Pages

Showing posts with label கனவு. Show all posts
Showing posts with label கனவு. Show all posts

டிரங்குப் பெட்டி - 28




கேரளாவில் சமீபத்தில் நடந்த விமான “ஹைஜாக்” நாடகம் குறித்த செய்திகள் படித்திருப்பீர்கள். ஏர் இந்தியாவின் தாழ்ந்துபோன சேவைத் தரத்திற்கு இன்னுமொரு சான்று.  மலையாளிகளைப் பற்றிப் பலரும் குறை கூறுவார்கள். ஆனால், அவர்களிடம் இருக்கும் ஒற்றுமை உணர்வு போற்றத்தக்கது. சம்பவம் நடந்தபொழுது, குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை மற்ற பயணிகள் விட்டுக்கொடுக்காதது அங்குமட்டுமே நடக்கக்கூடிய அதிசயம்.  கேரள முதல்வர், அமைச்சர்களும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளார்கள்.

ஏற்கனவே திட்டமிடப்பட்டு வரும் “ஏர் கேரளா” விமான சேவையும், இச்சம்பவத்தால் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மதுரை விமான நிலையம் சர்வதேச சேவைக்கான தரத்திற்கு மாற்றப்படுவதற்கு இன்னும் எத்தனை வருடமாகுமோ? அங்கே இத்தணூண்டு “நாட்டில்” மூணு சர்வதேச விமான நிலையங்கள்!!                                    
                                        -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-

லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்”  - 1999 முதல் 2005 வரை ஏழு வருடங்கள் தொடர்ந்து “டூர் டி ஃப்ரான்ஸ்” (Tour De France) சைக்கிள் போட்டியில் வென்றவர். குறைந்தபட்சம் 3200 கி.மீ தூரத்தை, ஃபிரான்ஸ் மற்றும் சுற்றுப்புற நாடுகள் வழியே சைக்கிளில் 21 நாட்களில் கடக்க வேண்டும். இந்தப் பாதையில் இருக்கும் ஏற்றங்கள் அனைத்தும், மூன்று முறை இமயத்தில் ஏறுவதற்குச் சமம் என்று சொல்லப்படுமளவு கடினமான போட்டி.

சென்ற மாதம், அவர்மீது போதை மருந்து பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவரது பட்டங்கள் திரும்பிப் பெறப்பட்டன. ஆயுட்காலத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைகள் தொடங்கியபோது, அவர்மீது குற்றம் இல்லாதவராகவும், அமெரிக்க போதைத் தடுப்பு நிறுவனம் USADA “ஓவர்-ரியாக்ட்” செய்வது போலவும்தான் சூழல் இருந்தது. ஆனால்,
தொடர்ந்து USADA வெளியிட்ட மருத்துவப் பரிசோதனை குறிப்புகள் மற்றும் சில ஆவணங்கள், பெரிய அளவில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மீண்டவர் என்பதாலும், கேன்ஸர் ஃபவுண்டேஷன் ஒன்றை நிறுவி நடத்திவருவதாலும்,  விளையாட்டு தாண்டி அவர் செய்துவரும் பல நல்ல காரியங்களாலும் அவர்மீது பெரும் மதிப்பு இருந்துவந்தது. அதனாலேயே அவர்மீதான குற்றங்களை வெளிப்படுத்தி வரும் தகவல்கள் அதிர்ச்சியாகவும், நம்பமுடியாமலும் இருக்கின்றன.

                                             -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-
 
இந்தியா வந்த ஆஸ்திரேலிய பிரதமர், திருமதி. ஜூலியா கில்லார்ட்,  காந்தி நினைவிடத்தின் புல்வெளியில் நடந்து வரும்போது கால் இடறிக் கீழே விழுந்தார். பின் சுதாரித்துக் கொண்டார். அவரது ஹை-ஹீல்ஸ் காலணி, புல்லில் மாட்டிக் கொண்டதால் விழ நேரிட்டதாகச் சொன்னார். அவரது காலணி, காலை வாரிவிடுவது, இது மூன்றாவது முறை. பின்னர் நடந்த சந்திப்பில் ஹை-ஹீல்ஸைத் தவிர்த்து, தட்டையான ஷூ அணியலாமே என்று ஒருவர் கூறியதற்கு, அவர், “ஸ்கர்ட்டுடன் flat shoe  அணிந்தால், ஆஸ்திரேலியாவினர் மத்தியில் தமது ஃபேஷன் குறித்த விமர்சனம் எழுப்பப்படும் என்பதால், அது சாத்தியமில்லை” என்று கூறியுள்ளார்!!!

