Pages

Showing posts with label குடல்வால். Show all posts
Showing posts with label குடல்வால். Show all posts

நம்பிக்கையே மாமருந்து




இந்தப் பதிவில் சொல்லியிருந்த என் மகனின் அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் சமயத்தில் நடந்தவைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

போன வருடம் ஜூலையில் நானும், பிள்ளைகளும் பாண்டிச்சேரியில் வேலை நிமித்தம் தங்கியிருந்த என் வாப்பாவோடு ஒரு நாலு நாள் தங்கிவிட்டு, பின் திருநெல்வேலி போவதாக ப்ளான். ப்ளான் படி பாண்டிச்சேரி  போன உடனே பெரியவனுக்கு வயிறு வலியும் ஆரம்பிச்சிட்டுது. நானும் பயணக் களைப்பு அல்லது வாயுவாக இருக்கும் என்று ஓமம், மிளகு என்று கைமருந்து கொடுத்தேன். குறையவில்லை. அங்குள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அட்மிட் செய்தோம்.
 

ஸ்கேன் செய்ததில் குடல்வால் நீக்க அறுவைசிகிச்சைதான் செய்யணும் என்று தெரிந்தது. எனக்கோ பதற்றம்; என்னவரோ அபுதாபியில். என் அம்மாவும் தங்கையின் பிரசவத்துக்காக ஊர் சென்றிருந்தார். துறுதுறுவென்று நிற்கும் சின்னவன் வேறு. வாப்பாவுக்கும், அலுவலக நண்பர்களை மட்டுமே தெரியும். சின்னவனைக் கவனிக்க யாரும் இல்லாததால், பாண்டிச்சேரியில் செய்யாமல் திருச்சியில் செய்யலாம் என்று நினைத்தேன். அங்கிருந்து காரில் மூன்று மணிநேரம்தான்; மச்சினர் குடும்பம் அங்கு இருப்பதால் சின்னவனையும் பார்த்துக் கொள்வார்கள். எனக்கும் தைரியமாக இருக்கும்; இருந்தாலும் டாக்டரிடம் கேட்டுக்கொள்வோம் என்று நினைத்திருந்தேன். தலைமை மருத்துவர் மாலை ஆறு மணிக்கு வந்தார். அவரும் அறுவை சிகிச்சையை உறுதிபடுத்திக் கொண்டு மறுநாள் காலை எட்டு மணிபோல செய்யலாம் என்றார்.

நான் அவருக்கு என் நிலைமையை விளக்கமாகத் தெரியப்படுத்தி, திருச்சிக்குப் பயணம் செய்யலாமா  என்று கேட்டதுதான் தாமதம், பயங்கரக் கோபம் வந்துவிட்டது அவருக்கு. “கொண்டு போங்க; ஆனா வழியிலயே வெடிச்சிரும். அப்புறம் என்ன வேணா நடக்கும். பரவாயில்லையா?” என்றாரே பார்க்கலாம். நான் அப்படியே விதிர்விதிர்த்து விட்டேன். பிள்ளையைப் பார்த்துப் பேசுகிற பேச்சா அது? அதுவும் ஆபரேஷன் செய்ய வேண்டிய டாக்டர்!!  நானோ இன்னும் பொறுமையாகப் பேசினேன். அவரோ சாபம் கொடுப்பதுபோல இப்படி ஆகிவிடும் அப்படி ஆகிவிடும் என்றே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். அவரின் பேச்சில் நோயாளியைக் குறித்த அக்கறை தெரியவில்லை. மருத்துவமனையை விட்டு நாங்கள் போவதைத் தடுக்கும் எண்ணம் மட்டுமே தெரிந்தது. எமர்ஜென்ஸியாக உடனடியாகச் செய்ய வேண்டியிருந்தாலும் அவர் கையால் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன். அவரிடம் டிஸ்சார்ஜ் செய்ய வலியுறுத்தினேன்.

