச்சுத்தான் இருக்கு.... நீங்கதான் உதவணும்.. நெருக்கடி தீர்ந்ததும் உங்களுக்கு நீங்க கேட்குறதை நிறைவேத்துவேன்”அப்படி இப்படின்னு ஐஸ் வைப்பாரு.... அவங்களும் உதவி செய்வாங்க... கஷ்ட நிலை மாறியதும், மறுபடியும் கொடுமைகள் தொடரும்...

இப்படி இருக்க கதையில், கண்டிப்பா ஒரு எட்டப்பர் இருக்கணுமே... இருந்தாரு... சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அவரு பெரிய செல்வந்தர்... தன் செல்வத்தைக் காப்பாத்திக்க மன்னரோடு நெருக்கமானார். அதைக் கொண்டு தன் இன மக்களை மீட்க வழிவகை செய்யாமல், மன்னர் சொன்னபடிக்கு தன் இனத்து மக்கள் மீது நெருக்கடியை அதிகப்படுத்தினார். அவர்களிடமிருந்து வரி வசூலிக்கும் பொறுப்பு இவரிடம் கொடுக்கபப்ட்டது. அவரும் அதை கர்ம சிரத்தையா செஞ்சாரு...  😠  இப்பவும் உங்களுக்கு யாரையாவது நினைவுக்கு வந்தா, அகெய்ன், அதுக்கு அவரேதான் பொறுப்பு... நானில்லை, இல்லை!!!

அப்புறம் கதையில், அந்த பெரும்பான்மை இனத்தில் நல்லவர்களும் வரணுமே... வந்தாங்களே... “யப்பா.... இபப்டிலாம் செய்யாதப்பா... எல்லாரையும் இனபேதம் பாக்காம நீதியோட சமமா நடத்து”ன்னு சொன்னாங்களே.... சொன்னவங்களை என்ன செஞ்சாங்க இங்க... ஐ மீன், என்ன செய்வாங்க? அதேதான்... கொன்னுட்டானுங்க!! அதுவும் கொடுமையா சித்ரவதை செஞ்சு.... இரக்க குணம் கொண்ட தனது மனைவியைக் கூட விட்டு வைக்கலை அந்த அரக்க குணம் கொண்ட மன்னன்!! 😦 

தன்னை அறிவுஜீவி மாதிரி காண்பிச்சுக்க, அப்பப்ப அறிவாளிகளைக் கூப்பிட்டு, கூட்டம் போடுறதும், அவங்கள்ட்ட நெருக்கமாப் பேசி,  உனக்கு அந்தப் பதவி தர்றேன், இந்தப் பதவி தர்றேன்னு  வலைவீசவும் செய்வார்...

இப்படியே சிலபல தலைமுறைகளாப் போயிட்டிருந்தது.... அநீதியும், அதர்மமும் அப்படியே நிலைக்குமா என்ன? யாருமே எதிர்பார்க்காத இடத்துலருந்து அவர்களை மீட்க ஒருவர் வந்தார். எந்த இடம்? மன்னனின் அரண்மனையிலிருந்தே மன்னனுக்கு ஒரு எதிரி தோன்றினார்!!

நாட்டில் பிறக்கும் சிறுபான்மை இனத்து ஆண் குழந்தைகளைப் பிறந்ததும் கொன்று விட வேண்டும் என்ற ஆணை இருந்ததால், ஒரு தாய் தன் மகனைக் காப்பாற்ற எண்ணி, குழந்தையை ஒரு மரக்கூடையில் வைத்து ஆற்றில் விடுகிறாள்!! அக்குழந்தை போய்ச் சேருமிடம் அரண்மனை!! ஆம், அக்குழந்தை, குழந்தைப்பேறு இல்லாத மன்னனின் மனைவியிடம் வந்து சேருகிறது. கருணை மிகுந்த அவர், கணவனைத் தாஜா செய்து, அக்குழந்தையை வளர்க்கிறார்.

