Pages

சகாயம் வேணுமா...






திருநெல்வேலிச் சீமையின் எலே, வாலே, ஏட்டி, இங்கிட்டு, கோட்டிக்கார பயலே, என்னவே செய்றீரு போன்றவையின் நடுவில் வளர்ந்த எனக்கு,  மெட்ராஸ் தமிழ் (டி.வி. உபயம்), திருநெல்வேலி தமிழ் தவிர வேறு ஸ்லாங்குகளையும் கேட்கும் பாக்கியம் கல்லூரி சென்ற பிறகுதான் கிடைத்தது. அதிலும் சிலர் நாகரீகமாகப் பேசவேண்டும் என்பதால், தம் சொந்த மண்ணின் மணத்தில் பேசமாட்டார்கள் (என்னை மாதிரி).


என் வாப்பாவின் சவூதி வேலை காரணமாக அவ்வப்போது திருவனந்தபுரம் (ஏர்போர்ட்) போவதாலும், கேரளத்து நண்பர்களாலும் மலையாளம் பேசக் கேட்டிருக்கிறேன். எனக்கு எட்டு வயது இருக்கும்போது, மேத்யூ என்ற என் வாப்பாவின் நண்பர் வந்திருந்தார். அவரிடம் தற்செயலாக நான் மணி என்ன என்று கேட்க, அவர் “பந்த்ரெண்டு” என்றார். முதல்முறை அவ்வார்த்தையைக் கேட்பதால், அதைக் கேட்டு எனக்குச் சிரிப்பாக வந்தது. மீண்டும் மீண்டும் அவரிடம் கொஞ்ச நேரத்திற்கு ஒருமுறை மணி கேட்க, அவர் பந்த்ரெண்டு பத்து, பந்த்ரெண்டு பதினஞ்சு என்று சொல்லிச் சொல்லி நொந்துவிட்டார். என்னை ஒன்றும் சொல்லவும் முடியவில்லை அவரால். மணி ஒன்று ஆனபிறகுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். கேரளா-தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் வசிக்கும் தமிழர்களின் தமிழ் நான் அதிகம் கேட்டதில்லை.


அருகாமை மாவட்டமான கன்னியாகுமரியில் இருந்து நிறைய பேர் என் கல்லூரியில் படித்தனர். மலையாளமும், தமிழும் கலந்து, ஒரு தனி விதமாக இருக்கும அவர்களின் நாகர்கோவில் தமிழ் கேட்க மிக இனிமையாக இருக்கும் எனக்கு முன்பு. கொஞ்சம் ஈழத்தமிழின் சாயலும் இருக்கும்.  கல்லூரியில் நாகர்கோவிலைச் சேர்ந்தச் சில சக நண்பர்களை அடிக்கடி கூப்பிட்டு வைத்து ஏதாவது கேள்வி கேட்டுப் பேச வைத்துக் கேட்டுக்கொண்டிருப்பேன். அதனாலேயோ என்னவோ எனக்குப் புகுந்தவீடு நாகர்கோவிலிலேயே வாய்த்தது!


கல்யாணமான புதிதில் என் மாமியாரின் "தமிலாளம்" (தமிழ் 20% + மலையாளம் 80%) எனக்குச் சுத்தமாகப் புரியாது. என்னவரும், மைனியும் மொழிபெயர்ப்பார்கள் எனக்காக. மச்சினரின் மனைவியோ (ஓரகத்தி) கேரளாவைச் சேர்ந்தவர். தமிழ் தெரியாது. மலையாளம்தான் பேசுவார்.


அங்கே வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியைப் பார்த்தால் வேலைக்காரி என்று சொல்லமுடியாது. காலை ஏழு மணிக்கே அயர்ன் செய்த சேலை, பிளவுஸும், பவுடரும், கண்மையுமாக ஆஃபீஸுக்குப் போவது போல் வருவார். கிராமத்துப் பிண்ணனியில் இருந்து வந்த எனக்கு இது ரொம்பப் புதிதாக இருந்தது. அதுமட்டுமல்ல, வேலைக்காரியை வேலைவாங்க எல்லோருக்கும் பயம் வேறு!! யோசித்துதான் அவளிடம் பேசவே செய்வார்கள் வீட்டிலுள்ளவர்கள். கேட்டால், நாம் ஏதாவது சொல்ல அவள் நின்றுவிட்டால் வேலைக்கு வேறு ஆள் கிடைப்பது சிரமம் என்று சொன்னார்கள்.



