Pages

டிரங்குப் பொட்டி - 31




சுமார் 14 வருடங்களுக்கு முன்....

கடைக்குச் சென்று அதை வாங்கி,  தன் கோட்டுப் பாக்கெட்டுக்குள் வைத்தார் அவர். பின் அதை மறந்தே விட்டார். பல இடங்களுக்கு மாறிய அந்த கோட்டை, 14 வருடங்களுக்குப்பின் தற்செயலாகத் திறந்து பார்த்த போது, அது இன்னும் அங்கே ‘பத்திரமாக’ இருந்ததைக் கண்டார். ஆனால், அவர் அதற்காக  மகிழ்ச்சியடையவில்லை; மாறாக பலத்த அதிர்ச்சியடைந்தார்!! ஆம்!!



ஒரு உணவகத்தில் உணவு வாங்கி, ஃப்ரிட்ஜில் வைக்காமல், இரண்டு நாள் கழிச்சு அதைத் திறந்து பாத்தா எப்படியிருக்கும்? நினைக்கவே குமட்டுகிறது அல்லவா? ஆனா, 14 வருடங்கள் கழிந்த பின்னும், அந்த உணவு கெட்டுப் போகாமல் இருந்தால்...???!!!! அந்த உணவு.... மெக் டொனால்டில் வாங்கப்பட்ட “பர்கர்”!!  14 வயது நிறைந்த அந்த பர்கரில், அழுகல் இல்லை, புழு இல்லை, ஏன் பூஞ்சை கூட பிடிக்கவில்லை.

ப்ரிசர்வேடிவ்களின் தாக்கத்தை அறிய இதைவிட சிறந்த வாய்ப்பு ஏது? நுண்ணுயிரிகளில் நல்லவையும் இருக்கின்றன, கெட்டவையும் இருக்கின்றன. நாம் உண்ணும் உணவு செரிக்க,  உடல் உறுப்புகளால் உறிஞ்சப்பட, சக்தியாக சேமிக்கப்பட என்று பல்வேறு வினைகளுக்கு இந்த நல்ல நுண்ணுயிரிகள் தேவை. ஆனால்,  ப்ரிசர்வேடிவ்கள் உணவை அண்டும் கெட்ட நுண்ணுயிரிகளோடு, நம் உடலில் இருக்கும் நல்ல நுண்ணுயிரிகளையும் அழித்துவிடுகின்றன.

 இம்போர்டட் ஆப்பிள் பலநாட்களானாலும் வாடாத அதிசயமும், அன்னம்மா பாட்டியிடம் வாங்கும் கீரை ஒரு நாளிலேயே வாடிப்போகும் ரகசியமும் இப்போ  புரிகிறதா!!


%%%%%%%%%%%%%%%%%%%%%


அரபு நாடுகளுக்குப் பெட்ரோலியம் போல, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயுக்கள். பெட்ரோலைவிட, இயற்கை எரிவாயுக்கள் சுற்றுச்சூழல் மாசு உண்டாக்காதவை என்று நம்பப்படுவதாலும், பெட்ரோலிய இறக்குமதியைக் குறைப்பதற்காகவும், மேலை நாடுகள் அவற்றில் ஆர்வம் காட்டுகின்றன. ஒரு வகை இயற்கை எரிவாயுவான  “ஷேல் கேஸ்” (Shale Gas), பூமியின் அடிஆழத்தில் பாறைகளுக்கிடையில் காணப்படும்.

இதை எடுப்பதற்காக, ”Hydraulic Fracking"  என்ற முறையில் சுமார் 6000 முதல் 10000 அடிவரை ஆழ்துளையிட்டு,  கெமிக்கல்கள் கலந்த தண்ணீரை அதிக அழுத்தத்தில் பீய்ச்சினால், பாறைகளைத் துளையிட்டு அந்த வாயுவை வெளிக்கொணர முடியும்.

இதன்படி எடுக்கப்படும் இயற்கை எரிவாயுக்களால் எந்தக் கேடும் இல்லையென்றாலும், இவை எடுக்கப்படும் ”Hydraulic Fracking" முறையால், பூமிப்பாறைகள் தகர்க்கப்படுவதால் பூகம்பங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டென்று எதிர்ப்புக் குரல்கள் எழும்பின.  உடனே ஒரு ”ஆராய்ச்சி”  செய்து ”சுரங்கங்கள் தோண்டுவதையும்,  அணை நீர்த்தேக்கங்களையும் விட, இதனால் வரக்கூடிய  மெல்லிய அதிர்வுகள் அப்படியொன்றும் பெரிய அளவில் ஆபத்தானவையல்ல ” என்று சொல்லிவிட்டார்கள். பூகம்ப ஆபத்து அதிகம் இல்லையென்றாலும், ”Hydraulic Fracking"-ஆல் ஏற்படும் நிலத்தடி நீர் மாசு, ஒலி மாசு, காற்று மாசு ஆகியவற்றை மறுக்க முடியாதே!

