Pages

Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

சீசாவுக்குள் சுனாமி





மீபத்தில் ஒரு ஆங்கில வார இதழில், ஒரு எழுத்தாளர் விமானப் பயணங்களில் குழந்தைகள் இல்லாமலிருந்தால் எவ்வளவு நல்லாருக்கும் என்று எழுதிருந்தார். கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், அதற்குச் சில வாரங்கள் கழித்து, பிரிட்டனில் பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் ‘குழந்தைகள் இல்லாத (child-free) விமானத்தில்’ பயணிப்பதற்காக அதிகக் கட்டணம் கொடுக்கவும் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தது அதிர்ச்சியளிக்கவில்லை.  நீண்ட தூர பிரயாணங்களில் அனுபவிச்சவங்களுக்குத் தெ/புரியும்.

என்னதான் ‘குழந்தையும் தெய்வமும் ஒன்று’, ‘குழலினிது யாழினிது என்பர் மழலை சொல் கேளாதோர்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும்,  ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது குழந்தைகளின் சேட்டைகளுக்கும் பொருந்தும்.

ரு பட்டிமன்ற நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். கலை நிகழ்ச்சிகள், வந்திருந்த பெரியவர்களின் பேச்சு எல்லாம் முடிஞ்சு, ‘இந்திய நேர ஒழுங்கின்படி’, பட்டிமன்றம் ஆரம்பிக்கிறதுக்கே இரவு 9 மணிபோல ஆகிடுச்சு!! நிறைய தம்பதிகள் தத்தம் கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்களோடு வந்திருந்தார்கள். 

ஆரம்பத்தில கொஞ்ச நேரம் அலுங்காமல், நலுங்காமல் சமர்த்தாக இருந்த குழந்தைகள், கொஞ்சம் கொஞ்சமா கசமுசன்னு ஆரம்பிச்சு, ஓடியாடி, விழுந்து எந்திரிச்சு, அப்படியே சரியா பட்டிமன்றம் ஆரம்பிக்கும்போது அநேகமா எல்லாக் குழந்தைகளுமே சோர்வு, எரிச்சல், பசி ஆகியவற்றால் அழவும், சிலர் தரையில் உருண்டு அடம்பிடிக்கவும் ஆரம்பிக்க, பெரிய களேபரமா ஆகிடுச்சு!! சில பெற்றோர்கள் பட்டிமன்றத்தைச் சரியா கேட்க முடியாத எரிச்சலிலும், மற்றவர்களுக்கு இடையூறாக ஆகிவிட்ட கோபத்திலும் அங்கேயே குழந்தைகளை அடிக்கவும் செய்தார்கள்.



என் மனதில் எழுந்த கேள்வி இதுதான்: இந்த மாதிரி நிகழ்ச்சிகள் முடியுறதுக்கு குறைந்த பட்சம் மூணு மணிநேரம் ஆகும்னு எல்லாராலயும் சுலபமா ஊகிக்க முடியும். அத்தனை நேரம் நம் குழந்தைகள் அமைதியாக, பொறுமையாக இருப்பார்களா என்று பெற்றோருக்குத் தெரியாதா என்ன? அதிலும் குழந்தைகளுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத இடத்தில் எப்படி குழந்தைகள் அமைதி காப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? இப்போதைய பெற்றோர்கள் இந்த குறைந்த பட்ச அறிவு/அனுபவம்கூடவா இல்லாமல் இருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது.
          
ந்த மாதிரி நிகழ்ச்சிகளை விடுங்க - இவையாவது கொஞ்சம் காற்றோட்டமா, வெளிச்சமா இருக்கிற இடத்தில் நடக்கும். சினிமா தியேட்டர்கள்?? அங்கயும் கைக்குழந்தை முதல் எல்லா வயசு வரை பிள்ளைகளை அழைத்துச் செல்கிறார்கள். அழும் குழந்தைகளால் அவர்களுக்கும் கஷ்டம், மற்றவர்களும் ‘நாங்களும் காசு கொடுத்துத்தான் பார்க்க வந்திருக்கோம்’ என்று சண்டைக்கு வருவார்கள். முக்கால்வாசி நேரம், குழந்தையை வைத்துக் கொண்டு இருவரில் ஒருவர் - பெரும்பாலும் அப்பாதான் - வெளியே நிற்பார். இதுக்கு, பிள்ளைய வச்சுகிட்டு வீட்டிலேயே அவர் இருந்திருந்தால், டிக்கட் காசோடு நிம்மதியும் மிஞ்சியிருக்கும்.

இதைவிடக் கொடுமை, பயங்கர வன்முறைக் காட்சிகள் நிறைந்த படத்திற்கு சிறுவர்களையும் அழைத்து வருவது! எப்படி முடியுது இவங்களால?

ருசில பெற்றோர்களிடம் பேசியபோது அவர்கள் சொல்லும் காரணங்கள், ’நாங்க தனியா இருக்கோம், பிள்ளைகளை வீட்டில் பாத்துக்க ஆளில்லை’ என்பது.  சரி, குழந்தைகள் வளரும்வரை இந்த மாதிரி நிகழ்ச்சிகளெல்லாம் தவிர்க்கலாமே என்றால்,  ‘எங்களுக்கும் ஒரு பொழுதுபோக்கு, ரிலாக்ஸ் பண்ணிக்க வழி வேண்டாமா?’ என்று நம்மை முறைக்கிறார்கள். அட அப்பாம்மாக்களே, போற இடத்துல குழந்தைகள் இப்படி அழுது அழிச்சாட்டியம் பண்ணி வைக்கும்போது இருக்குற நிம்மதியும்ல போய்த் தொலையும்?

’அங்கெல்லாம் நாங்க போறதில்லை; பிரார்த்தனைக் கூடங்களுக்கு மட்டுமே போகிறோம். அங்கு எங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்வதன்மூலம் அவர்களைச் சிறுவயதிலேயே ஆன்மீகத்தில் பழக்குகிறோம்’ என்கிறீர்களா?  எந்த இடமானால் என்ன, குழந்தைகளுக்குச் சுவாரசியமான விஷயங்கள் இல்லாத இடம் என்றால், அரைமணி அமைதியாக இருந்தாலே அதிசயம்தான்!

அறியாப் பிள்ளைகளை அதிக நேரம் பிடிக்கும் பிரார்த்தனைகள், ஆன்மீகச் சொற்பொழிவு நடக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்வதும் தவிர்க்க வேண்டியதே. உங்கள் குழந்தைகளின் “tolerance point" உங்களுக்கு நிச்சயம் தெரியும். அதைச் சோதனைக்குள்ளாக்கி, அமைதி நாடி அங்கு வந்திருக்கும் மற்றவர்களின் நிம்மதியையும் பொறுமையையும் சோதிக்காதீர்கள். சட்டப்படி இதற்குத் தடை இல்லை என்றாலும், நமக்கென்று சில சுய கட்டுப்பாடுகள் வேண்டும்.

மனக்கிலேசத்துடன் வருபவர்கள் எத்தனையோ பேர்.. அவர்களுக்கு மன அமைதி கிடைக்கக்கூடிய இடத்தில் நம்மால் பங்கம் நேரலாமா? நம்மை அவர்களின் இடத்தில் வைத்துப் பார்த்தால்தான் இது புரியும்.

னில், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதற்கெல்லாம் உரிமை இல்லையா என்ற கேள்வி வரும். நமக்கு உரிமை இருக்கிறதென்பதற்காக, மற்றவர்களுக்கும் இருக்கும் உரிமைக்கு ஊறு விளைவிக்கக் கூடாது.   கைக்குழந்தைகள் இருக்கும்போது, நம் உணவுப் பழக்கங்களில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்கவில்லையா? அதுபோலத்தான் இதுவும் சில வருடங்களுக்கு.  ஏன், பல தாய்மார்களுக்கு மருத்துவர்கள் நோய்த் தடுப்பிற்காக ”பலர் கூடும் பொது இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர்கள்” என்று அறிவுறுத்தினால்  தவறாமல் பின்பற்றத்தானே செய்கிறோம்!!

சரி, அப்படின்னா குழந்தை இருக்குதுங்கிறதுக்காக நாங்க எங்கயுமே போகக்கூடாதாவென்றால், அப்படியில்லை. குழந்தைகளுக்கும் பிரியமான இடங்களுக்கு - பூங்கா, விளையாட்டு மைதானங்கள், உறவுகளின்/பள்ளித் தோழர்களின் வீடுகள் - இப்படியான இடங்களுக்கு அதிகம் செல்லலாம் .  அழைத்துச் சென்றேயாக வேண்டிய இடங்களுக்கு, உரிய தயாரிப்போடு செல்லுங்கள்.  செல்லும்முன்பே சிறுவர்களுக்கு அறிவுறுத்தி அழைத்துச் செல்லலாம். அங்கே சென்றபின் அவர்கள் நேரம் செலவிடும்படியாக சிறு விளையாட்டுப் பொருட்களை உடன் எடுத்துச் செல்லலாம். நசநசவென ஆகிவிடாத உணவுப் பண்டங்கள் வைத்துக் கொள்ளலாம்.

 
                           
 
ந்த விஷயத்தைக் குழந்தைகளின் தரப்பிலிருந்து பெற்றோர்கள் பார்க்கத் தவறிவிடுகின்றனர். நம்ம வீட்டிலேயே ஒரு இடத்தில் அரைமணிக்குமேல் இருக்க முடியாத பிராயத்திலுள்ளவர்களை பொது நிகழ்ச்சிகள், சினிமாக்கள், ஆன்மீகச் சொற்பொழிவுகளில் அமைதியாக இருக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? அட, எத்தனை பேருக்கு, தம் குழந்தைகளை ஒரு இடத்தில் அமரவைத்து சாப்பாடு கொடுக்கவோ, ஹோம்வொர்க் முழுதுவதையும் எழுத வைக்கவோ முடிகிறது?

இப்பேர்ப்பட்ட குழந்தைகளை, நமக்கு (மட்டும்) பிடித்தமான இடங்களுக்கு அழைத்துச் சென்று,  கட்டிப்போட்டதுபோல மணிக்கணக்கில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முறையா? குழந்தைகளை ஒரு அறைக்குள் அடைப்பதும், சுனாமியை சீசாவுக்குள் அடைப்பதும் ஒன்றுதான்.

Post Comment

திறப்புவிழா






ஸ்ஸப்பா... வருஷா வருஷம் இது ஒரு வேலையாப் போச்சு. நம்மூர்ல போகிப் பொங்கலுக்கு இதைச் செய்வாங்க. நான் வருஷத்துக்கொருவாட்டி ஊருக்குப் போகும்போதெல்லாம் இதைச் செய்யவேண்டி இருக்கு...

என்னன்னு சொல்லாமலே புலம்பிகிட்டிருக்கேன் பாத்தீங்களா.. என் ரங்க்ஸும் இதத்தான் சொல்வாரு. முதல்ல விஷயத்தைச் சொல்லிட்டு அப்புறம் புலம்புன்னு. அப்படின்னா அவரும் கரெக்டாத்தான் சொல்லிருக்காரு போல.. நாந்தான் உடனே அதுக்கும் கூட நாலு புலம்பல் சேர்த்துப் புலம்புவேன்.

சரி..சரி.. நீங்களும் டென்ஷனாகாதீங்க..  வேறென்னங்க.. வருஷா வருஷம் லீவுல ஊருக்குப் போறோம்னு ஒருவார்த்தையில சொல்லிட்டுக் கிளம்பிடுறோம். ஆனா, அந்த ஒரு வார்த்தைக்குப் பின்னாடி எம்புட்டு வேலை இருக்கு தெரியுமா? கிளம்புற ஒரு மாசத்துக்கு மின்னயே அரிசி, பருப்பு, புளின்னு மளிகைகளை எல்லாம் கணக்குப் பாத்துச் செலவு பண்ணிக் காலி பண்ணிடனும். ஃப்ரிட்ஜிலயும் காய்கறிகளோட பட்டர், ஜாம், சாஸ்,சீஸ் எல்லாத்தையும்  காலி பண்ணனும். அதுவும் எப்படின்னா, கரெக்டா கடைசி நாள்தான் எல்லாம் காலியாகிற மாதிரி பாத்துக்கணும். கடைசி நாள் சிம்பிளாவாவது சமைக்கவேண்டாமா பின்ன? (யாரது.. தினமுமே என் சமையல் சிம்பிள்தானே நக்கலடிக்கிறது..)

அப்புறம் பேப்பர், ஃபோன், தண்ணி கட் பண்றதுக்கு ஃபோன் பண்ணியாச்சான்னு ரங்க்ஸை நச்சரிக்கணும்.. கிச்சன்ல அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர் முதல் ஹால் ஃபர்னிச்சர் - ஸோஃபா, டைனிங் டேபிள், சேர், கம்ப்யூட்டர்+டேபிள் போன்ற எல்லாத்தையும் தூசி அடையாம இருக்க பெட்ஷீட் அல்லது பேப்பர் போட்டு மூடணும். இடையில் ஊருக்குப் போற ஷாப்பிங், பேக்கிங்.. நடுவுல பசங்க பரிட்சை, ஹோம் வர்க்.. இதுல குக்கிங்கும் செய்யணும்...  கதவு, ஏஸி, ஜன்னல்னு காத்துல தூசி வீட்டுக்குள்ள வர்ற வழிகளை டைட்டா மூடி/பேப்பர் வச்சு அடைக்கணும்.