என் வீட்டிலோ, வேலைக்கு வருபவர்கள் என் அம்மா, பாட்டியுடன் செய்யும் வாக்குவாதம்தான் எங்களுக்குப் பொழுதுபோக்கே. சிலசமயம் வேலைக்கு வருபவர்களுக்கு வாதங்களை எடுத்துக் கொடுப்பதே நாங்கள்தான்!! சரிக்குச் சமமாய் நாங்களும் அவர்களோடு கதை பேசிக்கொண்டே வேலைகளும் சொல்லிக்கொண்டு என்று, எங்கள் குறும்புகளால் அவர்களும் எங்களை விரட்டுவதும் என்று அவர்கள் வந்தாலே எங்களுக்கெல்லாம் கலகலப்பாக நேரம் போகும்.


அதனால் வேலையாளிடம் இவ்வளவு பயம் இருப்பது என்பது எனக்கு என் புகுந்த வீட்டில் வியப்பாக இருந்த பல விஷயங்களில் ஒன்று.


ஒருநாள் என் ஓரகத்தி புது மணப்பெண்ணாகிய என்னிடம் என் கணவரின் அருமைபெருமைகளைப் பற்றி (வேறென்ன, சோம்பேறித்தனத்தைப் பற்றித்தான்) மலையாள‌த்தில் சொல்லிக் கொண்டிருந்தார். ஓர‌ளவு புரிந்தும், புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அவரின் ஒரு வாக்கியம் கேட்டவுடன் தூக்கிவாரிப் போட்டது!! அந்த வாக்கியம் "ஹுஸைனுக்கு எல்லாத்துக்கும் சகாயம் வேணும்". தூக்கிவாரிப் போட்டதன் காரணம், வீட்டு வேலைக்காரியின் பெயர் "சகாயம்". சே, சே, அப்படியெல்லாம் இருக்கவே இருக்காது என்று மனம் சொன்னாலும், அருகிலிருந்த என் கணவரைக் கேட்கவா, வேண்டாமா என ஒரு குழப்பத்துடன் பார்த்துக்கொண்டே நின்றேன். என் பேய்முழியைப் பார்த்த அவர் புரிந்துகொண்டார். "மைனி, மைனி, நிறுத்துங்கோ, போதும், போதும்" என்றவர், என்னிடம் "பைத்தியமே, சகாயம் என்றால் மலையாளத்தில் உதவி என்று அர்த்தம்" என்று விளக்கினார்.


அது ஆச்சு பதிமூணு  வருஷம்; ஆனாலும் இன்னைக்கும் என் புகுந்த வீட்டினர் என்னிடம் கொஞ்சம் கவனமாத்தான் பேசுவாங்க!


Post Comment

27 comments:

பீர் | Peer said...

ஓ.. வளர நன்னாயிட்டுண்டு.

ஹூசைனம்மா தமிழச்சியானு? வள்ளப்போலும் இந்தியே வந்நுட்டுண்டா?

பின்னே.. என்டே சகாயத்தின்ட மறுவாடி எப்பலா?

லெமூரியன்... said...

ஹா ஹா ஹா....! சகாயம் ஒரு நிமிஷம் கஷாயம் மாதிரி தோனிச்சா ஹுசைனம்மாவுக்கு??? :-) :-)

ஆனா ஒரு வேடிக்கையான விஷயம் என்னனா?? நெல்லைல இருந்து நாகர் கோயில் வரைக்கும் உள்ள நம்ம பசங்களுக்கு மலையாள சகாயம்நாலே பெருங்காயம் மாதிரி (பெரும் காயம் உண்டாகும் மனசுல )ஒரு அலர்ஜி...!
அந்த பக்கம் போகவே மாட்டோம்ல...! :-)

அப்பாதுரை said...

நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கும் வரிகள். அருமை. பந்த்ரெண்டு விவகாரம் ... சூபர். (உங்கள் வாப்பாவின் நட்பைத் தொடர்ந்தாரா மனிதர்?)

சென்ஷி said...

கடைசி பாரா படிச்சு சிரிச்சு மாளலை.. சகாயத்துல இப்படி ஒரு ஆபத்தா :))

அ.மு.செய்யது said...

படிக்க படிக்க சுவாரஸியமா இருந்துது.

கடைசியில "சகாயம்" மேட்டரு செம்ம காமெடி.

gulf-tamilan said...

:))))

Anonymous said...

ஹூசைனம்மா, நீங்க இப்ப பாண்டியா, இல்ல மலையாளமா :)

ப்ரியமுடன் வசந்த் said...

பந்ரெண்டும் சகாயமும் ரசித்துபடிச்சேன் சுவாரஸ்யமான இடுகை...!

கண்ணா.. said...

ஹா..ஹா கடைசி வரி அருமை

நானும் திருநெல்வேலிதான். சென்னையில் ஓரு டாக்டர்கிட்ட ‘மண்டை இடி’ன்னு சொன்னதுக்கு அவர் சிரிச்ச சிரிப்பை இன்னும் என்னால் மறக்க முடியாது..