ஒவ்வொரு பிரமாண்ட கட்டிடத்தையும் அண்ணாந்து பார்க்கையில், இதற்காக பூமிக்கடியில் எவ்வளவு பெரிய அஸ்திவாரம் போட்டிருப்பார்கள் என்ற எண்ணம் வருவதைத் தடுக்க முடியவில்லை!!  அதிக அளவில் பூகம்பம், வெள்ளம் வருவதில் வியப்பென்ன?

%%%%%%%%%%%%%%%%%%%%%

சமீபத்தில் பங்களாதேஷில் கார்மெண்ட் ஃபேக்டரி இடிந்து விழுந்ததில், 17 நாட்கள் கழித்து ஒரு பெண் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி பார்த்திருப்போம்.  ஹைட்டி நாட்டு பூகம்ப இடிபாடுகளிலிருந்து 27 நாட்கள் கழித்து ஒருவர் உயிருடன் கிடைத்ததே இதுவரை சாதனை. இது அதிசயிக்கத்தக்கது என்றாலும், மூச்சுவிட காற்று கிடைக்கும் பட்சத்தில் சாத்தியமே. ஆனால்,  கடலில் மூழ்கி இரண்டரை நாட்களுக்குப் பின்னர்  ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பது நம்பமுடிகிறதா?

அவர் சென்ற படகு கவிழ்ந்ததில் உடனிருந்த 10 பேரும் மரணித்துவிட, இவர் மட்டும் பிழைத்திருக்கிறார். கவிழ்ந்த படகில், ஒரு இடத்தில் ஒரு “காற்றுக் குமிழி” (air bubble) ஏற்பட, அதைக் கொண்டு மூச்சுவிட்டுக் கொண்டிருந்தவரை, 60 மணிநேரத்திற்குப்  பின் மீட்டிருக்கிறார்கள்!! 

பல வருடங்கள்முன், ஜூனியர் விகடனில் அருவிகளில் விழுந்து இறப்பவர்களின் உடல்களை மீட்பவர்களைப் பற்றிய தொடர் வெளியானது. அதில், பாறைக்கிடையில் இதுபோல ஒரு நீர்க்குமிழியில் மாட்டிய ஒரு சிறுவன் பிழைத்ததைப் பற்றி எழுதியிருந்தார்கள். 

எனினும், இவ்வாறான குமிழிகளில், மூச்சுவிடும்போது வெளிவரும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அடர்த்தி அதிகமாகிவிடும் என்பதால், சில மணிநேரங்களில் மரணம் தவிர்க்க முடியாது என்பது அறிவியல் நியதி. அதையும் மீறி இவர் உயிர் பிழைத்ததே அதிசயம்.

%%%%%%%%%%%%%%%%%%%%%

பல உயிர்கொல்லி நோய்களுக்கும் தடுப்பு மருந்து இருந்தாலும், கொசுக்கடியினால் வரும்  நோய்களில் பலவற்றிற்கு தடுப்பூசியில்லை. குறிப்பாக, பெரிய அளவில் உயிரிழப்புக்குக் காரணமாகும் மலேரியாவுக்கும் தடுப்பு மருந்து உருவாக்குவது எளிதாக இல்லை. எனினும், ஆராய்ச்சியாளர்கள், ‘மாத்தி யோசி’த்து, கொசுவுக்கே தடுப்பூசி போட்டுவிடும் முறையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட பாக்டீரியா - Wolbachiaவை பெண் கொசுவுக்கு ஊசிமூலம்  செலுத்திவிட்டால், அது மலேரியா வைரஸைப் பரப்பும் திறனைக் குறைப்பதோடு, அதன் 34 தலைமுறைகளுக்கும் அதைச் செலுத்திவிடுகிறது. இந்த கொசுக்கள் கடித்தால், மலேரியா வராது!!

இது நடைமுறைக்கு வந்தா என்னல்லாம் நடக்கும்? ‘கொசுவிரட்டி’ சுருள்களுக்குப் பதிலாக, ’கொசு-வருத்தி’ சுருள்கள் விற்பனைக்கு வரும். முக்கியமா, எந்திரன் -2வில், ரஜினி  ரங்குஸ்கிக்குப் பதிலாக, Wolbachia இருக்கும் கொசுவைத் தேடிக் கொணர்ந்து ஐஸைக் கடிக்கச் சொல்வாரோ? (அப்பவும் ஐஸ்தான் ஜோடியா?)

