Pages

Showing posts with label பெண்கள் தினம். Show all posts
Showing posts with label பெண்கள் தினம். Show all posts

ஈயம் பித்தளை




அமீரகத் தமிழ் மன்றம், மகளிர் தினத்தையொட்டி சென்ற ஏப்ரல் மாதம் “பெண்ணியம் எனது பார்வையில்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரைப் போட்டி நடத்தியது. அதற்கென அனுப்பி வைத்த எனது கட்டுரை, மூன்றாம் பரிசைப் பெற்றது. 

அதற்காக வழங்கப்பட்ட ஷீல்ட் (பட்டயம்??): 

கட்டுரையைக் குறித்து, நடுவர்களில் ஒருவர் தெரிவித்திருந்த கருத்து: 

பெண்ணியம் பற்றிய ஆராய்வை தர முயற்சித்திருப்பது கொஞ்சம் திருப்தியாய் இருக்கிறது. ஆனாலும் பெண்ணியத்தை பரந்த அணுகுமுறையில் யாருமே பார்க்கவில்லை அதில் இந்த கட்டுரைக்குரியவரும் விதிவிலக்கல்ல. ஆனாலும் எழுத்தாக்கம் கொஞ்சம் சிறப்பானதாக இருக்கிறது மற்றைய கட்டுரைகளை விட என்பது எனது கருத்து. ஆகையால் 3வது இடம்.

இனி, கட்டுரை:  
பெண்ணியம் - எனது பார்வை

முன்னுரை:

பெண்ணியம் - இந்த வார்த்தையை வாசிக்கும்போதே சிலருக்குப் பரிகாசப் புன்னகை தோன்றும்; சிலருக்கு உணர்ச்சிகள் பொங்கும்; சிலரோ இதற்குரிய சரியான பொருளைத் தேடும் முயற்சியில் இறங்குவர். நானும் இறங்கினேன். கிட்டியவற்றைப் பகிர்கிறேன் உங்களோடு. 

இது “பெண்”ணியம் என்பதால், பெண்தான் இதைக் குறித்து ஆராயவேண்டும், பேசவேண்டும் என்ற எண்ணம் முதலில் மாற வேண்டும். ஆணும், பெண்ணும் இயைந்து வாழ்வதே சமூகம். ஆகவே, பெண்ணைக் குறித்து ஆணும், ஆணைக் குறித்துப் பெண்ணும் அறிந்து கொண்டால் மட்டுமே நல்லிணக்கம் கிட்டும். அதன் ஒரு வழியே ‘பெண்ணியம்’ பேசுதல்!! 

பெண்ணியம் - வரைமுறை: 
 
‘பெண்ணியம்’ (Feminism) என்றால் என்ன? ”ஆண்களுக்குச் சமமான, அரசியல், பொருளாதார, சமூக உரிமைகள் பெண்களுக்கு வழங்குவது” என்றும், ”பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்புகள் தருவது” என்றும், இதற்குப் பல வரைமுறைகள் தந்திருக்கும் விக்கிபீடியா, ”பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு” என்றும் சொல்கிறது. கட்டுரையின் போக்கில் இதன் சரியான வரைமுறையைப் பார்ப்போம். 

பெண்ணீயத்தின் வரலாறு: 

ஆதிகாலத்தில், ஆணும் பெண்ணும் ஒன்றாகச் சேர்ந்தே பிழைப்புக்கான வழிகளைத் தேடுவார்களாயிருந்திருக்கும். பிறகு, குழந்தைகள் வந்ததும், அவற்றை மிருகங்களிடமிருந்தும், இயற்கைப் பேராபத்துகளிடமிருந்தும் காத்துக் கொள்ளவென்று பெண் மட்டும் வேட்டையாடுதலைவிட்டு குகைக்குள் தங்கவேண்டி வர, அப்படியே காலப்போக்கில் சமையல், குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட ‘குடும்பப் பொறுப்புகள்’ அவள் தலையில் வீழ்ந்தன. 

உணவுக்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் வெளியே பல இடங்களுக்கும் சென்று வர வாய்ப்புகள் கிடைத்த ஆண், அனுபவங்கள் தந்த அறிவினாலும், உழைப்பு தந்த உடல் வலுவினாலும் பெண்ணைவிடச் சிறப்பானவனாகிவிட, அப்போதுதான் தொடங்கியிருக்க வேண்டும் பெண்ணின்மீதான ஆணின் ஆதிக்கமும், அதிகாரமும்!! உணவு இன்னபிற இன்றியமையாத தேவைகளுக்காக ஆணையே, பெண் சார்ந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், ஆணின் அடக்குமுறைகளுக்கு அவள் பணிந்தே ஆக வேண்டிய சூழல் இருந்தது. 

மேலும், பெண்களும், குழந்தைகளும் ஆணின் பராமரிப்பில் இருந்ததால், அவர்கள் ஆணின் உடமைகளாகவே பார்க்கப்பட்டனர். அவர்களுக்கு வரும் ஏற்றமும், தாழ்வும் சம்பந்தப்பட்ட ஆணின் பெருமைக்கு அணி சேர்ப்பதாகவோ, இழுக்காகவோதான் நோக்கப்பட்டன. 

அதனால் காலப்போக்கில், இரு ஆண்களுக்கிடையே சண்டை வந்தால், அவர்களின் எதிரியின் பொருட்களுக்கு மட்டுமின்றி, ’உடமை’களான பெண்களையும் சேதப்படுத்த முனைந்தனர். இந்த ‘சேதம்’ உரிமையான ஆணிற்குத் தோல்வியாகக் கருதப்பட்ட சமயத்தில்தான் ‘கற்பு’ என்ற கருத்து களமிறக்கப்பட்டிருக்க வேண்டும். 

இப்படியாக, பொருளாதாரப் பலமில்லாத பெண், ஆணுக்கு அடிமைப்பட்டவள் ஆகிப்போனாள். உலக அறிவோ, உடற்பலமோ இல்லாத நிலையில், இந்த அடிமைத் தளையிலிருந்து அவளால் மீள முடியவில்லை. இதற்குள் “குடும்பம்” என்ற அமைப்பும் ஏற்பட்டிருக்க, ”மீள வேண்டும்” என்று நினைத்தாலும் குடும்ப பந்தங்கள் என்ற நிர்பந்தத்தால் தளையிலேயே தொடரவேண்டியவளானாள். 

னினும், ஒரு கட்டத்தில் பெண்ணினத்தின்மீதான அடக்குமுறைகள் - வன்முறை, அடிமைத்தனம், பாலியல் சுரண்டல், பால்ய விவாகம், கல்விமறுப்பு, வாக்குரிமை மறுப்பு - என்று பல்வேறு அவதாரங்களெடுத்து அளவின்றி போனதால், பெண் தடைகள் உடைத்துப் பொங்கி எழுந்தாள். முதல்படியாக, பொருளாதாரத்தில் ஆண் உயர்ந்து இருப்பதால்தானே, அவன் கை ஓங்கியும், பெண்கள் கை தாழ்ந்தும் இருக்கிறது என்று எண்ணி, தானும் கல்வி கற்று, பொருளீட்டும் முயற்சிகளில் இறங்கினாள். இத்தருணங்களில்தான் பெண்ணுரிமை, பெண் விடுதலை, பெண்ணியம் ஆகியவை உருப்பெற்று விவாதக் களமாகின. 

இன்று அநேகமாக ஆணுக்குச் சமமாகவே பெண்களும் பொருளாதாரத்தில் மேன்மை பெற்று விளங்குகின்றனர். எனில், அப்பெண்கள் விடுதலை அடைந்துவிட்டனரா? என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி!! 

தற்காலப் பெண்ணியம்: 

ஒருமுறை, தொலைக்காட்சியில் ஒரு பிரபல கலந்துரையாடல் நிகழ்வில், பெண்களிடம் “ஏன் சிகரெட் புகைக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு, “ஆண் மட்டும்தான் புகைக்கலாமா? எங்களாலும் முடியும் என்று காட்டவே புகைக்கிறோம்” என்று சில பெண்கள் சொன்னதைக் கேட்டபோது மூச்சடைத்தது!! இதிலே ஒரு பிரபல பெண் பத்திரிகையாளரும் உண்டு என்பது கூடுதல் அதிர்ச்சி. 

இதே தவறைத்தான் பல பெண்கள் இன்று செய்து வருகின்றனர். “அதென்ன ஆம்பளை மட்டும்தான் குடிப்பது, இரவுபகல் பாராமல் நண்பர்களோடு ஊர்சுற்றுவது? நாங்களும் செய்வோம்” என்று இளம்பெண்களும்; “ஆண் நேரங்காலம் பார்க்காமல் அலுவலகப் பணியில் ஈடுபடவில்லையா? எங்களாலும் முடியும்” என்று பால்குடி மாறா குழந்தையைப் புறக்கணிப்பது; இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இதுதான் பெண்ணியம் என்ற தவறான புரிதலைக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால், ஒன்று புரியவில்லை; ஆண்கள் உடலை வெளிக்காட்டும் விதமாக ஆடை அணிவதில்லை. பின் ஏன் எல்லாவற்றிலும் ஆண்களோடு போட்டி போடும் இந்தப் பெண்கள் மட்டும் இப்படி அணிகிறார்கள்? பெண்ணை வேடிக்கை, விளம்பரப் பொருளாக்கும் வியாபார உலகின் தந்திரங்களுக்கு இவர்கள் இரையாகிப் போனதுதான் இதற்குக் காரணம். வேதனையிலும் வேதனையான உண்மை!! உதாரணத்திற்கு, பெண்களுக்கான ’ஊசி உயர் குளம்பு’ (பென்சில் ஹைஹீல்ஸ்) செருப்பு வடிவமைப்பாளர் ஒருவர் கூறுகிறார்: ” ஹை ஹீல்ஸ் அணிவது பெண்ணுக்கு அதிகாரம் தருகிறது; அவளைப் பெண்ணாக உணர வைக்கிறது” என்று!! வெறுமே உயரத்தைக் கூட்டும் ஒரு செருப்பு என்ன அதிகாரத்தைத் தந்துவிடப் போகிறது? மருத்துவ உலகமோ ஹை ஹீல்ஸை முற்றிலும் தவிர்த்து உடல்நலம் காக்க அறிவுறுத்துகிறது. இதையும் மீறி, அவ்வியாபாரி போன்றவர்களின் லாப நோக்குகளைப் புரிந்துகொள்ளாமல் ஹைஹீல்ஸ் அணிந்து உடல் சீர்கேட்டை வருந்தி வரவழைத்துக் கொள்பவர்களைத்தான் அதிக எண்ணிக்கையில் பார்க்கிறோம். 