இருந்தாலும் ஒரு பத்து நாளைக்கொரு தரம் வீட்டைத் திறந்து பாத்துக்கச் சொல்லி யார்கிட்டயாவது பொறுப்பாச் சாவி கொடுக்கணும். நட்புகள், உறவுகள்னு எல்லார்கிட்டயும் ஊருக்குப் போறேன்/வர்றேன்னு தகவல் சொல்லணும். செடிகளுக்குத் தண்ணி ஊத்த ஆள் ஏற்பாடு பண்ணனும். அந்த ஆள் தவறாம வர்றாரான்னு கவனிச்சுக்க இன்னொரு ஆள்கிட்டச் சொல்லி (alternative) வைக்கணும்... என்னது இதுக்கே “ஸ்ஸப்பா”ங்கிறீங்க..



இப்ப ஊருக்குப் போயாச்சு. அப்பாடான்னு மூச்சு விடாதீங்க.. அங்க பூட்டிக் கிடக்கிற வீட்டைத் திறந்து ”திறப்பு விழா”  நடத்தணும்.. அதாங்க.. சுத்தம் செய்யணும். அவ்வ்வ்வ்...  பேப்பர், பால், தண்ணி, வேலைக்காரர் எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணனும்.  சமையலுக்கு இங்க போட்ட மாதிரியே ஒரு ஸ்பூன் மிளகாய்ப் பொடியைப் போட்டுட்டு, “அச்சச்சோ, காரம் கூடிப் போச்சே”ன்னு மாமியார்கிட்டே அசடு வழியணும்... ஒரு வழியா “கை திருந்தி” சமைக்க ஆரம்பிக்கும்போது லீவு முடியும். மறுபடி எல்லாம் ஏறக்கட்டி,  காலி பண்ணி...  கிளம்பி இங்க வந்து... ”இனிமே யாராவது லீவுல ஊருக்குப் போணும்னு சொல்லிப் பாருங்க”ன்னு புலம்பிகிட்டே இங்க மறுபடி எல்லாத்துக்கும் ”திறப்பு விழா” நடத்தி...

அதெங்கே..? ‘பிரசவ வைராக்கியம்’ மாதிரி அடுத்த மாசமே, “இன்ஷா அல்லாஹ் அடுத்த வாட்டி ஊருக்குப் போகும்போது...”ன்னு ஆரம்பிக்கிறது வேற யாரு.. நானேதான்... ஹூம்...

இதெல்லாம் போறாதுன்னு இப்ப ஒரு மூணு வருஷமா இன்னொன்னுக்கும் சேத்து மூடு விழா/ திறப்புவிழா நடத்த வேண்டியிருக்கு. என்னன்னு கண்டுபிடிங்க பாப்போம்..  ஆமாம், “வலைப்பூ”வுக்குத்தான்!!

ஊருக்குப் போயாச்சு, வந்தாச்சு.. அப்புறமென்ன... வழக்கம்போல அடுத்த பதிவு “India Special Edition"தான்!!

Post Comment

கடைசிக் கடமை




அலுவலகமானாலும், வீடானாலும், நாம் நமக்குரிய கடமைகளை, அல்லது அன்றாட வேலைகளைச் செயல்படுத்தும்போது, அவற்றை வரிசையாக முன்னுரிமைப் படுத்தி, முதலில் செய்ய வேண்டுவனவற்றை முதலில், மற்றவற்றை அடுத்தடுத்து என அவற்றின் காரணகாரியங்களைப் பொறுத்துச் செய்வதுண்டு. எனினும், எதையும் செய்யாமல் விடுவதில்லை. சிலவற்றை செய்துமுடிக்க, வேறு தொடர்புடைய ஆவணங்கள் தேவைப்படலாம். எனில், அவற்றைக் கேட்டுப் பெற்று, செய்து முடிப்போம்.

இதேபோலத்தான்  நாடு, மொழி, இனம், ஆண், பெண், ஏழை, பணக்காரன், இளையவர், முதியவர் என எந்தப் பேதமுமில்லாமல் கடைபிடிக்க வேண்டிய முஸ்லிம்களின் ஐந்து கடமைகளும்.

1  ஒரு முஸ்லிமாக இருப்பவர் நிறைவேற்ற வேண்டிய ஐந்து கடமைகளில், முதலாவது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்ற இறை நம்பிக்கை. 24x7 கடைபிடிக்க வேண்டியது.

2. இரண்டாவதான தொழுகை: தினமும் ஐந்து முறை தொழுவது எல்லாருக்கும் கட்டாயமான  கடமை.

3. மூன்றாவதான நோன்பு:  வருடத்தில் குறிப்பிட்ட தினங்களில், சூர்யோதயம் முதல் சூர்ய அஸ்தமனம் நோன்பிருப்பது எல்லாருக்கும் கடமை. ஆனால் உடல் நலமில்லாதவர்களுக்கு மட்டும் சலுகைகளுண்டு. எனினும், பின்னர் உடல்நலமடைந்தவுடன் விட்ட நோன்புகளை நிறைவேற்றுவது அல்லது பசித்தோருக்கு உணவளிப்பது என்று பரிகாரங்கள் உண்டு.

4. நான்காவதான ஸகாத் எனப்படும் தர்மம்: குறிப்பிட்ட அளவுக்குமேல் செல்வம் உடையோருக்கு மட்டுமே உரிய கடமை.

5. அதுபோலத்தான் ஐந்தாவதான ஹஜ்ஜும்.  கடைசிக் கடமையாய் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்தே புரியும்,  பல நிபந்தனைகளுக்குட்பட்டது என்று.

1. நிபந்தனைகள்:

மற்ற கடமைகளெல்லாம் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே செய்யக்கூடியவை. ஆனால், ஹஜ் என்பது, ஒரு குறிப்பிட்ட மாதத்தில், சவூதி அரேபியா நாட்டில் உள்ள “மக்கா” என்ற நகருக்குச் சென்று நிறைவேற்ற வேண்டிய கடமை. அதனால்தான், அந்நாட்டிற்குச் சென்றுவருமளவு பணவசதியும், உடல்நலமும் உள்ளவர்கள்மீதே இந்தப் புனிதப் பயணம் மேற்கொள்வது கடமையாக்கப்பட்டுள்ளது.

உடல்நலம்: தூரதேசப் பயணம் மற்றும் அலைச்சல் ஆகியவற்றைத் தாங்கி,  பிரார்த்தனைகளைத் தடங்கலின்றி நிறைவேற்றித் திரும்புமளவு குறைந்த பட்ச உடல் மற்றும் மனநலம் அவசியம்.

பணவசதி: சவூதிக்குச் சென்று வருவதற்கு மட்டுமல்லாமல், அங்கிருக்கும் நாட்களில் தனக்கு வேண்டிய பராமரிப்பு மற்றும் அச்சமயத்தில் தன் குடும்பத்திற்குரிய பராமரிப்பு  ஆகியவற்றைக் குறைவின்றி நிறைவேற்றத் தேவையான பணம் இருக்கவேண்டும்.

இவையிரண்டும் ஒருவரிடம் இருந்தால்தான், அவருக்கு ஹஜ் செய்ய வேண்டிய கடமையாக ஆகின்றது.

இன்னும் சில உண்டு:

* அதாவது, ஹஜ்ஜைவிட முன்னுரிமைப்படுத்த வேண்டியத் தேவைகளை/ கடமைகளை முதலில் நிறைவேற்ற வேண்டும். உதாரணம்: அடைக்கப் படவேண்டிய அவசியமான கடன்கள், தான் இல்லாத சமயத்தில் குடும்பத்தின் பாதுகாப்பு, தேவைகள் நிறைவேற்ற வழிகள் கண்டு, பொறுப்பாளரை நியமித்தல் .

* ஒருவரின் ஹஜ்ஜை நிறைவேற்ற அவரேதான் பொறுப்பாளி. அதாவது, பெற்றோர் தன் மகனையோ, மனைவி தன் கணவனையோ அதற்கான செலவிற்கு எதிர்பார்த்தல் கூடாது. அதே சமயம், அன்பினால் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டால் தவறில்லை.

* அதேபோல, வசதியில்லாதவர்கள், பக்திமேலீட்டால் யாசகம் பெற்றாவது ஹஜ் செய்ய வேண்டும் என்று எண்ணுதல் கூடாது. எனினும், தான் எதிர்பாராமல் அவ்விதம் ஒரு உதவி தன்னைத் தேடி வந்தால், விருப்பமிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.

* ஹஜ்ஜிற்கான பணத்தை நேர்வழியில் சம்பாதிருத்தல் அவசியம்.

* பணமிருந்து, உடல்நலமில்லை என்றால், தனக்காக உறவினரை தனது செலவில் செய்து வருமாறு கேட்கலாம். ஆனால், அவ்வுறவினர் தனக்கான ஹஜ்ஜை ஏற்கனவே செய்தவராக இருக்க வேண்டும்.

* நிபந்தனைகள்படி ஒருவர்மீது, ஹஜ் கடமையாக இருந்து, ஆனால் செய்யாமல் இறந்துவிட்டாரானால், அவரது வாரிசுகளின்மீது  பெற்றவருக்காக அதை நிறைவேற்றும் கடமை உண்டு. இதற்கு இறந்தவரின் சொத்திலிருந்தே பணம் எடுக்க வேண்டும்.

* ஒருவரின் வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் ஹஜ் செய்யவேண்டியது கட்டாயக் கடமை. எனினும், விருப்பப்பட்டு, நிபந்தனைகளுக்குட்பட்டு, பலமுறைகள் செய்வதில் தவறில்லை.

”மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையின்போது குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! ஓவ்வொரு ஆண்டுமா?” என்று கேட்டார். அவர் இவ்வாறு மூன்று தடவை கேட்கும் வரை நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்துவிட்டு “நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே கடமையாகிவிடும். அதற்கு நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள்” என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ)

இறைவன் இஸ்லாமை பின்பற்ற எளிமையானதாகவே ஆக்கித் தந்திருக்கிறான் என்பதை இவையெல்லாம்  மேலும் உறுதிப் படுத்துகின்றன.

2. எப்பொழுது:

இஸ்லாமிய காலண்டர்படி, 9-வது மாதமான ”ரமலான்” மாதத்தில் நோன்பு முடிந்ததிலிருந்து, 12-வது மாதமான ”துல் ஹஜ்” மாதத்தின் 8-13 தேதிகளில் நிறைவேற்ற வேண்டியது ஹஜ்.  இவ்வருடம், ஆங்கிலக் காலண்டரில் நவம்பர் முதல் வாரத்தில் வரும்.

இப்போது ஹஜ்ஜுப் பயண காலம் தொடங்கிவிட்டது.  இந்தியாவிலிருந்தும் பல குழுக்களாக ஹாஜிகள் (ஹஜ்ஜு செய்பவர்கள்) சவூதி சென்று இறங்கத் தொடங்கிவிட்டார்கள்.

3.  ஹஜ்ஜின்போது என்ன செய்வார்கள்:



1. ஹஜ் செய்வதற்காக “இஹ்ராம்” எனப்படும் உடை, செயல் மற்றும் மனக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளுதல்.  ஆண்கள் தைக்கப்படாத ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் தங்கள் இயல்பான உடையை அணிந்துகொள்ளலாம்.

2. மக்காவை அடுத்துள்ள ‘அரஃபா’ என்ற இடத்திற்கு 9-ம் நாள் சென்று தங்கியிருத்தல்.

3. பின்னர் மக்கா வந்து,  கஃபா எனப்படும் இறையில்லத்தை ஏழு முறை வலம் வரவேண்டும். இதற்கு தவாஃப் எனப்பெயர்.

4. பின்னர் முடியிறக்க வேண்டும். ஆண்கள் மொட்டையடித்துக் கொள்வது சிறந்தது. பெண்கள் ஒருவிரல் நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவேண்டும்.

இவை தவிர,

1. ஸயீ - மக்காவில் ஸஃபா, மர்வா என்ற இரண்டு சிறு குன்றுகளுக்கிடையில் ஏழு முறை நடத்தல். 

இப்ராஹீம் நபியின் மனைவி ஹாஜராவும், குழந்தை இஸ்மாயிலும் பாலைவனத்தில் இம்மலைகளின் அருகில் சென்று கொண்டிருந்தபோது, குழந்தை தாகத்தால் தவித்து அழ, தண்ணீர் தேடி ஹாஜரா அவர்கள்  ஓடினார்கள். ஒரு மலையின் புறமிருந்து பார்க்கும்போது இன்னொரு மலையில் நீர் தெரியும். தண்ணீரென்று நம்பி ஓடினால், அது கானல் நீர்!! இவ்வாறு ஏழு முறை பரிதவித்து ஓடிய பொழுது, குழந்தையின் பாதத்தினடியிலேயே இறைவன் ஒரு நீரூற்றை வரச் செய்தான். வழிந்து ஓடும் நீரைக் கண்ட ஹாஜரா அவர்கள், குடிப்பதற்குமுன் தண்ணீர் முழுதும் வழிந்தோடிவிடுமோ, குடிக்கக் கிடைக்காதோ என்ற அச்சத்தில் “நில் நில்” என்று பொருள்படும் “ஸம் ஸம்” எனக் கூறியபடி நீரை நோக்கி ஓடினார்கள். அந்த நீரூற்றுதான் இன்றும் - பல ஆயிரமாண்டுகள் கழிந்தும் - வற்றாத ஊற்றாக இருக்கும் “ஸம் ஸம்” என்ற ஊற்று. இது கஃபாவின் அருகிலேயே உள்ளது.

2. ஷைத்தானின் மீது கல்லெறிதல்.

இப்ராஹீம் நபிக்கு திருமணமாகி பல ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர் இஸ்மாயீல் நபி. எனினும், அவரைப் பரிசோதிக்க எண்ணிய இறைவன், இஸ்மாயீலைப் பலியிடுமாறு இப்ராஹீமுக்குக் கட்டளையிட, அவரும் இறைகட்டளையை ஏற்று, பலியிடச் செல்லும்போது, ஷைத்தான் மூன்று முறை அவரின் உறுதியைக் கலைக்க முயலுகிறான். எனினும், அவனைப் புறந்தள்ளி இறைவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றச் செல்கிறார். அவரின் நம்பிக்கையால் திருப்தியடைந்த இறைவன், ஆடு ஒன்றைப் பலி கொடுக்கச் செய்கிறான்.

