Pages

கடைசிக் கடமை




அலுவலகமானாலும், வீடானாலும், நாம் நமக்குரிய கடமைகளை, அல்லது அன்றாட வேலைகளைச் செயல்படுத்தும்போது, அவற்றை வரிசையாக முன்னுரிமைப் படுத்தி, முதலில் செய்ய வேண்டுவனவற்றை முதலில், மற்றவற்றை அடுத்தடுத்து என அவற்றின் காரணகாரியங்களைப் பொறுத்துச் செய்வதுண்டு. எனினும், எதையும் செய்யாமல் விடுவதில்லை. சிலவற்றை செய்துமுடிக்க, வேறு தொடர்புடைய ஆவணங்கள் தேவைப்படலாம். எனில், அவற்றைக் கேட்டுப் பெற்று, செய்து முடிப்போம்.

இதேபோலத்தான்  நாடு, மொழி, இனம், ஆண், பெண், ஏழை, பணக்காரன், இளையவர், முதியவர் என எந்தப் பேதமுமில்லாமல் கடைபிடிக்க வேண்டிய முஸ்லிம்களின் ஐந்து கடமைகளும்.

1  ஒரு முஸ்லிமாக இருப்பவர் நிறைவேற்ற வேண்டிய ஐந்து கடமைகளில், முதலாவது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்ற இறை நம்பிக்கை. 24x7 கடைபிடிக்க வேண்டியது.

2. இரண்டாவதான தொழுகை: தினமும் ஐந்து முறை தொழுவது எல்லாருக்கும் கட்டாயமான  கடமை.

3. மூன்றாவதான நோன்பு:  வருடத்தில் குறிப்பிட்ட தினங்களில், சூர்யோதயம் முதல் சூர்ய அஸ்தமனம் நோன்பிருப்பது எல்லாருக்கும் கடமை. ஆனால் உடல் நலமில்லாதவர்களுக்கு மட்டும் சலுகைகளுண்டு. எனினும், பின்னர் உடல்நலமடைந்தவுடன் விட்ட நோன்புகளை நிறைவேற்றுவது அல்லது பசித்தோருக்கு உணவளிப்பது என்று பரிகாரங்கள் உண்டு.

4. நான்காவதான ஸகாத் எனப்படும் தர்மம்: குறிப்பிட்ட அளவுக்குமேல் செல்வம் உடையோருக்கு மட்டுமே உரிய கடமை.

5. அதுபோலத்தான் ஐந்தாவதான ஹஜ்ஜும்.  கடைசிக் கடமையாய் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்தே புரியும்,  பல நிபந்தனைகளுக்குட்பட்டது என்று.

1. நிபந்தனைகள்:

மற்ற கடமைகளெல்லாம் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே செய்யக்கூடியவை. ஆனால், ஹஜ் என்பது, ஒரு குறிப்பிட்ட மாதத்தில், சவூதி அரேபியா நாட்டில் உள்ள “மக்கா” என்ற நகருக்குச் சென்று நிறைவேற்ற வேண்டிய கடமை. அதனால்தான், அந்நாட்டிற்குச் சென்றுவருமளவு பணவசதியும், உடல்நலமும் உள்ளவர்கள்மீதே இந்தப் புனிதப் பயணம் மேற்கொள்வது கடமையாக்கப்பட்டுள்ளது.

உடல்நலம்: தூரதேசப் பயணம் மற்றும் அலைச்சல் ஆகியவற்றைத் தாங்கி,  பிரார்த்தனைகளைத் தடங்கலின்றி நிறைவேற்றித் திரும்புமளவு குறைந்த பட்ச உடல் மற்றும் மனநலம் அவசியம்.

பணவசதி: சவூதிக்குச் சென்று வருவதற்கு மட்டுமல்லாமல், அங்கிருக்கும் நாட்களில் தனக்கு வேண்டிய பராமரிப்பு மற்றும் அச்சமயத்தில் தன் குடும்பத்திற்குரிய பராமரிப்பு  ஆகியவற்றைக் குறைவின்றி நிறைவேற்றத் தேவையான பணம் இருக்கவேண்டும்.