டிஸ்சார்ஜ் செய்வதற்காக அவர்கள் ஒரு வெள்ளைத் தாளில் தமிழில், அவர் பேசியதைவிடக் கொடூரமாக எழுதியிருந்தார்கள் (அந்தக் கையெழுத்து அதைவிடக் கொடுமை!!).
அதில் எழுதியிருந்த வாசகங்களை இப்போ நினைத்தாலும் நடுங்குகிறது!! அதில் கையெழுத்திடச் சொன்னார்கள். என்னால் முடியாதென்று சொல்லி சண்டைக்குப் போனேன்.   ஆனால் என் வாப்பா, இங்கிருந்து உடனே கிளம்ப வேண்டும்; தாமதப்படுத்துவது நல்லதல்ல என்று எடுத்துச் சொல்லி தானே கையெழுத்திட்டார்கள். பின் அங்கிருந்து காரில் திருச்சி வந்து உடனே அங்கு ஒரு மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். இங்கும் மருத்துவர் காலை பத்து மணிக்கு செய்யலாம் என்று சொன்னார்.

பாண்டிச்சேரியில் அந்த மருத்துவமனையில் நான் செய்யக்கூடாது என்று முடிவுசெய்ததின் காரணம், இவ்வாறு
நோயாளியையும் முன்வைத்துக் கொண்டே ஈவிரக்கம் இல்லாமல் பேசுபவரிடம் நான் எப்படி மனநிம்மதியுடன் என் மகனை ஒப்படைக்க முடியும்? சிகிச்சைக்குமுன்பே இப்படிப் பேசுபவர், நாளைபின்னே ஏதாவது பிரச்னை என்றால் எப்படி விளக்கம் தருவார்? மருத்துவர் என்றால் அவரின் பரிமாற்றங்கள் நமக்கு மனநிம்மதியைத் தரவேண்டாமா? அதனால் பாண்டியிலேயே வேறு மருத்துவமனையில் செய்யலாம் என்று நினைத்தேன். பின்னர் திருச்சி மருத்துவரிடமும், திருநெல்வேலியில் ஒரு டாக்டர் நண்பருடனும் கலந்தாலோசித்து, திருச்சி செல்லலாம் என்று முடிவு செய்தோம். மேலும் இங்கும் அவர் மறுநாள் காலை எட்டு மணிக்குத்தானே செய்வதாகச் சொன்னார். மகனும் சம்மதித்திருந்தான். மேலும் திருச்சி - புதுவை சாலையும் புதிதாகப் போட்டது; நன்றாக இருக்கும். கரடு முரடான பயணமில்லை.

மறுநாள் காலை மயக்கமருந்து கொடுப்பவர் (அனஸ்தீஸிஸ்ட்)  டிராஃபிக் ஜாமில் (!!!) மாட்டிக்கொண்டு லேட்டாக வந்ததில், 12.30க்கு சிகிச்சை தொடங்கியது. டாக்டரிடம் ஏற்கனவே விபரங்கள் கேட்டிருந்தேன். 
அப்பெண்டிக்ஸ் பகுதியில் இன்ஃபெக்‌ஷன் அளவைப் பொறுத்து, அரைமணி முதல் ஒன்றரை மணி நேரத்தில் சிகிச்சை முடிந்துவிடும் என்று சொல்லியிருந்தார். லேப்ரோஸ்கோபி முறை என்பதால் நேரமும் அதிகமாகாது என்பதோடு, அடுத்த நாளே வீட்டுக்கும் சென்று விடலாம் என்று சொல்லியிருந்தார். ஆனாலும் மூன்றரை மணிநேரம் ஆகும் என்று நினைக்கவில்லை.