இதேபோல, நாமும் தீய சக்திகளின் சூழ்ச்சிக்கு ஆட்படாமல் இருக்க வேண்டி, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மூன்று தூண்கள் மீது கல்லெறிதல் வேண்டும்.

3. மினா, முஜ்தலிஃபா ஆகிய இடங்களில் குறிப்பிட்ட நாட்களில் தங்கியிருத்தல்.

4. ஆடு, மாடு அல்லது ஒட்டகம் ஏதேனும் ஒன்றை குர்பானி கொடுத்தல்.

ஆக மொத்தம் இவையே ஹஜ் எனப்படும் புனிதப் பயணத்தில் செய்ய வேண்டியவை. ஹஜ் நிறைவேற்ற 5 நாட்களே தேவைப்படும் என்றாலும், புனித பூமியான மக்காவிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததோடு மேலும் பல நாட்கள் இருந்து, அதிகப்படியான தொழுகைகள், ‘உம்ரா’ எனப்படும் ’சிறிய ஹஜ்’, மதினா சென்று சிறப்பு வாய்ந்த நபி பள்ளியில் பிரார்த்தித்தல்,  இன்னும் சில வரலாற்றுப் பிரசித்திப் பெற்ற இடங்களைக் கண்டு வருதல் ஆகிய காரணங்களுக்காகவே இந்தியாவிலிருந்து செல்பவர்கள் இதை ஒரு மாதப் பயணமாக மேற்கொள்கிறார்கள்.

இனி, ஹஜ் செய்ய விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகளைப் பர்க்கலாம்.

4. செல்லுமுன்:

* ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். (அல்குர்ஆன் 2:19) 
அல்லாஹ்வுக்காக அந்த ஆலயம் சென்று ஹஜ் செய்வது மனிதர்களில் அதன் பால் (சென்றுவர) சக்தி பெற்றவர் மீது கடமையாகும். (அல்குர்ஆன் 3 : 97)

ஆகிய குர் ஆன் வசனங்களின்படி, நாம் செய்யும் ஹஜ் இறைவனுக்காக மட்டுமே செய்யப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்க.

*ஏறக்குறைய ஒரு மாத காலம், லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தில், அதுவும் புதிய நாட்டில் இருக்க வேண்டும் என்பதால் கவனமெடுத்து நம் உடல்நலத்தைப் பேணிக் கொள்வது நல்லது.

*பிரார்த்தனைகள் பலவும் நடந்தே சென்று நிறைவேற்ற வேண்டியவை என்பதால், செல்வதற்குப் பல மாதம் முன்பே நடைப் பயிற்சி மேற்கொள்ளுவது சிரமத்தைக் குறைக்கும்.

* முன்சென்றவர்களிடம் கேட்டறிந்து, என்ன மாதிரியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிந்துகொள்ளுதல் வேண்டும்.

* ஹஜ் செல்வதன் பெயரால் விருந்துகள், சம்பந்திச்சீர்கள் போன்ற அநாச்சாரங்களைச் செய்யவோ, ஏற்கவோ கூடாது. மேலும், அரசியல்வாதி போல, ரயில், விமான நிலையங்களுக்கு தம் உறவு, நட்புக் கூட்டங்களுடன் வந்து மற்ற பயணிகளுக்கும், பணிபுரிபவர்களுக்கும் சிரமத்தைத் தரக்கூடாது. மற்றவர்களிடையே இஸ்லாம் குறித்த முகச்சுளிப்பு ஏற்பட வைக்கக் கூடாது.

5. சென்ற பின்:

* அங்கு சென்றிருப்பது, இறைகடமைக்காக மட்டுமே என்பதை மனதில் வைத்து பிரார்த்தனைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* இறைவன் ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்பதை எப்போதும் மறக்க வேண்டாம். கஃபாவின் சுவர்களைத் தேய்த்துத் தடவுவது, முத்தம் கொடுப்பது, ஹஜ்ருல் அஸ்வத்தைத் தொட விரும்பி கூட்டநெரிசலில் அடித்துப்பிடித்து நுழைவது, நபி(ஸல்) அடக்கஸ்தலத்தில் அவர்களிடம் பிரார்த்திப்பது போன்ற, மற்றவர்கள் அறியாமையில் செய்யும் அநாச்சாரங்களைக் கண்டு, நீங்களும் உணர்ச்சி வசப்பட்டு செய்துவிட வேண்டாம்.

* லட்சக் கணக்கானோர் கூடியிருக்கும் இடத்தில்  பல அசௌகரியங்கள் இருக்கலாம். எனினும், அவற்றை அதிகம் பொருட்படுத்தாமல் இருத்தல் அல்லது அதற்கேற்றவாறு மாறிக் கொள்ளுதல் அவசியம். ’டில்லிக்கு ராஜான்னாலும், பள்ளிக்குப் பிள்ளைதான்” - மறக்க வேண்டாம். பிரார்த்தனையே நமது முதல் இலட்சியம்.

* நம்மால் எந்த சிரமமும் மற்றவர்களுக்கேற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, பள்ளிகளில் மக்கள் செல்லும் பாதைகளில் அமர்வதைத் தவிர்ப்பது; குப்பைகளை உரிய இடத்தில் போடுவது; சுத்தத்தைப் பேணுவது.

* தேவையான மாத்திரை, மருந்துகளை உரிய மருந்துச் சீட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.மக்கள் கூட்டத்தால் ஜலதோஷம் போன்ற தொற்று நோய்கள் பரவுவது எளிது. அதைத் தடுக்க “மாஸ்க்” அணியலாம்.

* சவூதியில் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் இருப்பார்களாயின், அதிகம் உரிமையெடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். நீங்கள் வந்து சென்றது அவர்களுக்கு நல்ல நினைவாக இருக்கும்படி நடந்துகொள்ள வேண்டும்.

6. செல்வதன் பலன்?

ஹஜ்ஜின் கடமைகளைச் சரியாக, குறைவில்லாமல், முழுமையாகச் செய்து, இறைவன் அந்த ஹஜ்ஜை ஏற்றுக் கொள்வானாயின், அவரை அன்று பிறந்த பாலகன்போல பாவங்களிலிருந்து மன்னித்து விடுவான்.

7. சென்று வந்த பின்:

ஒருவர் செய்த ஹஜ் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அவரது அதுவரையான பாவங்கள் மாத்திரமே மன்னிக்கப் பெறும். அதன் பின்னர் அந்நிலையைத் தன் நல்ல நடத்தைகளினால் தக்கவைத்துக் கொள்வது அவர் பொறுப்பு.

அதனால்தான், அந்தக் காலங்களில், பக்குவம் அதிகம் வந்திருக்கும் வயதான காலத்தில்தான் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தார்கள்போல. எனினும், வாய்த்திருக்கும் வசதியும், வாழ்க்கையும் (உயிர்) என்றுவரை நிலைத்திருக்கும் என்பதை நாம் அறியமுடியாதே! ஆகையால், உரிய காலத்திலேயே இக்கடமையை  நிறைவேற்ற முனைவோம், இன்ஷா அல்லாஹ்.

Ref: www.ourdialogue.com/pilgrimage

Post Comment

தொடர் புரட்சிகள்






புரட்சி.. புரட்சி.. எங்கே பார்த்தாலும் ஒரே புரட்சிமயமா இருக்கு!! முத முதல்ல, சூடான் நாட்டைப் பிரிக்கணும்னு ஆரம்பிச்சு அதுக்காக ஓட்டெடுப்பு நடத்தி, பிரிச்சேயாகணும்னு முடிவு பண்ணிட்டாய்ங்க. அடுத்து, எண்ணெய்க் கிணறுகளின் வருவாய் குறித்து ரெண்டு நாடுகளும் - வட, தென் சூடான்கள் - அடிச்சுக்காம இருக்கணும்.

அடுத்தது, துனீஷியா நாட்டுல, வேலையில்லாத் திண்டாட்டத்தால ஒரு இளைஞர் அரசு அலுவலகம் முன் தீக்குளிக்க, ஏற்கனவே பொருளாதார நெருக்கடியாலும், ஊழல்களாலும் வெறுத்துப் போயிருந்த அந்நாட்டு மக்கள் ஆரம்பிச்ச புரட்சி அந்த நாட்டுத் தலைவரை தப்பிச்சோம், பிழைச்சோம்னு நாட்டைவிட்டு ஓட வச்சுடுச்சு.

இப்ப, அந்தப் புரட்சி சூறாவளி கரைகடந்து, பக்கத்தில இருக்க எகிப்து நாட்டை  சுழட்டியடிச்சுகிட்டு இருக்குது. எகிப்து அதிபரின் வாரிசு (அடுத்த அதிபரா ஆகியிருக்க வேண்டியவர்) குடும்பத்தோட லண்டனுக்கு தப்பிச்சு ஓடிட்டார். 30 வருஷ அதிபர் முபாரக் ‘அஞ்சாநெஞ்சரா’ ஈடுகொடுத்து நிக்கிறார். எகிப்திலும் அதே பொருளாதார நெருக்கடியும், ஆட்சியாளர்களின் உறவினர்களின் ஊழல்கள், வேலையில்லாத் திண்டாட்டம்தான் பிரச்னை.

இன்னுமொரு அரேபிய நாடான ஏமனிலும் புரட்சியாளர்கள், 32 வருட ஆட்சியாளரான சாலேஹ்-விற்கு எதிராகத் தலைதூக்க ஆரம்பிக்க, கொஞ்சம் தட்டி வைக்கப்பட்டிருக்கிறார்கள். என்றாலும், அதுவும் நீறு பூத்த நெருப்பாகத்தான் இருக்கு. புரட்சியிலும் இன்னொரு புரட்சியா, ஏமனில் புரட்சிக்குத் தலைமை தாங்குவது “தவக்குல்” என்ற பெண்மணி!! (பெண்)குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடக்கிறதென்றும், தீவிரவாதிகளுக்குப் புகலிடம் என்றும் குற்றம் சாட்டப்படும் அரபு நாடான ஏமனில் இதுவே ஒரு பெரும்புரட்சியாகத் தெரிகிறது.


அந்த புரட்சி, இந்தப் புரட்சின்னு நாமெல்லாம் பள்ளிக் கூடத்துல வரலாறு பாடத்துல படிச்சுத்தாம் பார்த்திருக்கோம்.  நாம வாழுங்காலத்திலேயே பாக்கக் கொடுத்து வச்சிருக்கணும்!! என்ன ஒண்ணு, இந்த புரட்சிகள் எல்லாம் அந்தந்த நாட்டின் பிரச்னைகளுக்கு விடிவு தந்தால் சந்தோஷம்தான். காரணம், இந்த நாடுகளில் ஏற்கனவே சில தீவிரவாத குழுக்கள் செயல்பட்டு வந்தாலும், இந்த அதிபர்கள்தான் அவற்றைக் கடுமையாக அடக்கி வச்சிருக்காங்க. அப்புறம், வாணலிக்குத் தப்பி அடுப்பில விழுந்த கதையா ஆகிடக் கூடாதுங்கிறதுதான் நம்ம கவலை.

இந்த நாடுகளின் பொதுவான பிரச்னைகள் என்னன்னா, பொருளாதாரத் தேக்கமும், வேலையில்லாத் திண்டாட்டங்களும் என்றாலும், நீண்டகாலமாக ஆட்சிபுரியும் ஆட்சியாளர்கள் மற்றும் உறவினர்களின் ஊழல்களும், வாரிசு அரசியலும்தான் முக்கிய காரணங்கள். பாவம், இந்த ஆட்சியாளர்களுக்கு இலவசங்களின் மகிமையை யாரும் சொல்லவில்லை போல!!

எகிப்திலும் போராட்டங்கள் ஒரு வாரமா நடந்துகிட்டிருந்தாலும், இணையம், தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, செய்திகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் அதிபரின் பிடி இறுக்கமாகத்தான் இருக்கிறது என்ற செய்திகள் ஒருபுறமும், இல்லையில்லை ராணுவமும் அவருக்கு எதிராக திரும்புகிறது என்ற செய்திகளும் வருகின்றன. என்ன நடக்கிறது பார்ப்போம். இதுக்கிடையில், சந்துல சிந்து பாடுன கதையா, ‘பிக் பாஸ்’ அமெரிக்காவும், புரட்சியாளர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் வேணும்னு தன் ஆதரவை மறைமுகமாத் தெரிவித்துள்ளது. ஆமை நுழைஞ்ச வீடுகூட உருப்பட்டுடும், அமெரிக்கா நுழைஞ்ச நாடு என்னாகும்னு, ஈராக் ஒண்ணே உதாரணம்!!

இந்தத் தொடர் புரட்சிகளைப் பார்த்து அரண்டு போயிருக்கும் நாடுகளில் ஒன்று சீனா!! அவசர அவசரமாக, தன் நாட்டு இணையத்தில் “எகிப்து ” என்ற வார்த்தையைத் தேடுயந்திரத்தில் பயன்படுத்தத் தடை விதித்திருக்கிறது.