இவையிரண்டும் ஒருவரிடம் இருந்தால்தான், அவருக்கு ஹஜ் செய்ய வேண்டிய கடமையாக ஆகின்றது.

இன்னும் சில உண்டு:

* அதாவது, ஹஜ்ஜைவிட முன்னுரிமைப்படுத்த வேண்டியத் தேவைகளை/ கடமைகளை முதலில் நிறைவேற்ற வேண்டும். உதாரணம்: அடைக்கப் படவேண்டிய அவசியமான கடன்கள், தான் இல்லாத சமயத்தில் குடும்பத்தின் பாதுகாப்பு, தேவைகள் நிறைவேற்ற வழிகள் கண்டு, பொறுப்பாளரை நியமித்தல் .

* ஒருவரின் ஹஜ்ஜை நிறைவேற்ற அவரேதான் பொறுப்பாளி. அதாவது, பெற்றோர் தன் மகனையோ, மனைவி தன் கணவனையோ அதற்கான செலவிற்கு எதிர்பார்த்தல் கூடாது. அதே சமயம், அன்பினால் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டால் தவறில்லை.

* அதேபோல, வசதியில்லாதவர்கள், பக்திமேலீட்டால் யாசகம் பெற்றாவது ஹஜ் செய்ய வேண்டும் என்று எண்ணுதல் கூடாது. எனினும், தான் எதிர்பாராமல் அவ்விதம் ஒரு உதவி தன்னைத் தேடி வந்தால், விருப்பமிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.

* ஹஜ்ஜிற்கான பணத்தை நேர்வழியில் சம்பாதிருத்தல் அவசியம்.

* பணமிருந்து, உடல்நலமில்லை என்றால், தனக்காக உறவினரை தனது செலவில் செய்து வருமாறு கேட்கலாம். ஆனால், அவ்வுறவினர் தனக்கான ஹஜ்ஜை ஏற்கனவே செய்தவராக இருக்க வேண்டும்.

* நிபந்தனைகள்படி ஒருவர்மீது, ஹஜ் கடமையாக இருந்து, ஆனால் செய்யாமல் இறந்துவிட்டாரானால், அவரது வாரிசுகளின்மீது  பெற்றவருக்காக அதை நிறைவேற்றும் கடமை உண்டு. இதற்கு இறந்தவரின் சொத்திலிருந்தே பணம் எடுக்க வேண்டும்.

* ஒருவரின் வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் ஹஜ் செய்யவேண்டியது கட்டாயக் கடமை. எனினும், விருப்பப்பட்டு, நிபந்தனைகளுக்குட்பட்டு, பலமுறைகள் செய்வதில் தவறில்லை.

”மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையின்போது குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! ஓவ்வொரு ஆண்டுமா?” என்று கேட்டார். அவர் இவ்வாறு மூன்று தடவை கேட்கும் வரை நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்துவிட்டு “நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே கடமையாகிவிடும். அதற்கு நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள்” என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ)

இறைவன் இஸ்லாமை பின்பற்ற எளிமையானதாகவே ஆக்கித் தந்திருக்கிறான் என்பதை இவையெல்லாம்  மேலும் உறுதிப் படுத்துகின்றன.

2. எப்பொழுது:

இஸ்லாமிய காலண்டர்படி, 9-வது மாதமான ”ரமலான்” மாதத்தில் நோன்பு முடிந்ததிலிருந்து, 12-வது மாதமான ”துல் ஹஜ்” மாதத்தின் 8-13 தேதிகளில் நிறைவேற்ற வேண்டியது ஹஜ்.  இவ்வருடம், ஆங்கிலக் காலண்டரில் நவம்பர் முதல் வாரத்தில் வரும்.

இப்போது ஹஜ்ஜுப் பயண காலம் தொடங்கிவிட்டது.  இந்தியாவிலிருந்தும் பல குழுக்களாக ஹாஜிகள் (ஹஜ்ஜு செய்பவர்கள்) சவூதி சென்று இறங்கத் தொடங்கிவிட்டார்கள்.