இங்ஙனமே, பெரும்பாலான பெண்கள், குடும்பத்திற்குக் கூடுதல் பொருட்தேவை இல்லாத பொழுதிலும், பொருளாதாரத்தில் ஆணைப் போலாகிவிடவேண்டுமென்ற போட்டி மனப்பான்மையுடனும், பொருளாதாரச் சுதந்திரமும் பெற்றிருப்பதே பெண்ணியம் என்ற தவறான கணிப்பினாலும் குழந்தைநலத்தையும், குடும்பநலனையும் பின்தள்ளிவிடுகிறார்கள். இந்தப் போட்டியில், தான் ஒரு பணம் சம்பாதிக்கும் இயந்திரமாகவும் ஆக்கப்பட்டிருப்பதை உணராமல், தன் நலனையும், ஏன் சுதந்திரத்தையும்கூட இழந்து, வாழ்வை ரசிக்க நேரமில்லாமல் அரக்கப்பரக்க ஓடிக்கொண்டேயிருக்கிறாள். 

ஒரு காலத்தில் அதீதமாய் அடக்கியாளப்பட்டிருந்த காரணத்தால், விடுதலை கிடைத்ததும் கரைகள் உடைத்த காட்டாற்று வெள்ளமாய்ப் பயணிக்க முனைகின்றனர் இவர்கள். தறிகெட்ட காட்டாற்று வெள்ளம் அழிவையேத் தரும் என்பதை உணராமல் போனதேனோ? 

ஒருபுறம், இப்படியானப் பெண்கள் என்றால், சமூகத்தின் இன்னொரு புறம் தன் உரிமைகள் என்னவென்றே தெரியாமல் அடிமைப்பட்டுக் கிடக்கும் சமூகத்தின் அடித்தட்டுப் பெண்கள்!! படிப்பறிவும், சுய அறிவும் இல்லாமல் தன் வீட்டு ஆணின் பங்கையும் சேர்த்துத் தானே உழைத்துப் பொருளீட்டி, அந்த ஆண் உட்பட குடும்பத்தின் மொத்தப் பாரத்தையும் மட்டுமல்லாமல், அந்த ஆணின் வன்முறையையும் அடக்குமுறையையும்கூட தன் மெல்லிய தோள்களில் தாங்கிக்கொண்டிருக்கும் இவர்களிடம் பெண்ணியம், பெண்ணுரிமை என்று பேசிப்பாருங்கள் – பேந்தப் பேந்த விழிப்பதைத் தவிர வேறொன்றும் தெரியாது அவர்களுக்கு!! 

நுனிநாக்கு ஆங்கிலமும், நாகரீக உடையும் அணிந்து கண்ணாடிச் சுவர்களால் சூழப்பட்ட அறைகளில் உயர் உத்தியோகம் பார்க்கும் பெண்களைப் பார்த்து, பெண் முன்னேற்றம் என்று பெருமைப்படும் நாம், நைந்த உடையும், பஞ்சடைத்த கண்களுமாய் மண்சட்டி சுமக்கும் அந்த அடித்தட்டுப் பெண்களைப் பார்த்து ஏன் பரிதாபப்படுகிறோம்? அவர்களும் உழைத்துப் பொருளீட்டுபவர்கள்தானே? 

பெண்ணியம் - எனது பார்வை: 

“யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே, கருடன் சொன்னது; இதில் அர்த்தம் உள்ளது” என்றார் கண்ணதாசன். அதேபோல, ஆணோ, பெண்ணோ அவரவர் பொறுப்பு, கடமை அறிந்து நடந்துகொள்ளவேண்டும். 

ஆணுக்கென்று கடமைகள் உண்டு; அவற்றில் அவன் வழுவாது இருத்தல் ஆண்மைக்குப் பலம் சேர்க்கும். அதேபோல பெண்ணிற்கான இயற்கையான கடமைகளை முதற்கண் பேணி நடத்தலே பெண்ணினத்தின் பெருமை. 

ஆணுக்குச் சமமான சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளைப் பெண்ணுக்கு வழங்குவதுதான் பெண்ணியம் என்பது சிலரின் கருத்து. இல்லவே இல்லை. பெண்ணுக்கு யாரும் எந்த உரிமையும் தரத் தேவையில்லை. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதாக எந்த இனமானாலும், அதனதன் உரிமைகள் அவற்றுடன் உடன்பிறந்தவையே. பெண்ணினத்துக்கும் அதுபோல உரிமைகள் உண்டு. அந்த உரிமைகளை – சமூக, கல்வி, அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா உரிமைகளையும் - அவளிடமிருந்து பறித்துப் பிடுங்காதிருப்பதே பெண்ணியம் என்பதே என் பார்வை. 

இதை ஒரு உதாரணத்துடன் விளக்கிச் சொன்னால் எளிதாகப் புரியும். சமீபத்தில் மேலைநாட்டு பள்ளி ஒன்றில், ஆண்-பெண் சமத்துவம் பேணுவதற்காக என்று ஒரு விநோத முயற்சியில் ஈடுபட்டுள்ளதைப் படிக்க நேர்ந்தது. குழந்தைகளை பிறப்புமுதல் அவர்களுக்கு ஆண்-பெண் என்ற பேதமே தெரியாதவாறு வளர்க்கிறார்களாம். எப்படியெனில், பெயர், ஆடை, பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட எல்லாவற்றிலும், இது ஆண்குழந்தை, இது பெண் குழந்தை என்று மற்றவர்களுக்கு மட்டுமல்ல, அக்குழந்தைகளுக்கே வித்தியாசம் தெரியாதவகையில் வளர்ப்பார்களாம்!! அதாவது, ஒரு பெண் குழந்தைக்குத் தான் பெண் என்ற அடிப்படை விஷயமே தெரியாது!! (போலவே ஆண் குழந்தைக்கும்) 

பெண் குழந்தையோ, ஆண் குழந்தையோ இயல்பாகவே பிறப்புமுதலே அவர்களுக்கென்று தனி ஆர்வங்கள் இருக்கும். அதைப் பறிக்கும் அதிகாரத்தை இவர்கள் கையிலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். யாருமே சொல்லிக் கொடுக்காமலேயே (பெரும்பான்மையாக) ஒரு பெண்குழந்தைக்குப் பொம்மை பிடிக்கும்; ஆண்குழந்தைக்கு விளையாட்டுக் கார் பிடிக்கும். இவற்றை அவர்களிடமிருந்து பிடுங்கி, மாற்றிக் கொடுப்பதுதான் இவர்களின் ”சமத்துவ” வளர்ப்பியல்!! இந்த அதிகாரத்தை இவர்களுக்கு தந்தது யார்? 

இது தொடருமாயின், எதிர்காலத்தில் “பெண்ணைப் பெண்ணாக இருக்க விடுங்கள்” என்பது பெண்ணியத்தின் புதிய வரைமுறையாகலாம்!!

பெண்ணியம் பேணுதல்: 

ஏற்கனவே சொன்னதுபோல ஆண், பெண் என்ற தனி மனிதர்கள் சேர்ந்ததுதான் குடும்பம், சமூகம் எல்லாம். தனிமரங்கள் தோப்பானால்தான் பெருத்த அறுவடை!! அதுபோலத்தான், ஆண், பெண் என்ற தனிமனிதர்களைவிட, இவர்கள் இணைந்த குடும்பங்களே சமூகங்களுக்கு அதிகப் பயனளிக்கும். 

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் 'பெண்கள், ஆண்களைப் போலவே நடையுடை தோற்றத்தில் போலியாக நடிப்பதால் ஆண்களுடன் போட்டியிட முடியும்தான். ஆனால், ஆண்களைப் போல பாவனை காட்டுவதன் மூலம் அவள் தனக்குரிய உயரிய நிலையை எட்ட முடியாது. பெண்கள், ஆண்களோடு இணைந்து நிறைவு செய்பவர்களாகத்தான் இருக்கவேண்டுமேயொழிய ஆண்களாகவே மாறிவிடக்கூடாது' என்று கூறியுள்ளார். 