புரட்சின்னதும், நம்ம நாட்டுல கம்யூனிஸமும், அப்புறம் கேரளாவும் கண்டிப்பா ஞாபகம் வரும்.  கேரளாவில கொஞ்ச நாள் முன்னாடி, கேரளாவில்  பிரபல வி-கார்ட் நிறுவனத்தின் தலைவர் கொச்சோஸஃப், தானே லோடுமேனாக மாறி, தன் நிறுவனத்திற்கு வந்த  வண்டியிலிருந்து சுமைகளை இறக்கினார்.  தமிழ்நாட்டிலதான் இலவசங்களாலும், நூறு நாள் திட்டத்தாலும் வேலைக்கு ஆட்கள் கிடைக்க மாட்டேங்குதுன்னா, அங்கே ஆட்கள் இருந்தாலும் வெளியிலிருந்து சிலர் தலையிட்டு செய்ய விடமாட்டேங்கிறாங்களாம். தொழிலாளர் பிரச்னைகள் தீராவிட்டால், வி-கார்ட் நிறுவனத்தை வேறு மாநிலத்திற்கு இடம் மாற்றப் போவதாகவும் சொல்லிருக்கார்.

தமிழநாட்டுல வீட்டு கட்டுமான வேலைகளுக்கு தினச்சம்பளம் 400 ரூபாயாம். உறவினர் ஒருத்தர், அமீரகம் வந்து இருவது வருஷங்களுக்குப் பிறகு, எல்லாக் குடும்பக் கடமைகளையும் முடிச்சுட்டு இப்பத்தான் இந்தியாவுல வீடு கட்ட முடிஞ்சிருக்கு. ஒரு வருசம்  முன்னாடி கட்ட ஆரம்பிச்சப்போ, 300 ரூபாயா இருந்தது, அப்புறம் 350 ஆகி, இதோ போன வாரம் பெட்ரோல் விலை கூடினதைக் காரணம் காட்டி(!!) 400 ஆக்கிட்டாங்க!! ”அட, அப்படின்னாலும் வேலைக்கு ஒழுங்கா வந்தாச் சர்தான்னு இருக்கு. ரெண்டு நா வந்தா, நாலு நாள் வரமாட்டேங்கிறாங்க. வேற எங்கயும் வேலைக்கும் போறமாதிரி தெரியலை. எப்படித்தான் அவங்களுக்குக் கட்டுப்படியாகுதோ”ன்னு புலம்புறார் அவர்.

இன்னொரு உறவினரின் வீட்டில் பராமரிப்பு வேலை நடக்கிறது. அங்கேயும் இதே கதைதான். வீட்டுத் தலைவி சொல்கிறார், “காலையில  9 மணிக்கு இங்கே வந்ததுக்கப்புறம் காலைச் சாப்பாடுக்கொரு முக்கா மணிநேரம். 11 மணிக்கு டீ டைம் அரைமணி நேரம். அப்புறம் லஞ்சுக்கு ஒரு மணிநேரம். 3 மணிக்கு டீ குடிக்கப் போனா, முக்கா மணி நேரம். அப்புறம், அஞ்சு மணிக்கே எல்லாத்தையும் ஏறக்கட்ட ஆரம்பிச்சிடுறாங்க. இப்பம்லாம் டீ குடிக்க வெளிய போவேணாமுன்னு சொல்லி, நானே வீட்டுல ரெண்டு வேளை டீ போட்டுக் கொடுத்துடுறேன். ஒரு மணிநேரம் கூடக் கிடைக்குமே? மொத்தத்துல ஒரு நாள்ல ஆறு மணிநேரம் வேலை பாத்தாங்கன்னா அதிகம். ஒரு வார்த்தைச் சொல்லிட்டோம்னா  அவ்ளோதான், அப்புறம் வேலைக்கு வரமாட்டாங்க. வேற ஆட்களைத் தேடிக் கண்டுபிடிக்க மின்ன பெரும்பாடு. வர்றவங்களும் நம்பிக்கையான ஆளா இருக்கணுமேயின்னு பயம். அதனால, என்னைய வாயத் தொறக்கக்கூடாதுன்னு எங்கூட்டுக்காரர் சொல்லிருக்கார். ஒவ்வொரு நாளும் கூலி கொடுக்கும்போது வயிறு எரியத்தான் செய்யுது. எங்கூட்டுக்காரருக்கென்ன கவுர்மெண்டு வேலையா இல்லை துபாய் காசா?” அவ்வ்வ்வ்... துபாய்ல மட்டும் மரத்துலயா காய்க்குது காசு?

இதன் விளைவுதானோ, பெரும் கட்டிடங்களின் பணிகளில் பீஹாரிகளும், நேப்பாளிகளும், வடகிழக்கு மாநிலத்தவர்களும் தமிழகத்தில் பெருமளவில் காணப்படுகிறார்கள்? இப்படியே போனால், இங்கும் வெளிமாநிலத்தவர்களை வேலைக்குக் கூட்டி வரக்கூடாதென்று தாக்கரே-பாணி புரட்சி  வெடித்தாலும் ஆச்சர்யமில்லை.

கேரளத்துக்கதையொன்று: வறுமையில் வாடும் வயதான அம்மா, தன்னைக் கவனிக்காத மகனிடம், “மகனே! உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன்? சுடுசோற்றை உனக்குத் தந்துவிட்டு, வெறும் கஞ்சியை நான் குடித்தேனே!” என்று சொல்ல,  மகனோ, “சத்துக்கள் நிறைந்த கஞ்சியை நீ குடித்துவிட்டு, சோறெனும் சக்கையைத்தானே நீயெனக்குத் தந்தாய்?” என்றானாம்.

  

Post Comment

ஊசல்







மணி மதியம் 1.30. சாப்பாட்டை எடுத்துக் கொண்டு ஆஃபீஸ் கிச்சனுக்குச் சென்றேன்.  கிச்சனின் ஜன்னல் வழியே வெளியே தெரியும் குடியிருப்பின்  வில்லாக்களையும் (பங்களா), மரங்களையும் பார்த்துக்  கொண்டே சாப்பிட்டுவது வழக்கம். ஆஃபிஸ் ரூமின்வழி  வெளியே பார்க்க முடியாது. வெயிலோ, மழையோ, காற்றோ எதுவானாலும் மாலை வீட்டுக்குப் போகும்போதுதான் தெரியும்! உள்ளே ஏ.ஸி. குளிர் மட்டும்தான். ஆகையால் இந்தப் பத்து நிமிடங்கள் காணும் உலகு கண்ணுக்குக் குளிர்ச்சி!!

அந்த வீடுகளும், பாலைவன மணல் நிறத்தில் அதன் சுவர் அமைப்புகளும், அவற்றோடு உள்ள மரங்களும் ஏக்கம் கொள்ள வைக்கும்.  இந்த வில்லாவிலெல்லாம் நம்மளப் போல சாதாரணப்பட்டவங்க இருக்க முடியுமா? கொள்ளை வாடகை. அல்லது வாடகைக் கொள்ளையோ?

வீட்டோடு சேர்த்து நீச்சல்குளம் உண்டாம். பொதுவில் ஒரு உடற்பயிற்சிக் கூடம், கம்யூனிட்டி ஹால் கூட இருக்காம். பேப்பரில் விளம்பரம் பார்த்து தெரிஞ்சிகிட்டது. நினைத்துக் கொண்டே வெளியே பார்த்தவள் அதிர்ந்தேன்.  ஐயோ, வெளியே மணற்காற்று!! காலையில் வரும்போது வீட்டில் ஜன்னல் திரைச்சீலைகளை மூடவில்லையே!! அப்போதொன்றும் இந்தக் காற்று இல்லையே!

ஜன்னல் கண்ணாடிகள் மூடியிருந்தாலும், அதன் ஓரங்கள் வழியே நுண்ணிய தூசித் துகள்கள் உள்ளே வரும். முதல்மாடி என்பதால் அதிகமாகவே வரும். ஸோஃபா, கட்டில், துணிமணிகள், தரை எல்லாம் தூசிப்படலம் இருக்கும். பால்கனியோ, கேட்கவே வேண்டாம். அப்படியே கிச்சனும்!!

காற்று வேறு பலமா இருக்கே!! சாயங்காலம் வீட்டு வேலை செய்ய வரும் ரஃபீக் இன்னிக்கு வருவானா என்னவோ? சைக்கிளில் வருபவன். எதிர்க்காற்றில் மிதித்து வரவேண்டுமே. பாவம். வீட்டுக்கு அண்மையில் இருந்த அவனது கேம்ப்-ஐ, போன மாதம் நகர அழகுபடுத்துதலின் விளைவாக தொழிற்பேட்டைக்கு மாற்றிவிட்டார்கள்.  அங்கிருந்து சைக்கிளில் வர முக்கால் மணிநேரமாவது ஆகுமாம். அவனுக்குக் கஷ்டமாச்சே என்று, நாசூக்காக வேறு ஆள் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லியாச்சு. ஆனால், அவனோ, பரவால்லக்கா, நானே வர்றேன் என்று பிடிவாதமாக வருகிறான்.

பன்னெண்டு மணிநேரம் ஆஃபீஸ்ல வேலை பாத்து கிடைக்கிற சம்பளம், அவனுக்கு இப்படி 3 மணி நேரம் பார்ட் டைம் பாக்கறதில கிடச்சுடும்கிறதால, இத விட அவனுக்கு மனசில்ல. இவனை விட்டா, புதுசா ஆளு நல்லதாக் கண்டுபிடிச்சு, அப்புறம் வேலைகளைப் பழக்கணும். அதனால இவனைவிட மனசில்ல எனக்கு.

அவன் இருக்கும் ஏரியாவில் பஸ் கிடையாது. டாக்ஸியில் வாப்பா, அதற்குரிய பணம் நான் தந்துவிடுகிறேன் என்று சொன்னதற்கும், அதெல்லாம் வேணாம்க்கா, யாரு பணம்னாலும் வேஸ்டாக்கக் கூடாது. நான் சைக்கிள்லயே வந்துடுவேன்னு சொல்றவங்கிட்ட பேசிச் சமாளிக்க முடியல.  சரி, அவன்  இஷ்டம்னு சம்பளத்தில் சேர்த்துக் கொடுத்தாச்சு. இலங்கையைச் சேர்ந்தவன்; பேசியதில் பிரச்னைக்கு மறுபக்கமும் உண்டெனத் தெரிந்தது.

 காலையிலயே கொஞ்சமாவது காத்து இருந்திருந்தா, கர்ட்டனையெல்லாம் இழுத்து மூடிட்டு வந்திருக்கலாம். அப்படின்னா ஜன்னல் பக்கம் மட்டும்தான் தூசி இருக்கும்; சுலபமா சுத்தம் செஞ்சிடலாம். ஆனா இப்ப வீடு முழுக்க பொடி மணல் பரவியிருக்கும். நடக்கும்போது நரநரன்னு இருக்கும். கதவு, டி.வி., அடுப்பு, ஃபிரிட்ஜ், புத்தகங்கள், காயப்போட்ட ஆடைகள்னு எதைத் தொட்டாலும் தூசியா இருக்கும். ஒரு வேலைக்கு இருவேலை!!

இன்னிக்கு வந்துடுவானா? வரல்லன்னா? இதப் பாக்கிறதா, சமையல், துணி துவைக்க, ஹோம்வொர்க், இப்பப் புதுவரவா பிளாக், மெயில்கள்னு அதைப் பார்க்கவா? ஆனா, எதிர்க்காத்துல சைக்கிள மிதிச்சு வரணுமே.

முதல்மாடியில இருக்கும்போதே, இவ்வளவு தூசி. இதுவே இந்த மாதிரி வில்லாக்கள்னா, எவ்வளவு மண் வரும்? பத்திருவது வருஷமா வில்லாவில இருக்கிற அல்-அய்ன் மாமி சொன்னாங்களே, மணல்காத்து அடிக்கிற அன்னைக்கு, ஏண்டா வில்லாவுக்கு வந்தோம்னு நொந்துக்குவாங்களாம். அந்தளவுக்கு, கார், தோட்டம், செடிகள், போர்டிகோ, வராந்தா, வீடுன்னு ஒரே மணலா இருக்கும். கூட்டிப் பெருக்குறதுக்குள்ள இடுப்பு ஒடிஞ்சுடுமாம். நல்லவேளை நான் வில்லாவுல இல்லைப்பா...



Post Comment

ஆறுமுகத்தாய் - 2





இதன் முந்தையப் பகுதி இதோ இங்கே!!

அவள் அன்று வரவில்லையென்றதும், எனக்கு மீண்டும் அழுகை, அழுகையாக வந்தது.  தோழிகளுக்கோ இது ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லை. பேனாதானே, நாளைக்கு வரும்போ தரப்போறா, இதுக்கேன் அலட்டிக்கிறே என்கிறமாதிரியே பேசினார்கள். நான் என் கையிலிருந்த சாதாரணப் பேனாவைக் கொடுக்காமல், ஹீரோ பேனாவை  ஏன்  கொடுத்தேன் என்று அப்போத்தான் நினைத்து நொந்துகொண்டேன்.

காலை இடைவேளையின்போது, ‘பி’ செக்‌ஷனில் அவளோடு வரும் இசக்கியம்மாளைத் தேடிப் போனேன். அவளுக்கும் அவள் வராததின் காரணம் தெரியவில்லை.  நான் அவளிடம், மதியம் சாப்பிடப்போகும்போது ஆறுமுகத்தாயைப் பார்த்து என் பேனாவை வாங்கி வரும்படிச் சொன்னேன். அவள் ”அதுக்குலாம் நேரமிருக்காது.  அவுங்கூடு வேற தெருவு. அந்நேரத்துக்கு எங்கூட்ல இருக்க ஒரு அஞ்சாறு வேலையள  செஞ்சுட்டு,  நாந்தின்னுட்டு ஓடியாரதுக்கே செரியாருக்கும்”னா. ”முடிஞ்சாப் பாரு, ப்ளீஸ், ப்ளீஸ்”ன்னு சொல்லிட்டு வந்தேன். சொன்னதுபோல, அவ வாங்கிட்டும் வரலை.  இன்றும் எப்படிச் சமாளிப்பது? மாமூட்டு வாப்பா திட்டமாட்டாங்கதான், ஆனாலும் வாங்கிய பொருளைப் பத்திரமாகத் திருப்பிக் கொடுக்கணுமே. அதுவும் ஹீரோ  பேனாவாச்சே??