அதற்கு முந்தைய வாரம், எதிர்க்கட்சித் தலைவரை “misogynist" என்று சொல்லி, பார்லிமெண்டில் வாங்கு வாங்கென்று வாங்கியதும் இவரேதான்!!



                                             -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-
அபீர் ஹம்ஸா - ஏழு வில்
 தாலிபானால் சுடப்பட்ட பாகிஸ்தானின் மலாலா யூஸுஃப்ஸாயி,
பிரிட்டனில் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறிவருகிறார். உலகம்

முழுவதும் பிரபலமாகிவிட்ட மலாலா எனக்கு “அபீர் ஹம்ஸா”வை  நினைவுபடுத்துகிறார். ஈராக்கைச் சேர்ந்த அபீர் ஹம்ஸாவும், மலாலாவைப் போல 14 வயதே நிரம்பிய சிறுமிதான் அப்போது. ஆனால், அவள் மலாலாவைப் போலப் பிழைத்துவிடவில்லை. அவளைத் திட்டமிட்டு வேட்டையாடிக் குதறிய ஐந்து அமெரிக்கப் படைவீரர்களும் அவளை உயிர்தப்ப விடவில்லை. குடும்பத்தோடு கொன்றொழித்தார்கள்.  அந்த வகையில், மலாலா கொஞ்சம் அதிர்ஷ்டக்காரிதான், உயிரை மட்டுமே குறிவைத்தார்கள்.                                           -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-
இரத்த தானம் என்பதை ஒரு அரிய சேவையாகவே பார்த்துவருகிறோம்.  மற்ற சிறந்த சேவைகளைப் போல, இதற்கும் விழிப்புணர்வு ஊட்டி வரும் கட்டுரைகள் அதிகம். எனவேதான், இதன் மறு பக்கம் - மாற்றுப் பார்வை (?) குறித்த ”இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!” என்கிற இந்தக் கட்டுரையை வாசித்தபோது, திகைப்பாகவே இருந்தது. சில கேள்விகள் சரியாகவும், சில அபத்தமாகவும் தெரிந்தாலும், “யாருக்கேனும் தேவைப்படும்போது மட்டுமே இரத்த தானம் செய்வதே சரியான வழிமுறை” என்பது சரியெனவேப் படுகிறது. 

                                             -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-
 விகடனில் ஒரு சிறுகதை படித்தபின்அநேகம் பேருக்கு, “பரீட்சைக் கனவு” வருகிறது என்று தெரிந்து, ரொம்ப மகிழ்ச்சியாயிருந்தது.  பின்னே, பரீட்சைன்னே தெரியாம வகுப்புக்குப் போய் பேயறைந்து நிற்பது, கனவில்தான் என்றாலும், அதுவும் பள்ளி-கல்லூரி எல்லாம் தலைமுழுகியபின், மிகக் கொடுமையான அனுபவம்.

இப்போதும் ஒரு பரீட்சைக் கனவு வந்தது.  வழக்கம்போலத்தான், தேர்வு என்று தெரியாமலே போய் நிற்கிறேன். எப்போதும் யாராவது புத்தகம் தருவார்கள் கடைசி நிமிட பிரஷ்-அப்புக்காக, இப்போ அட்வான்ஸ்ட் டெக்னாலாஜியாக ஒரு கை  “Kindle"-ஐ நீட்டுகிறது. ஆனால், அதிலும் சோதனை - நான் வாங்கியவுடன் அது ஹேங் ஆகிவிடுகிறது!!

                                             -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-

Post Comment