அந்த மூன்றரை மணிநேரமும் என் வாழ்நாளில் மிகக் கொடிய நேரம்!! ஆபரேஷன் முடிய ஏன் இவ்வளவு நேரம் ஆகிறது என்று புரியாமல் தவித்த தவிப்பு!! இப்படி ஆகியிருக்குமோ, அப்படி ஆகியிருக்குமோ, இந்த மயக்க மருந்து கொடுக்கும் டாக்டர் வேற சின்னப் பையனா இருந்தாரே, கொஞ்சம்கூட பொறுப்பே இல்லாம பத்து மணி  ஆபரேஷனுக்கு பன்னென்டரைக்கு வந்தாரே, அவர் ஏதாவது தப்பு பண்ணிருப்பாரோன்னு கற்பனை செய்து... அழுது,.. ரூமில போய் உக்காந்து அழவும் முடியாது, அங்க வாப்பா இருக்காங்க. நான் அழறதைப் பாத்தா அவங்களும் பதறி அழ ஆரம்பிச்சுடுவாங்க. மச்சானும், அழாதே, அழாதேன்னு சொல்லி அலுத்துப் போயிட்டார்.

நேரம் போகப் போக, அனஸ்தீஷியா கொடுப்பதில் தவறு நேர்ந்ததால் பாதிக்கப்பட்ட நடிகை விஜி, விளையாட்டு வீரர் சந்திரசேகர், இன்னும் பல சம்பவங்கள் திடீர் திடீரென்று நினைவுக்கு வந்ததில் ரொம்பவே பயந்துவிட்டேன்.

செவிலியர்கள் மட்டுமல்லாமல், துப்புரவுத் தொழிலாளர்கள் வரை எந்த விதக் கட்டுப்பாடும் இன்றி, செருப்பை மட்டும் கழட்டிவிட்டு, ஆபரேஷன் தியேட்டர் உள்ளே போக, வர இருக்கிறார்கள். அவ்வாறு வெளியே வந்த ஒரு நர்ஸ், இன்னொரு நர்ஸிடம் சொன்னது இது: “கேமரா பிடிக்க ஆள் வேணுமாம்; அதான் மேடத்தைப் போய் கூப்பிடப்போறேன்”!! ஆத்தீ, என்னது கேமரா பிடிக்க ஆளா? என்னதான் நடக்குது இங்க? அவரே சொன்னார், டாக்டரால் கேமராவையும், சிகிச்சையையும் ஒருசேர கையாள முடியவில்லையாம். அதனால், ஒரு கை எக்ஸ்ட்ரா தேவைப்படுதாம். இப்ப இப்படிச் சொல்லிட்டேன், அங்க நான் நடுங்கின நடுக்கம் இருக்கே!! அப்புறம் டாக்டரம்மா (டாக்டரின் மனைவி, குழந்தைப் பேறு மருத்துவர்) வந்தார்.

பிறகு சிகிச்சை முடிந்து, மகனும் இறையருளால் நல்லபடியாக வந்தான். டாக்டரும் வாலை வெட்டமுடியாத காரணத்தை விளக்கினார். ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்க வேண்டி வந்தது.

ஒருவிதத்தில் பாண்டியில் சிகிச்சை செய்யாமல் இங்கு வந்தது நல்லதாகவே பட்டது.  அங்கே செய்திருந்தாலும், இதே பிரச்னை வந்திருக்கும். எனக்கும் அந்த டாக்டர்தான், கோபத்தில் வேண்டுமென்றே அப்படிச் செய்துவிட்டாரோ என்று தோன்றியிருக்கும். மருத்துவர்களுக்கென்று ethics உண்டு, அப்படிச் செய்ய மாட்டார்கள்தான். ஆனாலும், சிஸேரியன் என்றால், வேண்டுமென்றே செய்தார்களோ என்று தோன்றுமில்லையா, அது போலத்தான். அதுவுமில்லாமல் ஒரு வாரம், சின்னவனை வைத்துக் கொண்டு அந்த ஊரில் என்னால் தனியே இருந்திருக்கவும் முடியாது. நல்லவேளை நான் திருச்சி வந்தேன்!! இம்மாதிரி சமயங்களில்தான் உறவினர்களின் அவசியமும், அருமையும் அதிகம் புரிந்து, உறவு மென்மேலும் வலுப்பட உதவுகிறது. 