மாலையில் பள்ளிவிட்டதும், இசக்கியம்மாளிடம் மிகக் கெஞ்சி, ஆறுமுகத்தாயின் வீட்டிலேயே போய்ப் பார்க்கலாமென்று.  அவளோடேக் கிளம்பினேன். பள்ளியிலிருந்து கிளம்பி, எதிரேயுள்ள ஆஸ்பத்திரி கேட் வழியே சென்று, நேரே பின்பக்கம் வழியே வெளியே வந்து  கொஞ்ச தூரம் போனால் அந்தக் குடிசைப் பகுதி வந்தது.  உள்ளே சிறிது தூரம் சென்ற பிறகு, இசக்கி, “அந்தா அந்தத் தெருவுல போய், கடசில உள்ள சந்துல போனா, முனையில இருக்கதுதான் அவ வூடு. என் வூட்டுக்கு இந்தால போவணும். வாரேன்” என்று சொல்லி போயே விட்டாள்!! 

 எனக்குத் திக்கென்றது. பாவி இவள் கூடவருவான்னு நினைச்சில்லியா வந்தேன்; இப்படிப் பாதில விட்டுட்டுப் போறாளே; இதுல எங்க சந்து, எங்க முனைன்னு தேடுவேன்? பார்க்கவே பயமாருக்கே? அப்போவெல்லாம் படங்களில் ஜம்பு  என்ற பெயருடைய ரவுடிகள் சேரியில்தான் அதிகம் இருப்பார்கள். அதெல்லாம் வேறே நினைவுக்கு வந்து தொலைந்தது. இதுபோன்ற குடிசைப் பகுதிகள் படங்களில்  நல்ல அபிப்ராயம் தரும் வகையில் அமைவது அரிதே. இங்கே தனியாக நடக்கவும் நடுக்கமாக இருந்தது.  ஆள் நடமாட்டமும் இல்லை.

யாரிடமாவது கேட்கலாம் என்றாலும், அவளின் பெயர்தான் தெரியுமே தவிர, அவள் வீட்டுப்பேரோ(?), பெற்றவர்கள் பெயரோ எதுவும் தெரியாது. என் ஊரில் என்னைத் தேடி வருபவர்களுக்கு என் பேரைச் சொன்னால் தெரியுமா? என் வீட்டுப் பெயர் சொன்னாத்தான் தெரியும் . அதிலும், வாப்பா வீட்டுப் பெயரைவிட,  மாமூட்டுவாப்பாவின் பெயர் சொன்னால் உடனே அட்ரஸ் சொல்லிவிடுவார்கள். அவ்வளவு ஃபேமஸ் மாமூட்டுவாப்பா. அதுபோல ஆறுமுகத்தாய்க்கு வீட்டுப் பெயரெல்லாம் இருக்குமா? என்னென்னவோ யோசித்துக் கொண்டே சந்து, முனையெல்லாம் தாண்டி, அங்கு வாசலில் தலைசீவிக்கொண்டு நின்றிருந்த ஒரு பெண்ணிடம் ”ஆறுமுகத்தாய் வீடு எது” என்று மெதுவாக இழுத்தேன். அவர் “இந்தா கடசி வூடு. நீ ஆரு, அவகூடப் படிக்கப் பிள்ளையா?” என்று கேட்க, ஆமாவென்று தலையாட்டிக் கொண்டே அவசரமாக அந்த கடசி வீட்டு வாசலுக்கு ஓடினேன்.

எப்படிக் கூப்பிடுவது? கதவைத் தட்டலாம் என்றால், அந்தச் சின்னக்கதவு திறந்தேதான் இருந்தது. வீடும், தெருவைப் போலவே அமைதியாய் இருந்தது. வாசலுக்கு நேராக, சுவற்றில் ஒரு அலமாரித் தட்டு மாட்டப்பட்டு, அதில் சாமி படங்கள் இரண்டு, மூன்று வைக்கப்பட்டிருந்தன. சில நோட்டுத்தாள்கள் அதில் இறைந்து கிடந்தன. மெதுவாய் அவளைக் கூப்பிட்டேன். சத்தமாய்க் கூப்பிட்டால் ஜம்புவோ, ஜக்குவோ வந்துவிடக்கூடாதே!!  அவளும், அவள் அம்மாவும் சேர்ந்தே வந்தார்கள். அப்பாடா என்றிருந்தது.

“ஏ ஆறுமுவம், உங்கூட்டாளிப் புள்ளயா இது?” அவள் பேசுமுன் அம்மாவே தொடர்ந்தார், “நீ  பேனா வாங்கிட்டு வந்தேன்னு சொன்னியே, அந்தப் புள்ளயா?” அவள் தலையாட்டவும் என்னிடம் திரும்பி, “ரெண்டு நாளா அதத்தான் சொல்லிச்சொல்லி  மாஞ்சுட்டிருக்கா ஆத்தா. பேனாவத் திருப்பி குடுக்கல, குடுக்கலன்னு ஒரே புலப்பம்தான். நீந்தான அவளுக்கு எப்பவும் நோட்டுலாம் கொடுப்பியாம். சொல்லுவா. அவ சமஞ்சுட்டா. ஒரு வாரமாவது வூட்டுல இருக்கணுல்ல. அத்தான் அவளுக்கு ஒரே வெசனம். ஆர்ட்டயாவது கொடுத்து வுடலான்னா, தீட்டுவூடு பாத்தியா, ஆரும் வரமாட்டாவ. என்ன செய்யன்னுட்டேயிருந்தா. நாந்தான் வரணுன்னு நெனச்சேன். நல்லவேள தாயி, நீயே வந்திட்ட.” என்றார்.

அப்போத்தான் அன்று அவள் ஏன் வரவில்லை, ஒருவேளை உடம்பு சரியில்லையோ, அல்லது வேறு ஏதேனும் பிரச்னையோ என்றெல்லாம் யோசிக்காதது என் நினைவுக்கு வந்தது. தலைகுனிந்து நின்றேன்.  என் பேனாவை மட்டுமே நினைத்துக் கவலைப்பட்டேனே!! அதுக்குள்ளே அவள், “உள்ர வா” என்று அழைக்க, நான் இன்னும் மருகி, “இல்லை, பரவால்லை; நேரமாச்சு” என்று மட்டும் சொல்லிவிட்டு, மேலே தொடரத் தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன்.

அதற்குள் அவளே, மாடத்திலிருந்த சாமி படத்தின் பின்னிருந்து பேனாவை எடுத்துத் தந்தாள். “அன்னிக்கு நான் தரதுக்குள்ள நீ போயிட்ட. மறுநா தரலான்னு நெனச்சிட்டிருந்தேன்” என்று என்னென்னவோ சொல்லிக் கொண்டிருக்க நான் அவசரமாக,  “போறேன்” என்று ஒற்றை வார்த்தையில் விடைபெற்று வந்தேன்.

ஹீரோ பேனாவை மட்டும் மதித்த நான் எங்கே, என்னை, நட்பை அதிகம் மதித்து சாமிப்படத்தின் பின் பத்திரமாக வைத்திருந்த அவள் எங்கே?




Post Comment

ஆறுமுகத்தாய் - 1




ங்க விட்டோம்?  ஆங்..  ஆறாம் வகுப்பு படிக்கும்போது, வாப்பாவின் உடல்நிலை காரணமாக, உம்மாவும் சவூதி சென்றுவிட, நானும் தங்கையும் மட்டும் உம்மாவின் வீட்டில். அதனால் ஏற்பட்ட பரிவினால், மாமூட்டுவாப்பாவின் ( தாத்தா)  ஹீரோ பேனாவால் ஹோம்வொர்க் மட்டும் எழுதும் சலுகை  எனக்கும் மட்டும் அவ்வப்போது கிட்டும்.

ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரி எதிரில் உள்ள நெல்லை காந்திமதி அம்பாள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அரசினர்ப் பள்ளி என்பதால், பெரும்பாலும் சுற்றியுள்ள கிராமங்களின் அடித்தட்டு மக்களின் பிள்ளைகள்தான் அதிகம்; அதோடு, பக்கத்தில் எம்.ஓ.ஸி. (Muslim Orphanage Committee)யிலிருந்து வரும் ஆதரவற்ற பிள்ளைகளும், அங்கேயே பணம் கொடுத்து தங்கியிருக்கும் சற்றே வசதியானவர்களின் வீட்டுப் பிள்ளைகள் என,  நகரத்தின் மற்ற பள்ளிகள் போலல்லாமல், எல்லாருமே எளிமையானவர்கள்தான். பகட்டு, பணக்காரத்தனம் என்பதையே பார்க்க முடியாது. இது தெரியாமல் வந்து சேர்ந்த சில எக்ஸப்ஷனல்களும், ஒரு மாததிற்குள்ளாகவே வேறு பள்ளிக்குப் போய்விடுவார்கள்.

பள்ளியில் நான், பானு, லாரா ஆகிய மூவரும்தான் செட். முதல் மூன்று ரேங்குகளும் எப்பொழுதும் எங்கள் வசமே. லாரா கிறிஸ்டியனோ என்று நினைத்தேன்,  அவள் அப்பா கம்யூனிஸ்ட்டென்பதனால் வச்சப் பேராம்.  ஆறுமுகத்தாய்தான் எப்பவும் நான்காவது ரேங்க்  எடுப்பாள். ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியின் பின்னால்  இருக்கும் சேரியில்தான் அவள் வீடு, இல்லையில்லை, குடிசை. நல்ல உயரம், ஒல்லி, களையான முகம், அதிர்ந்து பேசாத பேச்சு. பார்த்தாலே அவளுக்கு எல்லாரையும்விட வயது ஒன்றிரண்டு அதிகம் என்று தெரியும். யாரோடும் அதிகம் பேசமாட்டாள். ரொம்ப அமைதியாருப்பதைப் பாத்து எனக்கே ஆச்சர்யமாயிருக்கும். பாடத்தில் சந்தேகம் வந்தாலும் அல்லது வேறு என்னதென்றாலும்  என்னிடம்தான் கேட்பாள். அடிக்கடி லீவு போடுவதால், பாடங்கள் எழுத என் நோட்டுகளைத்தான் வாங்கிச் செல்வாள். ஏன் பானுவிடமோ, லாராவிடமோ கேட்பதில்லை என்று தோன்றியதில்லை அப்போ. அதற்காக என்னிடம் அவள் அதிகம் நெருங்கிப் பழகியதுமில்லை. நானும் ஒட்டாமலும், விலகாமலுமாக இருந்தேன். அவள் அங்குள்ளக் குடிசைப் பகுதியில் இருந்து வருகிறாள் என்பதைத் தவிர வேறு விவரங்கள் எதுவும் தெரியாது.

ரு நாள் காலை பள்ளி வந்தபோது, என் பென்ஸில் பாக்ஸில் தாத்தாவின் ஹீரோ பேனா இருப்பதைப் பார்த்து அதிர்ந்துப் போனேன்!! இரவு எழுத வாங்கியதைத் திருப்பிக் கொடுக்க மறந்துவிட்டேன் போல!! அய்யோ, மாமுட்டுவாப்பா என்ன நினைப்பார்கள், கோவப்படுவாங்களோ, வீட்டுக்குப் போனா திட்டு விழுமோ, என்கிட்ட பேனாவைக் கொடுத்திட்டா, எழுத பேனாவுக்கு என்ன செய்வாங்க என்றெல்லாம் எண்ணங்கள் என்னைக் குழப்பின.  அந்தக்காலக் குடும்பங்களில் தாத்தாக்கள்தானே  பவர்ஃபுல்!! முணுக்கென்றால் கோவம் வரும், எல்லாரும் நடுங்கித்தானே நிற்பார்கள். ஆனால், அந்தக் காலம், இந்தக் காலம் எல்லாத்துலயும் பேரப்பிள்ளைங்கன்னா ஒரு தனி பாசம்தானே தாத்தாக்களிடம்!! அதுவும் பெற்றோரைப் பிரிந்து நிற்பதால், என்னிடம் அதுவரை கோவப்பட்டதேயில்லை.

இருந்தாலும், ஹீரோ பேனாவின் அரிய மதிப்பினால், தெரியாமல் மறந்துபோய் பள்ளிக்குத் தங்க வளையலோடு போன மனநிலையில் இருந்தேன் நான். இதைப் பத்திரமாக வைத்திருந்து, வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டுமே என்பதோடு  திட்டும் வாங்கக் கூடாது என்ற கவலையும் இருந்தது. பத்திரமாக பாக்ஸை மூடி பையினுள் வைத்தேன். இன்று முழுவதும் வகுப்பைவிட்டு வெளியே போகக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன். கூரை வகுப்புக்கு கதவும் இல்லை. மனம் எதிலும் லயிக்கவில்லை.

ன்று மதியம் கடைசி பீரியட். அறிவியல் பாடம், தங்கப்பொண்ணு டீச்சர். விளையாட்டாகப் பேசுவதால் அவரை ரொம்பப் பிடிக்கும். அவர் கேள்வி-பதில் சொல்லச் சொல்ல, நாங்கள் எழுதிக் கொள்ளத் தொடங்கினோம். அப்பத்தான் ஆறுமுகத்தாய் எழுந்து, தன் பேனா எழுத மாட்டேங்குது என்று சொன்னாள். டீச்சர் வேறு யாரிடமாவது ரெண்டு பேனா இருந்தா கொடுங்க என்று சொன்னார். என்னிடம் தாத்தாவின் ஹீரோ பேனா இருப்பது ஞாபகம் வந்தாலும், வேறு யாராவது கொடுப்பார்கள் என்று நினைத்துப் பேசாமல் இருந்தேன். ஆனால் யாருமே கொடுக்கவில்லை. நான் அமைதியாக இருந்திருக்கலாம்; ஆனால், கேட்பது ஆறுமுகத்தாய் வேறு; எப்படி முடியாதென்று சொல்வது? பென்சில் டப்பாவைத் திறந்து ஹீரோ பேனாவை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.