அந்தக் குழந்தை வளர்ந்து, மன்னனால் சித்ரவதைக்குள்ளாகி இருக்கும் தம் மக்களை ஒன்று சேர்த்து, பலப்படுத்தினார். மன்னரிடம் தங்கள் விடுதலையை கேட்கின்றனர். அது மறுக்கப்படுவதோடு, சித்ரவதைகளும் அதிகரிக்கப்பட்ட நிலையில், பொறுமையாகக் காத்திருக்கின்றனர்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, ஒரு நாள், அவர் அம்மக்களைத் திரட்டிக் கொண்டு நாட்டைவிட்டுச் செல்கிறார். இதனை அறிந்த மன்னன், தன் பெரும்படையோடு அவர்களை விரட்டி செல்கிறான்!! மன்னன் துரத்தி வருவதை அறிந்த அம்மக்கள், வேகமாகச் செல்கின்றனர். ஆனால், ஒரு இடத்தில் மேலும் முன்னேற முடியாமல் நின்று விடுகின்றனர்!! காரணம், அவர்கள் முன்னே பெருங்கடல்... கடல் போன்ற எதிரிப்படை அவர்களின் பின்னே... என்ன செய்வதென்று தெரியாமல், எந்தப் பக்கம் போனாலும் மரணம் என்ற நிலையில் அவர்கள் விக்கித்து நிற்கின்றனர்.... அந்தச் சிறுபான்மை மக்களில் ஒருவர் தம் தலைவனிடம் சொல்கிறார், “அந்தோ! அழிந்தோம் நாம்!” என்று. ஒரு தலைவனுக்கே உரிய தன்னம்பிக்கையுடன் அவர், “ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்” என்று கூறினார்.

ஆம், தம் பங்கு உழைப்பைச் செய்து, உறுதியாக நம்பிக்கை கொண்டோர் கைவிடப்படுவதில்லை!! இறைவனின் ஆணைப்படி கடல் இரண்டாகப் பிளந்தது!! மக்களும் வியப்பில் ஆவென வாய் பிளந்து நிற்காமல், விரைந்து மறுகரை சேர்ந்தனர். அடிமைகளாக இருந்த எதிரிக்கே வழிவிட்ட கடல், இராஜாதி ராஜனான எனக்கு வழிவிடாதா என்ற ஆணவத்தோடு தன் பெருமைக்குரிய தேரில்,  ரத,கஜ துரக பதாதிகளுடன் கடலில் இறங்கியவனை, மொத்தமாகக் கடல் மூழ்கடித்தது. ஆம், அஃறிணைப் படைப்புகள் ஒருபோதும் அநீதிக்குத் துணை போவதில்லை!!

நீரில் மூழ்கி, உயிர் பறிக்கப்படும் தருவாயில், உயிர் பிழைக்கும் ஆசையில் “இஸ்ராயீல்களின் இறைவனே!! உனையே நம்புகிறேன்” என்று அரற்றியவனை,

”இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய். எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” என்று அவனிடம் கூறப்பட்டது. இவ்வாறு இழிவடைந்தவனாக மரணித்தான் அந்தக் கொடுங்கோலன்!!


(”Pharoah - ஃபாரோ” ) “ஃபிர் அவுன்” அரச வம்சத்தில் வந்த ரமேஸஸ் II  என்ற அந்த இழிந்தவனின் உயிரற்ற உடல், அன்றும் இன்றும் என்றும் கொடுங்கோலர்களின் கதி என்னவாகும் என்பதற்கு உதாரணமாக, சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் சாட்சியாக இருந்து வருகிறது!!






மேலதிகத் தகவலுக்கு, பார்க்க: https://www.facebook.com/gnaniyar.zubair/posts/10211498651277431

Post Comment

உலகப் பேரரசின் நாடு பிடித்தல்





முன்காலத்தில், மன்னராட்சியில் மன்னர்கள் அடுத்த நாடுகளைப் போர் தொடுத்து,  வென்று தம் நாட்டோடு இணைத்துக் கொள்வர். இதற்கு முக்கியக் காரணம், அந்நாட்டின் செல்வ வளம்!! இந்தியாவை பிரிட்டிஷார் ஆக்கிரமித்ததின் காரணம் இந்தியாவின் செல்வம்தான்!!