திருவள்ளுவரும், “இல்வாழ்க்கை” என்ற தலைப்பில் ஆணுக்கும், “வாழ்க்கைத் துணைநலம்” என்ற தலைப்பில் பெண்ணுக்கும் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரைகள் கூறியுள்ளார் என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டும். இருவரில், பெண்ணுக்கு மட்டுமோ அல்லது ஆணுக்கு மட்டுமோ என்றில்லாது, இருவருக்குமே தனித்தனி அதிகாரம் படைத்ததிலிருந்தே நல்ல இல்லறம் இருவரின் பொறுப்புமே என்பது அறியவரும். 

இதற்கு, முதலில் ஆண், பெண்ணின் மதிப்பையுணர வேண்டும். உடல்ரீதியாகச் சற்றுப் பலவீனமானவள் என்பதாலேயே அவள் தன்னைவிடத் தாழ்ந்தவளாகிவிடமாட்டாள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உள்ள ரீதியாகவும், அறிவுரீதியாகவும் அவள் ஆணுக்குச் சற்றும் சளைத்தவளல்ல என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவளுக்குரிய மரியாதையைக் கொடுத்தேயாக வேண்டும். 

இல்லறம் நல்லறமாவதற்கான அடிப்படைகள், திருமணத்திற்குப் பிறகல்லாது, அவ்விருவரின் வளர்பருவத்திலேயே ஊன்றப்படவேண்டும். அதாவது, இளையவராய் இருக்கும்பொழுதே, ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும் என ஒருவரையொருவர் மதிக்கக் கற்பித்தல் வேண்டும். பெண்ணைப் பற்றிக் குறைவாகப் பேசுதல் தவிர்த்தல் வேண்டும். சில பெற்றோர் தம் குழந்தைகளிடையேகூட, ஆண்குழந்தை, பெண்குழந்தை என்று பாரபட்சம் காட்டுவர். உதாரணமாக ”அவன் ஆம்பளப்புள்ளை, வீட்டு வேலைகளில் உதவிடத் தேவையில்லை” என்று சொன்னால், ஆணுக்கு “தான் வலியவன்; உயர்ந்தவன்” என்ற எண்ணம் மனதில் பதியும். இதுவே, அவன் வளர்ந்துவரும்போது பெண்களைக் குறைவாக மதிப்பிட்டு, அவமதிக்கும் எண்ணத்தைத் தரும். அதே சமயம் பெண்ணுக்கு, தாழ்வு மனப்பான்மையையும், ஆண்கள் மீதான வெறுப்பையும் தோற்றுவிக்கும். 

இரு பாலருக்கும் தத்தம் உரிமைகளையும், கடமைகளையும்கூட வளர்பருவத்திலேயே போதிக்கப்பட்டால், பசுமரத்தாணிபோலப் பதிந்து, தம் காலத்தில் தத்தம் கடமைகளைச் செவ்வனே செய்து, சுயமரியாதையும் பேணிக்கொள்வர். 

சுருங்கக்கூறின், பிள்ளைவளர்ப்பில் பெரிதும் ஈடுபடுவது பெண்களே என்பதால், வளரும் தலைமுறையினரிடையில் பெண்ணியம் போற்றப்படுவதும் அவர்கள் கைகளிலேதான்!! மேலும் தாம் சந்திக்க நேருகின்ற துன்புற்று கிடக்கும் கீழ்த்தட்டு பெண்களிடமும் பெண்ணியம் பரப்ப வேண்டியதும் பெண்களின் பொறுப்பே!! 

முடிவுரை: 

ஒரு நண்பர் நக்கலாகச் சொன்னார், “அதென்ன பெண் ஈயம், ஆண் பித்தளைன்னுகிட்டு...”. நான் பதில் சொன்னேன், “ஆண் எனும் பித்தளையோ, குடும்பம் எனும் செம்போ, சமூகம் எனும் வெண்கலமோ, எதுவானாலும், பெண் எனும் ஈயம் சரிவிகிதத்தில் பூசப்பட்டாலன்றி, இவையாவும் பயன்படுத்த லாயக்கற்றவைகளாகிவிடும்!”. 

Post Comment

வலியெனும் வரம்




வல்லமை” இணைய இதழில் நேற்று வெளியானது:
 
பள்ளியில் பதினொன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு அரசு மருத்துவச் சமூக ஆர்வலர் ஒருவர் வந்திருந்து, தொழுநோய்க்கான விளக்கவுரை நிகழ்ச்சி நடத்தினார். உரை முடிந்ததும், கேள்விகள் இருந்தால் கேட்கலாம் என்று கூறவும், பலரும் பல கேள்விகள் கேட்டனர். அமுதா என்கிற என் சக மாணவி, “இந்நோய் வந்தால் வலி இருக்காதா?” என்று கேட்டாள். “நல்ல கேள்வி” என்று மிகவும் சிலாகித்துப் பாராட்டிச் சொன்ன அவர், எல்லாரையும் கைதட்டவும் சொன்னார். எனக்கோ இந்த கேள்வியில் பாராட்டுமளவு அப்படியென்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று வியப்பாக இருந்தது.

அவர் தொடர்ந்தார், “எந்த ஒரு நோய்க்குமே வலிதான் அதன் முதல் அறிகுறியாக இருக்கும். அதை வைத்துத்தான் நாம் எச்சரிக்கையடைந்து உடனே சிகிச்சை எடுக்க மருத்துவரிடம் செல்வோம். ஆனால், இந்தத் தொழுநோய்க்கு மட்டும் வலி என்பதே கிடையாது. வலி இல்லாததாலேயே, இந்நோய் தாக்கப்பட்டவர்கள் அலட்சியமாக இருந்து விட நேரிட்டு, நோய் முற்றிக் குணப்படுத்தச் சிரமமான நிலைக்குச் சென்று விடுவதால் கை, கால் விரல்களை இழந்து விடுகிறார்கள்” என்று கூறினார். சட்டென்று பிடிபடவில்லை என்றாலும், ‘உக்காந்து யோசித்த’போதுதான் வலி என்பது நமக்கு ஒரு வரமே என்பது புரிந்தது.

சமீபமாக விகடனில் ஒரு கதை வந்தது, “வலி” என்ற தலைப்பு என்பதாகத்தான் ஞாபகம். கிராம மக்களைப் பலவித அடி, உதை என்று சித்ரவதை செய்து, வலிக்கு அஞ்ச வைத்து, அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பண்ணையாருக்கு, வலி என்கிற உணர்வே இல்லாமல் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த உணர்வு இல்லாததால் அக்குழந்தை படும் பாடுகள் விவரிக்கப்பட்டு, அவர் தன் குழந்தைக்கு ‘வலி’ கிடைக்க வேண்டி மருத்துவர்களையும் தெய்வங்களையும் வேண்டி அலைவதாகப் போகும் கதை.

உடலில் நோய்த் தாக்குதல் ஏற்பட்டால், அது நமக்கு ஏதேனும் ஒரு சிரமத்தைத் தராத வரை அப்பாதிப்பை நாம் அறிய மாட்டோம். அது தலைவலி, வயிற்று வலி, முதுகுவலி, கால்வலி, காதுவலி என்று ஏதேனும் ஒரு வலியாக ரூபமெடுக்கும்போதுதான் அதனைக் குறித்து யோசிப்போம்.

உதாரணமாக, உயர் இரத்த அழுத்த நோய். இதன் இன்னொரு பெயரே “சைலண்ட் கில்லர்” என்பதுதான். ஆரம்ப நிலையிலோ, சற்று முற்றிய நிலையிலோ இதனால் எந்தப் பாதிப்பும் வெளிப்படையாகத் தெரியாது. மிகவும் முற்றிய நிலைக்குச் சென்ற பின்னர் வாதம், சிறுநீரகப் பாதிப்பு முதற்கொண்டு கோமா உள்ளிட்ட விளைவுகளை ஏற்படுத்திய பின்பே பி.பி. வந்திருப்பதைக் கண்டறிய முடியும். இதுபோலவே சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு போன்றவையும் ஆரம்ப கட்டங்களில் வலி இன்மையால் கண்டறிவது தாமதப்படும். ஏன், கேன்ஸர் கூடச் சிலருக்குக் கடைசி நேரத்தில் கண்டறியப்படுவது இந்த வலியின்மையால்தானே?

இன்னொன்று, வலி ஏற்பட்டாலும், அதற்குச் சுய மருத்துவம் செய்வதும் நமக்கு வாடிக்கையாகிவிட்டது. முதுகுவலி என்றால், எடு ஒரு ப்ரூஃபனை; தலைவலியா இந்தா ஒரு பெனடால்; சளிக்காய்ச்சல்தானே, ஒரே ஒரு ‘அட்வில்’ போதுமே என்று நாமே திறமையான மருத்துவர்களாக இருக்கிறோம். இது பெண்களுக்கே மிக மிகப் பொருந்தும் என்றாலும், ஆண்களும் பல சமயங்களில் இதில் பெண்களுக்கு நிகராகவே அலட்சியமாக இருக்கின்றனர்.

இன்றைய சூழலில், ஒரு நெடும் பயணம் செய்து அலுவலகம் சென்று, வீடு வந்து சேருவதற்குள் அலுத்துச் சலித்துப் போய் விடுகிறது. அதற்கு மேல், மருத்துவமனைகளுக்குச் சென்று மணிக்கணக்கில் காத்துக் கிடந்து மருத்துவரைப் பார்க்கவும், பரிசோதனைகள் செய்யவும் எரிச்சல்பட்டு “தினம் பைக்கில் போய்ட்டு வரதுனால வர்ற முதுகுவலிதான். ரெண்டு நாள் ப்ரூஃபன் சாப்டுக்கிட்டாச் சரியாயிடும்” என்கிற சமாதானங்களால் மனசைத் தேற்றிக் கொள்கிறோம்.