அந்த வகுப்பு முடிந்து, பேருந்தைப் பிடிக்கும் அவசரத்தில் ஓடி வந்து, பாளையங்கோட்டை பஸ் ஸ்டாப்பில் இறங்கி, அடுத்த பஸ்ஸைப் பிடித்து ஏறிய பின்தான் ஞாபகம் வந்தது, ஹீரோ பேனா!!! ஆறுமுகத்தாயிடம் கொடுத்தது, பின் திருப்பி வாங்கவேயில்லை!! கண்ணெல்லாம் நிறைந்துவிட்டது எனக்கு. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்படியே இறங்கித் திரும்பிப் போலாமா, போனாலும் அவள் பள்ளியில் இருக்க மாட்டாளே, வீடும் தெரியாது. லேட்டானாலும் எனக்கும் வீட்டில் திட்டு விழும். எனக்குத்தான் மறந்துவிட்டது; இவளாவது கூப்பிட்டுத் தர வேண்டாமா என்று அவள்மேல் கோவம் கோவமாக வந்தது. என்ன செய்ய என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஊர் ஸ்டாப்பிங் வந்துவிட்டது. வேறுவழியில்லாமல் இறங்கினேன்.

ரி, இன்றையப் பொழுதை எப்படியாவது சமாளிப்போம்; நாளைக் காலை முதல் வேலையா அவளிடம் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தேன். தாத்தா, விவசாயம், வியாபாரம், தியேட்டர் ஆகியவற்றோடு கொஞ்சம் அரசியலும் செய்வதால், வீட்டிற்கு வரும்போகும் நேரங்கள் நிச்சயமில்லை. தெருவீட்டீல் (ஹாலில்) குழந்தைகள், சாச்சிகள், மாமாக்கள் என்று எல்லாரும் ஜமா நடத்திக் கொண்டிருந்ததால், மாமூட்டுவாப்பா தற்போது  வீட்டில் இல்லை என்பது தெரிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். மெதுவாக விசாரித்ததில், இப்பத்தான் காரில் கிளம்பிப் போனது தெரிந்தது. அப்பாடா, இப்பத்தான் போயிருக்காங்கன்னா, வர்றதுக்கு பத்து, பத்தரை ஆகும். இன்னிக்குச் சீக்கிரம் தூங்கிடணும், அப்பத்தான் லேட்டா வர்ற மாமூட்டுவாப்பா கண்ல படாம இருக்கலாம். காலையில் நான் சீக்கிரம் கிளம்பிவிடுவதால் அதிகம் கவலையில்லை.

யாரும் எதுவும் என்னிடம் கேட்காததிலிருந்து, தாத்தா யாரிடமும் எதுவும் சொல்லிவைக்கவில்லை என்பதும் ஊர்ஜிதமானது. நினைத்த மாதிரியே, இரவு சீக்கிரம் தூங்கி, காலை வழக்கத்தைவிடச் சற்று முன்னரே கிளம்பிவிட்டதால் தாத்தா கண்ணில் ஒருமுறை பட்டாலும், கேள்வி எதுவும் கேட்க நிற்காமல் ஓடி வந்துவிட முடிந்தது. பள்ளி வந்து, ஆறுமுகத்தாய் வரவை எதிர்பார்த்து வகுப்பு வாசலிலேயே நின்றேன். ஆனால், அவள் அன்று வரவில்லை!!

Post Comment

ஹீரோ பேனா




பள்ளியின் ஆரம்பகால வகுப்புகளில பலப்பக்குச்சி வச்சு எழுதப் படிச்சுகிட்டு, அப்புறம் பென்சில் வச்சு நோட்டுப் புத்தகத்துல எழுதும்போது  ரொம்ம்ம்ம்பப் பெருமையா இருக்கும். பென்சிலால எழுதும்போது, சிலேட்டு மாதிரி நாம எழுதுறது அழிஞ்சு போகாதுங்கிறதுதான் அதீத சந்தோஷமான விஷயமாயிருக்கும். அதுவுமில்லாம, நாம எழுதினதுல, கோணலா உள்ள எழுத்துக்களை மட்டும் அழிரப்பர் வச்சு அழிச்சுட்டு, திரும்பி அழகா எழுதிக்கலாம். இதுவே சிலேட்டு என்றால், ஒரு எழுத்தை அழிக்கும்போதோ அல்லது சும்மா இருக்கும்போதோ, கைபட்டு, அந்த ஏரியாவே அழிஞ்சுபோறது கடுப்பாருக்கும். அதுவும், பென்சிலை, கத்தி அல்லது கத்திரி வச்சு  ஊசியா சீவிட்டு எழுதினா, எழுத்தெல்லாம் பாக்க அச்சடிச்சா மாதிரி அழகா இருக்கும்.  எழுத்து நல்லா இல்லைன்னாலும் கூட நோட்டு ரொம்ப  நீட்டா இருக்கும்.




ஐந்தாம் வகுப்பில்தான் முதன்முதலில் பேனாவால் எழுதுவோம். பிரைமரி ஸ்கூலில் பேனாவால் எழுத ஆரம்பித்தவுடன் “சீனியர்” என்ற கெத்து வந்துவிடும்!! அப்பத்தான் கொஞ்சம் திருந்தி வர ஆரம்பித்திருக்கும் எழுத்தும், பேனாபிடித்து எழுத ஆரம்பித்த மிதப்பிலும், அனுபவமின்மையாலும் தந்தியடிக்க ஆரம்பிக்கும்.  அதுவும் ஃபௌண்டன் பேனாதான் உப்யோகிக்க வேண்டும். ஸ்கூலில், பால்பாயிண்டெல்லாம் கண்டாலே, கை முழியில் மரஸ்கேலை நட்டகுத்தர வைத்து அடி விழும்.  இங்க் தீர்ந்து போதல், ஒழுகுதல், நிப் பிளந்து போதல் என்று அவ்வப்போது பேனாவை ரிப்பேர் பார்க்கும் முயற்சியில் கையில், நோட்டில் இங்க் கறைகளுக்காக டீச்சரிடமும், உடைகளின் கறைக்காக அம்மாவிடமும் திட்டு வாங்க வேண்டியிருக்கும்.


எண்பதுகளின் ஆரம்பத்தில், ஹீரோ பேனா என்பது, பேனாபிடித்து எழுத ஆரம்பிக்கும் ஒவ்வொரு சிறாரின் கனவு!! இன்றைய இளைஞர்களின் கனவான பென்ஸ், லெக்ஸஸ், பி.எம்.டபிள்யூ. போல அன்று எங்களுக்கு!! இரண்டாம் முறையாக எழுதப் பழக ஆரம்பித்திருக்கும் எங்களுக்கு ஒரு ரூபாய் பேனா கிடைத்தாலே அதிகம். இதில் எங்கே ஹீரோ பேனாவுக்கு ஆசைப்படுவது? ஹீரோ பேனாவின் பெருமையே நுனி மட்டும் தெரியும் நிப்பும், கையில் படாமல் இங்க் ஊற்றும் வசதியும்தான். மற்ற லோக்கல் பேனாக்களில் மை அடைக்கக் கஷ்டப்படுவதுபோல இதில் படவேண்டாம்.



இந்தியப் பேனாக்களில், அதன் கழுத்தைத் திருகித் திறந்து, அதன் வயிற்றுப் பகுதியில் பிரில் இங்க் பாட்டிலைக் கவனமாகக் கவிழ்த்து மையை ஊற்ற வேண்டும். எவ்வளவு கவனமாக ஊற்றினாலும், அது நிரம்பி வழிந்தோடத்தான் செய்யும் அல்லது அலங்கி கீழே சிந்தும். அதற்கென்று கிடைக்கும் இங்க் ஃபில்லர்களையும் பயன்படுத்தலாம். அப்படியே கவனமாக ஊற்றி விட்டாலும், அதன் கழுத்தை மூடித் திருக்கும்போது பேனாவைக் கவிழ்த்து, இங்க் பாட்டிலின் நேரே பிடித்தால்தான் நிப்பின் வழி விழும் சொட்டுக்கள் கீழே சிந்தாமல் இருக்கும். இதையெல்லாம் எவ்வளவு கவனமாகக் கணக்குப் போட்டுத் துல்லியமாகச் செய்தாலும், எங்கயாவது சிந்தி, நோட்டில் மட்டுமல்லாமல் கையிலும் ஈஷும். அதைத் தன்னிச்சையாக உடையில் துடைக்க, உடையிலும் முத்திரை விழும். வீட்டிலும் அடி நிச்சயப்படும்!!

இதுவே பள்ளியில் வைத்து பேனாவில் இங்க் தீர்ந்துபோனால், அதோ கதிதான்!! யாரிடமாவது கெஞ்சிக் கேட்டு (இன்னைக்கும் நானும் இங்க் ஊத்தலைப்பா!!), கருணைப் பார்வை அருள்பவருக்கு நன்றி கூறி, இருவரின் பேனாக்களையும் திறந்து,  சர்வ ஜாக்கிரதையுடன், பிரார்த்தனை செய்துகொண்டே, இந்தப் பேனாவிலிருந்து அந்தப் பேனாவுக்கு இங்க் டிரான்ஸ்ஃபர் செய்வோம். (இப்பவெல்லாம் டிரான்ஸ்ஃபர் என்றால் அக்கவுண்ட் ட்ரான்ஸ்ஃபர்தான் நினைவுக்கு வருகிறது!!).


என் வாப்பா சவூதியில் இருந்து வரும்போதெல்லாம் ஒரு பாக்ஸ் ஹீரோ பேனா (12 பேனாக்கள்) வாங்கி வந்தாலும், அவை அதன் அதீத மதிப்பு, அந்தஸ்து காரணமாக உறவினர்களுக்கும், நண்பர்களுக்குமே விநியோகிக்கப்பட்டன. கொடுத்ததுபோக மிச்சம்மீதி இருக்கும் ஒன்றிரண்டு பேனாக்களும் அம்மாவின் கஸ்டடியில் வந்துவிடும். அவை அடுத்த முறை வாப்பா வரும்போது ஒருவேளை பேனாக்களின் எண்ணிக்கை குறைந்தால், சப்ளை-டிமாண்ட் காம்பன்சேஷனுக்கு உதவும்!!.  எவ்வளவு கெஞ்சினாலும்  ”இந்த வயசுலயே..... “ என்று ஆரம்பித்து சில ஆசிகள்தான் எனக்கெல்லாம் கிடைத்தன.ஆசைக்கு வேண்டுமெனில் வாப்பா அல்லது மாமாவின் பேனா எடுத்து எழுதிப் பர்த்துக் கொள்ளலாம், அவ்வளவுதான்.

ஏழாம் வகுப்பு இறுதியில்தான் ஒரு செகண்ட் ஹாண்ட் ஹீரோ பேனா எனக்கே எனக்கென்று கிடைத்தது!!

 (ஹீரோ பேனாவுடன் எனக்கேற்பட்ட சிறுவயது அனுபவம் ஒன்றை எழுத ஆரம்பித்தப்பொழுது, “product introduction"-ஏ இவ்வளவு நீண்டுவிட்டதால், சம்பவம் அடுத்தடுத்த பதிவுகளில் - யெஸ்,  நீங்க தப்பிக்கவே முடியாது!!)

Post Comment

ஒரு ஐஸ் எரிமலையாகிறது!!






என்ன, “தென்றல் புயலாகிறது”, “பூ ஒன்று புயலானது” வரிசையில் சினிமாத் தலைப்புப் போல இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இதுவும் அப்படித்தான், “பொறுத்தது போது பொங்கியெழு” என்று பூமி எரிமலையாகப் பொங்கிய கதைதான்!!

mapsofworld.com

ஐஸ்லாந்து நாடு - கிரீன்லாந்து பக்கத்தில், அட்லாண்டிக் கடலில் இத்தணூண்டு தீவு என்று ஏழு அல்லது எட்டங்கிளாஸில் புவியியலில் படித்திருப்போம். பேரிலிருந்தே தெரிகிறது, முழுதும் ஐஸால் மூடியிருக்கும். இவ்வளவுதான் அதிகப்டசத் தகவல் எனக்கும் தெரியும் ஐஸ்லாந்து குறித்து!! இந்தக் குட்டித் தீவுதான், இப்ப ஐரோப்பாக் கண்டத்தையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது!!

நீரும், நெருப்பும்!!

ஐஸ்லாந்து, பொதுவாகப் பனிப் பிரதேசம் என்றாலும், சில எரிமலைகளையும் உள்ளடக்கியது!!  எல்லா எரிமலைகளையும்போல, இவையும் சில சமயம் குழம்பைக் கக்கினாலும், பெரிதும் அமைதியாகவே இருக்கும். இங்குள்ள ”ஐயாஃப்யாத்லாஜோகுத்ல்”  (Eyjafjallajokull) என்ற பனி ஆற்றின் (Glacier) அடிவாரத்தில் உள்ள எரிமலை சென்ற புதனன்று (14-ஏப்ரல்) குழம்பைக் கக்க ஆரம்பித்ததில் ஏற்பட்ட புகைமண்டலம் ஏற்படுத்தும் பாதிப்புத்தான் ஐரோப்பாவை ஸ்தம்பிக்க வைத்துள்ளது!!

bbcnewscom
இந்த எரிமலைக் குழம்பினால் ஏற்பட்ட புகைமண்டலம், ஐஸ்லாந்தில் தரைவழிப்போக்குவரத்தைத் தடை செய்ததோடல்லாமல், வான்வழிப் போக்குவரத்தையும் பாதித்துள்ளது. இது அப்படியே பரவி, பிரிட்டன், செர்மனி, ஃப்ரான்ஸ், டென்மார்க் என்று ஐரோப்பாவின் வளிமண்டலத்திலும் பரவ, ஐரோப்பா முழுவதும் வான்வழிப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது!!  இப்போது இப்புகை ரஷ்யாவிலும் பரவத்தொடங்கியுள்ளதாகத் தகவல்!! இந்நாடுகளுக்கு உலக முழுவதுமிருந்தும் விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது!!