ஆனால், இப்போது அப்படியெல்லாம் போர் தொடுக்க முடியாது என்றில்லை... அதைவிட, அந்நாட்டின் செல்வம் மட்டுமே தம் கைகளுக்கு வருமாறு தந்திர நாடகங்கள் அரங்கேற்றுவதை, நாடு பிடிப்பதைவிட எளிது என்பதால்!!
 
நாட்டை ஆக்கிரமித்தால், நாட்டை ஆள வேண்டும்; மக்களைப் பராமரிக்க வேண்டும். அது ஒரு பெருந்தலைவலி. ஆனால், இரண்டாவதில், செல்வத்தை மட்டும் உறிஞ்சிவிட்டு, அந்நாட்டையும் நாட்டு பிரஜைகளையும் சக்கையாகத் துப்பிவிட முடியும்.

அதற்கான படிப்படியான வழிமுறைகள் என்னென்ன?
1. முதலில்  ஒரு நாட்டைத் தேர்ந்தெடுக்கவும். அங்கே பெட்ரோல் வளம் இருந்தா இன்னும் சிறப்பு.

 2. அவர்களது நாட்டின் வளர்ச்சிக்காக, உள்கட்டுமானத்தை மேம்படுத்துவது என்று நைஸாகப் பேசி சம்மதிக்க வைக்கவும். அதற்காகக் ”குறைந்த வட்டியில்” உலக வங்கியில் கடன் வாங்கிக் கொடுக்கணும்.


3. பிறகு, உள்கட்டுமான வேலைகளைத் தங்கள் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களை வைத்தே செய்து கொடுக்கணும். (கொடுத்த கடன் பூரா இதற்கான கட்டணமா/சம்பளமா அவங்க நாட்டுக்கே வந்துடும்)


4. அடுத்து, கடனுக்கு வட்டி-வட்டிக்கு குட்டினு அந்த நாட்டோட சொந்தப் பணத்தைப் பிடுங்கிடணும். (அல்லது பணத்துக்குப் பதிலா பெட்ரோலா - அதுவும் விலை குறைச்சு வாங்கிடணும்)

5. கடன் கொடுக்கும்போதே சில நிபந்தனைகளைத் தேன் தடவி விதிச்சிடணும்.அதாவது அரசு நிறுவனங்கள்-கல்வி-மருத்துவம் ஆகியவற்றைத் தனியார்மயமாக்குவது போன்ற நிபந்தனைகள்.

6. அடுத்து, அந்நாட்டு மக்களையும் நீ ஏன் ஏழையா இருக்கே, வீடு-கார் வாங்கு,  சந்தோஷமா இரு; தொழில் செய்னு சொல்லி கடன் கொடுக்கணும். அதுக்கும் வட்டி-குட்டி எல்லாம் உண்டு.

7. இதுக்கு நடுவுலே, அந்தக் கட்டுமானங்களுக்காக நிலத்தைக் கொடுத்த மக்கள் ஏழைகளா நிப்பாங்க. அவங்களுக்கும் கடன் கொடுக்கணும்.




இப்படி, நாட்டையும் நாட்டு மக்களையும் கடனாளியா ஆக்கி, இங்கிருந்து பொருளாதாரத்தை உரிஞ்சி எடுத்து, வறுமையையும் பஞ்சத்தையும் கொடுத்து நிர்க்கதியா விட்டுடணும்.




ருவேளை ஆட்சியில் இருப்பவர்கள் நேர்மையானவர்களா இருந்து,  இதுக்குச் சம்மதிக்க மறுத்தா? அதுக்கும் வழி இருக்கு.


1. அவங்க ஹெலிகாப்டர்ல போகும்போது, ஹெலிகாப்டர் கீழே விழுந்து இறந்துவிடலாம்.

2. நாட்டில் ஏற்கனவே கொஞ்சமா கருத்துமுரண் இருக்கும் ஏதேனும் சில  குழுக்களுக்கு ஆயுத சப்ளை செய்து, #புரட்சி செய்ய வைத்து, அவர்களைக் கொண்டே அந்தத் தலைவரை கதம் செய்துவிட்டு, தன் கைப்பொம்மை ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் வைத்து விடலாம்.