ஏற்கனவே சொன்னதுபோல, ‘வலி’ என்பது ஒரு அடையாளக் குறியீடு. எங்கோ, எதுவோ சரியில்லை என்பதற்கான அபாயமணி. என்ன சரியில்லை என்று சரி பார்க்காமல் வெறுமே வெளியே தெரியும் அடையாளங்களை மட்டும் அழித்துக் கொண்டிருந்தால், உள்ளே புரையோடிப் போகும். நோய் நாடுவது மட்டுமல்ல, “நோய்முதலும்” – காரணமும் – கண்டறிந்து அகற்றினாலேயொழிய வலியிலிருந்தும் நிவாரணமில்லை; கடும் விளைவிலிருந்தும் தப்பிக்க முடியாது.

அதை விடுத்து, ”இது ஒண்ணுமில்லை; ஒரு மாத்திரையப் போட்டுட்டு கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்தா வலி சரியாய்டும்” என்றே சொல்லிக்கொண்டு வலி நிவாரண மாத்திரைகளை மட்டும் எடுத்துக் கொண்டிருந்தால், குடலும், சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுக் கூடுதல் விளைவுகளைத்தான் இழுத்துப் போட்டுக் கொண்டதாக ஆகிவிடும். வலி மருந்துகளின் விளைவுகள் மிகக் கடுமையானவை. இவற்றை அதிகமாக, தக்க அறிவுரை இல்லாமல், எடுத்துக் கொள்வதென்பது நம் சிறுநீரகத்தை நாமே அழிப்பதற்குச் சமம்.

“இல்லை, நாங்கல்லாம் ஆயின்மெண்ட்தான் தடவுறோம். மாத்திரைலாம் சாப்பிடுறதேயில்லை தெரியுமா” – இப்படிப் பெருமையாகச் சொல்லிக்கிறீங்களா? வாங்க, உங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கேன். ஆயின்மெண்ட்களும் நம் சருமம் வழியாக நம் உடம்பில் ஊடுறுவிப் போய்த்தான் வலியைக் குறைக்கிறது. அப்படியென்றால் என்ன அர்த்தம்? வலி நிவாரண ஆயின்மெண்டுகள், க்ரீம்கள், லோஷன்கள், ஸ்ப்ரேக்கள், பாம்கள் எல்லாமும் கூடத் தொடர்ந்து வழமையாக உபயோகிக்கக் கூடாதவையே!!

வலி நிவாரண ஆயின்மெண்டுகள், க்ரீம்கள், லோஷன்கள், ஸ்ப்ரேக்கள், பாம்களினால் ஏற்படும் விளைவுகள் குறைவாக இருக்குமென்று சொல்லமுடியாதபடிக்கு, இவையும் சரும அரிப்புகள், அல்சர், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு தருபவையாக இருக்கின்றன.

பயமுறுத்துவதாகத் தோன்றுகின்றதா? இல்லை, நம்மில் பலரும் இந்த வலி நிவாரணிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளின் வீரியத்தை அறியாதவர்களாக இருக்கிறோம். அறிந்திருந்தாலும், நேரமின்மை, வேலைப்பளு, இன்னபிற காரணங்களின்மீது பழியைப் போட்டுவிட்டு இதைச் செய்து கொண்டிருக்கிறோம். இதனை அதிகமாகச் செய்பவர்கள் பெண்கள்தான். குடும்பத்திற்காக ஓடாய்த் தேயும் பெண்கள், தம் நலன் என வரும்போது ‘அடுத்த வாரம் பார்க்கலாம்’; ‘பசங்களுக்கு லீவு வரட்டும்’ என்றே தள்ளிப் போட்டு விடுகின்றனர்.

ஒரு சிறு வலி என்றாலும் மருத்துவரை நாடி ஓடச் சொல்வதல்ல கட்டுரையின் நோக்கம். வலி என்பது ஒரு பாதிப்பின் அடையாளம் என்பதால், அந்தப் பாதிப்பைக் கண்டறிந்து அதை நீக்கி முழுக் குணமடையவேண்டுமேயல்லாது; தற்காலிக வலி நிவாரணிகளை அளவில்லாமல் எடுத்துக்கொண்டு, அதனால் வரும் பாதிப்புகளையும் இலவச இணைப்பாக வாங்கி வைத்துக் கொண்டுச் சிரமப்பட வேண்டாமே.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே வலி நிவாரணிகளைப் பயன்படுத்துங்கள். அச்சமயங்களில் அதிக அளவு தண்ணீர் குடித்து, சிறுநீரகத்தில் தேங்கும் கழிவுகளை உடனுக்குடன் வெளியேற்றுங்கள். இதை நம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், நம் வீட்டுக்கு உதவிக்கு வரும் பெண்களிடமும், தெருவில், அண்டை அயலில் உள்ளவர்களுக்கும் எடுத்துச் சொல்வோம்!! பெண்கள் நலன் காப்போம்!!

Post Comment

வன்முறையும் சமஉரிமையும்





இருதினங்களாக எங்கு பார்த்தாலும் மகளிர்தின சிறப்புப் பதிவுகள். மகளிரின் பெருமை பேசும் கட்டுரைகள். பத்திரிகைகளிலும் மகளிர்தின சிறப்பிதழ்கள், பேட்டிகள். டிவி சேனல்கள் இதையொட்டி எந்தெந்த நடிகைகளின் பேட்டிகளை ஒளிபரப்பினார்களோ தெரியவில்லை.

மகளிர் தினத்தையொட்டி சிறப்பு தள்ளுபடிகள், புதிய மாடல் நகைகள் - நகைக்கடைகளில் பல தினங்கள் முன்னதாகவே விளம்பரப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

அந்த விளம்பரங்களும், பேட்டிகளும் இடம்பெறும் அதே பக்கங்களில், கடந்த ஒருவாரமாக இன்னொரு செய்தியும் பரபரப்பாக எழுதப்பட்டு வருகிறது. அருணா ஷான்பாக்!! எல்லாருக்குமே தெரிந்தவர் இப்போது. அறிமுகம் தேவையில்லை.  நான் பிறந்து, வளர்ந்து, படித்து, கல்யாணம் செய்து, பிள்ளைகள் பெற்று, அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கவும் தொடங்கிவிட்ட இத்தனை வருடகாலங்களாகப் படுக்கையிலேயே சுயநினைவற்று கிடக்கிறார்.  ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு எனக்கென்று பல நினைவுகள் இருக்க, அவருக்கோ எதுவுமே நினைவில்லாமல்.



தெரிந்ததெல்லாம் அலறல் மட்டுமே - அவர் சுயநினைவோடு இருந்தபொழுது கடைசியாக செய்த செயல் அபயம் தேடி அலறியது என்பதால் அதுவே  இன்றும் தொடர்கிறதோ என்னவோ? இவரைப் பார்க்கும்போது, நல்லவேளை சௌம்யா இறந்துவிட்டார் என்று தோன்றுகிறது. சௌம்யா - சென்ற மாதத்தில் கேரளாவில், ஒரு திருடனால், ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்டு பின் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுபோல, இன்னும் எத்தனையோ பேர் - கோவை சிறுமிகள் அனுசுயா, முஸ்கன், தர்மபுரி கனகலட்சுமி - இவர்களெல்லாம் சமீபத்திய உதாரணங்கள்தான். இன்னும் எத்தனையோ கணக்கிலடங்கா உதாரணங்கள் உண்டு.  தற்கொலைக்குத் தள்ளப்பட்டவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் கணக்கில்.

பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கக் கடைபிடிக்கப்பட்டு வரும் மகளிர்தினம் எனக்கு வெறுமையைத்தான் தருகிறது இவர்களைப் பார்க்கும்பொழுதில்.  எனக்குள் அச்சத்தையேற்படுத்திவிடுமோ என்றும் அச்சமாகவும் இருக்கிறது. பெண்கள் பல துறைகளில் முன்னேறியிருக்கிறார்கள், சாதனைகள் புரிந்திருக்கிறார்கள். மகிழ்ச்சி.  முன்னேற்றப் புள்ளிவிவரங்களைப் போலவே, பெண்களின் மீதான வன்முறைகளும் அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் இருக்கும்தானே? எனில் எதை கணக்கிலெடுப்பது?

எவ்வகை ஆண்களும், பெண்களின் மீதான தன் கோபத்தை, வஞ்சத்தை, வக்கிரத்தைத் தீர்த்துக்கொள்ளத் தேர்ந்தெடுக்கும் வழிமுறை இந்தப் பாலியல் வன்முறை. ஏன், ஒரு ஆணைப் பழிதீர்க்கவும் அவர்சார்ந்த குடும்பத்தின் பெண்ணையே வன்புணர்ச்சிக்கு ஆளாக்குகின்றனர் அல்லது பழி போடுகின்றனர்.

தனிப்பட்ட மனிதர்களின் அல்லாமல், அமைப்புகள் சார்ந்த வன்முறைகளும் பெண்களின்மீதே கட்டவிழ்த்து விடப்படுகின்றன. குஜராத் - அந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண், காஷ்மீர் - ஆசியா, நிலோஃபர் இன்னும் எண்ணிலடங்கா பெண்கள், வடமாநிலங்களில் கௌரவக்கொலை செய்யப்பட்ட பெண்கள் - பத்திரிகையாளரான நிரூபமா பதக் போல. மணிப்பூரின் ஐரோம் ஷர்மிளா எதிர்த்துப் போராடுவதும் எதை? பெண்ணைத் தெய்வமாகவும், ஆறுகளாகவும், சக்தியின் வடிவமாகவும், ஏன் தேசத்தையே தாயாகவும் கொண்டாடும் நாட்டில்தான் இவையும் நடக்கின்றன.