இன்றோடு மூன்றாவது நாளாக விமானங்கள் நிறுத்திவைக்கப் பட்டுள்ளதால், நாளொன்றுக்கு 200 மில்லியன் டாலர்கள் விமானத் துறைக்கு மட்டுமே நஷ்டமாகிறது என்றால், அதன் தொடர்புடைய தொழிற்துறைகளுக்கு நஷ்டம் எவ்வளவோ!!

cbsnews.com
ஏன் பறக்கக்கூடாது?

1. புகைமண்டலம், வான்வெளியை அடைத்திருப்பதால், தெளிவான காட்சி (visibility)  இருக்காது.
2.  புகையினால், வானில் பறக்கும் இரண்டாவது நிமிடமே, மூச்சுமுட்டல் ஏற்படலாம்.
3. எரிமலைக் குழம்பில் கண்ணாடி போன்ற கூரிய பனிக்கட்டித் துகள்களும், தூசி, மண், உலோகத் துகள்களும் கலந்திருப்பதால், அவை விமான இஞ்சினில் சென்று அவற்றைச் செயலிழக்கச் செய்யும். மேலும் விமானத்தின் கண்ணாடிகளையும் உடைக்கவோ, சேதப்படுத்தவோ செய்யலாம். (முன்பு சிறிய அளவில் நடந்திருக்கின்றன).

இன்னொரு முக்கியக் காரணம்,  இம்மாதிரிச் சம்பவம் வரலாற்றில் முன்நடந்திராததால், பாடம்படிக்க முன்அனுபவமும் இல்லை.1783ல் இதேபோல வேறொரு எரிமலையின் புகை 1784 வரை ஐரோப்பாவின்மீது பரவியிருந்ததாகவும், அதனால் தட்பவெப்ப மாறுதலால் பல ஆயிரம் உயிரிழப்பு நேர்ந்ததாகவும் தெரிந்தாலும், வான்வழியில் பாதிப்பு என்னவாக இருக்கும் என்பது அறுதியாக யூகிக்க முடியவில்லை.

ஏற்கனவே, பொருளாதாரத் தாழ்வால் ஆட்டம்கண்டிருக்கும் நிலையில், இன்னுமொரு ரிஸ்க் எடுக்க அவை தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.

என்ன செய்வது?

1. புகைமண்டலம் 20-30,00 அடிஉயரே மட்டும் இருப்பதால், தாழ்நிலையில் (3000 அடி) விமானங்கள் பறக்கலாம். ஆனால், பல நாடுகளும் தாழ்நிலையில் பறப்பதை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறுகாரணங்களுக்காகத் தடை செய்திருக்கின்றன!!

லூஃப்தான்ஸா, கே.எல்.எம். ஆகியவை இம்முறையில்  பரிசோதனை ஓட்டங்கள் செய்துவருகின்றன. அவசரத் தேவைகளுக்காக, இராணுவ விமானங்கள் அவ்வாறே தற்போது பறந்துகொண்டிருக்கின்றன. சுவிஸ் நாடு, 36,000 அடிக்கு மேலே பறக்க அனுமதியளித்துள்ளதாம்.

2. புகைமண்டலம் நீங்கும்வரை காத்திருப்பது. இதற்கு எத்தனை நாளாகும் என்று தெரியவில்லை. இந்த எரிமலை தொடர்ச்சியாக ஆறுமாதம் வரை குழம்பைக் கக்கக்கூடும் என்பதால், இதன் பாதிப்பு பெரிய அளவில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

3. மாற்றுவழிகள் - சாலை, ரயில், கடல் வழிப் போக்குவரத்தை நாடுவது. ஆனால், பிரிட்டனிலிருந்து ஆஸ்திரேலியா போகவேண்டியவர் என்ன செய்வார்?

தொடர் விளைவுகள்:

இதுகுறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. 

1. எரிமலை வெடித்தது, பனிப்பிரதேசம் என்பதால், பனிப்பாறைகளை உருக்கி, வெள்ள அபாயம் ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், (முன் நடந்ததைப் போல) இது தொடரப்போகும் மற்ற எரிமலை வெடிப்புகளுக்கும், பூகம்பங்களுக்கும் அறிகுறி என்றும் சொல்கின்றனர். அதன் விளைவுகள் என்னென்னவோ?

2. எரிமலைக் குழம்பில் வெளிப்படும் ஸல்ஃபர்  வாயு, ஹைட்ரோசல்ஃபியூரிக் அமிலமாக மாறக்கூடும் என்றும், அதனால் வளிமண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பொதுவான விளைவு.

3. புகை கீழிறங்கி பூமியின் மேற்பரப்பில் வந்தால், சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம்.

4. ஆனால், இதே எரிமலைக் குழம்பின் அடர்ந்த புகை, வளிமண்டலத்தின் (atmosphere) Stratosphere என்ற மண்டலத்திற்குப் போகும்போது, பூமியைக் குளிரவைக்கும் என்றும், வெப்பமயமாக்குதலைத் தடுக்கும் என்றும் கூறப்பட்டாலும், அதன் (ஓஸோன் பாதிப்பு போன்ற) பின்விளைவுகள்  அதிகம் என்பதால், இவை விரும்பத்தக்கவையுமல்ல.


5. ஐஸ்லாந்தின் புவியியல் அமைப்பு, அமெரிக்கன் பூமித்தட்டு (American plate) மற்றும் யுரேஷியன் தட்டு (Eurasian Plate) ஆகியவற்றிற்கு மத்தியில் அமைந்ததால், அதன் ஒவ்வொரு நிகழ்வும் மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. 

லகின் எங்கோ ஒரு மூலையில் நடந்த ஒரு சிறு நிகழ்வு, உலகத்தையே ஓரளவு ஸ்தம்பிக்க வைத்துள்ளது என்பது, “உலகம் சுருங்கிவிட்டது” என்ற சொல்லாடலின் அர்த்ததையே மாற்றியமைக்கிறது!!


Post Comment

கதைசொல்லி




பொதுவா, சின்னப் பசங்களுக்கு தாத்தா, பாட்டிதான் கதைகள் சொல்வாங்க. என் அம்மா வீட்டில் நான் வளர்ந்த சமயம்,  தாத்தாவுடன் நல்லா கலகலப்பாகப் பேசி விளையாடுவோம் என்றாலும், கதைகள் எதுவும் சொன்னதில்லை; பிஸினஸ், அரசியல் என்று பிஸியாக இருந்ததால்தான் அப்படி என்று நினைக்கத் தோன்றவில்லை. என் அம்மாவுக்குப் பத்து வயதிருக்கும்போதே பாட்டியும் இறந்துவிட, அம்மாவின் சாச்சி, எங்களோடு சரிக்குச்சமமாகப் பேசுவதுண்டு என்றாலும் கதைகள் எதுவும் சொன்னதில்லை. இன்னும் சொல்லப்போனால், நானெல்லாம் பள்ளிவிட்டு வந்தால் வீட்டில் இருப்பதே அபூர்வம். தெருவில் பசங்களோடு ஐஸ்பால், கொக்கோ, பாண்டி, கோலி, இன்னபிற விளையாடுவதும், ஆற்றில் குளிப்பதும்,  பின் ஓடிவந்து வீட்டுப்பாடம் செய்து விட்டுத் தூங்கவுமே நேரம் இருந்தது; இதில் கதை கேட்கவில்லை என்பதே இப்போ இந்தத் தொடர்பதிவுக்காக யோசிக்கும்போதுதான் தெரிகிறது!! மற்ற நேரங்களில் சாச்சிகள், மாமாக்கள், அடுத்த, எதிர்வீடு உறவினர்களும் பேசும் குடும்பக் கதைகளைக் கேட்டு நேரம் போகும்!!

சிலகாலம், என் வாப்பும்மா, பெத்தாப்பாவோடு இருந்தபோது, நிறைய “கதைகள்” சொல்வார்கள் - தன் 13 பிள்ளைகளில் இப்போ இருக்கும் நால்வர் தவிர மீதி குழந்தைகள் இறந்த கதை, பெத்தாப்பா தன் சகோதரர்களால் (சொத்து குறித்து) ஏமாற்றப்பட்ட கதை, நண்பர்களால் வியாபாரத்தில் ஏமாற்றப்பட்ட கதை,  அவர்களிருவரும் ஊறுகாய், அப்பளம், வடகம் விற்றுப் பிழைத்த கதை, ராமேஸ்வரத்தில் வியாபாரம் செய்த கதை, என் வாப்பா ஸ்காலர்ஷிப் வாங்கி இஞ்சினியரிங் படித்தது, ஹாஸ்டல் ஃபீஸ்கூட கட்ட முடியாமல், வாப்பா பட்டினி கிடந்த கதை..  இப்படி எல்லாமே அவர்கள் வாழ்வியல் கதைகளாகவே இருந்தன!!

எனது எட்டு, ஒன்பது வயது வரை இந்தக் கதைகள் எல்லாம் எனக்கு மிகச் சுவாரஸ்யமாகவும், அவர்கள்மீது பரிதாபமும், மிகுந்த மரியாதையும் வரவைப்பதாகவும் இருந்தன; ஆனால், எப்போ அவர்கள் என் அம்மாவைக் குற்றம் சொல்வதைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேனோ, அப்போதே அவர்களின் கதைகள் சுவைகுன்றத் துவங்கி அவர்களிடம் எதிர்வாதம் செய்யத் தொடங்கினேன். எனக்கும் அப்போது கதைகள் கேட்பதைவிட, படிப்பதில் ஆர்வம் தலைதூக்கத் தொடங்கியிருந்தது; இன்னப் பத்திரிக்கை, புத்தகம்தான் என்றில்லாமல்,  துவரம்பருப்புப் பொட்டலப் பேப்பர் உட்படக் கிடைத்ததை எல்லாம்,  வாசித்துக் கொண்டிருந்தேன்.

என் அம்மா வீட்டில் கதை சொல்வோர் யாருமில்லையென்றாலும், புத்தகங்கள் நிறையக் கிடைத்தன. அதனாலேயே வாசிக்கும் ஆர்வம் வளர்ந்தது. ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், என் வாப்பாவும், அவரின் இரு சகோதரிகளும் படித்தவர்கள். ஆனால், அவர்கள் வீட்டில் பாடப் புத்தகங்கள் தவிர வேறு புத்தகங்கள் கிடையாது. என் அம்மா வீட்டிலோ, தாத்தாவைத் தவிர அப்போது வேறு யாரும் பட்டப் படிப்பு படித்திரவில்லை; ஆனால் அங்கு ஓரளவு புத்தகங்களும், எல்லாவிதப் பத்திரிகைகளும் குவிந்து கிடக்கும். அம்மா உட்பட வீட்டுப் பெண்கள் எட்டுப் பேரும் அதிகபட்சம் ஐந்தாம் வகுப்புதான் படித்திருந்தனர். ஆனால் எல்லாருக்கும் வாசிக்கும் ஆர்வம் இருந்தது.

பின்காலங்களிலும், என் வாசிக்குமார்வத்திற்குத் தீனிபோட என் அம்மா புத்தகங்கள் (அம்புலிமாமா வகையறாக்கள்) வாங்கித் தருவார். மற்ற செலவுகளில் கறார் பேர்வழியான அம்மா இதற்குமட்டும் சற்று அதிகமாகச் செலவு செய்ததற்கு, அவரின் ஆர்வமும் காரணமாக இருக்க வேண்டும். பள்ளியிறுதி படிக்கும்போது, ரீடர்ஸ் டைஜஸ்ட்டுக்கு சந்தா கட்ட அனுமதி கேட்டபோது வழக்கமான கேள்விக்கணைகள் தொடுக்காமல், ஒன்றிரண்டோடு அனுமதி கிடைத்தது!! என் வாசிப்பார்வம் என் அம்மாவின் ஜீனிலிருந்துதான் அதிகம் வந்திருக்கவேண்டுமென்று நினைக்கத் தோன்றுகிறது. என் வாப்பாவும் நிறைய வாசிப்பதுண்டு, ஆனால் ஆங்கிலசெய்தி/ டெக்னிக்கல்/ பிஸினஸ் குறித்த விஷயங்களில்தான் ஆர்வம் அதிகம்.

தற்பொழுது என் பெரிய மகனிடம், என்னைப் போலவே, வாசிக்கும் ஆர்வத்தைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது; வாப்பா & தாத்தாவைப் போல, டெக்னிக்கல் புத்தகங்களும் பிடித்திருக்கிறது. சின்னவனுக்கு ஆரம்ப காலத்தில் கதைகள் சொன்னேன்; ரொம்ப கேள்விகள் கேட்டதால், அடிக்கடி  பதில் சொல்லத் தெரியாமல் முழிக்க நேர்ந்ததால், குறைத்து விட்டேன். புத்தகங்கள் வாசிக்க, தற்போதுதான் ஆர்வம் காட்டிவருகின்றான். இப்போ அவன் வாசித்து எனக்குக் கதை சொல்லுகிறான்!!