சரி, தலைமை சம்மதிச்சாலும், அந்த நாட்டில் உள்ள மக்கள் அதை எதிர்த்தா?  

என்னங்க நீங்க.... மக்களைச் சமாளிப்பதெல்லாம் ஒரு விஷயமா?

1. நாட்டின் வளர்ச்சிக்கு எதிராப் போராடுறாங்க... அதனால் தீவிரவாதிகள்னு சொல்லிடணும்.   

2. அதுக்கப்புறம் தேசபக்தி, தேசியக்கொடி,தேசியகீதம், நாட்டுப் பற்றுனு அந்தந்த நாட்டுக்கேத்த மாதிரி சொல்லி மீதி இருக்க மக்களைக் குழப்பி விட்டுடணும்.

3. அவங்க இராணுவத்தை வச்சே அவங்களை அடக்கிடலாம். தேவைப்பட்டா “உலக” இராணுவமும் உதவிக்கு வரும்.


இப்போ, உங்க நினைவில் வரும் நாடுகளை இதனோடு ஒப்பிட்டுப் பாருங்க... இதேதான் அப்படியே அச்சு பிசகாம நடந்திருக்கும் - நடந்துகிட்டு இருக்கும்.

நிகழ்கால உதாரணம் ஒன்று:  #வெனிசுலா!!
காரணம்: அதன் அபரிமிதமான பெட்ரோல் வளம்!!

What's going on in Venezula?



Post Comment

நானும் பார்த்தேன் “உலக சினிமா”!!!





”உலக சினிமாக்கள்” என்ற பதமே நமக்கு ஒரு அந்நியப்பட்ட விஷயம் போலத் தோன்றும். அதுவும் இணையம் வந்து, அதைக் குறித்து இங்கு சில பெரிய தலைகள் - பின்நவீனத்துவ வாதிகள் என்றும் சொல்லலாம் 😂😀 -  உலக சினிமா, உலக சினிமா என்று பேசி, அதை பற்றி ரொம்ப ஆழமா விவாதித்துக் கொள்ளும்போது இதெல்லாம் நமக்கு எட்டாத - புரியாத விஷயங்கள் என்று ஏக்கத்தோடு பார்த்துவிட்டுப் போய்விடுவேன்.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன், இங்கு அபுதாபியில், ஒரு அமைப்பினால் இது போல “உலக சினிமாக்கள்”, வாரந்தோறும் இரண்டு அல்லது மூன்று  படங்கள்- அதுவும், இலவசமாகத் திரையிடப் படுகிறது என்று தெரிய வந்த போது ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டன!!

  

"CINEMA SPACE" என்ற அமைப்பு பல்வேறு உலக மொழிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான திரைப்படங்களை, ஆங்கில சப் டைட்டில்களோடு திரையிடுகின்றனர்.  யார் வேண்டுமானாலும் போய்ப் பார்க்கலாம், ஆனால் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.  அவர்களது வலைத்தளத்தில் நம் பெயரைப் பதிவு செய்து கொண்டால், வாரா வாரம் திரையிடப்படும் படங்களைப் பற்றி முன்பே தகவல் வந்துவிடும். அதன் ட்ரெய்லர் மற்றும் கதைச் சுருக்கத்தைப் பார்த்து விட்டு, இயன்றவற்றைப் போய்ப் பார்ப்பதுண்டு. இதுவரை பத்து படங்கள் கூட பார்க்க முடிந்ததில்லை... :-(

ல்லாமே நல்ல படங்கள் என்றாலும், நம் தேர்வு சில சமயம் ஏமாற்றிவிடுவதுண்டு.  சில மாதங்கள் முன்,  பிறந்த குழந்தையை சர்வாதிகாரிக்குப் பயந்து ஆற்றில் விடுவதாக வந்த ட்ரெய்லர் பார்த்து, மூஸா (மோசஸ்) நபியின்  கதை போல இருக்கிறதே என்று ஆவலோடு போனால்... குள்ள மனிதர்கள், சூனியக்காரி, மந்திரவாதி என்று  சூர மொக்கைப் படமாகிவிட்டது அது!!

இருந்தாலும் பல நல்ல படங்கள் பார்த்திருக்கிறேன். அதில் இரண்டைப் பற்றிப் பகிர ஆசை. ஒன்று இன்று...