மற்ற நாடுகளும் விதிவிலக்கல்ல என்று சொல்லும் உதாரணங்கள், இலங்கை - இசைப்பிரியா, ஆஃப்கன் - மூக்கறுக்கப்பட்ட ஆயிஷா, முன்னேறியதாகச் சொல்லப்படும் ஐரோப்பிய நாடுகளில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தையாலேயே வன்புணரப்பட்ட மகள்கள்...

எங்கு நோக்கினும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள். அல்லது அடக்குமுறைகள். உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்களில்லையென பல  நாட்டினரும், இனத்தவரும் பாகுபாடில்லாமல் போட்டியிடுகின்றனர்.


பெண்ணையும், அதன்மூலம் சமூகத்தையும் பாதுகாக்கவென ஏற்படுத்தப்பட்ட சட்டங்களையும், விதிகளையும் அவளை ஆதிக்கம் செலுத்தத் தமக்குத் தரப்பட்ட அதிகாரமெனத் தவறாக அர்த்தப்படுத்தி, அடக்கி வைக்கும் ஆணினம் விழிப்புணர்வு அடையும் வரை பெண்களுக்கு விடிவில்லை!!

எனக்கு நீங்கள் சம உரிமை தரவேண்டாம், 33 சதவிதம் வேண்டாம்,  படிப்பு, வேலைகளில் முன்னுரிமை வேண்டாம். ஆனால், எனக்கு வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு தாருங்கள் - உங்கள் பார்வைகள், எண்ணங்கள் மற்றும் செயல்களில் கண்ணியமாக இருப்பதன் மூலம். உங்கள் படங்களில், பத்திரிகைகளில், கவிதைகளில், கட்டுரைகளில், பாடல்களில், விளம்பரங்களில், பேச்சில், செயலில் பெண்ணைத் துகிலுரிக்காதீர்கள். அவளை வெறும் போகப்பொருளாக மட்டும் காட்சிப் படுத்தாதீர்கள். இதுபோன்ற உங்கள் ஆக்கங்கள்  எளிதில் பலரின் மனதில் ஊடுருவி, ஏற்கனவே அலைபாய்ந்துகொண்டிருக்கும் அல்லது தூங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தைத் தூண்டிவிடும். நல்ல ஆக்கங்கள், எங்கேயேனும் ஒருவரின் மனதிலாவது நல்ல விளைவை ஏற்படுத்துவதைவிட, இவை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம்.
 
 

Post Comment

எனக்கும் பிடிச்சிருக்கு...






மகளிர் தினத்தின் தொடர்ச்சியா வெள்ளிநிலா ஷர்ஃபுதீன் “எனக்குப் பிடித்த 10 பெண்கள்”னு தொடர் ஆரம்பிச்சு வச்சார்;  பலரைப் போல நானும், எங்கே,  இந்திரா காந்தி, கிரண் பேடி,  அன்னை தெரசான்னு சொன்ன பேர்களையே திருப்பித் திருப்பிச் சொல்லி போரடிக்கப் போறாங்கன்னு ஒரு நொடி  நினைச்சேன்; (தப்புதான், ஆனாலும், உண்மையச் சொன்னதுக்கு என்னைத் திட்டக்கூடாது!!) இருந்தாலுமொரு நம்பிக்கை இருந்து, இதைச் சவாலாகவே எடுத்துகிட்டு பதிவர்களில் சிலர் (பெண்களாவது) தெரியாதவர்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவாங்கன்னு!! 

அதே மாதிரி, பல பதிவர்கள் நான் அறியாதவர்களையும், அறிந்திருந்தாலும் மறந்தவர்களையும் சொன்னபோது ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் அடைந்தேன். அவற்றை உங்களோடும் பகிர்ந்து கொள்ள எண்ணி, இந்த இடுகையில் எழுதியிருக்கிறேன்.  சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி பெறாமல்தான், இங்கு காப்பி-பேஸ்ட் செய்திருக்கிறேன், தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்!!

தொடர் பதிவு தொடர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் நல்ல அறிமுகங்கள் வரும் என எதிர்பார்க்கிறேன்!!


வி சாந்தா: அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் சேர் ஃபர்சன். இவர் 50 வருடமாக கேன்சர் நோயாளிகளுக்காவே தன்னை அர்ப்பணம் செய்தவர் padmashree மற்றும் பலவிருதுகள் பெற்றவர்.

அருணாராய்:  இவர் ஒரு சமூகசேவகி.இந்தியன் அட்மினிஷேசனில் சிவில் சர்வன்டாக பணிபுரிந்தவர். ஏழைகளுக்காக குரல்கொடுத்தவர்.

சி என் ஜானகி : இவர் இருகால்களையும் போலியோவினால் இழந்தும். நீச்சல் துறையில் சாதனைப்படைத்தவர்

பாத்திமா [ரலியல்லாஹ்] : இவர்கள் நபிகள் நாயகத்தின் திருமகளார். ஒருபெண்மணி எப்படி வாழவேண்டும் என்ற பாதையை வழிவகுத்துத்தந்தவர்கள். ... ஒரு நல்லவரை நேரில்பார்த்து அவர்களைபோல் வாழ்வதைபோல். அவர்கள் இப்படி நல்லவர்களாக தூயவர்களாக வாழ்ந்தார்கள் அதுபோல் வாழவேண்டும் என சொல்லக்கேட்டு வாழ்வதிலும் மிக சிறப்பு உள்ளது. இவர்களை மிகவும் பிடிக்கும்..


ராமலட்சுமி: இவர் திருநெல்வேலியின் புகழ்பெற்ற கைராசி மிக்க டாக்டர். நெல்லையில் உள்ள இவரின் மருத்துவமனைக்கு செல்லாத பெண்களே இல்லை எனலாம். மகபேறு, குழந்தையின்மை, பெண்களின் பிரச்சனைகள் போன்றவற்றுக்கு இவர் மருத்துவமனைக்கு சென்றால் தீர்வு காணலாம். இப்போது இவரைப் போல இவர் மருமகள் மதுபாலாவும் சிறந்த டாக்டர். இருவரும் நெல்லை பெண்களுக்கு கைராசிமிக்க மருத்துவர்கள்.
 

சுதா நாராயணன்: இவர் இன்போஸிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தியின் மனைவி. அந்த நிறுவனத்தை துவக்கவும், வளர்க்கவும், உறுதுணையாக இருந்து, இதற்காக அவருக்கு வந்த நல்ல வேலை வாய்ப்பினையும் விட்டு கொடுத்தவர், என இன்று வரை அவர் கணவரால் போற்றப்படும் பெண்மணி.
 

உமா மகேஸ்வரி: இவர் நெல்லையின் முன்னாள் மேயர். நெல்லையில் முதன்முதல் மாநகராட்சி முறை கொண்டு வந்தபோது நெல்லையின் முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது நிர்வாகத்தில் நெல்லையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டது எனலாம்.

வசந்த குமாரி:  இவர் நாகர்கோவிலை சேர்ந்தவர். இவர் தான் தமிழ்நாட்டு முதல் பெண் பேரூந்து ஓட்டுனர். எல்லோரும் கேலி செய்த நேரத்தில் தன் திறமையைக் கொண்டு முன்னேறிய‌வர்.

மைதிலி கிருஷ்ணன்:  

கானா - இவள் 12 ஆம் நூற்றாண்டில் பெங்காலில் வாழ்ந்த ஒரு கவிஞர், வான சாஸ்திரத்திலும் மேதையாக இருந்த்தாள். இவளது கணவன் கணிதம் மற்றும் வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கிய வராஹமிஹிரா . கணவனை விட மிக துல்லியமாக வானசாஸ்திரம் கணித்ததனால் நாக்கு துண்டிக்கபட்டவள். நாக்கு துண்டிக்கப்பட்டப்பின்னும் கானா வசன் (கானாவின் வாக்குகள் ) என்ற பெயரில் கவிதைகளும் விழிப்புணர்ச்சி வருத்தும் கருத்துக்களும் எழுதினாள்.  

மிராண்டா ஸ்டூஆர்ட்( Dr.ஜேம்ஸ் பாரி ): ஆண் வேடமிட்டு 1812 ஆம் ஆண்டு எடின்பர்க் மருத்துவ கலூரியில் பட்டம் பெற்றார். பெண்களுக்கு அப்போது கல்லூரியில் இடம் இல்லை. ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் பல நாடுகளிலும் சேவை செய்தார். ஆணாகவே வாழ்ந்தாள். அவர் இறந்த பிறகு அவர் உடலை சுத்தம்செய்த பெண்மணியே அவர் ஆணல்ல பெண் என்று கண்டுபிடித்தார்.. எத்தனை வைராக்கியம் இருந்தால் அவர் 56 வருடங்கள் ஆணாக வாழ்ந்திருப்பார். 

சாவித்திரி பாய்:  இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். 1848 ஆம் ஆண்டு பூனாவில் முதல் பெண்கள் பள்ளிக்கூடம் நிறுவினார். 1852ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பெண்களுக்காக பள்ளிக்கூடம் தொடங்கினார். 