3.  ஹஜ்ஜின்போது என்ன செய்வார்கள்:



1. ஹஜ் செய்வதற்காக “இஹ்ராம்” எனப்படும் உடை, செயல் மற்றும் மனக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளுதல்.  ஆண்கள் தைக்கப்படாத ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் தங்கள் இயல்பான உடையை அணிந்துகொள்ளலாம்.

2. மக்காவை அடுத்துள்ள ‘அரஃபா’ என்ற இடத்திற்கு 9-ம் நாள் சென்று தங்கியிருத்தல்.

3. பின்னர் மக்கா வந்து,  கஃபா எனப்படும் இறையில்லத்தை ஏழு முறை வலம் வரவேண்டும். இதற்கு தவாஃப் எனப்பெயர்.

4. பின்னர் முடியிறக்க வேண்டும். ஆண்கள் மொட்டையடித்துக் கொள்வது சிறந்தது. பெண்கள் ஒருவிரல் நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவேண்டும்.

இவை தவிர,

1. ஸயீ - மக்காவில் ஸஃபா, மர்வா என்ற இரண்டு சிறு குன்றுகளுக்கிடையில் ஏழு முறை நடத்தல். 

இப்ராஹீம் நபியின் மனைவி ஹாஜராவும், குழந்தை இஸ்மாயிலும் பாலைவனத்தில் இம்மலைகளின் அருகில் சென்று கொண்டிருந்தபோது, குழந்தை தாகத்தால் தவித்து அழ, தண்ணீர் தேடி ஹாஜரா அவர்கள்  ஓடினார்கள். ஒரு மலையின் புறமிருந்து பார்க்கும்போது இன்னொரு மலையில் நீர் தெரியும். தண்ணீரென்று நம்பி ஓடினால், அது கானல் நீர்!! இவ்வாறு ஏழு முறை பரிதவித்து ஓடிய பொழுது, குழந்தையின் பாதத்தினடியிலேயே இறைவன் ஒரு நீரூற்றை வரச் செய்தான். வழிந்து ஓடும் நீரைக் கண்ட ஹாஜரா அவர்கள், குடிப்பதற்குமுன் தண்ணீர் முழுதும் வழிந்தோடிவிடுமோ, குடிக்கக் கிடைக்காதோ என்ற அச்சத்தில் “நில் நில்” என்று பொருள்படும் “ஸம் ஸம்” எனக் கூறியபடி நீரை நோக்கி ஓடினார்கள். அந்த நீரூற்றுதான் இன்றும் - பல ஆயிரமாண்டுகள் கழிந்தும் - வற்றாத ஊற்றாக இருக்கும் “ஸம் ஸம்” என்ற ஊற்று. இது கஃபாவின் அருகிலேயே உள்ளது.

2. ஷைத்தானின் மீது கல்லெறிதல்.

இப்ராஹீம் நபிக்கு திருமணமாகி பல ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர் இஸ்மாயீல் நபி. எனினும், அவரைப் பரிசோதிக்க எண்ணிய இறைவன், இஸ்மாயீலைப் பலியிடுமாறு இப்ராஹீமுக்குக் கட்டளையிட, அவரும் இறைகட்டளையை ஏற்று, பலியிடச் செல்லும்போது, ஷைத்தான் மூன்று முறை அவரின் உறுதியைக் கலைக்க முயலுகிறான். எனினும், அவனைப் புறந்தள்ளி இறைவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றச் செல்கிறார். அவரின் நம்பிக்கையால் திருப்தியடைந்த இறைவன், ஆடு ஒன்றைப் பலி கொடுக்கச் செய்கிறான்.

இதேபோல, நாமும் தீய சக்திகளின் சூழ்ச்சிக்கு ஆட்படாமல் இருக்க வேண்டி, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மூன்று தூண்கள் மீது கல்லெறிதல் வேண்டும்.

3. மினா, முஜ்தலிஃபா ஆகிய இடங்களில் குறிப்பிட்ட நாட்களில் தங்கியிருத்தல்.