LEAVE NO TRACE:


கரத்தை விட்டு ஒதுங்கி வாழ நினைக்கும் ஒரு அப்பா-மகள்; இவர்களை அமெரிக்க அரசாங்கம் கட்டாயப்படுத்தி நகரத்தில் தங்க வைக்கிறது என்று சொன்ன இந்தப் படத்தின் ட்ரெய்லர்/ கதைச் சுருக்கத்தைப் பார்த்து, அமெரிக்கர்கள் சிவப்பிந்திய பழங்குடி மக்களின் பிள்ளைகளைப் பிடித்து வந்து கல்வி கற்றுக் கொடுக்கிறோம் என்ற பெயரில், அவர்களது இயல்பான வாழ்வையும், நிலத்தையும் ஆக்கிரமித்த கதையை ஒத்திருக்குமோ என்ற ஆவலில் படம் பார்க்கச் சென்ற எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்...  ரொம்ப ஓவர் திங்கிங் ஆகிப்போச்சு இப்பலாம்...😎

ஒரு அப்பா, தன் 12-13 வயது மகளோடு, காட்டுப் பகுதியில் இயற்கை வாழ்வு வாழ்கிறார். அடிப்படைத் தேவைகளுக்காக மட்டுமே எப்போதாவது ஒரு முறை நகரத்திற்குச் சென்று வருகிறார். ஏன் அவ்வாறு இருக்கிறார் என்பதற்கான காரணம் எதுவுமே படத்தில் கடைசி வரை சொல்லப்படவில்லை. ஆனால் நிறைய க்ளூக்கள் கொடுத்து நம்மையே ஊகிக்க வைக்கிறார்கள்.

வசனங்களும் மிகக் குறைவு. ஆனால், ஒவ்வொன்றும் ஆணியடித்தது போன்று கருத்து கூறுகிறது.  அவர்களின் பயணத்தில், வழியில்  சின்னச் சின்ன நிகழ்வுகளாகத் தெரிபவை சொல்லும் சேதிகள் பெரிது. 

அவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர். அமெரிக்கா, பல நாடுகளின் மீது தொடுத்த போர்களில் பங்கெடுத்துள்ளார். பலஸ்தீனியர்கள் அணியும் வெள்ளை-கறுப்பு கட்டம் போட்ட ஸ்கார்ஃபை தன் கழுத்தில் அணிந்திருக்கிறார். ராணுவ வீரர்களுக்கான  சலுகையாக Post-traumatic stress disorder (PTSD) மாத்திரைகள் போன்றவை இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன. அவற்றைப் பிறருக்கு விற்று தன் வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்.

காட்டிலேயே ஒரு மிகச்சிறிய கூடாரத்தில் தங்கி உணவு தயாரித்துக் கொள்கிறார்கள்.  தன் மகளுக்கு கல்வியுடன், சதுரங்கம் போன்ற விளையாட்டுக்களும் கற்றுக் கொடுக்கிறார். இப்படியே போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கை, அவர்களைப் பிடித்துக் கொண்டு செல்ல வரும் அமெரிக்க சமூக நல அலுவலர்களால் தடைபடுகிறது. அமெரிக்க சட்டப்படி, அதன் குடிமக்கள் வாழ்விடம், கல்வி, அடிப்படை மருத்துவ உதவி எல்லாம் கிடைக்கப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற விதிப்படி அவர்களை அழைத்துச் சென்று, விசாரணை செய்கிறார்கள்.

அவர் காட்டுக்குள் வாழ்வதால், மரம் செடிகளோடு வாழ விரும்புகிறார் என்று முடிவு செய்து, அவருக்கு அதே போன்றதொரு காடு சார்ந்த பெரும்  தோப்பில் வேலையும், வீடும் கொடுக்கிறார்கள். விருப்பமின்றி அங்கு தங்குகிறார் அவர். பதின்மத்தில் நுழையும் மகளுக்கோ இப்படியும் ஒரு வாழ்க்கை இருக்கிறதா என்று ஆச்சரியம். அங்கே தொடங்குகிறது சின்னஞ்சிறிய விரிசல்.