மேலும், திருச்சி மருத்துவரிடமும், சிலவற்றைக் குறித்த என் அதிருப்தியை வெளிப்படுத்தியபோது,  பொறுமையாகத் தன் தரப்பை விளக்கிச் சரிப்படுத்த ஆவன செய்தார்.

நேற்றுகூட பேப்பரில்  படித்தேன், "Placebo" எனப்படும் மருந்துகளின் மாற்று, ஒருவரை மனரீதியாக நம்பிக்கையை பலப்படுத்தி குணப்படுத்த உதவுகிறதாம். என்னதான் ஸ்பெஷலிஸ்டாக இருந்தாலும், நோயாளிக்கு நம்பிக்கை வருமளவில் தன்மையாக பழகவில்லையென்றால்,  என்ன பயன்? மருந்துகளைவிட நம்பிக்கைதான் நோயாளிக்கு அதிகம் தேவை!! அதை மருத்துவர்கள்தான் தர வேண்டும்.

Post Comment

வாலை வெட்டணுமா வேண்டாமா?







தலைப்பைப் பார்த்துவிட்டு, என்னவோ ஏதோ என்று வந்திருப்பீங்க!! இதுவும் நல்ல பாடம் சொல்லும் பதிவுதான். தொடர்ந்து படிங்க!!

அப்பெண்டிக்ஸ் என்ற குடல் வால்: இதைப் பற்றி நம்ம எல்லாருக்கும் எந்தளவு தெரியும்?

குடலின் நுனியில் இருக்கும் வால் போன்ற அமைப்பு. இது ஒரு தேவையில்லாத உறுப்பு; திட கழிவுகள் அதில் போய்த் தங்கும். சிலருக்கு திடீரென்று பிரச்னை கொடுக்கும்; வலி வந்துவிட்டால், அறுவை சிகிச்சை செய்து அதை வெட்டியெடுப்பதுதான் ஒரே வழி என்ற வரைதான் எனக்கும் தெரியும், போன வருடம் இந்தியா போயிருந்தபோது என் மகனுக்கும் (12 வயது) இந்தப் பிரச்னை வரும்வரை!!




அப்பெண்டிக்ஸில் பிரச்னை என்றால் வயிற்றின் வலது அடிப்பாகத்தில் மட்டுமே வலிக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். என் மகனுக்கு முதலில் சாதாரண வலி போல வயிறு முழுதும் வலி. அடுத்த நாள், தொப்புளைச் சுற்றி வலி அதிகம் இருந்தது. வாந்தி தொடங்கியது.  அதற்கடுத்த நாள் வலி வலது அடிவயிற்றில் மட்டும் இருந்தது.

முதலில் பரிசோதித்த மருத்துவர்கள், வாந்தியும் இருந்ததால், ஃபுட் பாய்ஸன் என்றே கருதி, மருந்துகள் கொடுத்தனர். மூன்றாம் நாள், வலது அடிவயிற்றில் வலி என்ற பிறகுதான், அப்பெண்டிக்ஸாக இருக்கலாம் எனச் சந்தேகித்து, ஸ்கேன் செய்யச் சொன்னார். ஸ்கேன் ரிப்போர்ட், எதிர்பார்த்தபடியே, “Acute appendicitis" என்று வந்தது.

பிறகு, வேறொரு மருத்துவமனையில் அனுமதித்தோம். நான் லேப்ரோஸ்கோபிக் முறையில் செய்யும்படிக் கேட்டுக் கொண்டிருந்தேன். சாதாரணமாக அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் முடிந்துவிடும்; ஆனால் (வயிற்றின்) உள்ளே உள்ள  நிலைமையைப் (!!) பொறுத்து 2 மணிநேரம் வரை ஆகலாம் என்று டாக்டர் சொன்னார். 