Wolbachia-கொசுக்கள் நம்ம ஊருக்கு வரும்வரை, ‘ஏழைக்கேத்த எள்ளுருண்டையா’  சிம்பிள் டெக்னிக் ஒண்னு இருக்கு:  அழுக்கு சாக்ஸ்கள்  என்றால் மலேரியா கொசுக்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம். மூலையில் கழட்டி வீசி எறியப்பட்டு கிடக்கும் சாக்ஸ்களைப் பார்த்து குமுறும் (என்னைப் போன்ற) அம்மணிகள் ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்!!

%%%%%%%%%%%%%%%%%%%%%


Post Comment

20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

Wolbachia-கொசுக்கள் இன்றைக்கு நிறைய தேவை...! அங்கங்கே இணைப்பிற்கு நன்றி...

இமா க்றிஸ் said...

//விழிப்புணர்வு// இடுகை. அருமை.

அமுதா கிருஷ்ணா said...

14 வருட பர்கர் உயிருடனா?

நம்ம ஊர் கொசு எல்லோரையும் ஏமாத்திடும்.

சென்னையில் நொச்சி இலை செடி வளர்க்க அரசு யோசித்துக் கொண்டு இருக்கு.

அமுதா கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
அமுதா கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான தொகுப்பு.

கடலுக்கடியில் கார்பன் டை ஆக்சைட் நிறையச் சேராது. சேர்ந்தாலும் கடல் நீரில் கரைந்து விடலாம். சும்மா இருப்பதால் ஆக்சிஜன் தேவையும் கம்மியாகத்தானே இருக்கும்? என்றெல்லாம் தோன்றினாலும் ஆச்சர்யம்தான்.

ஹுஸைனம்மா said...

@ஸ்ரீராம் சார்!

சும்மா இருந்தால் ஆக்ஸிஜன் தேவை கம்மி ஆகிவிடும் என்றில்லை. கடலுக்கடியில் காற்று இருந்தால், ஆக்ஸிஜனின் அடர்த்தி அதிகமாக இருக்குமாம். அதனால் கொஞ்சம் காற்று இருந்தாலும் போதுமாம்.

கார்பன்-டை-ஆக்ஸைடு கடலில் கரைந்திருக்கலாம் என்று நீங்கள் சொல்வதையே விஞ்ஞானிகளும் சொல்றாங்க. (அப்ப நீங்களும்... ) :-))))))

மாதேவி said...

நல்ல விழிப்பு பகிர்வு.

இன்று பத்திரிகையில் படித்தேன் அமெரிக்க விஞ்ஞானிகள் உளவு பார்க்கும் நுளம்பு ரொபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளார்களாம்.இன்னும் ஆராட்சியும் தொடர்கின்றதாம் அது ஒருவரின் சட்டையில் ஒட்டிக்கொண்டேசென்று உளவுபார்க்குமாம். நுளம்பை யன்னல் ஊடாகவும் அனுப்பி கொள்ளமுடியுமாம்.

எங்கும் நுளம்பு எதிலும் நுளம்பு என பாடலாம்போல இருக்கின்றது .:))))

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுகள் அனைத்தும் சிந்திக்கவைத்தன..

அப்பாதுரை said...

பர்கர் சமாசாரம் ஒரு ஸ்டன்ட். அப்பப்போ நடக்குறது தான்.
மெக்டானல்ட்ஸ் பர்கர் சாப்பிடுறதில் தப்பு இல்லே - அளவோட சாப்பிட்டால்.

நாம உபயோக்கிற எந்தப் பொருளிலும் ஏதோ ஒரு மாசு இருக்கத்தான் செய்கிறது. அரிசியில கூட arsenic இருக்கிறது. எந்த processed foodம் சாப்பிடாமல் இருந்தாலும், வீட்டு சமையலறை குளியலறைகளில் இருக்கும் கிருமிகளினால் நூறு மடங்கு கேடு வரும் ஆபத்திருக்கிறது.

உணவுப் பொருட்களைப் பாதுகாப்பது அவசியம். இயற்கையாக விளைவதை உடனே உபயோகிக்க முடியாவிட்டால் அந்த அழிவினால் யாருக்கு பயன்?

பசிப்பிணி நிறைந்த இந்த உலகில், முழு synthetic food பிணியறுக்கும் வரமாக வரும் காலம் தொலைவில் இல்லை. இதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அனைவருக்கும் வர வேண்டும் :)

நிலாமகள் said...