4. ஆடு, மாடு அல்லது ஒட்டகம் ஏதேனும் ஒன்றை குர்பானி கொடுத்தல்.

ஆக மொத்தம் இவையே ஹஜ் எனப்படும் புனிதப் பயணத்தில் செய்ய வேண்டியவை. ஹஜ் நிறைவேற்ற 5 நாட்களே தேவைப்படும் என்றாலும், புனித பூமியான மக்காவிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததோடு மேலும் பல நாட்கள் இருந்து, அதிகப்படியான தொழுகைகள், ‘உம்ரா’ எனப்படும் ’சிறிய ஹஜ்’, மதினா சென்று சிறப்பு வாய்ந்த நபி பள்ளியில் பிரார்த்தித்தல்,  இன்னும் சில வரலாற்றுப் பிரசித்திப் பெற்ற இடங்களைக் கண்டு வருதல் ஆகிய காரணங்களுக்காகவே இந்தியாவிலிருந்து செல்பவர்கள் இதை ஒரு மாதப் பயணமாக மேற்கொள்கிறார்கள்.

இனி, ஹஜ் செய்ய விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகளைப் பர்க்கலாம்.

4. செல்லுமுன்:

* ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். (அல்குர்ஆன் 2:19) 
அல்லாஹ்வுக்காக அந்த ஆலயம் சென்று ஹஜ் செய்வது மனிதர்களில் அதன் பால் (சென்றுவர) சக்தி பெற்றவர் மீது கடமையாகும். (அல்குர்ஆன் 3 : 97)

ஆகிய குர் ஆன் வசனங்களின்படி, நாம் செய்யும் ஹஜ் இறைவனுக்காக மட்டுமே செய்யப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்க.

*ஏறக்குறைய ஒரு மாத காலம், லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தில், அதுவும் புதிய நாட்டில் இருக்க வேண்டும் என்பதால் கவனமெடுத்து நம் உடல்நலத்தைப் பேணிக் கொள்வது நல்லது.

*பிரார்த்தனைகள் பலவும் நடந்தே சென்று நிறைவேற்ற வேண்டியவை என்பதால், செல்வதற்குப் பல மாதம் முன்பே நடைப் பயிற்சி மேற்கொள்ளுவது சிரமத்தைக் குறைக்கும்.

* முன்சென்றவர்களிடம் கேட்டறிந்து, என்ன மாதிரியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிந்துகொள்ளுதல் வேண்டும்.

* ஹஜ் செல்வதன் பெயரால் விருந்துகள், சம்பந்திச்சீர்கள் போன்ற அநாச்சாரங்களைச் செய்யவோ, ஏற்கவோ கூடாது. மேலும், அரசியல்வாதி போல, ரயில், விமான நிலையங்களுக்கு தம் உறவு, நட்புக் கூட்டங்களுடன் வந்து மற்ற பயணிகளுக்கும், பணிபுரிபவர்களுக்கும் சிரமத்தைத் தரக்கூடாது. மற்றவர்களிடையே இஸ்லாம் குறித்த முகச்சுளிப்பு ஏற்பட வைக்கக் கூடாது.

5. சென்ற பின்:

* அங்கு சென்றிருப்பது, இறைகடமைக்காக மட்டுமே என்பதை மனதில் வைத்து பிரார்த்தனைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* இறைவன் ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்பதை எப்போதும் மறக்க வேண்டாம். கஃபாவின் சுவர்களைத் தேய்த்துத் தடவுவது, முத்தம் கொடுப்பது, ஹஜ்ருல் அஸ்வத்தைத் தொட விரும்பி கூட்டநெரிசலில் அடித்துப்பிடித்து நுழைவது, நபி(ஸல்) அடக்கஸ்தலத்தில் அவர்களிடம் பிரார்த்திப்பது போன்ற, மற்றவர்கள் அறியாமையில் செய்யும் அநாச்சாரங்களைக் கண்டு, நீங்களும் உணர்ச்சி வசப்பட்டு செய்துவிட வேண்டாம்.