ஆனால் ஆபரேஷன் முடிய 3 மணி நேரம் ஆனது. மருத்துவர் மீண்டும் ஒரு அதிர்ச்சிச் செய்தி சொன்னார். அதாவது அப்பெண்டிக்ஸ் எனப்படும் குடல்வாலை நீக்க முடியவில்லை என்று!! ஏன்?

அப்பெண்டிக்ஸ் எனும் குடல்வால் பிரச்னை வந்தால், அறுவை சிகிச்சை செய்து, அவ்வாலை வெட்டி எடுப்பதுதான் அதற்கான சிகிச்சை என்றே நாம் அறிந்திருக்கிறோம். அவ்வாறு உடனே செய்யாவிட்டால், அது வெடிக்கும் சாத்தியமுண்டென்றும், அது உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடும் என்றும் அறிந்திருக்கிறோம். அதனாலேயே இதுதான் நோய் என்று கண்டறியப்பட்ட உடனே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறுவை சிகிச்சை செய்யப்படும். ஆனால், இங்கே அவ்வாறு செய்ய முடியவில்லை என்று சொல்கிறாரே, அப்படியானால்...

காரணத்தை விளக்கினார் மருத்துவர். குடல்வால் என்பதில் இன்ஃபெக்‌ஷனே வலி உண்டாவதற்குக் காரணம். பெரும்பாலும் உணவின் மூலம் வரும் பாக்டீரியாக்களே அதன் காரணமாக இருக்கும். வாலில் நோய்த்தொற்று ஏற்பட்டு, பின் உடனடி சிகிச்சை அளிக்காமல் விட்டால், வெடிக்கும் நிலைக்குச் செல்லும். இந்த இரண்டிற்கும் நடுவே ஒரு நிலை உண்டு. அதுதான் “Appendicular mass”. அதாவது, தொற்று அதிகரித்து, வாலில் சீழ்பிடித்து, அது அருகில் உள்ள Cecum  என்ற பகுதியுடனும், குடலின் மற்ற சில பகுதிகளுடனும் ஒட்டிக் கொண்டு ஒரு பந்து போல காணப்படும்.

இச்சமயத்தில் இதனை வெட்டி எடுப்பது மிக ஆபத்தானது. குடலில் ஓட்டை விழும் அபாயம் இருப்பதால் அதனை நீக்காமல், சீழை முடிந்த அளவு எடுத்துவிட்டு, சலைன் வாட்டரால் அப்பகுதியைக் கழுவிவிட்டு, அப்படியே மூடிவிட்டார்கள்.

இதற்கு சலைன் மூலம் அதிக வீரியமுள்ள ஆண்டி-பயாடிக் மருந்துகள் ஏற்றுவது மட்டுமே தகுந்த சிகிச்சை. தொற்று முழுமையாகக் குணமாகும் வரை உணவு, தண்ணீர் ஏதும் கொடுக்கக்கூடாது. இவ்வாறாக ஒரு வாரம் படுக்கையிலேயே கழிந்தது. லேப்ரோஸ்கோபிக் முறையில் செய்வதற்காக மூன்று சிறிய துளைகள் வயிற்றில் இட்டிருந்தார்கள். அதில் ஒரு துளை வழியே புண்ணைக் கழுவிய சலைன் வாட்டர் மற்றும் சீழ் (இருந்தால்) வெளியேற என்று ஒரு டியூப் மாட்டியிருந்தார்கள். புண் ஆறி வருவதை அறிய அதையும் கண்காணித்து வந்தார்கள்.

சரி, இப்படி Appendicular mass ஆகிவிட்டது என்று அறுவை சிகிச்சைக்கு முன்பே அறிந்துகொள்ள முடியாதா? தெரிந்திருந்தால் அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்த்திருக்கலாமே? இனி மேற்கொள்ளவேண்டிய சிகிச்சைகள் என்னென்ன? இன்னும் பல சந்தேகங்கள் வந்தன. அந்த மருத்துவரிடமும், பின்னர் நான் சந்தித்த சில மருத்துவர்களிடமும் கேட்டும், இணையத்திலும் கண்டு அறிந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.