பிரேம் மாத்தூர்: இவர் இந்தியாவின் முதல் பெண் விமான ஓட்டுனர். விமானம் ஓட்டும் பயிற்சி இருந்தும் அவருக்கு எந்த விமான கம்பெனியிலும் வேலை கொடுக்கவில்லை. பெண் ஓட்டுனர் என்றல் எங்கள் விமானத்திற்கு ஆள் வரமாட்டார்கள் என்று கேலி செய்தனர். மனம் சோர்ந்து தொழிலதிபர் ஜி. டி.பிர்லாவின் தனிப்பட்ட விமான ஓட்டுனராக பணியாற்றினார். 1951 ஆம் ஆண்டு டெக்கான் ஏர்லைன்ஸ் அவருக்கு முதல் வாய்ப்பை வழங்கியது.  

சந்திரமுகி பாசு : கல்கத்தா பல்கலை கழகத்தில் 1886 ஆம் ஆண்டு பி.ஏ பட்டம் பெற்ற முதல் இந்திய பெண். இவருடைய இரு தங்கைகள் தான் கல்கத்தா மருத்துவ கல்லூரியில் முதன் முதலாக படித்த பெண்கள். எத்தனை முதல்கள் ஒரே குடும்பத்தில்..

ராஜேஸ்வரி சண்முகம்: படிக்கும் காலத்தில் எனக்கு மிக பிடித்த பொழுதுபோக்கு இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் கேட்பது. நிகழ்ச்சி தொகுத்து அளிக்கும் இவரின் பாங்கு எனக்கு மிகவும் பிடிக்கும், இவர் குரலை கேட்டாலே உற்சாகம் தொற்றி கொள்ளும் அறிவிப்பாளர் .  

Kim clijsters: பொதுவாக, திருமணம் ஆகிவிட்டாலே, விளையாட்டில் இருந்து விலகி கொள்பவர்கள் அதிகம். ஒரு குழந்தைக்கு தாயான போதும் இரண்டாவது முறையாக us open - champion - பட்டம் வென்றவர், டென்னிஸ் வீராங்கனை Kim clijsters.  

சரோஜ் நாராயணசுவாமி: வானொலியில் செய்தி கேட்கும் வழக்கம் உடையவர்கள் கண்டிப்பாக இவரது குரலை கேட்டு இருப்பீர்கள், இந்த வெண்கல குரல் எனக்குப் பிடித்த ஒன்று, குரலுக்கு சொந்தக்காரர் சரோஜ் நாராயணசுவாமி


வை.மு. கோதை நாயகி அம்மாள் :  முதல் பெண் எழுத்தாளர் 
கேரம்" இளவழகி:  விளையாட்டு வீராங்கனை
மருத்துவர் ஷாலினி.: உடல் உளவியல் மருத்துவர்
இந்திரா நூயி : 
பெப்சி CEO
சந்தா கோச்சார் :
ICICI வங்கி சேர்மென்
மேதா பட்கர் :-
சமூக சேவகி .
ரப்ரி தேவி :
சிறந்த (!) அரசியல் வாதி


சாந்தா-தனஞ்செயன்:   வி.பி. தனஞ்செயன். சாந்தா தனஞ்செயன். இவர்கள் இருவரும் தம்பதிகள். இருவரும் பாரத நாட்டிய கலைஞர்கள். சர்வதேச புகழ் பெற்ற, வரலாற்று சிறப்பு கொண்ட சென்னை அடையாறு "கலாச்சேத்ரா" பாரத நாட்டிய பள்ளி இவர்களுடையது. சென்னை வாழ் மக்கள் கலாச்சேத்ராவில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க விரும்புவர்.

வாலேண்டினா தெரஸ்கோவா : இரஷ்யாவில் சாதாரனக் குடும்பத்தில் பிறந்து, முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற சாதனையாளர்.பூமியின் சுற்றுவட்டப் பாதையில் 1963 ல் ஜீன் 6ஆம் திகதி பறந்தவர்.

டாங்கோ திபு,பச்சோந்திரி பால் :
இவர்கள் இருவரும் எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் முதன் முதலில் ஏறியவர்கள். கடும் குளிர்,உறைபனி எதிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என நிருபித்தவர்கள். பச்சோந்திரி பால் ஏறியவர். டாங்கோ கைடுங்க.

டாக்டர் கீதாஹரிப்பிரியா: நிறைய பெண்களின் வயிற்றில் பால் மட்டும் அல்ல, குழந்தைகளையும் வார்த்தவர். சிறந்த கைனக்காலஜிஸ்ட்


சின்னப் பொண்ணு : அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களே காலில் விழுந்து வணங்கிய பெரிய பொண்ணு இவர். ஏட்டறிவு இல்லாவிட்டாலும் விவசாய மக்களுக்கு இவர் ஒரு கலங்கரை விளக்கம்.
 

விஜயா : நாகப்பட்டினம் பள்ளி வேன் விபத்தில் சிறு குழந்தைகளை காப்பாற்ற தன் உயிர் தந்த தியாகி. அர்பணிப்பு என்னும் சொல்லின் அருஞ்சொல்பொருள்.


பூங்குழலி:   .. "பொன்னியின் செல்வன்"ங்கிற அந்த புக்குல வர்ற பூங்குழலிங்கிற கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிச்சுப் போனது. ...
ஆச்சி மனோரமா:  சிறுவயதில் எனது பள்ளிவிடுமுறையில் நான் பார்த்த 'பாட்டி சொல்லை தட்டாதே' படத்தில்தான் முதன்முதலில் நான் இவரது நடிப்பைப் பார்த்து வியந்தேன். இந்த படத்திற்கு பிறகு நான் இவரை என் சொந்த பாட்டியாகவே கருத ஆரம்பித்தேன். எல்லா சிறுவர்களுக்கும் இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதன்பிறகு பெரும்பாலான முன்னனி நடிகர்கள் இருக்கும் படங்களிலும், டிவியில் பார்க்கும் பழைய கருப்பு வெள்ளை படங்களிலும் இவர்களது நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்கள் என்னை பெரிதும் ஈர்த்தன. 'சகல கலா வல்லி' என்று நடிகர் திலகத்தால் இவர் அழைக்கப்பட்டது மிகவும் பொருந்தும்.

குந்தவை நாச்சியார்:  மீண்டும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரமா என்று நினைக்க வேண்டாம். இவர்கள் கற்பனைப்பாத்திரமல்ல, உண்மையில் வாழ்ந்தவர்... இவரது Management Skillsஐப் பற்றி பலபேர் வியந்திருக்கிறார்கள். இவர் தனது வாழ்நாளில் Intellectual Womenஆக வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு பல சான்றுகள் உண்டு. இன்றும் இவரது நினைவாக இவரது பெயரில் ஒரு மகளிர் கல்லூரி தஞ்சையில் இருக்கிறது. அந்தளவிற்கு மரியாதை செலுத்தபட்டவர். ராஜராஜ சோழனின் வரலாற்று வெற்றிக்குப் பின்னால் இவரது பெரும்பங்கு உண்டு.


செல்லம்மா பாரதி : பாரதி ஒரு ஆச்சர்யம் என்றால்.. அவர் துணைவி இன்னொரு ஆச்சர்யம்! இரண்டு எக்ஸ்ட்ரீம் !


பிபிசி தமிழோசை வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் ஆனந்தி:  அவர் எல்லோருக்குமே அக்கா தான். பிறந்தது யாழ்ப்பாணத்தில். பிறகு 90களில் வானொலி அறிவிப்பாளராக... பிபிசியில். அவரது குரல், ஈழத்தமிழர்களின் சோகத்தை சொல்லும் போது, கண்கள் பணிக்காமல் இருக்காது. குரலில் தெரியும் நேசம், நம்மை வேறு யாரோவாக நினைக்க வைக்காது. நம் உறவாகவே நினைக்க வைக்கும். அவர் குரலை கேட்கவே பிபிசி கேட்பேன். அழகிய தமிழ் உச்சரிப்பு. என்ன காரணமோ தெரியவில்லை, அவர் பணியிலிருந்து விலகிய பிறகு, நான் பிபிசி தமிழோசை கேட்பதையே நிறுத்தி விட்டேன்.
 

தடகள வீராங்கனை சாந்தி: அனேகம் பேர் மறந்திருக்கக்கூடும். பாலினச்சர்ச்சை காரணமாக பதக்கத்தை இழந்த பெண். அவருக்கு ஆதரவாக, எதிர்ப்பாக என்று சரிபாதியாக ஆதரவு, எதிர்ப்பு குரல்கள். பாதியிலேயே முடிந்தது... ஒரு நீண்ட ஓட்டம். தன் தாய்க்கு துணையாக கிராமத்தில் வாழ்ந்த அவர், கடைசியில் தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல்.

ஜிக்கி: எனக்கு பிடித்த பாடகிகளில் ஜிக்கியும் ஒருவர். பாடகர் A.M.ராஜாவை மணந்து கொண்டப்பிறகு பாடுவது தடைப்பட்டு போனது அல்லது தடை செய்யப்பட்டது. A.M.ராஜாவின் மறைவிற்கு பின் மீண்டும் பாட வந்து, சில அற்புதமான பாடல்களை, இளையராஜாவில் இசையில் பாடினார். இப்போது நம்மிடையே அவர் இல்லை.