எல்லாம் பெரிய விஷயமாக, பெரியவங்க பேச, ஓரமா நின்னுக்கறேன் நான்.

வெங்கட் நாகராஜ் said...

சுவாரசியமான பகிர்வு.....

சாந்தி மாரியப்பன் said...

இந்த பர்கர்களின் மகாத்மியத்தை முன்பொருமுறை யூடியூபில் கண்டு களித்த ஞாபகம் :-)

வரிசையாக ஏராளமான கண்ணாடிக்குடுவைகளில் பர்கர் உட்பட விதவிதமான உணவுகளை வைத்து ஆராய்ச்சி செய்ததில் பர்கர் மட்டும் கெடாமல் மாதக்கணக்கில் தாக்குப்பிடித்தது என்பதை அறிந்தே அதிர்ச்சியாக இருந்தது. வருடக்கணக்கிலும் கெடாமலிருக்கும் என்றால் 'இது நம் வயிற்றுக்குள் போய் என்னவெல்லாம் கெடுதல் செய்யுமோ!' என்று தோன்றுகியது.

//அழுக்கு சாக்ஸ்கள் என்றால் மலேரியா கொசுக்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம். மூலையில் கழட்டி வீசி எறியப்பட்டு கிடக்கும் சாக்ஸ்களைப் பார்த்து குமுறும் (என்னைப் போன்ற) அம்மணிகள் ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்//

இந்த லாஜிக்படி பார்த்தால் ஊரிலுள்ள மலேரியாக்கொசுக்கள் எல்லாம் அழுக்கு சாக்ஸ்களைத்தேடி வந்து நம் வீட்டில் டேரா போட்டு விடும் அபாயமிருக்கே :-)))

கோமதி அரசு said...

இது நடைமுறைக்கு வந்தா என்னல்லாம் நடக்கும்? ‘கொசுவிரட்டி’ சுருள்களுக்குப் பதிலாக, ’கொசு-வருத்தி’ சுருள்கள் விற்பனைக்கு வரும். முக்கியமா, எந்திரன் -2வில், ரஜினி ரங்குஸ்கிக்குப் பதிலாக, Wolbachia இருக்கும் கொசுவைத் தேடிக் கொணர்ந்து ஐஸைக் கடிக்கச் சொல்வாரோ? (அப்பவும் ஐஸ்தான் ஜோடியா?//

அப்பவும் ஐஸ்தான் ஜோடியா?
ஏன் ஐஸ் மகளை ஜோடி சேர்த்துவிடலாம்.

//எங்கும் நுளம்பு எதிலும் நுளம்பு என பாடலாம்போல இருக்கின்றது .:))))//

மாதேவியும் உங்களுடன் சேர்ந்து அசத்துகிறார்

உங்கள் பதிவு நல்ல விழிப்புணர்வு பதிவு.
வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

தி. தன்பாலன் - நன்றிங்க.

இமா - நன்றி.

அமுதா - நொச்சி இலை கொசு விரட்டுமா? நல்ல விஷயம்.

மாதேவி - இதுபோல நானும் செய்தி படித்த ஞாபகம் இருக்கு. ஆனா நுளம்பா அல்லது வேறு பூச்சியா என்று ஞாபகம் இல்லை.

நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

இராஜி மேடம் - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

அப்பாதுரைஜி -
//பர்கர் சமாசாரம் ஒரு ஸ்டன்ட். //
இருக்கலாம். ஆனால், 14 வருடங்களானாலும் அதில் சிறு நாற்றம்கூட இல்லை என்பது ஆச்சர்யமானது - எனக்கு.

//தப்பு இல்லே - அளவோட சாப்பிட்டால்//
அதேதான் என் கருத்தும்.

//அரிசியில கூட arsenic//
அப்படியா? புதிய தகவல்.

தெரியாமல் நம் உடலில் உணவில் கலப்பவற்றை நாம் ஒன்றும் செய்ய முடியாதுதான். ஆனால், தெரிந்த பின்பும் அவற்றை முடியுமளவு தவிர்க்கலாமே? என் எதிர்ப்பு(ன்னு சொல்ல முடியாது - அதுமாதிரி) மெக்டொனால்ட்ஸுக்கு அல்ல. ப்ரிசெர்வேடிவ்ஸ் எனப்படுபவற்றுக்கு. இயறகைப் பொருளான உப்பு (அதுவும் ஓரளவுக்குமேல் நல்லதல்ல) மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது போய், இன்னிக்கு என்னென்னவோ ப்ரிசெர்வேடிவ் என்ற பெயரில் பயன்படுத்தப்படுகின்றன. இவை மட்டுமல்ல, flavours, additives, taste makers, colours என்று என்னென்னவோ நம் அன்றாட உணவுகளில் இடம் பெறுகின்றன - நாம் விரும்பாவிட்டாலும். அதுதான் எனது கவலை.