அறிகுறிகள்:
1.       தொப்புளைச் சுற்றி வலி இருக்கலாம்.
2.       முதலில் வயிற்று வலி, பின்னரே வாந்தி. (இது முக்கிய அறிகுறி. வயிற்றுக்கோளாறு, ஃபுட் பாய்ஸன் போன்றவற்றில்  வாந்தி முதலிலும், வலி பின்னரும் வரும்).
3.       வயிற்றின் வலது அடிப்பாகம் வலி.


பரிசோதனைகள்:
வலி வந்தவுடன் மருத்துவர் கைகொண்டு வயிற்றைப் பரிசோதித்தல் நலம். அல்ட்ரா-சவுண்ட் ஸ்கேனிலும் குடல்வால் நோயுற்றிருப்பதை ஒரு உத்தேசமாகத்தான் காணமுடியுமாம். ஒரு தேர்ந்த, அனுபவம் வாய்ந்த ரேடியாலஜிஸ்டால்தான் அது என்ன நிலையிலிருக்கிறது என்று சரியாகக் கணித்துச் சொல்ல முடியும்.

அந்தப் படங்களைக் காணும் மருத்துவருக்கும் அதேதான். சி.டி.ஸ்கேன் எடுத்தாலும் தெளிவாகத் தெரியாது. அனுபவமே கைகொடுக்கும்.

சிகிச்சைகள்: (for appendicular mass)
1.       மேலே சொன்னதுபோல உணவு இல்லாமல், டிரிப் மூலம் மருந்துகள் மட்டுமே. தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து, குறைந்தது ஒரு வாரம் ஆகும். ஒரு மாதமும் ஆகலாம்..
2.       பின்னர், சிறிது காலம் (3 மாதங்கள்) கழித்து, நமக்கு வசதிப்படும் சமயத்தில், அறுவைசிகிச்சை செய்து வாலை வெட்டி எடுப்பது.

இதுகுறித்து மருத்துவர்கள் கருத்து வேறுபடுகிறார்கள். இந்தியாவில் நான் பார்த்த மருத்துவர்கள், ரிஸ்க் வேண்டாம், மீண்டும் ஆபரேஷன் செய்துவிடுவதே நலம் என்றார்கள். பின்னர் இங்கு அபுதாபி வந்து சந்தித்த மருத்துவர்களோ (இந்தியர்கள்தான்) பிரச்னை வரும்வரை அதைத் தொடாமல் இருப்பதே நல்லது; நல்லா இருப்பவனுக்கு நாங்கள் ஆபரேஷன் செய்வதில்லை என்று சொல்கிறார்கள்.

எனக்கும் இதுவே திருப்தி தருவதால், அறுவை சிகிச்சை வேண்டாம் என்றே முடிவு செய்துள்ளோம். இணைய புள்ளிவிவரங்களும், மீண்டும் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு குறைவு என்றே சொல்கின்றன.

நாகர்கோவிலில் எங்களின் அண்டை வீட்டில் ஒரு பெண்ணும் அவர் மகளுக்கு 5 வயதிருக்கும்போது இதே போல Appendicular mass ஆனதாகவும், டிரிப் மூலம் மருந்து எடுத்துக் கொண்டதில் சரியாகிவிட்டது, த்ற்போது மகளுக்கு 20 வயதாவதாகவும், ஒரு பிரச்னையும் இல்லை என்றும் சொன்னார்.

ஒரு சாதாரண அப்பெண்டிக்ஸ் சிகிச்சைதானே என்று நினைத்த எங்களுக்குப் பல அதிர்ச்சிகளையும், அனுபவ அறிவுகளையும் தந்த நிகழ்ச்சி இது!! அதுகுறித்த சம்பவங்களையும் பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.

Post Comment