Post Comment

அதிசயப் பிறவி




இந்த வாரம், செய்திகளில் அதிகம் காணப்படாத, ஆனால் நெகிழவைக்கும் ஒரு சம்பவம் குறித்துப் படித்தேன். சிட்னியின் டராங்கா மிருகக்காட்சிச் சாலையில் (Taronga Zoo)  நடந்த ஒரு யானையின் பிரசவம் குறித்த செய்திதான் அது. இதிலென்ன அதிசயம் இருக்கு, யானைக் குட்டி பிறப்பதெல்லாம் ஒரு விஷயமா என்று கேட்கத் தோன்றும். முழுவதும் படித்துவிட்டுக் கேளுங்கள் கேள்வியை.

தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட ”பார்ன் டிப்” என்ற யானைக்கு, 22 மாத கர்ப்பகாலத்திற்குப்பின், பிப்ரவரி 28ந் தேதி பிரசவ வலி தொடங்கியது.  சாதாரணமாக யானைகளுக்குச் சில மணிநேரங்களில் பிரசவம் ஆகிவிடும். ஆனால் இந்த யானைக்கு, சில நாட்கள் ஆகியும் பிரசவமாகவில்லை என்றதும்,  சிறந்த கால்நடை மருத்துவர்களை அழைத்துப் பரிசோதித்ததில், வயிற்றினுள் குட்டி தலைகீழ் நிலையில் இருப்பதால் பிரசவம் சிக்கலாகும் என்றும், தாய்-சேய் ஒருவரோ, இருவரோ உயிரிழக்க நேரிடும் என்றும் தெரிய வந்தது. மேலும் அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்துபார்த்ததில், குட்டி உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லாததால்,  குட்டி இறந்துவிட்டது என்றே முடிவு செய்தனர்.


சிஸேரியன் செய்யவேண்டியதுதானே தோணுது இல்லியா? யானைகளுக்கு சிஸேரியன் செய்றதெல்லாம் ரொம்ப ரொம்ப சிக்கலான விஷயமாம். அதனால செய்ய மாட்டாங்களாம்; எவ்வளவு கஷ்டம்னாலும் தானாத்தான் பிறக்கணுமாம். ஆனா,  இப்ப குட்டி இறந்து போனதுனால, குட்டியின் முயற்சி இருக்காது; அந்த யானை தானாதான் பெற்றெடுக்கணுமாம்.  அதுக்கு இன்னும்  ஒரு வருடம் வரை ஆகலாமாம். ஆமா, அதுவரை, இறந்த குட்டியை அந்த யானை வயிற்றிலேயேதான் சுமந்துகிட்டு இருக்கணும்!!

இதனாலே, இந்த விஷயம் எல்லாருக்கும் சோகத்தைத் தந்தது. மிருகக்காட்சி சாலைக்கு மக்கள் பலரும் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்து வந்த நிலையில், தாய் யானை விநோதமாக நடந்துகொண்டதை, மிருகக்காட்சிச் சாலையினர் கண்டனர். அதாவது, சில முறை, உருளவும், பிரளவும் செய்தது. சில முறை அந்த யானை தன் தலையில் நிற்க முயற்சித்தது. தன் வயிற்றில் தலைகீழாக இருக்கும் குட்டியை கவிழ்த்து, நேராக்க முயற்சிப்பது போல அதன் செய்கைகள் இருந்ததாகப் பின்னர் குறிப்பிட்டனர்.


இப்படியாக, மார்ச் 8ந் தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்ட குட்டி, 10ந் தேதி பிறந்தது. இறந்து பிறந்த குட்டியைப் பரிதாபமாக எல்லாரும் பார்த்திருக்க, மெல்ல அசைந்து, தலையைத் தூக்கிப் பார்த்தது அந்தக் குட்டி!! ஆமாம்,  அந்தக் குட்டி இறக்கவில்லை, உயிருடன் இருக்கிறது!! எப்படி இந்த அதிசயம் நடந்தது? வயிற்றினுள் இருந்தபோது,  குட்டி கோமா நிலைக்குச் சென்றிருக்கக்கூடும், அதனால்தான் இதயத் துடிப்பு முதல் உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும் மருத்துவர்கள் சொல்லுகின்றனர்.

taronga.org.au

தாய் யானைக்குப் பிரசவ வலி தொடங்கி ஒன்பது நாட்களுக்குப் பின்னர் உயிருடன்  பிறந்த குட்டி அதிசயப் பிறவியாகவேப் பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு Mr. Shuffles என்று செல்லமாகப் பெயரிட்டு அழைக்கின்றனர். புதுப் பேர் வைக்கிறதுக்கு ஒரு போட்டியும் அறிவிச்சிருக்காங்க!!  சில நாட்கள் கோமாவுல இருந்ததால, பாதிப்பு எதுவும் இருக்கான்னு பார்க்கிறதுக்காகத் தீவிரமா கண்காணிக்கிறாங்க மிஸ்டர். ஷஃபிள்ஸை!! ஆனாலும், தானே நடக்கவும், பால் குடிக்கவும், ஓடியாடவும் ஆரம்பிச்சுட்டதால அப்படி எதுவும் இருக்காதுன்னே தோணுது. அப்படியே இருக்கட்டும்.

இப்ப என்ன சொல்றீங்க?

Post Comment

பெண்களும், புகுந்த வீடும்







வரலாற்றில கி.மு, கி.பி இருக்கிற மாதிரி உலகத்துல எல்லோருடைய தனிப்பட்ட வாழ்விலும்  தி.மு., தி.பி.ன்னு ரெண்டு வரலாறு இருக்கும். விரும்பியே வலைக்குள் அகப்பட்டாலும், ஆண், பெண் இருபாலருக்குமே தி.பி. வரலாறு பெரும்பாலும் சோகமயமாவே இருக்கும்.  அல்லது சோகமாக இருப்பதாகவே காட்டிக் கொள்வார்கள்.

என்னதான் விளையாட்டா பேசிக்கிட்டாலும், ஒரு பெண்ணுக்குத் திருமணம் என்பது வாழ்க்கையையே மாற்றிப் போடத்தான் செய்கிறது. புதிய உறவுகள், புதிய குடும்பம், புதிய இடம், புதிய வாழ்க்கை முறைகள், புதிய சட்டதிட்டங்கள், ..  எல்லாமே புதிதாக!! வேரோடு பிடுங்கி மண்மாற்றி நடப்பட்ட மரமாக, ஆரம்ப காலங்களில் சிறிதே துவண்டாலும், விரைவில் தன்னைச் சமப்படுத்தி, ஊன்றிய இடத்தில் புதுவேர் பிடித்து, கிளை பரப்பி நிழல் கொடுக்கத் தொடங்கிவிடுகிறாள் பெண்!!

சில குடும்பங்களில் திருமணத்திற்குப் பின் பெண்ணுக்கு சம்பிரதாய வழக்கப்படி வேறு பெயரே சூட்டப்படுகிறது!! பல சமுதாயங்களில், வீட்டில் யாரேனும் இறையடி சேர்ந்துவிட்டால், துக்கம் அனுசரிக்கும்விதமாக ஒரு வருடம்வரை பண்டிகைகள் கொண்டாடப்படுவதில்லை; இதிலும் பெண்ணின் பிறந்த வீட்டில் உள்ளோர் மறைந்திருந்தால் அது அப்பெண்ணின் புகுந்த வீட்டின் பண்டிகைக் கொண்டாட்டங்களைப் பாதிக்காது!! காரணம் அப்பெண் திருமணத்தோடு புகுந்த வீட்டின் அங்கத்தினராகி விடுகிறாள்.

ஒவ்வொரு சமுதாயத்திலும், ஊரிலும் ஒவ்வொரு வகைப் பழக்கங்கள்!!திருமணத்திற்குப் பின் அன்றாட நடைமுறைகளிலும் சரி,  பண்டிகை போன்ற விசேஷ வைபவங்களிலும் சரி, ஒரே சமுதாயத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் சிற்சில வேறுபாடுகளாவது பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் இருக்கும். பெண் அதையும் அணைந்து பெருமையோடே ஏற்றுக்கொள்கிறாள்.

சிலர் உறவுகளுக்குள்ளேயோ அல்லது  ஊருக்குள்ளேயோ திருமணம் செய்துகொள்வார்கள்; இவர்கள் அதிகம் சிரமம் இல்லாமல் சமாளித்துக் கொள்வார்கள். சிலர் ஊர்விட்டு திருமணம் செய்துகொள்வார்கள். சிலர் பிற மாநிலங்களிலும் விரும்பித் திருமணம் செய்துகொள்வார்கள். விருப்பம் நிறைவேறும் மகிழ்ச்சியில்,  கலாச்சார, உணவுப் பழக்க வேறுபாடுகளை மனமுவந்து ஏற்றுக் கொள்வார்கள்.

நாடுவிட்டு நாடு திருமணம் செய்வோரும் உண்டு; ஆனால் பெரும்பாலும் இந்தியப்பெண்கள் அந்நிய நாட்டவரைத் திருமணம் செய்வது அரிதே.  ஆனால், இந்திய ஆண்கள் அந்நிய நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்வது பரவலாக நடைபெறத்தான் செய்கின்றது. செய்தித்தாட்களில் பெருமையுடன் முதல்பக்கச் செய்தியாகப் படத்துடன் பிரசுரித்திருப்பார்கள், ”வெளிநாட்டுப் பெண் இந்தியக் கலாச்சார முறைப்படி திருமணம் செய்துகொண்டார்” என்று!!

பொருளாதார வசதி, குடியுரிமை, வேலைவாய்ப்பு போன்ற காரணங்களை முன்னிறுத்திச் செய்யப்படும் இவ்வகைத் திருமணங்களில் பலவும், காரியம் முடிந்தவுடன், சிலசமயம் அதற்குமுன்பேகூடக் கைகழுவி விடப்படுகின்றன. இருதரப்பிலும் உள்ளார்ந்த அன்புடன், பக்குவமடைந்த மனதுடன் செய்யப்படும் திருமணங்களே நீடித்து நிலைத்து நிற்கின்றன!! இப்படிச் சொன்னவுடன் எல்லாருக்குமே நினைவில் வருவது, சோனியா - ராஜீவ் காந்தி ஜோடிதான் இல்லையா?

நான் இங்கு அரசியல் பேசவில்லை; கொள்கைரீதியாக சோனியாவைச் சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், ஒரு பெண் என்ற முறையில் அவரை எனக்குப் பிடிக்கும். அரசியல் பாரம்பரியமிக்க இந்தியக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாலும், அக்குடும்பத்தின் புகழுக்கும், பெருமைக்கும் இன்றுவரை தன்னால் பங்கம் வராமல் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதன் மூலம் தன் பிறந்த நாட்டுக்கும், குடும்பத்துக்கும்தான் பெருமைதேடித் தந்திருக்கிறார். இன்னொரு இந்திய மருமகள் இருந்தும், மாமியார்மெச்சும் மருமகளாக இவரே இருந்திருக்கிறார்!!

அரசியல் கூடாது என்று தன் கணவரிடம் உறுதிமொழி வாங்கியிருந்தாலும், அவசியம் வந்தபோது அவரை நாட்டுக்குத் தந்து, அதன்காரணமாக அவரையே இழக்கவும் செய்தார்.  ராஜீவின் மறைவுக்குப்பின் ஒதுங்கி இருந்தாலும், அவசியமேற்பட, தானே நேரடி அரசியலுக்கு வந்து வெற்றி  பெற்றுத் தந்ததினால், பிரதமர் ஆகும் வாய்ப்பு கைமேல் கிடைத்தாலும், பெருந்தன்மையாக மறுத்து, அதைத் தகுதிவாய்ந்த ஒருவரிடம் ஒப்படைத்தது;  எதிர்க்கட்சிகள் பண்பாடு இல்லாமல் அவரைப் பற்றி இழிவாகப் பேசினாலும், பொறுமை காத்து, சொல்லாடாமல், செயலாற்றிப் பதிலளிப்பது;  வட்டம், மாவட்டங்களே தலைகால் புரியாமல் இந்நாட்களில் ஆடும்போது, நூற்றாண்டுகண்ட கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும், அவையடக்கத்தோடே இருப்பது; ஒரே பிடிப்பாக இருக்கும் மகனையும், உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறதென்று தெரிந்தாலும், தைரியமாகக் களத்தில் இறக்கி விட்டிருப்பது; பண்பான உடைகள் அணிவது; மற்றவர்களின் கைப்பாவையாக இல்லாமல், உறுதியான முடிவுகளைத் தானே எடுப்பது; இப்படி எத்தனையோ காரணங்கள் சொல்லலாம் பெண்ணாக அவரைக் குறித்த பெருமைகளாக!!

ஒருவரின் கொள்கைகளை எதிர்க்கப் பலவழிகள் இருந்தாலும், சட்டப்படி மட்டுமின்றி உள்ளத்தாலும் இந்தியராகவே மாறிவிட்ட அவரை இன்னமும் “இத்தாலிய மங்கை”, “அண்டோனியோ மைனோ”, ”பின்வாசல் வழி வந்தவர்”, “இத்தாலி மகராணி பெற்ற இளவரசன் (ராகுல்)” என்றெல்லாம் இழிவுபடுத்துவது,  இராமர் இருக்குமிடமே அயோத்தி என்று வாழ்ந்த சீதாப்பிராட்டியாரைப் போற்றும் பி.ஜே.பி. வகையறாக்கள் மட்டுமல்ல, முற்போக்குச் சிந்தனை கொண்டச் சில பெண்களும்தான் என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது!!

ஏனோ கற்புக்கரசியாகப் பாராட்டப்படும் கண்ணகியின் நினைவு வருகிறது!!

Happy Women's Day!!




Post Comment