* லட்சக் கணக்கானோர் கூடியிருக்கும் இடத்தில்  பல அசௌகரியங்கள் இருக்கலாம். எனினும், அவற்றை அதிகம் பொருட்படுத்தாமல் இருத்தல் அல்லது அதற்கேற்றவாறு மாறிக் கொள்ளுதல் அவசியம். ’டில்லிக்கு ராஜான்னாலும், பள்ளிக்குப் பிள்ளைதான்” - மறக்க வேண்டாம். பிரார்த்தனையே நமது முதல் இலட்சியம்.

* நம்மால் எந்த சிரமமும் மற்றவர்களுக்கேற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, பள்ளிகளில் மக்கள் செல்லும் பாதைகளில் அமர்வதைத் தவிர்ப்பது; குப்பைகளை உரிய இடத்தில் போடுவது; சுத்தத்தைப் பேணுவது.

* தேவையான மாத்திரை, மருந்துகளை உரிய மருந்துச் சீட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.மக்கள் கூட்டத்தால் ஜலதோஷம் போன்ற தொற்று நோய்கள் பரவுவது எளிது. அதைத் தடுக்க “மாஸ்க்” அணியலாம்.

* சவூதியில் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் இருப்பார்களாயின், அதிகம் உரிமையெடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். நீங்கள் வந்து சென்றது அவர்களுக்கு நல்ல நினைவாக இருக்கும்படி நடந்துகொள்ள வேண்டும்.

6. செல்வதன் பலன்?

ஹஜ்ஜின் கடமைகளைச் சரியாக, குறைவில்லாமல், முழுமையாகச் செய்து, இறைவன் அந்த ஹஜ்ஜை ஏற்றுக் கொள்வானாயின், அவரை அன்று பிறந்த பாலகன்போல பாவங்களிலிருந்து மன்னித்து விடுவான்.

7. சென்று வந்த பின்:

ஒருவர் செய்த ஹஜ் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அவரது அதுவரையான பாவங்கள் மாத்திரமே மன்னிக்கப் பெறும். அதன் பின்னர் அந்நிலையைத் தன் நல்ல நடத்தைகளினால் தக்கவைத்துக் கொள்வது அவர் பொறுப்பு.

அதனால்தான், அந்தக் காலங்களில், பக்குவம் அதிகம் வந்திருக்கும் வயதான காலத்தில்தான் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தார்கள்போல. எனினும், வாய்த்திருக்கும் வசதியும், வாழ்க்கையும் (உயிர்) என்றுவரை நிலைத்திருக்கும் என்பதை நாம் அறியமுடியாதே! ஆகையால், உரிய காலத்திலேயே இக்கடமையை  நிறைவேற்ற முனைவோம், இன்ஷா அல்லாஹ்.

Ref: www.ourdialogue.com/pilgrimage

Post Comment

30 comments:

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு ஹுஸைனம்மா. சில புதிய செய்திகளைத் தெரிந்துகொண்டேன். மலையாளத்தில் வந்த தி ட்ரெய்ன் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் பெரியவர் ஒருவர் ஹஜ் பயணத்திற்கு தயாராகும் நிலையில் அவரது பென்ஷன் பணம் கிடைக்கப்பெறுவதில் திடீர் தடங்கல் ஏற்பட்டுவிடும். அவரது பேத்தி அந்த அலுவலகத்திற்குச் சென்று விசாரிக்கும்போது கையூட்டு கொடுத்தால் உடனே பணம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்ற பதில் கிடைக்கும். ஆனால் அவளோ லஞ்சம் கொடுத்துப் பெறும் பணத்தினால் எனது தாத்தா ஹஜ் போகவேண்டிய அவசியமே இல்லை என்று சொல்லி கையூட்டு கொடுக்க மறுத்துவிட்டு அந்த சோர்வான நிலையிலும் கம்பீரமாக நடந்துவருவாள். நான் மிகவும் ரசித்த காட்சி அது. அதேபோல இஸ்லாத்தின் முக்கியமான கடமைகளை நிறைவேற்றப் போராடும் ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையைப் பேசிய ’ஆதமிண்ட மகன் அபு’ மிக முக்கியமான திரைப்படம்.