அனுராதாரமணன்:
படிக்க துவங்கிய காலத்தில், நான் தேடி தேடி வாங்கி படித்தது இவரது நாவல்களை. பிறகு ஜெயகாந்தனையும், பாலகுமாரனையும் வாசிக்க துவங்கிய பிறகு, இவர் நாவல்களை மறந்தாலும், இவரது வாழ்க்கை குறிப்புகளை ஒரு போதும் மறக்க முடியவில்லை. தன்னம்பிக்கைக்கு மிக சிறந்த உதாரணம். இவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம். எம்மாதிரியான நரக வேதனையை எல்லாம் தாண்டி வந்துள்ளார் என்பதற்காக. இவர் மூலம் சொல்லப்பட்ட தகவல் தான். இவரது கணவர், பல பெண்களுடன் தொடர்பு கொண்டவர். ஒரு முறை அவர் மூலம், இவருக்கு சில வியாதி ஒட்டிக் கொள்ள், இவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது, இவரை அங்குள்ள எல்லோருமே தவறாக,  தப்பான பெண்ணாக பார்த்தார்களாம்.
 

திருமதி மேனகாகாந்தி: சாமானியனின் மருமகளாக இருந்தால் என்ன... பிரதமர் இந்திரா காந்தியின் மருமகளாக இருந்தால் என்ன. மருமகளுக்கு கொடுமை நேருவது, நேருவது தான். கைக் குழந்தையுடன் வெளியேற்ற பட்ட, இந்திராவின் மருமகள், ஒவ்வொரு அடியையும் எதிர்நிச்சல் போட்டு வெற்றி பெற்றிருக்கிறார். சோனியா ராகுலை உருவாக்கியது வெற்றியல்ல. மேனகா வருணை உருவாக்கியது தான் சாதனை. நாடு முழுவதும் இன்று விலங்குகள் மீதான கொடுமைகளை, கட்டுப்படுத்தி அதற்கென அமைப்பை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்திய பெருமை மேனகா காந்தியை சாரும்.
 

கஸ்தூரிபாய் காந்தி: பிரபலமானவர்களின் மனைவியாக இருப்பதில் நிறைய சிரமங்கள் உள்ளன. அதுவும் மகாத்மாவின் மனைவியாக இருப்பதில்... விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தியாகங்களை
செய்து கொண்டே இருக்க வேண்டும். தனக்கென வாழ முடியாத நிர்ப்பந்தம். மகாத்மாவின் வாழ்வை விட, கஸ்தூரிபாய் அவர்களின் வாழ்வே நிறைய கற்று கொடுத்துள்ளது.
 

தில்லையாடி வள்ளியம்மை: நாம் பள்ளிப்பாடத்தில் சிறு வயதில் படித்த சுதந்திர போராட்டக்காரர். அதுவும் அந்நிய மண்ணில்... தென்னாப்பிரிக்கவில். மகாத்மா காந்தி அவர்களாலேயே வியந்து போற்றப்பட்ட சுதந்திர போராட்ட வீரர். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் தான், அவர்களை ஒரு கணம் நினைத்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
 

ரோஸா பார்க்ஸ்:  உண்மையைச் சொல்லப்போனால் முதற்தீக்குச்சியை உரசியவர் இவர்தான்… அந்த தீ இன்றளவும் நமைத்துப் போகாததுதான் இவரின் வெற்றி… தான் அமர்ந்திருந்த பேருந்து இருக்கையை  விட்டுத்தர மறுத்த இவரின் செயலும், இவர் மீது சுமத்தப்பட்ட வழக்கும் கருப்பின மக்களின் போராட்டத்திற்கு மிகப்பெரிய ஆரம்பமாக இருந்தது...

ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்:  சின்ன வயசில படிச்சேன்… ‘கைவிளக்கேந்திய காரிகை’ அப்படின்னு சொல்லி எங்க தமிழ் வாத்தியாரம்மா பிளேடு போட்டுகிட்டே ஆரம்பிச்சாங்க… ஆனா அவங்க முடிக்கும்போது பிரம்மிப்பா இருந்துச்சு.. இப்படியும் ஒருத்தங்க இருந்தாங்களான்னு… செவிலியர்களின் சேவைக்கு ஈடாக எதையும் கொடுக்க முடியாதுன்றது ரொம்ப உண்மை... உலகம் முழுவதும் இவரது பிறந்த நாள்தான் செவிலியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

அனிதா ராபர்ட்ஸ்:   புரோட்டின் உட்கவருதல் மற்றும் டி-ஜி-எஃப் பீட்டா- கண்டுபிடிப்பிற்கு காரணமான உயிரியலாளர். கேன்சர் பாதிப்பை குறைப்பதற்கும், காயங்கள் மற்றும் எலும்பு முறிவிலிருந்து மீண்டு வருவதற்கும் பயன்படும் அருமருந்தைக் கண்டுபிடித்தவர். இன்று கோடிக்கணக்கான உயிர்கள் விரைவாக காப்பாற்றப்பட காரணமான ஒருவர்…

ஐரம் ஷர்மிளா:   இவரைப்பற்றி கேள்விப்பட்ட பின் மனஉறுதிக்கு யாரை குறிப்பிடுவது என்று தெரியவில்லை… மணிப்பூரின் இரும்புப்பெண்மணி… AFSPA சட்டத்தை வடகிழக்கு பிராந்தியங்களிலிருந்து நீக்க வேண்டி போராடிவருகிறார். அவர் விரைவில் வெற்றி பெற வேண்டும்…

Virginia Woolf:  கடந்த நூற்றாண்டின் சிறந்த பெண்ணிய கட்டுரைகளை எழுதியவர்… (A Room of One’s Own மற்றும் Three Guineas). இறுதியில் ஓல்ஸ் நதிக்கரையில் தன் வாழ்வை முடித்துக்கொண்டார்… போர் பற்றிய இவரது எழுத்து இன்னும் செவியில் சுற்றிக்கொண்டிருக்கிறது…

சங்கமித்ரா:  புத்த மத பிக்குனியா வாழ்ந்த சாம்ராட் அசோகருடைய மகள்… இவங்கள ஏன் பிடிச்சிருக்குன்னு இன்னிக்கு வரைக்கும் எனக்கு தெரியல… ஆனா ஏதோவொன்னு இவங்ககிட்ட இருந்திருக்கு….

யாஸ்மின் அஹமத்:  இவரது உணர்வப்பூர்வமான, கவிதை ததும்பும் விளம்பரப்படங்கள் நிச்சயம் நம் மனதை பாதிக்கும்… துளியும் விரசமில்லாமல் சில விநாடிகளில் ஒரு குறும்படத்தையே காட்டிவிடும் வல்லமை இவரிடம் இருந்தது… இவரும் ஒரு வலைப்பதிவர்தான். ஆனால் இப்போது இவர் இல்லை… இணையத்தில் இவரது வலைப்பூ மட்டும் மெளனமாக உலவிக்கொண்டிருக்கிறது…

நாய்க்குட்டி மனசு:

பெனசிர் புட்டோ: ஒரு முஸ்லிம் பெண் எந்த துறையிலும் உயர்ந்தவராக வருவது எவ்வளவு கடினம் என்பது நமக்குத் தெரியும் . அதிலும் அரசியல் என்றால் கேட்கவேவேண்டாம். இரு முறை பாகிஸ்தானின் பிரதமராக இருந்த பெனசிர் புட்டோ . பல முறை சாவின் பிடியில் இருந்து தப்பித்தவர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சமாதானத் தூதை தொடங்கி வைத்தவர். முக்காடிட்ட முகமானாலும் முன் இருப்பவரை மலர வைக்கும் பெனசிர் புட்டோ ரொம்ப பிடிக்கும் .
 
எழுத்தாளர் சிவசங்கரி: எங்கள் கல்லூரி நாட்களில் சிவசங்கரி யும், இந்துமதியும் இன்றைய விஜயும், அஜித்தும் போல. அவர்களை கதைகளை வாரப் பத்திரிகைகளில் படித்து ஒரு பட்டிமன்றமே நடக்கும். சிவசங்கரி கண் தானம் பற்றி எழுதிய ஒரு கட்டுரையைப் பார்த்து நிறைய பேர் கண் தானம் பண்ணி இருக்கிறார்கள். அவர் எழுதிய "அவன்" கதை பலரைப் பாதித்தது. எழுத்துத் துறையில் எனக்கு மிகவும் பிடித்தவர் சிவசங்கரி.

எங்கள் பிளாக்:

திருமதி விசாகா ஹரி:
  திறமையாக, எளிமையாக, இனிமையாக, புதுமையாக கதா காலட்சேபம் செய்யும் கிருஷ்ண ப்ரேமியின் மருமகள் திருமதி விசாகா ஹரி.

சுஜாதா:  ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்றும் ரங்க ராஜன் என்றும் அறியப் பட்டவருக்குத் தன் பெயரைத் தந்து மங்காப் புகழைத் தந்த அவர் மனைவி சுஜாதா.

உஷா உதூப்: ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து மேற்கத்திய இசையில் கலக்கிய (லதா மங்கேஷ்கர் பாராட்ட வரும் போது கண் கலங்கி, கை கூப்பி, தமிழில், "ஐயோ...என்ன பண்றது..." என்று மேடையில் உணர்ச்சி வசப்பட்ட ) உஷா உதூப்

தமிழா. தமிழா.. 

ராதிகா:  1978ல் கிழக்கே போகும் ரயிலில்..அறிமுகமானவர்..தமிழ் கூட அப்போது சரியாக பேசத் தெரியாது.ஆனால்..தன்னை இன்று பிரமாதமாக வளர்த்துக் கொண்டுவிட்டார்..தவிர்த்து ராடன் மீடியா என்ற நிறுவனத்தை திறம்பட நடத்தி வருபவர்.