பசிப்பிணியைப் போக்க Synthetic உணவுகள் என்றவகையில் ஓகே. ஆனாலும், பசித்தவருக்கு இயல்பான உணவைக் கொடுக்க முடியாதது, pathetic. But dying out of hunger is more pathetic. Something is better than nothing.

ஆனால், synthetic உணவுகள் அன்றாட உணவாகிப் போவதை நான் வெறுக்கிறேன். ஒருவேளை, பின்வரும் தலைமுறையினர் இயல்பாக (வேறுவழியின்றியோ அல்லது இயற்கை உணவை அறிந்திராததாலோ) ஏற்றுக் கொள்வார்களாயிருக்கும்.

அப்பாதுரை said...

//தெரிந்த பின்பும் அவற்றை முடியுமளவு தவிர்க்கலாமே

எப்படித் தவிர்ப்பது? கெமிகல்ஸ் உபயோகிச்சு தானே?

அப்ப பிடிச்ச மீனை அப்பக் கழுவி அப்ப சமைச்சு சாப்பிட்டாலும் salmonella வைரஸ் இருக்க பெரும் சாத்தியம் இருக்கு - அதே மீனை சோதனை செஞ்சு process செஞ்சு frozen foodஆ வாங்கி சமைத்து சாப்பிட்டா கிருமிகளை அழிக்க சாத்தியமிருக்கு. இரண்டுமே சாத்தியம் தான்.

இதுல நாம தான் கவனமா இருக்கணும்னு நீங்க சொல்றது சரி. ஆனா இந்த organic பதப்படாத உணவுனு நாம ஒரேயடியா பச்சைக்கொடி பிடிச்சோம்னு வையுங்க, கஷ்டமும் நமக்குத் தான். நமக்கு சிட்டுக்குருவியும் வேண்டும், செல்போனும் வேணும் இல்லையா?

கீதமஞ்சரி said...

இன்றைய சூழலில் இயற்கையைப் பாதுகாக்கவும் இரசாயனங்களிலிருந்து சற்றே விலகியிருக்கவும் தூண்டும் விழிப்புணர்வு அடங்கிய பதிவுக்கு நன்றி ஹூஸைனம்மா. கொசுத்தகவல் வியப்புதான்.

Vijiskitchencreations said...

நல்ல தகவல் + நல்ல பதிவு. என் கனவர் எப்ப்போதும் இங்கு ஆர்கானிக் ஆப்பிள் தான் + குழந்தைகளுக்கு ஆர்கானிக் மில்க் அவங்களுக்கு மட்டும் பழங்கள் ஆர்கானிக் தான் வாங்குவது உண்டு. கொஞ்சம் காஸ்ட்லி. என்னவர் சொல்வார் நாம் எல்லாம் இந்தியாவில் பிறந்து வளர்ந்து இப்ப தான் இங்கு வந்தோம் நம்ம உடலில் எல்ல பொல்யுஷன் எல்லாம் இருக்கு இந்த குழந்தைகளுக்கு இயற்க்கயில் அம்சங்கள் வெகு குறைவு. இயற்கையான உணவுகள் சாப்பிடுவதும் குறைவு. அதனால் என்னவர் இந்த கலர் போட்ட சீர்யோஸ், ஒட்ஸில் ஸ்ட்ராபெர்ரி இதெல்லாம் கெமிககல்ஸ் சேர்ந்தது என்பதினால். என்னவர் எப்பவுமே உணவு கடையில் வாங்கும் போது நிறய்ய நேரம் எடுத்துகொள்வார். எனக்கும் அவருக்கும் இந்த விஷயத்தில் நிறைய்ய மோதல் +வாக்குவாதம் எல்லாம் வரும்.
ப்ஃரோஷன் புட்ஸ் + டின் புட்ஸ்+ப்ஃரோஸாஸ்ட் புட்ஸ் எல்லம் நோ எண்ட்ரி. ப்ரோஷன் ப்ருட்ஸ் +வெஜ்ஜிஸ் ஒ.கே. ஏன் என்றால் அது பார்ம்பில் இருந்து பறித்து உடனே அதை ப்ரிஸ் செய்து விடுகிறார்கள். அதனல். அது மட்டும் வாங்குவது உண்டு. ஸாரி கொஞ்சம் பெரிய கமென்ட்.நல்ல விஷயம் என்று கன்னில் பட்டதும் நமக்கு தெரிந்ததை இங்கு எழுதிட்டேன்.ஒ.கே.