இங்கே எனது அலுவலகத்திலிருந்து மாதம் ஒருவராவது மெக்கா சென்று வருவார்கள். அப்படிப் புனிதப்பயணம் சென்று திரும்பும் நாட்களில் அவர்களின் வழக்கமான பரபரப்புக்கள், கோபதாபங்களிலிருந்து விலகி முற்றிலும் புதிய மனிதர்களாக மாறிவிடுவதை நேரடியாகவே பார்த்து உணர்ந்திருக்கிறேன்.

ஒருதடவையாவது மெக்காவிற்கு செல்லவேண்டும் என்று எனக்கு ஆசை. ஆனால் எங்களையெல்லாம் ஜித்தாவோடு நிறுத்திவிடுவார்கள். மெக்காவிற்குள் நுழைய அனுமதி இல்லை. இருந்தால் என்ன சவுதி மொத்தமுமே கிட்டத்தட்ட மெக்கா போலத்தானே. இன்ஷா அல்லா வாய்ப்பிருந்தால் ஜித்தாவிற்காவது ஒரு ட்ரிப் அடிக்கவேண்டும்.

மற்றபடி மிக முக்கியமான கட்டுரை இது ஹுஸைனம்மா. நன்றி.

RAMA RAVI (RAMVI) said...

நல்ல பதிவு ஹுஸைனம்மா.இஸ்லாமியர்களின் ஹஜ் பயணம் பற்றி மிக அற்புதமான தகவல்கள் அறிந்துகொண்டேன்.பகிர்வுக்கு நன்றி.

எந்த மதத்தினராக இருப்பினும் அவரவர் வழக்கப்படி கடமைகளை செவ்வனே செய்து முடிப்பது நல்லது என்பதை உணர்த்தும் விதமாக இருக்கு உங்க பதிவு. வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

வெகு நல்ல செய்திகளைக் கொடுத்திருக்கிறீர்கள் ஹுசைனம்மா. ஹஜ் யாத்திரையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது.தெரியக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி.

ஸாதிகா said...

ஜஸகால்லாஹு கைரன்.நல்ல பதிவு ஹுசைனம்மா.தெளிவாக விவரித்து இருந்தீர்கள்.இந்த பாக்கியத்தை முஃமின்கள் அனைவருக்கும் கிடைக்கவேண்டுமாக!

ஸாதிகா said...

அலுவலகமானாலும், வீடானாலும், நாம் நமக்குரிய கடமைகளை, அல்லது அன்றாட வேலைகளைச் செயல்படுத்தும்போது, அவற்றை வரிசையாக முன்னுரிமைப் படுத்தி, முதலில் செய்ய வேண்டுவனவற்றை முதலில், மற்றவற்றை அடுத்தடுத்து என அவற்றின் காரணகாரியங்களைப் பொறுத்துச் செய்வதுண்டு. எனினும், எதையும் செய்யாமல் விடுவதில்லை. சிலவற்றை செய்துமுடிக்க, வேறு தொடர்புடைய ஆவணங்கள் தேவைப்படலாம். எனில், அவற்றைக் கேட்டுப் பெற்று, செய்து முடிப்போம்.
//////
அழகிய எடுத்துக்காட்டு!

ஸாதிகா said...

அதனால்தான், அந்தக் காலங்களில், பக்குவம் அதிகம் வந்திருக்கும் வயதான காலத்தில்தான் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தார்கள்போல. எனினும், வாய்த்திருக்கும் வசதியும், வாழ்க்கையும் (உயிர்) என்றுவரை நிலைத்திருக்கும் என்பதை நாம் அறியமுடியாதே! ஆகையால், உரிய காலத்திலேயே இக்கடமையை நிறைவேற்ற முனைவோம், இன்ஷா அல்லாஹ்.///////////

உண்மைதான் இந்தியாவைப்பொருத்த மட்டில் வயசாளிகளே அதிகம் ஹஜ் கடமை ஆற்றிவந்தது இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றது.சீக்கிரமே கடைசிக்கடமையை முடித்து விடவேண்டும் என்று உத்வேகமாக இருப்பதுதான் உண்மை.இன்ஷா அல்லாஹ் எங்களுக்காகவும் துஆ செய்யுங்கள்.நாங்கள் உங்களுக்காகவும் துஆ செய்கின்றோம்.

