Pages

விடை பெறுகிறேன் - 2




தலைப்பைப் பாத்ததும் என்னவோ ஏதோன்னு  அடிச்சுப் பிடிச்சு, “எல்லாம் நல்லாத்தானே போயிட்டிருக்கு, இப்ப என்னாச்சு?”னு கேள்வியோட பதட்டமா வந்திருப்பீங்க. ஒண்ணுமில்ல நல்ல விஷயந்தான். ஜந்தோஜமா வந்தவங்களுக்கு “ஆசை தோசை அப்பளம் வடை”!!  சீரியல் மாதிரி எபிசோட் நம்பரெல்லாம் ஏன்னு கேக்கிறவங்களுக்குப் பதில்  "விடை பெறுகிறேன்-1"-ல் இருக்கு!!

ஏற்கனவே மக்காவுக்குச் சென்று, இறைவனருளால், இரண்டுமுறை “சின்ன ஹஜ்” எனப்படும் “உம்ரா” செய்திருந்தாலும் முழுமையான ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையிருந்தது. சரி, சின்னவன் வளரட்டும், அதுக்குள்ள நமக்கும்  மனசுல ஒரு பக்குவம், maturity, ஒரு முதிர்ச்சி, பொறுப்புணர்ச்சி வந்துடும் அப்படின்னு நினைச்சுக் (நம்ம்ம்ம்ம்பி) காத்திருந்தோம்.

முதல் கண்டிஷன்படி, அல்ஹம்துலில்லாஹ், சின்னவன் நல்லபடியா வளந்துட்டான். ஆனா, அடுத்ததுதான்.... பக்குவம், முதிர்ச்சிக்கு எல்லாம்  அளவுகோல் ஏது?   மேலும், போன பதிவுல சொல்லியிருந்த மாதிரி, நாளை என்ன நடக்கும்கிறது நம்ம கையிலயா? அதனால, அலை எப்ப ஓயறது, தலை எப்ப முழுகுறதுன்னு காத்திருக்காம, ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டுக் கிளம்பிட்டோம். ஆமா, நாங்க இந்த வருட ஹஜ்ஜுக்குப் போறோம், இன்ஷா அல்லாஹ். 
முன்னே ரெண்டு முறை உம்ராவுக்காகப் போனப்போ, ஹஜ் போல  அதிகக் கூட்டமில்லை என்றாலும், அதற்கே அங்கு வந்திருக்கும் பல நாட்டு மக்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், தனித்துவங்கள்னு நிறைய வேறுபாடுகள் இருந்த போதிலும், பிரார்த்தனைநேரம் என வரும்போது அனைவரும் ஒரே மாதிரி, ஒரே இறைவனை நோக்கி ஒருமுகப்பட்டு நிற்பது ஆச்சர்யமாக இருக்கும். இதுதான் வேற்றுமையில் ஒற்றுமையோ!!!




ஒருமுறை கஃபா அருகில் திறந்த வெளியில் நின்று நாங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது, மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே சுற்றிலும் உள்ள மூடிய பகுதிக்கு எல்லாரும் வர முற்பட்டுக் கொண்டிருந்தபோது, தடதடவென போலீஸ்காரர்கள் நிறைய பேர் கஃபாவின் ஒரு பகுதியில் சென்று அரண் போல வளைத்து நின்று கொண்டார்கள். நாங்கள் அதைக் கண்டு, ஒருவேளை அரச குடும்பத்தைச் சார்ந்த அல்லது வேறு நாட்டுத் தலைவர்கள் யாரும் வரப்போகிறார்கள் போல (நம்ம ஊர்ப் பழக்கதோஷம்!!)  என்று  நினைத்துக் கொண்டே, மழையிலிருந்து பாதுகாப்பாக கூரையடியில் நின்றுகொண்டே வருவது யாராக இருக்கும் என்று உடன்வந்த உறவினரிடம் (சவூதியில் கிட்டத்தட்ட 20-25 வருடங்களாக இருப்பவர்!!) கேட்க, அவர் சிரித்துக் கொண்டே, “கஃபா மேல விழுற மழைத்தண்ணி வடிகால் வழியா வழியும்போது அதைப் புனித நீர்னு சிலர் பிடிச்சுக்க ஓடி வருவாங்க. அதைத் தடுக்கத்தான் போலீஸ்காரங்க சுத்தி நிக்கிறாங்க” என்றார்!! 


இப்படிப் பல சுவாரசியங்கள் நிறைந்த படிப்பினைகள் கிட்டும் இடம். இந்த முறை பதிவராகவும் இருப்பதாலும், ஹஜ்ஜுக்குப் பெருந்திரள் வருமென்பதாலும், அலைபாயும் கவனத்தைக்  கட்டி இழுத்து பிரார்த்தனையில் செலுத்தமுடியுமா என்று பயமாருக்கிறது என்று தோழியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ”அங்கே எப்பேர்ப்பட்ட ராஜாவானாலும் ஒரே மாதிரி எளிய ஆடையில் கூடாரங்களிலும், மைதானங்களிலும் பாலைவன மணல்தரையில் தங்கி, செருக்கு மறைந்து ஏக இறைவனைப் பிரார்த்திப்பதைக் காணும்போது நீ யார் எவரென்றெல்லாம் மறந்து, அந்த மனிதக் கடலில் நீ ஒரு துளி மட்டுமே என்பதை உணரும் தருணத்தில், கவனம் வேறு எதிலும் போகமுடியாது” என்றாள். இறைவன் நாட்டம்.
 

நட்புகளுக்கு என் மனமார்ந்த தீபாவளி மற்றும் பெருநாள் வாழ்த்துகள். நவம்பர் இறுதியில் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்!!

(பின்னூட்டங்களைப் பப்ளிஷ் செய்யவோ, பதிலளிக்கவோ நேரமில்லை என்பதால் பின்னூட்டப் பெட்டி இந்தப் பதிவிற்கு மட்டும் இல்லை!! நன்றி.)

Post Comment