நாஸியா said...

ஹி ஹி.. வெரி இன்டெரெஸ்டிங்க்..

எனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கு..

அவங்க வீட்டில நெல்லை தமிழோட‌ கொழும்பு தமிழ் கலந்து பேசுவாங்க.. எனக்கு ஓரளவுக்கு விளங்கும்ன்டாலும் நிறைய வார்த்தைகள் தெரியாது.. அப்படித்தான் ஒரு தடவை அவங்களுக்கு தலைவலி வந்துச்சு. மறுநாள் காலைல அவங்க கன்மா என்கிட்ட "எட்டி, உன் மாப்பிள்ளைக்கு மண்டகுத்து போயிட்டா" என்று கேட்டாங்க..நான் அவங்க பாத்ரூமைத்தான் "மண்டபம்"ன்னு சொல்றாங்கன்னு நினைச்சு ஆமா போயிட்டாங்கன்னு சொல்ல, அப்புறம் விவரம் தெரிஞ்சு கண்ணுல தண்ணி வர்ற வரைக்கும் சிரிச்சாங்க.

SUMAZLA/சுமஜ்லா said...

யாதும் ஊரே! யாவரும் கேளிர் நு நிரூபிக்கறீங்களோ?!

Anonymous said...

ஹா, இது நல்ல தமாசானு.

பாத்திமா ஜொஹ்ரா said...

:))))

Sanjai Gandhi said...

//புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அவரின் ஒரு வாக்கியம் கேட்டவுடன் தூக்கிவாரிப் போட்டது!! அந்த வாக்கியம் "ஹுஸைனுக்கு எல்லாத்துக்கும் சகாயம் வேணும்". தூக்கிவாரிப் போட்டதன் காரணம், வீட்டு வேலைக்காரியின் பெயர் "சகாயம்". சே, சே, அப்படியெல்லாம் இருக்கவே இருக்காது என்று மனம் சொன்னாலும், அருகிலிருந்த என் கணவரைக் கேட்கவா, வேண்டாமா என ஒரு குழப்பத்துடன் பார்த்துக்கொண்டே நின்றேன். என் பேய்முழியைப் பார்த்த அவர் புரிந்துகொண்டார். "மைனி, மைனி, நிறுத்துங்கோ, போதும், போதும்" என்றவர், என்னிடம் "பைத்தியமே, சகாயம் என்றால் மலையாளத்தில் உதவி என்று அர்த்தம்" என்று விளக்கினார்.//

நல்லா கெளப்பறாய்ங்கய்யா பீதிய.. :))

Prathap Kumar S. said...

//மீண்டும் மீண்டும் அவரிடம் கொஞ்ச நேரத்திற்கு ஒருமுறை மணி கேட்க, அவர் பந்த்ரெண்டு பத்து, பந்த்ரெண்டு பதினஞ்சு என்று சொல்லிச் சொல்லி நொந்துவிட்டார்.//

அப்பவே இப்படித்தானோ...என்னா வில்லத்தனம்...:-)

ஹஹஹ...சகாயம் அப்படிங்கறத அவசரத்துல வெங்காயம்னு படிச்சுட்டேன்...
செம காமெடி

நாகர்கோவில் டவுன்ல ஓரளவு கரெக்டா பேசுவாங்க ரொம்ப பார்டருக்கு போகும்போதுதான் தமிழ் தமிழளாலம் ஆகும்.

எதையோசொல்லவந்து சந்தடி சாக்குல எங்க ஊர் மக்களை கலாயச்சீட்டிங்க...ரொம்ப சந்தோஷம்

SUFFIX said...

இப்போ துபாயிலும் மலையாளம் தானே official language அப்போ நிங்களுக்கு வளர நன்னாயிட்டு மனசிலாவுமே.

shaan said...

Very interesting. NHM Writer பயன்படுத்துவதாக எழுதியிருந்தீர்கள், இப்போது மைக்ரோசாப்ட் தமிழில் எழுத புதிதாக ஒரு சாஃப்ட்வேர் வெளியிட்டிருக்கிறது. அது NHM Writerஐ விட எளிதாக இருக்கிறது. அதற்கான இணைப்பை இங்கே கொடுத்திருக்கிறேன். இங்கே படிப்படியாக விளக்கியிருக்கிறார்கள்.

ஸாதிகா said...

சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி ஹுசைனம்ம்மா.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இந்தக் கதய எங்கியோ கேட்ட மாதிரி இருக்கே.. ஹி ஹி :)

ராமலக்ஷ்மி said...