அவளை முறைப்படி பள்ளியில் சேர்க்க அரசு ஏற்பாடு செய்கிறது.அதுவரை அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்து அங்கிருக்கும் சக வயதினருடன் நட்பு கொள்கிறாள். ஒரு முறை வீடு வர நேரமாகும்போது, அப்பாவிடம் ஒரு மொபைல் இருந்தால் நான் உங்களைத் தொடர்பு கொள்ள வசதியா இருந்திருக்கும் என்று சொல்ல,  “இவ்வளவு வருடங்கள் நாம் அது இல்லாமல்தானே தொடர்பில் இருந்தோம்”  என்கிறார் தந்தை!!

ன்னொரு சமயத்தில்,  அடிக்கடி நண்பர்களைச் சந்திக்கச் செல்வது பற்றி தந்தை கேள்வி எழுப்ப, பள்ளிக்குச் செல்லுமுன் தேவையானவற்றைக் கற்றுக் கொள்வதற்காகச் செலவதாகவும், ஒன்றும் தெரியாமல் பள்ளிக்குப் போனால், சக மாணவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று மகள் பதில் சொல்ல, “மற்றவர்களின் அபிப்ராயம் நம்மை எப்படிக் கட்டுப்படுத்தும்?” என்று தந்தை கேட்கிறார்!! நகரத்தில் வாழும் மக்களின் மனநிலை ஒற்றை வரியில் சொல்லப்படுகிறது!!

அங்கிருந்து தப்பிச் செல்கிறார்கள் இருவரும் - மகள் அரை மனதோடு உடன் வருகிறாள்.  பல தடங்கல்கள், போராட்டங்கள் தாண்டி, அடர்ந்த காட்டு வழி செல்லும்போது, தந்தை ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்.  எப்படியோ சிறிது தூரத்தில் இருக்கும் ஒரு பண்ணையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு பிழைக்கிறார். உடல் தேறும் வரை அங்கு தங்கி இருக்கிறார்கள். மகள் பண்ணை வேலைகளில் உதவுகிறாள்.

உடல் தேறியதும், தந்தை வேதாளமாய் மீண்டும் முருங்கை மரம் ஏற, மகள் மறுக்கிறாள். மிகப் பெரிய வாக்குவாதம், கூச்சல் களேபரமெல்லாம் இல்லை.... ஒரு சில வரிகள் மட்டுமே...  இருவரும் அமைதியாய்ப் பேசிக் கொள்கிறார்கள்... பின்னர் தந்தை மட்டும் தன் பயணத்தைத் தொடர்கிறார்!!

அந்தக் கடைசி உரையாடலில் மகள் சொல்லும் ஒரு வாக்கியம்... “What is wrong with you is not wrong with me!!" படம் முழுவதையும் விளக்கி விடுகிறது.

ப்படம், ஒரு தந்தை-மகள் உறவு, இயற்கை வாழ்வு குறித்த படம் என்பதைவிட அமெரிக்காவின் போர்களில் பங்கு பெறும் இராணுவ வீரர்களின் மனச்சிக்கல்கள் குறித்த கதை என்பதே என் கருத்து. 


தனக்குக் கொடுக்கப்பட்ட Post-traumatic stress disorder (PTSD) மாத்திரைகளை, தன்னைப் போன்ற ஓய்வு பெற்ற சக இராணுவ வீரர்களிடம் விற்க முயலும்போது அதில் ஒருவர் சொல்கிறார், “இந்த மாத்திரைகளால் எந்தப் பயனும் இல்லை. பல வருடங்கள் பயன்படுத்திப் பார்த்து விட்டேன். இரவுகள் இன்னும் பயங்கரமானவைகளாகவே இருக்கின்றன” என்பார்!!

வலுக்கட்டாயமாகத் தொடுக்கப்படும் போர்களில் பலி கொடுக்கப்படும் வீரர்கள்... “எல்லையில் இராணுவ வீரர்கள்...” என்று சொல்லியே வளர்க்கப்படும் தேச பக்தியுடன் மக்களும்...


ட்ரெய்லர்: https://youtu.be/Y28oII_G688

Post Comment