கோமதி அரசு said...

//அந்தக் காலங்களில், பக்குவம் அதிகம் வந்திருக்கும் வயதான காலத்தில்தான் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தார்கள்போல. எனினும், வாய்த்திருக்கும் வசதியும், வாழ்க்கையும் (உயிர்) என்றுவரை நிலைத்திருக்கும் என்பதை நாம் அறியமுடியாதே! ஆகையால், உரிய காலத்திலேயே இக்கடமையை நிறைவேற்ற முனைவோம், இன்ஷா அல்லாஹ்.//

உண்மை உண்மை ஹீஸைனம்மா.

ஹீஸைனம்மா, கடைசிக் கடமை பற்றி அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

அங்கு கடைப்பிடிக்க வேண்டியவைகளை தெளிவாய் எடுத்துச் சொல்லி எந்தவித இழப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்று முன்னெச்செரிக்கை செய்து விட்டீர்கள்.

நாங்கள் கைலாயம் சென்று விட்டு வந்து எல்லோரிடமும் சொல்வது உடல் நலமாக இருக்கும் போதே போய் வந்து விடுங்கள் என்று தான்.(சிறு வயதிலே போனால் இன்னும் நலம்)

புனித பயணம் செய்யும்
காலத்துக்கு ஏற்ற நல்ல பதிவு.

கோமதி அரசு said...

அதாவது, ஹஜ்ஜைவிட முன்னுரிமைப்படுத்த வேண்டியத் தேவைகளை/ கடமைகளை முதலில் நிறைவேற்ற வேண்டும். உதாரணம்: அடைக்கப் படவேண்டிய அவசியமான கடன்கள், தான் இல்லாத சமயத்தில் குடும்பத்தின் பாதுகாப்பு, தேவைகள் நிறைவேற்ற வழிகள் கண்டு, பொறுப்பாளரை நியமித்தல் .//

எவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

suvanappiriyan said...

ஹஜ் கடமையை பலரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அழகாக தொகுத்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

Jaleela Kamal said...

ஹஜ் விளக்கம் அருமை, முன்பு வயதானவர்களே போய் வந்தனர், அதுவும் என் கிரான்மா எல்லாம் கப்பலில் போய் சமைத்து சாப்பிட்டு ஹஜ் கடமைகளை யும் நிறைவேற்றினார்கள்.
இப்ப எல்லோருக்கும் எல்லாமே சுலபமாகிவிட்டது.


அருமையாக விளக்கப்பதிவு

சாந்தி மாரியப்பன் said...

நல்லதொரு பகிர்வு ஹுஸைனம்மா.. தெரியாதவர்களும் தெரிஞ்சுக்கற வகையில் அருமையா தொகுத்திருக்கீங்க. பாராட்டுகள்.

நட்புடன் ஜமால் said...

timing post with enough infos ...

ராமலக்ஷ்மி said...

நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நல்லதொரு பகிர்வு ஹுஸைனம்மா.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. மாலை மீண்டும் வந்து பொறுமையாக இரண்டாம் முறை படிக்கிறேன்..

பகிர்வுக்கு நன்றி.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

நமது கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை பற்றி விளக்கமாக எழுதி உள்ளீர்கள் .

ஜசகல்லாஹ் ஹைர்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை தந்தருவானாக !ஆமீன்

R. Gopi said...

Simple, yet detailed and effective. நாகூர் ரூமி 'இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்'னு புக்கு போட்டிருக்கார். நீங்களும் கூடிய சீக்கிரம் அதுபோல ஒரு புக்கு போட வாழ்த்துக்கள்!

மாதேவி said...

ஹஜ் யாத்திரைபற்றி ஓரளவு அறிந்திருந்தேன். இன்று உங்கள் பதிவில் விரிவாக தெரிந்து கொண்டேன் ஹுசைனம்மா.

zumaras said...