தாமரை:  'பார்த்த முதல் நாளாய்' பாடல் முணுமுணுக்காத ரசிகனே இல்லை எனலாம்.அதற்கு சொந்தக்காரர்.விண்ணைத்தாண்டி வருவாயா..என்பதற்கான சவாலாய் இருந்தவர்.ஈழப்பிரச்னையின் போது இவரின் வீராவேசமான பேச்சு..என்னை இவரை இந்த லிஸ்டில் சேர்த்து விட்டது.

திருமதி ஒய்.ஜி.பி.:  ராஜம்மா,ராஷ்மி,ராஜலட்சுமி என்றெல்லாம் அழைக்கப்படுபவர்.கல்வித்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.உலகில் அனைத்துப் பகுதிகளிலும் வெற்றி பெற்ற வாழ்க்கை வாழ்ந்துவரும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளின் படிப்பிற்கான முன்னோடி.இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

Post Comment

பெண்களும், புகுந்த வீடும்







வரலாற்றில கி.மு, கி.பி இருக்கிற மாதிரி உலகத்துல எல்லோருடைய தனிப்பட்ட வாழ்விலும்  தி.மு., தி.பி.ன்னு ரெண்டு வரலாறு இருக்கும். விரும்பியே வலைக்குள் அகப்பட்டாலும், ஆண், பெண் இருபாலருக்குமே தி.பி. வரலாறு பெரும்பாலும் சோகமயமாவே இருக்கும்.  அல்லது சோகமாக இருப்பதாகவே காட்டிக் கொள்வார்கள்.

என்னதான் விளையாட்டா பேசிக்கிட்டாலும், ஒரு பெண்ணுக்குத் திருமணம் என்பது வாழ்க்கையையே மாற்றிப் போடத்தான் செய்கிறது. புதிய உறவுகள், புதிய குடும்பம், புதிய இடம், புதிய வாழ்க்கை முறைகள், புதிய சட்டதிட்டங்கள், ..  எல்லாமே புதிதாக!! வேரோடு பிடுங்கி மண்மாற்றி நடப்பட்ட மரமாக, ஆரம்ப காலங்களில் சிறிதே துவண்டாலும், விரைவில் தன்னைச் சமப்படுத்தி, ஊன்றிய இடத்தில் புதுவேர் பிடித்து, கிளை பரப்பி நிழல் கொடுக்கத் தொடங்கிவிடுகிறாள் பெண்!!

சில குடும்பங்களில் திருமணத்திற்குப் பின் பெண்ணுக்கு சம்பிரதாய வழக்கப்படி வேறு பெயரே சூட்டப்படுகிறது!! பல சமுதாயங்களில், வீட்டில் யாரேனும் இறையடி சேர்ந்துவிட்டால், துக்கம் அனுசரிக்கும்விதமாக ஒரு வருடம்வரை பண்டிகைகள் கொண்டாடப்படுவதில்லை; இதிலும் பெண்ணின் பிறந்த வீட்டில் உள்ளோர் மறைந்திருந்தால் அது அப்பெண்ணின் புகுந்த வீட்டின் பண்டிகைக் கொண்டாட்டங்களைப் பாதிக்காது!! காரணம் அப்பெண் திருமணத்தோடு புகுந்த வீட்டின் அங்கத்தினராகி விடுகிறாள்.

ஒவ்வொரு சமுதாயத்திலும், ஊரிலும் ஒவ்வொரு வகைப் பழக்கங்கள்!!திருமணத்திற்குப் பின் அன்றாட நடைமுறைகளிலும் சரி,  பண்டிகை போன்ற விசேஷ வைபவங்களிலும் சரி, ஒரே சமுதாயத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் சிற்சில வேறுபாடுகளாவது பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் இருக்கும். பெண் அதையும் அணைந்து பெருமையோடே ஏற்றுக்கொள்கிறாள்.

சிலர் உறவுகளுக்குள்ளேயோ அல்லது  ஊருக்குள்ளேயோ திருமணம் செய்துகொள்வார்கள்; இவர்கள் அதிகம் சிரமம் இல்லாமல் சமாளித்துக் கொள்வார்கள். சிலர் ஊர்விட்டு திருமணம் செய்துகொள்வார்கள். சிலர் பிற மாநிலங்களிலும் விரும்பித் திருமணம் செய்துகொள்வார்கள். விருப்பம் நிறைவேறும் மகிழ்ச்சியில்,  கலாச்சார, உணவுப் பழக்க வேறுபாடுகளை மனமுவந்து ஏற்றுக் கொள்வார்கள்.

நாடுவிட்டு நாடு திருமணம் செய்வோரும் உண்டு; ஆனால் பெரும்பாலும் இந்தியப்பெண்கள் அந்நிய நாட்டவரைத் திருமணம் செய்வது அரிதே.  ஆனால், இந்திய ஆண்கள் அந்நிய நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்வது பரவலாக நடைபெறத்தான் செய்கின்றது. செய்தித்தாட்களில் பெருமையுடன் முதல்பக்கச் செய்தியாகப் படத்துடன் பிரசுரித்திருப்பார்கள், ”வெளிநாட்டுப் பெண் இந்தியக் கலாச்சார முறைப்படி திருமணம் செய்துகொண்டார்” என்று!!

பொருளாதார வசதி, குடியுரிமை, வேலைவாய்ப்பு போன்ற காரணங்களை முன்னிறுத்திச் செய்யப்படும் இவ்வகைத் திருமணங்களில் பலவும், காரியம் முடிந்தவுடன், சிலசமயம் அதற்குமுன்பேகூடக் கைகழுவி விடப்படுகின்றன. இருதரப்பிலும் உள்ளார்ந்த அன்புடன், பக்குவமடைந்த மனதுடன் செய்யப்படும் திருமணங்களே நீடித்து நிலைத்து நிற்கின்றன!! இப்படிச் சொன்னவுடன் எல்லாருக்குமே நினைவில் வருவது, சோனியா - ராஜீவ் காந்தி ஜோடிதான் இல்லையா?

நான் இங்கு அரசியல் பேசவில்லை; கொள்கைரீதியாக சோனியாவைச் சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், ஒரு பெண் என்ற முறையில் அவரை எனக்குப் பிடிக்கும். அரசியல் பாரம்பரியமிக்க இந்தியக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாலும், அக்குடும்பத்தின் புகழுக்கும், பெருமைக்கும் இன்றுவரை தன்னால் பங்கம் வராமல் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதன் மூலம் தன் பிறந்த நாட்டுக்கும், குடும்பத்துக்கும்தான் பெருமைதேடித் தந்திருக்கிறார். இன்னொரு இந்திய மருமகள் இருந்தும், மாமியார்மெச்சும் மருமகளாக இவரே இருந்திருக்கிறார்!!

அரசியல் கூடாது என்று தன் கணவரிடம் உறுதிமொழி வாங்கியிருந்தாலும், அவசியம் வந்தபோது அவரை நாட்டுக்குத் தந்து, அதன்காரணமாக அவரையே இழக்கவும் செய்தார்.  ராஜீவின் மறைவுக்குப்பின் ஒதுங்கி இருந்தாலும், அவசியமேற்பட, தானே நேரடி அரசியலுக்கு வந்து வெற்றி  பெற்றுத் தந்ததினால், பிரதமர் ஆகும் வாய்ப்பு கைமேல் கிடைத்தாலும், பெருந்தன்மையாக மறுத்து, அதைத் தகுதிவாய்ந்த ஒருவரிடம் ஒப்படைத்தது;  எதிர்க்கட்சிகள் பண்பாடு இல்லாமல் அவரைப் பற்றி இழிவாகப் பேசினாலும், பொறுமை காத்து, சொல்லாடாமல், செயலாற்றிப் பதிலளிப்பது;  வட்டம், மாவட்டங்களே தலைகால் புரியாமல் இந்நாட்களில் ஆடும்போது, நூற்றாண்டுகண்ட கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும், அவையடக்கத்தோடே இருப்பது; ஒரே பிடிப்பாக இருக்கும் மகனையும், உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறதென்று தெரிந்தாலும், தைரியமாகக் களத்தில் இறக்கி விட்டிருப்பது; பண்பான உடைகள் அணிவது; மற்றவர்களின் கைப்பாவையாக இல்லாமல், உறுதியான முடிவுகளைத் தானே எடுப்பது; இப்படி எத்தனையோ காரணங்கள் சொல்லலாம் பெண்ணாக அவரைக் குறித்த பெருமைகளாக!!

ஒருவரின் கொள்கைகளை எதிர்க்கப் பலவழிகள் இருந்தாலும், சட்டப்படி மட்டுமின்றி உள்ளத்தாலும் இந்தியராகவே மாறிவிட்ட அவரை இன்னமும் “இத்தாலிய மங்கை”, “அண்டோனியோ மைனோ”, ”பின்வாசல் வழி வந்தவர்”, “இத்தாலி மகராணி பெற்ற இளவரசன் (ராகுல்)” என்றெல்லாம் இழிவுபடுத்துவது,  இராமர் இருக்குமிடமே அயோத்தி என்று வாழ்ந்த சீதாப்பிராட்டியாரைப் போற்றும் பி.ஜே.பி. வகையறாக்கள் மட்டுமல்ல, முற்போக்குச் சிந்தனை கொண்டச் சில பெண்களும்தான் என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது!!

ஏனோ கற்புக்கரசியாகப் பாராட்டப்படும் கண்ணகியின் நினைவு வருகிறது!!

Happy Women's Day!!




Post Comment