ஏலே, வாலே.. திருநெல்வேலியா நீங்க? ரொம்ப சந்தோஷம்.

சகாயம்.. வேணுமா? நல்ல இடுகை:))!

அன்புடன் மலிக்கா said...

எந்தானு சேச்சி நிங்கள் மலையாள பெண்ணானு
கஷாயதிண்ட காரியம் கொறைச்சி ஞான் சிரிச்சி களிஞ்ஞி
பின்னெ நிங்களும் நிங்களோட வர்தாவும். குட்டியளும் சுகந்தன்னே.

Jaleela Kamal said...

ஹுஸைனாம்மா நெஜமாவே சகாயம் வேண்டும் என்றதை கேட்டதும் தூக்கி வாரி போட்டு இருக்குமே உங்களுக்கு.. பீதி கெளம்பி இருக்கும், புது பொண்ணு வேறு ,, நல்ல ஸ்வாரஸ்வமான இடுகை,

நாங்க இருவீட்டாரும் சுத்த தமிழ் தான் + கொஞ்சம் திருநெல்வேலியும் கலந்து வரும்..

ஹுஸைனம்மா said...

பீர், எனக்கு மலையாளம் தெரியும். ஆனா //பின்னே.. என்டே சகாயத்தின்ட மறுவாடி எப்பலா?// இது என்னன்னு புரியல???

லெமூரியன், நன்றி. ஆமா, நம்ம ஊர்க்காரங்களுக்கு மலையாளநாடுன்னா கொஞ்சம் அலர்ஜிதான்!!

அப்பாத்துரை, நன்றி. அவருக்கு சவூதி வேலை விஷயமா நட்பைத் தொடர்ந்தாக வேண்டிய கட்டாயம்.

சென்ஷி, நன்றி.

செய்யது, நன்றி.

கல்ஃப்-தமிழன், நன்றி.

சின்ன அம்மிணி, இங்க போனா பாண்டிங்கறாங்க, அங்க கேரளாக்காரிங்கறாங்க. என்ன சொல்ல!!

வசந்த், நன்றி.

கண்ணா, மெட்ராஸ்காரங்களே சிரிக்கிறாங்களா? நேரம்தான்!!

நாஸியா, சேம் பிளட்.

சுமஜ்லா, நன்றி.

வேலன் அண்ணே, நன்றி.

ஃபாத்திமா, நன்றி.

சஞ்சய், நன்றி.

பிரதாப், சொல்ல வந்த மேட்டரைச் சரியாப் புரிஞ்சது நீங்க ஒருத்தர்தான்!!

ஷஃபிக்ஸ், ஆமா, இங்க வந்து மலையாளம் பேச ஆரம்பிச்சதுல, நிறைய பேர் என்னையும் மலையாளின்னு நினைச்சுகிட்டு இருக்காங்க, பாவம்.

ஷான், தகவலுக்கு நன்றி.

ஸாதிகா அக்கா, நன்றி.

எல் போர்ட், நம்ம புது நண்பர்களுக்கும் நம்ம அருமை பெருமையெல்லாம் சொல்லணும்ல, அதான்.

ராமலக்‌ஷ்மி அக்கா, ஆமாங்க்கா, நானும் உங்க ஊர்தான்!!

மலிக்கா, விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள்.

ஜலீலாக்கா, புதுப்பொண்ணுங்கிறதாலதான் நான் மிரண்டேன். இப்ப நம்மதானே மிரட்டுறது!!

பீர் | Peer said...

என்னது.. புரியலையா? இத சொல்லிக்கொடுத்த சேட்டன நான் எங்க போயி தேடுறது? :)

மீ த எஸ்கேப்பு.

goma said...

எனக்கு ஒரு சகாயம் செய்யணும்...அடிக்கடி இது போல் கடிக்கணும்

malar said...

நல்ல இருந்தது பதிவு..

நாகர்கோயிலில் இன்றும் வேலைக்கு ஆள் கிடைப்பது சிரமம்.
இந்த் பதிவு அநன்யாவின் பதிவில் பிடுதேன்..

ஏஏ என்று கூப்பிடும் பழக்கம் எங்கவீட்டிலும் உண்டு..

நாகர்கோயில் தமிழ் ஸ்பெஸல் தான்...

Ananya Mahadevan said...

ஹூஸைனம்மா,
அருமையான பதிவு. பந்துரெண்டு சூப்பர். நானும் ரொம்ப சிரிச்சு இருக்கேன் இதுக்கு. இருந்தாலும் சகாயத்தை இப்படி நீங்க படுத்தி எடுத்திருக்க வேண்டாம்.
ரொம்ப சுவாரஸ்யமா எழுதி இருக்கீங்க.. ஜோர் பதிவு!