அனைவரும் புரியும்வண்ணம் அருமையாக தொகுத்து இருக்கீங்க ஜஜாக்கல்லாஹ் ஹைர்

ஸ்ரீராம். said...

நல்லதொரு பகிர்வு. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

தளிகா said...

Jazakallaahu khairan.அருமையாக சரியான நேரத்தில் தந்த பதிவு.எந்த தடங்கலுமில்லாமல் சாதிமத பேதமில்லாமல் எல்லாருக்கும் புரியும் விதம் எழுதியிருக்கீங்க..

ஹுஸைனம்மா said...

கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். மிக்க மகிழ்ச்சி.

@சரவணக்குமார்:
அந்தப் படங்கள் இன்னும் பார்க்கவில்லை. இன்னொரு நண்பரும் இதேபோல ஒரு இரானிய படம் சிபாரிசிஉ செய்திருக்கிறார். இன்ஷா அல்லாஹ், பின்னர் பார்க்க வேண்டும்.

கஃபாவைக் காண வேண்டுமென்ற உங்கள் ஆசை நிறைவேற இறைவன் அருள் புரியட்டும்.

//புனிதப்பயணம் சென்று திரும்பும் நாட்களில் அவர்களின் வழக்கமான பரபரப்புக்கள், கோபதாபங்களிலிருந்து விலகி முற்றிலும் புதிய மனிதர்களாக மாறிவிடுவதை //

நானும் கவனித்திருக்கிறேன். ஹஜ் செய்து திரும்பியபின், அந்த மனநிலை, சுபாவம் என்றும் எனக்கு நிலைத்திருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

ஹுஸைனம்மா said...

@கோமதி அக்கா: ஆமாம் அக்கா, கைலாயம் செல்வதற்கும் நல்ல உடல்நிலை என்பது மிக்க அவசியமான சிரமப் பயணம்தானே.

@ஜலீலாக்கா - அந்தக் காலங்களில் மாதக் கணக்கில் பயணித்து ஹஜ் செய்யவேண்டியிருந்தது. இப்ப எல்லாம் சுலபமாகிவிட்டதாலும், விழிப்புணர்வாலும், ஹஜ் செய்வோரின் எண்ணிக்கை கூடிவிட்டது.

@கோபி: வாழ்த்துகளுக்கு நன்றி.

மீண்டும் அனைவருக்கும் நன்றிகள்.

pudugaithendral said...

தெரிந்திராத புதிய தகவல்கள். உங்கள் ஹஜ் பயணம் நல்லபடியாக முடிய இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.

வாழ்த்துக்களும்

TNPSCGK Editorial Team said...

வெகு விமரிசையாக எழுதியுள்ளீர்கள் அம்மா..ஹஜ் யாத்திரைப் பற்றி நிறைய தெரந்துகொள்ள முடிந்தது. உங்களின் எளிமையான எழுத்து அதிகம் படிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்..!!

TNPSCGK Editorial Team said...

அத்தோடு என் வலைப்பூவுக்கு நேரமிருந்தால் வருகை தரவும்..


நான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..!! நன்றி அன்பானவரே.

எனது வலையில் இன்று:

மாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்

தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

அன்புடன் மலிக்கா said...

எல்லாம் வல்ல இறைவனின் நல்லருள் நிறைந்த இப்பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க துஆச்செய்துவாருங்கள். தங்களின் பயணமும் இனிதே நிறைவேற ஹஜ்ஜின் கடமைகள் சிறப்பாக அமைய இறைவன் அருள்புரிவான்..

அன்புடன் மலிக்கா said...

ஜஸகால்லாஹு கைரன்.நல்ல பதிவு ஹுசைனம்மா.

ராமலக்ஷ்மி said...

இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் ஹுஸைனம்மா.

R. Gopi said...

தங்கள் பதிவுகள் குறித்து வலைச்சரத்தில் இன்று குறிப்பிட்டுள்ளேன்

RAMA RAVI (RAMVI) said...

ஹுஸைனம்மா,தங்களின் இந்தப்பதிவை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகம் செய்து இருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.